privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மோடி : கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி !

மோடி : கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி !

-

பணமதிப்பழிப்பு நடவடிக்கை – மோடி : கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி !

”பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் பிடிபட்ட கருப்புப் பணம் எவ்வளவு?” என நாடாளுமன்ற நிலைக்குழு கேட்ட கேள்விக்கு, ”எங்களிடம் தகவல் இல்லை” எனப் பதில் அளித்தது, ரிசர்வ் வங்கி. ஆனால், மோடி உள்ளிட்ட பா.ஜ.க. கும்பலோ துணிந்து பொய்களையே புள்ளிவிவரங்களாக அள்ளிவிடுகிறார்கள். பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், ”மூன்று இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணம் பொருளாதார நீரோட்டத்துக்குள் வந்துவிட்டது என நிபுணர்கள் கூறுவதாக”ச் சத்தியம் செய்தார். வேலிக்கு ஓணான் சாட்சியாம்!

அரசியல் தரகன் சோ ராமஸ்வாமி இறந்த பிறகு, அந்த இடத்திற்குத் துண்டு போட்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, ”3.35 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் பிடிபட்டிருக்கிறதென்றும், அதன் மீது மூன்று இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரியும், அபராதமும் வசூலாகும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது” என்றொரு கணக்கைக் காட்டுகிறார். (துக்ளக், 13.09.2017)

இந்தக் கதைக்கெல்லாம் காட்டப்படும் ஒரே ஆதாரம் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் போடப்பட்ட பணம்தான். 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நவம்பர் 8 -ஆம் தேதிக்கும் டிசம்பர் 31 -ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில், 1.09 கோடி வங்கிக் கணக்குகளில் சராசரியாக 5.03 இலட்ச ரூபாய் போடப்பட்டிருப்பதையும், 1.48 இலட்சம் வங்கிக் கணக்குகளில் சராசரியாக 3.31 கோடி ரூபாய் போடப்பட்டிருப்பதையும் காட்டி, இந்த வங்கிக் கணக்குகளையெல்லாம் துருவி ஆராய்ந்து, துப்பு துலக்கி கருப்புப் பண பேர்வழிகளை அமுக்கிவிடுவோம் எனச் சவால்விடுகிறது, பா.ஜ.க.

இந்த விவரங்களெல்லாம் உண்மைதான். ஆனால், பிரச்சினை என்னவென்றால், ”இந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட பணம் முழுவதையும் கருப்புப் பணம் என வகைப்படுத்த முடியாது. மேலும், ஏறத்தாழ ஒரு கோடியே பத்து இலட்சம் வங்கிக் கணக்குகளையும் கண்காணிக்கும் அளவிற்கு வருமான வரித்துறையிடம் ஆள்பலம் கிடையாது” என்கிறார், பேராசிரியர் அருண் குமார்.

வருமான வரித் துறை கருப்புப் பண பேர்வழிகளைப் புகைபோட்டு பிடிப்பது ஒருபுறமிருக்கட்டும். செல்லாத நோட்டு அறிவிப்புக்குப் பிறகு பிடிபட்ட தமிழகப் பிரமுகர்களின் தலையைத் துண்டித்தாவிட்டது அந்தத் துறை? வருமான வரி ரெய்டில் பணமும் கையுமாகப் பிடிபட்ட ராம மோகனராவ், இப்பொழுது சிறையில் களி திங்கவில்லை. மாறாக, மீண்டும் அரசுப் பதவியில் மோடி அரசின் ஒப்புதலோடு அமர்த்தப்பட்டிருக்கிறார்.

ராம மோகன ராவின் கூட்டாளியும் மணற் கொள்ளையனுமான சேகர் ரெட்டி பிணையில் வந்துவிட்டார். சேகர் ரெட்டிக்கு நெருக்கமான ஓ.பி.எஸ்., நினைத்த நேரத்திலெல்லாம் பிரதமர் மோடியைச் சந்தித்து உரையாடும் சலுகை பெற்றிருப்பதோடு, மோடியின் ஆசியோடு தமிழகத்தின் துணை முதலமைச்சராக அமர்த்தப்பட்டிருக்கிறார்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வருமான வரித் துறைக்கு அலுவலகத்துக்கு விருந்தாளி போலச் சென்றுவிட்டுத் திரும்புகிறார். இந்தக் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணமெல்லாம் வருமான வரித் துறையின் பாதுகாப்பில் இருக்கிறதேயொழிய, பறிமுதல் செய்யப்படவில்லை.

இதற்கெல்லாம் அப்பால், கடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலின்போது, மர்மமான முறையில் கண்டெய்னரில் கடத்தப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை நிதியமைச்சகம் என்ன செய்தது? அந்தப் பணம் ஜெயா-சசி கும்பல் தமிழகத்தைக் கொள்ளையடித்துச் சேர்த்த கருப்புப் பணம் என்பது ஊரே அறிந்த உண்மை. ஆனால், மோடி – அருண் ஜெட்லி – வெங்கய்யா நாயுடு கூட்டணி, அந்தப் பணத்தை ஸ்டேட் வங்கியின் பணமாகக் காட்டி, ஜெயா-சசி கும்பலைக் காப்பாற்றிவிட்டது. கருப்புப் பணத்திற்கு எதிராக சவுண்டுவிடும் மோடி கும்பலின் யோக்கியதை இதுதான்.

மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை இப்படித்தான் – அதாவது புழக்கத்திலுள்ள கருப்புப் பணத்தில் ஒரு சதவீதத்தைக்கூடப் பிடிக்க முடியாமல் தோல்வியில்தான் – முடியும். தோல்வியின்றி, வேறு எந்த அதிசயத்தையும் நிகழ்த்தக்கூடிய அடிப்படை அந்நடவடிக்கைக்குக் கிடையாது என்பதே உண்மை. ஆனாலும், மோடியின் ஆதரவாளர்கள் கருப்புப் பணத்திற்கு எதிரான அவரது நல்ல நோக்கத்தைச் சந்தேகிக்கக் கூடாதென்று சப்பைக் கட்டுகிறார்கள்.

அப்படிப்பட்ட தூய்மையான நல்ல நோக்கமெல்லாம் மோடிக்கு இருந்ததும் கிடையாது, இருக்கப் போவதும் கிடையாது. அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்ட தனது இமேஜைத் தூக்கி நிறுத்தும் சுயநலமும், ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வேட்கையும்தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் பின்னே மறைந்திருக்கிறது. வாராக் கடனால் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகளைக் காப்பாற்ற, கடன் வாங்கி ஏப்பம் விட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்குப் பதிலாக, பொதுமக்களின் சேமிப்பைக் கொள்ளையடிக்க செய்யப்பட்ட ஏற்பாடுதான் இந்தப் பணமதிப்பழிப்பு நடவடிக்கை.

-ரஹீம்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க