privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாஇந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?

இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?

இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் எல்லை இருக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒரே மக்கள், என்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்.

-

இந்தியர்கள் குறித்து பாகிஸ்தானியர்கள் என்ன நினைக்கிறார்கள்? சமீபத்தில் கர்தார்பூர் புனித யாத்திரை பாதையை திறந்து வைத்த பாகிஸ்தான் அரசு, அந்த நிகழ்ச்சிக்காக இந்திய பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.  அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த எகனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழைச் சேர்ந்த பத்திரிகையாளர் கே. கே. ஸ்ருதிஜித் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தானின் இந்தியத் தன்மை!

முதன்முதலாக பாகிஸ்தான் வரும் இந்தியருக்கு, தான் பஞ்சாபின் கிராமப்புறத்தில் இருப்பது போன்ற உணர்வே ஏற்படும். இந்தியாவின் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானில் பஞ்சாபின் அறுவடை முடிந்த நிலங்கள் எரிக்கப்படும் மணத்தை நுகர முடிகிறது. லாகூர் நகரம், இந்தியாவின் லக்னௌ அல்லது சாந்தினி சவுக்-ஐ நினைவுபடுத்துகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் உங்கள் முழங்கையை உரசிக்கொண்டு போவதும் குழந்தைகள் திறந்து கிடக்கும் சாக்கடையில் விழுந்துவிடாதவாறு பார்த்துப் போவதும் இந்தியாவின் பழைய நகரங்களின் சாயலைக் கொண்டுள்ளது. நம்மை போலவே அவர்களும் மற்றொரு நகரத்தின் மீது பொறாமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். கராச்சிக்காரர்களுக்கு லாகூர் நெருக்கடிமிக்க, சிறு சிறு குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரம். லாகூர்காரர்களுக்கு கராச்சியின் உணவு பிடிக்காது.

கர்தார்பூர் புனித யாத்திரைக்காக பாதை திறந்த பாகிஸ்தான் அரசு

இந்திய நகரங்களுக்கும் பாகிஸ்தான் நகரங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம். பாகிஸ்தானில் நிறைந்திருக்கும் பாதுகாப்பு. பாதுகாப்பு என்றால் நம்மூர் கருப்பு உடை அணிந்த கமாண்டோக்கள் அல்ல, இவர்கள் கைகளில் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர். பாதுகாப்புக்காகத்தான் அவர்கள் நிறுத்தப்படுகிறார்கள் என்றாலும் தங்களிடம் உள்ள ஆயுதங்களை வெளிக்காட்டிக் கொள்ளவும் அப்படிச் செய்கிறார்கள்.

பயங்கரத்தை நினைவுபடுத்தும் தெருக்கள்!

நகரங்களின் வழியாக நீங்கள் சென்று கொண்டிருக்கும்போது, கடந்த காலத்தின் பயங்கரத்தை உங்களால் உணர முடியும். 2009-ஆம் ஆண்டில் இஸ்லாமாபாத்தின் மெரியாட் ஹோட்டல் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சக பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். லாகூரின் தெருக்களை கடந்து சென்ற போது, ‘நண்பர் ஒருவர் இதோ இங்கேதான் கடாஃபி ஸ்டேடியத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என்றார்.

தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட ஒவ்வொரு இடத்தையும் கடக்கும் போதும், அங்கே பாதுகாப்பு அதிகாரிகள் நின்று கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. அவ்வவ்போது ‘இது இங்கே வழக்கமான நிலைமைதான்’ என சொல்லிக் கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில், உலகின் மிக அபாயமான நாடுகளில் ஒன்றில் இருக்கிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நாங்கள் பாகிஸ்தான் சென்றிருந்த வாரத்தில் தாரீக் ஐ லபைக் பாகிஸ்தான் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு அங்கே தலைப்பு செய்தியாக இருந்தது. இந்தக் கட்சியின் தலைவர் மதபோதகர் காதிம் உசைன் ரிஸ்வி, பாகிஸ்தானில் கொண்டு வரப்பட்ட மத நிந்தனை சட்டத்தை ஆதரித்து பேசி மக்கள் செல்வாக்கு பெற்றவர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில கவர்னராக இருந்த சல்மான் தசீர், இந்தச் சட்டத்தை ‘கருப்புச் சட்டம்’ எனக் கூறியதால் கொல்லப்பட்டார்.

தாரீக் ஐ லபைக், மக்கள் செல்வாக்கு (இந்துத்துவ கும்பல் போல, ஆர்ப்பாட்டம் செய்வது, தெருச்சண்டையில் இறங்குவது) பெற்றிருந்த போதும், தேர்தல் அரசியலில் அக்கட்சிக்கு பின்னடைவே கிடைத்தது. இந்த ஆண்டு நடந்த தேர்தலில் மதவாதம் பேசும் கட்சிகள் பின்னடைவை சந்தித்திருக்கின்றன. அதுபோல, ஆயுதம் தாங்கிய அமைப்புகளின் ஆதரவு பெற்ற கட்சிகளுக்கும் இதே நிலைமைதான்.

தாரீக் ஐ லபைக் 150 இடங்களில் போட்டியிட்டு இரண்டே இடங்களில் வென்றது. ஆனால், தொடங்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் பாகிஸ்தானின் ஐந்தாவது பெரிய கட்சியாக அது உருவெடுத்துள்ளது. தற்போதைய பிரதமர் இம்ரான்கான், இதன் தலைவர் மீது தீவிரவாதம் மற்றும் தேச துரோக வழக்கை போட்டிருக்கிறார்.

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

நான் சொல்வது வழக்கமானதாக இருக்கலாம். ஆனால், இந்தியர்களை பாகிஸ்தானியர்களின் கணிவுடன் வரவேற்கிறார்கள். சக பாகிஸ்தானியரைப் போல அன்பையும், கடைகளில் பொருட்கள் வாங்கும்போது தள்ளுபடியும் தருகிறார்கள். நான் பேசிய அத்தனை பாகிஸ்தானியரும் உள் அன்போடு இதை வெளிப்படுத்தினார்கள், அவர்களிடம் உண்மையைக் காண முடிந்தது. ஆனால், இந்திய சமூக ஊடகங்கள் இதை மாற்றிக் கொண்டிருக்கின்றன என்பது வேதனைக்குரியது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆடை வடிமைப்பாளர் மியான் நோமான் மற்றும் அவரது நண்பர்களை சந்தித்தேன். மியானின் அம்மா இந்தியாவின் லூதியானாவில் பிறந்தவர். மற்ற இரண்டு நண்பர்களின் வேர்களும் இந்தியாவில் இருந்தது. மியானின் நண்பர்களில் ஒருவரான சாபி ஸெக்ரா என்னிடம் மெதுவாக, “சமூக ஊடகங்களில் இந்தியர்கள், ஏன் எங்கள் மீது இவ்வளவு வெறுப்பாக இருக்கிறார்கள்?” எனக் கேட்டார்.

தொடர்ந்த அவர், “நான் அவர்களிடம் பேச முயற்சித்திருக்கிறேன். ஏனெனில் இந்தியாவின் மீது மதிப்பு வைத்திருக்கிறேன், என்னுடைய வேர்கள் அங்கே உள்ளன. ஆனால், அவர்கள் சமூக ஊடகங்களில் வெறுப்பை கக்குகிறார்கள். நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவள் என தெரிந்தவுடன் அவதூறு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்” என்றார். அவர் காயப்பட்டிருப்பதை அறிய முடிந்தது. அவரிடம் சொல்ல என்னிடம் நேர்மையான பதில் இல்லை.

இம்ரான் நியாசி

லாகூரில் உள்ள குல்பர்க்-2 குடியிருப்பு அருகே இருந்த சிறிய கடை ஒன்றில் செல்போன் ரீசார்ஜ் செய்யச் சென்றிருந்தேன். அங்கே இருந்த சிறிய குழு, ‘பாகிஸ்தான் – இந்தியா இடையே அமைதி நிலவ வேண்டும்’ என இம்ரான்கான் சொன்னது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். கடை பொறுப்பாளரான் இம்ரான் நியாசி, அதுபற்றி என்னிடம் பேசினார். “இரண்டு நாடுகளுக்கும் எல்லை இருக்கக்கூடாது. நாம் அனைவரும் ஒரே மக்கள்” என பேசியவர், இரண்டு நாடுகளுக்குமிடையே அமைதி நிலவ வேண்டும் என்றார்.

“ஆனால், சமீப நாட்களில் இந்தியாவில் முசுலீம்கள் மோசமாக நடத்தப் படுகிறார்கள். நாங்கள் அந்த வாட்சப் வீடியோக்களை பார்க்கிறோம். அது மிகவும் எதிர்பாராதது. இன்னொரு வீடியோவையும் பார்த்தோம். அதில் சிலர் காசு தருகிறோம் பாகிஸ்தான் கொடியை எரிக்க முடியுமா எனக் கேட்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் அதைச் செய்தார்கள். மற்றவர்கள் எவ்வளவு காசு தந்தாலும் அதைச் செய்யமாட்டோம் என்றார்கள். அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என வெளிப்படையாகப் பேசினார்.

  • நன்றி: தி எக்னாமிக் டைம்ஸ்

கண்ணுக்குத் தெரிந்த எதிரியை கட்டமைப்பதே தேசியவாதம்-மதவாதம்-இனவாதம் பேசும் வெறியர்கள் செய்யும் அடிப்படையான விசயம். இந்துத்துவா கும்பலுக்கு முசுலீம்களும் பாகிஸ்தானும் எதிரிகள். மோடி தலைமையிலான இந்துத்துவா கும்பல் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த ‘எதிரி’ உணர்வு நஞ்சாக பரப்பப் பட்டது.

முசுலீம்களுக்கு எதிரான கும்பல் கொலைகளை விமர்சித்த முசுலீம் பிரபலங்களை ‘பாகிஸ்தானுக்கு போ’ என்றார்கள். காஷ்மீர் பிரச்சினையை விவாதித்த மாணவர்கள் ‘பாகிஸ்தான் வாழ்கவென கோஷமிட்டார்கள்’ என வதந்தி பரப்பினார்கள். காங்கிரஸ் தேர்தல் வெற்றி களிப்பினால், ‘பாகிஸ்தான் கொடி’ பறந்ததாக வாட்ஸப் வதந்தி பரப்பினார்கள். இந்தியா வந்த சுற்றுலா பயணிகளுக்கு ஹோட்டலில் இடம் தரக்கூடாது என போராடி, சுற்றுலா பயணிகளை நடுத்தெருவில் நிறுத்தினார்கள்.

இப்படி இந்துத்துவ கும்பல், செய்துவரும் கீழ்தரமான பிரிவினை அரசியலை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்… ஆனால் பாகிஸ்தான் மக்கள் இந்திய மக்களை எப்படி நேசிக்கிறார்கள் என்பதை அங்கு செல்லும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார்கள். இங்கே இருக்கும் மதவெறி அங்கேயும் இருந்தாலும் அம்மக்கள் இங்கிருப்பது போல நம்மை வெறுக்கவில்லை. பாகிஸ்தான் மக்கள் மீதான துவேசத்தை இந்துமதவெறியர்கள் எப்படிக் கிளப்பினாலும் இதுவரை அம்மக்கள் அந்த வெறிக்கு எதிர்முகத்தை காட்டவில்லை. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் துடைத்தெறியப்படும் போது இந்த ஒற்றுமை உறுதிப்படும்!

தமிழாக்கம் – கலைமதி