Sunday, July 6, 2025
முகப்புசெய்திஉலகம்சி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா !

சி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா !

தென் அமெரிக்க நாடுகளில் ஐந்தாவது பெரிய நாடான பொலிவியாவின் அதிபரான எவோ மொராலெஸ், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.எ-வின் சதித்தனத்தால், பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

-

பொலிவியா நாட்டின் முதல் பழங்குடியின அதிபரும் இடதுசாரி ஆதரவாளருமான எவோ மொராலெஸ், அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.ஐ.எ-வின் சதித்தனத்தால், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எவோ மொராலெஸ் இப்போது உலக அளவிலான ட்விட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ளார். உலகம் முழுவதுமுள்ள பல்வேறு சமூக, இடதுசாரி ஆர்வலர்கள் இவருக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஐந்தாவது பெரிய நாடான பொலிவியாவின் 80-வது அதிபரான எவோ மொராலெஸ், அந்நாட்டின் அதிபராக 2006-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.  இந்த ஆண்டு (அக்டோபர் 2019) நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பதவியேற்ற நாள்முதலாக அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கையில் விடாப்பிடியாக இருந்து வந்ததும், ஏழை உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததும், இயற்கைத் வளங்களைப் பேராபத்திலிருந்து காப்பதற்கு இவர் மேற்கொண்ட சீர்தருத்தங்களும் தான் இவர் செய்த மாபெரும் தவறுகள்.

அமெரிக்க அரசின் நேரடியான ஆதரவு பெற்ற பொலிவியா நாட்டின் எதிர்க்கட்சியினர் இவருடைய நல்லாட்சி மீண்டும் வருவதை ஏற்கத் துணிவின்றி வன்முறையில் ஈடுபடுவது, அரசியல் தலைவர்களின் வீடுகளை எரிப்பது, அவர்களைக் கடத்துவது, மொராலெஸ் ஆதரவாளர்களைத் தாக்குவது போன்ற செயல்களைக் கடந்த ஒரு மாதமாக அரங்கேற்றி வந்தனர்.

படிக்க :
சிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் !
♦ அமெரிக்க இளம் தலைமுறையிடம் வளரும் சோசலிச ஆதரவு !

தேர்தலில் ஊழல் செய்து வென்றுவிட்டார் என்பது தான் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு. உயிர்ப்பலி, அசம்பாவிதங்கள் மேலும் நடக்காமல் தடுப்பதற்காகத் தன்னுடைய பதவியை நேற்று (நவம்பர் 10, 2019 ) ராஜினாமா செய்துள்ளார்.

எவோ மொராலெஸ்-இன் முக்கிய சாதனைகளாகக் கீழ்க்கண்டவை அறியப்படுகின்றன.

  • 2006-ல் 38% சதவீதமாக இருந்த வறுமை நிலை 17% சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • குறைந்தபட்ச ஊதியத்தொகையின் அளவு 104 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் 1 பில்லியன் டாலர் மதிப்பில் 5000 மருத்துவமனைகளும், பள்ளிகளும், உடற்பயிற்சி நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.
  • தனிநபர் வருமானம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது

இனிமேல் நடக்கப்போவதை உலகமே புரிந்துகொள்ள முடியும், முறைகேடான தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு ஒரு பொம்மை அரசு அமைக்கப்படும், இயற்கை வளங்கள் சுரண்டப்படும், அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கைகள் அமல்படுத்தப்படும்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா மூலம் தகவல்களைத் திருடி பதவியைப் பிடிக்கலாம், வலதுசாரி என்ற முத்திரையுடன் கும்பல் படுகொலை நிகழ்த்தலாம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையே கொலை செய்யலாம், வியாபம், ரஃபேல் ஊழல்களை வெளிப்படையாகச் செய்யலாம். ஆனால் ஒரு இடதுசாரி ஆட்சியைப் பிடித்துவிட்டால் இவர்கள் பேசும் நியாய தர்மத்திற்கு அளவில்லாமல் போய்விடுகிறது. தன் பதவியை ராஜினாமா செய்த எவோ மொராலெஸ் கூறியது இதுதான், “போராட்டம் தொடர்கிறது”.

***

வோ மொராலெஸ் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்புப் படை குறித்த வீடியோ.


வரதன்

நன்றி :  Redfish. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க