privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாபெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !

பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !

பெஹ்லு கானை காவி கும்பல் தாக்கும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஆனால், அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.

-

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் காவி கும்பலால் தாக்குதலுக்குள்ளாகி கொல்லப்பட்ட பெஹ்லு கான் வழக்கின் குற்றவாளிகள் 9 பேரில் 6 பேரை ஆல்வார் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி விடுதலை செய்துள்ளது. வழக்கில் தொடர்புள்ள 3 சிறுவர்கள் மீதான வழக்கு சிறார் நீதி வாரியத்தில் நிலுவையில் உள்ளது.

2017, ஏப்ரல் 1-ம் தேதி கால்நடைகளை வாகனங்களில் வேறு இடத்திற்கு கொண்டு சென்றபோது பெஹ்லு கானும் அவருடைய மகன்களும் காவி கும்பலால் தாக்கப்பட்டார்கள். அப்போது பெஹ்லு கான் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, இரண்டு நாட்கள் கழித்து பலியானார்.

Pehlu-khan
கும்பல் வன்முறையால் தாக்குதலுக்கு ஆளான பெஹ்லு கான். (கோப்புப் படம்)

காவி கும்பலின் தாக்குதல் வீடியோவாக வெளியாகி நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஆனால், அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என ஆல்வார் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் புதன்கிழமை(14.08.2019) அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

வீடியோ ஆதாரங்களை வைத்து போலீசு ஆறு பேரை கைது செய்தது. ஆனாலும் இந்த வழக்கை வலுவிழக்க வைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தது போலீசு. கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெஹ்லு கானின் மரணம், இதய செயலிழப்பால் நிகழ்ந்தது என மருத்துவமனை போலீசுக்கு சாதகமாக அறிக்கை அளித்தது. மேலும், பெஹ்லு கான் அளித்த வாக்குமூலத்தை வேண்டுமென்றே போலீசு பதிவு செய்யாமல் நிராகரித்தது.

பெஹுலுகான் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து வெளியிடப்பட்ட பாடல்

“இந்த வழக்கின் விசாரணை ஏற்கெனவே நீர்த்துப்போக வைக்கப்பட்டது. இந்த இறப்பு எப்படி நடந்தது என்பது குறித்த குழப்பம், ‘சந்தேகத்தின் பலனை’ குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு அளித்துள்ளது. கானின் மரணத்தின் போது ஆறு பேருக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குமூலம் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்படவில்லை. இது வழக்கை பலவீனமாக்கியுள்ளது” என்கிறார் பெஹ்லுகான் குடும்பத்துக்கு வழக்கு உதவிகளைச் செய்த குவாசிம் கான்.

படிக்க:
பெஹ்லு கான் கொலையாளிகளை பாதுகாக்கும் ராஜஸ்தான் அரசு !
♦ இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது !

கும்பல் தாக்குதலுக்குள்ளாகி பெஹ்லு கான் இறப்பதற்குக் காரணமானவர்கள் மீது வழக்கு தொடுப்பதற்குப் பதிலாக, பெஹ்லு கானையும் அவருடைய மகன்களையும் மாடுகளை கொல்ல ஏற்றிச் சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு போட்டது புதிதாக பதவியேற்ற காங்கிரசு அரசு. இது சர்ச்சைகளை ஏற்படுத்தவே மேலும் இந்த வழக்கில் விசாரணை செய்ய அனுமதி கேட்டது இராஜஸ்தான் போலீசு.

பத்திரிகையாளர் அஜித் ஷா மேற்கொண்ட தனிப்பட்ட விசாரணையில் போலீசு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையே மேம்போக்காக போடப்பட்டது என்பது தெரியவந்தது. அதில் அவர் எழுப்பியுள்ள பதிலளிக்கப்படாத சில கேள்விகள்.

pehlu-khan-Family
நீதி மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்ட பெஹ்லு கான் குடும்பத்தினர். (கோப்புப் படம்)

1. போலீசுக்கு தாக்குதல் குறித்து ஏப்ரல் 2-ம் தேதி 3.54 க்குத்தான் தெரியும் எனில், ஏப்ரல் 1-ம் தேதி இரவு பெஹ்லு கான் எப்படி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்?

2. அடுத்த நாள்தான் விசயம் தெரியும் எனில், ஏப்ரல் 1-ம் தேதி இரவு 11.50-க்கு எப்படி வாக்குமூலம் பெற முடிந்தது? போன்ற கேள்விகளை அவர் முன்வைத்திருந்தார். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் காவி படைகளுடன் இருந்த தொடர்பையும் விசாரிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இரண்டு பசுக்களை; இரண்டு கன்றுகளையும் வாங்கவும் அதைக் கொண்டு செல்லவும் முறையான அனுமதி வாங்கியிருந்தபோதும், காவி குண்டர்களால் பெஹ்லு கான் குடும்பத்தினர் தாக்கப்பட்டனர்.

முசுலீம் என்பதற்காகத்தான் அந்தக் குடும்பம் தாக்கப்பட்டது; பெஹ்லு கானும் பலியானார். அதே காரணத்துக்காகத்தான் போலீசும் அரசும் நீதிமன்றமும் அந்த குடும்பத்துக்கு நீதியை மறுத்திருக்கிறது. ஏற்கெனவே அனுமானிக்கப்பட்ட தீர்ப்புதான் என்றபோதும், விரக்தி பெருமூச்சுடன் கடந்து செல்லப்போகிறோமா நாம்?

கலைமதி
நன்றி: தி வயர், சப்ரங் இந்தியா