Tuesday, March 18, 2025
முகப்புசெய்திபெண் கிரிக்கெட் வீரர்களை இந்தியா போற்றுவதில்லை - ஏன் ?

பெண் கிரிக்கெட் வீரர்களை இந்தியா போற்றுவதில்லை – ஏன் ?

-

எங்களை ஆண் கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடாதீர்கள் – இந்திய பெண்கள் அணித் தலைவர் மிதாலி ராஜ் !

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை தொடர்ந்து ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை லண்டனில் நடக்கவிருக்கிறது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. அணியின் நிலவரம், யுத்திகள் குறித்து தெரிவிக்க நடந்த ஆரம்ப விருந்து மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அணித் தலைவர் (கேப்டன்) மிதாலி ராஜ் கலந்து கொண்டார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் மித்தாலி ராஜ் அணியின் பயிற்சியாளருடன்

அப்போது மித்தாலியிடம் ஒரு பத்திரிகையாளர் “இந்தியா பாகிஸ்தான் நாடுகளில் உங்களுக்குப் பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மித்தாலி “இதே கேள்வியை ஒரு ஆண் கிரிக்கெட் வீரரிடம் கேட்பீர்களா? உங்களுக்குப் பிடித்த பெண் விளையாட்டு வீரர் யார் என்று அவர்களைக் கேட்பீர்களா?” என்று வெறுப்புடன் பதில் அளித்தார்.

கார்ப்பரேட் விளையாட்டாகவும், ரசிகர்களை நுகர்வோராகவும் கருதும் கிரிக்கெட்டில் ஆண் என்ன, பெண் என்ன என்று நமக்குத் தோன்றலாம். கிரிக்கெட்  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் கவர்ச்சி உடையில் ஒரு பெண் நெறியாளரைக் கண்டிப்பாக காணலாம். இதன் நோக்கம் பார்வையாளர்களின் விளையாட்டு குறித்த ரசனையை மேம்படுத்துவதல்ல. அதே போன்று இடைவெளிகளில் தோன்றும் விளம்பரங்களிலும் எல்லாம் பொருட்களையும் வாங்குமாறு ஒரு ‘அழகான’ பெண்தான் கோருவார்.

பி.வி. சிந்து, சாக்ஷி மாலிக் மற்றும் தீபா கர்மாகர் போன்று பிற விளையாட்டுக்களில் சாதனைகள் நிகழ்த்தினால் பெண் விளையாட்டு வீரர்கள் சிறிது காலத்திற்கு கொண்டாடப்படுவார்கள். சிலசமயம் அதுவும் இல்லை. இந்திய பெண்கள் கிரிக்கெட்டிலேயே கூட கடந்த மே மாதம், வேகப் பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி பெண்கள் ஒரு நாள் போட்டிகளில் 181 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார். அது நம்மில் பலருக்கு தெரியாது.

உலகில் கிரிக்கெட்டுக்கு அதிகமான ஆதரவாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. ஆனால் இங்கு ஆண் கிரிக்கெட் வீரர்கள் நட்சத்திர வீரர்களாக, சூப்பர் ஸ்டார்களாக கருதப்படுகின்றனர்.  பெண் வீரர்கள் திறமைசாலிகளாக இருந்தாலும், போட்டிகளில் சாதனை படைத்தாலும் ரசிகர்களின் கவனம் இவர்கள் மீது திரும்புவதில்லை. ஆண் வீரர்கள் போல பெண் வீரர்கள் விளையாடுவதில்லை என்று சிலர் கருதக் கூடும். ஆனால் கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிஸ், தடகளம் போன்ற விளையாட்டுக்களில் ஆண்களுக்கு நிகரான அங்கீகாரம் பெண்களுக்கும் உலக அளவில் ஓரளவு உண்டு எனலாம். கிரிக்கெட்டைப் பொறுத்த வரை அது வெற்றி பெற்றிருப்பதே ஆணாத்திக்கத்தை உரம் போட்டு வளர்த்த பார்ப்பனியம் மற்றும் இசுலாத்தின் செல்வாக்கு நிறைந்த தெற்காசிய நாடுகளில்தான். இந்த பிற்போக்குடன் கார்ப்பரேட் வர்த்தகம் இணையும் போது அங்கே விளையாட்டை விட விற்பனையே பிரதானம் என்றாகிறது.

தொலைக்காட்சிகள் பெண்கள் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை. செய்தி மீடியாக்கள் பெண்கள் போட்டி விவரங்களை செய்தியாகச் சொல்வதே இல்லை. பெண்கள் போட்டிகளை நேரடி ஒளிபரப்பாததற்கு அவற்றுக்கு அதிக வரவேற்பில்லாததும், அதனால் விளம்பர வருவாய் இல்லாததுமே காரணம் என்கிறார்கள். ஆகவே  பெண்ணுரிமை கூட வர்த்தகத்தின் அருளில்தான் தழைக்க வேண்டுமென்றால் அது என்றுமே சாத்தியமில்லை.

சில சமயம் பெண் வீரர்கள் பொது வெளியில் ரசிக்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் ‘கவர்ச்சி – அழகுடன்’ இருக்க வேண்டும். ஆக பெண் வீரர்கள் திறமைசாலிகளாக மட்டும் இருந்தால் போதாது, விளம்பரங்களில் தோன்றுமளவு ‘சாமுத்திரிகா இலட்சணத்தோடும்’ இருக்க வேண்டும். இது வெறும் ஆணாதிக்கம் சார்ந்து மட்டுமல்ல. வர்க்கம், சாதி, இனம் பார்த்தும் நடக்கிறது. டென்டுல்கருக்கு நிகரகாவோ அதிகமாகவோ திறன் படைத்த தன்ராஜ் பிள்ளை இந்திய ஹாக்கி விளையாட்டு வரலாற்றில் ஒரு சூப்பர் ஸ்டார்தான். ஆனால் அவரை ஊடகங்களோ, கார்ப்பரேட் விளம்பரங்களோ, இல்லை பொதுவான ரசிகர்களோ அண்டுவதே இல்லை.

மிதாலி ராஜ் போன்ற கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட்டில் உள்ள ஆணாதிக்கத்தை மட்டும் பேசுவதால் தீர்வு வந்துவிடாது. ஒரு விளையாட்டை நேசிப்பதற்கும், ரசிப்பதற்கும் உரிய விளையாட்டை போற்றும் தேசமாக நம்நாடு இல்லை. அதற்கு பார்ப்பனியம், பன்னாட்டு நிறுவனங்கள், விளம்பரங்களை வைத்து நடக்கும் ஊடகங்கள் அனைத்தோடும் நாம் ஒரு பெரும் யுத்தத்தையே நடத்த வேண்டியிருக்கிறது.

செய்தி ஆதாரம் :

  1. உங்களை ஆட்களுக்கு எல்லாம் கிறுக்கு புடித்து இருக்கிறது… இதற்கு கூடவா பார்ப்பனியம் பேசுவீர்கள் சுத்த லூசு தனமா இருக்கு. முதலில் பெண்கள் கிரிக்கெட்டை பெண்களே பார்ப்பது இல்லை, அவர்களும் ஆண்கள் கிரிக்கெட்டை தான் பார்க்கிறார்கள்… இந்த லட்சணத்தில் ஆணாதிக்கமாம் பார்பனியமாம்

    • மணிகண்டா,

      ஹாக்கி, கபடி விளையாட்டெல்லாம் உடல் தகுதிக்கான அனைத்து தரங்களுடன் இருக்கும்போதும், அது மட்டுமன்றி தேசிய விளையாட்டாக இருக்கும் ஹாக்கி அணியில்(அதாவது ஆண்கள் ஹாக்கி அணி) பெண்களா விளையாடுகின்றனர்? அதை இரசிக்கும் நிலை மறக்கடிக்கப்பட்ட காரணம் தெரியுமா?

      பார்ப்பனர்களுக்கு ஏதுவான விளையாட்டு கிரிக்கெட் என்பதாலும் மற்றும் பல முதலாளிகளுக்கு குறிப்பாக இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் உள்பட இது பொன் முட்டையிடும் வாத்து என்பதாலும் தான் இந்த விளையாட்டு இந்தியாவில் இந்த அளவுக்குப் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது…

      கிரிக்கெட்டில் பார்ப்பனியம் இல்லையென்றால் ஏன் இந்திய அளவில் இதுவரை அதிக பார்ப்பனர்கள் மட்டுமே விளையாண்டு வந்துள்ளனர்?

    • ஆமா மணிகண்டன், பார்ப்பனீயம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.
      ஆண்கள் கிரிகெட்டை மட்டுமல்ல பெண்கள் எதை பார்க்க வேண்டும் என்பதையும் பார்பனிய கலாச்சாரம் தான் தீர்மானிக்கிறது. பெண்கள் என்றால் நாடகம் தான் பார்ப்பார்கள். பெண்கள் என்றால் சமையலை பற்றியும் உடையை பற்றியும் தான் பேசுவார்கள் என்பது தானே இந்திய கலாசாரம் போதுள்ள தர்மம்.

      பொதுவாக கிராமப்புறங்களில் உறவினர் வீடுகளுக்கு செல்லும் போது கூட பெண்கள் சமயலைறைக்கு செல்வதை நாம் பார்க்கலாம். ஆண்கள் வெளியில் அமர்ந்து மொக்கையாகவோ அல்லது ஏதாவது சீரியசாகவோ பேசுக கொண்டிருப்பார்கள். அதில் பெண்களுக்கு இடமில்லை. அது தாண் பெண்களுக்கு சமையலறை இருக்கிறதே. எனவே பெண்களுக்கு வெளியில் அமர்ந்து விவாதிக்க பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள் அறிவுகெட்ட ஜென்மம்.

      ஆண்களுக்கு என்ன பிடிக்குமோ அதுதான் பெண்களுக்கு பிடிக்க வேண்டும். நாடகங்களையும் சமையல் குறிப்புகளுக்கும் நேர்ந்து விடப்பட்டிருக்கும் பெண்கள் அதைவிட்டு வெளியில் வரும் போது மாற்று ஏற்பாடாக என்ன இருக்கிறது. ஆண்கள் கிரிகெட் தான் இருக்கிறது.

      சரி ஆண்கள் கிரிகேட்டிற்கு கொடுக்கப்படும் மீடியா கவரேஜ் ஏன் பெண்கள் கிரிகேட்டிற்கு இல்லை? ஒரு வேலை ஊடகங்களில் வேலை செய்யும் பெண்கள் இதன் பின்னணியில் இருப்பார்களோ?

  2. பார்பன அடிவருடி மணிகண்டனுக்கு வெளங்கும் படி எழுதுங்க வினவு!

    தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் ஆணடிமை தனத்துக்கு காரணமாக இருக்கும் பார்ப்பனியமும் அதன் விளைவுகளான கிரிகெட் வருணாசிரமமும், பெண்ணடிமை தனமும்…….. ,இஸ்லாமிய நாடுகளில் ஆணடிமை தனத்துக்கு காரணமாக இருக்கும் இஸ்லாதின் செலவாகும் தான் ஆண்களின் கிரிகெட் விளையாட்டுக்கு உரம் போட்டு வளர்கிறது. அதே நேரத்தில் இத்தகைய பிற்போக்கு தனங்கள் பெண்களின் கிரிகெட் விளையாட்டுக்கு சமட்டியடி அடிகிறது.

    இந்த ஆணடிமை தனத்துடன் கார்ப்பரேட் வர்த்தகம் இணையும் போது அங்கே விளையாட்டை விட விற்பனையே பிரதானம் என்றாகிறது.இப்படி ஒருவேளை விளக்கமாக எழுதினால் மணிகண்டன் போன்ற பார்பனிய அடிவருடிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்!

    //கிரிக்கெட்டைப் பொறுத்த வரை அது வெற்றி பெற்றிருப்பதே ஆணாத்திக்கத்தை உரம் போட்டு வளர்த்த பார்ப்பனியம் மற்றும் இசுலாத்தின் செல்வாக்கு நிறைந்த தெற்காசிய நாடுகளில்தான். இந்த பிற்போக்குடன் கார்ப்பரேட் வர்த்தகம் இணையும் போது அங்கே விளையாட்டை விட விற்பனையே பிரதானம் என்றாகிறது.//

  3. மணி மாமா டென்ஷன் ஆவாதேள். பொதுவாகவே இந்தியாவில் விளையாட்டு துறையில் ஈடுபடும் பெண்கள் பல கட்டுப்பாடுகளை உடைத்து வரவேண்டிய நிர்பந்தம் உள்ளது. கிரிக்கெட் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. அதற்கு காரணமும் இந்திய ஜாதியம் சார்ந்த சமூக அமைப்பு முறையே //. பெண்கள் விளையாடும் கிரிக்கெட்டை பெண்களே பார்ப்பதில்லை, ஆண்கள் கிரிக்கட்டைதான் பார்க்கிறார்கள் // பெண்கள் எதை நுகர வேண்டும், எதை ரசிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது எது என்பதை நீங்களே உளரிவிட்டீர்.

  4. நீங்கள் எல்லாம் பார்ப்பனர்களை வெறுக்க வேண்டும் என்று மூளை சலவை செய்யப்பட்ட மண்டுகள்… கேட்டால் நாங்கள் பார்ப்பனர்களை வெறுக்கவில்லை பார்ப்பனியத்தை வெறுக்கிறோம் என்று சொல்லி கொண்டு பார்ப்பனர்களுக்கு எதிராக பாசிஸ்ட் மனப்பான்மையோடு நடந்து கொள்ள வேண்டியது.

    இப்போது எல்லாம் வீட்டில் டிவி ரிமோட்டுக்கும் ஆண்களுக்கும் சம்பந்தமே கிடையாது என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும்மா ? மதியத்தில் இருந்து இரவு வரையில் டிவி ரிமோட் பெண்களின் கைகளில் மட்டுமே… எங்கள் வீடு உட்பட பெரும்பான்மை வீடுகளில் இது தான் நடக்கிறது, இன்னும் சொல்ல போனால் நான் டிவி பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டது.

    எந்த கிராமத்தில் சார் பெண்கள் அடுப்பங்கரைக்கு போகிறார்கள், அது எல்லாம் அந்த காலம் இப்போது கிராமங்களுக்கு போய் பாருங்கள், பெண்கள் ஆண்களுக்கு நிகராக வேலைக்கும் போகிறார்கள் ஆண்களை விட நன்றாகவும் படிக்கிறார்கள்.

  5. மணி மாமா மறுமடியு மறுபடியு வாய்ல வந்தத உலரீட்டிருக்கேள், உங்க வீட்டு மாமி டி.வி ரிமோட்ட குடுக்காம அவாளே வெச்சுன்டாள்னா பெண்விடுதலை வந்துடுத்துனு அர்த்தமாயிருமா. பெண்கள் வேலைக்கு போரது உண்மைதா ஓய், அது அவர்களோட பொருளாதாரம் சார்ந்தது. அப்படி வேலைக்கு போன இடத்துல அவுங்களுக்கு நடக்குற துன்ப துயரங்களையெல்லாம் சொல்லிமாளாது. அதுக்கு காரணம் பெண்ணை நுகர்வு பண்டமா மட்டுமே மாத்துன முதலாளித்துவமும், பெண்ணடிமையவே போதனைகளா கொண்ட உங்க இளவெடுத்த பார்ப்பன மதமான இந்து மதமும் தான். வீட்டை விட்டு வெளிய வர்ர பெண்களை பார்த்து உம்ம வயிறு எரியிறது தெரியுது. உழைக்கிர மக்களை விட பெண்ணடிமை தனம் நிறைஞ்சு வழியிறது உயர் வகுப்புலதான் மணி சார். மூலச்சலவை செய்யப்படுறது எங்களுக்கில்ல ஓய். உங்களுக்குனு சொல்லமாட்டோ ஏனா மூலைனு ஒன்னு இருந்தாதான மேற்படி சலவை எல்லா.

  6. தவறுகள் ஜாதி மதம் இதுனால தான் ஏற்படுது.. சரி… ஆனா பொதுவுடைமை கிட்ட இதுக்கான தீர்வு இருக்கா… பெண்ணுரிமை – விளையாட்டு விஷயங்கள்… அப்டினு எடுத்துக்குவோம்… இதை சீர் செய்ய சட்டம் இல்ல வழிமுறைகள் ஏற்கனவே இருக்கா.. அப்டி இல்லனா பொதுவுடைமை வாதிகளால் கொண்டு வர முடியுமா….
    கம்யூனிசம் பின்பற்ற நாடுகள்ல இது மாதிரி பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு இருக்கா.. தோழர்களே… நான் எதையும் விமர்சிக்கவில்லை… என்னை விமர்சித்தாலும் ஏற்று கொள்ளவே தயாராக இருக்கிறேன்.. ஆனால் தீர்வு அல்லது வழிமுறைகள் பற்றிய உங்களது கம்யூனிசம் பற்றி புரிந்து கொள்ள உதவும்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க