1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 31, இதழ் 3 | ஜனவரி, 2016 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
மார்ச் 20, 1927 அன்று மகாராஷ்டிராவில் அம்பேத்கர் தலைமையில் திரண்ட ஆயிரக்கணக்கான தலித் மக்கள் சௌதர் குளத்தில் நீரை அள்ளிப் பருகி, பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமைக்காகப் போராடினர். இது அச்சமயத்தில் பார்ப்பனிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராக தலித் மக்களிடையே ஏற்பட்ட எழுச்சியின் துலக்கமான வெளிப்பாடாகும்.
ஒரு நூற்றாண்டு கடந்த பிறகும் இன்றும் பொதுக்குளத்தில் இறங்கியதற்காகவும் பொதுக் குடிநீரைப் பருகியதற்காகவும் தலித் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர்; அவர்களின் குடிநீரில் மலம் கலக்கப்படுகிறது. இந்தச் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழ்நாடு உள்ளிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தலித் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டு வருகிறது.
இந்த எழுச்சியை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு எதிரான எழுச்சியாக வளர்த்தெடுக்க வேண்டியதும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கு எதிராகவும் களமாட வேண்டியதும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் கடமையாகும்!
கடந்த 2026 பிப்ரவரி 21 அன்று அதிகாலை 3:20 மணிக்கு, டெல்லி சுபாஷ் நகர் பகுதியில் 25 வயதான ஹேம் சங்கர் என்ற இளைஞர் தனது மின்சார இருசக்கர வாகனத்தில் டெலிவரிக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதியதில், தூக்கி வீசப்பட்ட சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடும்பத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சுமையையும் சுமந்துவந்த அந்த இளைஞனின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டது. இதேபோல ஹைதராபாத்திலும் ஒரு கொடூரம் நிகழ்ந்தது. கடந்த ஜனவரி 5-ஆம் தேதி, இளங்கலை மாணவரான அபிஷேக் (25 வயது) டெலிவரி செய்வதற்காகச் சென்றார். மெஹ்திப்பட்டினம் பகுதியில் வண்டி சறுக்கி விழுந்ததில், தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த இரண்டு கொடூரமான விபத்துகளிலும் தங்கள் உயிரைப் பறிகொடுத்தவர்கள் செப்டோ (Zepto) நிறுவனத்தின் டெலிவரி ஊழியர்கள் ஆவர். ஆனால், “உயிரிழந்தவர்களுக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை” என செப்டோ நிறுவனம் அப்பட்டமாகப் பொய்யுரைத்தது. விபத்து நடந்த நேரத்தில் அவர்கள் தங்களுக்காகப் பணியாற்றவில்லை என்று கூறித் தனது முதலாளித்துவத் திமிரைக் காட்டியுள்ளது.
பிப்ரவரி 3 அன்று டெல்லியில் பெண் கிக் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம்.
முதலாளித்துவ உற்பத்தி முறையின் உச்சக்கட்ட வளர்ச்சியான ஏகாதிபத்திய காலகட்டம் உருவாக்கிய கிக் தொழிலாளர் வர்க்கமானது, இன்று மிகக் கொடூரமான முறையில் சுரண்டப்பட்டுவரும் நவீன பாட்டாளி வர்க்கமாக உருவெடுத்துள்ளது. இவர்கள் எதிர்கொள்ளும் சுரண்டல் வடிவமானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து, நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வகையில் பல்வேறு பரிமாணங்களை அடைந்து வருகிறது. இவ்வாறான சூழலில்தான், உயிர் வாழ்வதற்கான தங்களின் அடிப்படை உரிமையை மீட்கப் போர்க்களத்தில் குதித்துள்ளனர் கிக் தொழிலாளர்கள்.
கிக் பொருளாதாரம் – நவீன சுரண்டலின் அடுக்குமுறை
முதலில், இந்தக் கிக் பொருளாதாரக் கட்டமைப்புக் குறித்துப் பார்ப்போம்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு “செயலியை” (App) மட்டுமே உருவாக்கிவிட்டு, தங்களை வெறும் “இடைத்தரகர்கள்” என்று சட்டப்பூர்வமாகப் பாதுகாத்துக் கொள்வதுடன், எந்தவொரு முதலீடுமின்றி ஒட்டுமொத்த லாபத்தையும் அறுவடை செய்கின்றன. இவர்களை “திரட்டிகள்” (Aggregators) அல்லது “செயலி உரிமை நிறுவனங்கள்” என்றும் குறிப்பிடலாம்.
அடுத்த அடுக்கில், மனித மேலாளருக்குப் பதிலாக “அல்காரிதம்” (Algorithm) எனப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பமே தொழிலாளர்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. எந்தப் பேரம் பேசுதலுக்கும் இடமின்றி, நேரக் கட்டுப்பாடு, அபராதம், ரேட்டிங் குறைப்பு என மனித உணர்வுகளற்ற ஓர் இயந்திரமாக இது தொழிலாளர்களை ஆட்டிப்படைக்கிறது.
இதற்கடுத்த நிலையில், நுகர்வோர் அளிக்கும் “ஸ்டார் ரேட்டிங்” (Rating) மூலமாகத் தொழிலாளியின் வாழ்வாதாரம் மறைமுகமாகக் கண்காணிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, நிறுவனங்கள் தாங்கள் வழங்க வேண்டிய நியாயமான ஊதியப் பொறுப்பிலிருந்து நழுவி, “டிப்ஸ்” என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் மீதே அந்தப் பொருளாதாரச் சுமையை நைச்சியமாகச் சுமத்துகின்றன. இந்த அடுக்கின் கீழ்நிலையில் இருத்தப்பட்டு, “பங்குதாரர்கள்” (Partners) என்ற போர்வையில் மிக மோசமாகச் சுரண்டப்படுபவர்கள், உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களே ஆவர்.
சொந்த வாகனம், சொந்தப் பெட்ரோல் செலவு என அனைத்தையும் சுமந்துகொண்டு, எவ்வித வேலைப் பாதுகாப்போ, மருத்துவக் காப்பீடோ, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உரிமையோ இல்லாமல் அற்பக் கூலிக்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து உழைக்கிறார்கள். உழைப்பு, முதலீடு, விபத்து அபாயம் என அனைத்தும் அடித்தளத்திலிருக்கும் தொழிலாளியுடையது; ஆனால் லாபம் மட்டும் எவ்விதப் பொறுப்பும் ஏற்காத உச்சத்திலிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கானது. இதுதான் “அல்காரித முதலாளித்துவத்தின்” அப்பட்டமான சுரண்டல் வடிவம்!
பங்குதாரர்கள் என்ற போர்வையில் அரங்கேறும் டிஜிட்டல் அடிமைத்தனம்
கிக் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் தொழிலாளர்கள் அல்ல, மாறாக அவர்கள் பங்குதாரர்கள் (டெலிவரி பார்ட்னர்கள்) என்பதே கார்ப்பரேட்டுகளால் தொடர்ந்து முன்வைக்கப்படும் வாதம். தங்களின் உழைப்பிற்குப் பதிலாகப் வருமானம் ஈட்ட தளங்களுடன் இணைந்து பணியாற்றும் தொழில்முனைவோர்கள் (Entrepreneurs) என்றும் இவர்கள் சுயாதீனமாகச் (Independent) செயல்படுகிறார்கள் என்றும் நிறுவனங்கள் கூறுகின்றன.
ஆனால், சட்டப்பூர்வமாகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உரிமைகளைக் கூடப் பறிக்க வேண்டும் என்பதிலிருந்து கார்ப்பரேட்டுகளால் திட்டமிட்டு தந்திரமான இவ்வாதம் முன்வைக்கப்படுகிறது.
தொடக்கத்தில், “எவ்வளவு வேலை செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்பதைத் தொழிலாளர்களே முடிவு செய்து கொள்ளலாம்” என்று ஊதிப்பெருக்கினார்கள். ஆனால் தற்போது, ஒரு நாள் முழுவதும் வேலை பார்த்துவிட்டு ஒரேயொரு ஆர்டரை மட்டும் இரத்து செய்தால் கூட அபராதம் விதிக்கப்படும். ஊக்கத்தொகை கிடைக்காது; நான்கு ஆர்டருக்கு மேல் இரத்து செய்தால் அந்தத் தொழிலாளியின் செயலி கணக்கே முடக்கப்படும் என்று பல கெடுபிடிகளைச் செயலிகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் விதித்து வருகின்றன. தேவை அதிகமுள்ள நேரங்களில் உள்நுழையாவிட்டாலோ (Log-in) அல்லது டெலிவரி வேலைகளை நிராகரித்தாலோ தொழிலாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்தச் செயலியில் “தானியங்கி வேலை ஒதுக்கீடு” என்ற முறை புகுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதத் தலையீடு இல்லாமல் மென்பொருள் தானாகவே அடுத்தடுத்த ஆர்டர்களுக்கான வேலைகளைப் பிரித்து ஒதுக்கித் தரும். இதனால் தொழிலாளர்களால் தேவைப்பட்ட நேரத்தில் சிறு இடைவேளை கூட எடுக்க முடியாது. இப்படிப் பலரும் தண்ணீர் குடிக்காமலும் உணவு உண்ணாமலும் தொடர்ந்து இயந்திரம் போல வேலை செய்வதால் குடற்புண், மூலநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
ஒரு ஆர்டருக்கு அடிப்படை விலையாக ரூ.35 முதல் ரூ.55 வழங்கப்படுகிறது என்றால், அதில் 25 சதவிகிதம் வரை – எந்த உழைப்பிலும் ஈடுபடாத இடைத்தரகரான திரட்டிகள் (செயலியின் உரிமை நிறுவனங்கள்) பறித்துக்கொள்ளும் சதியும் இதில் அடங்கியுள்ளது. இதனால் அன்றாடக் குடும்பச் செலவிற்கான குறைந்தபட்சப் பணத்தை ஈட்டுவதற்கு ஒரு நாளிற்கு 50 முதல் 60 ஆர்டர்கள் வரை பூர்த்திச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், ஏற்கெனவே உழைப்புக்கான ஊதியம் மறுக்கப்படும் இவர்கள், கடைகளில் பொருட்களை வகைப்படுத்துதல் மற்றும் பேக்கிங் செய்தல் போன்ற கூடுதல் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். ஆனால், இந்த வேலைகளுக்கு இவர்களுக்கு எந்த ஊதியமும் அளிக்கப்படுவதில்லை. அதிலும், சமூகப் பாதுகாப்பு, கண்ணியம், சட்டப் பாதுகாப்பு போன்ற அனைத்தும் மறுக்கப்பட்டுப் பெரும் பாலியல் மற்றும் உளவியல் சவால்களை எதிர்கொள்வது பெண் கிக் தொழிலாளர்களே ஆவர்.
இவையெல்லாம் கிக் தொழிலாளர்கள் எந்தளவிற்குக் கொடூரமான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதற்கான சில சான்றுகள் மட்டுமே.
“நெகிழ்வுத் தன்மை” என்கிற மாயையும் 10 நிமிட மரணப் பந்தயமும்
“நெகிழ்வுத் தன்மையுடைய வேலை” (Flexible work) என்று கவர்ச்சிகரமாகக் கூவி அழைத்து, கோடிக்கணக்கான தொழிலாளர்களை இத்துறைக்குள் கொண்டுவந்த முதலாளிகள், தற்போது தங்களின் நரித்தந்திரத்தைக் கட்டவிழ்த்துவிட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளைக் கசக்கிப் பிழிந்து வருகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட புதிய உழைப்பு சக்திகள் படையெடுத்து வரும் இந்திய உழைப்புச் சந்தையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அற்பக் கூலிக்கு ஆள் பொறுக்கி வருகின்றன.
சமூகப் பாதுகாப்புத் துளியும் இல்லாத வகையிலேயே இந்த வேலைகள் வடிவமைக்கப்படுகின்றன. குடும்பப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு 18 முதல் 50 வயதினரே கிக் தொழிலில் பெருமளவு ஈடுபட்டு வருகின்றனர். 10 முதல் 12 மணி நேரம் வரை வேலை பார்த்தாலும், பெட்ரோல், உணவு மற்றும் இதர செலவுகளைக் கழித்தால் வெறும் 700 ரூபாய்தான் அவர்கள் கையில் மிஞ்சுகிறது. நூறாண்டுகளுக்கு முன் தொழிலாளி வர்க்கம் இரத்தம் சிந்திப் பெற்ற எட்டு மணி நேர வேலை உரிமையை இழந்து, இரண்டு மடங்காக இயந்திரம் போல் உழைத்தால் மட்டுமே இந்தப் பணத்தைக் கூட அவர்களால் சம்பாதிக்க முடியும்.
உட்கார்ந்த இடத்திலிருந்தே உடனுக்குடன் நமது தேவைகள் பூர்த்திச் செய்யப்பட வேண்டும் எனும் மேட்டுக்குடி நுகர்வுவெறியை அடித்தளமாக வைத்து, செப்டோ, அமேசான் (Amazon), ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) உள்ளிட்ட பல செயலி சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கின்றன. 2025-26-ஆம் ஆண்டிற்கான சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 20 இலட்சத்தை எட்டியுள்ளது. பாஸ்டன் கன்சல்டிங் குரூப் மற்றும் நிதி ஆயோக் தரவுகளின்படி, 2030-ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 2.35 கோடியாக உயரும் எனவும், இதன் சந்தைப் பரிவர்த்தனை மதிப்பு சுமார் 250 பில்லியன் டாலர்களை (சுமார் 20 இலட்சம் கோடி ரூபாய்) எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பில்லியன் டாலர் சந்தையைக் கைப்பற்றவும், பிரம்மாண்டமான லாபத்தை ஈட்டவும் கார்ப்பரேட்டுகள் கையிலெடுத்துள்ள மிகக் கொடிய ஆயுதமே “வேகம்”. இதன் உச்சக்கட்டமாகவே, ஸ்விக்கியினுடைய இன்ஸ்டாமார்ட் (Instamart), சொமாட்டோவின் பிளிங்க்இட் (Blinkit) உள்ளிட்டவை “10 நிமிடத்திற்குள் டெலிவரி” என்பதைத் தங்களின் தனித்துவ அடையாளமாக மாற்றிவிட்டன. காலதாமதமாக டெலிவரி செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதோடு, ஒரு கட்டத்தில் தொழிலாளியின் செயலி கணக்கே முடக்கப்படும் என்பதால், எப்படியும் நேரத்திற்குள் சென்று பொருட்களை டெலிவரி செய்துவிட வேண்டும் என்று தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் செல்கின்றனர். இதனால் அவர்கள் பல விபத்துகளையும் உயிரிழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.
தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலத்தில், ஆலைகளுக்குள் “கன்வேயர் பெல்ட்டின்” (Conveyor Belt) வேகத்தை அதிகரிப்பதன் மூலம், அதோடு பிணைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களின் உழைப்பை முதலாளி வர்க்கம் கொடூரமான முறையில் உறிஞ்சியது. இன்று, தொழிலாளர்களை உதிரிகளாகச் சிதறடித்துள்ள இந்த அல்காரிதக் காலத்தில், ஆலைகளுக்குள் இருந்த கன்வேயர் பெல்ட்டிற்குப் பதிலாக வீதிகளில் “டெலிவரி மற்றும் பிக்கப் வேகத்தை” கூட்டிக்கொண்டே செல்வதன் மூலம் அதே சுரண்டல் நவீன வடிவத்தில் அரங்கேறுகிறது. தங்களின் இலாப வெறிக்கான சந்தைப் போட்டியில், முதலாளித்துவம் எப்போதும் தொழிலாளிகளின் உயிரையே பலியிட்டு வருகிறது என்பதற்கு இந்தக் கிக் பொருளாதாரமே மிகச்சிறந்த சான்று.
புதிய தொழிலாளர் சட்டம் எனும் பித்தலாட்டம்
வேலைப் பாதுகாப்பின்மை, நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் இல்லாதது, உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, வேலைப் பலன்கள் இல்லாதது போன்றவற்றை ஒரு செயலியுடன் இணைத்ததன் மூலம், இந்த முறைசாரா வேலைமுறையின் கூறுகளை ஒரு நிறுவனம் என்கிற கட்டமைப்பிற்குள் கொண்டுவந்து, ஒழுங்கற்ற இந்தப் போக்கை நிறுவனமயப்படுத்தியதைத் தவிர இந்தக் கிக் பொருளாதாரம் வேறு எதையும் சாதித்துவிடவில்லை.
நிலையற்ற தன்மை என்பது நவீன வேலைவாய்ப்பின் மையக்கூறாக உருவெடுத்துவரும் வேளையில், பணிப் பாதுகாப்பின்மை என்பது இயல்பாக்கப்பட்டுவிட்டது. ஆண்டுதோறும் எண்ணிக்கையில் விரிவடைந்து வரும் இந்த நவீன பாட்டாளிகளின் பணிப் பாதுகாப்பும் சமூகப் பாதுகாப்பும் சுருங்கிக்கொண்டே செல்லும் என்பதில் ஐயமில்லை.
கிக் தொழிலாளர்களுக்குக் காப்பீடுகளை வழங்குவதாகப் பல நிறுவனங்கள் கூறினாலும், அவற்றைப் பெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் நீடிக்கின்றன என்றும் நிதி சார்ந்த வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான நிறுவனங்கள் கிக் தொழிலாளர்களை, “தொழிலாளர்” என்று அங்கீகரிக்காமல் “ஓட்டுநர்கள், பயனர்கள் மற்றும் பங்குதாரர்கள்” என்று வகைப்படுத்துவதால், இவர்கள் தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் பலன்களைப் பெறும் தகுதியிலிருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுகிறார்கள்.
புதிய நான்கு தொழிலாளர் சட்டத்தின் ஓர் அங்கமான “சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020”-இல், கிக் தொழிலாளர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தச் சட்டத்தில் கிக் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியம் உள்ளிட்டவை பற்றிய குறிப்பான தகவல்கள் எதுவும் இல்லாமல் மேலோட்டமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், “இ-ஷ்ரம்” (e-Shram) என்ற அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான இணையதளத்தில் பதிவு செய்பவர்கள் மட்டுமே இந்தச் சட்டப் பலன்களைப் பெற முடியும் என்ற விதியானது, அரசு நடத்தும் டிஜிட்டல்மயமாக்கல் என்னும் கண்துடைப்பு நாடகமே அன்றி வேறில்லை. எவ்வாறாயினும், கார்ப்பரேட்டுகளுக்குச் சேவகம் செய்வதையே தனது தலையாயக் கடமையாகக் கொண்ட மோடி தலைமையிலான பாசிச அரசு இந்த அம்சங்களை நடைமுறைப்படுத்துமா என்பதும் கேள்விக்குறிதான்.
தனிநபர்களிலிருந்து கூட்டு சக்தியாக கிக் சங்கப் போராட்டங்கள்
தங்களைத் தனிமைப்படுத்தப்பட்ட உதிரிகளாகக் கருதிய நிறுவனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, கிக் தொழிலாளர்கள் தங்களை ஒரு வலிமையான “கூட்டு சக்தியாக” ஒன்றிணைத்து நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
1) கிக் தொழிலாளர்களை “பங்குதாரர்கள்” என ஏமாற்றுவதைக் கைவிட்டு, அவர்களைச் சட்டப்பூர்வமான “தொழிலாளர்களாக” அங்கீகரித்து, அவர்களுக்கெனத் தனியான ஒன்றிய சட்டத்தை இயற்ற வேண்டும். 2) அடிப்படை ஊதியத்தை உயர்த்துவதோடு, ஆர்டரை இரத்து செய்வதற்கான இரட்டை அபராதங்கள், நியாயமற்ற கமிஷன் பிடித்தங்கள் மற்றும் முன் அறிவிப்பின்றி ஐ.டி-யை முடக்குவது போன்ற எதேச்சதிகார நடவடிக்கைகளைத் தடை செய்ய வேண்டும். 3) மனிதத் தலையீடற்ற தானியங்கி வேலை ஒதுக்கீடு, அபாயகரமான நேர வரம்புகள் (10 நிமிட டெலிவரி) மற்றும் தொழிலாளர்களை மனதளவில் சிதைக்கும் ரேட்டிங் முறைகளை உடனடியாகக் கைவிட வேண்டும். 4) மருத்துவ மற்றும் மாதவிடாய் அவசர நிலைக்கான சிறப்பு வசதிகள் (SOS / Red Button), பாலியல் வன்கொடுமைத் தடுப்புக்கான உள்குழுக்கள் மற்றும் வெளிப்படையான குறைதீர்க்கும் மையங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி “செயலி சார்ந்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்தியக் கூட்டமைப்பு” (IFAT) ஒருங்கிணைத்த போராட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதுகுறித்துக் கருத்து தெரிவித்த சொமாட்டோவின் இணை நிறுவனர் தீபேந்தர் கோயல், “போராட்டத்திற்கான அழைப்புகளையும் தாண்டி சொமாட்டோ மற்றும் பிளிங்க்இட்-இன் விற்பனைகள் சாதனை அளவைத் தொட்டுள்ளன. ‘சமூக விரோதிகளைக்’ கட்டுப்படுத்துவதற்கு உள்ளூர் போலீசுதுறை எங்களுக்குத் துணைபுரிகிறது” என்று திமிர்த்தனமாகப் பேசியுள்ளார். இதன் மூலம், அரசுக்கும் கார்ப்பரேட்டுகளுக்குமான கள்ளக்கூட்டு அம்பலமாகிறது.
மேலும், “அடிப்படையில் நியாயமற்றதாக விளங்கும் எந்த ஒரு வேலை முறையும் இவ்வளவு பேரை ஈர்க்கவும் நீடிக்க வைக்கவும் முடியாது” என்று கூறியுள்ளார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக “தெலுங்கானா கிக் மற்றும் டிஜிட்டல் தளத் தொழிலாளர் சங்கம்” (TGPWU), “புத்தாண்டு தினத்தன்று 75 லட்சம் ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டன என்றால், அதற்கு ஒருநாள் கூலியைக் கூட இழக்க முடியாத தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடிதான் காரணமே தவிர, இந்தக் கட்டமைப்புத் தொழிலாளர்களை நியாயமாக நடத்துவது அல்ல” என்று கூறியுள்ளது.
ஏற்கெனவே கிக் தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தால் நட்டமடைந்த முதலாளிகள், அவர்களைப் போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் பல சதி வேலைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஓர் அங்கமாகத்தான், ஆர்டரை இரத்துச் செய்வதற்கும் செயலி கணக்கிலிருந்து வெளியேறிவிட்டு (லாக் அவுட்) மீண்டும் நுழைவதற்கும் இந்நிறுவனங்கள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன.
எனினும், ஜனவரி 26-ஆம் தேதி நாடு முழுவதுமுள்ள கிக் தொழிலாளர்கள் பலரும் தங்கள் செயலிகளை முடக்கி வைத்து இணையவழிப் போராட்டத்தை (Digital Strike) நடத்தினர். இதனையடுத்து பிப்ரவரி 3-ஆம் தேதி, நாடுதழுவிய அளவில் “கிக் மற்றும் டிஜிட்டல் தளச் சேவை தொழிலாளர்கள் சங்கம்” (GIPSWU) போராட்டத்தை முன்னெடுத்தது.
அதற்கடுத்ததாக, பிப்ரவரி 7 அன்று டி.ஜி.பி.டபிள்யு.யு., ஐ.எஃப்.ஏ.டி. மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட முக்கிய கிக் தொழிலாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து நாடுதழுவிய போராட்டத்தை நடத்தின. இலட்சக்கணக்கான கார், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி தொழிலாளர்கள் தங்களின் தன்னுரிமையை நிலைநிறுத்தும் வகையில், தொடர்ந்து ஆறு மணி நேரம் செயலிகளிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறி (Log-off) புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
உழைப்பவர்களின் இந்த அசுரத்தனமான ஒருங்கிணைப்பால், பெருநகரங்கள் முழுவதும் போக்குவரத்து மற்றும் உணவு டெலிவரி சேவைகள் முற்றிலும் ஸ்தம்பித்து, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிக் பொருளாதாரமே சில மணி நேரங்களில் ஆட்டம் கண்டது. “இதன் மூலம் கிக் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதை அரசு, செயலி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தெரிவிக்க முற்படுகிறோம்” என்று சங்கங்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
போராட்டத்தின் விளைவு
இந்தத் தொடர் போராட்டங்களின் முதற்கட்ட வெற்றியாக, 10 நிமிட டெலிவரி விளம்பரங்களைக் கைவிடுமாறு நிறுவனங்களுக்கு ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சில தளங்களும் தங்கள் விளம்பர வாசகங்களை மாற்றிக்கொண்டன. இருப்பினும், தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும் அல்காரிதத்தின் ஆதிக்கத்தையோ, அதிவேகக் கட்டமைப்பையோ அரசு முழுமையாகத் தடை செய்யவில்லை. மேலும், தொழிலாளர்களின் மையமான கோரிக்கையான சட்டப்பூர்வ அங்கீகாரம் குறித்துக் கள்ளமௌனம் சாதித்து வருகிறது மோடி தலைமையிலான கார்ப்பரேட் நல அரசு.
அந்தவகையில், அறிவிக்கப்பட்டுள்ள சில மாற்றங்கள், தொழிலாளர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த தொடக்கநிலை வெற்றி மட்டுமே; உண்மையான சட்டப்பூர்வ தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க, இந்த ஒருங்கிணைந்த போராட்டம் இன்னும் வீரியமாகத் தொடர வேண்டியுள்ளது.
நம் முன்னுள்ள கடமை
கிக் தொழிலாளர்களின் பிரச்சினை என்பது நிதி சார்ந்தது மட்டுமல்ல; உடல் நலம், மனநலம் சார்ந்த கொடிய பாதிப்புகளையும் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். பணியில் ஏற்படும் சவால்கள் அனைத்தையும் கிக் தொழிலாளர்களின் தலையில் இறக்கிவிட்டு, லாபத்தை மட்டும் பிழிந்தெடுக்கும் ஏகாதிபத்திய உழைப்புச் சுரண்டலானது, மிக ‘நவீன’ வடிவத்தில் மேற்கொள்ளப்படுகிறது. முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான பிரதான அரசியல் கட்சிகள் எவையும் இதனை எதிர்த்துக் கேள்வி கேட்கப் போவதில்லை.
அந்தவகையில், அமைப்பு சாரா நவீன பாட்டாளிகளான கிக் தொழிலாளர்களின் அமைப்பாக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளால் மட்டுமே, அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதை நடந்துமுடிந்த வேலைநிறுத்தப் போராட்டங்கள் நமக்கு அழுத்தமாக உணர்த்தியுள்ளன. எனவே, மனித உரிமை ஆர்வலர்கள், தொழிலாளர் நல அமைப்புகள், உழைக்கும் வர்க்கத்தினர், ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர அமைப்புகள் அனைவரும் கிக் தொழிலாளர்களின் இந்த உரிமைப் போராட்ட அனுபவங்களைக் கையில் கொண்டு, டிஜிட்டல் முதலாளித்துவத்திற்கு எதிரான அவர்களின் அடுத்தகட்டப் பயணத்திற்கும் தொடர்ந்து துணைநிற்போம்!
தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற 29 தொழிலாளர் சட்டங்களை பாசிச மோடி அரசு கொரோனா ஊரடங்கு காலத்தில் தன்னிச்சையாக நீக்கிவிட்டு, தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020, தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 ஆகிய நான்கு சட்டத்தொகுப்புகளை பாசிச முறையில் நிறைவேற்றியது.
இதற்கெதிராக தொழிலாளர்கள் போராடிவந்த நிலையில் அவர்களின் எதிர்ப்பையும் மீறி நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்துவதாக கடந்த நவம்பர் 21-ஆம் தேதி மோடி அரசு அறிவித்திருக்கிறது.
தொழிலாளி வர்க்கத்தின் கடும் எதிர்ப்பாலும், தொழிலாளர் சட்டங்கள் பொதுப்பட்டியலில் இருப்பதால் மாநில அரசுகள் இச்சட்டத் தொகுப்புகளை ஏற்றுக்கொண்டு அதற்கான விதிகளை உருவாக்க வேண்டியிருந்ததாலும் இச்சட்டத்தொகுப்புகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தன.
ஆனால், மேற்குவங்கம், லட்சத்தீவுகள் தவிர்த்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உள்ளிட்டு 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இச்சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்த ஏற்றுக்கொண்டு வரைவு விதிகளை வகுத்து வெளியிட்டுள்ளன. அதனடிப்படையில், தற்போது இச்சட்டத்தொகுப்புகள் மோடி அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற பல அடிப்படையான, அத்தியாவசிய உரிமைகளை பறிக்கும் இச்சட்டத் தொகுப்புகள் கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள் மற்றும் போலீசு கும்பலின் சர்வாதிகாரத்தின் கீழ் ஒரு காட்டாட்சியை நிறுவி தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாய் மாற்றுகின்றன.
வேலையை வாங்கி முடித்தபின் தூக்கியெறி! புதிய தொழிலுறவுக் கொள்கை
நிரந்தர தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக ஒப்பந்த தொழிலாளர் சட்டம் மற்றும் “நீம்” (NEEM), “நாப்ஸ்” (NAPS) போன்ற பயிற்சித் திட்டங்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், புதிய சட்டத் தொகுப்பில் “நிலையான கால வேலைவாய்ப்பு” (Fixed Term Employment) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையான கால வேலைவாய்ப்பில் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதற்கான கால வரம்பு குறிப்பிடப்படவில்லை. இது முன்னறிவிப்பின்றியும், இழப்பீடு வழங்காமலும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு முதலாளிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. அதாவது, ஆறு மாதம் அல்லது ஓராண்டு காலம் என்ற குறுகிய கால வரம்பில் தொழிலாளர்களை நியமித்து அவர்களின் உழைப்பை ஒட்டச்சுரண்டிவிட்டு வெளியேற்றுவது என்ற “வேலையை வாங்கி முடித்தபின் தூக்கியெறி” (Hire and Fire Policy) எனும் கொள்கையின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல, முன்னர் 100-க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகளை மூடுவதற்கும் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதற்கும் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டியதில்லை என்ற விதி இருந்தது; ஆனால், இச்சட்டத் தொகுப்பில் தொழிலாளர்களின் வரம்பு 300-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 90 சதவிகித தொழிற்சாலைகளில் 300-க்கும் குறைவான தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். இம்மாற்றத்தின் மூலம் அக்கோடிக்கணக்கான தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமையை கைகழுவியுள்ளது பாசிச மோடி அரசு.
மேலும், இச்சட்டத் தொகுப்பில் தொழிற்சாலையில் மேற்பார்வையாளர் பணியில் இருப்பவர் மாதம் ரூ.18,000 மேல் ஊதியம் பெற்றால் தொழிலாளி என்ற வரையறையின் கீழ் வரமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தொழிலாளர்களின் சட்டப் பாதுகாப்புகள் ஒரேயடியாகப் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த சட்ட விதிகள் மூலம் தாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தை தொழிலாளர்களிடம் உருவாக்கி, அவர்களின் எதிர்ப்பை அடக்குவது; முதலாளிகளுக்கு நவீன கொத்தடிமைகளை உருவாக்கிக் கொடுப்பது என்பதே இவற்றின் பின்னணியில் உள்ள பாசிச சதித்திட்டமாகும்.
தொழிற்சங்க ஒன்றிணைவு சட்டப்பூர்வமாகவே தடுப்பு
பழைய தொழிலாளர் சட்டத்தில், குறைந்தபட்சம் ஏழு தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்கமாக பதிவு செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் நடைமுறையில் நிறுவனமும் அரசும் தொழிற்சங்கம் அமைப்பதற்கு தொழிலாளர்களை அனுமதிப்பதில்லை. தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் ஆலையில் சங்கம் வைக்கும் உரிமைக்கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும் தி.மு.க. அரசு அவர்கள் மீது செலுத்திய ஒடுக்குமுறைகளுமே அதற்கான சான்று.
ஆனால், இப்புதிய தொழிலாளர் சட்டங்களில் தொழிற்சங்கங்கள் அமைப்பது சட்டப்பூர்வமாகவே தடுக்கப்பட்டுள்ளன. புதியதாக ஒரு தொழிற்சங்கத்தை பதிவு செய்ய, தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் 10 சதவிகிதம் அல்லது 100 தொழிலாளர்கள் (எது குறைவோ) ஆதரவு இருக்க வேண்டும் என்று புதிய சட்டத் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் சங்கமாய் ஒன்றிணைவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே நைச்சியமாக இவ்விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், இச்சட்டத்தொகுப்பில் தொழிற்சாலைகளில் செயல்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களையும் ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் சட்டவிதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒற்றை தொழிற்சங்கம் உள்ள தொழிற்சாலைகளில், நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அத்தொழிற்சங்கம் 51 சதவிகித தொழிலாளர்களின் ஆதரவு பெற்றிருக்க வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமாக தொழிலாளர்களின் கூட்டுப்பேர உரிமையை பறிப்பதாகும்.
அதேபோல், முன்னர் தொழிற்சங்கத்தின் நிர்வாகக் குழுவில், 50 சதவிகித எண்ணிக்கையில் நிறுவனத்தில் பணிபுரியாத தொழிற்சங்கத் தலைவர்கள் இருக்க முடியும். ஆனால், தற்போது இத்தலைவர்களின் எண்ணிக்கை மொத்த நிர்வாகிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ஐந்து நபர்கள் எனக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சங்க செயல்பாடுகளை முடக்க விழைகிறது மோடி அரசு.
முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காக வேலைநிறுத்த உரிமைகள் பறிப்பு
பழைய தொழிலாளர் சட்டத்தில் இரயில்வே, துறைமுகங்கள், சுகாதாரம் போன்ற பொதுப் பயன்பாட்டுத் துறைகளில் மட்டும் முன்னறிவிப்பின்றி (Notice) வேலைநிறுத்தம் செய்வதற்கு தடை இருந்தது. ஆனால், புதிய சட்டத் தொகுப்பானது அனைத்து துறைகளுக்கும் முன்னறிவிப்பை கட்டாயமாக்கியுள்ளது. தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்றால், அதற்கான முன்னறிவிப்பை நிர்வாகத்திடம் கொடுத்து 14 நாள் கழித்தே வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆலை நிர்வாகம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களையும் தலைமை தாங்குகின்ற முன்னணியாளர்களையும் அச்சுறுத்தி சீர்குலைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், சமரசப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதும், பேச்சுவார்த்தை முடிந்து ஏழு நாட்களுக்கும், தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்தால், தீர்ப்பு வந்து 60 நாட்கள் வரையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது, நிறுவனங்கள் பேச்சுவார்த்தை மற்றும் வழக்கை இழுத்தடிப்பதன் மூலம் தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபட விடாமல் தடுப்பதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல, நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கூட்டாக முன்னறிவிப்பு இல்லாமல் விடுமுறை எடுத்தாலும் அது சட்டவிரோத வேலைநிறுத்தமாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விதிகளை மீறுகின்ற தொழிலாளர்கள் மீது சிறைத்தண்டனை, அபராதம் என சட்டப்பூர்வமாகவே தாக்குதல் தொடுக்கப்படும். இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் மீது ஏவப்படும் போலீசு அடக்குமுறையை, தற்பொழுது நிலவுவதை விட மேலும் தீவிரப்படுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது.
இவற்றின் மூலம், தங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடுவதற்கான தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையை சட்டப்பூர்வமாகவே குற்றமாக்கியுள்ளது பாசிச மோடி அரசு.
நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கிக் (செயலி வழி) தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். பணிப் பாதுகாப்பற்ற வேலை நிலைமை, மிகக் குறைந்த ஊதியம், செயலி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை, கணக்கு தன்னிச்சையாக முடக்கப்படுவது உள்ளிட்டு தங்கள் மீதான அடக்குமுறைகளை முன்வைத்து நாட்டின் பல மாநிலங்களில் கிக் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளிலும் கிக் தொழிலாளர்களை “தொழிலாளி” என்று வரையறுக்காமல் “ஒப்பந்ததாரர்கள்” என்றே வரையறுத்துள்ளது மோடி அரசு. இதன் மூலம், கிக் தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு, குறைந்தப்பட்ச ஊதிய உத்தரவாதங்கள், கூட்டுப்பேரம் பேசும் உரிமைகள் இச்சட்டத்தொகுப்பிலும் மறுக்கப்பட்டுள்ளன.
மேலும், கிக் தொழிலாளர்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டிய நலத்திட்டங்களை வரையறுத்துக் கூறாமல், அவ்வப்போது பொருத்தமான நலத்திட்டங்கள் ஒன்றிய, மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் என்று பாசிச திமிருடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் என்பவை உரிமை என்பதிலிருந்து பிச்சையாக மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல, கார்ப்பரேட் நிறுவனங்களின் மொத்த வர்த்தக வருவாய் (Turn Over) அடிப்படையில், ஆண்டுக்கு 1-2 சதவிகித நிதியை கிக் தொழிலாளர்களின் ஓய்வூதிய மற்றும் சுகாதார நலன்களுக்கான பங்களிப்பாக நிறுவனங்களிடம் கோருவது என்று இச்சட்டத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பங்களிப்பாக கோரப்படும் இத்தொகை மிகச் சொற்ப தொகை என்பது ஒருபுறமெனில், அத்தொகையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து முறையாக வசூலிக்கப்படுமா, தொழிலாளர்களுக்கு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே.
ஊதிய வெட்டு துயர நிலைக்கு தள்ளப்படும் தொழிலாளர்கள்
ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் என்பது அடிப்படை ஊதியம் மற்றும் வீட்டு வாடகைப் படி, பயணப் படி, போனஸ் உள்ளிட்ட கொடுப்பனவுகளுடன் (Allowance) கணக்கிட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பானது அடிப்படை ஊதியம் 50 சதவிகிதம் அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும் என்றும், அதுபோக, மீதமுள்ளவை கொடுப்பனவுகளாக இருக்க வேண்டும் என்றும் வரையறுத்து இருக்கிறது.
சதவிகிதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது பல தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தில் கொடுப்பனவுகளை விட குறைவாகவே அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது.
இச்சூழலில், “இச்சட்டத் தொகுப்பிலுள்ள புதிய ஊதிய வரையறையினால் அடிப்படை ஊதியத்திற்கு நிறுவனங்கள் ஒதுக்கும் தொகை அதிகரிக்கும். எனவே, அடிப்படை ஊதியத்திலிருந்து கணக்கிடப்பட்டு முதலாளிகளால் வழங்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடைக்கான தொகையும் அதிகரிக்கும்” என்று ஊடகங்கள் வரவேற்று செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், ஒரு நிறுவனம் தொழிலாளிக்கு அடிப்படை ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளுடன் சேர்த்து வழங்கும் மொத்த ஊதியம் இங்கு மாறப் போவதில்லை. மாறாக, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்திலிருந்தே 12 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால், அடிப்படை ஊதியம் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களின் ஒட்டுமொத்த ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதிக்கான பிடித்தமும் அதிகரிக்கும்; தொழிலாளி கையில் பெற்றுக்கொள்ளும் ஊதியத் தொகை முன்பை விட குறையவே செய்யும்.
இது, ஏற்கெனவே ஊதியமாக வழங்கப்படும் சொற்பத் தொகையை வைத்து வாழ்க்கையை நடத்த போராடிக் கொண்டிருக்கும் மக்களின் துயர நிலையை மேலும் அதிகரிக்கவே செய்யும். மேலும், நிரந்தரமற்ற பணிச்சூழல், முதலாளிகள் வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை செலுத்தாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி உரிய வகையில் வழங்கப்படுவதும் கேள்விக்குறியே ஆகும்.
8 மணி நேர வேலை உரிமை பறிப்பு
புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பில் தினசரி வேலை நேர வரம்பு 8 மணி நேரமாகவும், வார வேலை நேர வரம்பு 48 மணி நேரமாகவும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இடைவேளை நேரத்தை தீர்மானிக்கக்கூடிய அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கியிருக்கிறது.
ஆனால் அதேசமயத்தில், ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என வாரத்திற்கு 4 நாட்களுக்கும், 9.5 மணி நேரம் என 5 நாட்களுக்கும், 8 மணி நேரம் என 6 நாட்களுக்கும் வேலை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வேலை நேரங்களுக்குப் பிறகு, தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்தின் படி, கூடுதல் நேரம் வேலை செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் கூடுதல் வேலை நேரத்திற்கான வரம்பு காலாண்டிற்கு 75 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது இதனை மாநில அரசாங்கங்கள் நிர்ணயிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர உறக்கம் என்ற தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமையானது, “தொழிலாளர்கள் விரும்பினால் கூடுதல் நேரம் வேலை செய்யலாம்” என்ற பெயரில் சட்டப்பூர்வமாகவே இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அவசர சட்டம் மூலம் ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலை கட்டாயமாக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும், தொழிலாளர்களை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வைக்க வேண்டும் என்பது கார்ப்பரேட் முதலாளிகளின் கோரிக்கையாகும். ஆனால், இச்சட்டத் தொகுப்பானது தொழிலாளர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய விரும்புவதைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. மாறாக, தொழிலாளி வர்க்கம் கேட்பது 8 மணி நேர வேலை, நியாயமான ஊதியம், பணிப்பாதுகாப்பே ஆகும்.
ஆகவே, இச்சட்டத் தொகுப்பில் உள்ள விதிகளைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 12 மற்றும் அதற்கும் மேலாக உழைப்பில் ஈடுபட தொழிலாளர்களை முதலாளிகள் கட்டாயம் நிர்பந்திப்பர். முதலாளிகளின் விருப்பத்திற்கு கட்டுப்பட மறுக்கும் பட்சத்தில் தாங்கள் வேலையிலிருந்து நீக்கப்படலாம் (குறிப்பாக, நிலையான கால மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள்) என்ற அச்சத்தின் காரணமாக கூடுதல் வேலை நேரத்திற்கு ஒப்புதல் அளிக்கும் நிலைக்கு தொழிலாளர்கள் வேறுவழியின்றி தள்ளப்படுவர்.
அதாவது, நூறு ஆண்டுகளுக்கு முந்தைய 14 முதல் 16 மணி நேர வேலை என்ற கொத்தடிமை முறை தற்போது சட்டப்பூர்வமாகவே நிலைநாட்டப்படுகிறது.
ஒப்பந்ததாரர், இனி காண்ட்ராக்ட் முதலாளி
புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, ஒப்பந்ததாரர் முதலாளியாக கருதப்படுகிறார். மேலும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டிய பொறுப்பு காண்ட்ராக்ட் முதலாளியினுடையது; அவர் ஊதியம் வழங்கத் தவறும் பட்சத்திலேயே ஆலை முதலாளி (Principal Employer) பொறுப்பாவார் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, ஆலை நிர்வாகத்திற்கும் தொழிலாளிக்கும் உள்ள தொடர்பு சட்டப்பூர்வமாகவே துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஆலை முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல், காண்ட்ராக்ட் முதலாளிகளின் ஊதியச் சுரண்டல் என இரட்டை சுரண்டலுக்கு தொழிலாளர்கள் உள்ளாக்கப்படுவார்கள்.
அதுமட்டுமின்றி, இச்சட்டத் தொகுப்பில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான விதிகள் பொருந்தக்கூடிய வரம்பு 20 தொழிலாளர்களிலிருந்து 50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 50-க்கும் குறைவான ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் காண்ட்ராக்ட் முதலாளிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
அதாவது, ஒப்பந்த தொழிலாளர்களில் கணிசமானோரை சட்ட வரம்பில் இருந்து விலக்கி, அவர்கள் மீதான ஆலை மற்றும் காண்ட்ராக்ட் முதலாளிகளின் சுரண்டலை மேலும் தீவிரப்படுத்துவதற்கே இவ்விதி வழியேற்படுத்திக் கொடுக்கிறது. சான்றாக, ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்னதாகவே தொழிலாளி ஆலையில் இருந்து விரட்டியடிக்கப்பட்டாலும் அத்தொழிலாளியால் சட்டப்பூர்வமாக எதுவும் செய்ய இயலாது.
மேலும், ஒப்பந்த ஆண்டு வரம்பும் இரண்டு ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, ஒரு தொழிலாளியை ஒப்பந்த தொழிலாளி எனும் நிலையிலேயே இருத்தி வைப்பதற்கான ஏற்பாடாகும்.
அதேபோல, தொழிற்சாலை என உரிமம் வழங்க தொழிலாளர்கள் பணியாற்றும் வரம்பு மின்சாரம் உள்ள தொழிற்சாலைகளுக்கு 10-லிருந்து 20 ஆகவும், மின்சாரம் இல்லாத தொழிற்சாலைகளுக்கு 20-லிருந்து 40-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, இந்தியாவின் ஜவுளி, உலோகம், உணவு பதப்படுத்துவது உள்ளிட்ட துறைகளின் தொழில் அலகுகள் 20-க்கும் குறைவான தொழிலாளர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் நிலையில், அந்த அலகுகள் தொழிற்சாலை என்ற வரையறையிலிருந்து விலக்கி வைக்கப்படும். அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற இயந்திரங்கள், மோசமான சுற்றுச்சூழல், காற்றோட்டமின்மை உள்ளிட்ட மோசமான சூழலில் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள்.
தீவிரமாகும் பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டல்
நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பின்படி, உற்பத்தி, சுரங்கம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இரவு நேரங்களிலும் (இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை) பெண்கள் வேலைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு அவர்களின் ஒப்புதல் ‘கட்டாய’மாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெண்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதாகவும், தொழிலாளர்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதாகவும் அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில், ஆண் தொழிலாளர்களை ஒப்பிடும் போது, குறைவான கூலியில் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முடியும். உழைப்பு சுரண்டலை தீவிரமாக நடத்த முடியும். இந்த அடிப்படையிலிருந்தே அசெம்பிளி லைன் (Assembly Line) மூலம் இயங்கும் தொழிற்சாலைகளில் பெரியளவில் இவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
சான்றாக, காஞ்சிபுரத்தின் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் மீது மிகக் கொடூரமான உழைப்புச் சுரண்டல் நிலைநாட்டப்பட்டுள்ளது. “டைம்” பத்திரிகையின் அறிக்கையானது, இந்நிறுவனத்தில் அசெம்பிளி லைனில் ஒரு மணி நேரத்திற்கு 520 ஐபோன்களில் வேலை செய்ய வேண்டும் என்ற மிக அதிகமான உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்படுவதை அம்பலப்படுத்தியுள்ளது. கழிப்பறை செல்வதற்கு கூட இடைவேளை இன்றி பெண்கள் வேலை செய்ய வைக்கப்படுவதாகவும், இதன் விளைவாக ஏற்படும் உடல் வலிகளை போக்க வலி நிவாரண மருந்துகள் வழங்கப்பட்டு தொடர்ந்து வேலை செய்ய வைக்கப்படுவதாகவும் கூறுகிறது.
பெண்கள் மீதான இத்தகைய ஈவிரக்கமற்ற, மிருகத்தனமான உழைப்புச் சுரண்டலை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்; அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் இலாபத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே பெண்களுக்கு இரவு நேர வேலைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெண் தொழிலாளர்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இரவு நேர வேலைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் இரவு நேர வேலைகளுக்கு சம்மதம் தெரிவிப்பவர்கள் மட்டுமே பணிக்கு எடுத்துகொள்ளப்படுவர். மேலும், நிறுவனங்களால் 12 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமாக வேலை செய்ய வேண்டிய நிலை பெண் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக்கப்படும். இது தொழிற்சாலைகளில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளையும் அதிகரிக்கும்.
களப்போராட்டங்களே தீர்வு!
மேற்கூறியவற்றை தொகுத்துப் பார்க்கும்போது, பழைய தொழிலாளர் சட்டங்கள் மூலம் தொழிலாளி வர்க்கம் பெற்று வந்த பெயரளவிலான உரிமைகளையும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பானது இல்லாதொழித்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.
இத்தகைய பாசிச சட்டத் தொகுப்புகளை அம்பானி, அதானி வகையறா உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலனிலிருந்தே மோடி அரசு அமல்படுத்தியிருக்கிறது. அதாவது, சீனாவிற்கு மாற்றாக இந்தியாவை மேற்கத்திய நாடுகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து தருவதற்கான பின் நிலமாக மாற்றுவது; அதற்காக மலிவு விலையில் கொத்தடிமைகளை உருவாக்கிக் கொடுப்பது என்ற அடிப்படையிலிருந்தே இச்சட்டத் தொகுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பிற்கு எதிராக திரண்ட தொழிலாளர்கள், விவசாயிகள்.
மேலும், பாசிச மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி., மூன்று குற்றவியல் சட்டங்கள், சிறப்பு தீவிர மறு ஆய்வு ஆகியவற்றின் வரிசையில் நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்பும் இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்களில் ஒன்றாகும்.
இச்சட்டத் தொகுப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போதுள்ள தங்களின் பெயரளவிலான உரிமைகளும் பறிபோகும் என்பதை உணர்ந்திருக்கும் தொழிற்சங்கங்கள் இதனைப் பின்வாங்க வைப்பதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இப்போராட்டங்களில் விவசாய சங்கங்களும் பங்கேற்றுள்ளன.
ஆனால், பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள், இதற்கான வரைவு விதிகளை தயாரித்து அளித்ததன் மூலம் தொழிலாளர் வர்க்கத்திற்கு அப்பட்டமாக துரோகமிழைத்துள்ளன.
கேரள மாநில சி.பி.ஐ(எம்) அரசானது, “இச்சட்டத்தொகுப்புகளை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம். அவற்றை திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்” என்று கூறுகிறது. ஆனால், இச்சட்டத்தொகுப்புகளை அமல்படுத்துவதற்கு கேரள அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்ற மோடி அரசின் அறிவிப்பிற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
தமிழ்நாடு, தெலுங்கானா அரசுகள் இச்சட்டத்தொகுப்புகளை அமல்படுத்த மாட்டோம் என்று பெயரளவிற்குக் கூட தெரிவிக்கவில்லை. கர்நாடக காங்கிரசு அரசு, சட்டத்தொகுப்புகளை அமல்படுத்துவதற்கு முன்னதாக தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்களுடன் ‘கலந்தாலோசித்து’ முடிவெடுப்போம் என்று சந்தர்ப்பவாதமாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பில் உள்ள அம்சங்களை மறைமுகமாக அமல்படுத்துவது என்ற அடிப்படையிலிருந்தே ஆகும்.
ஏனென்றால், இச்சட்டத் தொகுப்பில் உள்ள அம்சங்கள் எதிர்க்கட்சிகளின் கார்ப்பரேட் நல கொள்கைகளுக்கும் சாதகமான வகையில் உள்ளன. இதனை அமல்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து, மலிவான கூலிக்கு உழைப்பு சக்தியை விற்கும் கொத்தடிமைகளை உருவாக்கி, அதன் மூலம் கார்ப்பரேட் முதலீடுகளை தங்கள் மாநிலங்களை நோக்கி ஈர்க்கத் துடிக்கின்றன.
எனவே, தொழிலாளர்களும் பாசிச எதிர்ப்பு சக்திகளும் இவ்விவகாரத்தில் பாசிச மோடி அரசை எதிர்த்து போராடும் அதேவேளையில், தங்கள் மாநில அரசுகளை எதிர்த்தும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது.
மூன்று வேளாண் சட்டங்களுக்கெதிரான விவசாயிகளின் விடாப்பிடியான, உறுதியான போராட்டங்களை போன்று, மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளாகும் அனைத்து வர்க்கங்களும் தொழிலாளி வர்க்கத்துடன் இணைந்து போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்களே மோடி அரசை பணிய வைக்கும்!
இந்தியாவில் 2026 – 2027 நிதியாண்டிற்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மோடி அரசின் கடந்த 11 ஆண்டுகால பாசிச ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைப் போன்றே இதிலும் நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உரிமைகள் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளன. அம்பானி-அதானி மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கத்தைப் பொருளாதாரத்தில் நிறுவும் வகையில் அக்கும்பலுக்கு பல்வேறு சலுகைகள் வாரியிறைக்கப்பட்டுள்ளன.
மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி வெட்டு
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தேசிய ஆயுஷ் மிஷன், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மிஷன், பிரதமர் கிராம் சதக் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, குடிநீர் விநியோகம் சார்ந்த 18 திட்டங்கள் மோடி அரசால் அறிவிக்கப்பட்டு ரூ.2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அப்போதே இத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறையாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த ஆண்டு இத்திட்டங்களுக்கான நிதி ரூ.2.12 லட்சம் கோடியாக பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்குக் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியிலும் ரூ.81.350 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என்பது மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் சொற்ப நிதியும் மோடி அரசால் முடக்கப்படுகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்டுவதற்கேற்ப “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை” நீக்கிவிட்டு, “விபி ஜி ராம்ஜி” சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியது. இத்திட்டத்தின்படி, பயனாளர்களுக்கு 125 நாட்கள் வேலை வழங்க குறைந்தபட்சம் ரூ.3.84 லட்சம் கோடி செலவாகும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இத்திட்டத்திற்கு ரூ.95,692 கோடியை மட்டுமே ஒதுக்கி மக்களை வஞ்சித்துள்ளது மோடி அரசு.
மேலும், சிறுபான்மை விவகார அமைச்சகத்திற்குக் கடந்த ஆண்டை விட வெறும் ரூ.50 கோடி மட்டுமே அதிகரித்து ரூ.3,400 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால், இவ்வாறு சொற்பமாக ஒதுக்கப்படும் தொகையிலும் மிகக் குறைந்த தொகையே மோடி அரசால் செலவிடப்படுகிறது. சான்றாக, 2023-24 நிதியாண்டில் ரூ.3,097.60 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் வெறும் ரூ.154.17 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் மீது தொடரும் தாக்குதல்
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கும், உணவு மானியம், உர மானியம் உள்ளிட்ட உயிராதாரமான திட்டங்களுக்கும் கடந்தாண்டை போல சொற்ப தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் காலநிலை மாற்றத்தினால் புயல், பெருவெள்ளம், வறட்சி, வெப்ப அலை உள்ளிட்ட பேரிடர்கள் உருவாகி பேரழிவை ஏற்படுத்துவதும், அதில் விவசாயம் மிகத்தீவிரமாகப் பாதிக்கப்படுவதும் புதிய இயல்புநிலையாகியுள்ளது. இச்சூழலில், நிதிநிலை அறிக்கையில் பயிர் காப்பீட்டிற்கான ஒதுக்கீட்டை கடந்த ஆண்டை விடக் குறைத்து இந்திய விவசாய வர்க்கத்தின் மீது மோடி அரசு தாக்குதலை தொடுத்திருக்கிறது.
குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் ஆகிய விவசாயிகளின் உயிராதாரமான கோரிக்கைகள் குறித்தும் எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. மேலும், பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை ஆண்டுக்கு ரூ.6,000-லிருந்து ரூ.12,000-ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நேரெதிராக பி.எம்.கிசான் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை பணவீக்கத்திற்கேற்ப கூட உயர்த்தவில்லை.
மாறாக, “பாரத் விஸ்டார்” என்ற பெயரில் கைபேசி அழைப்புகள் மூலம் விவசாயிகளுக்கு விவசாயத் தரவுகளை வழங்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு தளத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் வேளாண்மை இயக்கம் என்ற பெயரில் இந்த நிதியாண்டில் 11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் ஐ.டி-களை (Digital IDs) உருவாக்குவதற்கான திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் எல்லாம் விவசாயத்துறையை டிஜிட்டல்மயமாக்கி கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளே ஆகும்.
புறக்கணிக்கப்பட்ட கோரிக்கைகள்
இந்திய தொழிலாளி வர்க்கத்தின் முக்கியக் கோரிக்கைகளான பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம், பழைய ஓய்வூதியத் திட்டம், எட்டு மணி நேர வேலை உள்ளிட்டவை குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. நாடு முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான கிக் தொழிலாளர்களின் நியாயமான ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களை எந்த உரிமைகளுமற்ற, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கொத்தடிமைகளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே இக்கோரிக்கைகள் மோடி அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
மேலும், அமெரிக்க வரி விதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்; மூலப்பொருட்களின் விலை உயர்வு, அமேசான், ஃபிளிப்-கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் ஆதிக்கத்தால் சந்தையை அணுகுவதில் உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகள் குறித்தும் அறிவிப்புகள் ஏதுமில்லை. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்த வேண்டும் என்ற அடிப்படையிலே அக்கோரிக்கைகளை மோடி அரசு திட்டமிட்டு புறக்கணித்துள்ளது.
அதேபோல், இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான எந்த ஆக்கப்பூர்வமான திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த கூலியில் கொத்தடிமைகளை உருவாக்கிக் கொடுப்பதற்காகத் தொடங்கப்பட்ட பி.எம்.இண்டன்ஷிப் திட்டம் (PM Internship) ஏற்கெனவே இளைஞர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அத்திட்டத்திற்கு ரூ.4,766 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.10,831.07 கோடி நிதியில் வெறும் ரூ.526 கோடியே செலவிடப்பட்டுள்ளது. இது, இத்திட்டத்தின் அப்பட்டமான தோல்வியைக் காட்டுகிறது.
மேலும், இந்த நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.12.2 லட்சம் கோடியினால் வேலைவாய்ப்புகள் பெருகும் என்று மோடி அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால், இந்த மூலதனச் செலவில் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய உள்கட்டமைப்புகளுக்கான ஒதுக்கீடு மிகக் குறைவு. மாறாக, அதிவேக இரயில் பாதைகள், சரக்கு போக்குவரத்துச் சாலைகள், பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான ஒதுக்கீடே அதிகம். இத்திட்டங்கள் வேலைவாய்ப்பை பெருக்குவதற்குப் பதிலாக, அதானி, எல்&டி போன்ற உள்கட்டமைப்பு கார்ப்பரேட்டுகளுக்கே இலாபம் அளிக்கும்.
அதேபோல, தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தப்படும் என்ற நடுத்தர வர்க்கத்தின் எதிர்ப்பார்ப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் மோடி அரசால் பூர்த்தி செய்யப்படவில்லை. மாறாக, கல்வி, மருத்துவச் செலவுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான ஆதார வரி (TCS) குறைப்பு, வெளிநாடு வாழ் இந்தியர்களின் அசையா சொத்துகள் மீதான வரிக் குறைப்பு, ஏழு அதிவேக இரயில் வழித்தடங்களுக்கான அறிவிப்புகள் என மேட்டுக்குடி வர்க்கத்தினரை குறிவைத்தே திட்டங்களும் சலுகைகளும் வாரியிறைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு இருக்கும் என்று அம்மாநில ஆளும் கட்சிகளிடம் எதிர்ப்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அவை தவிடுபொடியாகியுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு எந்தப் புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.
அதேபோல, ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் பங்கு 41 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதுவும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.1.4 லட்சம் கோடியில் பெருந்தொகை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு அளிக்கப்படுமே தவிர, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் புறக்கணிக்கப்படும் என்பதே கடந்த கால அனுபவம்.
அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், தரவு மையங்களை (Data center) இந்தியாவில் கட்டியமைக்கும் உலகளாவிய கிளவுட் சேவைகளை (Global Cloud Service) வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047-ஆம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தங்களது தரவு மையங்களை அமைக்க விரும்பும் கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளையும் நிலம், மின்சாரம், நீர் போன்ற வளங்களை எளிதாக அணுகுவதற்கான ஏற்பாடுகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் ஆணையின் பேரிலே மோடி அரசு தரவு மையங்களுக்கு வரிச்சலுகையை அறிவித்திருக்கிறது.
இச்சலுகையால் இந்தியாவில் அதானி, டாடா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் இலாபமடைகின்றன. 2035-ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயங்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை (AI-ready data centers) அமைக்க 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக அதானி குழுமம் அறிவித்திருப்பது இதனை உணர்த்துகிறது. மேலும், அமெரிக்க நிறுவனங்கள் அதானி, டாடா, பாரதி ஏர்டெல் நிறுவனங்களுடன் இணைந்தும் தரவு மையங்களை அமைக்கவிருப்பதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அதேபோல், நிதிநிலை அறிக்கையில், அணுமின் உற்பத்தித் திட்டங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்குமான அடிப்படைச் சுங்க வரி விலக்கு 2035-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதும் அமெரிக்க-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல்களின் நலன்களிலிருந்தே ஆகும். “அமெரிக்க-இந்திய காம்பாக்ட்” திட்டத்தின் அடிப்படையில் இந்திய அணுசக்திதுறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்காகப் புதிய அணுசக்தி சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியிருப்பதும், அணுசக்தித் துறையில் கால்பதிப்பதற்கான நடவடிக்கையில் அதானி ஈடுபட்டு வருவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அரிய வகைக் கனிமங்களைப் பிரித்தெடுத்து சுத்திகரிப்பதற்கான பிரத்தியேக வழித்தடங்கள் (Dedicated Rare Earth Corridors) அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்படும் அப்பட்டமான பயங்கரவாதமாகும்.
குறிப்பாக, உலகின் அரிய வகைக் கனிமவள இருப்பில் சீனா, பிரேசிலுக்கு அடுத்து 6.9 மில்லியன் டன் அளவுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அரிய வகைக் கனிம உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க முயற்சித்துவரும் அமெரிக்காவிற்கு அடிமை சேவகம் புரியும் நோக்கத்திலே மோடி அரசு இத்திட்டங்களை அறிவித்துள்ளது. அமெரிக்க-இந்திய காம்பாக்ட் திட்டத்திலும் அரிய வகைக் கனிமங்களை வெட்டியெடுப்பதற்கு கூட்டிணைவு திட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அரிய வகைக் கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான ஒப்பந்தமும் சுரங்கத்துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் அதானி-அகர்வால் கும்பல்களுக்கே அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்கப்படும்.
அதேபோல், மின்னணுப் பொருட்களின் இதயம் என்று அழைக்கப்படும் குறைக்கடத்திகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளையும் வாரி வழங்கியிருக்கிறது. நிதிநிலை அறிக்கையில் “இந்திய குறைக்கடத்தி மிஷன் 2.0” (India Semiconductor Mission 2.0) என்ற பெயரில் குறைக்கடத்திகள் உற்பத்திக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் குறைக்கடத்திகள் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் அதானி, டாடா கார்ப்பரேட்களின் சட்டைப் பையையே நிரப்பும்.
நாட்டை அடிமையாக்கும் மோடி அரசு
அமெரிக்க-இந்திய இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்பதற்காக இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரி விதித்தது உள்ளிட்டு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்து வந்தது அமெரிக்க டிரம்ப் அரசு. அமெரிக்காவின் நெருக்கடிக்கு அடிபணிந்தே ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு மோடி அரசு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. அதாவது, நம் நாட்டின் நீர், நிலம், கனிம வளங்கள், மக்களின் உழைப்பை சூறையாடுவதற்குச் சலுகைகள் வாரியிறைத்து அமெரிக்க கார்ப்பரேட்டுகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது, மோடி அரசு.
மோடி அரசின் அமெரிக்க அடிமைத்தனத்தை மேலும் உறுதி செய்யும் விதமாக, பிப்ரவரி 20 அன்று டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் (AI Impact Summit) அமெரிக்கா தலைமையிலான “பேக்ஸ் சிலிக்கா” (Pax Silica) கூட்டணியில் இந்தியா 12-வது நாடாக இணைந்துள்ளது. இது குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புகள், அரிய வகைக் கனிமங்கள், முன்னேறிய உற்பத்திமுறைகள் மற்றும் தரவு உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட முன்னேறிய தொழில்நுட்பங்களுக்கான விநியோகச் சங்கிலியை அமெரிக்கா கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணியாகும்.
நாளுக்கு நாள் கார்ப்பரேட் சூறையாடலை தீவிரப்படுத்திவரும் பாசிச மோடி அரசு, அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு அடிபணிந்து முற்றுமுழுதாக நாட்டை அமெரிக்காவிற்கு அடகு வைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளதையே இவை எடுத்துக்காட்டுகின்றன. புதிய அணுசக்தி சட்டம், புதிய விதை மசோதா வரிசையில் அமெரிக்காவிற்கு அடிமை சேவை புரிவதற்காகவும், அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பல் உண்டு கொழுப்பதற்காகவுமே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்திய – அமெரிக்க ஒப்பந்தத்திற்கு எதிராகப் போராடும் விவசாயிகள், தங்களுடைய உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பாசிச மோடி அரசிற்கு எதிராக அணிதிரள வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து அந்நிய நாடுகளுடனான அடிமை ஒப்பந்தங்களையும் இரத்து செய்கின்ற – அம்பானி-அதானி கார்ப்பரேட்டுகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்கின்ற – உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றுக் கட்டமைப்பை நோக்கி போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியுள்ளது.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 31, இதழ் 2 | டிசம்பர், 2015 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
செயற்கை நுண்ணறிவு காலத்தில் அடிமை வர்த்தகம் எப்படி நடத்தப்பட வேண்டும்? இப்படிதான் என உலகுக்கே எடுத்துக் காட்டியிருக்கிறது மோடி தலைமையிலான பார்ப்பனிய பாசிச பா.ஜ.க அரசு.
டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் “இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026” (India AI Impact Summit 2026) பிப்ரவரி 16-இல் தொடங்கி, பிப்ரவரி 21 அன்று நிறைவடைந்தது. ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 118-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும் வருகைத் தந்ததாக செய்திகள் அறிவிக்கின்றன.
இந்த ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு இதற்கு முன் 2023-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பிளெட்ச்லி பூங்காவிலும், 2024-ஆம் ஆண்டு தென் கொரியாவின் சியோலிலும், 2025-ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸிலும் நடைபெற்றிருக்கிறது. இந்த மூன்று உலகளாவிய ஏ.ஐ. உச்சி மாநாடுகளும் ஏகாதிபத்திய மற்றும் வளர்ந்த நாடுகளில் நடைபெற்ற நிலையில், நான்காவது ஏ.ஐ. உச்சி மாநாடு முதல் முறையாக உலகின் தெற்குப் பகுதியில், மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் நடைபெறுகிறது என்பது ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்டது.
சங்கிக் கும்பலோ “தெற்குலகிற்கான குரலாக இந்தியா ஒலிக்கிறது. மேற்கத்திய நாடுகள் மற்றும் சீனாவுக்கு மாற்றாக ஒரு மூன்றாவது தொழில்நுட்ப பாதையை இந்தியா உருவாக்குகிறது” என தம்பட்டமடிக்கின்றன. ஆனால், ஏ.ஐ. மாநாட்டில் அரங்கேறிய கல்கோத்தியாஸ் பல்கலைக்கழகத்தின் ஏமாற்று வேலையும் கோமாளித்தனங்களும், மாநாட்டில் இந்திய இளைஞர் காங்கிரசு நடத்திய போராட்டம், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் திருட்டுப்போனது போன்றவை மோடிக் கும்பலை சந்தி சிரிக்க வைத்தன.
அதேசமயம் செயற்கை நுண்ணறிவு என்பது மனித உழைப்பைத் தானியக்கமாக மாற்றித் தரவுகளை (DATA) மூலதனமாகத் திரட்டுகின்றன; அறிவு உழைப்பை அல்காரிதம் (Algorithm) வழிமுறையாக்குகின்றன என்ற அடிப்படை உண்மையை டெல்லி ஏ.ஐ. மாநாடு தெளிவுபடுத்தியுள்ளது. உலகின் அதிக டிஜிட்டல் பயனர்களைக் கொண்ட (95.8 கோடி) இந்தியாவின் தரவு சந்தையைப் பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்துவிடுவதற்கான ஏற்பாடாக இம்மாநாடு அமைந்துள்ளது.
மோடியின் ”டிஜிட்டல் இந்தியா” திட்டம் இந்தியாவை டிஜிட்டல் காலனியாக்கும் சதி
மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து “டிஜிட்டல் இந்தியா” என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதில் முக்கியமானது டிஜிட்டல் அடையாள அட்டையான ஆதார் (Aadhar). இந்த ஆதார், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கு உட்பட பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதேபோல், பணப் பரிவர்த்தனையை விட கூகுள் பே (Google Pay), பே.டி.எம். (Paytm) மாதிரியான யு.பி.ஐ. (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனையை பாசிச பா.ஜ.க. அரசு பரவலாக்கியுள்ளது. இவையில்லாமல், கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்பு எனப் பல துறைகளுக்கான டிஜிட்டல் சேவைத்தளங்களை உருவாக்கியுள்ளது. இவையெல்லாம் அரசு மக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்காக உருவாக்கிய பொதுக் கட்டமைப்பை ஒட்டுமொத்தமாக டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கையாகும்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புடன் (Digital public Infrastructure) செயற்கை நுண்ணறிவை இணைப்பது குறித்து நடந்துமுடிந்த ஏ.ஐ. உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புடன் ஏ.ஐ. இணைக்கப்பட்டால் அதன் மூலம் திரட்டப்படும் தரவுகள் பாசிச மோடி அரசிடமும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் பிடியிலும் குவிக்கப்படும். பாசிச மோடி அரசு இத்தரவுகளை பயன்படுத்தி ஒட்டுமொத்த சமூகத்தைக் கண்காணிப்புக்கு உட்படுத்துவதுடன் கட்டுப்படுத்தத் தொடங்கும். அதேசமயம், இத்தரவுகள் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும்.
இவ்வாறு ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்ற மூன்றாம் உலக நாடுகளின் தரவுகளை கொள்ளையிடுவதற்கான சிறந்த முன்மாதிரியை இந்தியா உருவாக்கியிருக்கிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் “உலகில் வேறு எங்கும் சாதிக்கப்படாத, 1.4 பில்லியன் மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது” என்று மோடி அரசை உச்சிமுகர்ந்து பாராட்டுவதற்கான காரணமும் இதுதான்.
அதேபோல், ஏகாதிபத்திய நாடுகளில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே தரவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே திரட்டப்படுகின்றன. இதனால் உள்ளூர் மொழி, உள்ளூர் கலாச்சாரம், உள்ளூர் மக்களின் உழைப்புச் சக்தி குறித்தான தரவுகளை திரட்ட முடிவதில்லை. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, தற்போது நடந்து முடிந்த மாநாட்டில் இந்திய மொழிகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஏ.ஐ. மாதிரிகள் அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன.
ஆந்திரப் பிரதேச அரசு ஐ.பி.எம். (IBM), நெக்ஸ்ட்ஜென் (NextGen), பாரத் ஜென் (BharatGen) ஆகியவற்றுடன் இணைந்து தெலுங்கு மற்றும் மற்ற உள்ளூர் மொழிகளுக்கான சுதேசி ஏ.ஐ. ஸ்டேக் (Swadeshi AI Stack) எனும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதேபோல், இந்திய “ஸ்டார்ட்-அப்” (Startup) நிறுவனமான “சர்வம் ஏ.ஐ.”, இந்திய மொழிகளுக்காக பிரத்தியேகமாகப் பயிற்சி பெற்ற இரண்டு உள்நாட்டுப் பெரிய மொழி மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய அரசின் பாரத் ஜென் அமைப்பு 17 பில்லியன் அளவுருக்களைக் (Parameters) கொண்ட 22 இந்திய மொழிகளுக்கான ஏ.ஐ. மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், இந்தியாவிலுள்ள எந்த மொழி பேசும் மக்களையும், எந்தக் கலாச்சாரத்தை சேர்ந்த மக்களாக இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரின் நடமாட்டத்தையும் தரவுகளாகத் திரட்ட முடியும்.
இவ்வாறு இந்தியர்களின் அனைத்து தரவுகளும் ஏ.ஐ. சந்தைக்கான பண்டமாக மாற்றப்படும். கிராமப்புற மக்கள் முதல் நகர்ப்புறத் தொழிலாளர்கள் வரை என்ன செலவு செய்கிறார்கள், என்ன நோய்க்கு என்ன மருந்து எடுத்துக் கொள்கிறார்கள், விவசாயம் எப்படிச் செய்கிறார்கள், என்ன உடை வாங்குகிறார்கள், கல்விக்காக எவ்வளவு செலவழிக்கிறார்கள், உணவுக்காக என்னென்ன வாங்குகிறார்கள், நாள் ஒன்றுக்கு எவ்வளவு தேநீர் குடிக்கிறார்கள், சமூகவலைத்தளத்தில் எதை எதைப் பார்க்கிறார்கள், தேர்தலில் எப்படி ஓட்டுப் போடுகிறார்கள்… என அனைத்தும் தரவுகளாக சேகரிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படும்.
இந்தத் தரவுகள்தான் பன்னாட்டு நிதியாதிக்கக் கும்பலுக்கான மூலப் பொருட்கள். சான்றாக, இந்திய மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் நோய் தொடர்பான தரவுகள், அவர்களது மரபணுவில் இருக்கும் செய்திகள் ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இலவசமாகச் செல்லும். அவர்கள் இந்தத் தரவுகளை அடிப்படையாக வைத்து மருந்துகளைக் கண்டுபிடிப்பார்கள். அந்த மருந்துகள் மீண்டும் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் அதிக விலைக்கு விற்பனைக்கு வரும்.
இப்படியாக கல்வி, விவசாயம், உணவு, குடிநீர்… என அனைத்தின் விலைகளையும் சம்பந்தப்பட்ட நாடுகளால் தீர்மானிக்கவே முடியாது. ஏகாதிபத்திய பன்னாட்டு நிதியாதிக்க கும்பலே தீர்மானிக்கும். ஒரு ரூபாய் மாத்திரையை ரூ.100-க்கு விற்க வேண்டும் என கட்டளையிடும். தொடர்புள்ள நாடுகளும் கையைக் கட்டி வாயைப் பொத்தி அதை நிறைவேற்றும். குறிப்பாக, ஒவ்வொரு நாட்டிலும் எப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும், யார் யார் போட்டியிட வேண்டும், யார் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும்… என்பதையெல்லாம் தரவுகளை வைத்து இனி நிதியாதிக்க கும்பல் தீர்மானிக்கும்.
இதற்கான ராஜபாட்டையைத்தான் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு மூலம் அமைத்துக் கொடுத்திருக்கிறது, பாசிச பா.ஜ.க. அரசு.
ஒரு அடிமை வியாபாரி மேடையில் அடிமைகளை நிற்க வைத்து, ஏலம் விடுவது போல இந்திய மக்களின் தரவுகளை ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பலுக்கு மோடி அரசு ஏலம் விட்டிருக்கிறது.
தரவு மையங்களும் சூழலியல் பேராபத்தும்
ஏ.ஐ. துறையில் ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்காவும் சீனாவுமே முன்னணியில் இருக்கின்றன. மேக உள்கட்டமைப்பும் (Cloud infrastructure), ஏ.ஐ-கான அடிப்படை மாதிரிகளும் (AI foundation models) மேற்கத்திய நிதியாதிக்க நிறுவனங்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிடம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான இப்படிப்பட்ட அடித்தளம் இல்லை.
இச்சூழலில் காலனியாதிக்க காலகட்டத்தில் என்ன முறை மேற்கொள்ளப்பட்டதோ அதையே இந்த மறுகாலனியாதிக்கச் சூழலில் செய்யும்படி ஏகாதிபத்தியங்களுக்கு மோடி அரசு வழிகாட்டியிருக்கிறது.
எப்படி காலனியாதிக்க காலகட்டத்தில் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு தொழில்துறைப் பொருளாக இறக்குமதி செய்யப்பட்டதோ அப்படி இப்பொழுது தரவுகளை இலவசமாக ஏற்றுமதி செய்து, ஏ.ஐ. சேவைகளை இறக்குமதி செய்யலாம் என வரைப்படம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
இன்றைய டிஜிட்டல் பொருளாதாரத்தின் இதயமே தரவு மையங்கள்தான் (Data Centre). இந்த தரவு மையங்களை அமைக்க பல்லாயிரம் ஏக்கர் நிலம், 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம், அதிக வெப்பத்தை வெளியிடும் தரவு மையங்களைக் குளிர்விக்க டிரில்லியன் லிட்டர் நீர் வேண்டும். சூழலியல் ஆபத்துகள் நிறைந்த இத்தகைய இத்தரவு மையங்களை ஏகாதிபத்தியங்கள் தங்கள் நாடுகளில் அமைக்க விரும்பாது. ஏற்கெனவே, அமெரிக்காவில் அமேசான் (Amazon) நிறுவனத்தின் தரவு மையங்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
எனவே, அமேசான் வெப் சர்வீஸஸ் (Amazon Web Services), மைக்ரோசாஃப்ட் அஸூர் (Microsoft Azure), கூகுள் க்ளவுட் (Google Cloud), ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் (Reliance Industries), அதானி குரூப் (Adani Group) ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலேயே தங்களுடைய தரவு மையங்களை நிறுவுகின்றன.
இவ்வாறு தரவு மையங்களை இந்தியாவில் அமைப்பதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு உட்பட பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது மோடி அரசு.
எப்படி ஆலைகளில் இருந்து புகை வெளியேறுமோ அப்படி தரவு மையங்களில் அதிகளவான மின்சாரம் உபயோகத்தால் அவை வெப்பத்தை உமிழும். அதைக் கட்டுப்படுத்தாவிட்டால் சர்வர் (Server) வேலை செய்யாது. இதனால் தரவுகள் அனைத்தும் அழியும் வாய்ப்புள்ளது.
எனவே, தரவு மையங்களை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஒரு சிறிய தரவு மையத்தை குளிர்விக்கவே நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 5 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். இது பல ஆயிரம் குடும்பங்களுக்கான தினசரி நீர் பயன்பாட்டுக்குச் சமமானது. அப்படியானால் பெரிய தரவு மையங்களை குளிர்விக்க ஒவ்வொரு நாளும் எத்தனைக் கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும்? அது எத்தனைக் கோடி மக்களின் அன்றாட வாழ்வுக்கு பயன்படும்?
இது எதைப் பற்றியும் துளியும் அக்கறை கொள்ளாமல் பா.ஜ.க. அரசு தரவு மையங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் வழியாக ஒட்டுமொத்த இந்தியாவையே பாலைவனமாக மாற்றும் செயலில் இறங்கியிருக்கிறது.
ஒட்டுமொத்தத்தில், இந்த ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் காட்சிப்படுத்தவில்லை. மாறாக, இது உற்பத்தி முறையில் ஏற்பட்டுவரும் மாற்றம், மூலதன சுரண்டலின் புதிய வடிவம், தரவு ஆதிக்கம் ஆகியவற்றை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. மேலும், ஏகாதிபத்தியத்தின் டிஜிட்டல் மேலாதிக்க நலனுக்காக இந்தியாவை அவற்றின் டிஜிட்டல் காலனியாக மாற்றும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டு வருவதை அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியர்களின் தனியுரிமையை குழிதோண்டிப் புதைக்கும் பாசிச மோடி அரசின் இப்பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் குரலெழுப்ப வேண்டும்.
***
பா.ஜ.க. ஊட்டி வளர்த்த திருடன்
சீனாவின் ரோபோவை தங்கள் கண்டுபிடிப்பு என மாநாட்டில் அறிவித்து அம்பலப்பட்டுப் போன கல்கோத்தியாஸ் பல்கலைக்கழகம், பா.ஜ.க-வால் வளர்த்துவிடப்பட்ட ஒரு நிறுவனம்தான்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் டெல்லி கன்னாட் பிளேசில் சிறிய புத்தகக் கடையாகத் தொடங்கப்பட்டதுதான் கல்கோத்தியா நிறுவனம். 1980-களில் சுனீல் கல்கோத்தியாவின் நிர்வாகத்தில் பதிப்பகம் ஒன்றை தொடங்கினார்கள். எந்தக் காப்புரிமையும் பெறாமல் கணினி சம்பந்தப்பட்ட நூல்களையும் பொறியியல் துறை நூல்களையும் அச்சிட்டுக் கள்ளச்சந்தையில் விற்றனர். 90-களின் பிற்பகுதியில் தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக நாடு முழுவதும் கல்லூரிகள் பெருகின. கள்ளச் சந்தையில் இவர்களுக்கு லாபமும் பெருகியது.
வாஜ்பாய் பிரதமரானதும் “கல்கோத்தியாஸ் கல்லூரி” நிறுவப்பட்டது. அடுத்தப் பத்தாண்டுகளிலேயே அது கல்கோத்தியாஸ் பல்கலைக்கழகமாக உருமாறியது. 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு சுனீல் கல்கோத்தியாவின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து தற்போது சுமார் மூவாயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
அதேபோல், 2014-ஆம் ஆண்டு சுனீல் கல்கோத்தியாவின் மனைவி மற்றும் மகன் மீது வங்கிக்கடன் வாங்குவதற்காகப் போலி ஆவணங்களைத் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கு இப்பொழுதும் நிலுவையில் உள்ளது.
ஒட்டுமொத்தத்தில் பா.ஜ.க கும்பலே ஏ.ஐ மாநாட்டில் கல்கோத்தியாஸ் பல்கலைக்கழகம் அரங்கேற்றிய மோசடிக்கான ஊற்றுக்கண்ணாக இருந்திருக்கிறது.
கடந்த ஜனவரி 30 அன்று அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட சுமார் 30 லட்சம் பக்கங்கள் அடங்கிய “எப்ஸ்டீன் கோப்புகள்” (Epstein Files) உலக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. கார்ப்பரேட் முதலாளிகள் பில்கேட்ஸ் மற்றும் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ தொடங்கி இந்தியாவின் கார்ப்பரேட் முதலாளி அனில் அம்பானி, பிரதமர் நரேந்திர மோடி, பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எனப் பல்வேறு ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளின் பெயர்கள் இக்கோப்புகளில் அம்பலமாகியுள்ளன. தாங்கள் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என இவர்கள் தன்னிலை விளக்கம் கொடுத்துத் தங்களது புனிதப் பிம்பத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் பெரும் போராட்டமே நடத்தி வருகின்றனர்.
கண்துடைப்பு நாடகங்களும் கறைபடிந்த முகங்களும்
குற்றவாளி என அம்பலப்பட்டுப் போனதால், இந்தியாவில் நடந்த ஏ.ஐ. உச்சி மாநாட்டைத் தவிர்த்த பில்கேட்ஸ், உலகளவில் விமர்சனங்கள் வலுத்ததையடுத்து பிப்ரவரி 24 அன்று தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றினார். பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனைச் சந்தித்தது மாபெரும் தவறு எனப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய அவர், இரண்டு ரஷ்யப் பெண்களுடன் தனக்கிருந்த திருமணத்தைத் தாண்டிய உறவையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். “சுகாதாரப் பணிகளுக்காகவே எப்ஸ்டீனைச் சந்தித்தேன்” என்று கூறிவந்த பில்கேட்ஸின் இந்த வாக்குமூலம், கார்ப்பரேட் ‘ஆளுமை’களின் புனிதப் பிம்பங்களுக்குப் பின்னால் உள்ள அழுகி நாறும் ஒழுக்கக்கேட்டை அப்பட்டமாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இக்கோப்புகளின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டாலும், சர்வதேச ஊடகங்கள் எப்ஸ்டீனை வெறும் தனிப்பட்ட பாலியல் குற்றவாளியாகவே சுருக்கிக் காட்டுகின்றன. ஆனால், எப்ஸ்டீன் வெறும் பாலியல் தரகன் கிடையாது; நமது புலன்களுக்கு அப்பாற்பட்டுத் திரைமறைவில் இயங்கும் இலாபவெறி பிடித்த ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிழல் அரசின் அங்கமே எப்ஸ்டீன்.
ஏகாதிபத்திய நிழல் அரசுத் தரகன் எப்ஸ்டீன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ஏகாதிபத்திய நிழல் அரசுத் தரகன் எப்ஸ்டீன்.
நமது கண்ணுக்குத் தெரியும் சட்டமன்ற, நாடாளுமன்றங்கள்தாம் நம்மை ஆட்சி செய்கின்றன என்று நாம் நம்ப வைக்கப்பட்டுள்ளோம். அவற்றின் மூலமாகத் திட்டங்களும் வரவு-செலவு அறிக்கைகளும் அறிவிக்கப்படுவதால், அவற்றை அதிகாரப் பீடங்களாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அறிவிக்கப்படும் திட்டங்களும் கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இந்த நாடாளுமன்றத் திரைகளுக்குப் பின்னால், இரகசியமாக விவாதிக்கப்பட்டே இறுதி செய்யப்படுகின்றன.
இந்தத் திரைமறைவு கார்ப்பரேட் லாபியையும், அதன் கட்டமைப்பையும் எப்ஸ்டீன் கோப்புகள் தோலுரித்துக் காட்டுகின்றன. ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள ஏழை நாடுகளுக்கான ‘வளர்ச்சித்’ திட்டங்கள் அனைத்தும் இத்தகைய நிழல் அரசுகளால்தான் (Deep State) உருவாக்கப்படுகின்றன. கார்ப்பரேட் முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகளை ஒருவருக்கொருவர் சந்திக்க வைப்பது, அவர்களுக்குத் தேவையான பணம், பதவி மற்றும் பாலியல் வக்கிரத்திற்குப் பெண்களை இரையாக்குவது, கார்ப்பரேட் திட்டங்களை முடித்துக்கொடுப்பதுதான் இந்த நிழல் அரசுத் தரகர்களின் முதன்மையான வேலையாகும்.
இந்த நிழல் அரசில் இயங்கும் பல்வேறு தரகர்களில் ஒருவன்தான் ஜெப்ரி எப்ஸ்டீன். இத்தகைய சர்வதேசத் தரகு வேலைகளுக்காகவே, கரீபியன் கடலில் “லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்” (Little Saint James) என்ற பெயரில் தனக்கென ஒரு தீவையும் உல்லாச விடுதிகளையும் உருவாக்கிக்கொண்டான் எப்ஸ்டீன். அவனது தனி விமானம் மூலம் இத்தீவிற்குப் பல ஆளும் வர்க்கப் “பிரபலங்கள்” சென்றுள்ளனர். அங்குதான் இந்தப் பாலியல் வெறிகொண்ட மிருகங்களுக்கு ஆயிரக்கணக்கான பதின்ம வயதுச் சிறுமிகள் இரையாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனர்.
இவ்விடுதிகளின் படுக்கையறைகளிலும் கழிப்பறைகளிலும் இரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அங்குச் சென்றவர்களின் பாலியல் வக்கிரங்கள் அனைத்தும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களாகவும், எப்ஸ்டீனுடன் அவர்கள் செய்த மின்னஞ்சல் தொடர்புகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தரவுகளைத் துருப்புச் சீட்டுகளாக வைத்து மிரட்டியே, சம்பந்தப்பட்ட அதிகார வர்க்கத்தினரை கார்ப்பரேட் நலன்களுக்கேற்ப வளைத்துள்ளனர்.
மனிதகுல விரோதச் சித்திரவதைகளும் பாலியல் குற்றங்களும்
ஏகாதிபத்தியக் கட்டமைப்பின் ஆணாதிக்க மற்றும் இலாபவெறியின் உச்சக்கட்டக் கொடூரமே எப்ஸ்டீன் தீவுகளில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமைகளாகும். ஆயிரக்கணக்கான இளம்பெண்களும் சிறுமிகளும் இந்தக் கடத்தல் வலைப்பின்னல் மூலம் வேட்டையாடப்பட்டனர்.
இதற்காக “பல அடுக்கு வியாபார உத்தி” (MLM) பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்க அடுத்தடுத்த நபர்களை அறிமுகப்படுத்தும் சங்கிலித்தொடர் முறையைப் பயன்படுத்துவது போலவே, பெண்களைப் பாலியல் வலைப்பின்னலுக்குள் கொண்டுவரவும் இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. “பிரபலமாகலாம், குறுகிய காலத்தில் முன்னேறலாம்” என்று மூளைச்சலவை செய்யப்பட்டுப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சிறுமிகள் இந்த இருண்ட உலகத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். எப்ஸ்டீனின் தோழியான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் இந்த வலைப்பின்னலை முன்னின்று நடத்தியிருக்கிறாள். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், புதிய சிறுமிகளை அறிமுகப்படுத்தும் மாணவிகளுக்கு 200 டாலர் வழங்கி, இத்தகைய கிரிமினல் சங்கிலித்தொடரை மிக வேகமாகப் பரவச் செய்துள்ளனர்.
பெண்களையும் சிறுமிகளையும் அடிபணிய வைப்பதற்காக நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு குழந்தையைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து மற்றவர்களை அடிபணிய வைப்பது, நாய் குரைக்கும் சத்தங்கள், இருட்டறையில் அடைப்பது, அதீத வெளிச்சம் மற்றும் பற்களைப் பிடுங்குவது போன்ற ஈவிரக்கமற்ற கொடூரங்களுக்குச் சிறுமிகள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
எப்ஸ்டீன் கோப்புகள் வெளியான பிறகு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடூரங்களை “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்” என்று ஐ.நா. சபை வரையறுத்துள்ளது. ஆனால், இத்தகைய மனிதகுல விரோதமான மாபாதகச் செயலைத் தனியொரு நபர் மட்டும் செய்தார் என்பதும், எப்ஸ்டீனும் அவனது தோழி மேக்ஸ்வெல்லும் மட்டுமே குற்றவாளிகள் என்று கூறுவதும் பிரச்சினையைத் திசைதிருப்புவதாகும். இக்கொடூரங்களைத் தனிமனிதக் குற்றமாகச் சுருக்கிவிடுவதன் மூலம், இம்மாபாதகங்களுக்கு ஆணிவேரான இந்த ஏகாதிபத்தியக் கட்டமைப்பைக் காப்பாற்றுவதே ஆளும் வர்க்கத்தின் தந்திரமாகும்.
உண்மையில், ஏகாதிபத்தியங்களின் கட்டற்ற இலாபவெறிக்காக மனித உழைப்பு, இயற்கை வளங்கள் மட்டுமின்றிப் பெண் உடலும் ஒரு பாலியல் சதைப்பண்டமாகச் சூறையாடப்படுகிறது. ஏகாதிபத்தியத்தின் ‘நெறி’ என்பது எங்கும் இலாபம், எதிலும் இலாபம் என்னும் இலாபவெறிதான். இந்த ஏகாதிபத்திய இலாபவெறியின் விளைபொருள்தான் எப்ஸ்டீன், இந்தியாவின் நீரா ராடியா போன்ற நிழல் அரசுத் தரகர்கள்.
அதிகார வர்க்கத்தின் அரவணைப்பும் உளவுத்துறையும்
1990-களிலிருந்தே எப்ஸ்டீன் இத்தகைய தரகு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளான். 1996-இல் மரியா ஃபார்மர் என்பவர் தன்னையும் தன்னுடைய தங்கையையும் எப்ஸ்டீன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். ஆனால், அப்புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதன்பிறகு, அவன் மீது போடப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், 2008-ஆம் ஆண்டு புளோரிடா நீதிமன்றம் அவனுக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தாலும், வாரத்திற்கு ஆறு நாள் பகல் முழுவதும் அவன் சுதந்திரமாக வெளியே சுற்றித்திரிய அனுமதிக்கப்பட்டான். “எப்ஸ்டீன் உளவுத்துறையின் அதிகாரப்பூர்வமற்ற சொத்து” என மேலிடத்து அழுத்தங்கள் வந்ததாகப் பின்னாளில் அரசு வழக்கறிஞர் அலெக்சாண்டர் அகோஸ்டா கூறியது, எப்ஸ்டீனுக்கும் அதிகார வர்க்கத்திற்குமான நகமும் சதையுமான உறவை நிரூபிக்கிறது.
அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலிய மொசாட் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த எப்ஸ்டீன் ஓர் உளவாளியாகவே செயல்பட்டுள்ளான். இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் எஹுட் பராக், ஆயுத வியாபாரி டக்ளஸ் லீஸ் போன்றோருடனான எப்ஸ்டீனின் நெருக்கமும், அவனது லிட்டில் ஜேம்ஸ் தீவு மொசாட்டின் “ஹனிபாட்” (Honeypot) வலையாகச் செயல்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
வங்கிகளின் குற்றப் பின்னணியும் கறுப்புப் பணமும்
சாதாரண நிதி ஆலோசகராக இருந்த எப்ஸ்டீனை, ஒரு நிழல் அரசுத் தரகனாக வளர்த்தெடுத்ததே நிதியாதிக்கக் கும்பல்தான். “விக்டோரியாஸ் சீக்ரெட்” நிறுவனரான லெஸ்லி வெக்ஸ்னர், ஜே.பி. மார்கன் மற்றும் டாய்ச் வங்கி ஆகியவற்றின் அரவணைப்பால் எப்ஸ்டீன் உருவாக்கப்பட்டுள்ளான். அவனது குற்றப் பின்னணியைப் பற்றிக் கவலைப்படாமல், பல லட்சக்கணக்கான டாலர்களை ரொக்கமாக எடுக்க இவ்வங்கிகள் அனுமதித்துள்ளன. குற்றங்களில் இவர்களுக்கும் பொருளாதாரப் பங்களிப்பு இருப்பதால்தான், பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சில கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க இவ்வங்கிகள் பின்னர் ஏற்றுக்கொண்டுள்ளன.
தங்களது அரசியல் அதிகாரத் தரகுகளுக்கும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளுக்கும் எப்ஸ்டீனை இக்கும்பல் பயன்படுத்தியுள்ளது. “டவர்ஸ் ஃபைனான்சியல் கார்ப்பரேஷன்”, “ஜே.எப்ஸ்டீன் & கம்பெனி”, “சதர்ன் டிரஸ்ட் கம்பெனி”, “ஃபைனான்சியல் டிரஸ்ட் கம்பெனி” போன்ற அவனது பினாமி நிறுவனங்கள் மூலமாக, சுமார் 1.5 பில்லியன் டாலர் கறுப்புப் பணம் சட்டவிரோதமாக அமெரிக்கா, இசுரேல், சவுதி, ரஷ்யா மற்றும் சீன நாடுகளுக்குக் கைமாறியுள்ளது. இந்த நிழல் உலகப் பணப் பரிவர்த்தனைகளே அவனது பாலியல் குற்றங்களுக்கும் முதன்மை நிதி ஆதாரமாக இருந்துள்ளன.
மொத்தத்தில், எப்ஸ்டீன் என்பவன் தனி ஆள் கிடையாது; ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல்களால் தங்கள் நலனுக்காகத் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட தரகன். அவனது மர்ம மரணத்திற்கு பிறகு இந்தக் கோப்புகளை வெளியிட்டுத் தங்களை ‘நீதியின்’ காவலர்களாக ஏகாதிபத்தியக் கட்டமைப்பு வேடமிடுகிறது. எப்ஸ்டீன் பாலியல் குற்றவாளி என்றால், அவனை உருவாக்கிய ஏகாதிபத்தியக் கட்டமைப்புமே முழுமுதல் குற்றவாளியாகும்.
ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் எப்ஸ்டீன் கோப்புகள்
2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் ‘தற்கொலை’ செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், நவம்பர் 2025-இல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மைச் சட்டம்” மூலம் தற்பொழுது இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இக்கோப்புகள் வெளியிடப்பட்டதற்குப் பாதிக்கப்பட்ட பெண்களின் உறுதியான போராட்டமும் மக்களிடையேயான கொந்தளிப்புமே முக்கியக் காரணம்.
எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடுமாறு கடந்தாண்டு அமெரிக்காவில் நடந்த போராட்டம்.
ஆனால், இக்கோப்புகளை வெளியிடுவதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது அமெரிக்க அரசின் நோக்கமாக இல்லை. மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குப் பிடிகொடுக்காத நாடுகளை மிரட்டி வழிக்குக் கொண்டுவருவதே அதன் நோக்கமாகும்.
டாலருக்கு மாற்றாகப் பிரிக்ஸ் நாடுகள் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் மேற்கொள்வதும், ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் ரஷ்யா-சீனாவின் கை ஓங்குவதும் அமெரிக்காவை அச்சுறுத்துகின்றன. ஈரான், வெனிசுலாவைக் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் ரஷ்யா-சீனாவை முடக்குவது ஒருபுறமிருக்க, தனது செல்வாக்கின் கீழ் உள்ள நாடுகளைக் கட்டுப்பாட்டில் வைக்க எப்ஸ்டீன் ஆவணங்களை அமெரிக்கா ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.
இந்த ஆவணங்கள் வெளிவந்த பிறகுதான், அவசர அவசரமாக இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐரோப்பிய நாடுகள் தங்களது எரிசக்தித் தேவைக்காக ரஷ்யாவைச் சார்ந்துள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியம் சரிந்தால், அவை ரஷ்யா-சீனாவுடன் பொருளாதாரப் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் என்பதை அறிந்தே அமெரிக்கா இந்த ஆவணங்களை வெளியிட்டது. இதனால், இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ, தொழிலாளர் கட்சித் தலைவர் பீட்டர் மாண்டல்சன் ஆகியோர் அம்பலப்பட்டுள்ளனர். நார்வே முன்னாள் பிரதமர் தோர்ப்யோர்ன் யாக்லான்ட் மீதான குற்றச்சாட்டு, ஐ.நா-விற்கான நார்வே தூதர் மோனா ஜூல் மற்றும் பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் ஜாக் லாங் ஆகியோரின் பதவிச் சிக்கல்கள் என ஐரோப்பிய அரசியலில் பெரும் புயல் வீசிக்கொண்டிருக்கிறது.
ஆகையால், சரிந்துவரும் அமெரிக்க மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தற்காலிகத் துருப்புச் சீட்டாக எப்ஸ்டீன் ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏகாதிபத்திய நலனுக்குச் சிறுமிகளை இரையாக்கிய இக்கும்பல் இன்று அந்த ஆதாரங்களையும் ஏகாதிபத்திய நலனுக்கே பயன்படுத்துகிறது. மறுபுறத்தில் இதனை அமெரிக்க மக்கள் போராட்டத்தைத் திசைதிருப்பும் உத்தியாகவும் டிரம்ப் பயன்படுத்தி வருகிறார்.
எப்ஸ்டீன் கோப்புகளும் இந்திய ஆளும் வர்க்கங்களும்
எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி, அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியத் தரகு முதலாளி அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்கள் அம்பலமாகியுள்ளன. குறிப்பாக, 2017-2019 காலகட்டத்தில் அனில் அம்பானிக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான 87 குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் உரையாடல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புத் துறையில் நுழைய, டிரம்பின் ஆலோசகர் ஜாரெட் குஷ்னரைச் சந்திக்க எப்ஸ்டீனிடம் அனில் அம்பானி உதவி கேட்டுள்ளார்.
இதன் பின்னணியில்தான் ரஃபேல் ஒப்பந்தம் அரங்கேறியுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 126 விமானங்கள் வாங்குவதற்கும், அரசு நிறுவனமான ஹிந்துஸ்தானுக்குத் (HAL) தொழில்நுட்பம் மற்றும் 50 சதவிகிதம் ஈடு முதலீடு (Offset Obligation) கிடைப்பதற்கும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், மோடி அரசு இதை இரத்து செய்துவிட்டு, 36 விமானங்கள் வாங்கும் புதிய ஒப்பந்தத்தைப் போட்டது. இதில் ஹிந்துஸ்தானுக்குப் பதிலாக, எந்த முன் அனுபவமும் இல்லாத, ஒப்பந்தத்திற்குச் சற்றுமுன் தொடங்கப்பட்ட அனில் அம்பானியின் “ரிலையன்ஸ் டிஃபென்ஸ்” நிறுவனம் புகுத்தப்பட்டு, ஈடு முதலீடு மூலம் ரூ.36,000 கோடி தொகை மடைமாற்றப்பட்டது. “ரிலையன்ஸை இந்திய அரசுதான் பரிந்துரைத்தது” என பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியதும், எப்ஸ்டீன் அனில் அம்பானியை “மோடியின் ஆள்” எனக் குறிப்பிட்டதும், திவாலான அனில் அம்பானியை ரஃபேல் ஒப்பந்தம் மூலம் மோடி அரசு எப்படி கைதூக்கிவிட்டது என்பதைத் தெளிவாக விளக்குகின்றன.
அதேபோல, 2015-ஆம் ஆண்டு மோடி அரசால் பெரும் ஆரவாரத்துடன் “டிஜிட்டல் இந்தியா” திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் தொடங்கும் பல மாதங்களுக்கு முன்பே, எந்தவொரு அரசுப் பதவியிலும் இல்லாத ஹர்தீப் சிங் பூரி, எப்ஸ்டீனுடனும் லிங்க்டு-இன் நிறுவனர் ரீட் ஹாஃப்மேனுடனும் இரகசியமாக விவாதித்துள்ளார். “இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வாய்ப்புகள் குறித்துப் பேசினேன்” என பூரியே ஒப்புக்கொண்டுள்ளதன் மூலம் இந்திய மக்களின் தரவுகளை ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் இந்த அப்பட்டமான தேசவிரோத நடவடிக்கை அம்பலமாகியுள்ளது.
எப்ஸ்டீன் ஆவணங்கள் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையில் உள்ள ஒரு மிரட்டல் ஆயுதம் என்பதற்கு, அண்மையில் அவசரகதியில் கையெழுத்தான அமெரிக்க-இந்திய ஒப்பந்தமே மிகச்சிறந்த சான்றாகும். இந்தியப் பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் தரகு முதலாளிகளின் பெயர்கள் இக்கோப்புகளில் இடம்பெற்றுள்ளதைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தியே, அமெரிக்கா இந்தியாவை மிரட்டித் தனக்குச் சாதகமான இந்த ஒப்பந்தத்தை ஈவிரக்கமின்றித் திணித்துள்ளது. விவசாயிகளின் நலனை உத்தரவாதப்படுத்தித்தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று பா.ஜ.க அமைச்சர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், இந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் என்னவென்று இதுவரை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன.
உண்மையில், இந்த இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தால் இந்தியாவின் விவசாயம், குறிப்பாகப் பருத்தி, சோயாபீன்ஸ், மக்காச்சோளம் மற்றும் கரும்பு விவசாயிகளும், விவசாயத்தின் துணைத் தொழிலான பால் உற்பத்தியாளர்களும் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்கப் பெருநிறுவனங்களின் சந்தை ஆக்கிரமிப்பால் நமது சிறு, குறு தொழில்கள் அவர்களுடன் போட்டியிட முடியாமல் அடியோடு அழிந்து போகும் பேராபத்து எழுந்துள்ளது.
ஒருபுறம் ஏகாதிபத்தியத்தின் மிரட்டலுக்கு அடிபணிந்து நாட்டின் வளங்களை அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் இந்திய ஆளும் வர்க்கம், மறுபுறம் அதே கார்ப்பரேட் லாபி முறையைத் தானும் கையாள்கிறது. பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளின் கொள்ளை நலனுக்காக வெளிநாடுகளில் லாபியில் ஈடுபடுவதற்காகவே, எஸ்.எச்.டபிள்யூ. பார்ட்னர்ஸ் (SHW Partners) என்ற பன்னாட்டு லாபி நிறுவனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக, மக்களின் வரிப்பணத்திலிருந்து ஆண்டுக்கு 1.8 மில்லியன் டாலர்களை (சுமார் 15 கோடி ரூபாய்) கட்டணமாக வாரி இறைக்கிறது இந்திய அரசு. ஒரு நாட்டின் சட்டங்களையும் திட்டங்களையும் தீர்மானிப்பது நாடாளுமன்றங்களோ மக்களோ அல்ல; எப்ஸ்டீன்கள் மற்றும் எஸ்.எச்.டபிள்யூ. பாட்னர்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபிகளே என்பதை இது மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக நிரூபிக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களும் தரகர்களுமே ஒரு நாட்டின் சட்டத்திட்டங்களைத் தீர்மானிக்கிறார்கள் என்றால் “இறையாண்மை” என்பது ஓர் அலங்காரச் சொல்லே. இந்தக் கார்ப்பரேட் லாபிகளை மறைக்கவே, எப்ஸ்டீன் விவகாரத்தை வெறும் பாலியல் வழக்காகச் சுருக்க ஆளும் வர்க்கம் துடிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அம்பானி-அதானிகளின் நலன்தான் தேச நலன், இந்த ஆளும் வர்க்கங்களின் நலனுக்கான கருவிதான் இந்திய அரசு என்பது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.
ஏகாதிபத்தியக் கட்டமைப்பை வீழ்த்தாமல் “நீதி” இல்லை
எப்ஸ்டீன் கோப்புகள் வெறும் பாலியல் குற்றங்களின் பட்டியல் அல்ல; அவை நாடுகளின் இறையாண்மையைக் குழிதோண்டிப் புதைத்து, உழைக்கும் மக்களின் வளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட் லாபிகளின் அப்பட்டமான வாக்குமூலம். பெருநிறுவனங்கள் தங்களின் கொள்ளை இலாபத்திற்காகவும், அரசியல் அதிகாரத்தைத் தங்கள் பிடிக்குள் வைப்பதற்காகவுமே, பெண்களைப் பாலியல் பகடைக்காயாகப் பயன்படுத்தி வலைகளை விரித்துள்ளன. உழைக்கும் வர்க்கப் பெண்களின் உடல்களும் வாழ்வும் இந்தக் கார்ப்பரேட் கொள்ளையை ஈடேற்றுவதற்கான வெறும் உபகரணங்களாகவே இங்குச் சிதைக்கப்பட்டுள்ளன.
நாட்டை விற்கும் இந்தக் கார்ப்பரேட் கும்பல்களிடமும், அதைத் தாங்கிப்பிடிக்கும் அரசுக் கட்டமைப்பிடமுமே நீதியையும் கருணையையும் எதிர்பார்த்துக் காத்திருப்பது என்பது மாபெரும் அரசியல் முரண். ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல்களே இந்த மாபாதகங்கள் அனைத்திற்கும் முழுமுதல் குற்றவாளிகள்.
ஆளும் வர்க்கத்தின் இரகசியங்கள் இதற்கு மேலும் அம்பலமாகிவிடக் கூடாது என்பதற்காகவே, எப்ஸ்டீன் சிறையில் ‘மர்மமான’ முறையில் இறந்துவிட்டான் என்று அறிவித்துவிட்டது அமெரிக்க அதிகார வர்க்கம். ஒருவேளை அவன் உயிரோடு இருந்து, எப்ஸ்டீன், இளவரசர் ஆண்ட்ரூ, டிரம்ப், எலான் மஸ்க் என இந்தக் கோப்புகளில் உள்ள அனைவரையும் தூக்கிலேற்றினாலும் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை. கார்ப்பரேட் கொள்ளை தடையின்றித் தொடர, இந்த ஏகாதிபத்தியக் கட்டமைப்பு ஆயிரம் புதிய எப்ஸ்டீன்களை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கும். அப்படியானால், மக்களின் உழைப்பையும், நாட்டின் வளங்களையும் சூறையாடி, பெண்களை வக்கிரமாகச் சுரண்டிக் கொழுக்கும் இந்த ஏகாதிபத்தியக் கட்டமைப்பிற்கு என்ன தண்டனை?
ஏகாதிபத்தியம் என்பது அடிப்படையில் இலாபவெறியையும் சுரண்டலையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டது. மனித உழைப்புச் சுரண்டலும் இயற்கை வளச் சூறையாடலும் நீடிக்கும் வரை, ஒரு நாட்டில் உண்மையான இறையாண்மையோ, பொருளாதாரச் சமத்துவமோ ஒருபோதும் சாத்தியமில்லை. உழைக்கும் மக்களின் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் நிலைநாட்டப்படும் போதுதான், நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்த பெருநிறுவன முதலாளிகளுக்கும், பாலியல் தரகர்களுக்கும் தகுந்த தண்டனை கிடைக்கும். அத்தகைய சோசலிசச் சமூகத்தில்தான் உழைப்புச் சுரண்டல், இயற்கை வளச் சுரண்டல் மற்றும் அதற்குத் துணையாக்கப்பட்ட பாலியல் சுரண்டல் என அனைத்திற்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மக்கள் நலன் காக்கப்படும், உண்மையான ஜனநாயகம் மலரும்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 31, இதழ் 1 | நவம்பர், 2015 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
ஈராயிரம் ஆண்டுகளாக பார்ப்பனியம் இந்தியாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ‘சூத்திரர்கள்’ என முத்திரை குத்தி தீண்டத்தகாதவர்களாக ஒடுக்கி வருகிறது. இந்தக் கொடூரமான ஒடுக்குமுறையின் அங்கமாகவே பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை மறுத்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த ஒடுக்குமுறையில் ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டாய பொதுக் கல்விக்கான முயற்சிகள் சிறு அசைவை ஏற்படுத்தின.
ஆயினும், 1947 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தொடங்கப்பட்ட உயர்கல்வி நிலையங்கள் பார்ப்பன-பனியா பிரிவினரால் ஆக்கிரமிக்கப்பட்டதே தவிர, அது பெரும்பான்மை உழைக்கும் மக்களிடம் சென்று சேர்க்கப்படவில்லை. இதனால், கடந்த சில ஆண்டுகளாகத்தான் சூத்திரர்கள் என ஒதுக்கப்பட்ட மக்கள் முதல் தலைமுறைப் பட்டதாரி என்ற நிலைக்கே நகர்ந்து வருகின்றனர்.
ஆனால், அவ்வாறு உயர்கல்வி பயிலவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மீது இந்தப் பார்ப்பனிய சாதிய கட்டமைப்பு இன்று வரையிலும் தீவிரத் தாக்குதல் தொடுத்து வருகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின மாணவர்களை சாதி-மத ரீதியாக இழிவுப்படுத்தி கல்வியிலிருந்து வெளியேற்றுவதன் மூலம் கல்வி உரிமையை மறுப்பது எனும் ஒடுக்குமுறையை நவீன முறையில் செலுத்துகிறது. அதிலும், இந்துராஷ்டிர கொடுங்கனவோடு இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் 11 ஆண்டுகால ஆட்சியில், உயர்கல்வி நிலையங்களில் தீண்டாமைக் கொடுமைகளால் மாணவர்களின் உயிர் காவு வாங்கப்படுவது உச்சத்தைத் தொட்டுள்ளது.
ரோகித் வெமுலா தற்கொலையும் தீண்டாமைக்கு எதிரான எழுச்சியும்
ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரும் அம்பேத்கர் மாணவர்கள் கூட்டமைப்பின் (ASA) முன்னணியாளருமான ரோகித் வெமுலா, மோடி அரசின் இந்துத்துவ – மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மாணவர்களை திரட்டிப் போராடிய காரணத்தால் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார். விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டார். இந்த அநீதிக்கு எதிராக ஆறு மாதங்கள் வரை போராடி மனமுடைந்த ரோகித் வெமுலா, ஜனவரி 17, 2016 அன்று தனது நண்பரின் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ரோகித்தின் தற்கொலை இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவர்களும் புரட்சிகர-ஜனநாயக சக்திகளும் மிகப்பெரும் போராட்டங்களை கட்டியமைத்தனர். கல்வி நிலையங்களில் சாதியக் கொடுமைகளை களைவதற்காக ரோகித் வெமுலா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது.
இந்நிலையில், 2019-இல் மகாராஷ்டிராவில் முதுகலை மருத்துவ மாணவி பயல் தத்வியின் மரணம் நிகழ்ந்தது. இஸ்லாமியரும் பில் பழங்குடியினத்தை சேர்ந்தவருமான பயல் தத்வி டோபிவாலா தேசிய மருத்துவக் கல்லூரியில் சக மாணவர்களால் சாதிய ரீதியாக இழிவுப்படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்பட்டார்.
ஆனால், உயர்கல்வி நிறுவனங்களில் சாதியத் தீண்டாமைகளை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட யு.ஜி.சி. விதிகள் – 2012 இந்நிறுவனப் படுகொலைகள் எதையும் தடுக்கவில்லை; இப்படியொரு விதி உள்ளது என்பதே மாணவர்களுக்கு தெரியாத வகையில் முடக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்துதான், யு.ஜி.சி. விதிகள் – 2012 போதாமையாக உள்ளது என்றும் வலுவான விதியை நடைமுறைப்படுத்தக் கோரியும் ரோகித் வெமுலா மற்றும் பயல் தத்வியின் தாய்மார்கள் 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து விளக்கமளிக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் யு.ஜி.சி-க்கு நோட்டீசு அனுப்பியது; பல்கலைக்கழகங்களில் சாதிய பாகுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, புதிய விதிகளை வகுக்குமாறு உச்சநீதிமன்றம் யு.ஜி.சி-யை வலியுறுத்தியது. இதன் இறுதி வடிவமாகவே கடந்த ஜனவரி 13 அன்று “யு.ஜி.சி. (உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல்) ஒழுங்குமுறை 2026” வெளியிடப்பட்டது.
யு.ஜி.சி. விதிகள் தீண்டாமையை களையுமா?
யு.ஜி.சி. விதிகள் – 2026, “சாதிய பாகுபாடு” என்பதை “பட்டியல் சாதி (SC), பட்டியல் பழங்குடி (ST) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) எதிரான சாதி அல்லது பழங்குடி அடிப்படையிலான பாகுபாடு” என்று வரையறுக்கிறது. அதேபோல், “பாகுபாடு” என்பதை மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம், இயலாமை அடிப்படையில் பாரபட்சமாக நடத்துவது என்று குறிப்பிட்டுள்ளது.
இப்பாகுபாடுகளை களைவதற்கு யு.ஜி.சி-க்கு கீழ் வரும் அனைத்து மத்திய, மாநில, நிகர்நிலை, தனியார் கல்வி நிறுவனங்களும் சம வாய்ப்பு குழுக்களையும் (Equal Opportunity Centre) அதன் கீழ் சமபங்கு குழுக்களையும் (Equity Committee) அமைக்க வேண்டும் என்று யு.ஜி.சி. விதிகள் தெரிவிக்கிறது. சம வாய்ப்பு குழுக்கள் இவ்விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். அதேபோல், சமபங்கு குழுவில் பட்டியல், பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஆசிரியர் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் கட்டாயம் இடம்பெற வேண்டும். மேலும், புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கால வரம்பும் அதனை கண்காணிப்பதற்கான வழிகாட்டுதல்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பல அம்சங்கள் யு.ஜி.சி. விதிகள் 2012-லேயே இடம்பெற்றிருந்தாலும் அது வெறும் ஆலோசனை வழங்குவதாக அமைந்ததே ஒழிய, நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை. மாறாக, புதிய விதியில், விதிகளுக்கு கட்டுப்படாத கல்வி நிறுவனங்களுக்கான மானியத்தை நிறுத்துவது முதல் அங்கீகாரத்தை இரத்து செய்வது வரை தண்டனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
ரோகித் வெமுலா மற்றும் பயல் தத்வியின் தாய்மார்கள் தரப்பு முன்வைத்த 10 முன்மொழிதல்களின் சாரம் யு.ஜி.சி. விதியில் இடம்பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே இம்மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தை இதற்கு நிர்பந்தித்தது மாணவர்கள், ஜனநாயக சக்திகளின் போராட்டங்களே ஆகும்.
அதேசமயம், இப்புதிய விதியில் பல்வேறு குறைபாடுகளும் போதாமையும் உள்ளன.
யு.ஜி.சி. சட்டத்தின் கீழ் வராத 23 ஐ.ஐ.டி-கள் மற்றும் 21 ஐ.ஐ.எம்-களுக்கும் நாடு முழுவதுமுள்ள பாலிடெக்னிக், நர்சிங் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி மையங்கள் என 12,002 கல்வி நிறுவனங்களுக்கும் இவ்விதிகள் பொருந்தாது. சாதி, மத, மொழி ரீதியான வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகின்ற, நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிரைக் குடித்துள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்-களுக்கு இவ்விதி பொருந்தாது என்பது எவ்வளவு பெரிய முரண்? இதன் காரணமாகவே, இந்தியாவின் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் ரோகித் வெமுலா சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டுமென்று ஜனநாயக சக்திகள் வலிறுத்தி வருகின்றனர்.
அதேபோல், கல்வி நிலையங்களில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையை யு.ஜி.சி. விதி 2012 “வன்கொடுமை” என்று வரையறுத்ததுடன், யு.ஜி.சி-க்கு கீழ் வரும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் 28 வகையான வன்கொடுமைகளை பட்டியலிட்டிருந்தது. ஆனால், யு.ஜி.சி. விதி, 2026 தீண்டாமையை “பாகுபாடு” என மொண்ணையாகக் குறிப்பிடுகிறது. பழைய விதியில் பட்டியலிடப்பட்டிருந்த 28 வகையான வன்கொடுமைகளை எந்தவிதப் பொறுப்புணர்வுமின்றி ஒரேயடியாக நீக்கியுள்ளது. மறுபுறம், “பாகுபாடு” என்பதற்கான நிலையான வரையறையை அளிக்காமல் அதனை வரையறுப்பதற்கான பொறுப்பை சமபங்கு குழுக்களிடம் ஒப்படைத்துள்ளது. இது, வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமாகும்.
மேலும், கல்வி நிறுவனத்தின் தலைவரே (பல்கலைக்கழகத் துணைவேந்தர் / கல்லூரி முதல்வர்) சமபங்கு குழுவின் தலைவர் என்றும் புகார்கள் மீதான நடவடிக்கைகளும் அவருக்கே பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாசிச பா.ஜ.க. கும்பலின் ஆட்சியில் இந்தியா முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்களாக ஆர்.எஸ்.எஸ். சங்கிகளும் அதன் அடிவருடிகளுமே நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் ஒடுக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான வன்கொடுமைகளுக்குத் துணைபோவதுடன், அதனை நிகழ்த்தும் சாதி-மத வெறியர்களையும் ஏ.பி.வி.பி. குண்டர் படையையும் பாதுகாத்து வருகின்றனர். இவர்களே பாகுபாடுகளை களையும் குழுவின் தலைவர் என்பது எத்துணை மோசடியானது!
மேலும், சமபங்கு குழுவில் தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் இடம்பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டாலும், ரோகித் மற்றும் பயல் தத்வியின் தாய்மார்கள் கோரியது போல அவர்களுக்கு 50 சதவிகிதப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. இதனால் பார்ப்பனர்கள், ஆதிக்கச் சாதிவெறியர்கள் இக்குழுவில் நிரப்பப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளானவர்கள் நீதி கிடைக்காமல் வஞ்சிக்கப்படுவது அரங்கேறும்.
அனைத்திற்கும் மேலாக, யு.ஜி.சி-யை கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையத்தை அமைப்பதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு வெளியிட்டுள்ளது. எனவே, யு.ஜி.சி-யுடன் சேர்த்து இவ்விதிகளும் ஒழித்துக்கட்டப்படும் சூழலே நிலவியது. இக்காரணத்தாலும்தான், தீண்டாமையை களைவதற்கான விதிகள் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் கோருகின்றனர்.
மேலும், யு.ஜி.சி. விதி 2012-இன் முக்கியப் பிரச்சினையே அது நடைமுறைப்படுத்தப்படாமல் முடக்கப்பட்டதுதான். பா.ஜ.க. ஆட்சியில் அனைத்து கல்வி நிறுவனங்களும் காவிமயமாகிவரும் சூழலில் இப்புதிய விதி மட்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
யு.ஜி.சி. விதிகள் வெளியான உடனேயே, இவ்விதிகள் தங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்றும் தாங்களும் சாதிய ரீதியாக ஒடுக்கப்படுவதாகவும் பார்ப்பன கும்பல் அப்பட்டமான பொய் பிரச்சாரத்தில் இறங்கியது. கர்ணி சேனா, பிராமன மகாசபா, காயஸ்தா மகாசபாக்கள் மற்றும் பல வைசிய அமைப்புகள் “சவர்ண சமாஜ் ஒருங்கிணைப்புக் குழு”வின் கீழ் வன்முறைப் போராட்டங்களை முன்னெடுத்தன. யு.ஜி.சி. விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பார்ப்பன கும்பலுக்கு அடிபணிந்த உச்சநீதிமன்றம் ஜனவரி 29 அன்று எந்தவொரு அடிப்படையுமின்றி யு.ஜி.சி-யின் புதிய விதிக்கு இடைக்காலத் தடை விதித்து பாசிச கும்பலுக்கு கரசேவை ஆற்றியது.
உச்சநீதிமன்றத்தின் அயோக்கியத்தனமான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமான இந்த உத்தரவை தி.மு.க., சி.பி.ஐ(எம்.எல்) லிபரேஷன் ஆகிய கட்சிகளை தவிர ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான கட்சிகள் அதிகாரப்பூர்வமாகக் கண்டிக்கவில்லை; தி.மு.க-வும் இத்தடையை கண்டித்து போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரசு, திரிணாமுல் காங்கிரசு மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அயோக்கியத்தனமாக இத்தடையை வரவேற்றுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதாக காட்டிக்கொள்ளும் ராகுல் காந்தி மறந்தும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை. பகுஜன் மக்களுக்கான கட்சி என்று சொல்லிக்கொள்ளும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, யு.ஜி.சி. விதி சமூக பதற்ற சூழலை உருவாக்கியதாகவும், அனைத்து பங்குதாரர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தத் தவறிவிட்டதாகவும் கூறி வெட்கக்கேடான முறையில் இத்தடையை வரவேற்றுள்ளார்.
இவையெல்லாம், இக்கட்சிகள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதாக சொல்வதெல்லாம் அப்பட்டமான வாக்குவங்கி அரசியலே ஒழிய, மக்கள் மீதான அக்கறையில்லை என்பதை பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.
தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மாணவர்கள்
பாசிச கும்பல் இவ்விதிக்கு தடை விதித்தாலும் கல்வி வளாக தீண்டாமைக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. சொல்லப்போனால், அது முன்னிலும் தீவிரமடைந்துள்ளது.
யு.ஜி.சி. விதிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவுஜீவிகள் மற்றும் சமூக இயக்கங்கள் பிப்ரவரி 8 அன்று டெல்லியில் ஒன்றுகூடினர். இக்கூட்டத்தின் மூலம் “அனைத்திந்திய சமத்துவ மன்றம் – யு.ஜி.சி. விதிமுறைகள் சமதா அந்தோலன்” (All India Forum for Equity – UGC Regulations Samta Andolan) என்ற கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் (JNUSU), அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), இந்திய மாணவர் சங்கம் (SFI), தேசிய மாணவர் சங்கம் (NSUI), அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF), பிர்சா அம்பேத்கர் பூலே மாணவர் சங்கம் (BAPSA) உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன. மாணவர்கள், ஜனநாயக சக்திகளின் இம்முன்னெடுப்பு வரவேற்கத்தக்கதாகும்.
இம்மன்றம் யு.ஜி.சி-யின் புதிய விதிமுறைகள் மீதான உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடையினைக் கண்டித்ததுடன், புதிய விதிமுறைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் அதனை ரோகித் சட்டத்தின் அடிப்படையில் வலுப்படுத்த வேண்டும் என்றும் கோரியது. மேலும், பிப்ரவரி 13-ஆம் தேதியை அகில இந்திய போராட்டத் தினமாக அறிவித்து, அன்றைய தினம் 100-க்கும் மேற்பட்ட வளாகங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டது. அந்தவகையில், பல்வேறு கல்வி நிறுவனங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், பா.ஜ.க-வின் ஊதுகுழல் ஊடகங்கள் இப்போராட்டங்களை மூடிமறைத்தன.
குறிப்பாக, யு.ஜி.சி. விதிகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் ரோகித் வெமுலா சட்டத்தை நிறைவேற்றக் கோரியும் ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தினர். இதனை சகித்துக்கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ்-இன் குண்டர் படையான ஏ.பி.வி.பி-யும் போலீசும் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியது. மாணவர்களை சிறையில் அடைத்து ஒடுக்கப் பார்த்தது. ஆனால், நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பையடுத்து அவர்களுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விடுவித்தது.
ரோஹித் சட்டத்தை நிறைவேற்றக் கோரி போராடிய ஜே.என்.யு. மாணவர்கள்.
மறுபுறம், ரோகித் வெமுலா சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கையும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஜனவரி 17, 2026 அன்று ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலாவின் பத்தாவது ஆண்டு நினைவு தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ரோகித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா, 2023-ஆம் ஆண்டு ஐ.ஐ.டி. பாம்பே-வில் மர்ம மரணமடைந்த மாணவர் தர்சன் சோலன்கியின் தந்தை, பயல் தத்வியின் தாய் மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், முக்கியமாக, ரோகித் சட்ட பிரச்சாரக் குழுவின் கர்நாடகப் பிரிவு தயாரித்த “ரோகித் வெமுலா சட்டம் – மக்கள் வரைவை” வெளியிட்டனர். இந்நடவடிக்கை ரோகித் வெமுலா சட்டத்தை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை அதிகரிப்பதாக அமைந்தது.
அதேசமயம், இவ்வாறான சட்டங்கள், புதிய விதிகள் உருவாக்கப்படுவதால் மட்டும் கல்வி நிறுவனங்களில் சாதிய கொடுமைகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் களைந்துவிட முடியாது. ஆனால், ஜனநாயக உரிமைகளுக்கான இப்போராட்டமே மாணவர்களையும் ஜனநாயக சக்திகளையும் பாசிசத்திற்கு எதிராகவும் மாற்றை நோக்கியும் நகர்த்தும்.
எனவே, மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் களையப்பட்டு யு.ஜி.சி. விதிகள், 2026 உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கல்வி வளாகங்களில் மாணவர்கள் சங்கங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது; மாணவர் சங்கத் தேர்தல்களை கட்டாயம் நடத்துவது; மாணவர் அமைப்பு என்ற பெயரில் ரவுடிசம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். குண்டர் படையான ஏ.பி.வி.பி-க்கு தடை விதிப்பது; சாதி-மத வெறியர்கள், ஆர்.எஸ்.எஸ்-உடன் தொடர்புடையவர்களை கல்வி நிறுவனப் பொறுப்புகளில் அமர்த்துவதற்குத் தடை விதிப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் ரோகித் வெமுலா சட்டம் இயற்றப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை முன்வைத்து மோடி அரசை நிர்பந்திக்கும் வகையிலும் தாங்கள் ஆளும் மாநிலங்களில் இச்சட்டத்தை நிறைவேற்றாமல் சந்தர்ப்பவாதமாக கள்ளமௌனம் காக்கும் எதிர்க்கட்சிகளை அம்பலப்படுத்தும் வகையிலும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியது புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 12 | அக்டோபர், 2015 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பூதமங்கலம், கொடுக்கம்பட்டி, வாஞ்சிநகரம் ஊராட்சிக்குட்பட்ட கல்லாங்காடு பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பை தி.மு.க. அரசு வெளியிட்டிருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இத்திட்டத்திற்கு எதிராக கல்லாங்காடு சுற்றுவட்டார பகுதி மக்கள் போராடிவந்த நிலையில், சிப்காட் திட்டத்திற்கு முதல் கட்டமாக சாலை அமைக்கும் பணியை சிப்காட் நிர்வாகமும் தி.மு.க. அரசும் மேற்கொண்டு வருகிறது. அதற்காக, இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வளர்த்துவந்த பனை, தென்னை, மா மரங்களை பிடுங்கி எறிந்துவிட்டு சாலை அமைக்கும் பணியை செய்து வருகிறது.
மக்களின் எதிர்ப்பை மீறி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கையால், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, இம்மக்கள் சொந்த நாட்டின் அகதிகளாக மாற்றப்படுவர்.
தமிழ்நாடு அரசே! மதுரை மாவட்ட நிர்வாகமே!
மரங்கள் வெட்டப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்து!
கல்லாங்காடு சிப்காட் திட்டத்தை கைவிடு!
தமிழ்நாடு மக்களே! ஜனநாயக சக்திகளே!
“கல்லங்காடு பகுதியில் சிப்காட் திட்டம் வேண்டாம்!” என முழங்கும் மக்களின் கருத்துக்கு எதிராக இத்திட்டத்தை நடைமுறைபடுத்தி வருகிறது தி.மு.க. அரசு.
இத்திட்டத்திற்கு எதிராக இப்பகுதி மக்களை அணிதிரட்டி ஜல்லிக்கட்டு போராட்டம், மீத்தேன் – ஸ்டெர்லைட் – டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு போராட்டங்களைப் போன்ற முன்மாதிரியான போராட்டங்களை நடத்தி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுவோம்!
தகவல்: மக்கள் அதிகாரக் கழகம், மதுரை கிழக்கு மாவட்டம்.
“சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்!” இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!
“சாதி சான்றிதழை ஒழித்துவிட்டால், சாதி ஒழிந்துவிடும்” என்பது போன்ற வாதங்கள் பொதுவாக இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலையிலிருந்து முன்வைக்கப்படுகின்றன. அதேசமயம், உண்மையாகவே சமத்துவ உணர்விலிருந்தும் சிலர் தங்களை சாதியற்றோர், மதமற்றோர் என பதிவு செய்து சான்றிதழ் பெற விரும்புகின்றனர், முயற்சிக்கின்றனர். சான்றாக, இயக்குநர் வெற்றிமாறன் சாதியற்றோர் சான்றிதழ் வாங்க முயற்சித்ததாக தெரிவித்த போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இவ்விவகாரத்தை எப்படி பார்க்க வேண்டும்?
“சாதி சான்றிதழை ஒழித்துவிட்டால், சாதி ஒழிந்துவிடும்”, “பள்ளிகளில் சாதி கேட்பதை நிறுத்திவிட்டால் சாதி ஒழிந்துவிடும்” என்பது போன்ற வாதங்கள் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டே வருகின்றன. இட ஒதுக்கீடு மீதான ஆதிக்க சக்திகளின் வன்மத்திலிருந்தும் மேட்டுக்குடி வர்க்கப் பார்வையிலிருந்துமே இவ்வாதங்கள் பெரும்பான்மையாக முன்வைக்கப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையாலும் தீண்டாமைக் கொடுமையாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்கும் சீர்திருத்த நடவடிக்கையாகத்தான் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான நிர்வாகக் கருவியாகவே சாதி சான்றிதழ் செயல்படுகிறது.
ஆனால், இன்றளவும் இருளர் உள்ளிட்ட பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் பெறுவது என்பது பெரும் போராட்டமாகவே உள்ளது. பழங்குடியின குழந்தைகள் பலர் சாதி சான்றிதழ் பெற முடியாமல் கல்வியைத் தொடர முடியாத அவலங்களும் அரங்கேறுகின்றன.
இத்தகைய சமூக சூழலில், “சாதி சான்றிதழை ஒழித்துவிட்டால், சாதி ஒழிந்துவிடும்” என்று பேசுவது பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு கிடைக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறிப்பதை நோக்கமாகக் கொண்டதே என்பதை தனியாக விளக்க வேண்டியதில்லை.
அதேசமயம், சாதியற்றோர், மதமற்றோர் எனும் சான்றிதழ் பெற முற்படுபவர்களையும் இதே தராசில் வைத்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்காது. சாதியற்றோர், மதமற்றோர் என சான்றிதழ் பெறுவது என்பது சாதியற்ற ஒரு பொதுப் பண்பாட்டை நோக்கி முன்னேறுவதற்கான தொடக்கக்கட்ட முயற்சி.
சாதியற்றோர் சான்றிதழ் என்பது ஒருவரின் சமத்துவ உணர்வை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் உரிமை. அதிலும், சாதியற்றோர் சான்றிதழ் பெறுபவருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் பலரும் தங்களை சாதியற்றோராக அறிவித்துக்கொள்ள முன்வருவார்கள்.
அதேசமயம், இந்த கட்டமைப்பிற்குள் சாதியற்றோர் சான்றிதழ் வாங்குவதற்கும் பல கட்டப் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை சாதி, மதமற்றோர் சான்றிதழ் வழங்குவதற்கான அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால், சாதியற்றோர் சான்றிதழ் பெறுவது அரிதினும் அரிதாகவே நடைபெறுகிறது.
சாதி – மதமற்றவர் எனும் சான்றிதழ் பெற்ற முதல் இந்தியரான சினேகா பார்த்திபராஜா
சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், சாதி, மதமற்றோர் சான்றிதழ் வழங்க வேண்டி தொடுக்கப்பட்ட வழக்கில், இந்து மத சடங்குகளின்படி மதத்தை துறந்தால்தான் சாதி மதமற்றோர் சான்றிதழ் வழங்க முடியும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மதமற்றவராக தன்னை அறிவிக்க விரும்பும் ஒருவரை மதச் சடங்குகள் மூலம் அதனை நிரூபிக்கச் சொல்வது எவ்வளவு பெரிய முரண்? எவ்வளவு பிற்போக்கானது?
இந்திய அரசியலமைப்பின்படி, ஒருவர் சாதி, மத அடையாளங்களை துறப்பதற்கு உரிமை உள்ளது. மேலும், அது ஒருவரின் தார்மீக உரிமையும் கூட. எனவே, சாதி சான்றிதழ், இட ஒதுக்கீடு பெறுவதற்கான ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்திற்கு துணை நிற்பதுடன், சாதி மதமற்ற ஒரு சமத்துவ சமூகப் பண்பாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகளையும் நாம் ஒருங்கிணைந்தே மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வியக்கத்தின் ஐம்பெரும் முழக்கங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று முன்வைத்திருக்கிறீர்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பு பொதுவில் சமூக நீதிக்கானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், ஆனந்த் தெல்தும்டே போன்றோர் இதில் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனரே, இதை எப்படி புரிந்துகொள்வது?
பிற்போக்குப் பார்ப்பனிய சாதியப் படிநிலை அமைப்பைக் கொண்ட இந்திய சமூகத்தில், படிநிலைச் சாதிய அமைப்பிற்கேற்பவே மக்கள் சமூக – பொருளாதார நிலையைப் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், இன்றளவில் இந்தியாவில் மொத்தம் எத்தனை சாதிகள்-உட்சாதிகள் உள்ளன? சாதி ரீதியாக மக்கள்தொகை எண்ணிக்கை என்ன? தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார நிலை என்ன? என்பவை குறித்த எந்தத் தரவுகளும் ஒன்றிய அரசிடமோ அல்லது மாநில அரசுகளிடமோ இல்லை.
பிரிட்டீஷ் ஆட்சியில் 1931-இல் எடுக்கப்பட்ட சாதிவாரியான கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இதுவரை இந்தியாவில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
2011-இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது மக்களிடம் சாதி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அதன்படி, இந்தியாவில் மொத்தமாக 46 லட்சம் சாதிகள், அதன் துணை சாதிகள், சாதி பெயர்கள், குலங்கள் குறித்த தகவல்கள் மக்களால் அளிக்கப்பட்டிருந்தன. இவை குறித்த எந்தத் தரவுகளும் ஒன்றிய அரசால் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை தொடர்ந்து கோருகின்றன.
இது, இந்தியாவில் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துகின்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம் முக்கிய வினையாற்றியது. ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியமான ஆயுதமாக சாதிவாரிக் கணக்கெடுப்பை முன்னெடுத்தார். தெலுங்கானாவிலும் பீகாரிலும் சாதிவாரிக் கணக்கெடுப்புகள் (Caste Surveys) நடத்தப்பட்டன. இவை பிற மாநிலங்களிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையைத் தீவிரப்படுத்தின.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலை பொறுத்தவரை சாதிவாரிக் கணக்கெடுப்பை, தான் பிரச்சாரம் செய்யும் ‘இந்து ஒற்றுமைக்கான’ அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. பிரதமர் மோடி கூட சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோருபவர்கள் மீது “நகர்ப்புற நக்சல் மனநிலை கொண்டவர்கள்” என்றும் “இந்தியாவை பிளவுபடுத்துபவர்கள்” என்றும் வெறுப்பைக் கக்கியுள்ளார்.
சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்தும்டே.
ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் திடீரென்று சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிரான தனது நிலைப்பாட்டிலிருந்து “அந்தர் பல்டி” அடித்தது. அடுத்துவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அறிவித்தது.
இந்த பின்னணியிலிருந்துதான் சாதிவாரிக் கணக்கெடுப்பின் மீதான அச்சங்கள் எழுப்பப்படுகின்றன.
ஏனெனில், பா.ஜ.க. திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதற்கு பின்னணியில், சரிந்துவரும் தனது மக்கள் அடித்தளத்தை தக்கவைக்க வேண்டும் என்ற உத்தியும், தனது சித்தாந்த மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக, தாழ்த்தப்பட்ட – இதர பிற்படுத்தப்பட்ட மக்களை சாதி ரீதியாக பிரித்தாளுவதற்கான சூழ்ச்சியும் அடங்கியுள்ளது. பாசிச கும்பல் தனது பிளவுவாத அரசியல் நோக்கத்திற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பையும், இட ஒதுக்கீட்டையும் பயன்படுத்துவதற்கான அபாயம் உள்ளது. இது தொடர்பாக புதிய ஜனநாயகம் ஜூலை 2025 இதழில், “பா.ஜ.க-வின் சாதிவாரிக் கணக்கெடுப்பு: சாதி முனைவாக்கத்திற்கான கருவி” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஆனால், சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்தும்டே பா.ஜ.க. மேற்கொள்ளும் சாதிவாரிக் கணக்கெடுப்பினால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரிக்கும் அதேவேளையில், காலனியாதிக்கக் காலத்திலிருந்து தற்போதுவரை ஆளும் வர்க்கங்கள் சாதிவாரி மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளையும், இட ஒதுக்கீடுகளையும் எவ்வாறு தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகின்றன என்பதை விளக்குகிறார். ‘சமூக நீதி’ என்ற பெயரில் ஆளும் வர்க்கங்கள் இவற்றை தங்களுடைய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவது சாதி, மத அடையாளங்களை மேலும் ஆழப்படுத்துகிறது என்று எச்சரிக்கிறார். சாதிவாரிக் கணக்கெடுப்பு – இட ஒதுக்கீடு போன்றவைதான் சமூக நீதிக்கான ஒரே தீர்வு என்ற ‘புனிதப்படுத்தலை’ கேள்விக்குள்ளாக்குகிறார்.
இந்த வகையில் அவர் முன்வைக்கும் கருத்துகள் பரிசீலிக்கப்பட வேண்டியவையே.
அதேசமயம், மக்கள் பல சாதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்தியா போன்ற பின்தங்கிய சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கொள்கைகளை வகுப்பதற்கும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் இதுபோன்ற கணக்கெடுப்புகள் முக்கியத்துவமுடையதாகும். அதிலும் மறுகாலனியாக்கக் காலகட்டத்தில் மக்கள் சமூகப் பொருளாதார ரீதியாக பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றனர். இட ஒதுக்கீட்டிற்கான போராட்டங்கள் அதிகரித்து வருவதையும் இதன் பின்னணியில் இருந்தே பார்க்க வேண்டும். எனவே, தற்போதைய சூழலில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதும் நிறைவேற்றப்பட வேண்டியதுமாகும்.
ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது தேர்தல் அரசியலுக்கான கருவியாகவோ அல்லது பிளவுவாத அரசியலுக்கான ஆயுதமாகவோ அல்லாமல், அறிவியல் மற்றும் ஜனநாயகப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த அடிப்படையில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி, அத்தரவுகளை மக்கள் நலனுக்காகவும் சமூக சீர்திருத்தத்திற்காகவும் பயன்படுத்துவது என்பது நிலவுகின்ற கட்டமைப்பில் சாத்தியமற்றது என்பதையே இத்தனை ஆண்டுகால அனுபவம் உணர்த்துகிறது. இங்குதான் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்றுக் கட்டமைப்புக்கான தேவையும் போராட்டமும் முக்கியத்துவம் பெறுகிறது.
மதுரையைத் தமிழ்ப் பண்பாட்டுத் தளமாக அறிவிக்க வேண்டிய தேவை என்ன?
இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் தனது இந்துராஷ்டிரக் கனவிற்காக இந்தியாவின் பன்மைத்துவத்தை அழித்து ஒற்றைத்துவத்தை நிறுவத் துடிக்கிறது. அதற்காக, ஒரே நாடு – ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தி வருகிறது. பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கொண்ட தமிழ்நாட்டைக் குறிவைத்தும் பல்வேறு காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது.
கீழடி அகழாய்வு.
பாசிச கும்பலின் இந்த ஒற்றைமயமாக்கலுக்கு எதிராக, அந்தந்த மாநிலங்களில் உள்ள முற்போக்கு, ஜனநாயக, சமத்துவ மரபுகள், பண்பாடுகளை உயர்த்திப் பிடிப்பது என்பது இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது.
அந்தவகையில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு வகையான சிறப்புகளைக் கொண்டுள்ளன. அதில் குறிப்பாக, மதுரை மண்டலம் என்பது தமிழர் நாகரீகத்தின் தொட்டிலாக விளங்குகிறது. கீழடி தொல்லியல் புதையல்கள், பழங்காலத் தமிழ் கல்வெட்டுகள், சமணர் குகைகள் போன்றவை இதற்கான சான்றாதாரங்களாகும்.
ஆளும் வர்க்கத்தைப் பணிய வைத்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டங்களின் தொடக்கப்புள்ளி மதுரையே. டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் பாசிச கும்பலை மண்டியிடச் செய்ததுடன், சிப்காட், கிரானைட் எதிர்ப்பு என கார்ப்பரேட் எதிர்ப்புப் போராட்டங்கள் உறுதியாக நடைபெறும் களமாகவும் மதுரை திகழ்கிறது.
திருப்பரங்குன்றம், பறம்பு மலை என மதநல்லிணக்க அடையாளங்களின் தாய் மண்ணாகவும், பார்ப்பனிய எதிர்ப்பு நாட்டார் தெய்வ, குல தெய்வ வழிபாடுகளின் அடையாளமாகவும் மதுரை திகழ்கிறது.
இத்தகைய சிறப்புமிக்க மதுரை மண்டலத்தைத் தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவிப்பது இம்மரபுகளை அழித்தொழிக்கத் துடிக்கும் பாசிசக் கும்பலுக்கு அடிக் கொடுப்பதாக அமையும்.
குறிப்பாக, பாசிச பா.ஜ.க. கும்பல், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார தென் மாவட்டங்களில் தலித் மக்களைக் குறிவைத்து சாதியத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடுவது; திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பது; ஜனநாயக சக்திகள் மீது வன்முறைகளை ஏவுவது; கார்ப்பரேட் திட்டங்களுக்கான குவிமையமாக மாற்றுவது என அதனைத் தனது சோதனைக்களமாக மாற்றத் துடிக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் வேரூன்றத் திட்டமிடுகிறது. எனவே, தென்மாவட்டத்தில் பாசிச கும்பலை வீழ்த்துவதானது தமிழ்நாட்டில் அதன் குதிகால் நரம்பை அறுத்தெறிவதாகும்.
இந்த அடிப்படையிலிருந்தும் மதுரையைத் தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவிப்பதை இணைத்துப் பார்க்க வேண்டும்.
மேலும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் தான் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், அசாம் போன்ற மாநிலங்களை இந்துராஷ்டிரத்திற்கான சோதனைச்சாலைகளாக மாற்றி வருகிறது. இதற்கு எதிராக, பாசிச கும்பலுக்குக் கிலியூட்டும் தமிழ்நாட்டின் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் வகையில் மதுரையைத் தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவிப்பது பாசிச எதிர்ப்பில் ஒரு முன்மாதிரியை உருவாக்குவதாக அமையும்.
தலித் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறீர்கள். இந்த எழுச்சி தமிழ்நாட்டில் மட்டும்தான் ஏற்பட்டுள்ளதா அல்லது இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளதா?
கோரேகான் கிராமத்தில் திரண்டெழுந்த மக்கள் வெள்ளம்.
சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தலித் மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியானது தமிழ்நாட்டில் மட்டும் ஏற்பட்டுள்ளதாகப் பார்க்க முடியாது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலித் மக்களிடையே எழுச்சியைப் பார்க்க முடிகிறது.
இந்தியாவில் மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக நகரமயமாக்கல், விவசாய நசிவு போன்றவை தீவிரமாக நடைபெறும் இடங்களில் இவ்வெழுச்சி துலக்கமாகத் தெரிகிறது. சான்றாக, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, இந்தியாவிலேயே அதிகமாகத் தமிழ்நாட்டில்தான் 48.5 சதவிகித மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அதைத் தொடர்ந்து கேரளா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இம்மாநிலங்களில் தலித் மக்களின் போராட்டங்களும் சமத்துவத்திற்கான குரலும் அதிகரித்து வருவதைக் காண முடியும்.
அதேசமயம், சமத்துவத்திற்கான குரல் மேலோங்கி வருவதைச் சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சாதியத் தாக்குதலைத் தீவிரப்படுத்துகின்றன.
குறிப்பாக, 2014-இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா முழுவதுமே தலித் மக்கள் மீதான தாக்குதல் தீவிரமடையத் தொடங்கியது. ‘பசுவதை’ எனக் கூறி காவிக் குண்டர்களால் அரங்கேற்றப்படும் படுகொலைகள், தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், அவர்கள் உரிமைகளைப் பறிக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள், சட்டத்திட்டங்கள் எனப் பல்வேறு வகைகளில் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், இத்தாக்குதல்கள் தலித் மக்களின் எதிர்ப்பையும் எழுச்சியையும் மேலும் தூண்டும் விதமாகவே அமைகின்றன. அறிஞர்கள் சிலர், இதனை நேரடியாகத் தலித் மக்களின் எழுச்சி என்று வரையறுக்காவிட்டாலும், “2015-க்குப் பிறகு தலித் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. தலித் அரசியல் புதிய மாற்றத்தைக் கோருகிறது” என்று குறிப்பிடுகின்றனர். 2014 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நடந்த பல சம்பவங்களை இதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.
உனாவில் இந்து மதவெறிக் கும்பலின் தாக்குதலைக் கண்டித்து குஜராத் தாழ்த்தப்பட்ட மக்கள் அகமதாபாத் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம்.
குறிப்பாக, ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு குஜராத் மாநிலம் உனா பகுதியில் தலித் மக்களிடையே ஏற்பட்ட எழுச்சி மிக முக்கியமானது. 2016-ஆம் ஆண்டில் உனா தாலுகாவின் மோடா சமாதியாலா கிராமத்தில் செத்த மாட்டின் தோலை உரித்ததற்காகத் தலித் இளைஞர்களை இந்து மதவெறியர்கள் மிகக் கொடூரமாகத் தாக்கினர். இத்தாக்குதல் குஜராத் தலித் மக்களிடம் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்த தலித் மக்கள் அரசு அலுவலகங்களில் மாட்டுத் தோல்களையும் எலும்புக் கூடுகளையும் வீசியது பாசிச கும்பலுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. தலித் மக்களின் போர்குணமிக்க இப்போராட்டம், ஆர்.எஸ்.எஸ்-இன் இரும்புக் கோட்டையாகப் பார்க்கப்படும் குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானி ஒரு தலித் இயக்கத்தைக் கட்டியமைப்பதற்கான வழியேற்படுத்திக் கொடுத்தது.
இச்சம்பவத்திற்கு முன்னதாக, ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் காவிக் கும்பலின் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடிய ஆராய்ச்சி மாணவர் ரோகித் வேமுலா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ரோகித் வெமுலாவின் தற்கொலை நாடெங்கும் இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராக மாணவர்களையும் அறிவுத்துறையினரையும் வீதிக்கு அழைத்து வந்தது. இன்று, பத்தாண்டுகள் கடந்த பின்னும் கல்வி நிலையங்களில் தீண்டாமைக் கொடுமைகளைத் தடுப்பதற்கான “ரோகித் வெமுலா சட்டத்தை” இயற்றக்கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அதேபோல், 2017 மே மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் சஹரான்பூர் பகுதியில் தாகூர் ஆதிக்கச் சாதி வெறியர்களின் அடக்குமுறைக்கு எதிரான தலித் மக்களின் போராட்டம் முக்கியத்துவமுடையது. இந்தப் போராட்டத்தில் சந்திர சேகர் ஆசாத் உருவாக்கிய பீம் சேனா முக்கியப் பங்காற்றியது.
இதற்கடுத்து, 2018-இல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகத் தலித் அமைப்புகள், மக்கள் நாடுதழுவிய அளவில் போராட்டத்தில் இறங்கினர். இந்து மதவெறியர்களின் கோட்டையான இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தலித் மக்கள் பெரும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். போராட்டக்களம் தோறும் போலீசு கடுமையான தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மொத்தம் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில், போலீசு மட்டுமின்றி, பல இடங்களில் பார்ப்பனிய ஆதிக்கச் சாதியினரும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது அக்கும்பலின் சாதிய வன்மத்தைக் காட்டுகிறது.
அதேபோல், இதே 2018-ஆம் ஆண்டில் பாசிச கும்பலால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பீமா கொரேகான் கலவரத்தைத் தலித் மக்களின் எழுச்சியின் மீதான தாக்குதலில் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் அமைந்துள்ள கோரேகான் கிராமத்தில் 1818-ஆம் ஆண்டு நடந்த போரில் சில நூறு வீரர்களைக் கொண்டிருந்த ஆங்கிலேய மகர் படைப் பிரிவு ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொண்டிருந்த சித்பவன் பார்ப்பனர்களான பேஷ்வா படையை வெற்றிக் கொண்டது.
பார்ப்பனிய சாதி ஆதிக்கத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திய இந்த வீரப் போரின் நினைவுச் சின்னமாக இந்த இடத்தில் பீமா கோரேகான் வெற்றித்தூண் நிறுவப்பட்டது. இந்த வெற்றிநாளின் 200-ஆம் ஆண்டையொட்டி “எல்கர் பரிஷத்” என்ற (எல்கர் என்றால் உரத்த அறிவிப்பு அல்லது உரத்த அழைப்பு என்று பொருள்) மாநாடு டிசம்பர் 1, 2017 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். 250-க்கும் மேற்பட்ட தலித் மற்றும் இடதுசாரி அமைப்புகள் கலந்துகொண்டன. “பீமா கோரேகான் போரில் ஒடுக்கப்பட்ட மக்கள் பார்ப்பன சாதி ஒடுக்குமுறையை ஏவிய பேஷ்வாக்களுக்கு எதிராகப் போராடியது போலத் தற்போது நமது நாட்டில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசின் பார்ப்பன பாசிசத்திற்கு எதிராகப் போராட வேண்டும்” என்று மாநாட்டில் அறைக்கூவல் விடுக்கப்பட்டது.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத காவிக் கும்பல் ஜனவரி 1, 2018 அன்று பீமா கோரேகான் போரின் நினைவு நாளை கொண்டாட வந்த மக்கள் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்தது. கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவிக் குண்டர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டனர். சிறுவர்கள், பெண்கள் என அனைவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த கலவர வழக்கில்தான் சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என 16 பேரைக் பொய்க் குற்றச்சாட்டின் கீழ் ஊபா எனும் கருப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தது பாசிச மோடி அரசு.
இதன் பிறகு 2020-இல் உத்தரப்பிரேதசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது தலித் பெண், தாகூர் ஆதிக்கச் சாதிவெறியர்களால் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேச போலீசு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை இரவோடு இரவாக எரித்தது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இந்தியா முழுவதும் எதிர்ப்புக்குள்ளானது. ஆதிக்கச் சாதிவெறியர்கள் சாதிய ஒடுக்குமுறையின் கருவியாகப் பாலியல் வன்முறையைக் கையாளுகிறார்கள் என்பதற்கான சாட்சியமாக ஹதராஸ் சம்பவம் மாறியது.
அதேபோல், பாசிச மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி விவசாயிகளின் போராட்டத்தின்போது (2020-2021) ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஜாட் விவசாயிகளுடன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயக் கூலிகளும் ஒன்றிணைந்து போராடியது முக்கியத்துவமுடையது.
அதேபோல், மேற்குவங்கத்தில் தலித் மக்கள் நடத்திவரும் ஆலய நுழைவு போராட்டம், பார்ப்பன கும்பலிடமிருந்து பௌத்த தளங்களை மீட்பதற்காக வட மாநிலங்களில் நடந்துவரும் போராட்டம், மகாராஷ்டிராவின் அஹில்யாநகர் மாவட்டத்தில் உள்ள சவுண்டாலா கிராமம் தன்னைச் சாதியற்ற கிராமமாக அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றியது ஆகியவையும் தலித் மக்களின் எழுச்சியின் அங்கங்களே.
இவ்வாறு, பாசிசக் கும்பலின் தாக்குதல்களுக்கு எதிரான தலித் மக்களின் எழுச்சியானது இந்தியா முழுவதும் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வருகிறது.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 11 | செப்டம்பர் , 2015 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 10 | ஆகஸ்ட் , 2015 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய