கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் விழிஞ்சம் பகுதியில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை (Vizhinjam International Seaport) கடந்த மே 2-ஆம் தேதி பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம். அரசு திறந்து வைத்துள்ளது. இத்துறைமுகத்தை அரசு-தனியார் பங்களிப்பு (Public-Private Partnership) என்ற திட்டத்தின் அடிப்படையில், அதானி குழுமத்துடன் இணைந்து சி.பி.எம் அரசானது கட்டியமைத்துள்ளது.
இத்துறைமுகத்தை “கேரளாவின் கனவுத் திட்டம்” என்றும் “கேரளாவின் வளர்ச்சியையும், நாட்டின் வளர்ச்சியையும் இத்துறைமுகம் மேம்படுத்தும்” என்றும் சி.பி.எம். அரசு பெருமையாகப் பரப்புரை செய்து வருகிறது. மேலும், இத்திட்டத்தை ‘வளர்ச்சி’த் திட்டம் என்று கேரளாவின் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வரவேற்பதுடன் தங்களால்தான் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததாக சி.பி.எம். கட்சியுடன் மல்லுக்கட்டி வருகின்றன. ஆனால், இது விழிஞ்சம் பகுதியைச் சார்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை சுற்றுச்சூழலையும் நாசமாக்கிக் கொண்டுவரப்பட்டுள்ள நாசகர திட்டம் என்பதே உண்மை.
‘வளர்ச்சி’ என்ற பெயரில்
அப்பட்டமான அதானி சேவை
விழிஞ்சம் துறைமுகம் இந்தியாவின் முதல் ஆழ்கடல் கொள்கலன் பரிமாற்ற துறைமுகம் (Deep-Water Container Transshipment Port) ஆகும். உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் நிறுத்தும் வகையில் 20 மீட்டர் கடல் ஆழத்தை இயற்கையாகக் கொண்டிருப்பது; அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கான சர்வதேச கப்பல் போக்குவரத்து வழித்தடத்திற்கு 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது ஆகிய காரணங்களால் விழிஞ்சம் பகுதியில் இத்துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், துறைமுகத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் மட்டுமே தற்போது நிறைவுற்றுள்ள நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணிகள் 2028-ஆம் ஆண்டிற்குள் நிறைவுறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இத்துறைமுகம் ஆண்டுக்கு 12 லட்சம் கொள்கலன்களை (இருபது அடி சமமான அலகு – Twenty-foot Equivalent Unit – கொண்ட சரக்குகளைக் கொண்டுவரப் பயன்படுத்தப்படும் கொள்கலன்கள்) கையாளும் வகையிலான தானியங்கி தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. மூன்று கட்டப் பணிகளும் நிறைவடைந்தவுடன் இத்துறைமுகத்தால் ஆண்டுக்கு 45 லட்சம் கொள்கலன்களை கையாள முடியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேபோல, இந்தியாவிற்கான சரக்குகள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு, சிறிய கப்பல்கள் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், இனி அவை நேரடியாக விழிஞ்சம் துறைமுகத்தின் மூலமே கொண்டுவரப்படும் என்று சொல்லப்படுகிறது.
புவியியல் ரீதியாக முக்கியமான இடத்தில் இவ்வளவு தொழில்நுட்ப வசதியுடன் துறைமுகம் கட்டப்பட்டிருந்தாலும், இதனால் கொழுத்த லாபம் பெறப்போவது அதானி குழுமம் மட்டுமே. ஏனென்றால், 2034-ஆம் ஆண்டிலிருந்துதான் இத்துறைமுகத்தில் கிடைக்கும் வருவாயிலிருந்து கேரள அரசுக்குப் பங்கு அளிக்கப்படும் என்று அதானி குழுமத்துடன் அயோக்கியத்தனமாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஆனால், விழிஞ்சம் துறைமுகத்தைக் கட்டுவதற்கு அதானி குழுமத்தை விட கேரள அரசே அதிக நிதி செலவழித்துள்ளது. துறைமுகத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய கேரள அரசு ரூ.5,370 கோடியும் அதானி குழுமம் ரூ.2,497 கோடியும் செலவழித்துள்ளன. ஒன்றிய மோடி அரசால் செலவிடப்பட்ட ரூ.818 கோடியும் கேரள அரசின் முதுகில் கடன் சுமையாக ஏற்றப்பட்டுள்ளது. இத்துறைமுக நிர்வாகமும் அதானி கையில் நிரந்தரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதாவது கேரள சி.பி.எம். அரசானது ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து, அதானி லாபம் கொழுக்க ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளது.
அதேசமயம், இத்திட்டத்திற்காக ஆயிரக்கணக்கான மக்களை கிராமங்களில் இருந்து வெளியேற்றி சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாக்கியுள்ளது. மேலும், அதானி துறைமுகத்திற்கு அரணாக, கடலுக்குள் 3 கி.மீ தூரத்திற்கு அலை தடுப்பரண்களை அமைப்பதற்காக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லாரி சுமைகளுக்கு சமமான கற்களை சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுத்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நிலச்சரிவுகள் தொடர் நிகழ்வாகிவரும் போதிலும் அதானியின் நலனிற்காக அம்மலைகளை நாசப்படுத்தி கனிமவளக் கொள்ளையனைப் போல சி.பி.எம் அரசு செயல்பட்டுள்ளது.
மேலும், விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிரான மீனவ மக்களின் போராட்டத்தை கடும் அடக்குமுறைகளை செலுத்தி ஒடுக்கியது; மீனவர்களின் போராட்டம் அந்நிய சக்திகளால் தூண்டப்பட்டது என்று பா.ஜ.க-வினரைப் போல மீனவ மக்களை இழிவுபடுத்தியது. இன்னுமொருபடி மேலே சென்று துறைமுகத்திற்கு ஆதரவாகப் பாசிச பா.ஜ.க-வுடன் இணைந்து போராட்டங்களிலும் ஈடுபட்டது.
இவையெல்லாம் கேரள சி.பி.எம். அரசு முன்னிறுத்தும் “நவ கேரள மாடல்” என்பது அப்பட்டமான கார்ப்பரேட் மாடல் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது.
50,000-த்திற்கும் மேற்பட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு கொஞ்சமும் கூச்சமின்றி விழிஞ்சம் துறைமுகத்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்று சி.பி.எம். அரசு பேசி வருகிறது. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் அப்பட்டமாக அதானி சேவையில் சி.பி.எம். அரசு ஈடுபட்டு வருகிறது. கேரளாவின் மின்சார விநியோகம், சிமெண்ட் உற்பத்தி உள்ளிட்ட துறைகளிலும் அதானியின் ஆக்டோபஸ் கரங்கள் வேகமாக விரிவடையத் துணைசெய்கிறது.
இந்தியாவில், அம்பானி – அதானி – அகர்வால் வகையறா கார்ப்பரேட் கும்பலின் பொருளாதார ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் செயல்பட்டு வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் தொலைத்தொடர்பு, மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகளில் இக்கும்பலின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு வருகிறது. இச்சூழலில் பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் கேரள சி.பி.எம் அரசு, அதானியை வளர்ச்சியின் நாயகனாகவும் தங்களின் கூட்டாளியாகவும் பிரச்சாரம் செய்து கார்ப்பரேட் சேவையில் ஈடுபட்டு வருகிறது. பாசிச எதிர்ப்பு உணர்விலிருந்து தங்களுக்கு வாக்களித்த கோடிக்கணக்கான மக்களுக்கு அப்பட்டமாக துரோகமிழைத்து வருகிறது.
இடதுசாரி போர்வையில்
கார்ப்பரேட் மாடல் அரசு
விழிஞ்சம் துறைமுகத்தை பயன்படுத்திக் கொண்டு கேரளாவை நோக்கி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் சி.பி.எம். அரசு செயல்பட்டு வருகிறது. “விழிஞ்சம் கேரளத்தின் புதிய வெற்றி கீதம்”, “புதிய கேரளம் புதிய வழிகள்” போன்ற முழக்கங்களின் கீழ் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தாண்டு தொடக்கத்திலிருந்து, கேரள முதலீட்டாளர்கள் உலகளாவிய உச்சி மாநாடு, விழிஞ்சம் மாநாடு, உலகப் பொருளாதார மன்ற மாநாடு போன்றவற்றின் மூலம் உள்நாட்டு மற்றும் அந்நிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது. விழிஞ்சம் மாநாட்டில் மட்டும் 51 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

மேலும், கார்ப்பரேட் முதலாளிகள் கேரளாவைக் கொள்ளையடித்துச் செல்வதற்கு ஏதுவான வகையில் மக்களின் வரிப்பணத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறது. விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, 66,10.7 கி.மீ தொலைவில் உள்ள பாலராமபுரம் ரயில் நிலையம், 16 கி.மீ தொலைவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையம் ஆகியவற்றை இணைப்பதற்கான உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த உள்கட்டமைப்பு பணிகளையும் அரசு-தனியார் பங்களிப்பு என்ற முறையிலேயே கேரள சி.பி.எம். அரசு மேற்கொண்டு வருகிறது.
அதேபோல, 1,456 சதுர கி.மீ பரப்பளவில் விழிஞ்சம் – கொல்லம் – புனலூர் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சி முக்கோணத் திட்டம், 78 கி.மீ நீளமுள்ள விழிஞ்சம் – நவைக்குளம் வெளிப்புற வளர்ச்சி வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் விழிஞ்சம் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பொருளாதார மண்டலங்களாகவும், தொழிற்துறைப் பூங்காக்களாகவும் உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இத்திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை மக்களிடமிருந்து அபகரிப்பதற்காக “சிறப்பு முதலீட்டு மண்டல மசோதா” எனும் மக்கள்விரோதத் திட்டத்தை சி.பி.எம் அரசு உருவாக்கியுள்ளது. இம்மசோதா நில கையகப்படுத்தலை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றியமைக்கிறது. இதன்மூலம், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்கள் மீது கடும் அடக்குமுறை செலுத்தி விழிஞ்சம் துறைமுகத்தைக் கட்டமைத்ததைப் போல, விவசாய மக்களின் மீதும் தாக்குதல் தொடுக்கக் கேரள அரசு ஆயத்தமாகி வருகிறது என்பது தெளிவாகிறது.
மேலும், இத்திட்டங்கள் மூலம் மூன்று லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கேரள அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் இத்திட்டங்களால் கேரளாவின் நிலமும் நீரும் காற்றும் நஞ்சாக்கப்பட்டு, கேரள மக்கள் தங்களுடைய பூர்வீக நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக்கப்படுவதும், தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக ஆக்கப்படுவதுமே நடந்தேறும்.
இவ்வாறு விழிஞ்சம் துறைமுகத்தின் மூலம் முதலீடுகளை ஈர்த்து கேரளாவை கார்ப்பரேட்டுகளின் சொர்க்கபுரியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே சி.பி.எம். அரசு செயல்பட்டு வருகிறது. கார்ப்பரேட் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுடன் போட்டிப்போட்டு வருகிறது. கேரள அரசின் இந்நடவடிக்கையானது மோடி அரசின் சாகர் மாலா, கதி சக்தி, இந்தியாவை உற்பத்தியின் குவிமையமாக மாற்றுவது ஆகிய நோக்கங்களோடு ஒன்றிணைந்ததாகும்.
அதேபோல, கேரள சி.பி.எம். அரசானது விழிஞ்சம் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் மட்டுமின்றி, அரசுத்துறைகள், மாநிலத்திற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளையும் அரசு – தனியார் பங்களிப்பு என்ற முறையில் நிறைவேற்றி கார்ப்பரேட் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அதன்மூலம், அரசுத்துறைகளில் கார்ப்பரேட்மயமாக்கத்தை தீவிரப்படுத்தி வருகிறது. சான்றாக, கேரளாவில் தனியார் பல்கலைக்கழகங்களை செயல்பட அனுமதிக்கும் “கேரள தனியார் பல்கலைக்கழகங்கள் (நிறுவன அமைப்பு மற்றும் ஒழுங்குமுறை) மசோதாவை” கடந்த மார்ச் மாதத்தில் நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம், கேரளாவில் அரசு பல்கலைக்கழகங்கள் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலைமைக்கு முடிவுரை எழுதியுள்ளது.
ஆகவே, கேரள சி.பி.எம் அரசானது இடதுசாரி போர்வையில் அப்பட்டமான கார்ப்பரேட் மாடல் அரசையே நடத்திக் கொண்டிருக்கிறது. மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, அதானியை வளர்ச்சி நாயகனாக முன்னிறுத்தி கார்ப்பரேட் சேவையில் ஈடுபடுவது, அப்பட்டமாக மக்களைப் பாசிசத்திற்கு பலியிடும் வேலையாகும். எனவே, மக்களையும் கம்யூனிசத்தையும் நேசிக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் சி.பி.எம். அரசின் இந்த மக்கள் விரோத, பாசிச கும்பலுக்கு ஆதரவான நடவடிக்கைகளை எதிர்த்துக் குரலெழுப்ப வேண்டும்.
அமீர்
(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram