privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கஎன்னது மறுபடியும் முதல்ல இருந்தா ?

என்னது மறுபடியும் முதல்ல இருந்தா ?

-

பணமதிப்பழிப்பு நடவடிக்கை: என்னது… மறுபடியும் முதல்ல இருந்தா…?

500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே 11.55 இலட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாக அறிவித்தது, ரிசர்வ் வங்கி. அப்பொழுதே மோடியின் ”காவிய” நடவடிக்கை வரலாறு காணாத தோல்வியில் முடியப் போவது உறுதியாகிவிட்டதால், ஆளுங்கும்பலும், அவர்களது அடிவருடிகளும் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு வாயில் வந்த நோக்கங்களையெல்லாம் கற்பித்து, அந்நடவடிக்கையை நியாயப்படுத்தும் பித்தலாட்டத்தனத்தில் இறங்கிவிட்டார்கள்.

குறிப்பாக, ஸ்டேட் பாங்கின் ஆராய்ச்சிப் பிரிவு, ”பணத்தை எண்ணுவதில் ரிசர்வ் வங்கி தவறு செய்திருக்கலாம்” என்றொரு சந்தேகத்தை ஊதிவிட்டது. இந்த சந்தேகம் ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையைக் கேலிக்குள்ளாக்குவது குறித்து மோடி கும்பல் கவலை கொள்ளவில்லை. அருண் ஜெட்லி உள்ளிட்ட அதிகார வர்க்கமோ, ”பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் குறைந்து, அது டிஜிட்டல்மயமாகும்; அப்படி டிஜிட்டல்மயமாகும்போது வரி வருமானம் அதிகமாகும்” எனக் கூறி, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கப் போவதாகக் கதையளந்தார்கள்.

எவ்வளவு கருப்புப் பணம் பிடிபட்டிருக்கிறது, கள்ளப் பணம் ஒழிக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்விகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ”வருமான வரி கட்டும் நபர்களின் எண்ணிக்கை 2017 – 18 ஆம் நிதியாண்டில் 57 லட்சமாக உயர்ந்திருக்கிறது. அவர்கள் செலுத்தும் முன்வரி 42 சதவீதமும், தானாகச் செலுத்தும் வரி 34 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்த தொகை 10 இலட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதனால் தொழில்களுக்கு 60 இலட்சம் கோடி ரூபாய் வரை கடன் கொடுக்க முடியும். குறிப்பாக, கந்து வட்டியால் வாடும் குறுந்தொழில்களுக்கு இயல்பான வட்டியில் கடன் கொடுக்க முடியும். மக்கள் குறைந்த விலையில் இனி வீடுகள் வாங்கமுடியும்” என்றெல்லாம் அளந்துவிட்டு, பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் தோல்வியை மூடிமறைத்துவிட முயலுகிறார், குருமூர்த்தி.

இந்த நியாய வாதங்கள் அனைத்தும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கயமைத்தனம் கொண்டவையாகும். ”1000, 500 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவிக்காமலேயே, இவற்றையெல்லாம் சாதித்திருக்க முடியும்” என்கிறார், பேராசிரியர் அருண் குமார்.

2015 – 16 நிதியாண்டைக் காட்டிலும், 2016 – 17 நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 5.4 இலட்சமாக அதிகரித்திருந்தாலும், அவர்களுள் யாரும் பெரிய பண முதலைகள் கிடையாது. அவர்கள் வரி விதிக்கக்கூடிய வருமானமாகக் காட்டிய சராசரி தொகை வெறும் 2.7 இலட்சம் ரூபாய்தான். இதனால் அரசிற்குக் கூடுதலாகக் கிடைக்கக்கூடிய கூடுதல் வருமான வரி வெறும் 10,587 கோடி ரூபாய்தான்.

”வருமான வரி வசூல் கடந்த ஆண்டு 25 சதவீதம் அதிகரித்திருக்கிறது என பெருமைபட்டுக் கொள்கிறார், நிதியமைச்சர். அதற்கு முந்தைய 2015 – 16 நிதியாண்டில், செலாவணி செல்லாதாக்கப்படாமலேயே, வருமான வரித் தாக்கல் 27 சதவீதம் அதிகரித்தது அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை” என சேம்சைடு கோல் போட்டிருக்கிறது, தினமணி.

நவம்பர் 2016-க்கும் மே 2017-க்குமான இடைப்பட்ட மாதங்களில் வருமான வரித்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கணக்குக் காட்டப்படாத வருமானத்தின் மதிப்பு 17,526 கோடி ரூபாய். இதில் கைப்பற்றப்பட்ட தொகை 1,003 கோடி ரூபாய். பினாமி பணப் பரிவர்த்தனைகளைக் கண்டுபிடித்ததில் அரசுக்குக் கிடைத்த வருமானம் 600 கோடி ரூபாய். மோடி அரசு கருப்புப் பணபேர்வழிகளுக்காக அறிவித்த பொது மன்னிப்புத் திட்டமான – பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் தானாக முன்வந்து தெரிவிக்கப்பட்ட கணக்குக் காட்டாத வருமானம் 5,000 கோடி ரூபாய். அந்த 5,000 கோடி ரூபாய் மீது விதிக்கப்பட்ட வரி மற்றும் அபராதத்தின் கீழ் அரசுக்குக் கிடைத்த வருமானம் 2,500 கோடி ரூபாய். இதையெல்லாம் கூட்டினால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அரசுக்குக் கிடைத்திருக்கும் கூடுதல் வருமானம் 14,690 கோடி ரூபாய். (ஆதாரம்: எக்கானமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி இணைய இதழில் வெளியான டிமானிட்டைசேஷன்-போஸ்ட் ட்ரூத்ஸ் கட்டுரை)

இதுதான் வரவு கணக்கு. செலவுகளைப் பொருத்தவரை, ”புதிய நோட்டுக்களை அச்சடித்து, அவற்றை நாடெங்கும் அனுப்பிவைப்பதற்கு ஆன செலவு, வங்கிகளுக்குள் நுழைந்த பல இலட்சம் கோடி ரூபாயைக் கணக்கெடுக்க ஆன செலவு, கார்ப்பரேட் வருமான வரி மற்றும் மறைமுக வரிகளில் ஏற்பட்ட இழப்பு – இவற்றையெல்லாம் கூட்டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட கூடுதல் செலவுகளைக் கணக்கிட வேண்டும்” என்கிறது ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை.

இம்மூன்றில் புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க மட்டும் 7,965 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. இந்தச் செலவு கடந்த ஆண்டு நோட்டு அச்சடிக்க ஆன செலவைக் காட்டிலும் 4,544 கோடி ரூபாய் அதிகம். இதற்கு அப்பால் புதிய நோட்டுகளை நாடெங்கும் அனுப்பி வைக்க ஆன செலவு, ஏ.டி.எம். இயந்திரங்களை மாற்றியமைக்க ஆன செலவு என்பதையெல்லாம் கணக்கில் கொண்டால், புதிய நோட்டுக்காக ஆன செலவு ரூ.21,000 கோடி எனக் குறிப்பிடுகிறார், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

பழைய நோட்டுக்களை ஒழித்துக் கட்டிய பிறகு அரசுக்குக் கிடைத்திருப்பதாகக் கூறப்படும் இலாபம் 16,000 கோடி ரூபாய். புதிய நோட்டுக்களை அச்சடிக்க ஆன செலவு 21,000 கோடி ரூபாய். இதுதான் மோடியின் புத்திசாலித்தனம்!

2015-16 ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி மைய அரசுக்கு வழங்கிய இலாப ஈவு 65,876 கோடி ரூபாய். ஆனால், 2016-17 ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் இலாப ஈவு 30,659 கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டது. இந்த வீழ்ச்சிக்கு பணமதிப்பழிப்பு நடவடிக்கைதான் காரணம். குறிப்பாக, 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த பிறகு, வங்கிகளில் குவிந்த பணத்திற்கு வட்டியாக மட்டும் ரிசர்வ் வங்கி 18,004 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவிட்டிருக்கிறது.

இந்த நட்டங்களெல்லாம் பணமதிப்பழிப்பு நடவடிக்கை அரைவேக்காட்டுத்தனமான, முட்டாள்தனமான நடவடிக்கை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால், மோடியின் துதிபாடிகளோ டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாகியிருக்கிறது, ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகமாகியிருக்கிறது என்ற ரீல்களை ஓட்டி, குப்புற விழுந்து கிடக்கும் மோடி அண்ட் கம்பெனியைத் தூக்கிவிட முயலுகிறார்கள்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் 10 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பணம் குவிந்திருப்பதால் யாருக்கு என்ன இலாபம்? அதை எடுத்து, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய மோடி முன்வந்தாரா? நோட்டுத் தடை அறிவிப்பால் நலிவடைந்த சிறுதொழில்களுக்கு நட்ட ஈடு தர முன்வந்தாரா? மாறாக, வங்கி சேமிப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி குறைக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி 2017 முதல் மார்ச் 2017 முடியுவள்ள காலாண்டில் 6.1 சதவீதமாக இருந்த வளர்ச்சி, அதற்கு அடுத்த காலாண்டில் (ஏப்.-ஜூன் 2017) 5.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் (ஏப்.-ஜூன் 2016) இவ்வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்திருக்கிறது. இந்த வீழ்ச்சிக்குப் பணமதிப்பழிப்பு நடவடிக்கைதான் காரணம் என்பதை 2016-17 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஒப்புக் கொண்டிருக்கிறது.

”அரசு வெளியிட்டுள்ள இந்த வளர்ச்சிப் புள்ளிவிவரமும்கூட நம்பகத்தன்மையற்றதுதான். ஏனென்றால், இப்புள்ளி விவரங்கள் கார்ப்பரேட் தொழில்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, வீழ்ச்சியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளன. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு அமைப்புசாரா சிறு, குறு தொழில்கள் மற்றும் வணிகத்தில் ஏற்பட்டுள்ள நசிவை இப்புள்ளிவிவரம் ஒதுக்கித் தள்ளியிருப்பதால், வளர்ச்சி வீதம் 5.7 சதவீதத்தைவிடக் குறைவாகவே இருக்கும்” என மதிப்பிடுகிறார், பேராசிரியர் அருண் குமார்.

”பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் கோடி ரூபாய் நட்டமேற்பட்டிருக்கிறது, 15 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள், விவசாய உற்பத்திக்குப் பாதிப்பில்லை என்றபோதும், விவசாய வருமானம் வீழ்ச்சியடைந்திருக்கிறது” என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படிபட்ட நெருக்கடியான சூழ்நிலையில் ஜி.எஸ்.டி. மூலம் வரி வருமானம் கூடியிருக்கிறது எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பா.ஜ.க. கும்பலை வழிப்பறி கொள்ளைக்கூட்டம் என்றுதான் கூறமுடியுமே தவிர, மக்களை ஆளும் தகுதி படைத்தவர்கள் எனக் கூறுவது வெட்கக் கேடானது.

கருப்புப் பணத்தையும், இலஞ்சத்தையும், கள்ளப் பணத்தையும், தீவிரவாதத்தையும் ஒழித்துக் கட்டும் மந்திரக் கோலாக முன்நிறுத்தப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை, சொல்லிக் கொள்ளப்பட்ட அதன் அனைத்து நோக்கங்களிலும் தோல்வியடைந்துவிட்டது. இப்பொழுது மோடி அண்ட் கம்பெனியின் கவலையெல்லாம் செல்லாது என அறிவிக்கப்பட்ட மொத்தப் பணத்திற்கு (15.44 இலட்சம் கோடி ரூபாய்) மேலான தொகை வங்கிகளுக்குள் வந்துவிடுமோ என்பதுதான். அதனால்தான், வங்கிக்குள் வராமல் வெளியில் இருக்கும் 16,000 கோடி ரூபாயை எடுத்துக் கொள்ளுவதில் பெரும் தயக்கம் காட்டுகிறார்கள். மேலும், நோய்வாய்ப்பட்டவர்கள், வயதானவர்களிடம் தேங்கிப் போன செல்லாத நோட்டுக்களைத் திரும்ப எடுத்துக் கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கில், அதனை எடுத்துக்கொள்ளவே முடியாது என அநியாயமாக வாதிட்டு வருகிறார்கள்.

செல்லாது என அறிவிக்கப்பட்ட பணத்திற்கு மேலான தொகை வங்கிகளுக்கு வந்துவிட்டால், அதனைவிட மானக்கேடு வேறு எதுவும் இந்த அரசுக்கு இருக்க முடியாது. கள்ளப் பணத்தையும் வெள்ளையாக மோடி அரசு மாற்றிக்கொடுத்திருக்கிறது என்றுதான் நாம் அந்த அசிங்கத்தைக் குறிப்பிட முடியும். கள்ளப் பணத்தையே கண்டுபிடிக்க முடியாத மோடி கும்பல், கருப்புப் பணத்தைக் கண்டுபிடித்து ஒழித்துக்கட்டும் என்று அப்பாவிகூட நம்ப முடியாத நிலை ஏற்படும்.

இப்படிப்பட்ட அவமான நிலையிலிருந்து தப்பிக்க, மோடி அண்ட் கம்பெனி இப்பொழுதே பொய்களைத் தயாரிக்கத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக, மோடியின் துதிபாடியும் சோவின் தயாரிப்புமான தினமணி வைத்தியநாத அய்யர், ”ஒரே எண்ணுள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிக்குள் வந்திருக்கக் கூடும். இல்லையென்றால், 98.96 சதவீத நோட்டுக்கள் திரும்ப வந்திருக்க வாய்ப்பேயில்லை. செல்லாத நோட்டுக்களை வங்கிகள் திரும்பப் பெறுவதை இன்னும் அனுமதித்தால், திரும்பி வந்த நோட்டுக்களின் எண்ணிக்கை 120 சதவீதத்தை எட்டிவிடும். எனவே, வங்கிகளில் வந்திருக்கும் நோட்டுக்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்” எனத் தலையங்கம் தீட்டியிருக்கிறார். (தினமணி, 02.09.2017)

ஒரே எண்ணுள்ள நோட்டுக்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், வங்கிக்குள் வந்துள்ள 15 இலட்சம் கோடி ரூபாயையும் திரும்ப எண்ண வேண்டும். அய்யரின் இந்த அபார யோசனை, மறுபடியும் முதல்லா இருந்தா என்ற நகைச்சுவையை அல்லவா நினைவுபடுத்துகிறது.

– குப்பன்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி