privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பகுதி 2 : வானதி சீனிவாசன் ஊழலுக்கு ஆர்.எஸ்.எஸ் பாதுகாப்பு !

பகுதி 2 : வானதி சீனிவாசன் ஊழலுக்கு ஆர்.எஸ்.எஸ் பாதுகாப்பு !

-

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 2

தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து மதிப்பைக் காட்ட வேண்டும் என்ற விதிமுறை வந்ததால் அரசியல்வாதிகள் யாரும் அதிர்ச்சியடையவில்லை. அவர்களுடைய சொத்துக்கள் எல்லாம் பினாமி பெயரில் பாதுகாப்பாக இருப்பதால் பத்திரத்தில் அவர்கள் காட்டும் மதிப்பு என்பது வெறும் பாக்கெட் மணிக்கு நிகரானது. தனது கட்சிக்காரர் கடையில் வாங்கிய மின்விசிறிக்கு கூட தவணை கட்ட முடியாத நிலையில் இருந்த வானதி சீனிவாசன், பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருப்பது போக எவ்வளவு வைத்திருப்பார்? அது பா.ஜ.க காரர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

வானதி சீனிவாசன் இந்த ஆண்டு மார்ச், 2017 -ல் கோவையில் கணவர் சீனிவாசன் பெயரில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். கடைசியாக அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இந்த வீடு சேராது. கோவை, ராஜேந்திர பிரசாத் சாலை, பிளாட் எண் 304 -ல் அடுக்ககத்திலுள்ள அந்த வீட்டின் மதிப்பாக பத்திரப் பதிவில் காட்டப்பட்ட தொகை ரூ. 56 இலட்சம். அதன் சந்தை மதிப்பு நிச்சயம் சில மடங்கு அதிகம் இருக்கும். இந்த சாலை இருக்கும் பகுதியில் அடுக்கக வீடுகளின் விலை சந்தை விலைப்படி சதுர அடி ரூ 5,500 முதல் 8,000 வரை இருக்கிறது.

( வானதி சீனிவாசன் தனது கணவர் சீனிவாசன் பெயரில் வாங்கியுள்ள கோவை வீட்டின் பத்திரம். பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும் )

மேலும், வானதி தனது 2016 -ம் ஆண்டின் பிரமாணப் பத்திரத்தில் குறிபிட்டுள்ள சென்னை பழைய மகாபலிபுரம் சாலை (OMR) ஐவி டெரஸ் (IVY Terrace), அடுக்கக வீட்டின் மதிப்பு ரூ. 60 இலட்சம். இந்த வீட்டின் உரிமையாளராக வானதியும், அவரது கணவரும் இருக்கிறார்கள். மின்விசிறி காலத்திற்கு பிறகு அவரது வருமானம் சென்னை, கோவை என வீடுகள் வாங்குமளவு எப்படி உயர்ந்தது? கூடுதலாக சென்னையின் அதி பணக்காரர்கள் வாழும் ராஜா அண்ணாமலைபுரத்திலும் அவருக்கு ஒரு வீடு இருக்கிறது. பிரமாணப் பத்திரத்தின்படியே அதன் மதிப்பு மூன்று கோடி ரூபாய். உண்மை மதிப்பு எவ்வளவு, இந்த வீட்டை வாங்குவதற்கு பணம் எங்கிருந்து வந்தது?

பந்தல் கோவிந்தன் என்ற தமிழ்மாநில காங்கிரசைச் சேர்ந்தவர் 2000 -ம் ஆண்டு ஒரு கடத்தலில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்படுகிறார். அப்போது உத்தமர் வாஜ்பாயின் அரசு நடந்து கொண்டிருந்தது.

“அவரை வழக்கில் இருந்து நிரபராபதியாக மாற்றியவர் திருமதி.வானதியின் கணவர் சு.சினிவாசன் என்ற அன்றைய மத்தியரசின் போதை பொருள் தடுப்புத்துறை வழக்கறிஞர். அதற்கு சன்மானமாக திருமதி.வானதி சினிவாசனின் Zylog கம்பெனி புகழ் உடன்பிறப்பான திரு.சிவக்குமார் கந்தசாமி பெயருக்கு வீடு கைமாறுகிறது. அந்த வீடு 2014 -ல் திருமதி.வானதி சினிவாசன் பெயருக்கு செட்டில்மென்ட் பத்திரம் ஆகிறது. ஆவண முகவரி-
R/O 19-1/10, Pattammal Street, Raja Annamalai Puram, Chennai 600028
இதை அன்று சொன்ன திரு.Y.S.கண்ணன் அவர்களுக்கு அடி, உதை வழங்கப்பட்டது.
ஆனாலும் உறுதியாக அன்று முதல் இன்று வரை வசந்த சேனையை வட்டமிடும் கழுகு என நிலை தடுமாறாமல் அவர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.” – பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

***

தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாத போதே ஒருவரால் ஊழலில் ஈடுபட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் சொத்து மதிப்பை உயர்த்திக் கொள்ள முடியுமா? இதற்கும் சைலாக் பற்றிய குற்றச்சாட்டுக்கும் வானதி சீனிவாசன் என்ன கூறுகிறார்?:

நடுவில் இருப்பவர் ராமானுஜம் சேஷரத்னம்.

”Zylog என்னும் நிறுவனத்தை நிறுவியவர்கள் திரு.சுதர்ஷணம் மற்றும் திரு.ராம் சேஷரத்தினம் ஆகியோர். இவர்கள் இருவரும் RSS ஸ்வயம்சேவகர்கள் ஆவர். இவர்கள் எங்களுக்கு 30 வருடங்களுக்கும் மேலாக குடும்ப நண்பர்கள் என்கின்ற காரணத்தால் எனது கணவர் திரு.சீனிவாசன் இவர்களின் நிறுவனத்திற்கு ஆரம்ப காலத்தில் சட்டம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வந்தார். இதற்கான இந்த நிறுவனம் 2007 -ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமாக (Public Limited Company) மாறிய போது 5 மதிப்புள்ள 20,000 share-கள் எனது கணவர் திரு.சீனிவாசனுக்கு அளித்தது. இதன் அன்றைய மதிப்பு 1,00,000(ரூ.ஒரு இலட்சம்) ஆகும். இந்த 20,000 பங்குகளும் தற்போது வரை அவரின் பெயரிலேயே இருக்கிறது, இதனை எனது தேர்தல் Affidavit -இலும் கூட சமர்பித்துள்ளேன், அதற்கான ஆதாரம் புகைப்படம் மூலம் இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. (இந்த Affidavit நகலை யார் வேண்டுமானாலும் இணையத்தில் எளிதாக பெறலாம்).

எனது சகோதரர் சில காலம் இந்த Zylog நிறுவனத்தில் மென்பொருள் சேவை தொடர்பான பணி மட்டுமே செய்து வந்தார். எனது சகோதருக்கு மேற்படி நிர்வாகத்தில், குறிப்பாக நிதி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் எவ்வித பங்கும் இல்லை. இந்நிறுவனம் தற்போது சில சிக்கல்களை சந்தித்து வழக்குகளிலும் சிக்கி அதனை சந்தித்து வருகிறது, CBI புலனாய்வு விசாரணை உட்பட.

எனது கணவருக்கு இங்கு 20,000 பங்குகள் இருப்பதை தவிற எனக்கும் இந்த நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. என் பெயரில் இப்போதும், எப்போதும் ஒரு பங்கு கூட இந்நிறுவனத்தில் இருந்தது இல்லை . என் மீது அவதூறு எழுதுபவர்கள் தங்கள் வசம் இருக்கும் ஆதாரங்களை CBI வசம் ஒப்படைக்கட்டும். பிரதமர் மோடி தலைமையிலான அரசில் எந்த ஊழல் குற்றம் நிரூபிக்க பட்டாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதை விடுத்து முகநூலில் உண்மைக்கு புறம்பான விஷயங்களை தினமும் எழுதுவது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எழுதப்படுவது ஆகுமே தவிற உண்மை ஆகாது.

இதுதான் வானதி சீனிவாசனின் விளக்கம்.

வானதி சீனிவாசனின் தன்னிலை விளக்கத்திலேயே இந்த ஊழலில் தான் மட்டும் தனியாக இல்லை என்றும், ஆனானப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இருப்பதையும் கொளுத்தி போடுகிறார். சைலாக் நிறுவனர்கள் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவர்கள் என்று இங்கே கூறப்பட வேண்டிய அவசியம் என்ன? ஆர்.எஸ்.எஸ் புனிதமான இயக்கம் என்ற பக்தியுணர்வு இருந்தால் வானதி இந்த விவரத்தை மறைத்திருக்க வேண்டும், வலிந்து கூற வேண்டியதில்லை. சரி பிறகு எதற்கு கூறுகிறார்? சைலாக் நிறுவனர்கள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என்பதால் இந்த ஊழல் வழக்கு மேலிடத்திற்கு சென்றாலும் தான் காப்பற்றப்படலாம் என அவர் உறுதியாக நம்புகிறார். ஒருக்கால் அந்நிறுவனர்கள் வெறுமனே முதலாளிகளாக இருந்தால் வானதியின் போட்டி கோஷ்டியே அவரை சிறையில் தள்ளியிருக்கும்.

வானதியின் சகோதரர் சிவக்குமார்

அடுத்து சைலாக் நிறுவனர்கள் குடும்ப நண்பர்கள் என்றும் வானதி குறிப்பிடுகிறார். அப்படி என்றால் ஆர்.எஸ்.எஸ் தொடர்புக்கு என்ன பொருள்? வானதியும் சைலாக் நிறுவனர்களும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க பிரமுகர்கள் என்பதாலேயே இந்த நட்பும் ஊழலும் சாத்தியமாயிருக்கிறதே அன்றி வெறும் குடும்ப நட்பு அல்ல.

வானதி ஒரு பிரபலமான தமிழக பா.ஜ.க தலைவர், அவர் கணவர் மத்திய அரசு வழக்குறைஞர். ஆகவே இவர்களை கவனித்தால் “அதாவது அந்த 20,000 பங்குகள்” தமது ஊழலை, மோசடிகளை மறைக்க முடியும் என்று சைலாக் நிறுவனத்தின் ஸ்வயம் சேவகர்கள் யோசித்திருக்கிறார்கள். இல்லையேல் சட்ட ஆலோசகர், இயக்குனர் பதவிகள் ஏன் வானதி-அன்-கோவிற்கு வழங்கப்படவேண்டும்?

வானதி சீனிவாசன் தனது தம்பி சைலாக் நிறுவனத்தில் தொழில்நுட்ப வேலையில் மட்டும் இருந்தார் என்று கூறுவது அப்பட்டமான பொய். அவர் சைலாக் நிறுவனத்தின் ஐரோப்பிய கிளையில் இயக்குநராகவும், இங்கே தாய்க் கம்பெனியில் இயக்குநராகவும் இருந்திருக்கிறார். ஒரு கம்பெனியின் இயக்குநர் என்பதற்கு பொருள் அவர் தொழில் நுட்ப வேலை மட்டும் செய்பவரா என்ன?

மேலும், சைலாக் ஐரோப்பிய கிளையின் இயக்குனராக 2012 முதல் இருந்த சிவக்குமார் 19 டிசம்பர் 2016 அன்று விலகுகிறார். சைலாக்கில் இருந்து விலகியதிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு 30 ஜனவரி 2017 அன்று யூனியன் வங்கி அளிக்கும் புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்கிறது. வழக்கு வருவதை முன்னுணர்ந்து சிவக்குமார் விலகினாரா அல்லது அவர் விலகுவதற்கு கால அவகாசமளித்த பின் புகாரும், வழக்கும் பதியப்பட்டதா?

மேலும், வானதி தனக்காக துவங்கிய vanathi.bjp.in என்ற தளம், அவரது தம்பி சிவக்குமாரின் சைலாக் நிறுவன அமெரிக்க முகவரியைக் கொண்டு துவங்கப்பட்டது. சைலாக்கின் மீதான அரசு விசாரணை துவங்கிய பின் இப்போது வானதியின் தளம் அழிக்கப்பட்டுள்ளது.

சைலாக் நிறுவனத்தின் ஐரோப்பிய முகவரி.

சைலாக்கின் 20,000 பங்குகள் தனது கணவரின் சட்ட ஆலோசனை சேவைகளுக்கு அந்நிறுவனம் வழங்கியது என்கிறார். வானதியின் கூற்றுப்படி அவரது கணவரின் சட்ட ஆலோசனைகளுக்காக பங்குகளை கொடுத்ததாகவே வைத்துக் கொள்வோம். அதன் இன்றைய மதிப்பு ரூ.5 என்பதும் சரியே. ஆனால் அன்று அவை கொடுக்கப்பட்ட காலத்தில் பங்கின் முகமதிப்பு ரூ. 10, சந்தை மதிப்பு ரூ.350, இவற்றில் எந்த அளவீட்டைக் கொண்டு மதிப்பிட்டிருப்பார்கள், மதிப்பிட வேண்டும்?

ஒரு பங்கின் விலையை ரூ. 350 என்று மதிப்பிட்டால், ரூ.70 இலட்சம் மதிப்புள்ள பங்குகளை தனது சேவைகளுக்கு கூலியாகப் பெற்றிருக்கிறார் என்றாகிறது. எனில் சீனிவாசன் அவர்களின் பினாமியாக இருக்க வேண்டும் அல்லது அவர்களின் பல முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்திருக்க வேண்டும். மேலும், செபியின் விதிமுறைகளின் படி விருப்பம் போல் பங்குகளை தூக்கிக் கொடுத்து விட முடியாது.

ஒரு பங்கின் விலையை ரூ. 10 என்று மதிப்பிட்டால், அது பங்குச் சந்தையில் மற்ற முதலீட்டாளர்களை ஏமாற்றுவதாகும். இதுவும் விதிமுறை மீறல்.

இதைப் போன்று முறைகேடுகளுக்காகத் தான் செபி சைலாக் நிறுவனத்தை தடை செய்திருந்தது. ஆக, சைலாக்கின் பங்குச் சந்தை மற்றும் வங்கி முறைகேடுகளில் வானதி மற்றும் அவரது கணவருக்கு தொடர்பிருக்கிறது. முக்கியமாக தற்போது இந்த நிறுவனம் சில சிக்கல்கள், சிபிஐ விசாரணையை சந்தித்து வருகிறது என்று பொருளாதார மோசடிகளை நாகரீகமாக கூறுகிறார். தன் மீது சுமத்தப்பட்டது குற்றச்சாட்டு எனில் அந்நிறுவனம் செய்திருக்கும் முறைகேடுகள் என்ன என்று விரிவாக சொல்ல வேண்டுமல்லவா? அதை விடுத்து சிக்கல் என்று நைசாக நழுவுவது என்ன நாகரீகம்? செஞ்சோற்றுக் கடனா, திருடனுக்கு தேள் கொட்டியதால் வரும் பிதற்றலா?

இனி, வானதியின் விளக்கத்தைப் பற்றி திருச்செந்தூர் பா.ஜ.க பிரமுகர்ர பாலசுப்பிரமணிய ஆதித்யன் வெவ்வேறு பதிவுகளில் சொல்வதைப் பார்ப்போம்.

“2007 -ம் ஆண்டு ரூ.5/- முக மதிப்பில் 20,000 Zylog பங்குகளை கணவர் சு.சீனிவாசன் வாங்கியதாக சொன்ன வானதி அக்கா 2011 வருட சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தேர்தல் அபிடவிட்டில் அதை ஏன் குறிப்பிடவில்லை?”

“1. முதலில் SEBI -யில் செய்யப்பட்ட பதிவின் படி Zylog கம்பெனி ஷேர்கள் 10 ரூபாய் முக மதிப்பு கொண்டவை. 10 ரூபாய் பங்கை 5 ரூபாய் மதிப்பு என கூறியதில் வானதியின் முதல் பொய் வழக்கம் போல் துவங்குகிறது.

2. பொதுச் சந்தையில் பங்கு வர்த்தகத்திற்கு வரும் நிறுவனம் தங்களுக்கு ஆலோசனை வழங்கும் நபருக்கெல்லாம் தான் தோன்றித்தனமாக 20000 ஷேர்களை கூலியாக தர முடியாது. SEBI மற்றும் கம்பெனி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே தரமுடியும். ஆக எப்படி வானதியின் கணவருக்கு Zylog கம்பெனி கூலியாக 20,000 க்ஷேர்களை தந்தார்கள்?? அவ்வாறு ஒதுக்கியதில் சட்ட முரண்கள் உள்ளதா என்பதை வானதி விளக்க வேண்டும்.

3. 2007 வருடம் ஜுலை 20 -ம் தேதி இந்த பங்குகளை விற்க Public Issue பதிவை துவக்கப்பட்டது. அது ஜுலை 25-ம் தேதி வரை நடந்தது. 10 பங்கின் விலை 330 முதல் 350 என Price band நிர்ணயிக்கப்பட்டது. இந்த பங்கு வெளியீடு சுமார் 5 மடங்கு பங்கு மூலதனத்தை பெற்றது. ஆதலால் ஒரு பங்கின் விலை Higher price band என முடிவு செய்யப்பட்டு 350 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விண்ணப்பித்தோருக்கு வழங்கப்பட்டது. அப்படி என்றால் வானதியின் கணவருக்கு 20,000 பங்குகளை 70 லட்சம் ரூபாய்க்கே ஒதுக்கி இருக்க முடியும். தனது கணவர் செய்த சேவைக்கு 70 லட்சம் மதிப்புள்ள பங்குகளை தர Zylog நிறுவனத்திற்கு கம்பெனிகள் சட்டப்படி உரிமை இல்லை என்பதால் 70 லட்சம் கொடுத்தே பங்குகள் வாங்கப்பட்டன என்பது உறுதியாகிறது.

4. ஒரு Public limited company தங்களது மனதிற்கு தோன்றியது போல பங்குகளை, அதுவும் 70 லட்சம் வரை மதிப்புள்ள பங்குகளை இலவசமாக, சேவையை பாராட்டி அளித்தார்கள் என கூறுவது வானதி அவர்கள் அவிழ்த்து விட்ட பொய் மூட்டைகள் என்பது உறுதியாகிறது.

5. அந்த பங்குகள் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் முறையாக பங்கு சந்தைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அப்போது அதன் விலை 525 ரூபாயில் துவங்கி, 557 ரூபாய் வரை செல்கிறது. ஒருவேளை அது அவ்வாறு வழங்கப்பட்டு இருந்தால் முதலீடு செய்தவர்களை மோசடி செய்த ஷேர்களை இலவசமாகவோ கூலியாகவோ தந்தவர்கள் மீதும், பெற்றவர்கள் மீதும் வழக்காக யாரும் பதியலாம் என்பதையும் அறிவீர்கள்தானே!?.

6. ஆக Zylog நிறுவனத்தால் இலவசமாக வழங்க முடியாது என்றால், அதை பணம் கொடுத்து மட்டுமே வாங்க முடியும். அப்படியென்றால் 70 லட்சங்கள் கொடுத்து வாங்க வேண்டும். வானதியின் கணவரின் அந்த வருடத்திய Financial year வருமான வரி கணக்கில் அந்த ஆண்டுகளில் காட்டிய தொகைக்கும், இதற்கும் சம்பந்தம் உண்டா என்பதையும் ஆராய வேண்டிய கடமை உள்ளது.

7. ஒருவேளை இப்படி வந்த வருமானத்தை கணக்கில் காட்டாமல் மத்திய அரசின் வருமான வரித்துறையை மோசடி செய்திருந்தால் ASG சு.சீனிவாசன் அவர்களின் இச்செயல் சட்டவிரோதமானதுதானே என சாமான்ய மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கணக்கில் வாராத சொத்தை வைத்திருந்த வழக்கில் இத்தகைய குற்றம் செய்த குற்றவாளிகளை நியாயப்படி கைது செய்யலாமே?.” – பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

இனி சைலாக்கின் நிறுவனர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று வானதி சொன்னதைப் பார்ப்போம்.

பிரகாஷ் குமரகுரு மற்றும் இராஜமாணிக்கம் வீரா ஆகிய பாஜக வைச் சேர்ந்த தம்பிகளும், அக்கா வானதிக்கு ஆதரவாக போட்ட ஃபேஸ்புக் பதிவில் சைலாக்கின் நிறுவனர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தானென்பதை உறுதிப் படுத்தியுள்ளார்கள்:

zylog நிறுவனத்தை பொறுத்த வரை அதன் நிறுவனர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள். திரு. சுதர்ஷன் ஜி மற்றும் திரு .ராம் ஜி இவர்களின் கூட்டு உழைப்பாலும், முயற்சியாலும் சிறு துளியாக இருந்து பெரு வெள்ளமாக மாறி, இன்று சிதிலமாகி வெளியாரின் கைப்பிடியில் சிக்கி சீரழிந்து, வழக்கு வல்லடியில் மாட்டி அவப்பெயரோடு இருக்கிறது. – பிரகாஷ் குமரகுரு

யார் அந்த வெளியார்? வானதி குடும்பமா? சிறு துளி வெள்ளம் எப்படி பெரு வெள்ளமாகியது? அந்தப் பெருவெள்ளம் எப்படி சிதலமாகியது? ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்ந்தால் இப்படி மூன்று கண்டங்களிலும் சொகுசாக தொழில் துவங்கி வெள்ளமென பணம் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்கள? இல்லை ஆர்.எஸ்.எஸ் என்று சொன்னால் ஊழல் இல்லை என்றாகி விடுமா?

வானதி சீனிவாசன் தமிழக பி.ஜே.பி-யில் முக்கிய தலைவர். அவருடைய கணவர், துணை சொலிசிட்டர் ஜெனரல். சீனிவாசன் சைலாக் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்துள்ளதுடன், அதன் 20,000 பங்குகளையும் வைத்துள்ளார். வானதியின் தம்பி சிவக்குமார் சைலாக்கில் இயக்குனராக இருக்கிறார். சைலாக்கின் நிறுவனர்கள் இருவருமே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள். மத்தியில் யாருடைய ஆட்சி நடக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமா?

வானதி சீனிவாசன் குடும்பத்துடன் – கோடிஸ்வரர்களின் எளிமை!

Mygov.in இணையத்திற்கு வரும் தகவல்களை பகுப்பாய்வு செய்வது மற்றும் பராமரிப்பதற்காக மத்திய அரசு கோரிய ஒப்பந்தத்திற்கு சைலாக் தவிர ஐ.பி.எம் (IBM), ஹெச்.பி (HP) உள்ளிட்டு நான்கு நிறுவனங்கள் போட்டியிட்டன. சர்வதேச நிறுவனங்களையே தோற்கடித்து மத்திய அரசின் ஒப்பந்தம் சைலாக்கிற்கு எப்படி கொடுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள துப்பறியும் மூளை தேவையில்லை.

இந்த ஒப்பந்தத்தைப் பெற்ற போது சைலாக் ரிசர்வ் வங்கியால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது, செபியால் தடைசெய்யப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரபூர்வ கடன் தீர்ப்பாளரின் (Official Liquidator) கீழ் இயங்கிவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், Mygov.in இணையதளத்திற்கு அனுப்பப்படும் தகவல்கள் மற்றும் புகார்களை சைலாக் நிறுவனம் கையாண்டு மேலாண்மை செய்துவந்துள்ளது. அதாவது எந்தெந்த தகவல் அல்லது புகார்களை எந்தெந்த அதிகாரிகளுக்கு அனுப்புவது, எந்த தகவல்களை பிரதமர் மோடிக்கு அனுப்புவது, எவற்றை நிராகரித்து குப்பையில் போடுவது என்ற வேலையைச் செய்து வந்துள்ளது. சைலாக் மோசடி நிறுவனம் என்று தெரிந்தே அது தேர்ந்தெடுத்துத் தரும் தகவல்களைக் கொண்டு தான் மோடி செயலாற்றியிருக்கிறார் என்றால் அவரது நிர்வாகத் திறமையை பார்த்துக் கொள்ளுங்கள்.

மோடிக்கு அனுப்பப்பட்ட சில அமைச்சர்கள் மீதான புகாரை சைலாக் இடைமறித்து மாற்றியது, மோடியின் பார்வைக்கே செல்லவிடாமல் அழித்தது. இதை பற்றிய தகவல் மோடிக்கு தெரிந்தவுடன் mygov.in தளத்தையே சைலாக் முடக்கியது. இதையடுத்து சைலாக்கின் மீது மத்திய அரசின் விசாரணை நடந்து வருகிறது என்று சொல்கிறார் பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

ஆர்.எஸ்.எஸ்-ன் தொடர்பை வைத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலும் வானதியை பாலசுப்ரமணிய ஆதித்யனும், சங்கர நாராயணனும் கண்டிக்கிறார்கள். இருவரும் இன்னமும் ஆர்.எஸ்.எஸ், மோடி மற்றும் அமித் ஷா மீது பெரு மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

“இந்த நேரத்தில் முகநூல் குற்றசாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நினைத்துக்கொண்டு வானதி தனது பக்கத்தில் நாம் உயிரென மதிக்கும் சங்கத்தை (RSS) வம்பிற்கு இழுப்பது கடும் கண்டனத்திற்குறியது. CBI குற்றச்சாட்டிலோ, பத்திரிகை செய்திகளிலோ சங்கம் பற்றி எந்த குறிப்பும் இல்லை….நம் உயிரிலும், உணர்விலும் இரண்டற கலந்த சங்கத்தை களங்கப்படுத்த முயலக்கூடாது.” – என்கிறார் சங்கர நாராயணன்.

அமித்ஷாவை சந்திக்கும் பாலசுப்ரமணிய ஆதித்யன் – அதானியின் ஆசியுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.கவிடம் என்ன நீதி கிடைக்கும்?

“Zylog என்னும் நிறுவனத்தை நிறுவியவர்கள் திரு.சுதர்ஷனம் மற்றும் திரு.ராம் சேஷரத்தினம் ஆகியோர். இவர்கள் இருவரும் RSS ஸ்வயம்சேவகர்கள் ஆவர் என திருமதி.வானதி சீனிவாசன் அறிக்கை கொடுத்து இருந்தார். நானும் RSS பயிற்சி முடித்து உள்ளேன். நான் யாருக்கோ பணம் தரவில்லை என்றால் RSS ஸ்வயம் சேவகர் பாலு பணம் தரவில்லை என்பார்களா?. என் பெயரை சொல்லி பணம் தரவில்லை என்பார்களா?. சுயமாக உனது வேலையை நீயே செய்ய வேண்டும் என அனைவருக்கும் சொல்லி தரும் உன்னத பணியே RSS அமைப்பின் வேலை. அதைதான் RSS சங்கம் நமக்கு சொல்லித் தந்தது. சொல்லித் தருகிறது. உங்கள் சந்தர்ப்பவாதத்துக்கும், கடனுக்கும் RSS அல்ல”. – என்கிறார் பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

கவனிக்க, பாலசுப்பிரமணிய ஆதித்யன், சங்கரநாராயணன் இருவருமே சைலாக்கின் நிறுவனர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று எங்குமே மறுக்கவில்லை. ஏன் சங்கத்தை இழுக்கிறாய் என்கிறார்கள்.

சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் ஷேஷரத்தினம் ஆகியோருக்கு கிடையிலான நட்பில் சங்கம் இருக்கிறது. இவர்களுக்கும் அக்கா வானதி குடும்பத்துக்கும் இருக்கும் நட்பில் சங்கம் இருக்கிறது. வங்கிக் கடன் வாங்கியதில் சங்கத்தின் செல்வாக்கு கட்டாயம் இருந்திருக்கும்.

பா.ஜ.க -வின் பின்னாலும் சங்கம் இருக்கிறது, பா.ஜ.க மத்தியில் ஆள்கிறது. இந்திய அரசின் mygov.in தள ஒப்பந்தம் சைலாக் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதிலும் சங்கம் இருக்கிறது. ஆக, முறைகேட்டில் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சங்கத்தை இழுக்காதே என்றால் எப்படி? இல்லை ஆர்.எஸ்.எஸ்தான் உடனே ஊழல் செய்த ஸ்வயம் சேகவர்களை நீக்கிவிட்டதா? பா.ஜ.கவும் வானதியை நீக்கியிருக்கிறதா? இல்லையே?

சங்கம் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும், நல்ல பழக்கவழக்கங்களை மட்டுமே கற்றுக் கொடுக்கும். ஆர்.எஸ்.எஸ் ஒழுக்கத்தையும் சத்தியத்தையும் ஹிந்து பண்பாட்டையும் போதிக்கும் உன்னத நிறுவனம் என்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.

“வானதியின் சகோதரர் சிவக்குமார் பற்றிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. சுதர்சன் மற்றும் ராமானுஜத்தால் துவங்கப்பட்ட நிறுவனம் அவர்களின் கையையே விட்டு போனதில் ஒரு துரோக வரலாறு இருக்கிறது என்ற உண்மை நம்மை திகைக்க வைக்கிறது.

வானதியின் தம்பியான சிவக்குமார் ஒரு சாதாரண கூலிக்கு ஜைலாக் நிறுவனத்தில் சேர்ந்த நபர். வானதி மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு சுதர்சனுடன் இருந்து உறவால் அதிவேகமாக ஜைலாக் நிறுவனத்தின் பதவிகளில் உயர்ந்தார். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. நிறுவனத்தில் வேலைக்கு சேர்ப்பவர்கள் எல்லாரும் சிவக்குமார் சொல்லியதால் சேர்க்கப்பட்டவர்கள் என்ற நிலை வந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட சிவக்குமார் தங்கியது, சாப்பிட்டது முழுக்க, முழுக்க சுதர்சனின் அமெரிக்க பங்களா வீட்டில்தான். ஜைலாக்கின் ஐரோப்பிய சேவைகளின் தலைமை பொறுப்பு சிவக்குமாருக்கு வழங்கப்படுகிறது. அனைத்து அதிகாரங்களும் சிவக்குமார் கையில் என்ற நிலைமையும் உருவாகிறது.

இப்போதுதான் இந்த துரோக வரலாற்றின் உச்சம் துவங்குகிறது. ஜைலாக் நிறுவனத்திற்கு வர வேண்டிய 20 மில்லியன் யூரோவை ஒரு நிறுவனம் ஜைலாக்கிற்கு அனுப்புகிறது. சுதர்சனும், ராமானுஜமும் ஒருவரை ஒருவர் கவிழ்க்க அதிகார போட்டியில் இருந்த இருண்ட காலம் இது.

சைலாக் சுதர்சன் வெங்கட்டராமன்.

20 மில்லியன் என்பது சுமார் 140 கோடிகள். 2007-ல் ஜைலாக் பொது பங்குகளை வழங்கிய போது வெளியில் விடப்பட்டது 36 லட்சம் பங்குகள் மட்டுமே. 10 ரூபாய் மதிப்பில் அவற்றால் 3.6 கோடிகளை மட்டுமே கொண்டு வந்து இருக்க முடியும். ஆனால் முக மதிப்பு 10ரூபாய், விற்கப்படும் விலை 350 ரூபாய் என இருந்ததால் அதன் மொத்த விற்பனை 126 கோடிகளை தொட்டது. நான் கூறும் இந்த 20 மில்லியன், அதாவது 140 – 145 கோடிகள் கம்பெனி வருமானம் வரும் காலத்தில் ஜைலாக்கின் 350 ரூபாய்க்கு வழங்கப்பட்டு இருந்த பங்குகளின் மதிப்பு 15 ரூபாய்க்கும் குறைவாக பங்கு சந்தையில் விற்றுக் கொண்டு இருந்து (இது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது). ஆக ஜைலாக்கின் பங்குகளின் மதிப்பை குறைத்து, மக்களிடம் இருந்து பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி விட திட்டமிட்டு சுதர்சன், தனது ஐரோப்பிய அலுவலகத்திற்கு வந்த பணத்தை தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு சிவக்குமாரிடம் பணிக்கிறார். ஏற்கெனவே மற்றொரு முக்கிய பங்குதாரரும், கம்பெனியின் மேனேஜிங் டைரக்டருமான ராமானுஜத்துடன் தனக்கு இருக்கும் பிரச்சனையை இதை வைத்து அனைத்து பங்குகளையும் வாங்கி விட்டு, ராமானுஜத்தை கம்பெனியை விட்டு விரட்ட சுதர்சன் திட்டமிடுகிறார். தனது வீட்டில் தங்கி, தான் போட்ட சோற்றை தின்று,தான் கொடுத்த ஐரோப்பிய தலைமை பதவியை வைத்துக் கொண்டு இருக்கும் சிவக்குமார் தனக்கு துரோகம் செய்ய வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில் சுதர்சன் இவ்வாறு உத்தரவிட, அங்கு வேறு துரோகமும், சதித் திட்டமும் அரங்கேறி வந்தது.

வானதி தம்பி சிவக்குமார் திருட்டுத்தனமாக ராமானுஜத்துடன் கை கோர்த்தார். பணம் ராமானுஜத்தின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு சிவக்குமாரால் அனுப்பப்படுகிறது. விளைவு, சத்தமில்லாமல் ஜைலாக்கின் பங்குகள் ஒரு மாதத்திற்குள் ராமானுஜம் மற்றும் சிவக்குமாரின் ஆட்களால் வாங்கப்படுகின்றன. எல்லாம் தன் கையில் என சுகபோகங்களுடன் சுதர்சன் வாழ்ந்து வந்த வசந்த காலம் இது.

இரண்டு மாதங்கள் கழித்து தனது மெயிலுக்கு வந்த ஐரோப்பா வங்கியின் கணக்கில் பணம் ராமானுஜத்திற்கு சென்றதை கண்டு அதிர்ந்தார் சுதர்சன். அதே நேரத்தில் கம்பெனியின் பங்குதாரர்களின் கூட்டத்தில் வைத்து சுதர்சன் சேர்மன் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார்.

பிறகு இந்த நிறுவனம் எப்படி கார்த்திக் சிதம்பரத்தின் பினாமிகளின் கைக்கு சென்றது என்ற கதைகள் விரைவில் காண்போமா!….” – பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

வானதியின் தம்பி சிவக்குமார் செய்தது நம்பிக்கை துரோகம் எனில் அதில் ஸ்வயம் சேவகர் ராம்-ஜீக்கு பங்கில்லையா? ஸ்வயம் சேவகர் சுதர்ஸன் ஜீ, சக ஜீ ராமானுஜத்திற்கு செய்ய நினைத்தது வஞ்சகமில்லையா? ஸ்வயம் சேவகர்கள் சுதர்ஸன் ஜீயும், ராம்-ஜீயும் வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றியது, பங்குச்சந்தை முதலீட்டாளர்களை ஏமாற்றியது மோசடியில்லையா?

இந்திய சுதந்திரப் போராட்டத்தையே காட்டிக்கொடுத்த துரோக வரலாற்றைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் -சுடன் துரோகமும் வஞ்சகமும் ஒட்டிப்பிறந்தவை. அதனால் ஜீக்கு ஜீ சரியாப் போச்சு ஜீ என்கிறார்கள் போலும்.

மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டது என்று சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க மட்டுமின்றி ஹிந்து ஒற்றுமைக்காக வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ்-சின் உறுப்பினர்களும் துட்டு விசயத்தில் கத்தி, துப்பாக்கி தவிர எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை மேற்கண்ட செய்தி உணர்த்துகிறது. பணமும் அதிகாரமும் கை கோர்க்கும் போது அங்கே யார் பெரியவன் அதாவது யாருக்கு இலாபம் அதிகம் வேண்டும் என்ற சண்டை வந்தே தீரும்.

இதில் சைலாக்கின் நிறுவனர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இருந்து வந்து, அரசு – கட்சி தொடர்புள்ள வானதி & கோ-வை நாடி உடன்படிக்கை செய்து, பிறகு வானதி & கோ-வில் உள்ள வானதி தம்பி நிறுவனர்களின் ஒருவரோடு திருட்டுத்தனமாக தொடர்பு வைத்து முழுக்காசையும் ஆட்டையைப் போடுகிறார். முதலில் அனைவரும் சேர்ந்து வங்கிக் கடன் – பங்குச் சந்தை முறைகேடுகளைச் செய்கிறார்கள். பிறகு தங்களுக்குள்ளேயே அபகரித்துக் கொள்ளும் போக்கில் அடித்துக் கொள்கிறார்கள். பிறகு அரசு விசாரணை வருகிறது. அவர்களுக்கிடையே உள்ள சண்டைகளினால் விவரங்கள் பொதுவெளிக்கு வந்து நாறுகின்றன!

( பாஜக -வின் உள்குத்துக்களால் ஒருவரை ஒருவர் அம்பலப்படுத்திக் கொள்ளும் முகநூல் பதிவுகள் – பெரிதாகப் பார்க்க படங்களின் மேல் அழுத்தவும் )

“என்னை கூலிப்படையை ஏவி விட்டு தாக்கியது போல உங்களையும் தாக்கி விடப் போகிறார்கள். எச்சரிக்கை ஜி.”Kannan Subramaniam (Y.S.கண்ணன்)

G R Suresh Kumar அட ராமா……என்ன தான் நடக்குது தமிழக பா.ஜ.க வில்….. கேள்விப் படும் ஒவ்வொரு தகவலும் உள்ளத்தை உலுக்குகிறதே….அதுவும் தகவல் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் என்பதால் வலுவான ஆதாரங்களாகவே படுகிறது….. யாரையும் நம்ப முடியவில்லை….. காங்கிரஸ்காரனை ஊழல் பேர்வழி என்று கேவலமாக பேசி வந்த நாம் இனி எங்கு போய் முகத்தை வைத்து கொள்வது ? நம்மை இனி காங்கிரஸ்காரன் காறித் துப்புவானே …. என்ன கண்றாவி இது…

Shanmuga Sundaram இவர் மாத்திரம் இல்லை. திரு. இல. கணேசன் போன்ற பலரும் இதைபோல்தான் செயல்படுகிறார்கள். பதவிக்கு வருவதே பணம் சம்பாதிக்கதான் என்பது BJP யிலும் நடைமுறை ஆகிவிட்டது.

Krishnan இது உண்மையாகவே இருந்துவிட்டு போகட்டும். இதை பற்றிய செய்தியும் பல நண்பர்கள் சில நாட்களுக்கு முன்பு கூட பதிந்தனர். அதை மறந்தும் போயிருப்பர். அதற்காக யார் தும்மினாலும் அது பாஜக -வினால் தான் நிகழ்ந்தது என்று கூறி கேவல திராவிட, தமிழ் அரசியல் செய்யும் கேடுகெட்ட மனிதர்கள் இருக்கும் தமிழகத்தில் வளராத பாஜகவை…இப்படி பேசி இன்னமும் பொசுக்க தெவையில்லை என்பதே எனது கருத்து.

Krishnan மேலும் இதை பற்றி பேசுவதற்கு எதிர்கட்சிகள், நடுநிலைகள் என பலர் இருக்கின்றனர். இதில் நீங்கள் பேசுவது அந்த பொன்னார் வானதி பதிவில் உமிழ்ந்த பின்னூட்டங்களை மனதில் வைத்தே பதிக்கின்றீர்கள் என்பதும் உங்களை உட்பட அனைவருக்கும் தெரிந்ததே. வழக்கம் போல் பதியும் உங்கள் பாணியில் பதிவுகளை தொடருங்கள். அதுவே அழகு! இங்கு பாஜக வளர்ந்த பிறகு நாம் அதை கொத்தி பிரித்தெடுத்து மேய்ந்துவிடலாம். புல் கூட வளர முயற்சி செய்யும் இந்த தமிழக பாஜக என்ற கட்டாந்தரையில் அமிலத்தை ஊற்ற வேண்டாம்.

அப்புறம் இதே போன்ற குற்றச்சாட்டுகள் ஹெச் ராஜா அவர்கள் தலைவர் ஆகலாம் என்ற ஊகங்கள் எழுந்த போது அவர் சகோதரரோ, நண்பரோ சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தவறான நடவடிக்கைகளுக்கு அவர் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று மொட்டை பெட்டிஷன் போடும் கும்பல்கள் களமாடின. இதே போல இன்னொரு மாநில செயலாளர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தற்போதைய மாநில தலைவர் டாக்டரின் மைத்துனர் தாது மணல் கொள்ளையன் வைகுண்ட ராஜநுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதி மன்றத்தில் செயல்பட்டு 32 வழக்குகளில் விடுதலை பெற்று தர உதவினார் என்று செய்தி வந்த போதும் அவரின் பதவி விலகல், விளக்கம் கோரப்பட்டது, ஆனால் பொது செயலாளர் விஷயத்தில் எந்த விளக்கமும் கேட்கபடாமல் தொடர் அவதூறுகள் மட்டுமே முன் வைக்கப்பட்டு அவரை காவு வாங்க ஒரு கும்பல் துடிக்கிறது. – Prakash Kumaraguru

– தொடரும்

– வினவு புலனாய்வுக் குழு

முந்தைய பாகத்திற்குச் செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 1 – வானதி சீனிவாசன்

ஆதாரங்கள் :

_____________

பா.ஜ.க-வின் ஊழலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்த புலனாய்வுக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி

  1. பப்ளிக் செக்டர் கம்பெனி என்றால்தான் பொதுத்துறை நிறுவனம் (மைய அல்லது மாநில அரசுக்குச் சொந்தமானது). பப்ளிக் லிமிடெட் கம்பெனி என்றால் அது பொது உடைமை நிறுவனம் ஆகும்.

    சினிமா விரும்பி

  2. First pic (three persons) – The center one is Ram Sesharathnam (Co founder of Zylog)
    (ராமானுஜம் மற்றும் சேஷாரத்தினம் – பெயர் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.)

    இன்னொரு படத்தில் பெயர் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
    His name is Sudharshan (சுதர்சன் – Co founder of Zylog)

  3. பிஜேபி துணை தலைவர் வானதி சீனிவாசனின் ஊழல்களை / உண்மையை உரக்க சொல்லும் வினவுக்கு எனது வாழ்த்துக்கள். அதே நேரத்தில் எனது கேள்வி என்னவென்றால் கார்த்திக் சிதமபரம் மீதான ஊழல் முறைகேடுகள் பற்றிய கட்டுரையை வினவு வாசகர்கள் எப்போது எதிர்பார்கலாம் என்பதே!

    பிஜேபி ஊழல் , காங்கிரஸ் ஊழல் என்று எல்லாம் வகைபடுத்தி தனி தனி கட்டுரைகள் எழுத தேவையே இருக்காது என்றே நினைகின்றேன். ஏன் என்றால் அவர்கள் செய்யும் ஊழலின் மைய்ய புள்ளி என்பது தேர்த்தல் அரசியலும் அதன் மூலம் கிடைக்கும் ஆட்சி அதிகாரமுமே! அந்த ஆட்சி அதிகாரத்தின் மூலம் அவர்கள் கார்பரேட் நிறுவங்களிடம் இருந்து முறைகேடாக பணம் பெறுவதும் இந்த நிறுவனங்களின் கால்களை நக்கி பிழைப்பதும் இரு கட்சிகளுக்கும் பொதுவான செயல் தான்.

    ஆமாம் ராஜா மற்றும் கனிமொழியின் 2g ஊழலை பற்றிய வினவின் கருத்துகள் சரியானதா வினவு? மஞ்சா பையுடன் சென்னைக்கு வந்த கருணாநிதியின் குடும்ப சொத்தையும் பற்றி இன்னும் அப்டேட் கொடுக்கலாம் அல்லவா? வினவு என்னவோ திமுக சார்புடன் தான் இருக்கு.

  4. குமார் காவிகளின் பாசிச நடவடிக்கைகளை நீங்கள் மிகக்குறைவாக மதிப்பிடுகிறீர்கள்.படர்ந்துவரும் காவி இருளை துடைத்தெறிய இன்னும் இன்னும் வேகமாக நாம் அரசியல் பணி செய்ய வேண்டியுள்ளது.இப்போது உங்களுக்கென்ன திடீரென கார்த்தி சிதம்பரம்?அதற்கு நீங்களே பதிலும் கொடுத்தூவிட்டீர்கள்.இந்துமதவெறியர்களை விமர்சித்தால் அந்தப்பதிவிலேயே இஸ்லாமிய மதவெறீயர்களையும் இலவச இணைப்பாக இணைத்து விமர்சிக்க வேண்டும் என்பது என்ன மாதிரியான கண்ணோட்டம்?இது என்ன தினமலம் வழச்கும் வாரமலரா?ஈபிஎஸ் ஒபிஎஸ் அசிங்கங்கள் தாமரை தாசன்களாக நாட்டைப் பீடித்திரூக்கும் போது கரூணாநிதியின் மஞ்சள் பையை ஆராய்ச்சி செய்ய என்ன அவசியம் வந்தது இப்போது?தோழர்களின் மக்கள் பணீயை சிறுமைப் படுத்த முயற்சிக்காதீர்கள் நண்பா.மறைமூகமாக வோ நேரடீயாகவோ வானதிகளீன் ஊழலுக்கு அணில் ஆகிவிடாதீர்கள் . ஏனெனில் உங்கள் கேள்வியின் தன்மை அழ்வ்வாறு உள்ளது.நன்றி

  5. அட விடுங்க நெப்போலியன், இவருக்கு இதே வேலை ஒரு சமூக அவலத்தை சொன்னால் அங்கு வந்து சாதியம் பேசவேண்டியது, பிஜேபிகாரி ஊழலை சொன்னால் முதல்வரியில் பாராட்டுவது போல் அடித்துவிட்டு பிறகு கருணாநிதிய சொன்னியா கட்டுமரத்த சொன்னியா என வேண்டியது. பிறகு வேறு பதிவுகளில் போய் இந்த காண்டை காட்டவேண்டியதுன் நாம் அதற்கு பழைய பதிவுகளில் எதிர்வினை செய்தால் அங்கும் வந்து என்ன கைய புடிச்சு இழுத்தியா என மறுபடியும் ஆரம்பிக்க வேண்டியது.

    கருணாநிதி குடும்பம் பற்றி தான் கிழித்து தொங்க விடப்பட்ட பதிவுகள் ஏராளம் உள்ளதே? பாருங்கள் நேரடியாக ‘முஸ்லிமையும் சொல்லேன்’ என வழமையான தேசபக்தாலை விட கொஞ்சம் ‘நடுநிலமையாளர்’ போல காட்டுவதற்கு ‘அப்டேட்’ கேட்கிறார். யப்பா…பாண்டே பிச்சை எடுக்கணும்.

    ஏன் பிஜேபி என வகைப்படுத்தி தனியே எழுதினால் ரொம்ப குத்துதோ? பிஜேபி பேருக்கு ரொம்ப டேமேஜ் ஆகுதோ? பிஜேபியையும் எழுதுவோம் காங்கிரசையும் எழுதுவோம் செய்யும் எல்லாரையும் எழுதுவோம், என்ன வந்தது? அதெப்படிங்க போர்னோவுக்கு பல பகுதி கட்டுரை வேண்டும் உங்களுக்கு பிஜேபி ஊழல் பற்றியெல்லாம் தனியாக கட்டுரை தேவையில்லைஎன சொல்ல முடிகிறது? போர்னோவை விட பிஜேபி கேவலமானது எனும் எண்ணமா? ச்சே ச்சே அப்படி இருக்காது. அதில கட்டுமரதுக்கும் கொஞ்சம் காலற்றியல் டேமேஜ் ஆகவில்லையே என கவலை வேறு ஹிஹிஹ்

    • நெப்போலியன், சின்னா,

      வர்க்க புரட்சியாளர்கள் என்போர் அனைத்து ஓட்டு கட்சிகளையும் ஊழல் விசயத்தில் அம்பலப்டுதவேண்டும் ,அப்ப தான் மக்கள் நம்புவர்கள் என்ற என்னுடைய கருத்தை வெளியிடாமல் உள்ள வினவிடம் தான் நீங்க இனி கேள்வி கேட்கணும்… என்னிடம் அல்ல. இந்த கட்டுரையை பற்றிய என்னுடைய முதல் விமர்சனமே பிஜேபி துணை தலைவர் வானதி சீனிவாசனின் ஊழல்களை / உண்மையை உரக்க சொல்லும் வினவுக்கு எனது வாழ்த்துக்கள் என்பது தான். அடுத்ததா தான் மற்ற கட்சிகளை பற்றி பேசிகிட்டு இருக்கேன் என்ற உண்மை கூட தெரியாமல் உளறகூடாது. பாசிச ஹிந்துத்துவா பிஜேபியை மக்கள் மன்றத்தில் அம்பலபடுத்தும் அதே நேரத்தில் இந்த ஓட்டு கட்சிகள் கார்பரேட் நிறுவனங்களை நக்கி பிழைக்கும் செயலை , அவற்றில் இருந்து நிதியை முறைகேடாக பெரும் செயலையும் நாம் கட்சி பேதம் இல்லாமல் அம்பலபடுத்த வேண்டும்.காங்கிரசின் கார்திக் சிதம்பரம், அவன் அப்பன் சிதம்பரம் எல்லாம் மக்களால் விரட்டியடிக்கப்டவேண்டிய நாசகார சக்திகள் என்பதிலும் உங்களுக்கு ஏதும் மாறுபாடு கிடையாது தானே? வர்க்க போராட்டகாரர்கள் இந்த ஓட்டு கடசிகளையும் அவற்றின் ஊழல்களையும் ராசா,கனிமொழி ,மாறன் சகோ.., சிதம்பரம், ஓப்ஸ் ,இபிஸ் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அம்பலப்டுத்தவேண்டும் என்பது எனது கருத்து.ஓட்டுக்த்சிகாரர்களில் ஒரு சிலருக்கு தனி சலுகை எல்லாம் கொடுக்க கூடாது என்பது எனது எண்ணம்.

      (என்னுடைய கருத்தை நானே எடிட் செய்து மீண்டும் மீண்டும் வினவுக்கு அனுப்பும் அவலநிலையில் தான் நான் உள்ளேன். எப்படியாவது உங்களுக்கு எல்லாம் பதில் அளித்தாக வேண்டியுள்ளதே என்ன செய்ய?)

      • // வர்க்க புரட்சியாளர்கள் என்போர் அனைத்து ஓட்டு கட்சிகளையும் ஊழல் விசயத்தில் அம்பலப்டுதவேண்டும் ,அப்ப தான் மக்கள் நம்புவர்கள் என்ற என்னுடைய கருத்தை வெளியிடாமல் உள்ள வினவிடம் தான் நீங்க இனி கேள்வி கேட்கணும் //

        குமார் நீங்கள் எப்படி மாற்றி கேட்டாலும், எத்தனை முறை கேட்டாலும் அதெல்லாம் இந்த தளத்தில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. அது தான் ‘சிறப்பு பகுத்தறிவாதம்’

  6. அரசியலை சார்ந்து இருந்தால் … அதுவும் ஆளும் கட்சியாக இருந்து விட்டால் ….இந்தம்மா என்ன .. காேனதி கூட ஊழலில் ஊறித்திளைக்கலாம் … என்பது நம் நாட்டின் நடைமுறையாகி பல ஆண்டுகள் கடந்து விட்டன ..ஓட்டு பாெறுக்கிகளுக்கு காசேதான் கடவுள் …!

  7. குமார் ரஜினி என்ற காரியக்கிறுக்கனையும் கமல் என்ற குட்டைக் குழப்பியையும் அவர்களின் செயல்பாடுகள் கொண்டே குறீப்பாக உணர்த்திதான் நாம் விமர்சிக்க வேண்டும்.பொத்தாம் பொதுவாக சினிமா பொறுக்கிகள் என கடந்து செல்ல முடீயாது.ஒட்டுக்கட்சிகளின் அதனதன் தன்மையைக்கொண்டு வினவு சரியான அரசியல் கண்ணோட்டத்துடன்தான் தொடர்ந்து எழுதிவருகின்றது.அதை நீங்களும் அறீவீர்கள் என்றே நம்புகின்றேன்.அது போக தினம் தினம் மாறிவரும் அரசியல் சூழலில் அதன் தேவைக்கேற்பதான் எழுதமுடியும்.அதை விடுத்து அதை எழுது இதை எழுது என நாம் ஜாப் டைப் ஒர்க்கெல்லாம் பார்க்க முடியாது.ஒரு கட்டுரையின் மீது ஆதரவோ மாற்றுக்கருத்தோ அதை நாம் மக்களின் நலன் சார்ந்து தொடர்ந்து விவாதிப்போம்.பரீசீலியுங்கள்.நன்றி.

    • தோழர் நெப்போலியன் , ஓட்டு பொருக்கி கட்சிகளை , அந்த கார்பொரேட் கால் நக்கிகளை ,அந்த தரகு முதாலாளிகளின் நலன்களை முன்னெடுத்து செல்லும் ஒட்டு பொறுக்கிகளை ஒருவேளை நீங்கள் சொல்வது போன்று யாரேனும் நல்லகட்சி ,கொஞ்சம் நல்ல கட்சி,கெட்ட கட்சி என்று தரம் பிரித்தால் அதனை விட வேறு எதுவும் சந்தர்ப்பவாதம் இல்லை. இது தான் முதன்மையான சந்தர்ப்பவாதம். வர்க்க புரட்சியை சீர்குலைக்கும் செயல். இதற்கு மேல் விளக்கி உதாரணங்களுடன் நான் எழுதினால் வினவில் என் ஒட்டுமொத்த கருத்தும் தடை செய்யப்படும் எனவே இத்துடன் நிருதிகொள்கின்றேன். மற்ற விவரங்களை உங்களின் அறிவாற்றலுக்கே விட்டுவிடுகின்றேன். நன்றி.

  8. நண்பர் சின்னா truth seyar சாருக்கு உங்கள் சிறப்பான பாணியில் பதிலளிக்குமாறு கோருகின்றேன்.

      • நெப்போலியன் மற்றும் Truth Sayar , உங்கள் இருவருக்கும் நான் கூறிக்கொள்ள விரும்புது என்ன என்றால் விவாதங்களில் சுய சார்புடன் இருங்கள். அடுத்தவரின் பின்னுட்டத்தில் Truth Sayar குளிர் காய்வது, அல்லது அடுத்தவரை தூண்டி விட்டு நெப்போலியன் அவரை (சின்னா)பின்னுட்டம் எழுத சொல்லுவது எல்லாம் விவாத முறையே அல்ல. நெப்போலியனின் தவறு குழு மனப்பான்மையை ஏற்படுத்தி விவாதத்தை சீர்குலைக்கும். புரிந்தளுக்கு நன்றி.

  9. @’not quite’TruthSayer

    What are you aware of huh? we clearly answered again and again that there are a literally tens of articles about other parties’ corruptions, especially your prime target DMK’s. Kumar and you are just bullshitting knowingly without reading or mentioning them, then how can he expect answer from vinavu to his bullshit question? they got more important things to do than replying your troll questions. that’s why we are here instead, dealing with you trolls. so, drop your pathetic attempts to discredit us go do something else.

  10. சின்னா,வினவு பெயரில் வரும் பின்னூட்டங்களைத் தவிர மற்றவர்களின் கருத்துக்கு அவரவரே பொறுப்பு. அது வினவு கருத்தாக புரிந்து கொள்ள வேண்டாம். எங்கே மேல் உள்ள வினவின் மறுமொழிகள் குறித்து வினவின் கொள்கையின் அடிப்படையில் நீங்கள் வினவு சார்பாக பதில் அளிக்க தகுதி அற்றவர் ஆகின்றீர்கள். புரிந்தலுக்கு மிக்க நன்றி

    //. Kumar and you are just bullshitting knowingly without reading or mentioning them, then how can he expect answer from vinavu to his bullshit question? they got more important things to do than replying your troll questions.//

  11. எப்புடிங்க உங்க ட்ரோல் கேள்விக்கெல்லாம் வினவேதான் பதில் சொல்லனுமா? இதிலிருந்தே தெரியல விவாதம் என்ற பெயரில் ட்ரோல் செய்கிறீர்கள், தெய்வதிருமகள் ‘அப்ப சொன்ன அதே மரமா..’ காமிடி தன் நினவு வருகிறது, மற்ற கட்சி ஊழல்கள் பற்றி உள்ள எண்ணற்ற பதிவுகளை விட்டுவிட்டு மறுபடியும் மறுபடியும் வினவே வந்து திருவாய் மலர்ந்து அருளினால்தான் அடங்க போவது போல உங்களுக்கு? அதுதானே சொன்னேனே அவர்களுக்கு இந்த விதண்டா வாதத்தை விட வேறு முக்கிய களப்பணிகள் இருக்கும் என்று? அவர்கள் பதிலளிகாமல் இருப்பதில் இருந்து தெரியவில்லையா உங்கள் கேள்விகள் சரக்கில்லாத வம்பு கேள்விகள் என்று? பதில்வராவிட்டால் மணிகண்டனை போல நல்லதா நாலு வார்த்தையில் நாக்கை புடுங்குற மாதிரி நாலு வரியை கொட்டிவிட்டு போகாமல்..விவாதம் கொள்கை தகுதி ஹிஹிஹிஹ் போங்க குமாரு.

    • முத்திடிச்சு உங்களுக்கு சின்னா! வினவு சார்பாக பதில் அளிக்க உங்களுக்கு உரிமை இல்லை மேலும் உங்கள் பதில்கள் வினவின் பதிலாகாது என்ற என்னுடைய எளிய கருத்துக்கு இப்படி பின்னுட்ட பகுதியில் வாந்தியெடுத்து வைத்தால் வினவு வாசகர்கள் தாங்குவார்களா? யோசிச்சி பேசுங்க சின்னா!

Leave a Reply to Cinema Virumbi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க