17. தொழிலாளர்கள், குடியானவர்களின் சாதனைகள் லெனின் எதிர்பார்த்ததற்கும் மேலானவை
சோவியத் அரசாங்கத்தின் வலிமையும் நீடித்த நிலைப்பும் சிலர் அனுமானிப்பது போல எல்லா நியதிகளும் மீறப்படுவதிலோ, அறிவுக்கு எட்டாத விதியின் விந்தை விளையாட்டிலோ அடங்கியிருக்களில்லை. அது எதை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று லெனின் சொன்னாரோ அதையே தொழிலாளர்கள், குடியானவர்களின் திண்ணமான சாதனைகளையே அது ஆகாரமாகக் கொண்டிருக்கிறது.
பொருளாதாரத் துறையில் லினன், நெருப்புக் குச்சிகள் ஆகியவை தயாரிப்பதற்கும் ருஷ்யாவின் பேரளவான முற்றாக நிலக்கரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய செயல்முறைகளை அவர்கள் தொடங்கியுள்ளனர். இயந்திரத் தொழிற்சாலைகளையும் மின்னாக்க நிலையங்களையும் நிறுவுவது முதல் பால்டிக் கடலுக்கும் வோல்கா ஆற்றுக்கும் இடையே பெரிய கால்வாயை ஆழப்படுத்துவது. நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்துக்கு இருப்புப் பாதைகள் அமைப்பது வரை விரிவான பொறி இயல் நிறுவனச் செயல்களை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
இராணுவத் துறையில் தொழிலாளர்களும் குடியானவர்களும் கண்டிப்பான இராணுவக் கட்டுப்பாட்டுக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டார்கள். இந்தக் கட்டுப்பாடு செஞ்சேனையை உலகிலேயே விறல்மிக்க போர் இயந்திரங்களில் ஒன்றாக மாற்றிவிட்டது. இந்தப் பாட்டாளிகள் தனிவகை உளத்திண்மையும், உற்சாக உணர்ச்சியும் கொண்டிருக்கிறார்கள். இதற்குமுன் அவர்கள் எப்போதும் ஏதேனும் மேல் வகுப்பினரின் நலன்களுக்காகவே போரிட்டு வந்திருக்கிறார்கள். தங்கள் நலன்களுக்காகவும் உலகின் உழைப்பாளிகள், சுரண்டப்படும் மக்களுடைய நலன்களுக்காகவும் இப்போதுதான் முதல் தடவையாக உணர்வுபூர்வமாக அவர்கள் போர்கள் புரிந்து வருகிறார்கள்.
ஆயினும் பண்பாட்டுத் துறையில்தான் இந்த “அறிவு மங்கிய மக்களின்” வெற்றிகள் மிகக் குறிப்பிடத்தக்கவை ஆகும். மனிதனைக் கட்டற்றவன் ஆக்கிவிட்டால் அவன் படைக்கிறான். புத்துணர்ச்சியின் ஊக்கமூட்டும் ஸ்பரிசத்தின் விளைவாகப் பத்து புதுப் பல்கலைக்கழகங்களும் டஜன் கணக்கான நாடக மன்றங்களும் ஆயிரக்கணக்கான நூலகங்களும், பதினாயிரக்கணக்கான பொதுப் பள்ளிகளும் தோன்றியுள்ளன.
இந்த எதார்த்தங்கள்தாம் மக்ஸீம் கோர்க்கியை²⁶ சோவியத்துக்களின் ஆதரவாளராக மாற்றின. அவர் எழுதுகிறார்: “ருஷ்ய அரசாங்கத்தின் பண்பாட்டுப் படைப்புச் செயல் மனித குல வரலாற்றில் இதற்குமுன் அறியப்படாத பரப்பு எல்லையையும் வடிவத்தையும் விரைவில் மேற்கொண்டுவிடும். பண்பாட்டுத் துறையில் ருஷ்யத் தொழிலாளர்களின் சென்ற ஆண்டுச் சாதனையின் பெருமாண்பை வியந்து பாராட்டாமல் இருக்க வருங்கால வரலாற்று ஆசிரியனால் முடியாது.”
பொதுமக்கள் எத்தகைய இடையூறுகளுக்கு நடுவே உழைத்தார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இந்தச் சாதனைகள் இன்னும் பிரம்மாண்டமானவையும் முக்கியத்துவம் உள்ளவையும் ஆகிவிடுகின்றன. அவர்கள் அரசாங்கத்தைக் கையில் எடுத்துக்கொண்ட போது நூற்றாண்டுக்கணக்காகக் கொடுமைப்படுத்தவும் வறுமைக் குள்ளாக்கவும் நசுக்கவும் பட்டு வந்த மக்களே மரபுரிமையாக அவர்களுக்குக் கிடைத்திருந்தார்கள். உலக மகாயுத்தம் அவர்களுடைய உழைப்புத் திறன் கொண்ட இருபது லட்சம் ஆண்களைப் பலிவாங்கியிருந்தது. இன்னும் முப்பது லட்சம் ஆண்களை அது அங்கவீனர்கள் ஆக்கியிருந்தது லட்சக்கணக்கான அனாதைகளையும் குருடர்கள், செவிடர்கள், ஊமைகள் ஆகியோரையும் பராமரிக்கும் பொறுப்பு அவர்கள் மீது சார்ந்திருந்தது. இருப்புப் பாதைகள் தகர்க்கப்பட்டிருந்தன, சுரங்கங்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. உணவு, எரிபொருள் சேமிப்புகள் அனேகமாகத் தீர்ந்து போயிருந்தன. யுத்தத்தினால் சிதறுண்டு போய், புரட்சியினால் மேலும் தகர்க்கப் பட்டிருந்த பொருளாதார இயந்திரத்தின் மீது ஒரு கோடிப் படைவீரர்களைப் படைக் கலைப்புச் செய்யும் பொறுப்பு திடீரென்று சுமத்தப்பட்டது. அவர்கள் அமோகமாக தானியப் பயிர் விளைத்திருந்தார்கள். ஆனால் ஜப்பானியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், அமெரிக்கர்கள் ஆகியோரின் உதவியுடன் செக்கோஸ் லோவாக்கியர்கள்²⁷ சைபீரியத் தானிய வயல்களிலிருந்து அவர்களுடைய தொடர்பைத் துண்டித்துவிட்டார்கள். உக்ரேனியத் தானிய வயல்களிலிருந்து பிற புரட்சி எதிர்ப்பாளர்கள் இவ்வாறே அவர்களைத் துணிந்து அகற்றிவிட்டார்கள். “இப்போது பட்டினியின் எலும்புக்கை மக்களின் குரல்வளையை நெரித்து அவர்களுக்குப் புத்தி புகட்டும்” என்றார்கள். சோவியத் தொழிலாளர்கள் சர்ச்சை அரசிலிருந்து சமயவிலக்குச் செய்யப்பட்டார்கள். பழைய அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக மறைமுக நாச வேலைகள் செய்தார்கள். அறிவுஜீவிகள் அவர்களைக் கைவிட்டார்கள், நேச நாட்டினர் அவர்களை முற்றுகையிட்டார்கள். நேச நாட்டினர் எல்லா வகையான அச்சுறுத்தல்களாலும் கைக் கூலிகளாலும் கொலைகளாலும் சோவியத் தொழிலாளர்களின் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றார்கள். பிரிட்டிஷ் ஏஜெண்டுகள் பெரிய நகரங்களுக்குத் தேவைப் பொருள்கள் செல்லவிடாது தடுக்கும் பொருட்டு பாலங்களை வெடிவைத்துத் தகர்த்தார்கள். தங்கள் தாதுவ நிலையங்களிலிருந்து காப்புரிமை பெற்றிருந்த பிரெஞ்சு ஏஜெண்டுகள் ரெயில் எஞ்சின்களின் உராய்வு தாங்கிகளில் குருந்தக் கல்லை வைத்து அவற்றைச் சிதைத்தார்கள்.
இந்த எதார்த்த நிகழ்ச்சிகளுக்கு எதிர் நின்று லெனின் பின்வருமாறு கூறினார்:
“ஆம், நமக்கு விறல்மிக்க பகைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை எதிர்ப்பதற்குப் பாட்டாளிகளின் இரும்புப் பட்டாளம் நம்மிடம் உள்ளது. விரிவான பெரும்பான்மையினர் இன்னும் உண்மையாக உணர்வு பெறவில்லை. அவர்கள் இன்னும் ஊக்கத்துடன் செயல்படவில்லை. இதன் காரணம் தெளிவு அவர்கள் போரினால் களைத்து, பசியால் வாடிச் சோர்ந்திருக்கிறார்கள். புரட்சி இப்போது மேற்போக்காகத்தான் இருக்கிறது. ஆனால் ஓய்வு கிடைத்ததும் மக்களிடையே பெருத்த உளமாற்றம் ஏற்படும். அது உரிய நேரத்துக்குள் மட்டும் ஏற்பட்டுவிட்டால் சோவியத் குடியரசு காப்பாற்றப்பட்டுவிடும்.”
லெனினது கருத்துப்படி 1917, நவம்பர் மாத நிகழ்ச்சி திரளான பொதுமக்கள் காட்சிப் பகட்டான முறையில் பாய்ந்து தாக்கி ஆட்சியைக் கைப்பற்றியது புரட்சி அல்ல. இந்தத் திரளான மக்கள் தங்கள் குறிக்கோளை உணர்ந்து, கட்டுப்பாட்டையும் ஒழுங்கான உழைப்பையும் மேற்கொண்டு, தங்களது பெருத்த படைப்பாற்றல்களையும் ஆக்கத் திறன்களையும் செயலில் ஈடுபடுத்துவதுதான் புரட்சி ஆகும்.
அந்தத் தொடக்க நாட்களில் சோவியத் குடியரசு காக்கப்பட்டுவிட்டது என்ற உறுதியான நம்பிக்கை லெனினுக்கு ஒருபோதும் ஏற்படவில்லை. “இன்னும் பத்து நாட்கள்! அப்புறம் நாம் பாரிஸ் கம்யூன் அளவு காலம் நீடித்து நிலைத்திருந்தவர்கள் ஆகிவிடுவோம்” என்றார். பெத்ரோகிராதில் நடந்த சோவியத்துக்களின் மூன்றாவது அகில ருஷ்யக் காங்கிரஸின் முன் தமது உரையை அவர் பின்வரும் சொற்களில் தொடங்கினார்: “தோழர்களே, பாரிஸ் கம்யூன் எழுபது நாட்களே நிலைத்திருந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். நாம் ஏற்கெனவே அதை விட இரண்டு நாட்கள் அதிகமாக நீடித்திருந்துவிட்டோம்.”
பதின்மடங்கு எழுபது நாட்களுக்கும் மேல் மாபெரும் ருஷ்யக் கம்யூன் பகைவர்களின் உலகத்தை எதிர்த்துத் தாக்குப் பிடித்துவிட்டது. பாட்டாளி மக்களின் விடாப்பிடி இடையறா முயற்சி, அசையா உறுதி, வீரம் ஆகியவற்றின் மீதும் பொருளாதார, இராணுவ பண்பாட்டுத் துறைகளில் அவர்களுடைய வருங்கால வாய்ப்புக்கள் மீதும் லெனின் கொண்டிருந்த நம்பிக்கை மிகப் பெரிது. அவர்களுடைய சாதவைகள் அவரது பற்றார்ந்த நம்பிக்கையின் மெய் மட்டுமே அல்ல அவருக்கே அவை பெரு வியப்பின் ஊற்றுக்கண்ணாக விளங்குகின்றன.
18. ருஷ்யப் புரட்சி லெனினைச் சாராது தனித்த வெற்றி ஆகும்.
லெனின் ருஷ்ய வானில் எழுந்து உலக அரங்கின் மையப் பிரமுகர் ஆகிவருகையில் அவரைச் சுற்றி ஒரு விவாதப் புயல் உக்கிரமாக வீசிக் கொண்டிருக்கிறது.
திகிலடைந்த பூர்ஷ்வா வர்க்கத்துக்கு அவர் எதிர்பாராப் பேரிடியாக இயற்கையின் பயங்கர உற்பாதமாக, உலகையே அழிக்கும் கொள்ளை நோயாகத் தோற்றம் அளிக்கிறார்.
இரகசியவாதப் போக்கு உள்ளவர்களுக்கு, விந்தையான முறையில் நிறைவேறிய போருக்கு முந்திய தீர்க்கதரிசன உரையில் குறிப்பிடம் பட்ட மாபெரும் “மங்கோலிய ஸ்லாவியர்” வடிவில் அவர் காட்சி தருகிறார். இந்தத் தீர்க்கதரிசன உரை தல்ஸ்தோயால் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. உலக மகாயுத்தம் நிகழும் என்று முன்னுரைத்தபின் இந்த உரை கூறுவதாவது: “ஐரோப்பா முழுவதும் தீப்பட்டெரிவதையும் குருதி பெருக்குவதையும் நான் காண்கிறேன். பெரிய போர்க்களங்களின் புலம்பல்களை நான் கேட்கிறேன். 1915ஆம் ஆண்டு வாக்கில் வடக்கிலிருந்து ஒரு விந்தை மனிதர் இந்த உதிரப் பெருக்கு நாடகத்தில் பிரவேசிக்கிறார். அவர் இராணுவப் பயிற்சி அற்றவர். எழுத்தாளர் அல்லது பத்திரிகையாளர். ஆயினும் ஐரோப்பாவின் பெரும் பாகம் 1925 வரை அவருடைய பிடிக்குள் இருக்கும்.”
பிற்போக்குச் சர்ச்சின் கண்களுக்கு லெனின் கிறிஸ்து விரோதி. புனிதக் கொடிகளையும் தேவ உருவங்களையும் சுற்றிக் குடியானவர்களை அணிதிரட்டி அவர்களைச் செஞ்சேனைக்கு எதிராக நடத்திச் செல்லப் பாதிரிகள் முயல்கிறார்கள். ஆனால் குடியானவர்களோ, “அவர் கிறிஸ்து விரோதியாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு நிலமும், விடுதலையும் கொண்டு தருகிறார். அப்படியிருக்கும்போது அவருக்கு எதிராக நாங்கள் எதற்காகச் சண்டை செய்ய வேண்டும்?” என்று சொல்லுகிறார்கள்.
சாதாரண மனிதர்களுக்கோ லெனின் அனேகமாக அதிமனித மகத்துவம் உள்ளவராகத் தோன்றுகிறார். அவர் ருஷ்யப் புரட்சியை ஆக்கியவர். சோவியத்தை நிறுவியவர், ருஷ்யாவின் இன்றையச் சிறப்புக்கள் எல்லாவற்றுக்கும் காரண புருஷர். “லெனினையும் த்ரோத்ஸ்கியையும் கொன்றுவிட்டால் புரட்சியையும், சோவியத்துக்களையும் கொன்றுவிடுவீர்கள்”
இவ்வாறு நினைப்பது வரலாற்றை மாபெரும் மனிதர்களின் படைப்பு என்று கருதுவதாகும். பெரிய நிகழ்ச்சிகளும் சகாப்தங்களும் மாபெரும் தலைவர்களாலே நிச்சயிக்கப்படுவது போல இது அர்த்தப்படும். ஒரு சகாப்தம் முழுவதும் ஒரு தனி நபரின் வெளியீடு பெறலாம் என்பதும் ஒரு பெரிய பொதுஜன இயக்கம் ஒரு தனி மனிதரைக் குவிமுனையாகக் கொண்டிருக்கலாம் என்பதும் உண்மையே. ஆனால் வரலாற்றில் தனி நபரின் பங்கு பற்றிய கார்லைலின் கருத்துக்கு நாம் இந்த அளவுக்கு மட்டுமே விட்டுக் கொடுக்க முடியும்.
ருஷ்யப் புரட்சி ஒரு தனி மனிதரையோ அல்லது மனிதர்களின் ஒரு குழுவையோ ஆதாரமாகக் கொண்டு இயங்குவதாகக் காட்டும் வரலாற்று விளக்கம் எதுவும் தவறான வழியில் இட்டுச் செல்வது ஆகும். ருஷ்யப் புரட்சியின் நற்பேறு தமது கைகளிலோ தமது கூட்டாளிகளின் கைகளிலோ இருக்கிறது என்ற கருத்தை எல்லோருக்கும் முன்னர் லெனினே எள்ளி நகையாடுவார்.
ருஷ்யப் புரட்சியின் தலைவிதி அது எந்த ஊற்றுக் கண்ணிலிருந்து உற்பத்தி ஆயிற்றோ அதிலேயே வெகுஜனங்களின் உள்ளங்களிலும் சுரங்களிலுமேயே இருக்கிறது. எந்தப் பொருளாதாரச் சக்திகளின் அழுத்தம் இந்த வெகு ஜனங்களைச் செயலில் ஈடுபடுத்தியதோ, அவற்றை அது சார்ந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இந்த மக்கள் அசைவின்றி பொறுமையாக, நீண்ட துன்பத்தில் உழன்று வந்தார்கள். ருஷ்யாவின் விரிந்த பெருவெளிகள் எங்கணும், மாஸ்கோச் சமவெளிகளிலும் உக்ரேனிய ஸ்தெப்பிகளிலும் சைபீரியாவின் பேராறுகளை ஒட்டிய பகுதிகள் யாவற்றிலும் இந்த மக்கள் வறுமையின் சாட்டையடியால் உந்தப்பட்டு, மூடநம்பிக்கைகளால் பிண்ணிப்பினைந்து உழைத்து வந்தார்கள். அவர்களது நிலைமை கால்நடைகளின் நிலைமையைவிட மேம்பட்டதாக இல்லை. ஆனால் எல்லா விஷயங்களுக்கும் ஏழைகளின் பொறுமைக்குக்கூட முடிவு உண்டு.
1917, மார்ச் மாதம் நகர மக்கள் தங்கள் விலங்குகளை உலகம் எங்கும் கேட்ட மடார் ஒலியுடன் உடைத்து எறிந்தார்கள். படை வீரர்களின் சைனியத்தின் பின் சைனியமாக அவர்களது உதாரணத்தைப் பின்பற்றிக் கிளர்ச்சி செய்தது. பின்பு புரட்சி கிராமங்களுக்குள் புகுந்து பரவியது. மேலும் மேலும் ஆழச் சென்று மிகப் பின்தங்கிய பகுதியினரின் உள்ளங்களிலும் புரட்சி உணர்ச்சியை மூட்டிவிட்டது. முடிவில் பதினாறு கோடி மக்கள் பிரெஞ்சுப் புரட்சியில் இருந்ததுபோல் ஏழு மடங்கு மக்கள் தொகை கொண்ட நாடு அனைத்தும் தீவிர எழுச்சிக் கொந்தளிப்புற்றது.
மாண்புசால் காட்சி ஒன்றால் வசீகரிக்கப்பட்டு ஒரு மக்களினம் முழுவதும் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு புது அமைப்பை நிறுவமுற்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளில் மனித உணர்ச்சியின் மிகப் பெருத்த இயக்கம் இது ஆகும். வெகு ஜனங்களின் பொருளாதார நலன் என்ற மூலக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நியாயத்தின் பொருட்டு நடத்தப்பெறும் யாவற்றிலும் அசையா உறுதிமிக்க தாக்குதல் இதுவே ஆகும். ஒரு நாடு முழுவதும் அறப்போர் வீரனாக மாறி, புது உலகம் பற்றிய காட்சிக்கு உரிய விசுவாசத்தைக் கடைப்பிடித்தவாறு, பட்டினியையும், யுத்தத்தையும் முற்றுகையையும் சாவையும் மதியாமல் வீறுநடை நடந்து முன்னே செல்கிறது. மக்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ளாத தலைவர்களை ஒருபுறம் பெருக்கித் தள்ளிவிட்டு, அவர்களுடைய தேவைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் ஏற்பச் செயலாற்றுபவர்களைப் பின்பற்றியவாறு அது விரைந்து முன்னே ஏகுகிறது.
ருஷ்யப் புரட்சியின் விதி வெகுஜனங்களையே, அவர்களது கட்டுப்பாட்டையும் ஆழ்ந்த பற்றையுமே சார்ந்திருக்கிறது. அதிர்ஷ்டம் அவர்களிடம் மிகவும் அன்பு காட்டியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. பேரறிவும் எஃகுச் சித்தவுறுதியும் வாய்ந்த ஒருவரை, விரிந்த நூற்பயிற்சியும் அச்சமற்ற செயல்வன்மையும் கொண்ட ஒருவரை, மிக உயர்ந்த ஆதர்சவாதமும் மிகக் கண்டிப்பான நடைமுறை மதிநுட்பமும் உடைய ஒருவரை அவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளக்குபவராகவும் அது நல்கியிருக்கிறது.
26. மக்ஸீம் கோர்க்கி (பேஷ்கல் அ.ம.) (1868-1936) மாபெரும் பாட்டாளி வர்க்க எழுத்தாளர்.
27. ருஷ்யாவில் செக்கோஸ்லோவாக்கியப் படைப்பிரிவுகள் முதலாவது உலக யுத்தத்தின்போது செக், ஸ்லோவாக் போர்க் கைதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டன. 1918, மே மாதத்தில் பிரெஞ்சு பிரிட்டிஷ் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் சோஷலிஸ்ட் புரட்சிவாதிகள், மென்ஷெவிக்குகள் ஆகியோரின் செயலூக்கமுள்ள உதவியுடன் வோல்காப் பிரதேசத்திலும் சைபீரியாவிலும் செக் படைப் பிரிவுகளில் புரட்சி எதிர்ப்புக் கலகத்தை மூட்டிவிட்டார்கள்.
(முற்றும்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram