இந்துராஷ்டிரக் கொடுங்கனவுடன் நம் நாட்டை 12 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வருகிறது பாசிச மோடி அரசு. பாசிச வழிமுறைகள் மூலம் மாநிலத் தேர்தல்களில் பெறும் வெற்றிகளை ஊதிப்பெருக்கி, மக்களுக்குப் பீதியூட்ட இக்கும்பல் முயல்கிறது. ஆனால், களத்தில் நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் மக்கள் போராட்டங்கள் இந்த பாசிச மோடி அரசுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, கடந்த மே 3 அன்று நடந்த நீட் தேர்வில் நடந்த மோசடிகள் அம்பலமானதையடுத்து, தேசியத் தேர்வு முகமை (NTA) அத்தேர்வை இரத்துச் செய்து மாற்றுத் தேதியை அறிவித்தது. இத்தேர்வு குளறுபடிகளால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஐந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட அவலம், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், மே மாதத்தில் வெளியான சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளின் குளறுபடிகளும் மாணவர்களின் கோபத்தை அதிகரித்துள்ளன.
இதனையடுத்து, கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென சி.ஜே.பி (CJP – Cockroach Janata Party) முன்னெடுத்தப் பிரச்சாரம் இளைஞர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றது. இக்கோரிக்கையை முன்வைத்து ஜூன் 6 அன்று ஜந்தர் மந்தரில் நடத்தப்பட்ட போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு மோடி அரசிற்கு கிலியூட்டினர்.
மறுபுறம், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பாதுகாப்பான பணிச்சூழல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஒடுக்குமுறைகளை முறியடித்துப் போராடும் இத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முன்னால், அம்மாநில பா.ஜ.க அரசுகள் அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்குப் அடிபணிந்து அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையைத் திறந்துவிட முயலும் மோடி அரசுக்கு எதிராக விவசாயச் சங்கங்கள் வீரியத்துடன் போராடி வருகின்றன. அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் கும்பலுக்காகவும், அமெரிக்க ஏகபோக நிறுவனங்களுக்காகவும் இந்தியாவின் கனிம வளங்களைச் சூறையாடத் துடிக்கும் பாசிச மோடி அரசுக்கு எதிராக பழங்குடியின மற்றும் பூர்வகுடி மக்கள் உறுதியுடன் களம் கண்டுள்ளனர்; மணிப்பூர், சத்தீஸ்கர், ஒடிசா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் இப்போராட்டங்கள் நடந்து வருகின்றன.
எந்தவித சமரசமுமின்றி பாசிச கும்பலை நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் இத்தகைய மக்கள் போராட்டங்களே பாசிச எதிப்பில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்கின்றன. மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என போராடிவரும் பல வர்க்கங்களை சேர்ந்த மக்களை பாசிச எதிர்ப்பில் ஒன்றிணைத்து, பாசிச கும்பலை வீழ்த்துவதை நோக்கி முன்னேறுவது புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
தமிழ்நாட்டை கடந்த 60 ஆண்டுகளாக மாறிமாறி ஆட்சி செய்துவந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் தோற்கடித்துவிட்டு, கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் விஜய் வெற்றி பெற்றுள்ளார். இது தி.மு.க. ஆதரவு ஜனநாயக சக்திகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, த.வெ.க-வின் வெற்றிக்கு திரைக்கவர்ச்சி மட்டுமே காரணம் என தி.மு.க. ஆதரவு பிரிவினர் ஒருதலைப்பட்சமாகப் பேசி வருகின்றனர். தி.மு.க-வின் தவறுகள் குறித்தோ மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்தோ அவர்கள் பெரிதும் வாய்திறப்பதில்லை.
ஆனால், பாசிச எதிர்ப்பில் தேவை நேர்மையான பரிசீலனை! தி.மு.க. தோல்வி – த.வெ.க. வெற்றிக்கான காரணங்கள், பாசிச பா.ஜ.க-வின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து எதார்த்தமாக பரிசீலிப்பதன் மூலமே இந்துராஷ்டிரக் கனவுடன் முன்னேறிக் கொண்டிருக்கும் பாசிச பா.ஜ.க-வை தடுத்து நிறுத்த முடியும்.
இத்தகைய கண்ணோட்டத்துடன் சரியான பரிசீலனையை முன்வைத்து “தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?” என்ற வெளியீட்டை மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் கொண்டுவந்துள்ளன. தமிழ்நாடு முழுவதுமுள்ள பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளிடையே இவ்வெளியீடு பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் தற்போது ஆட்சியமைத்துள்ள ஜனரஞ்சகவாத – பிழைப்புவாதக் கட்சியான த.வெ.க., எந்தவித கொள்கையையும் முன்வைக்காமல், விஜய்யின் திரைக்கவர்ச்சியை மூலதனமாக்கி, தி.மு.க. எதிர்ப்பை அறுவடை செய்துகொண்டு, வதந்திகள், பொய்கள், சதிக் கோட்பாடுகள், சமூக ஊடகப் பரப்புரைகள் மூலம் விசமத்தனமான கருத்துருவாக்கத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளது; இதன்மூலம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில், அவர்களைவிட கேடான வழிமுறைகளில் விஜய்யின் வெற்றி அரங்கேறியுள்ளது என்பதை இவ்வெளியீடு அம்பலப்படுத்துகிறது.
அதேசமயம், விஜய்யின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்த மறுகாலனியாக்கப் பண்பாடு, போலி ஜனநாயகத் தேர்தல் கட்டமைப்பின் சீரழிவுகளை விவரிக்கும் இவ்வெளியீடு விஜய்யின் வெற்றிக்கான சமூகப் பொருளாதார காரணிகளை விரிவாக அலசுகிறது. முக்கியமாக, தமிழ்நாட்டில் திரைக்கவர்ச்சி அரசியலுக்கு எவ்வாறு திராவிட இயக்க அரசியல் அடித்தளமிட்டுள்ளது என்பதை வரலாற்றுப்பூர்வமாக முன்வைக்கிறது.
மறுபுறம், ‘திராவிட மாடல்’ ஆட்சி செய்வதாக கடந்த ஐந்தாண்டுகளாக தம்பட்டமடித்த தி.மு.க., ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற பெயரில் அப்பட்டமான கார்ப்பரேட் சேவையில் ஈடுபட்டது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்கியது. பாசிச எதிர்ப்பில் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகமிழைத்தது. தி.மு.க-வின் இத்துரோகங்களே அதன் தோல்விக்கு வழிவகுத்தது; த.வெ.க. வளர்வதற்கு சாதகமான சூழலையும் உருவாக்கிக் கொடுத்தது என்பதை வெளியீடு அழுத்தமாக விளக்குகிறது.
இந்நிலையில், தற்போது த.வெ.க-வால் தி.மு.க. கூட்டணி உடைக்கப்பட்டிருப்பது; இந்து சமய அறநிலையத்துறைக்கு பார்ப்பன அமைச்சர் நியமிக்கப்பட்டிருப்பது; ஆளுநரின் காவிமயமாக்க நடவடிக்கைகளுக்கு த.வெ.க. அரசு அடிபணிந்து செல்வது; பொது இடங்களில் ஆடு, கோழி, மாடுகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது என தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்றுவதற்கு சாதகமான சூழல் உருவாக்கப்படுகின்றது.
இந்த அபாயகரமான சூழல் குறித்து விளக்கும் வெளியீடு தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்புணர்வு, பா.ஜ.க. எதிர்ப்புணர்வின் ஒவ்வொரு கூறையும் தகர்க்கும் வேலையை விஜய்யின் த.வெ.க. மேற்கொள்ளும் என்பதை அம்பலப்படுத்துகிறது. விஜய் ஆட்சி என்பது, பார்ப்பனிய சித்தாந்தத்தையும் அதன் பாசிச அரசியலையும் பார்ப்பனிய பழக்கவழக்கங்களையும் தமிழ்நாட்டு மக்களை ஏற்கச் செய்து ஏமாற்றும் தந்திரமான ஆட்சி; பாசிசத்திற்கான பாதையை செப்பனிட்டு கொடுக்கும் ஆட்சி என்பதை திரைக்கிழிக்கிறது!
மேலும், பாசிசம் அரங்கேறுவதைத் தடுக்க மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்பதையும் தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உயர்த்திப் பிடித்து பாசிச எதிர்ப்பு சக்திகளை கருத்தியல் ரீதியாக ஒருங்கிணைக்க வேண்டும் என்பதையும் இவ்வெளியீடு முன்வைக்கிறது. அந்தவகையில், மக்கள் கோரிக்கைகளுக்காக களத்தில் போராடிக் கொண்டிருக்கின்ற, பாசிசத்திற்கு எதிராகக் களமாடிக் கொண்டிருக்கின்ற சக்திகளுக்கு இவ்வெளியீடு முக்கியமான ஓர் ஆயுதமாகும்.
புதிய ஜனநாயகம் ஜூன் 2026 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசகர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
தலையங்கம்: பற்றி பரவும் போராட்டத் தீ
பாசிஸ்டுகளின் கோட்டையை சுட்டெறிக்கட்டும்!
வக்ஃப் ஆவணங்களில் குளறுபடி எனக்கூறி 31,328 சொத்துகளின் பதிவுகளை யோகி அரசு ரத்து செய்துள்ளது.
பாசிச மோடி கும்பல் தனது இந்துராஷ்டிர கொடுங்கனவிற்காக இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு, வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது.
அதில் நாடு முழுதும் உள்ள வக்ஃப் சொத்துகளின் பதிவு, ஆண்டுக்கணக்குகள், வழக்குகளைக் கையாள்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்காக மையப்படுத்தப்பட்ட இணையதளப் பக்கம் ‘உமீத்’தை ஒன்றிய அரசு தொடங்கியது.
இந்த இணையதளத்தில் ஆறு மாதங்களுக்குள் வக்ஃப் சொத்துக்களை விரிவான தகவலுடன் பதிவு செய்ய வேண்டும் எனவும் பதிவு செய்யப்படாத சொத்துகள் சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
அதன்படி நாடு முழுதும் வக்ஃப் சொத்துகளை, ‘உமீத்’ (UMEED) இணைய தளத்தில் பதிவேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், பாசிஸ்ட் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்தில் ஒட்டுமொத்தமாக 1,18,302 வக்ஃப் சொத்துகள் ஆவணப்படுத்தப்பட்டன.
இதில், உமீத் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சொத்து விபரங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் ஆவணங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்தல் என்ற பெயரில், சில சொத்துகளில், வக்ஃப் வாரிய ஆவணங்களில் உள்ள, ‘கஸ்ரா’ எனப்படும் நிலப் புல எண்களும், இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எண்களும் முரண்பாடாக உள்ளது எனக் கூறி 31,328 சொத்துகளின் ஆன்லைன் பதிவுகளை ரத்து செய்துள்ளனர். மேலும், அவற்றுடன் தொடர்புடைய, 31,192 வக்ஃப் கோரிக்கைகளும் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதாவது வக்ஃப் பத்திரம் இல்லாத சொத்துகளை வக்ஃப் சொத்துகளாகக் கருத இயலாது என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1900-களின் முற்பகுதியிலிருந்தே வக்ஃப் சொத்துகளை நிர்வகித்துவரும் வக்ஃப் வாரியத்திடம் பல இடங்களுக்கு முறையான சான்றிதழ்கள் இருப்பதற்கான அடிப்படையில்லை. அப்படி சமர்ப்பிப்பதற்கான சாத்திய கூறுகளுமில்லை. எனவே தான் வக்ஃப் சொத்துகளை அபகரித்து இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றுவதற்காகவே இப்பாசிசக் கும்பல் வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது.
ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய மக்களின் வீடுகளும், வழிபாட்டுத் தலங்களும் சட்டவிரோதமாக அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி புல்டோசரால் இடிக்கப்படும் பயங்கரவாதம் தினந்தோறும் அரங்கேறிவரும் நிலையில் இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதலை இது மேலும் தீவிரப்படுத்தும். அதுமட்டுமின்றி நாம் முன்பே கூறியது போல இஸ்லாமியர்கள் மீது இதுவரை இல்லாத வகையில் பாசிச பயங்கரவாதத் தாக்குதல் ஒரு உச்சத்தை எட்டியுள்ளது.
எனவே இந்த நடவடிக்கைக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும், அனைத்து ஜனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்புகளும் குரல் எழுப்ப வேண்டும். மேலும் வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஷாஹீன்பாக் வடிவிலான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்களை வக்ஃப் திருத்தச் சட்டத்தைப் பின்வாங்கும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
சுருங்கிய இரைப்பைகளோடு
வீதி முனைகளில்
தீப்பந்தமேந்தித் திரளும்
எம் வியர்வையின் உப்புக் கரிப்பில்,
வரலாறு வார்க்கும்
விடுதலைச் சாசனமே
இனி நமக்கான ஜனநாயகம்!
தேகமெங்கும் ரத்தம் வழிய,
மணிப்பூரின் குரல்வளையை
பாசிசத்தின் நச்சுப் பற்கள்
நெரிக்கும் போது,
நகத்தின் நுனியில்
தொட்டுத் தடவிய
ஒரு சொட்டு மை மட்டும்,
எம் முதுகில் பதிந்த
குருதி வழியும் ரணங்களுக்கு
மருந்தாகுமோ?
மே 25, வசந்தத்தின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியின் 60-ஆம் ஆண்டு. 1967-ஆம் ஆண்டின் மே மாதத்தில் பண்ணையாதிக்கத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் எதிராக நக்சல்பாரியின் ஏழை, எளிய விவசாயிகள் கிளர்ந்தெழுந்தனர். “உழுபவனுக்கே நிலம், உழைப்பவனுக்கே அதிகாரம்” என்ற முழக்கத்தை முன்வைத்து ஆயுதம் தாங்கிய பேரெழுச்சியை நடத்தி, சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினர். தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒன்றிய அரசின் கொடிய இராணுவத்தை எதிர்த்து நின்று போர் புரிந்தனர்.
இதன்மூலம், நக்சல்பாரி எழுச்சி இயக்கம் இந்திய கம்யூனிச இயக்கத்தை ஆட்கொண்டிருந்த நாடாளுமன்ற திரிபுவாதப் பாதையை திரைக்கிழித்தது. “நக்சல்பாரி எழுச்சிப் பாதையே இந்திய புரட்சிக்கான பாதை” என கம்யூனிசப் புரட்சியாளர்களுக்கு புரட்சியின் திசையைக் காட்டியது.
இன்று, நம் நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி கும்பலின் பாசிசம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அப்பாசிச கும்பலானது இந்திய உழைக்கும் வர்க்கத்தினர் மீது பாசிச தாக்குதலை மூர்க்கத்தனமாகத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. நிலவுகின்ற போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பை இந்துராஷ்டிரத்திற்கான கட்டமைப்பாக மறுவார்ப்பு செய்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், பாசிச சட்டதிட்டங்களுக்கு எதிராக மக்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். தங்களின் உறுதிமிக்க போராட்டங்கள் மூலம் பாசிச கும்பலைப் பணிய வைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போராட்டங்களும், நாடாளுமன்றப் பாதையின் மூலம் அல்ல, மக்கள் எழுச்சிகள் மூலமே பாசிசத்தை வீழ்த்த முடியும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
அந்தவகையில், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்போம்; அப்போராட்டங்களை பாசிச சக்திகள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதைத் தடுத்து நிறுத்தும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றுக் கட்டமைப்பை நிறுவுவதை நோக்கி வளர்த்தெடுப்போம் என நக்சல்பாரி எழுச்சியின் 60-ஆம் ஆண்டில் உறுதியேற்போம்!
கடந்த ஜனவரி 20, 2026 அன்று, மனிதர்களின் நீர் நுகர்வு இயற்கையின் மீளுருவாக்கத் திறனைத் தாண்டிவிட்டதால், உலகம் அதிகாரப்பூர்வமாக “உலகளாவிய நீர் திவால்நிலை” (Global Water Bankruptcy) எனும் கட்டமைப்பு வீழ்ச்சிக்குள் நுழைந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் (UNU) எச்சரித்துள்ளது.
இது வெறும் பருவமழை பொய்ப்பதால் ஏற்படும் தற்காலிக நீர் நெருக்கடி அல்ல. மாறாக, கடந்த பல பத்தாண்டுகளாக நிலத்தடி நீரை வரம்பின்றி உறிஞ்சியதால், நீரைத் தேக்கி வைக்கும் பாறையடுக்குகளும் (Aquifers) இயற்கை நீரூற்றுகளும் சிதைந்துவிட்டதன் விளைவாகும். அதாவது, கார்ப்பரேட்டுகளின் வரைமுறையற்ற இயற்கை வளச் சூறையாடலால் ஏற்பட்டுள்ள மீளமுடியாத ஒரு சூழலியல் அழிவு இது.
இந்தியாவை அச்சுறுத்தும் நீர் பற்றாக்குறை
இந்தியாவின் உணவு மற்றும் குடிநீர் பாதுகாப்பிற்கு நிலத்தடி நீரே முதுகெலும்பாக விளங்குகிறது. நாட்டின் விவசாயத் தேவையில் 62 சதவிகிதமும் கிராமப்புறக் குடிநீர்த் தேவையில் 85 சதவிகிதமும் நகர்ப்புறத் தேவையில் 45 சதவிகிதமும் நிலத்தடி நீர் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றது.
இருப்பினும், தற்போது இந்தியாவின் வடமேற்குப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் சில மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான அளவை எட்டியுள்ளது. 2025-26 தரவுகளின்படி, இந்தியாவின் வருடாந்திர நிலத்தடி நீர் மீளுருவாக்கம் 448.52 பில்லியன் கன மீட்டர் (BCM) ஆக உள்ள நிலையில், உறிஞ்சப்படும் நீரின் அளவு 247.22 பி.சி.எம். என்ற அபாயகரமான எல்லையைத் தொட்டுள்ளது. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீர் எடுக்கப்படும் விகிதமானது, இயற்கை மீளுருவாக்கம் செய்யும் அளவை விடப் பன்மடங்கு அதிகமாக உள்ளது.
மேலும், இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் சூழலில், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் 40 சதவிகித மக்கள் பாதுகாப்பான குடிநீர் வசதியின்றித் தவிக்கும் அபாயம் நிலவுவதாக நிதி ஆயோக் (NITI Aayog) கூறுகிறது.
ஏற்கெனவே, இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்கள் தீவிரமான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன. 85 சதவிகிதம் நிலத்தடி நீரை சார்ந்திருக்கும் கிராமப்புறங்களின் நிலை இன்னும் மோசமான நிலையை அடையக்கூடும்.
இந்தியாவில் நிலவும் இந்த நீர் பற்றாக்குறையின் கொடூரமான சுமை உழைக்கும் வர்க்கப் பெண்கள் மீதே பெருமளவு சுமத்தப்படுகிறது. குடிநீருக்காகத் தினசரி பல கிலோமீட்டர் தூரத்திற்கு நீர் சுமப்பதால் பெண்களுக்கு கருப்பை பாதிப்பு, எலும்புத் தேய்மானம் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. நீரை சேகரிப்பதற்காகப் பெண் குழந்தைகள் பள்ளிக்கல்வியிலிருந்து இடைநிறுத்தப்படுகின்றனர்; மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் “தண்ணீர் மனைவிகள்” (தண்ணீரைச் சுமந்து வருவதற்காகவே ஆண்கள் பல திருமணங்களை மேற்கொள்வது) எனும் ஆணாதிக்க கொத்தடிமை முறை இன்றும் தொடர்கிறது. இவ்வாறு நீர் பற்றாக்குறை பெண்கள் மீது ஒரு ஆணாதிக்க வன்முறையாகவும் உருவெடுத்துள்ளது.
உள்நாட்டு – பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்படும் நீராதாரங்கள்
ஒருபுறம் டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்கள் கடும் குடிநீர் பற்றாக்குறையில் தவிக்க, மறுபுறம் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலத்தடி நீரை வரைமுறையற்றுச் சூறையாடுவதற்கு ஏற்பத் திட்டங்களையும் சட்டங்களையும் பாசிச மோடி அரசு உருவாக்கி வருகிறது.
மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் இருக்கும் அணைகளின் மீதான கட்டுப்பாட்டை ஒன்றிய அரசின் கைகளில் குவிப்பதற்காக 2021 அணைப் பாதுகாப்புச் சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியது. அதேபோல், நதிகள் மீதான மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை கொண்டுவந்தது. இத்திட்டத்தின் கீழ் அணை கட்டுதல் மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்புகளை உருவாக்க அதானி, எல் அண்ட் டி (L&T) போன்ற பெருநிறுவனங்களுக்குப் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், அம்ருத் 2.0 (AMRUT 2.0 – Atal Mission for Rejuvenation and Urban Transformation) என்ற திட்டத்தின் மூலம் நகரங்களின் நீர் விநியோகத்தை நவீனப்படுத்துவதாகக் கூறி, குடிநீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்கி வருகிறது பாசிச மோடி அரசு. இத்திட்டத்தின் கீழ் நிதி பெற வேண்டுமெனில், உள்ளாட்சி அமைப்புகள் நீர் விநியோகத்தைத் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து (PPP Model) செயல்படுத்த வேண்டுமென்ற நிபந்தனை மறைமுகமாக விதிக்கப்படுகிறது. நீர் மேலாண்மையை ஒரு சூழலியல் அமைப்பாகப் (Ecological System) பார்க்காமல், கான்கிரீட் குழாய்களுக்கான ஒப்பந்த வணிகமாக (Contractor Business) மட்டுமே அரசு அணுகுகிறது. சான்றாக, அம்ருத் திட்ட நிதியில் 62 சதவிகிதத்தை குழாய் விநியோகக் கட்டமைப்புக்கும், வெறும் 3 சதவிகிதத்தை மட்டுமே நீர்நிலைப் புனரமைப்பிற்கும் மோடி அரசு ஒதுக்கியுள்ளது.
அதேபோல், சமீபத்தில் கொண்டுவரப்பட்ட 2025 பேரிடர் மேலாண்மை (திருத்தச்) சட்டம் என்பது நதி நீர் பகிர்வு அல்லது அணைகளில் இருந்து நீர் திறப்பது போன்ற விவகாரங்களை “பேரிடர் மேலாண்மை” என்ற பெயரில் ஒன்றிய அரசு தனது முழுக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வழிவகை செய்கிறது.
கென் – பெட்வா திட்டத்திற்கு எதிரான பழங்குடி மக்களின் சிதா அந்தோலன் போராட்டம்.
இதுமட்டுமின்றி, தேசிய நீர்க் கொள்கையை (National Water Policy – 2026) கொண்டுவரவும் மோடி அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இந்தப் புதிய கொள்கையின்படி, நீர் என்பது ஒரு சமூகச் சொத்தாகப் பார்க்கப்படாமல், பொருளாதாரப் பண்டமாக (Economic Good) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதன் விளைவாக, நீர் விநியோகம், பராமரிப்பு மற்றும் கட்டணம் வசூலித்தல் ஆகியவை முழுமையாகக் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்; ஸ்மார்ட் மீட்டர்கள் கட்டாயமாக்கப்படும். இது ஏழை, எளிய மக்களின் நீர் உரிமையைக் கேள்விக்குறியாக்கும் அப்பட்டமான பாசிச தாக்குதலாகும்.
இவ்வாறு நீர் ஆதாரங்களின் மீதான மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றை சர்வதேச மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்க மோடி அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்திய நுகர்வோர் சந்தையில் (FMCG) நுழைந்தபிறகு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் வணிகச் சந்தையை மிக வேகமாகத் தனது ஏகபோகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
அதேபோல், அதானி குழுமம் தற்போது தூர்வாருதல் (Dredging), கழிவுநீர் சுத்திகரிப்பு (Sewage Treatment) மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்புகளில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் உள்ளிட்ட நகரங்களில் “ஹைபிரிட் அனிட்டி” முறையில் (Hybrid Annuity Model) கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. இவ்வாறு “தூய்மையான கங்கை” (Namami Gange) மற்றும் “அம்ருத்” திட்டங்களின் கீழ் வரும் ஒப்பந்தங்களை, அதானி குழுமம் கைப்பற்றி வருவது எதிர்காலத்தில் குடிநீர் விநியோகம் முழுமையாகக் அதானியின் ஆதிக்கத்திற்குச் செல்ல வழிவகுக்கும்.
மறுபுறம், அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளான கூகுள், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் “செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்களை” (AI Data Centers) அமைக்க மோடி அரசு தாராளமாக அனுமதி வழங்கி வருகிறது. நாளொன்றுக்கு இலட்சக்கணக்கான லிட்டர் நன்னீரை உறிஞ்சும் இந்தத் தரவு மையங்கள், சுற்றுச்சூழலுக்கு மீளமுடியாத இழப்புகளை ஏற்படுத்தும் பெரும் அபாயத்தைக் கொண்டுள்ளன.
உலகம் நீர் திவால்நிலையை அடைந்துவிட்டதாக சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், பாசிச மோடி அரசு அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக நெருக்கடியை தீவிரப்படுத்தவே செய்கிறது.
முதலாளித்துவத்தின் லாபவெறியின் விளைவு
உலகளவில் பாதுகாப்பற்ற குடிநீரால் ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், உலகளாவிய நீர் திவால்நிலையானது உயிரிழப்புகளை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் விவசாயம் பொய்த்து, உலகளவில் வறட்சி, உணவுத் தட்டுப்பாடு, இடப்பெயர்வு, அமைதியின்மை, மோதல்கள் ஆகியவை மேலும் அதிகரிக்கும்.
மறுபுறம், இந்த நீர் திவால்நிலை குறித்தும் அதன் எதிர்கால ஆபத்துகள் குறித்தும் பேசும் சர்வதேச அமைப்புகளும் ஊடகங்களும் இதற்கு ஊற்றுக்கண்ணான முதலாளித்துவம் குறித்து வாய்திறப்பதில்லை. உண்மையில், முதலாளித்துவ இலாபவெறியின் விளைவுகளான அதிகப்படியான நிலத்தடி நீர் உறிஞ்சல், காலநிலை மாற்றம் மற்றும் தவறான நீர் மேலாண்மை ஆகியவையே இந்த திவால்நிலைக்கு முதன்மை காரணங்களாகும்.
ஆனால் முதலாளித்துவமோ, விவசாயமே அதிக நீரை உறிஞ்சுகிறது என்று கூறி விவசாயிகளைப் பலிகடாவாக்கி தன்னைத் தற்காத்துக்கொள்ள முயல்கிறது. உண்மையில், நிலத்தடி நீர் வீழ்ச்சிக்குச் சிறு, குறு விவசாயிகள் காரணமல்ல. மாறாக, ஏகாதிபத்தியச் சந்தை நிர்ப்பந்தத்தால் அதிக நீர் தேவைப்படும் பணப்பயிர்களை விளைவிக்கத் தூண்டி, அவற்றை “மறைநீராக” (Virtual Water) ஏற்றுமதி செய்யும் உலகளாவிய வேளாண்-மூலதனக் கும்பலும் (Global Agri-Capital), ரியல்-எஸ்டேட் மாஃபியாக்களின் திட்டமிடப்படாத முறையற்ற நகரமயமாக்கலுமே முதன்மைக் காரணங்களாகும்.
உண்மையில் நாம் அரிசியையும் சர்க்கரையையும் மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை; நம் நாட்டின் நிலத்தடி நீரையும் சேர்த்தே ஏகாதிபத்திய நாடுகளுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஒருவகை “சூழலியல் காலனியாதிக்கம்” (Ecological Colonialism) ஆகும். இதுதான் உலகம் முழுவதும் காலனிய நாடுகளின் நிலையாகும்.
இந்நிலையில், காலநிலை மாற்றம் என்பதையே நிராகரிக்கும் டிரம்ப்-மஸ்க் தலைமையிலான பாசிச கும்பல் அமெரிக்காவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி, உலகை மேலாதிக்கம் செய்து வருகிறது. இக்கும்பல் கடந்தாண்டில் சர்வதேச வளர்ச்சிக்கான முகமையின் (USAID) நிதியுதவிகளை முடக்கியதன் விளைவாக, பின்தங்கிய நாடுகளில் சுவாஷ் (SWASH- Sanitation, Water, and Sanitation for Health) போன்ற அடிப்படைத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சுமார் 9.5 கோடி மக்கள் அடிப்படை சுகாதாரச் சேவைகளை இழந்துள்ளனர். இது, பின்தங்கிய நாடுகளின் முக்கிய நகரங்களை அதிவிரைவில் “டே ஜீரோ” (Day Zero) எனப்படும் “நீர் அறவே இல்லாத” நிலைக்குத் தள்ளிவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீர் நெருக்கடி என்பது எதிர்காலத்தில் சரிசெய்ய வேண்டிய நிர்வாகப் பிரச்சினையல்ல; இன்றே தீர்க்கப்பட வேண்டிய வர்க்கப் போராட்டமாகும். நீர் என்பது கார்ப்பரேட்டுகளின் இலாபப் பொருளல்ல; அது உழைக்கும் மக்களின் வாழ்வாதார உரிமை என்பது நிலைநாட்டப்பட வேண்டும்.
இந்தியாவில், கார்ப்பரேட் – தனியார்மயத்திற்கு எதிராக, நீர் வளத்தின் மீதான முடிவெடுக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மக்களுக்கும் நேரடியாக வழங்கும் “பரவலாக்கப்பட்ட ஜனநாயக நீர் மேலாண்மை” நிலைநாட்டப்பட வேண்டும்; பாரம்பரிய ஏரிகள் மற்றும் குளங்களை மக்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலான குடிமராமத்து திட்டங்கள் மூலம் தூர்வார வேண்டும்; பயன்படுத்தப்பட்ட நீரை 100 சதவிகிதம் சுத்திகரித்து மறுசுழற்சி செய்யும் முறையைக் கட்டாயமாக்க வேண்டும். தரவு மையங்கள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் தண்ணீர் பயன்பாட்டை வெளிப்படையாக்கி, வரம்புகளை விதிக்கும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளின் கீழ் மக்களை அணிதிரட்டி போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அதனை நமது நாட்டில் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு கட்டமைப்புக்கான மக்கள் எழுச்சியாக வளர்த்தெடுப்பதே நம் முன்னுள்ள வரலாற்றுத் தேவையாகும்.
ஆனால், இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பில் தண்ணீர் ஒரு விற்பனைப் பண்டமாக இருக்கும் வரை நீர் திவால்நிலையை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, நீரை ஒரு சமூக உடைமையாக மாற்றி, மனிதத் தேவைகளுக்கும் இயற்கையின் மீளுருவாக்கத்திற்கும் ஏற்பத் திட்டமிட்டுப் பயன்படுத்தும் சோசலிச சமூக-பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதே இதற்கான ஒரே நீண்டகால தீர்வாகும்.
சமீபத்தில், இந்தியாவின் முதல் பெரிய நதிநீர் இணைப்புத் திட்டமான கென்-பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டத்தை (Ken-Betwa River Link Project) எதிர்த்து மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியின பெண்கள், விவசாயிகள் நடத்திய “சிதா அந்தோலன்” (Chita Andolan) போராட்டம் இங்கு குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் படி, மத்தியப்பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் கென் நதியின் குறுக்கே 77 மீட்டர் உயரமுள்ள பிரம்மாண்ட அணை கட்டப்பட்டு, அந்த அணையில் இருந்து சுமார் 221 கிலோமீட்டர் நீள கால்வாய் வெட்டப்பட்டு, அதன் வழியாக உபரி நீர் பெட்வா நதிக்குக் கொண்டு செல்லப்படும்.
இதன் மூலம் உத்தரப்பிரதேசத்தின் ஏழு மாவட்டங்கள், மத்தியப்பிரதேசத்தின் ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய பாறை நிறைந்த நிலப்பரப்பான “புண்டேல்கண்ட்” பகுதியின் தாகம் தீர்க்கப்படும் என்றும் வறட்சி மிகுந்த புண்டேல்கண்ட் பகுதியின் விவசாயப் பொருளாதாரம் மேம்படும் என்றும் பா.ஜ.க. அரசு கதையளக்கிறது. ஆனால், சமூக ஆர்வலர்கள் இத்திட்டத்தை ஒரு “சூழலியல் பேரழிவு” என்று எச்சரிக்கின்றனர்.
ஏனெனில், கென் நதியே பல கோடை காலங்களில் வறண்டு போய்விடும். காலநிலை மாற்றத்தால் நதிநீர் வரத்து குறைந்துள்ள சூழலில், அங்கு உபரி நீர் இருப்பதாக அரசு காட்டும் தரவுகள் பொய்யானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், அணைக் கட்டப்படுவதால் புகழ்பெற்ற பன்னா புலிகள் காப்பகத்தின் சுமார் 6,000 ஹெக்டேர் நிலப்பரப்பு நீரில் மூழ்கும். இது புலிகள் மற்றும் பல அரிய வகை உயிரினங்களின் வாழ்விடத்தை நிரந்தரமாக அழிக்கும். இத்திட்டத்திற்காகச் சுமார் 23 முதல் 40 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளன. இது அந்தப் பகுதியின் மழையளவை மேலும் குறைத்து நெருக்கடியைத் தீவிரப்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
முக்கியமாக, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சுமார் 10 கிராமங்கள் முழுமையாகவும், பல கிராமங்கள் பகுதியளவிலும் நீரில் மூழ்கும். இதனால் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் (கோண்ட் மற்றும் கோல் பிரிவினர்) தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வெளியேற்றப்படுவர்.
இந்தியாவின் மிக முக்கியமான ஒரு சூழலியல் மண்டலத்தை சிதைத்து பா.ஜ.க. அரசு இத்திட்டத்தை கொண்டுவரத் துடிப்பதற்கு பின்னால் அப்பட்டமான கார்ப்பரேட் சேவையே அடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் பிரம்மாண்டமான அணை மற்றும் கால்வாய் கட்டுமான ஒப்பந்தங்களால், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இலாபமடையும். அதேபோல், அணை அமையும் இடத்தைச் சுற்றியுள்ள நிலங்களும் நீர் ஆதாரங்களும் கார்ப்பரேட் தொழிற்சாலைகளுக்கும் தரவு மையங்களுக்குமே தாரைவார்க்கப்படும்.
கடந்த ஏப்ரல் 16, 2026 அன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், “131-வது அரசமைப்புத் திருத்த மசோதா 2026”, அதனுடன் தொடர்புடைய “தொகுதி மறுவரையறை மசோதா 2026” (Delimitation Bill 2026) மற்றும் “யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026” ஆகிய மூன்று மசோதாக்களை ஒன்றிய மோடி அரசு தாக்கல் செய்தது. இவற்றில் முதல் மசோதா அரசமைப்புத் திருத்த மசோதா என்பதால் அதனை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்பதும், அது நிறைவேற்றப்படாவிட்டால் மற்ற இரு மசோதாக்களும் நடைமுறையாகாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாசிச மோடி அரசின் தொகுதி மறுவரையறைக்கு தி.மு.க., காங்கிரசு, சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்) மற்றும் திரிணாமுல் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏப்ரல் 17 அன்று இம்மூன்று மசோதாக்களும் தோல்வியடைந்தன. இது, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாசிச கும்பலுக்கு ஏற்பட்டுள்ள தற்காலிகத் தடையாகும்.
மறுபுறம், கடந்த பன்னிரண்டு ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில், மோடி-ஷா கும்பல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாக்கள் முதன்முறையாக தோற்கடிக்கப்பட்டிருப்பது இந்திய அளவிலும் சர்வதேச ஊடகங்களிலும் கவனத்தைப் பெற்றது. இதுகுறித்து, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் இம்மசோதாக்களை கொண்டுவந்து எதிர்ப்பை சம்பாதித்தது மோடி அரசின் முட்டாள்தனம் என்றும் எரிசக்தி தட்டுப்பாட்டால் இந்திய மக்களிடையே ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்கான திசைதிருப்பல் நடவடிக்கை இது என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், இம்மசோதாக்களின் பின்னணியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் சதித்திட்டம் மிகவும் ஆழமானதாகும்.
பாசிச கும்பலின் நெருக்கடியும் சதித்திட்டமும்
மக்கள் போராட்டங்களால் அரசியல் அரங்கில் தோல்வி முகத்திற்கு தள்ளப்பட்டுள்ள பாசிச பா.ஜ.க. கும்பல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைக் கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இத்தோல்வி முகத்திலிருந்து மீள்வதற்காக போலி வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) முறைகேடுகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட மோசடிகளின் மூலம் அடுத்தடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது. 2029 நாடாளுமன்றத் தேர்தலில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் இம்மோசடிகளையே நம்பியுள்ள மோடி-அமித்ஷா கும்பல், தொகுதி மறுவரையறையை அதற்கான முக்கிய ஆயுதமாக கருதுகிறது.
அசாம் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டதைப் போல், பாசிச பா.ஜ.க. கும்பல் வெற்றி பெறுவதற்கு ஏற்பவும் அதன் இந்துராஷ்டிரத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு சாதகமாகவும் நாடு முழுவதும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே பாசிச கும்பலின் சதித்திட்டமாகும்.
மேலும், 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரையில் தொகுதி மறுவரையறை செய்யப்படக் கூடாது என்ற அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையிலான தடைக்காலம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், தொகுதி மறுவரையறைக்கான நகர்வுகளை மோடி அரசு தொடங்கியுள்ளது. “மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027”-கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இப்பணிகள் நிறைவடைந்து தரவுகள் வெளியாக 2028-ஆம் ஆண்டு வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தொகுதி மறுவரையறையை முடிக்க முடியாத நெருக்கடி பாசிச கும்பலுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், மக்கள்தொகையில் வடமாநிலங்களுக்கும் தென்மாநிலங்களுக்கும் மிகப்பெரிய இடைவெளியைக் கொண்டுள்ள 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது பாசிச கும்பலின் நோக்கத்திற்கு ஏதுவானதாகும். 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிவுகளும் இவ்வாறு அமையுமா என்பது கேள்விகுறியே. அதைப்போல், மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் இணைத்து நடத்தப்படும் சாதிவாரிக் கணக்கெடுப்பின் விவரங்களை தேர்தலுக்கு முன்னர் வெளியிட்டால் அது பாசிச கும்பலுக்கே எதிராக முடியவும் வாய்ப்புள்ளது.
ஆகவேதான், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் உடனடியாக தொகுதி மறுவரையறையை தொடங்கி, 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் முடிப்பதற்கு பாசிச கும்பல் திட்டமிடுகிறது.
ஆனால், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 82, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு பிறகும் மக்களவையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் என்றும் அது சமீபத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்திருக்கும் என்றும் கூறுகிறது. அதாவது, சட்டப்படி, 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி அத்தரவுகளின் அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள முடியும். இதுவே, பாசிச கும்பலின் நோக்கத்திற்கு தற்போது தடையாக அமைகிறது.
எனவே, தொகுதி மறுவரையறையை எப்போது மேற்கொள்வது, எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்துவது என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்கும்; நாடாளுமன்றத்தில் 50 சதவிகித பெரும்பான்மையின் (Simple majority) அடிப்படையில் இம்முடிவுகளை எடுக்க முடியும் என்ற அடிப்படையில் அரசியலமைப்பின் பிரிவுகள் 81, 82 மற்றும் 170-இல் திருத்தங்களை முன்மொழிந்து மோடி அரசால் கொண்டுவரப்பட்டதே மேற்குறிப்பிட்ட “131-வது அரசமைப்புத் திருத்த மசோதா 2026” ஆகும்.
இதற்காக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டிய மோடி-அமித்ஷா கும்பல் எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியோ அல்லது ஏமாற்றியோ எப்படியேனும் இம்மசோதாக்களை நிறைவேற்றிவிட வேண்டுமென்பதற்காக பல்வேறு சதித்தனங்களில் ஈடுபட்டது. ஆனால், தொகுதி மறுவரையறையால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் தென்மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கை பெரியளவில் குறைக்கப்படும் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இம்மசோதாக்களை தோல்வியுறச் செய்துள்ளன.
எனினும், பாசிச மோடி கும்பல் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தொகுதி மறுவரையறையை நடத்தி முடிக்க பல்வேறு குறுக்கு வழிகளில் சதித்தனமாக தொடர்ந்து முயற்சிக்கும் என்பது எச்சரிக்கைக்கு உரியதாகும்.
மகளிர் இட ஒதுக்கீடு: பாசிஸ்டுகளின் ட்ரோஜன் குதிரை
பாசிச கும்பலின் இந்த அதிகாரக் குவிப்பு சதித்திட்டம் நாடு முழுவதும் விவாதப் பொருளாகிவிடக் கூடாது என்பதாலேயே, அதனை மூடிமறைத்துவிட்டு, மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான மசோதாக்கள் இவை என மிகவும் கவர்ச்சிகரமாக அறிவித்தது மோடி-ஷா கும்பல். ஆனால், செப்டம்பர் 19, 2023 அன்றே, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிட்டது. இம்மசோதாவை வரவேற்று ஆதரித்துதான் எதிர்க்கட்சிகள் வாக்களித்தன.
இந்தச் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டால் ஏற்கெனவே உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 33 சதவிகிதத்தை (அதாவது 180 தொகுதிகளை) பெண்களுக்கு ஒதுக்க வேண்டியிருக்கும் என்பதனாலேயே, அச்சட்டத்தில் புதிதாக 334-ஏ (Article 334A) என்ற பிரிவை வஞ்சகமாகச் சேர்த்தது மோடி-ஷா கும்பல். இப்பிரிவின்படி, 2026-இல் புதிதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்த பிறகே பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆக, இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களில் ஒன்றான தொகுதி மறுவரையறையைச் சட்டப்பூர்வமாக நிறைவேற்றிக் கொள்வதற்கான “ட்ரோஜன் குதிரை”யாகத்தான் மகளிர் இட ஒதுக்கீட்டை கையிலெடுத்தது பா.ஜ.க. கும்பல்.
இதன் அடுத்த கட்டமாகத்தான், ஏப்ரல் 16, 2026 அன்று இரவு, ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் விதிகளை அவசர அவசரமாக அரசிதழில் வெளியிட்டது ஒன்றிய மோடி அரசு. ஒரு சட்டத்தின் விதிகளை முதல் நாள் இரவு அரசிதழில் வெளியிட்டுவிட்டு, அதைக் காரணம் காட்டி அடுத்த நாள் காலை தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தைக் கூட்டும் கேலிக்கூத்து வேறு எங்கும் அரங்கேறியிருக்காது.
முதலைக் கண்ணீரும் ஊடகங்களின் சரணாகதியும்
இம்மசோதாக்களைத் தாக்கல் செய்த போது, 40 ஆண்டுகாலம் கிடப்பில் கிடந்த (மகளிர் இட ஒதுக்கீடு) மசோதாவை நிறைவேற்றுவது தங்கள் கடமை என்று முதலைக் கண்ணீர் வடித்தார் பிரதமர் மோடி. ஏப்ரல் 17-இல் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டவுடன், “உடனடியாகப் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கொண்டுவரப்பட்ட மசோதா நிறைவேற்றப்படாமல் போனதற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் திசைதிருப்பி மோடி கண்ணீர்விட்டு நாடகமாடினார். “எதிர்க்கட்சிகள் பெண்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டன; அவர்களைப் பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று அமித்ஷா சாபம் விட்டார்.
எல்.முருகனோ ஒரு படி மேலே சென்று, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முடக்கவே தி.மு.க. சதி செய்கிறது என்றும் இதற்காகவே தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாடகமாடுகிறது என்றும் பேசினார். பெண்கள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறையைச் சட்டமாக்கும் வஞ்சகத்தை எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தியதால், அவர்களைத் துரோகிகள் என்றும் பெண்களுக்கு எதிரானவர்கள் என்றும் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மோடி ஊடகங்களோ பா.ஜ.க-வின் பொய்களையும் வெறுப்புக் கருத்துக்களையும் செய்திகளாகத் திரும்பத் திரும்ப எதிரொலித்தன. பத்திரிகை அறநெறி விலை பேசப்பட்டு, பெரும்பாலான ஊடகங்கள் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் ஊதுகுழல்களாக மாறிவிட்டன என்பதற்கு மீண்டும் ஒரு நிரூபணமாக இது அமைந்தது.
உண்மையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது தாங்கள்தான் என மார்த்தட்டிக்கொள்ளும் மோடி-அமித்ஷா கும்பல், உலகின் மிகப்பெரிய ‘ஜனநாயக’க் குடியரசில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவில்லை. 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகு அமல்படுத்துவோம் என்று கூறியது. தற்போது, 131-வது அரசமைப்பு திருத்த மசோதா எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டதால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாமல் போய்விட்டது என்பார்கள். இப்படியே தள்ளிப்போட்டுக் கொண்டே செல்வார்கள். ஏனெனில், இப்பாசிச காவி கும்பலின் பார்ப்பனிய சித்தாந்தம் ஜனநாயக விரோதமானதும் பெண்களுக்கு முற்றிலும் எதிரானதுமாகும். இந்த ஊரறிந்த உண்மையை மூடிமறைத்துக் கொண்டுதான் முற்போக்கு அரிதாரம் பூசிக்கொண்டு எதிர்க்கட்சிகளைக் குற்றஞ்சாட்டி வருகிறது இக்கும்பல்.
மேலும், தேர்தல் சூழலில் பெண்களை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் திருப்புவதன் மூலம், மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பது, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தனது பாசிச அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொள்வது என்ற நோக்கிலும் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.
தொடரும் தொகுதி மறுவரையறை அபாயமும் எதிர்க்கட்சிகளின் குறுகிய கண்ணோட்டமும்
ஏப்ரல் 17 அன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களை தோல்வியடையச் செய்தது, ஒரு தற்காலிக வெற்றியே ஆகும். ஏனெனில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் பொழுது மக்கள்தொகை அதிகமாக உள்ள, பாசிச கும்பலுக்கு மக்கள் அடித்தளம் இருக்கின்ற உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்குரிய மக்களவை எண்ணிக்கையைக் குறைக்கும். குறைவான மக்கள்தொகையைக் கொண்ட வடகிழக்கு மாநிலங்களை வஞ்சிக்கும். இம்மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் குரலும் ஒடுக்கப்படும்.
மேலும், பாசிஸ்டுகள் தங்களுடைய மக்கள் அடித்தளத்தை விரிவுபடுத்துவதற்கேற்ப இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டும் வகையிலும், சாதி-மத முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் வகையிலும் தொகுதிகளை பாசிசமயப்படுத்தும் அபாயமும் இதில் அடங்கியுள்ளது. அசாம் மற்றும் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொகுதி மறுவரையறையே இதற்கான சான்று. எனவேதான், இத்தொகுதி மறுவரையறை நடவடிக்கையை இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களில் ஒன்று என்று கூறுகிறோம்.
தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
ஆனால், தொகுதி மறுவரையறையை பாசிஸ்டுகளின் நோக்கத்திலிருந்து ஆராயாமல், குறுகிய கண்ணோட்டத்தில் எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன. ஏனெனில், காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் மையப்படுத்தப்பட்ட இந்தியா என்ற கருத்தியலை ஏற்றுக் கொண்டவை. இவர்களும் அதிகாரத்தை மையத்தில் குவித்துக்கொள்ளவே செய்தார்கள் என்பதே கடந்த கால வரலாறு. அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்தி மாநிலங்களின் கொஞ்சநஞ்ச உரிமையையும் பறித்துக் கொண்டவர்கள்.
மேலும், அம்பானி-அதானி-அகர்வால் வகையறா ஆளும் வர்க்கக் கும்பல்களின் கொள்ளைக்கான பாசிச சர்வாதிகாரத்தை நிறுவத் துடிக்கிறது பா.ஜ.க. கும்பல். பாசிச எதிர்ப்பு பேசுகிற எதிர்க்கட்சிகளுக்கும் இந்த ஆளும் வர்க்கங்களுக்கும், இதர உள்நாட்டு முதலாளிகளுக்கும் சேவை செய்வதே நோக்கமாகும். இந்த ஆளும் வர்க்கச் சார்பும் குறுகிய கண்ணோட்டமும் இந்திய தேசியவாதமுமே பாசிஸ்டுகளுக்கு எதிரான சரியான திட்டத்தை முன்வைப்பதில் தடையாக இருக்கின்றன. எனவேதான், சந்தர்ப்பவாத குறுக்குவழியில் தொகுதி மறுவரையறையை முறியடிக்க எத்தனிக்கின்றன.
எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, தொகுதி மறுவரையறையைக் காலவரையறையின்றி தள்ளிப்போடுதல், அதாவது 2026-க்குப் பிறகு நடக்கவுள்ள தொகுதி மறுவரையறையை மேலும் சில பத்தாண்டுகளுக்கு (எடுத்துக்காட்டாக 2050 வரை) முடக்கி வைக்க வேண்டும் என்பதே பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் முதல் கோரிக்கையாக உள்ளது. இரண்டாவதாக, நிதி ஒதுக்கீட்டில் பேரம் பேசுதல், அதாவது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் நாடாளுமன்றத் தொகுதிகளை இழந்தால், அதற்கு இழப்பீடாக ஒன்றிய அரசின் வரியில் அதிகப் பங்கைத் தர வேண்டும் என்ற வாதத்தை மாநிலக் கட்சிகள் முன்வைக்கின்றன. மூன்றாவதாக, மக்கள்தொகை மட்டுமல்லாது, பரப்பளவு, மேம்பாட்டு நிலை போன்ற பிற காரணிகளையும் கருத்தில் கொண்டு தொகுதிகளைச் சீரமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. இந்தத் தீர்வுகள் எதுவும், மாநில உரிமைகளை நிலைநாட்டவோ அல்லது தொகுதி மறுவரையறையைத் தடுத்து நிறுத்தவோ செய்யாது. மாறாக இத்தீர்வுகள், இந்துராஷ்டிரத்தை உருவாக்கத் துடிக்கிற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் தொகுதி வரையறைக்கான ஒரு அங்கீகாரமாகவே அமையும்.
எதிர்க்கட்சிகள் பாசிச எதிர்ப்பு மாற்று சித்தாந்தம் – திட்டமின்றி பா.ஜ.க-வை எதிர்ப்பதால், இத்தகைய இந்துராஷ்டிர அடிக்கட்டுமான சட்டத்திட்டங்களுக்கு எதிராக மாற்று திட்டத்தை முன்வைக்க முடியாமல் பாசிச கும்பலின் திட்டத்திற்கே பலியாகின்றன.
மக்கள்தொகை என்கிற ஒற்றை அளவுகோலும் போலி கூட்டாட்சியும்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றப் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கு மக்கள்தொகை என்பதை மட்டுமே ஒற்றை அளவுகோலாக நிர்ணயித்திருக்கிறது. ஆனால், இந்தியா என்பது பல்வேறு மொழி, பண்பாடு மற்றும் மாறுபட்ட சமூக-அரசியல்-பொருளாதாரப் பின்னணிகளைக் கொண்ட தேசிய இனங்கள் வாழும் நாடாகும். இத்தகைய சூழலில், அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு மக்கள்தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொள்வது அநீதியானது. இது சிறிய தேசிய இனங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறித்து, அவர்களின் குரல்வளையை ஒடுக்கும் செயலாகும்.
இந்த 70 ஆண்டுகால போலி சுதந்திர இந்தியாவில் இதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்கள் தென்மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீரை ஆதிக்கம் செய்து கொண்டிருக்கின்றன. இம்மாநிலங்களின் உரிமைகளையும் அடையாளங்களையும் காலில் போட்டு மிதிக்கின்றன. உரிமைப் பறிப்பும் அடையாள ஒழிப்பும் ‘ஜனநாயகத்தின்’ பெயரால் நடந்து கொண்டிருக்கிறது.
உண்மையில், தற்போது நடைமுறையிலுள்ள மாநிலங்களின் கூட்டாட்சி என்பது சுயாட்சி அதிகாரம் கொண்ட மாநிலங்களின் கூட்டாட்சியாக இல்லை. இங்கு மாநிலங்களுக்கு எந்த உரிமையும் அதிகாரமும் இல்லை. ஒன்றிய அரசு அமல்படுத்துகின்ற அனைத்தையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கிறது. மாநிலங்கள் தாங்கள் வசூலிக்கும் வரிப்பணத்தை ஒன்றிய அரசிடம் கொடுத்துவிட்டு, பேரிடர் நிவாரணத்திற்கும் மக்கள் நலத்திட்டங்களுக்கும் நிதியைக் கெஞ்சிப் பெற வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. மாநிலங்கள் தேசிய இனங்களின் சுயாட்சிக் கூடாரங்களாக இல்லாமல், ஒன்றிய அரசின் வெறும் நிர்வாக அலகுகளாகவே மாற்றப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொன்னால், இந்தியா தேசிய இனங்களின் சிறைச்சாலையாகத் திகழ்கிறது.
காலத்தின் கட்டாயம்
தற்போதைய தொகுதி மறுவரையறை என்பது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் தனது அதிகாரத்தை நிரந்தரமாக நிலைநாட்டிக்கொள்ள மேற்கொள்ளும் ஒரு பாசிச முயற்சியாகும். இதை முறியடிக்க, வெறும் எண்ணிக்கையை வைத்து நடக்கும் பேரங்களுக்குள் நாம் சுருங்கிவிடக் கூடாது. “இந்தியா என்பது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு” என்ற வரலாற்று உண்மையைச் சமரசமின்றி நிலைநாட்ட வேண்டும்.
பொருளாதாரம், வரி வசூல், இயற்கை வளங்கள், கல்வி மற்றும் மொழி ஆகியவற்றின் மீதான முழுக் கட்டுப்பாடும் அந்தந்த தேசிய இனங்களிடமே இருக்க வேண்டும். கூட்டாட்சி அரசுக்கு வெளியுறவு, பாதுகாப்பு போன்ற மிகச் சில துறைகள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். இதுவே உண்மையான மாநிலக் கூட்டாட்சியாகும்,.
பா.ஜ.க-வின் தீவிரமான ஒற்றைமயமாக்கல் திட்டத்தை எதிர்க்கட்சிகளின் சீர்திருத்தவாதக் கோரிக்கைகளால் முறியடிக்கவே முடியாது. அதிகாரத்தை டெல்லியிலிருந்து உழைக்கும் மக்களிடமும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களிடமும் பரவலாக்கும் ஒரு புதிய அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
மக்கள்தொகை அடிப்படையிலும், வெறும் புவியியல் எல்லைகளை வைத்தும் தொகுதிகளைப் பிரிக்கும் தற்போதைய தேர்தல் முறைக்குப் பதிலாக, தொழிற்சாலைகள், விவசாயப் பகுதிகள் ஆகிய உற்பத்தித் தளங்களை அடிப்படையாகக் கொண்டு மக்கள் அதிகார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த மையங்களுக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், தவறிழைக்கும் பட்சத்தில் அவர்களைத் திரும்பி அழைக்கவும் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
கீழிருந்து மேல் என்ற வகையில் மாநிலங்களுக்கும் ஒன்றியத்திற்கும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தற்போது நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் இருப்பது போல, மக்கள் பிரதிநிதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மக்களவையும், தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய இனங்களுக்கான பிரதிநிதித்துவ அவையும் அமைக்கப்பட வேண்டும். அதேசமயம், தேசிய இனங்களுக்கு பிரிந்து செல்லக்கூடிய உரிமையுள்ள சுயநிர்ணய உரிமையும் வழங்கப்பட வேண்டும்.
இத்தகைய தேசிய இனங்களின் கூட்டாட்சி அரசாக விளங்கக்கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசிற்காகப் போராடுவதன் மூலமே தேசிய இனங்கள் மற்றும் மாநில உரிமைகளை நிலைநாட்ட முடியும். அதற்கான போராட்டத்தைக் கட்டியெழுப்புவதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
காலம்காலமாகச் சமூகத்தில் கலை மக்களிடையே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. திரைப்படம், பாடல்கள், நாடகங்கள் போன்ற வடிவங்கள் மக்கள் மனதில் ஆழமான பாதிப்பை உண்டாக்குகின்றன. அந்த வகையில், சமீபத்தில் ஓடிடி தளம் ஒன்றில், “சிரையா” (Chiraiya) எனும் தொடர் வெளியாகி சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது.
இத்தொடர் இந்தியச் சமூகத்தில் பெண்களின் இழிநிலையை, குறிப்பாகத் திருமணமான பெண்களின் எதார்த்த நிலையை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. குறிப்பாக, திருமண உறவில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகளை (Marital Rape) பற்றி இத்தொடர் தெளிவாகக் காட்சிப்படுத்துகிறது.
இத்தொடரின் கதைக்களம் படித்த நடுத்தர வர்க்கக் கூட்டுக்குடும்பத்தின் பின்னணியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கனவுகளோடு இக்குடும்பத்திற்குள் மருமகளாக அடியெடுத்து வைக்கிறாள் கதையின் நாயகி பூஜா. பால் புதுமையினர் (LGBTQ+) உரிமைக்காகப் போராடும், முற்போக்குச் சிந்தனைகளையும் பேசும் ஒரு நவீனப் பெண்ணாக பூஜா இருக்கிறார்.
ஆனால், திருமணமான அன்றே கணவனால் உடலுறவிற்கு வற்புறுத்தப்படுகிறாள். இதை அவள் எதிர்த்துக் கேள்வி எழுப்பும்போது, “நான் உன் கணவன், உன் உடலின் மீது எனக்கு எல்லா உரிமையும் உண்டு” என்று ஆணாதிக்கத் திமிருடன் பதில் கூறுகிறான் அவளது கணவன். பெரும்பான்மையான இந்தியப் பெண்கள் ‘முதல் இரவு’ என்ற பெயரில் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைக்கு பூஜாவும் இரையாக்கப்படுகிறாள்.
தனக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியைச் சகித்துக்கொள்ள முடியாமல் பூஜா, தன் பெற்றோரைச் சந்தித்துத் தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூறி அழுகிறாள். ஆனால், “உன் கணவனுக்குத்தான் அந்த உரிமை எல்லாம் உள்ளது; உன்னைக் கட்டிக்கொடுத்து விட்டோம், அதோடு எங்கள் கடமை முடிந்தது” என்று கூறி அவளது பெற்றோர் பொறுப்பற்றுக் கைகழுவுகின்றனர்.
வேறு வழியின்றி இக்கொடுமை குறித்துத் தன் புகுந்த வீட்டிலிருக்கும் மூத்த மருமகள் கமலேஷிடம் தெரிவிக்கிறாள் பூஜா. ஆனால், அதைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைவதற்குப் பதிலாக, கமலேஷ் பூஜாவை ஓங்கி அறைகிறாள். கணவன்-மனைவிக்குள் அறைக்குள் நடப்பதை வெளியில் சொல்வது ஒரு கேவலமான செயல் என்று கூறி, பாதிக்கப்பட்ட பூஜாவின் மீதே குடும்பக் கௌரவத்தைக் கெடுப்பவள் என்ற முத்திரையைக் குத்துகிறாள்.
பெற்றோர், புகுந்த வீடு என எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் நிறுத்தப்படுகிறாள் பூஜா. பலமுறை அவள் மறுப்பு தெரிவித்தும், அவளது விருப்பமின்றி உடலுறவில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுகிறாள்; தொடர்ச்சியாக மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள். இந்த நரகத்திலிருந்து தப்பிக்க என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் பூஜா, ஒருகட்டத்தில் கணவனின் அத்துமீறலைத் தவிர்க்க தனக்கு “மாதவிடாய்” என்று பொய் கூறுகிறாள். ஆனால், அந்த மிருகத்தனமான கணவனோ, அவளது சொல்லை நம்பாமல் அதை நிரூபித்துக் காட்டச் சொல்லி வற்புறுத்துகிறான்.
அந்த நெஞ்சை உலுக்கும் கணத்தில், வேறு வழியே இல்லாத பூஜா, தன் பிறப்புறுப்பைத் தானே பிளேடால் காயப்படுத்திக்கொண்டு தனக்கு மாதவிடாய் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறாள். பார்ப்போரின் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இக்காட்சி, இந்தியக் குடும்பக் கட்டமைப்புக்குள் பெண்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரத்தின் உச்சக்கட்ட சாட்சியாக நெஞ்சில் தைக்கிறது.
இதனைத் தொடர்ந்து, இப்பிரச்சனையின் ஆழத்தை உணர்ந்துகொள்ளும் மூத்த மருமகள் கமலேஷ், தன் பிற்போக்குச் சிந்தனைகளை உடைத்து பூஜாவிற்கு உறுதுணையாக நிற்க முடிவு செய்கிறார். முதலில் குடும்பத் தலைவரான மாமனாரிடம் இதுகுறித்து முறையிடுகிறார். ஆனால், அதுவரை ‘அன்பான மாமனாராக’ இருந்தவர், சட்டென்று தன் குடும்பத்தின் ஆதிக்க அதிகாரத்தைக் கையில் எடுக்கிறார்.
தன்னை ஒரு பெரும் இலக்கியவாதியாகவும், மேடைகளில் முற்போக்கான கருத்துகளைப் பேசுபவராகவும் காட்டிக்கொண்ட மாமனாரின் உண்மையான கொடூர முகம் அப்போதுதான் வெளிப்படுகிறது. கமலேஷை மிரட்டுவது, அவளைக் குடும்பத்தை விட்டுப் பிரிப்பதாக அச்சுறுத்துவது, பூஜாவின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களைக் கொண்டு பூஜாவிற்கு உளவியல் ரீதியான அழுத்தங்களைத் தருவது என அனைத்துச் சூழ்ச்சிகளையும் அவரே முன்னின்று நடத்துகிறார்.
இதற்கிடையில், பூஜாவும் கமலேஷும் நீதியைத் தேடிப் பயணிக்கின்றனர். நேர்மையாகப் போராடி தங்களுக்கான நீதியைப் பெற வேண்டும் என்று அவர்கள் அலைந்தபோதும், சட்டம் அவர்களிடம் கைவிரிக்கிறது. இந்தியச் சட்ட அமைப்பில் திருமண உறவிற்குள்ளான பாலியல் வன்கொடுமைகள் குற்றமென்றே அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டமும் பாசிச மோடி அரசு கொண்டுவந்த பி.என்.எஸ். சட்டமும் கணவன் தன் மனைவியைக் கட்டாய உடலுறவிற்கு வற்புறுத்துவதை ஏற்றுக்கொள்கிறது. அதாவது, திருமண பந்தத்திற்குள் நடக்கும் இத்தகைய பாலியல் அத்துமீறல்களை இச்சட்டம் சட்டப்பூர்வமாகச் சரி என்று கூறி, பெண்ணை ஒடுக்கும் முழு அதிகாரத்தையும் கணவனிடமே ஒப்படைக்கிறது.
சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் திருமண உறவில் நடைபெறும் பாலியல் வன்முறை தொடர்பாக நடந்த வழக்கில், பாசிச மோடி அரசு “மேலைநாடுகளைப் போல திருமண வன்புணர்வை இந்தியாவில் குற்றமாக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அது திருமண உறவுகளைச் சிதைத்துவிடும். கணவன்மார்கள் மீது தவறான வழக்குகள் பதியப்பட வாய்ப்புள்ளது” என்று வாதாடியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், பெண்கள் மீது இந்த ஆணாதிக்கக் கட்டமைப்பு தொடுக்கும் வன்முறையைச் சட்டத்தின் பெயரால் அரசு பாதுகாக்கிறது.
மேலும், மனுஸ்மிருதியின் அடிப்படையில் ஓர் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பல்லாண்டுகளாக முயன்று வரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல், திருமணம் புனிதமானது என்ற போர்வையில் இந்த ஒடுக்குமுறையைத் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கிறது. “திருமண உறவில் கணவனுக்கு அடிபணிவதே மனைவியின் பிரதான கடமை” போன்ற பிற்போக்குத்தனமான கருத்துகளை மக்களிடையே பிரச்சாரம் செய்து, அதைச் சட்டப்பூர்வமாக நிலைநிறுத்துவதற்கே பாசிச கும்பல் வேலை செய்து வருகிறது.
இப்படிச் சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கும் ஒரு தீவிரமான பிரச்சினைக்கு, முற்போக்காகப் பேசும் இத்தொடர் கூறும் தீர்வு என்னவாக இருக்கிறது?
“தவறான பாதையில் செல்லும் ஓர் ஆணைக் குடும்பத்தால் மட்டுமே திருத்த முடியும்” என்று கூறி, சமூகம் முழுவதும் நிரம்பி வழியும் இப்பிரச்சனையை ஒரு தனிநபர் சார்ந்த பிரச்சனையாக மட்டுமே இத்தொடர் கையாண்டு முடிகிறது. ஒரு பிரச்சனையை எதார்த்த நிலையில் இத்தனைத் தெளிவாக விளக்கிய ஒரு தொடரால், ஏன் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு முற்போக்கான தீர்வை முன்வைக்க முடியவில்லை?
ஏனெனில், ஒட்டுமொத்த இந்தியச் சமூகமும் ஜனநாயகமற்று உள்ளது. இந்த ஜனநாயகமற்ற சமூக அமைப்பை இதே நிலையில் தக்கவைத்துக் கொள்வதற்காகப் பல்வேறு வடிவங்களை பார்ப்பனியம் உருவாக்கி வைத்துள்ளது. இவை, பெண்களை ஒருபோதும் சுதந்திரமான தனிநபராக அடையாளப்படுத்துவதில்லை. அவர்கள் வாழ்வின் எல்லாக் கட்டத்திலும் ஏதோ ஓர் ஆணைச் சார்ந்துதான் வாழ வேண்டும் என்றே சமூகத்தால் கட்டமைக்கப்படுகிறது.
பெண்ணை ஒரு போகப் பொருளாகப் பார்ப்பதும், அவளுக்கென்று தனி உரிமைகள் இல்லை எனக் கருதுவதும், அவள் தன் கணவனுக்கு அடிபணிந்தே கிடக்க வேண்டும் என்ற பிற்போக்கான, மடத்தனமான மனுஸ்மிருதி சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
கம்யூனிச ஆசான் ஏங்கல்ஸ், “திருமணம் என்பது ஓர் ஆணின் அதிகாரத்தையும் சொத்துகளையும் வரம்பின்றி ஆள்வதற்கான உரிமைகளை வழங்குவதற்காக, அவனால் உருவாக்கப்பட்ட ஒரு வர்க்கக் கட்டமைப்பு” என்று கூறுகிறார். இந்தியாவில் திருமணம் என்பது ஒரு பெண்ணின் உடல், மனம் என அவளது மொத்த உரிமைகளையும் கணவனின் கையில் ஒப்படைத்து, அடிப்படை உரிமைகளற்ற ஓர் அடிமையாக மனைவியை மாற்றுவதாக உள்ளது.
இப்பிரச்சினையின் பின்னணியில் பல்லாயிரம் ஆண்டுகாலமாக வளர்ந்து, சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கும் ஒரு வரலாற்று – சித்தாந்தப் பின்னணி உள்ளது. திருமணத்திற்குள்ளான பாலியல் வன்கொடுமை என்பது பூஜா என்ற தனிநபர் மட்டும் சந்திக்கும் பிரச்சினை அல்ல; இந்தியச் சமூகத்தில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் அன்றாடம் சந்திக்கும், நாம் சாதாரணமாகக் கடந்து போகும் ஒரு வன்முறை. ஒரு பெண்ணின் உடல் மீதான அதிகாரத்தையும் அவளின் உரிமையையும் இச்சமூகம் வரலாற்றுப் போக்கில் திட்டமிட்டுப் பறித்துள்ளது. பார்ப்பனிய ஊடுருவலைத் தொடர்ந்து, மனுஸ்மிருதி அடிப்படையிலான ஒரு சமூகத்தைக் கட்டியமைக்கப் பிற்போக்குச் சக்திகள் தொடர்ந்து போராடி வருகின்றன. பெண் தன் வாழ்வின் எல்லாக் கட்டத்திலும் ஓர் ஆணை (தன் தந்தையையோ, கணவனையோ, அல்லது மகனையோ) சார்ந்துதான் இருக்க வேண்டும்; கல்வியோ, வேலையோ அந்தப் பெண்ணைத் தனித்து இயங்க வைக்கக் கூடாது; ஆணுக்கு அடிபணிந்து சேவை செய்வதுதான் அவளது வாழ்வின் தலையாய கடமை என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய இருண்ட நிலையிலிருந்து, இன்று பெண்கள் அடிப்படை கல்வியைப் பெறுவதற்கும், பெற்ற கல்வியைக் கொண்டு வேலை செய்வதற்கும் பல போராட்டங்களைக் கடந்துதான் வீட்டிலிருந்து ஒவ்வொரு படியாக வெளியே வந்துள்ளனர். அப்படி வெளியில் வரும் பெண்கள் அன்றாடம் வீட்டிலும், வெளி இடங்களிலும் பல அநீதிகளைச் சந்திக்கின்றனர். பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகளைப் பற்றிப் பேசுவதற்கே இங்குச் சில நூறு ஆண்டுகள் ஆகியுள்ளன. இந்தச் சூழலில்தான் சிரையா தொடர், பெண் தன் குடும்பத்திற்குள் சந்திக்கும் வன்முறையை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
ஆனால், இந்த முதலாளித்துவ சமூக அமைப்பிற்குள் உருவாக்கப்படும் ஒரு தொடரின் அல்லது ஒரு திரைப்படத்தின் வரம்பு மிகவும் குறுகலானது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் பிடியில் பார்ப்பனியப் பிற்போக்குக் கலாச்சாரம் சமூகத்தில் தீவிரமாகத் திணிக்கப்பட்டு வரும் இவ்வேளையில், சமூகப் பிரச்சினைகளைத் தெளிவாக விளக்கினாலும், அதற்கான தீர்வை இதே பிற்போக்கான சமூகக் கட்டமைப்புக்குள்ளேயே தேடும் முரண்பாடுதான் நீடிக்கிறது.
இப்படி ஜனநாயகமற்ற, சுரண்டல் வடிவமாகவே இருக்கும் இச்சமூகக் கட்டமைப்பிற்குள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தேடுவது முற்றிலும் அர்த்தமற்றது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக, பிற்போக்கான பார்ப்பனியக் கலாச்சாரத்திற்கும் அதன் சித்தாந்தத்திற்கும் மாற்றாக ஒரு முற்போக்குச் சித்தாந்தம் குறித்த பரந்து விரிந்த விவாதங்கள் எழ வேண்டும். நமது வரலாறு நெடுகிலும் பார்ப்பனிய எதிர்ப்பு மற்றும் சமத்துவக் கூறுகள் இருந்து வந்துள்ளன. எனவே, ஜனநாயகத்தை நேசிக்கும், சமத்துவத்தை விரும்பும் ஒவ்வொருவரும் ஒரு மாற்றுப் பண்பாட்டைப் படைக்கும் பணியில் ஈடுபடும் போதுதான், இது போன்ற பாலியல் ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு நிரந்தரமான தீர்வைக் கண்டறிய முடியும்.
கடந்த பத்தாண்டுகளாக அசாம் மாநிலத்தை ஆட்சி செய்துவந்த பாசிச பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையான அசாமில் இஸ்லாமிய, கிறித்தவ சிறுபான்மையினரும், உழைக்கும் மக்களும் மிகக் கடுமையான பாசிச ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். திட்டமிடப்பட்ட இன, மத வெறுப்புப் பிரச்சாரங்களின் மூலம் அம்மாநில மக்கள் பிளவுபடுத்தப்பட்டுள்ளனர். அசாம் இஸ்லாமிய மக்கள் ஓர் இனப்படுகொலையின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழலில் கடந்த இரண்டு முறையும் கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைத்த பா.ஜ.க., இந்தத் தேர்தலில் 82 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இருப்பது, ஒட்டுமொத்த அசாம் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள பெரும் சவாலாகும்.
பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் அசாம் மக்களின் அவலநிலை
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம், ஆண்டுதோறும் வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாகும். மே முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை ஒருபுறமிருக்க, கிழக்கு அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச அணைக்கட்டுகளில் இருந்து முன்னறிவிப்பின்றித் திறந்துவிடப்படும் உபரி நீர், பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திப் பேரழிவை விளைவிக்கிறது. கடந்த 2025 ஜூன் மாத வெள்ளத்தில் மட்டும் 22 மாவட்டங்களைச் சேர்ந்த 5.15 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, இந்த பேரிடர்களால் அசாமின் ஏழை எளிய மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிப் பயிர்கள் நாசமாவதுடன், வீடுகள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. இதன் விளைவாக, ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த மாநிலத்திற்குள்ளேயே ‘உள்நாட்டு அகதிகளாக’ மாறுகின்றனர். இத்தகைய தொடர் பேரழிவுகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கோ அல்லது இடப்பெயர்வுக்கு உள்ளானவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ ஒன்றிய-மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக, ‘வெள்ள ஜிகாத்’ எனும் பெயரில் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை காவிக் கும்பல் முன்னெடுக்கிறது. அரசின் அலட்சியத்தால் முறையாகப் பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்த மதகுகளை, இஸ்லாமியர்கள் குண்டு வைத்து தகர்த்துவிட்டதாகப் பொய்க் குற்றஞ்சாட்டு சுமத்தி, கைது செய்து அவர்களை சிறையிலடைக்கிறது பாசிச பா.ஜ.க. அரசு.
விவசாய நிலங்கள் அழிப்பு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக, அசாம் இளைஞர்கள் வாழ்வாதாரம் தேடி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கும், குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களுக்கும் புலம்பெயர்கின்றனர். அங்கு மிக மோசமான பணிச்சூழலில், அற்பக் கூலிக்கு அவர்கள் சுரண்டப்படுகின்றனர். செப்டம்பர் 2025 முதல் பிப்ரவரி 2026 வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் 162 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அசாம் அரசு கூறுகிறது. உண்மை எண்ணிக்கை இதைவிடப் பலமடங்கு அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
இதேபோல், இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தியில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்களிப்பை அசாம் வழங்குகிறது. சுமார் 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்துறையை நம்பியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள். அட்டை பூச்சிகளாலும் முதலாளிகளின் இலாபவெறியாலும் தினந்தோறும் இரத்தம் உறிஞ்சப்படும் இத்தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 – 250 என்ற மிகச் சொற்பக் கூலியே வழங்கப்படுகிறது. வறுமையின் காரணமாகப் பெண் குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் தோட்ட வேலைக்குச் செல்லும் அவலநிலை நீடிக்கிறது. நாளொன்றுக்கான கூலியை ரூ.351 ஆக உயர்த்துவது, நிலப்பட்டா வழங்குவது போன்ற இத்தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பாசிச பா.ஜ.க. அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
முக்கியமாக, அசாமில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்காக, சிறுபான்மையினரின் வீடுகள் இடிக்கப்பட்டு நிலங்கள் அபகரிக்கப்படுவது தீவிரமடைந்துள்ளது. 2025 ஜூலையில் அதானியின் 3,400 மெகாவாட் அனல்மின் நிலையத் திட்டத்திற்காக துப்ரி மற்றும் கோல்பாரா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் தரைமட்டமாக்கப்பட்டன. ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்ற பெயரில் வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தாக்குதல்கள், அவர்களை நிலமற்றவர்களாக மாற்றுகின்றன. “தி நியூ ஹியூமனிடேரியன்” (The New Humanitarian) அறிக்கையின்படி, மே 2021 முதல் ஜனவரி 2026 வரை 22,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அரசு இடித்துத் தள்ளியுள்ளது. வீடுகளை இடிப்பதற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடும் இஸ்லாமிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்வது அசாமில் புதிய இயல்புநிலையாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாசிச தாக்குதல்களால் அம்மாநிலத்தில் ஏற்கெனவே வறிய நிலையில் வாழ்ந்துவரும் வங்கமொழி பேசும் இஸ்லாமிய மக்களின் வாழ்நிலை மேலும் மோசமடைந்து அகதிகளாக மாற்றப்படுகின்றனர்.
மேலும், அசாமின் பூர்வீகப் பழங்குடியின மக்களின் நிலங்களும் ‘வளர்ச்சி’ என்ற போர்வையில் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. அதானி, அம்பானி மற்றும் பாபா ராம்தேவ் ஆகிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சுமார் 40,000 பிகா (7.5 பிகா என்பது 1 ஹெக்டேருக்குச் சமம்) நிலங்கள் தாரைவார்க்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், திமா ஹசாவோ மாவட்டத்தில் 3,000 பிகா நிலத்தை மகாபால் சிமெண்ட் நிறுவனத்திற்கு அரசு வழங்கியதைக் கௌஹாத்தி உயர்நீதிமன்றமே கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அசாமில் கர்பி ஆங்லாங், போடோலாந்து, திமா ஹசாவோ போன்ற பழங்குடியின மக்கள் வாழும் தன்னாட்சிப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் பழங்குடி மக்களின் கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலிருந்து பழங்குடியினர் அல்லாத இந்தி மொழி பேசும் மக்கள் குடியேறி வணிகங்களை நடத்தி வருகின்றனர். 1970-களுக்குப் பிறகு அப்பகுதியில் குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்று அம்மக்கள் கோரிக்கை வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பா.ஜ.க. அரசு அப்போராட்டங்களை போலீசு மூலம் கொடூரமாக ஒடுக்குகிறது.
இனப்படுகொலையின் விளிம்பில் இஸ்லாமிய மக்கள்
இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் அதிக சதவிகிதத்தில் (38 – 40 சதவிகிதம்) வாழும் மாநிலங்களில் அசாம் முதன்மையானது. இவர்களில் பெரும்பான்மையானோர் வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்து வந்த இஸ்லாமிய மக்கள் ஆவர். வங்கப் பிரிவினை, மதக்கலவரங்கள், பிரம்மபுத்திரா நதிப்படுகையில் விவசாயம் செய்வதற்காக ஆங்கிலேய அரசு மேற்கொண்ட குடியேற்றம் என பல்வேறு காலகட்டங்களில் வங்கதேச மக்கள் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடிபெயர்ந்தனர்.
இம்மக்கள் மீதான வெறுப்பானது அசாம் மக்களிடையே விதைக்கப்பட்டிருந்தது. 1979-1985 காலகட்டத்தில் நடைபெற்ற அசாம் போராட்டம் என்பது அடிப்படையில் அசாமியர்களுக்கும் வங்காளிகளுக்கும் (இந்து இஸ்லாமியர்களை உள்ளடக்கிய வங்காளிகள்) இடையிலான மொழி மற்றும் இனப் போராட்டமாகும்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல், வங்காள இந்து மக்களை தனது அடித்தளமாக்கிக் கொள்வதற்கும், இஸ்லாமிய மக்களை எதிரியாகச் சித்தரித்து மத முனைவாக்கம் செய்வதற்கும் இந்த உள்ளூர் இன முரண்பாட்டைத் மத முரண்பாடாக மாற்றியது. இந்த மத வெறுப்பானது பல தலைமுறைகளாக அசாமிலேயே பிறந்து விவசாயம் செய்து வாழ்கின்ற இந்திய இஸ்லாமிய மக்கள் மீது கட்டமைக்கப்படுகிறது.
இந்நிலையில், அசாமில் வசிக்கும் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்கள் மீதும் பாசிச பயங்கரவாதத்தை நிறுவனமயப்படுத்திய நடவடிக்கைதான் அசாமில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகும்.
குறிப்பாக, அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டு 2019-இல் அதன் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 19 இலட்சம் மக்கள் “வெளிநாட்டினர்” என்று முத்திரைக் குத்தப்பட்டு நீக்கப்பட்டிருந்தனர். இவர்களில் கணிசமானோர் வங்க மொழி பேசும் இஸ்லாமியர்கள். இம்மக்களில் பலர் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வெளிநாட்டு தீர்ப்பாயங்களில் வழக்கு நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவ்வழக்குகளில் வெளிநாட்டினர் என்று தீர்ப்பு வழங்கியும், வழக்கு நிலுவையில் உள்ள போதிலும், அம்மக்களை கைது செய்து தடுப்பு முகாம்களில் (Detention camps) அடைத்து சித்திரவதை செய்து படுகொலை செய்து வருகிறது பாசிச அசாம் அரசு.
இதற்காக, 3,000 பேரை அடைத்து வைக்கக்கூடிய வகையிலான நாட்டிலேயே மிகப்பெரிய “மத்தியா தடுப்பு முகாம்”-ஐ (Matia detention camp) கடந்த 2021-ஆம் ஆண்டில் அசாம் அரசு செயல்பாட்டுக்கு கொண்டுவந்தது. இம்முகாமில் நோயுற்ற இஸ்லாமியர்களுக்கு சிகிச்சையளிக்க மறுத்து படுகொலை செய்கிறது. குடும்பத்தினரை பிரித்து அடைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கி வருகிறது. இம்முகாம்களில் மிக மோசமான, சுகாதாரமற்ற நிலையில் அடைத்து வைக்கப்படுவதாலும், விலங்குகள் உண்பதற்குக் கூட தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாலும் மக்கள் எளிதில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகின்றனர். ஜெர்மனியில் ஹிட்லரின் வதைமுகாம்களை போல இத்தடுப்பு முகாம்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
அசாமில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் பெண்கள்.
மறுபுறத்தில், வங்க மொழி பேசும் இஸ்லாமிய மக்கள் சட்டவிரோதமாக அசாமின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்கள் என்று கூறி, அவர்களின் வீடுகளையும் மசூதிகளையும் புல்டோசர் மூலம் இடித்து, அம்மக்களை தற்காலிக தங்குமிட முகாம்களுக்கு (Makeshift Shelter Camps) விரட்டியடித்துக் கொண்டிருக்கிறது அசாம் பா.ஜ.க. அரசு. நீல நிற தார்ப்பாயால் குடிசைகள் அமைக்கப்பட்ட, எந்த அடிப்படை வசதிகளுமற்ற இம்முகாம்களில் இம்மக்கள் இறுத்தப்படுகின்றனர்.
அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா முதலமைச்சராக பதவியேற்ற 2021, மே மாதத்திலிருந்து 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலத்திலிருந்து 50,000 மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த புல்டோசர் பயங்கரவாதத்தின் மூலம் வங்க மொழி பேசும் இஸ்லாமிய மக்களை மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அடைத்து, எந்த உரிமைகளுமற்ற இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
மேலும், காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு “ஆபரேஷன் புஷ்பேக்” எனும் பாசிச நடவடிக்கையை தீவிரப்படுத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களை திடீரென கைது செய்து சட்டவிரோதமாக வங்கதேசத்திற்குள் விரட்டியடித்து வருகிறது. அசாம் புவியியல் ரீதியாக வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்திருப்பதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, வங்கதேச இஸ்லாமியர்கள் மீது ‘சட்டவிரோதக் குடியேறியர்கள்’, ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ போன்ற இந்துமத – தேசியவெறியை தூண்டிவிடுகிறது.
இந்நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து மக்களின் வாக்குகளை கவர்ந்து வெற்றி பெறுவதற்காக இஸ்லாமிய பீதியூட்டி, இந்துமத-தேசவெறியை தூண்டிவிடும் பிரச்சாரங்கள், நடவடிக்கைகளை பா.ஜ.க. கும்பல் முக்கிய ஆயுதமாக கையிலெடுத்தது. இதனை முன்னின்று செய்த அசாம் முதல்வர், “கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது அரசாங்கம் மியாக்களின் கைகளையும் கால்களையும் அரசியல் ரீதியாக முறித்துவிட்டது. இந்தமுறை அவர்களின் முதுகெலும்பையே முறிப்போம்” என்று வெறுப்பைத் தூண்டினார். அதேபோல், கடந்த பிப்ரவரியில் அசாம் பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அசாம் முதல்வர் துப்பாக்கியால் இஸ்லாமிய மக்களை குறிவைப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளி பகிரப்பட்டிருந்தது.
இவையெல்லாம் வெறுமனே தேர்தல் பிரச்சாரங்கள் அல்ல, அசாமில் இஸ்லாமிய மக்களை இனப்படுகொலை செய்வதற்கு பாசிச கும்பல் விடுக்கும் அறைகூவல்களாகும். இந்த இனப்படுகொலை தயாரிப்பிற்கு தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், மனித உரிமை அமைப்புகள், சிறுபான்மை ஆணையம் உள்ளிட்ட அரசின் அனைத்து உறுப்புகளும் பக்கபலமாக உள்ளன. தற்போது பா.ஜ.க. மூன்றாவது முறை வெற்றி பெற்றிருப்பது இந்த இனப்படுகொலை அபாயத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தொகுதி மறுவரையறை மூலம் ஒழித்துக்கட்டப்பட்ட இஸ்லாமிய மக்களின் பிரதிநிதித்துவம்
அசாமின் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 35 தொகுதிகள் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிப்பவை. இதன் காரணமாக, ஒவ்வொரு தேர்தலிலும் சராசரியாக 30 இஸ்லாமிய உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குத் தேர்வாகி வந்தனர். இஸ்லாமிய மக்களின் இந்தப் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டத் துடித்த பா.ஜ.க. அரசு, 2023-இல் தொகுதி மறுவரையறையை (Delimitation) நடைமுறைப்படுத்தியது.
இதற்காக, 18-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இனரீதியாகத் தொகுதிகளைப் பிரிக்கப் பயன்படுத்தப்பட்ட “ஜெர்ரிமாண்டரிங்” (Gerrymandering) எனும் தந்திரத்தை அசாம் அரசு கையில் எடுத்தது. “பிரித்தல், அடுக்குதல், குவித்தல்” ஆகிய உத்திகளின் மூலம் தொகுதிகள் மதரீதியாக மாற்றியமைக்கப்பட்டன. இதன் விளைவாக, அண்மையில் நடந்த தேர்தலில் இஸ்லாமிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 22-ஆகச் சரிந்தது மட்டுமன்றி, எதிர்க்கட்சிக் கூட்டணியும் முன்னெப்போதும் இல்லாத வகையில் 24 தொகுதிகளுக்குள் சுருக்கப்பட்டது.
குறிப்பாக, இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில் இஸ்லாமியர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டுமென்பதற்காகவே, பெரும்பாலானவற்றை பட்டியல், பழங்குடியின தனித்தொகுதிகளாக மாற்றியது பாசிச கும்பல். சான்றாக, பார்பேட்டா மற்றும் கோல்பாரா மேற்கு ஆகிய இரண்டும் வங்க மொழிப் பேசும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற, வழக்கமாக இஸ்லாமியர்களே எம்.எல்.ஏ-களாக தேர்வாகின்ற தொகுதிகளாகும். தொகுதி மறுவரையறையில், இத்தொகுதிகளிலிருந்த இஸ்லாமியர்களை பிற தொகுதிகளுக்கு பிரித்துவிட்டு, இந்துக்களின் விகிதாச்சாரத்தை அதிகரிக்கும் வகையில் மறுநிர்ணயம் செய்ததுடன், இவை தனித்தொகுதிகளாகவும் மாற்றப்பட்டன. இதன் விளைவாக, 2021 சட்டமன்றத் தேர்தலில் இவ்விரு தொகுதிகளிலும் காங்கிரசு கட்சியை சார்ந்த இஸ்லாமிய எம்.எல்.ஏ-கள் வென்ற நிலையில் இம்முறை இத்தொகுதிகள் பா.ஜ.க. கூட்டணியிடம் சென்றுள்ளன.
இவ்வாறு தொகுதி மறுவரையறை மூலம் பழங்குடியினர் பகுதிகளில் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட ஐந்து தொகுதிகளிலும் பா.ஜ.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே வெற்றி பெற்றுள்ளன.
அதைப்போல், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. சான்றாக, பராக் பள்ளத்தாக்கில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 15-லிருந்து 13-ஆக குறைக்கப்பட்டது.
அதைப்போல், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் வேண்டுமென்றே அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சான்றாக, பா.ஜ.க-வின் அடித்தளமாக உள்ள மேல் அசாம் சட்டமன்றத் தொகுதிகளில் 1.4 இலட்சம் முதல் 1.8 இலட்சம் வரை வாக்காளர்கள் உள்ள நிலையில், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள பார்பேட்டா மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 2.4 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, ஒரு தொகுதியின் பகுதிகள் துண்டிக்கப்படாமல் எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால், இக்கோட்பாடு அப்பட்டமாக மீறப்பட்டது. உதாரணத்திற்கு, ‘கடிகோரா’ தொகுதியை இந்துப் பெரும்பான்மைத் தொகுதியாக மாற்றுவதற்காக, அதனுடன் தொடர்பில்லாத வெகு தொலைவிலுள்ள ‘பதர்பூர்’ பகுதிகள் அதனுடன் இணைக்கப்பட்டன.
இவ்வாறு தொகுதி மறுவரையறையின் போது தீவிர மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்ட பராக் பள்ளத்தாக்கின் மூன்று தொகுதிகள், கீழ் அசாமில் ஆறு, மத்திய அசாமில் இரண்டு மற்றும் மேல் அசாமில் ஒரு தொகுதி என மொத்தம் 12 தொகுதிகள் பா.ஜ.க. கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாக “தி ஸ்க்ரோல்” ஊடகம் பகுப்பாய்வு செய்துள்ளது.
நாடுமுழுவதும் சிறப்பு தீவிர மறு ஆய்வு எனும் பாசிச நடவடிக்கையின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறித்துவரும் பாசிச பா.ஜ.க. கும்பல் அசாமில் மட்டும் எஸ்.ஐ.ஆர்-யை அமல்படுத்தவில்லை. மாறாக, ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னதாக வழமையாக மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை (SR) அசாமில் செயல்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 12 இலட்சம் இந்துக்கள் நீக்கப்பட்ட நிலையில், சிறப்பு தீவிர மறு ஆய்வு செயல்படுத்தப்பட்டால் அவர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் நிலைமை உருவாகும். இது அம்மக்களிடையே பா.ஜ.க-வின் மீதான எதிர்ப்புணர்வை ஏற்படுத்தும் என்ற அச்சத்திலேயே எஸ்.ஐ.ஆர். அசாமில் செயல்படுத்தப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த’ (SR) நடவடிக்கையும் இலட்சக்கணக்கான இஸ்லாமியர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதையே இலக்காகக் கொண்டுள்ளது. டிசம்பர் 27-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 10 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாவர்.
குறிப்பாக, சட்டவிரோத ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகள் இடிக்கப்பட்டு, அகதிகளாக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் வாக்குரிமை திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளது. சான்றாக, துப்ரி மற்றும் உரியம்காட்டில் வீடிழந்தவர்களில் 5,700 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை ‘ஸ்க்ரோல்’ (The Scroll) ஊடகத்தின் கள ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. இடம்பெயர்ந்த இம்மக்கள் புதிய இடங்களில் வாக்காளர்களாகச் சேர வழங்கிய ‘படிவம் 6’ விண்ணப்பங்கள், தேர்தல் அதிகாரிகளால் பெருமளவில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதேபோல, பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மேலும் 2.4 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்களே ஆவர். இதற்கு காரணம் பா.ஜ.க-வினர் அதிகார வர்க்கத்தின் துணையுடன் ‘படிவம் 7’-ஐப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான போலிப் புகார்களைத் தாக்கல் செய்ததுதான்.
ஒரு வாக்காளரின் பெயரை நீக்கக் கோரும் ‘படிவம் 7’-ஐத் தவறாகப் பயன்படுத்தி, ஒருவருடைய பெயரிலேயே நூற்றுக்கணக்கான இஸ்லாமிய வாக்காளர்களுக்கு எதிராகப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகாரளித்ததாகக் கூறப்படும் நபர்களில் பலர், தாங்கள் அத்தகைய புகாரை அளிக்கவே இல்லை என மறுக்கின்றனர். ரங்கனாடி தொகுதியில் மட்டும் 200 பேருக்கு எதிரான புகார்களில், மூன்று நபர்களின் அடையாள அட்டைகளும் தொலைபேசி எண்களும் அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளதை ஸ்க்ரோல் தன்னுடைய கள ஆய்வில் கண்டறிந்துள்ளது.
இந்தச் சதி நடவடிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக, “மியாக்களுக்கு (இஸ்லாமியர்களுக்கு) எதிராகத் தொடர்ந்து புகார்களை அளிக்க வேண்டும் என்று நானே பா.ஜ.க-வினரிடம் கூறியுள்ளேன்” என்று அசாம் முதல்வர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இவ்வளவு பகிரங்கமான வெறுப்புப் பேச்சிற்குப் பிறகும் தேர்தல் ஆணையம் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கெனவே ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ‘டி-வாக்காளர்கள்’ (Doubtful Voters) என முத்திரை குத்தப்பட்டு வாக்குரிமையை இழந்துள்ள நிலையில், தற்போது இலட்சக்கணக்கானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமல்லாமல், வருங்காலங்களில் அவர்களின் குடியுரிமையை முழுமையாகப் பறித்து பாசிச தாக்குதலைத் தொடுப்பதற்கான ஒரு முன்னோட்டமே ஆகும்.
000
மொத்தத்தில், பாசிசமயமாகிவரும் அரசுக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, தொகுதி மறுவரையறை, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் போன்ற நிறுவனமயப்பட்ட சதிச் செயல்கள் மூலம் இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறித்தும், மத வெறுப்புப் பிரச்சாரங்கள், இந்து முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தியும் அசாமில் பா.ஜ.க. மூன்றாவது முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
பாசிச பா.ஜ.க-வின் இவ்வெற்றியை தடுக்கும் நிலையில் அங்குள்ள எதிர்க்கட்சிகள் இல்லை. காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் மீதான புல்டோசர் பயங்கரவாதம் உள்ளிட்ட பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில்லை. சிறுபான்மையினருக்காகப் பேசினால் தங்களின் ‘இந்து வாக்கு வங்கி’ சரிந்துவிடுமோ என்று அஞ்சுகின்றன. “மேல் அசாமில் வாக்குகள் குறைந்துவிடும் என்பதால் காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்கள் கூட எங்கள் உரிமைகளைப் பேசப் பயப்படுகிறார்கள்” என்று பார்பெட்டா மருத்துவர் ஏ.கான் எதிர்க்கட்சிகளின் இரட்டை முகத்தை திரைக்கிழிக்கிறார். ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் பாசிச நடவடிக்கைகளைத் தடுக்கத் தவறிய காங்கிரசு தலைவர்களை மக்கள் விரட்டியடித்த சம்பவங்களும் கடந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளன.
மேலும், வேலைவாய்ப்பின்மை, வெள்ளப் பாதிப்பு, கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கப்படும் பழங்குடியின நிலங்கள் போன்ற மக்கள் பிரச்சினைகளில், எதிர்க்கட்சிகள் தங்களின் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கையினால் பெயரளவிலான எதிர்ப்பையே காட்டுகின்றன. பா.ஜ.க-வின் பாதையிலேயே பெண்களுக்கான மாதாந்திர நிதியுதவி, மருத்துவக் காப்பீடு போன்ற கவர்ச்சிவாதத் திட்டங்களை அறிவித்த போதிலும், பா.ஜ.க-வின் ”அருனோதய்” (Orunodoi) திட்டத்தின் பணபலத்திற்கு முன்னால் இவை எடுபடவில்லை. பா.ஜ.க. அரசானது மக்களின் வறுமையைச் சாதகமாக்கி, அருனோதய் திட்டத்தின் கீழ் 40 இலட்சம் பெண்களுக்குத் தலா ரூ.9,000 வரை வழங்கித் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளது. அதேசமயம், இந்த நிதியுதவிகள் இஸ்லாமியப் பெண்களுக்குப் பெருமளவில் மறுக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க-வை வீழ்த்துவது என்ற ஒற்றைப் புள்ளியில் கூட எதிர்க்கட்சிகளால் ஒன்றிணைய முடியவில்லை. குறிப்பாக, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் காங்கிரசு மற்றும் ”ராய்ஜோர் தளம்” இடையே தொகுதி பங்கீட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. மேலும், பா.ஜ.க. தனது குதிரை பேரம் மூலம் காங்கிரசின் முக்கியத் தலைவர்களான பூபென் போரா மற்றும் பிரத்யுத் போர்டோலோய் போன்றோரை விலைக்கு வாங்கி, அக்கட்சியின் கட்டமைப்பையே சிதைத்து வருகிறது.
இச்சூழலில், அசாமில் இஸ்லாமிய மக்கள் எதிர்கொண்டிருக்கும் இனப்படுகொலை அபாயத்தையும், உழைக்கும் மக்கள் மீதான பாசிச தாக்குதல்களையும் தடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமை அங்குள்ள பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது. குடியுரிமைப் பறிப்பிற்கு எதிராகப் போராடும் சிறுபான்மையினர், கார்ப்பரேட் நில அபகரிப்பிற்கு எதிராகப் போராடும் பழங்குடியின மக்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் என ஒடுக்கப்படும் அனைத்துப்பிரிவு மக்களையும் பாசிச பா.ஜ.க-விற்கு எதிராக ஓரணியில் திரட்ட வேண்டும். பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்று அதிகாரக் கட்டமைப்பை நோக்கிய மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். சாதி, மத, இன, மொழிப் பிளவுகளைக் கடந்து வர்க்க ரீதியாகக் கட்டியெழுப்பப்படும் இப்போராட்டங்களே, இனப்படுகொலையின் விளிம்பில் நிற்கும் இஸ்லாமிய மக்களைப் பாதுகாக்கும்.
மே 18, 2009, இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிராமத்தில், கொட்டகைகள், கூடாரங்கள், பதுங்குக் குழிகள் என 3 சதுர கி.மீ. பரப்பளவில் சிக்கித் தவித்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் மக்கள் மீது, கனரக ஆயுதங்களைக் கொண்டு போர்த் தாக்குதலை நடத்தி ஈவிரக்கமின்றி கொன்றொழித்தது, இனவெறி பிடித்த சிங்கள பாசிச அரசு.
சிங்களப் பேரினவாதத்திற்கு தலைமை தாங்கி இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இராஜபக்சே கும்பல், 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உழைக்கும் மக்களின் எழுச்சியின் மூலம் நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டது. மேலும், ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்கான வழியாக முன்வைக்கப்பட்ட இனவாதத்தை முறியடித்து, இன வேறுபாடுகளைக் கடந்த வர்க்கப் போராட்டமே தீர்வு என்பதை இந்த எழுச்சி பறைசாற்றியது.
இதுகுறித்து, 2022 மே மாத புதிய ஜனநாயகம் இதழில் வெளியான “ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்கான வழி இனவாதமா? வர்க்கப் போராட்டமா?” என்ற கட்டுரையை, இன்று, முள்ளிவாய்க்கால் படுகொலை நாளையொட்டி பதிவு செய்கிறோம். இக்கட்டுரை ஜூன் 21, 2022 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது.
***
கடந்த மே 18, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள். 2009 ஆம் ஆண்டு, சிங்கள இராணுவத்தால் புலிகளோடு சேர்த்து, ஈழத் தமிழ் மக்களும் கொடிய இனப்படுகொலைக்கு உள்ளான நாள். மறக்க முடியாத “மே” அது. 13 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு மே மாதமும் இலங்கை உழைக்கும் மக்களின் வரலாற்றில் குறித்துவைத்துக் கொள்ள வேண்டிய நாளாக அமைந்திருக்கிறது. முந்தைய மே, மாளாத துயரத்தின் வடு. இன்றைய மே துளிர்விடும் புதிய நம்பிக்கையாக இருக்கிறது.
எந்த மஹிந்த இராஜபக்சே, சிங்களப் பேரினவாதத்துக்கு தலைமை தாங்கி இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை இறுதிப் போரில் கொன்றொழித்தானோ, அதே இராஜபக்சேவை இன்று ஆட்சியைத் துறந்தோடிவிட்டு, மறைந்து வாழும்படி செய்துவிட்டார்கள் சிங்கள உழைக்கும் மக்கள்.
இனவெறி-மதவெறியை ஒழித்துக் கட்டிவிட்டு, ஒரு புதிய ஜனநாயக இலங்கையை படைக்க விரும்பிய அனைத்து இலங்கை புரட்சிகர-ஜனநாயக சக்திகளுக்கும் பெருமகிழ்ச்சியை வழங்கியிருக்கிறது இனம் கடந்த உழைக்கும் மக்களின் பேரெழுச்சி.
“இலங்கையில் இன முரண்பாடுதான் பிரதான முரண்பாடு. சிங்களவர்கள் மத்தியில் ஜனநாயக சக்திகளே கிடையாது. அனைவரும் ஈழத்தமிழருக்கு பகையாளிகள். சிங்களவர்கள் எக்காலத்திலும் தமிழர்களோடு இணையவே மாட்டார்கள். தமிழர்களும் எக்காலத்திலும் சிங்களவர்களோடு இணைய முடியாது” – என்று கூறிவந்த தமிழினவாதிகளின் வாயில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது மூவின மக்களின் வர்க்க ஒற்றுமை.
இந்தச் சூழலில், தனித் தமிழீழக் கோரிக்கை இலங்கை மற்றும் இங்குள்ள தமிழினவாதிகளால் முன்னைக் காட்டிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. (கவனமாக ‘விவாதம்’ என்ற வரம்போடு நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். அதற்கான காரணத்தை நாம் கடைசியில் விளக்குவோம்.)
ஆனால் இப்பொழுதுகூட வர்க்க ஒற்றுமையை மறுக்கின்ற, வெறுக்கின்ற அவர்களது இழிந்த இனவாதக் கண்ணோட்டத்தை விட்டொழித்தபாடில்லை. இச்சூழலில் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்டிருக்கிற அநீதியான இனப்படுகொலைக்கு நீதி வழங்கவும் அவர்களது தன்னுரிமைக் கோரிக்கையை வென்றெடுக்கவும் எந்த பாதையில் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை நாமும் பேச வேண்டியிருக்கிறது.
***
1980கள் முதல் புதிய ஜனநாயகம் இதழும் எமது தோழமை அமைப்புகளும் ஏற்கெனவே இதுகுறித்து தொடர்ச்சியாக பேசி வந்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம் அவை தமிழினவாதிகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றன; எம்மையும் எமது தோழமை அமைப்புகளையும் தமிழீழத்தின் எதிரிகளாகவும் அவர்கள் சித்தரித்தார்கள். ஆனால் நமது நிலைப்பாடுகள் எவ்வளவு சரியானவை என்பதை இலங்கையின் வர்க்கப் போராட்டம் பறைசாற்றிவிட்டது.
2013 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழில், “ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்” என்று தலைப்பிட்ட கட்டுரையில், ஈழம் தொடர்பான பு.ஜ. மற்றும் பு.ஜ. தோழமை அமைப்புகளின் நிலைப்பாட்டை சுருக்கமாக விளக்கியிருப்போம். பொருத்தம் கருதி, அக்கட்டுரையின் ஒருபகுதியை இங்கு நீண்ட மேற்கோளாகத் தருகிறோம் :
“ஈழ இனச் சிக்கலுக்குத் தமிழீழத் தனியரசுதான் எல்லா நிலைகளிலும் எப்போதும் ஒரே தீர்வு என்று கூறுவதைத்தான் ம.க.இ.க.-வினர் ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர, தமிழீழத் தனியரசுக்கு எதிரானவர்கள் என்பது உண்மையில்லை. இது நாம் இப்போது எடுக்கும் முடிவல்ல. முன்பே எழுதியிருப்பதுதான். “அப்படியானால், தமிழீழத் தனியரசுக்காக ஏன் போராடவில்லை, இனிமேலாவது அதற்காகப் போராடுவீர்களா” என்று கேட்டு ம.க.இ.க.-வை மடக்குவதாக எண்ணிக் கொண்டு தமிழினவாதிகள் வாதாடக் கூடும்.
தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கைக்காக இரண்டு காரணங்களுக்காக ம.க.இ.க.-வினர் போராடவில்லை. தமிழினவாதிகளின் பார்வையில் தமிழீழத் தனியரசு என்பதுதான் ஈழ இனச் சிக்கலுக்கு ஒரே கோரிக்கை, ஒரே தீர்வு; அதனால்தான் அதை மட்டுமே முன் வைக்க வேண்டும் என்கிறார்கள். அது குட்டி முதலாளிய வர்க்கத்தின் பகுத்தறிவுக்குப் புறம்பான, குறுந்தேசிய இனவாதப் பார்வையிலானது.
ம.க.இ.க. வினரின் பார்வையில் – இதுதான் அறிவியல்பூர்வமானது, பாட்டாளி வர்க்கப் பார்வையிலானது – தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதாக ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமைக் கோரிக்கையையும், அதற்கான போராட்டத்தையும் நாம் முன்னெடுக்கிறோம்.
பிரிந்து போகும் உரிமையை ஒதுக்கிவிட்டு, மறுத்துவிட்டு வெறுமனே தன்னுரிமைக்காக ம.க.இ.க.வினர் நிற்கவில்லை. ஆகவேதான் தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கையைத் தனியே முன்வைத்துப் போராட வேண்டியதன் அவசியம் இல்லை.
தமிழீழத் தனியரசு கோரிக்கையை மட்டுமே முன்வைத்து, அதையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்கிறார்கள், தமிழினவாதிகள். பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் அவ்வாறு செய்ய முடியாது, செய்யக் கூடாது, செய்யவுமில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்துக்கும், அதன் பரந்துபட்ட மக்களுக்கும் கூட எதிரானதுதான் அந்நாட்டை ஆளும் பாசிச அரசு. அதற்கு எதிராக ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனித்தனிப் பொதுவுடைமைக் கட்சி வைத்து, தனித்தனித் திட்டமும் இலக்கும் வைத்துப் புரட்சி செய்வது; அவ்வாறான தனித்தனி புரட்சிகளில் தேசிய இனங்கள் வெற்றிபெற்று, தனித்தனியே சோசலிசத்தைக் கட்டியமைத்த பின்னரோ, அதற்கு முன்னரோ ஐக்கியப்படுவது என்று பேசுவது மார்க்சிய – லெனினியப் பார்வையே கிடையாது.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவுகூர்ந்து, பேரணியாகச் செல்லும் சிங்கள் மக்கள். இடம், காலிமுகத்திடல் மைதானம்.
அந்நாட்டை ஆளும் பாசிச அரசுக்கு எதிராக ஒரே புரட்சிகரப் பொதுவுடைமைக் கட்சியைக் கட்டுவது; அக்கட்சி, எல்லா தேசிய இனங்களுக்கும் சமவுரிமையை மட்டுமல்ல, ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை உறுதிப்படுத்துவது; அக்கட்சி ஒடுக்கும் (சிங்களத்) தேசிய இனத்தவரிடையே ஈழத் தமிழர் தன்னுரிமையையும், ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் தேசிய இனத்தவரிடையே ஐக்கியத்தையும் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் அந்நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தேசிய இனங்களை ஐக்கியப்படுத்திப் புதிய ஜனநாயகப் புரட்சியை முடிப்பதுதான் அக்கட்சியின் இலக்காகவும் திட்டமாகவும் இருக்கும் என்பதுதான் மார்க்சிய – லெனினியப் பார்வை.
இந்த மார்க்சிய-லெனினியப் பார்வையை மறுப்பதற்காகத் தமிழினவாதிகள் பலவாறு புளுகித் திரிகிறார்கள். “சிங்களப் பெருந்தேசிய இனத்து மக்களுக்கும் அவர்களை ஆளும் பாசிச அரசுக்கும் வேறுபாடே கிடையாது; பகை முரண்பாடும் கிடையாது; பெருந்தேசிய இனத்து மக்கள் அனைவரும் ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு எதிரானவர்கள்; இலங்கையின் இரு தேசிய இனப் பாட்டாளி மக்களும் ஐக்கியப்பட மாட்டார்கள்; இலங்கையில் ஈழத் தமிழ் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் அமைப்புகள் எதுவும் சிங்களவர் மத்தியில் கிடையாது” ஆகிய தமிழினவாதிகளின் கருத்துக்களைப் பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் ஏற்கவில்லை. ஏனென்றால், தமிழினவாதிகள் கூறிவரும் மேற்கண்ட கருத்துகளில் உண்மையில்லை.
இந்தியாவின் ஈழ ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றுவதற்கான போராட்டத்தில், நோக்கில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டு நின்றிருக்கிறார்கள். 1983-இல் இருந்து தொடர்ந்து நடந்து வந்த ஈழப்போர் காரணமாக இலங்கையில் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் முற்றியபோது சிங்கள, தமிழ் மக்கள் அமைதியை வேண்டி நின்றபோது அதையே முன்வைத்து அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டார், சந்திரிகா குமாரதுங்கே. அவரைத் தேர்ந்தெடுத்து அமைதி, போர்நிறுத்தம், பேச்சு வார்த்தையை ஆதரித்ததில் சிங்களரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள். சிங்கள இன வெறியர்களினால் அம்முயற்சி சிதறடிக்கப்பட்டது வேறு விடயம். 2004 சுனாமியின் பேரழிவுகளை எதிர்கொள்வதில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள்.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் மனைவியாகிய சிங்களப் பெண்ணைப் போன்று தமிழ்த் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் சிங்களவர்களும், சிங்களவர் மற்றும் ஈழத் தமிழர்களைக் கொண்ட குழுக்களும் அங்குண்டு. தமிழ்த் தேசிய இன மக்களின் மனித உரிமைக்காகவும் இலங்கைப் பாசிச அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடிக் கொல்லப்பட்டவர்களும் பத்திரிகையாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் சிங்களவரிடையே உண்டு. ஈழ விடுதலைப் போராட்டங்கள் நடந்த அதே காலகட்டத்தில், இலங்கைப் பாசிச அரசால் ஈழத் தமிழர்கள் மட்டும் கொன்று குவிக்கப்படவில்லை. பல்லாயிரம் சிங்கள இளைஞர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வெள்ளை வேன் வேட்டை இன்னமும் தொடர்கிறது. 75,000 சிங்கள இளைஞர்கள் இந்தக் காலத்தில் காணாமல் போயிருக்கிறார்கள் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பு இலங்கைப் பாசிச அரசுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
ஆகவே, அரசியல் காரணங்களுக்காக சிங்களவரும் ஈழத் தமிழரும் ஐக்கியப்படுவது சாத்தியமே இல்லாதது அல்ல.”
***
ஆம், “சாத்தியமே இல்லாதது அல்ல” என்று அன்று நாம் கூறினோம். இன்று சாத்தியப்பட்டிருப்பதை கண்ணெதிரே பார்க்கிறோம்.
“கோத்தபய பதவி விலக வேண்டும்; போராட்டக்காரர்களைத் தாக்கிய மஹிந்த தண்டிக்கப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இச்சூழலில், சிங்கள-தமிழ் மக்களின் பொது எதிரியான இராஜபக்சே கும்பலுக்கு எதிரான போராட்டத்தில், தமிழினப் படுகொலைக் குற்றத்திற்கும் சேர்த்து அக்கும்பல் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும்; தமிழ் மக்களின் தன்னுரிமை கோரிக்கையும் வலுவாக இணைக்கப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் அரசியல் போராட்டங்களை நடத்துவதற்கு உகந்த தருணம் இது. நிச்சயம் அவை சிங்கள உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெறும்.
ஆனால் நிலைமை வேறுமாதிரியாக உள்ளது. சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய தென்னிலங்கையில்தான் போராட்டங்கள் வீச்சாக நடந்துவருகின்றன. தமிழர்கள் அடர்த்தியாக வாழும் வடக்கு-கிழக்கு பகுதிகளில், தொடக்கம் முதலே பெருமளவில் மக்கள் போராட்டங்களைக் காண முடியவில்லை.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை தமிழ் மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வருவதால், அதற்கு பழகிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். மேலும், தமிழ் மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய வடக்கு-கிழக்கு பகுதிகளில்தான் பெருமளவு இலங்கை இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. இனப்படுகொலைக்கு பிறகு அம்மக்கள் மத்தியில், அரசை எதிர்த்த போராட்டங்களில் பங்குபெற ஒருவித அச்சம் நிலவுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவைகளை முதன்மையான காரணங்களாக நம்மால் கருதமுடியாது.
தமிழ் மக்களிடையே இயங்குகிற செல்வாக்கு பெற்ற அரசியல் அமைப்புகள் – சிறுகுழுக்களாக உள்ள புரட்சிகர-ஜனநாயக அமைப்புகள் விதிவிலக்காக இருக்கலாம் – எவையும் அம்மக்களை போராடுவதற்கு திரட்டவில்லை; அவ்வாறு செய்வதற்கு விரும்பவும் இல்லை என்பதுதான் முதன்மைக் காரணம். குறிப்பாக தமிழின அமைப்புகளையே சொல்கிறோம்.
இப்போது மட்டுமல்ல, இலங்கை வரலாற்றிலேயே, இத்தமிழினவாத அமைப்புகள் ஒருநாளும் இருதேசிய இனத்து உழைக்கும் மக்களின் பொதுக்கோரிக்கைகளுக்காக, தமிழர்களைத் திரட்டிப் போராடியதில்லை. இனப் பிரச்சினையை மட்டுமே, அதுவும் தங்களது குறுகிய இனவாதக் கண்ணோட்டத்திலும் பிழைப்புவாத நோக்கங்களுக்காகவும் மட்டுமே முன்வைத்து களமாடியுள்ளார்கள்.
இன, மத முரண்பாடுகளைக் கடந்து உழைக்கும் வர்க்கமாக மக்கள் போராடிவரும் இச்சூழலிலும், தமிழினவாதிகள் பேசுவதை அறிந்தால் நம்மால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது.
2009 ஆம் ஆண்டு வெளியான புதிய ஜனநாயகம் வெளியீடு.
திருக்குமரன் என்ற தமிழினவாதி தமிழ் யூடியூப் சானலுக்கு தான் அளித்த பேட்டியொன்றில், “சிங்களர்கள் மூன்றுவேளை சோற்றுக்காக போராடுகிறார்கள். அவர்களால் மூன்று வேளை சோறில்லாமலும் ஏசி இல்லாமலும் இருக்க முடியாது. தமிழர்களுக்காக என்றாவது, சிங்களவர்கள் போராடியிருக்கிறார்களா, எனவே தமிழ் மக்கள் அவர்களை நம்பக்கூடாது” என்று பேசுகிறார். தோழர்களே, இது ஈனப் புத்திகொண்ட ஒருவரது பேச்சுமட்டுமல்ல. பல தமிழ்த்தேசியவாதிகள் இதே அலைவரிசையில் பயணிப்பதை நாம் எடுத்துக் காட்ட முடியும்.
“(வடக்கில்) நாங்கள் உணவுக்காக போராடவில்லை, நீதிக்காக போராடுகிறோம்” என்று தமிழ்த்தேசியவாதிகளால் நடத்தப்படும் “தமிழ் கார்டியன்” (Tamil Guardian) என்ற இணையப் பத்திரிகை எழுதிருந்தது.
அதேபோல, “தமிழ்நெட்” (Tamilnet) என்ற மற்றொரு இணையப் பத்திரிகையின் ஆசிரியர் இவ்வாறு எழுதுகிறார் : “இலங்கைத் தீவில் எழுந்திருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில், சிங்கள தேசத்தோடு ஈழத்தமிழ்தேசம் ஒருகுடையின் கீழ் அணிவகுப்பது முற்றிலும் பொருத்தமற்றது” … “இன அழிப்பு ஒற்றையாட்சி அரசின் பொருளாதாரத்தைக் காப்பதற்காக, இன அழிப்புத் தேசத்தோடு ஒருகுடையின் கீழ் ஈழத்தமிழர் அணிதிரள்வதென்பது, இன அழிப்பு மறுப்புக்கு ஒப்பாகிவிடும்”
மேற்கண்ட இணையதளங்கள் மட்டுமல்ல, “கூர்மை” (Koormai), “ஈழப்பார்வை” (Eeelamview) என தமிழினவாதிகள் நடத்துகின்ற பெரும்பாலான இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்கள் ஆகியவை சுருதியும் இலயமும் மாறாமால் ஒரேமாதிரி வாசிக்கின்றன.
“1990களிலிருந்தே இலங்கையில் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டவர்கள் தமிழர்கள்தான். தமிழர்களாகிய நாம் 20 ஆண்டுகளுக்கு மேலாக இதனை அனுபவித்து வருகிறோம். சிங்கள மக்கள் இப்பொழுதுதான் இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று இனவாத நஞ்சைக் கக்குகிறார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிவஞானம் சிறீதரன்.
இவர்கள் சொல்லும் “சோத்துப் பிரச்சினை” சிங்களவர்களுக்கு மட்டுமல்ல, தமிழினத்துப் பாட்டாளிகளுக்கும்தான். பொருளாதர நெருக்கடி வெடித்ததிலிருந்து, இதுவரை 73 தமிழர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்கள் (ஜூன் 01 வரையான கணக்கீடு). ஆனால் “சோத்துப் பிரச்சினை” தமிழர்களுக்கு பெரிதல்லவாம், இதற்காக எக்காரணம் கொண்டும் சிங்களவர்களோடு சேர்ந்துவிடாதீர்கள் என்று உயிர்போக கத்துகிறார்கள் இனவாதிகள்.
இந்த இனவாதக் கூச்சலுக்கு ஒரு “வர்க்க உள்ளடக்கம்” உள்ளது தோழர்களே. அதுதான் மேட்டுக்குடி வர்க்கத் திமிர். “தமிழன்” என்ற இனத்தோல் போர்த்துக் கொண்டு, தமிழின பாட்டாளியிடம் இனவாத ஊளையிடுகின்றன இந்த மேட்டுக்குடி நரிகள்.
இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழினவாதிகள் நேரடியாக பேசுகிறார்கள் என்றால், தமிழ்நாட்டு தமிழினவாதிகளோ அதையே மென்மையாகவும் பகிரங்கமாக வெளியில் தெரியாத வண்ணமும் பேசுகிறார்கள். இவர்களில் யாரும், சிங்கள பேரினவாத பாசிஸ்டுகளான இராஜபக்சேக்களுக்கு எதிராகவோ, பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வேண்டியோ போராடிவரும் பெரும்பான்மை சிங்களவர்களோடு தமிழர்களும் இணைந்து போராடவேண்டும் என்று கோரவில்லை. மாறாக, இப்பொழுதும் தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து போராடமுடியாது என்று பேசிவருகிறார்கள்.
சரி, தமிழர்களுக்கு “சோத்துப் பிரச்சினை” பெரிதல்ல, தனி ஈழப் பிரச்சினையைத்தான் பேசவேண்டும் என்று கதைப்பவர்கள், இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அதற்காகவேணும் தமிழ்மக்களைத் திரட்டி போராடியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால், சிங்களர்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து போராட விடமால், இனவாத வேலியிட்டு தடுப்பதன் மூலம் சிங்கள ஆளும் வர்க்கத்தையும் அரசுக் கட்டமைப்பையும் பாதுகாப்பதே இந்த கும்பல்கள்தான்.
தமிழன் பிணங்களை வைத்து நாடாளுமன்ற பதவி சுகம் காணவும், புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் நிதி வசூலித்துப் பொறுக்கித் திண்பதற்காகவும் “இனவாதம்” அவர்களுக்கு தேவைப்படுகிறது. இதற்கு உலைவைக்கும் “வர்க்க ஒற்றுமை” அதனால்தான் அவர்களுக்கு கசக்கிறது.
சிங்களப் பேரினவெறியோ, குறுந்தேசிய தமிழினவாதமோ, இனி நீண்டகாலம் இனவாத அரசியலுக்கு உழைக்கும் மக்களை பலியாக்க முடியாது. வர்க்கப் போராட்டச் சூறாவளியில், இந்த ‘அற்பப் பதர்கள்’ தாக்குப்பிடிக்க முடியாது.
“சிங்களர்களை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது” என்று வியக்கிறார்கள் தமிழ் மக்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சிங்களர்களும் நினைவேந்துகிறார்கள். தற்போது சிங்கள-தமிழ் உழைக்கும் மக்களிடையே ஐக்கியமானதொரு சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இனியும் இன உரிமைப் போர்வையில், தமிழினவாதிகள் முன்வைக்கும் “பிளவு அரசியல்” எடுபடாது.
இனவாத அரசியல் தலைமைகளிடம் தமிழ் மக்கள் சரணடைந்து கிடக்கப் போவதில்லை. தென்னிலங்கை மக்களுடன் ஒன்றிணைந்து போராடுவதற்காக, வடக்குப் பகுதியின் மாணவர் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக கிடைக்கும் செய்திகள் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.
சிங்கள-தமிழ் மக்களின் ஒன்றுபட்ட வர்க்கப் போராட்டமே, ஏகாதிபத்திய மேலாதிக்கத்திலிருந்தும் சுரண்டலிலிருந்தும் இலங்கையை விடுவிப்பதோடு, தமிழ் மக்களுக்கும் தன்னுரிமையைப் பெற்றுத்தரும்.
மேற்குவங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சி செய்துவந்த திரிணாமுல் காங்கிரசு கட்சியை வீழ்த்தி, பாசிச பா.ஜ.க. கும்பல் அம்மாநில ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. முதன்முறையாக அங்கு ஆட்சியமைத்துள்ளது.
இதனையடுத்து, “மேற்குவங்கத்தில் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது”, “காங்கோத்ரி முதல் கங்கா சாகர் வரை தாமரை மலர்ந்துள்ளது”, “மேற்குவங்கத்தின் வெற்றி என்பது கிழக்கிற்கான நுழைவாயில்” என பாசிச கும்பல் வெறிக்கூச்சலிடுகிறது. மோடி அரசின் ஊதுகுழல் ஊடகங்களோ, காவிமயமான இந்திய வரைப்படத்தில் மேற்குவங்க மாநிலத்தையும் இணைத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி புலங்காகிதம் அடைகின்றன.
மேற்குவங்கத் தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், பிரதமர் மோடி தரையில் விழுந்து வணங்கியது, பாசிச கும்பல் இத்தேர்தல் முடிவை எவ்வளவு முக்கியத்துவமுடையதாகப் பார்க்கிறது என்பதை வெளிக்காட்டியது. அதேசமயம் களத்தில் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் குண்டர் படை இஸ்லாமியர்களின் கடைகளை அடித்து நொறுக்கியும் புல்டோசரைக் கொண்டு இடித்தும் மசூதிகளுக்குள் புகுந்தும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது; மேற்குவங்கம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அமைந்திருந்த கம்யூனிச ஆசான் தோழர் லெனினின் சிலை காவி குண்டர்களால் உடைக்கப்பட்டது. இவற்றின் மூலம் இனி இதுதான் மேற்குவங்கத்தின் அரசியல் சூழல் என பாசிச கும்பல் கொக்கரிக்கிறது.
ஆனால், மேற்குவங்கத்தில் பாசிச பா.ஜ.க. கும்பல் பெற்ற இவ்வெற்றியானது அப்பட்டமான பார்ப்பனிய சூழ்ச்சிகள் மூலமும் தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டும் அதிகார வர்க்கத்தின் துணையுடன் கைப்பற்றப்பட்டதாகும். திரிணாமுல் காங்கிரசு ஆட்சியின் மீதான எதிர்ப்புணர்வு, மம்தாவின் கவர்ச்சிவாதம், மிதவாத இந்துத்துவம், கார்ப்பரேட் சேவை போன்றவை பரிசீலிக்கப்பட வேண்டியவை என்றாலும், தற்போது மேற்குவங்கத்தில் பா.ஜ.க. பெற்ற வெற்றியானது மோசடியான, திருடப்பட்ட வெற்றி என்ற அம்சத்தில் அதனை முதன்மையாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.
மேற்குவங்கத்தின் தேர்தல் நிலைமை குறித்து ஏப்ரல் 2026, புதிய ஜனநாயகம் இதழில், “வாக்குரிமைப் பறிப்பு முதல் இந்துமுனைவாக்கம் வரை: மேற்குவங்கத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பாசிச பா.ஜ.க.” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் மம்தா அரசின் மக்கள் விரோதத் தன்மை குறித்தும் மேற்குவங்கத்தின் அரசியல் சூழல் குறித்தும் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர். எனும் பாசிச ஆயுதம்
யூனியன் பிரதேசமான டெல்லியில் அதிகார வர்க்கத்தையும் ஆளுநரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆம் ஆத்மி அரசை முடக்கி, அம்மாநில முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து சிறையிலடைத்து, அப்பட்டமான பாசிச ஒடுக்குமுறைகளை ஏவி கடந்தாண்டில் ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க. கும்பல். தற்போது ஒரு மாநிலத்தில் விரிந்தளவில் இப்பாசிச ஒடுக்குமுறைகளை ஏவி மோசடியாக தேர்தல் வெற்றியை சாதிப்பதற்கான மாதிரியை மேற்குவங்கத்தில் உருவாக்கியிருக்கிறது.
குறிப்பாக, 2021 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் அதுவரை இல்லாத அளவிற்கு 77 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க. பிரதான எதிர்க்கட்சியாக மாறியதிலிருந்தே இதற்கான நகர்வுகளை தொடங்கிவிட்டது.
ஒன்றியத்தில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, மேற்குவங்க அரசுக்கு வழங்கப்பட வேண்டிய நூறு நாள் வேலைத்திட்ட நிதி, ரூ.10,000 கோடி கல்வி நிதி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்திற்கான நிதி அனைத்தையும் முடக்கி மேற்குவங்க மக்களின் மீதும் அரசாங்கத்தின் மீதும் பாசிச தாக்குதல்களை தொடுத்தது. 2023-இல் கொல்கத்தா உயர்நீதிமன்ற சங்கி நீதிபதியின் துணையுடன் 32,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர் நியமனங்களை இரத்து செய்து மம்தா அரசின் மீது எதிர்ப்பைக் கிளப்பியது. இராம நவமி போன்ற இந்துப் பண்டிகைகளில் திட்டமிட்டு மதக்கலவரங்களில் ஈடுபட்டது.
இருப்பினும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பேனர்ஜி அரசு அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து மேற்குவங்கத்தை கைப்பற்றுவதற்காக, தேர்தல் ஆணையத்தின் துணையுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனும் பாசிச ஆயுதத்தை பா.ஜ.க. கும்பல் கையிலெடுத்தது.
இதன் மூலம், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், மேற்குவங்கத்தில் சுமார் 91 லட்சம் வாக்காளர்களை, அதாவது 12 சதவிகித வாக்காளர்களை ஒரேயடியாக நீக்கியது. இதில், 58 லட்சம் வாக்காளர்களின் நீக்கத்திற்கு இடப்பெயர்வு, மரணம் என காரணங்கள் கூறப்பட்ட நிலையில், எழுத்துப்பிழைகள், வயது முரண்பாடு உள்ளிட்ட அற்ப காரணங்களுக்காக 27 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இஸ்லாமியர்கள் என்பதே பாசிச கும்பலின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்த போதுமானது.
இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, நீதித்துறையை சார்ந்த அதிகாரிகளின் கண்காணிப்பில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியை (Adjudication) உச்சநீதிமன்றமே மேற்கொண்டது. அதேசமயம், மேல்முறையீட்டில் நிலுவையில் உள்ள இலட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு இத்தேர்தலில் வாக்களிக்க உரிமை வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தை நாடிய போது, “இத்தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்பதற்காக, ஒருவருக்கு அந்த உரிமை நிரந்தமாக மறுக்கப்பட்டது என்று அர்த்தமல்ல” என்று திமிர்த்தனமாகக் கூறியது.
அதாவது, வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தலுக்குள் முழுவதுமாக முடிக்க முடியாமல் போன தேர்தல் ஆணையத்தின் நிர்வாகத் தோல்வியால் இலட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமைப் பறிக்கப்படுகிறது. ஆனால், ஒரு தேர்தலில் வாக்களிக்காமல் போனால் என்ன கெட்டுவிடப் போகிறது என்கிற பொருளில் உச்சநீதிமன்றம் பதிலளிக்கிறது. இதைவிட இந்திய தேர்தல் ‘ஜனநாயகத்தின்’ இழிநிலையை யாராலும் அம்பலப்படுத்த முடியாது.
உண்மையில், அம்மாநிலத்தில் பா.ஜ.க-வின் வெற்றியை சாத்தியப்படுத்த இந்த 27 இலட்ச வாக்காளர்களின் வாக்குரிமைப் பறிக்கப்பட வேண்டுமென்ற பாசிச கும்பலின் சதித்திட்டத்திற்கு தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றமும் துணைபோயுள்ளன என்பதே நிதர்சனம். தேர்தல் முடிவுகள் இதனை நிரூபிக்கின்றன.
குறிப்பாக, பா.ஜ.க. வெற்றி பெற்ற 105 தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர். மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை விடக் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வென்றுள்ளது. அவற்றில், 86 தொகுதிகள் பா.ஜ.க. இதற்கு முன்னெப்போதும் வெற்றி பெறாத தொகுதிகளாகும். சான்றாக, எஸ்.ஐ.ஆர். மூலம் 51,022 வாக்காளர்கள் நீக்கப்பட்ட பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். 57,387 வாக்காளர்கள் நீக்கப்பட்ட அசன்சோல் உத்தர் தொகுதியில் போட்டியிட்ட பொதுப்பணித்துறை அமைச்சரான மோலோய் கட்டக் 11,615 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு, எஸ்.ஐ.ஆர். மூலம் இஸ்லாமியர்கள், இதர சிறுபான்மையின மக்களின் வாக்குரிமையைப் பறித்தும் திரிணாமுல் காங்கிரசின் வாக்குவங்கியை சிதைத்துமே பாசிச பா.ஜ.க. கும்பல் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பாக, இத்தேர்தல் சமயத்தில் அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகியவற்றில் மொத்தமாக 23 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மேற்குவங்கத்தில் மட்டும் 483 நிர்வாக மற்றும் போலீசு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. இதன் மூலம் தேர்தலுக்கு முன்னரே திரிணாமுல் காங்கிரசு அரசை பாசிச கும்பல் முடக்கியது.
மேற்குவங்கத்தின் மால்டா பகுதியில் ஏப்ரல் 1 அன்று, தங்களது வாக்குரிமைப் பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நீதித்துறை அதிகாரிகளை மக்கள் சிறைப்பிடித்தனர். இந்த முக்கியமான செய்தியைக்கூட மாநிலத்தின் தலைமை செயலாளர் தனக்கு தெரிவிக்கவில்லை என்றும் ஒரு பத்திரிகையாளர் மூலமே தெரிந்துகொண்டதாகவும் முதல்வர் மம்தா தெரிவித்தது நிர்வாகம் எந்தளவுக்கு முடக்கப்பட்டிருந்தது என்பதை நிரூபிக்கிறது.
அதைப்போல், மேற்குவங்கத் தேர்தலை ஒட்டி அம்மாநிலத்தில் 2.4 இலட்சத்திற்கும் அதிகமான மத்திய ஆயுதக் காவல் படையினரை (CAPF) பாசிச கும்பல் குவித்தது. இது கடந்த 2021 தேர்தலில் குவிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட மும்மடங்கு அதிகமாகும். ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் கண்காணிப்பது, சத்தீஸ்கர் மற்றும் ஜம்மு-காஷ்மீரிலிருந்து கவச வாகனங்களை வரவழைப்பது, மேற்குவங்கத்திலேயே சி.ஏ.பி.எஃப்-க்கான பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறையை அமைப்பது என ஒட்டுமொத்த மாநிலத்தையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து, மக்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்தியது. இதன் மூலம், ஜம்மு-காஷ்மீரைப் போன்றதொரு இராணுவப் பிடிக்குள்ளேயே மேற்குவங்கத் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது.
மேற்குவங்கம் வன்முறைகள் அதிகம் நடக்கும் மாநிலம் எனக் காரணம் கூறி இத்தனை படைகள் குவிக்கப்பட்ட நிலையில், களத்தில் சி.ஏ.பி.எஃப். படையினர் பா.ஜ.க-விற்கு வாக்களிக்குமாறு மக்களை வற்புறுத்தி அத்துமீறலில் ஈடுபட்டது பாசிச கும்பலின் உண்மையான நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. மேலும், தேர்தல் முடிந்த பிறகும், மறு உத்தரவு வரும் வரை 70,000 படையினர் மேற்குவங்கத்திலேயே இருப்பார்கள் என அமித்ஷா அறிவித்துள்ளார். இது, தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலிலும் பாசிச நலன்களுக்கு ஏற்ப மேற்குவங்க மக்களைப் பணியவைக்கத் தீட்டப்பட்ட சதித்திட்டமாகும்.
இவ்வாறாக, மேற்குவங்கத்தின் மீது சாம, தான, பேத, தண்டம் என அனைத்து வகையான சூழ்ச்சிகள், தாக்குதல்களின் மூலமே அம்மாநிலத்தில் பாசிச பா.ஜ.க கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
மறுபுறம், மம்தா பேனர்ஜி எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக பேரணிகளையும் சட்டப் போராட்டங்களையும் நடத்தினாலும், களத்தில் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக இஸ்லாமிய மக்கள் நடத்திவந்த போராட்டங்களை பெருந்திரள் மக்கள் போராட்டமாக வளர்த்தெடுக்காமல் வரம்பிட்டுக் கொண்டார். அதைப்போல், பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் சி.பி.எம்., காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் திரிணாமுல் காங்கிரசுடன் இணைந்து செயல்படுவதற்கு பதிலாக, தனித்தனியாக பிரிந்து நின்று பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை சிதறடித்தன. இவையெல்லாம், பாசிச கும்பலுக்கு சாதமாகவே சென்றுள்ளன.
பாசிச பா.ஜ.க. கும்பல் ஆட்சியதிகாரத்தை விரிவுப்படுத்திக்கொள்ள மூர்க்கமாக செயல்பட்டுவரும் சூழலில், களத்தில் பாசிச எதிர்ப்பு மாற்று திட்டம் – சித்தாந்தமின்றி வலுவாகப் போராட முடியாது என்பதையே இது காட்டுகிறது.
மறுபுறம், பாசிச கும்பல் கொக்கரிக்கும் மேற்குவங்க வெற்றி என்பது அதிகார வர்க்கத்தின் துணையுடன் குறுக்குவழியில் கைப்பற்றப்பட்டதாகும். மேற்குவங்க மக்கள் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை. ஏனெனில், தங்களது வாக்குரிமை பறிப்பிற்கு எதிராகவும் பா.ஜ.க. கும்பலுக்கு எதிராகவும் களத்தில் இஸ்லாமிய மக்கள் போராடி வருகின்றனர். பா.ஜ.க-வின் பாசிச – மக்கள்விரோத ஆட்சியால் விரைவில் இதர உழைக்கும் மக்களும் களத்தில் இறங்குவர். அந்தவகையில், கிழக்கின் நுழைவாயில் என பாசிச கும்பல் கொக்கரிக்கும் மேற்குவங்கம் பா.ஜ.க-வின் கல்லறையாகட்டும்.