அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
மே நாள், முதலாளி வர்க்கத்திற்கெதிராக தொழிலாளி வர்க்கம் போராடி தமது உரிமைகளை வென்றெடுத்த நாள்!
எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டு மணிநேர உறக்கம், இதுவெறும் உடனடிக் கோரிக்கையோ அல்லது உரிமையோ மட்டுமல்ல, முதலாளித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சோசலிசத்தைப் படைப்பதற்கு, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொழிலாளி வர்க்கம் முன்வைத்த முழக்கமாகும்.
இன்றோ நமது நாட்டில், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், பழங்குடி மக்கள், சிறு – குறு வணிகர்கள், தொழில்முனைவோர் போன்ற கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வே பறிபோய்க் கொண்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கு 12 மணிநேர வேலை நிலைமை, காண்டிராக்ட் முறை எனும் கொத்தடிமை முறை, விவசாயிகள்,பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுதல், சிறுதொழிலை அழிக்கும் ஜி.எஸ்.டி., ஆன்லைன் வர்த்தகம், இயற்கையை அழிக்கும் பல்வேறு சட்டத்திருத்தங்கள், மக்களை ஒடுக்குவதற்கு ஊபா போன்ற கருப்புச் சட்டங்கள், வேலையின்மை, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு என இந்த பத்தாண்டுகள் உழைக்கும் மக்கள் மீதான அடக்குமுறைகள் சொல்லிமாளாது.
நாட்டு மக்களைக் கொள்ளயடித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக் கொடுப்பதே மோடி அமித்ஷா தலைமையிலான பாசிசக் கும்பலின் 10 ஆண்டு கால ஆட்சியாகும். இதன் விளைவாக, அம்பானி, அதானி, அகர்வால் போன்ற சில பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்தும் வாழ்வும் வளங்கொழித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன், நமது நாட்டை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கு மறுகாலனியாக்குவது மட்டுமின்றி, அதன் போர்வெறிக்குத் துணை போகிறது.
இதுமட்டுமின்றி, உழைக்கும் மக்கள் இந்த கார்ப்பரேட் கும்பல்களுக்கு எதிராகவும் தங்களது உரிமைகளைத் தற்காத்துக் கொள்வதற்காகவும், ஒன்றிணைவதற்கும், போராடுவதற்கும் எதிராக உழைக்கும் மக்களை சாதி, மத ரீதியாகப் பிளவுபடுத்தும் வகையில் இந்துமதவெறியூட்டி வருகிறது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, சங்கப் பரிவார கும்பல். கிறித்தவர்கள், இசுலாமியர்கள், தலித் மக்கள், பழங்குடி மக்கள் மீது கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுகிறது.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்கப் பரிவாரக் கும்பல் உருவாக்க இருக்கும் இந்துராஷ்டிரம் என்பது கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் கொத்தடிமைக் களம், கார்ப்பரேட் முதலாளிகளுக்கோ சொர்க்க உலகம்.
நமது நாட்டை ஒட்டுமொத்தமாக இருண்ட காலத்திற்குள் இழுத்துச் செல்லும் இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல் தான் இந்திய மக்களின் முதல் எதிரி.
இந்த பாசிச கும்பலை வளர்த்துவிட்டது எது? 1947இல் உருவான இந்திய அரசியலமைப்பும், இந்த நாடாளுமன்ற ஜனநாயகமும் தான் இந்த பாசிச கும்பலை வளர்த்துவிட்டது. இந்த பாசிச கும்பலை ஒரு ஜனநாயகமான அமைப்பாக நடத்துவதும் இந்த நாடாளுமன்ற ஜனநாயகம் தான்.
இந்த நாடாளுமன்ற ஜனநாயகமும் அதற்காக நடத்தப்படும் தேர்தலும் கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்திற்கானவையே அன்றி, உழைக்கும் மக்களுக்கானவை அல்ல. அதனால் தான் இந்த நாடாளுமன்ற ஜனநாயகம் வழங்கியிருக்கும் சட்டபூர்வ வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இந்த பாசிச கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடிகிறது. எதிர்க்கட்சிகள் என்று அழைத்துக் கொள்ளும் “இந்தியா” கூட்டணி கட்சிகளிடம் எந்த மாற்றுக்கொள்கையும் இல்லை. ஆகையால், தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது அவசியமெனினும், இந்த நாடாளுமன்ற ஜனநாயகம் பாசிச சக்திகள் மீண்டெழுவதைத் தடுக்கப் போவதும் இல்லை, அது கட்டற்ற கார்ப்பரேட் கொள்ளையைத் தடுக்கப்போவதுமில்லை.
இன்று, மோடி – அமித்ஷா பாசிசக் கும்பல் அரசியல் ரீதியாக தோல்வி முகத்தில் இருப்பதற்கு காரணம் டெல்லி விவசாயிகள் போராட்டம், கிரிமினல் சட்டத்திருத்தத்திற்கு எதிரான வாகன ஓட்டுனர்கள் போராட்டம், மகாராஷ்டிராவில் மராத்தா சாதியினரின் இட ஒதுக்கீடு போராட்டம், மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்களின் போராட்டம், லடாக் மக்கள் போராட்டம் உள்ளிட்ட பல உழைக்கும் மக்களின் போராட்டங்கள்தான்.
ஆகையால், உழைக்கும் மக்கள் கார்ப்பரேட் கும்பல்களின் அதிகாரத்தை வீழ்த்தி உழைக்கும் மக்களின் அதிகாரத்திற்காகப் போராட வேண்டும். அரசியல் அரங்கில் பாசிச கும்பல்கள் எழுவதைத் தடுக்கும் வகையில், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு அமைக்க வேண்டும். இந்த தீர்வுக்கான மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பதுதான் தொழிலாளர் தினத்தின் வரலாற்றுக் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கான திசையில் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்போம்! மே தின போராட்டங்களில் திரளாகப் பங்கேற்போம்!
மேநாள் சூளுரைப்போம்!
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!
வேண்டாம் பா.ஜ.க., வேண்டும் ஜனநாயகம் என முழங்குவோம்!
மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
மே 1 – 2024
தமிழ்நாடு – புதுவை தழுவிய பேரணி – ஆர்ப்பாட்டங்கள்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
97916 53200, 94448 36642,
73974 04242, 99623 66321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube