பாசிச மோடி அரசு ஆட்சிக்கு வந்த இந்த 11 ஆண்டுகளில் கார்ப்பரேட் நலன்களுக்காக நடத்தப்படும் இயற்கை அழிப்பையும் இயற்கை வள சுரண்டலையும் பல மடங்காக்கியுள்ளது. இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் சூறையாடுவதற்காகச் சொந்த நாட்டு மக்களையும் பழங்குடியின மக்களையும் கட்டற்ற ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதையும் அவர்களைக் கொன்று குவிப்பதையும் இந்த பாசிச மோடி அரசு ஒரு வகைமாதிரியாகக் கொண்டுள்ளது. அதன் உச்சக்கட்ட நடவடிக்கை தான் தற்போது சத்தீஸ்கரில் நடைபெற்று வரும் ஆப்பரேஷன் ககர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 45 சதவிகிதம் காடுகள் மற்றும் மலைகள் ஆகும். கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட பழங்குடி இனங்கள் இந்த காடுகளிலும் மலைகளிலும் வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும், அதாவது 85 லட்சத்திற்கும் மேலானோர். இந்த மக்களுடைய வாழ்விடங்களான காடுகளையும் மலைகளையும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
குறிப்பாக, சத்தீஸ்கரில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4.5 லட்சம் கோடி ரூபாய்க்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான நவா ராய்ப்பூரில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மையப்படுத்தப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம் (Artificial Intelligence centric Special Economic Zone – AISEZ) நிறுவப்பட உள்ளது. இது செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி தரவு மேம்பாடு மற்றும் செயல்பாட்டில் பிரத்தியேகமாகக் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி பசுமை வெளி நகரம் (Green field city) என்னும் நிலையிலிருந்து தொழில்நுட்ப மையமாக மாற உள்ளதாக பா.ஜ.க சார்பு ஊடகங்கள் தம்பட்டமடிக்கின்றன. ஆனால், அங்கிருந்த காடுகளும் மலைகளும் அழித்து தரைமட்டமாக்கப்பட்டே அங்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்பட உள்ளது.
மேலும், இந்தியாவின் பல இடங்களில் வளர்ச்சி என்ற பெயரில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்பட்டு அவை கார்ப்பரேட்டுகளின் சுரண்டல் – கொள்ளைக்கான சொர்க்கபுரியாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை இல்லாத வகையில் செயற்கை நுண்ணறிவு மையப்படுத்தப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவது, கார்ப்பரேட் கொள்ளையைப் பன்மடங்கு தீவிரப்படுத்துவதுடன் மக்கள் மீதான அரசின் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தும் அபாயமும் உள்ளது.
படிக்க: ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!
மேலும் இம்மாநிலத்தின் முதல் காலியம் நைட்ரைட் அடிப்படையிலான குறைக்கடத்தி உற்பத்தி பிரிவை (Gallium Nitrite based Semiconductor Fabrication Unit) அமைப்பதற்காக சென்னையை தளமாகக் கொண்ட “பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்” (Polymatech Electronics Limited) என்னும் நிறுவனம் 1,143 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும், இந்நிறுவனம் கூடுதலாக 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் கையெழுத்தாகியிருக்கும் 4.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் மின்சார உற்பத்தி நிறுவனங்களால் போடப்பட்டுள்ளது. அதிலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் அனல் மின் நிலையங்களுக்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அதானி நிறுவனம் 48 ஆயிரம் கோடி ரூபாயும் ஜின்டால் நிறுவனம் 22,500 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளது. மேலும் ரிவியூ பவர் லிமிடெட் (Review power limited) நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்காக 11,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
மின்சார உற்பத்திக்கான முதலீடுகள் ஒருபுறமிருக்க, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஸ்டீல் உற்பத்தி ஆலைகளுக்காகக் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஸ்டீல் ஆலைகள் மூலம் 2025-க்குள் தற்போது இருக்கும் 45 எம்.டி.பி.ஏ. (MTPA – Million Tonnes Per Annum) உற்பத்தியை 65 எம்.டி.பி.ஏ-வாக மாற்றுவோம் என்று பா.ஜ.க. அமைச்சர் தேவாங்கன் தனது கார்ப்பரேட் விசுவாசத்தை உரக்கக் கூறியிருக்கிறார்.
இதுபோன்ற மேற்குறிப்பிட்ட அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்படுவதால் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் மற்றும் பா.ஜ.க. அமைச்சர் தேவாங்கன் ஆகியோர் கூறியிருக்கின்றனர். அதாவது பழங்குடியின மக்களின் வாழ்விடங்களைப் பறித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரப் போகிறார்களாம்.
இதுபோன்ற கார்ப்பரேட் இயற்கை வள கொள்ளைக்குத் தடைக்கற்களாக இருப்பவர்கள் அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களும் அவர்களுக்காகப் போராடும் மாவோயிஸ்ட் தோழர்களும்தான். அதனால் அவர்களை கொன்றொழிக்க ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு கொண்டுவந்த திட்டம்தான் ஆபரேஷன் ககர்.
படிக்க: பழங்குடி மக்கள் மீதான ஆப்ரேஷன் ககர்-ஐ நிறுத்து!
ஆபரேஷன் ககர் மூலம் நரவேட்டையை தீவிரப்படுத்தியுள்ள பாசிச கும்பல் கடந்த மே 21-ஆம் தேதி சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளரான பசவராஜ் உட்பட 27 பேரைக் கொன்றது. இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடியின மக்களாவர். இவர்களின் உடல்களை அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைக்காமலும் அவற்றைப் பெற்றுக்கொள்ள அவகாசம் கொடுக்காமலும் போலீசே அவர்களின் உடல்களை எரித்துள்ளது.
மேலும் ட்ரோன்கள் மூலம் பழங்குடியின மக்களின் ஒவ்வொரு அசைவையும் துணை ராணுவப்படை கண்காணித்து வருகிறது. பழங்குடியின பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அவர்களைக் கொலை செய்து மாவோயிஸ்டுகள் என்று கணக்குக் காட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பழங்குடியின மக்களைக் காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் வெளியேற்றுவதைத் தீவிரப்படுத்துகிறது. மோடி – அமித்ஷா பாசிச கும்பல் இக்கொலைகளைக் கொண்டாடி மகிழ்ந்து தங்களது பாசிசத் திமிரைக் காட்டுகிறது.
பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி இஸ்லாமியர்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற பொய்யான பரப்புரையின் மூலம் இந்துக்களை இஸ்லாமிய மக்களுக்கு எதிராகத் திருப்புவதற்கு முயற்சித்துவரும் காவி கும்பல், மாவோயிஸ்டுகள் என்றாலே நாட்டிற்கு எதிரானவர்கள் என்று பொய்யாகச் சித்தரித்து மாவோயிஸ்ட் தோழர்களையும் பழங்குடியின மக்களையும் கொலை செய்து வருகிறது.
எனவே இயற்கை வளங்களைக் காப்பாற்றப் போராடும் பழங்குடியின மக்கள் மற்றும் மாவோயிஸ்ட் தோழர்களின் படுகொலைக்கு எதிராகவும் இயற்கை வளங்களைச் சுரண்டத் துடிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும் இயற்கை வளத்தைப் பாதுகாக்க நினைக்கும் சூழலியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயகத்தை விரும்பும் கட்சியினர் அனைவரும் குரலெழுப்ப வேண்டும். ஆப்பரேஷன் ககரை நிறுத்த பாசிச மோடி அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
ஆண்ட்ரே
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram