ஸ்வச் பாரத் திட்டத்துக்காக மோடிக்கு விருது :
கேட்ஸ் ஃபவுண்டேஷனுக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு !
இந்தியாவில் ஸ்வச் பாரத் திட்டத்தை ‘செயல்படுத்தியமை’க்காக கேட்ஸ் ஃபவுண்டேஷன் வருடாந்திர குளோபல் கோல்கீப்பர் விருதை மோடிக்கு அளித்துள்ளது. மோடிக்கு இந்த விருது அளிக்கப்பட்டதை எதிர்த்து கேட்ஸ் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த சபா ஹமீது பதவி விலகியுள்ளார்.
காஷ்மீரில் தகவல் தொடர்பை முடக்கியுள்ள மோடிக்கு விருது அளித்து கௌரவிப்பது கடுமையானதொரு பிழையாகும் என தெரிவித்துள்ளார் 42 வயதான தகவல் தொடர்பு வல்லுநர் சபா ஹமீது.
“இது ஒரு தனியார் அமைப்புடையது என்பதாலும் ஏற்கனவே அவர்கள் விருது வழங்குவதில் உறுதியாக இருப்பதாலும் என்னால் செய்ய முடிந்ததெல்லாம், இங்கிருந்து விலகுவது மட்டுமே” என தன்னுடைய பதவி விலகல் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் சபா ஹமீது.
மோடி குறித்து தன்னுடைய மூத்த அதிகாரிகளிடம் பேச முனைந்தபோது, அவர்கள் ஏற்கனவே முடிவு செய்து அந்த முடிவில் உறுதியாக இருப்பதும் அதை மாற்ற முடியாது என்பது தெரிய வந்ததாக அவர் தெரிவிக்கிறார்.
ஒரு காஷ்மீரியான சபா ஹமீது, கடந்த மூன்றரை ஆண்டுகளாக கேட்ஸ் ஃபவுண்டேஷனின் பணிபுரிந்தவர். “காஷ்மீரியாக இருப்பது மேலும் இந்த விசயத்தில் ஆழமான உணர்வை உண்டாக்குகிறது. எட்டு மில்லியன் மக்கள் கடந்த 50 நாட்களாக அறிவிக்கப்படாத ஊரடங்கில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் மருத்துவ உதவி பெறுவதுகூட பிரச்சினையாக உள்ளது. பள்ளத்தாக்கு முழுவதும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மோடி தலைமையான அரசாங்கம் இதை வடிவமைத்ததோடு, அதை அமலாக்கவும் செய்திருக்கிறது. ஊடகங்கள் மூலம் அவர்கள் பொய்களை உண்மையாக்கப்பார்க்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் பெரிய சர்வதேச கூட்டங்களில் பங்கேற்பதும், விருதுகளைப் பெறுவதும் அரங்கேற்றப்படுகிறது” என்கிறார் அவர்.
படிக்க:
♦ காஷ்மீர் : நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்
♦ பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும் : துக்ளக் பாதி ! இட்லர் பாதி !!
முன்னதாக கேட்ஸ் ஃபவுண்டேஷனின் முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஈரானிய செயல்பாட்டாளர் ஷெரின் இபாடி, தெற்கு ஐரிஷ் அமைதி செயல்பாட்டாளர் மேரீட் மெக்குவயர், ஏமானிய பத்திரிகையாளர் தவாக்கோல் அப்தெல் சல்மான் கர்மான் உள்ளிட்டோரிலிருந்து பல செயல்பாட்டாளர்கள் சேர்ந்து கேட்ஸ் ஃபவுண்டேஷனுக்கு மோடிக்கு இந்த விருதை அளிக்கக்கூடாது என கடிதம் எழுதியிருந்தனர்.
கேட்ஸ் கேம்பிரிட்ஜ் நல்கை பெற்ற முன்னாள், இன்னாள் அறிஞர்கள், மோடியின் ஆட்சியின் கீழ் நடந்த மனித உரிமை மீறல்களை புறந்தள்ளிவிட்டதாக எழுதியிருந்தனர். இந்த விருது மோடிக்கு வழங்கக்கூடாது என ஒரு இலட்சம் பேர் கையெழுத்திட்ட ஆன்லைன் கையெழுத்து இயக்கம் ஒன்றும் நடத்தப்பட்டது.
இந்த விருது விழாவில் பங்கேற்கவிருந்த பிரிட்டீஷ் -ஆசிய நடிகர்களான ஜமீலா ஜமீல் மற்றும் ரிஸ் அகமது இருவரும் காஷ்மீரில் இந்திய அரசாங்கத்தின் முடிவால் வெளியேறுவதாக கூறினர்.
பெண்ணியலாளரும் செயல்பாட்டாளருமான குளோரியா ஸ்டெய்னம் மற்றும் தத்துவவியலாளர் அகீல் பில்கிராமி இருவரும் சேர்ந்து கார்டியல் இதழில் எழுதிய கட்டுரையில், “சர்வதேச அரசியல் அறமற்ற தன்மையின் சரிவு..” எனவும் ‘இந்தியாவில் துப்புரவுத் திட்டத்தைத் தொடங்கியதற்காக மோடி கேட்ஸ் ஃபவுண்டேஷன் விருது அளிப்பது சரியான நேரத்தில் ரயில்களை இயக்கச் செய்ததற்காக முசோலினிக்கு பரிசு வழங்குவதைப் போன்றது” எனவும் கடுமையாக அவர்கள் விமர்சித்திருந்தனர்.
ஆனால், பன்னாட்டு அறிவுஜீவிகளின் விமர்சனங்களை சட்டை செய்யாத கேட்ஸ் ஃபவுண்டேஷன் மோடிக்கு விருது வழங்கி வரலாற்று இழிபுகழைத் தேடிக்கொண்டது. மனித உரிமை மீறல், மனிதாபிமானம், அறம்… இவை அனைத்தையும்விட மோடிக்கு விருது தருவதன் மூலம் கிடைக்கப்பெறும் சந்தை லாபங்கள் கேட்ஸ் அறங்காவலருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். காப்பரேட்டுகளுக்கு பாசிஸ்டுகள், பாசிஸ்டுகளுக்கு காப்பரேட்டுகள் தேவை. பரஸ்பரம் இவர்கள் சிறப்பான புரிந்துணர்வுடன் இருக்கிறார்கள். உலகம் இவர்களிடம் அறத்தை எதிர்ப்பார்ப்பு ஏமாந்து போகிறது!
– அனிதா
நன்றி: த வயர்.