பல நூறு குக்கி இன மக்கள் கொல்லப்பட்டனர். பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான குக்கி இன மக்கள் அகதிகளாக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இரண்டு குக்கி இன பெண்கள் பட்டப்பகலில் நிர்வாணமாக்கப்பட்டு, மெய்தி இன ஆணாதிக்க வெறியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர். இத்தகைய கோர சம்பவங்கள் நடந்து ஒரு வருடமாகப் போகிறது. ஆனாலும் அப்பகுதியில் பதற்றம் குறைந்தபாடில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு, மணிப்பூர் கிராமத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்றுவரை குக்கி இன மக்கள் பலர் மலைப்பகுதிகளில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
பற்றி எரிந்த மணிப்பூரை பல நாட்களான போதும் மோடி அரசு தடுக்க வில்லை. ஏன் இது குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.
வன்முறை நடந்து மணிப்பூர் பற்றி எரிந்து பல மாதங்களாகியும் “மணிப்பூர்” என்ற வார்த்தையை உச்சரிக்க மறுத்த மோடி, மக்களின் எதிர்ப்பால் நாடாளுமன்றத்தில் ஒருமுறை வாயை திறந்தார். அதுவும் ஒரு மணிநேர உரையில் ஒரே ஒரு முறை மட்டுமே மணிப்பூர் என்ற வார்த்தையை உச்சரித்தார். மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கையில் அது குறித்து வாயை திறக்காமல் வன்முறையை தடுத்து நிறுத்தாமல் கள்ள மௌனம் சாதித்து வந்தார்.
படிக்க: கலவரத்திற்கு பாஜக அரசுதான் காரணம்: மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ
மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர இயலாத மணிப்பூர் முதலமைச்சரை பதவியில் இருந்த விலக வேண்டும் என்று மாணவர்கள், மக்கள், எதிர்க்கட்சியினர் கோரினர். ஆனால் இது எதற்கும் மோடி அரசு செவிசாய்க்க வில்லை.
ஆனால் எந்த கூச்சமும் இல்லாமல் இன்று மணிப்பூரில் அமைதி சூழல் நிலவியதில் தனது பங்கு குறித்து பேட்டி அளித்து வருகிறார் மோடி. மத்திய, மாநில அரசுகளின் சரியான தலையீட்டால் மணிப்பூரின் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டு மாநிலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அசாம் ட்ரிப்யூன் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மோடி தெரிவித்திருந்தார்.
பற்றி எரிந்த மணிப்பூரில் அமைதியை உருவாக்க வேண்டும் என்று உலக நாட்டு மக்கள் குரலெழுப்பிய போதும், மணிப்பூர் மாநிலத்திற்கோ அல்லது குக்கி இன மக்கள் அடைக்கலம் புகுந்த நிவாரண முகாம்களுக்கோ சென்று மோடி எட்டிக் கூட பார்க்கவில்லை.
படிக்க: மணிப்பூர்: ஐந்து மாதங்களாகியும் அணையாத நெருப்பு! | நேர்காணல்
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வன்முறையால் தங்களது வீடு, உடைமை, கல்வி என எல்லாவற்றையும் இழந்த ஆயிரக்கணக்கான குக்கி இன மக்கள், தங்களது எதிர்காலம் என்னவென்றே தெரியாத நிச்சயமற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். அங்கிருக்கும் குக்கி இன மக்கள் தனி நிர்வாகத்தை கோரிவருகின்றனர். ஆனால் மணிப்பூர் அரசும் ஒன்றிய அரசும் இந்த கோரிக்கைக்கு என்றும் அடிப்பணியாது.
நேற்று (16.04.2024) நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மணிப்பூர் மாநிலத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்ற அமித் ஷா, மணிபூர் மாநிலத்தை பிரிக்காமலே அம்மாநிலத்தில் மோடி தலைமையிலான அரசு அமைதியை நிலைநாட்டும் என்று பேசியுள்ளார். வரும் நாட்களில் மோடியின் முன்னுரிமை மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதும் மணிப்பூர் மாநிலத்தைப் பிரிக்காமல் ஒற்றுமையாக வைத்திருப்பதுதான் என்று பேசினார். கடந்த ஆண்டு மணிப்பூரில் குக்கி இன மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதை அடுத்து மணிப்பூருக்கு அமித் ஷா செல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மோடி அரசால் வஞ்சிக்கப்பட்ட மணிப்பூர் மக்கள் குறித்தும், மணிப்பூர் அமைதி குறித்தும் பேச பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு துளியும் அருகதை இல்லை.
ஆதினி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube