Wednesday, June 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 7

மே தின வரலாறு | அலெக்ஸாண்டர்  ட்ராச்டென்பர்க் | பாகம் 3

மே தினம் உலக தினமாக மாறியது

சாமுவேல் கோம்பர்ஸ் அவர்கள் தனது சுயசரிதையில் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு எங்ஙனம் மே தினம் ஒரு உலகத் தொழிலாளர் விடுமுறை தினமாக மாறுவதற்கு வழி செய்தது என்பது குறித்துக் கூறுகிறார். “எட்டு மணி நேர இயக்கத்துக்கான தயாரிப்புகள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. நாங்கள் தொடர்ந்து எங்கள் நோக்கத்தைப் பரவலாக்குவது குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தோம். பாரிஸில் சர்வதேச தொழிலாளர் காங்கிரசுக்கான நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த காங்கிரசின் மூலம் உலகளாவிய ஆதரவைப் பெறுவதின் மூலம் எங்கள் இயக்கம் பயனடைய முடியும் என்று நான் நினைத்தேன்.” கோம்பர்ஸ் தனது சந்தர்ப்பவாதத்தையும், சீர்திருத்தவாதத்தையும் ஏற்கனவே வெளிக்காட்டியுள்ளார். பின்னர் அது அவரின் வர்க்க சமரசக் கொள்கையில் முழுமையாக வெளிப்பட்டது. முன்பு தீவிரமாக எதிர்த்துப் போராடிய சோஷலிஸ்டு தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் அவர் தயாராய் இருந்தார்.

1889 ஆம் ஆண்டு 14ஆம் நாள் பாஸ்டில் வீழ்ச்சியின் நூற்றாண்டு விழா பாரிஸில் நடந்தது. இதற்காக உலகெங்கிலுமிருந்து சோஷலிச இயக்கத் தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். 25 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் மாபெரும் ஆசான்களான மார்க்ஸும், எங்கெல்சும் உருவாக்கிய அகிலத்தைப் போன்ற ஒன்றை உருவாக்கவே அவர்கள் அங்கு கூடினர். பின்னர் அதுவே இரண்டாவது அகிலம் என்று அழைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்தவர்கள் அமெரிக்கப் பிரதிநிதிகளிடமிருந்து 8 மணி நேர இயக்கப் போராட்டத்தைப் பற்றியும், சமீபத்தில் அதற்கு புத்துயிர்ப்பு அளிக்கப்பட்டது பற்றியும் தெரிந்துகொண்டார்கள். அதன் விளைவாக பாரிஸ் மாநாடு கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.

“எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. 1888 டிசம்பரில் செயிண்ட் லூயிஸில் கூடிய அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு 1890 மே முதல் நாளை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதால் அதே நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே அந்த குறிப்பிட்ட நாளில் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் அவர்களின் நாட்டுச் சூழ்நிலைக்கேற்ப இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாநாடு அறிவிக்கிறது.”

1890 ஆம் ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் மரவேலைத் தொழிலாளர்களும் கட்டிட வேலைத் தொழிலாளர்களும் சோஷலிஸ்ட்டான பீட்டர் மெக்கியூரி தலைமையில் 8 மணி நேர வேலைநாளுக்காக பொது வேலைநிறுத்தத்தில் இறங்கினர். ஜெர்மனியில் சோஷலிஸ்டுகளுக்கு எதிராக பல விசேஷ சட்டங்கள் இருந்தபோதிலும் பல தொழில் நகரங்களில் தொழிலாளர்கள் மே தினத்தைக் கொண்டாடினார்கள். அதேபோல் மற்ற ஐரோப்பிய தலைநகரங்களிலும் அதிகார வர்க்கத்தின் எச்சரிக்கையையும் ஒழுங்குமுறையையும் மீறி தொழிலாளர்கள் மே தினத்தைக் கொண்டாடினர். அமெரிக்காவில் சிக்காகோவிலும், நியூயார்க்கிலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாய் இருந்தன. ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் 8 மணி நேர கோரிக்கையை வலியுறுத்தி அணிவகுத்தனர். முடிவில் முக்கிய மையங்களில் திறந்த வெளிக் கூட்டங்கள் நடைபெற்றன.

1891ல் அகிலத்தின் அடுத்த மாநாடு பிரான்ஸில் நடந்தது. மே முதல் நாளின் உண்மையான நோக்கம் 8 மணி நேர வேலைநாள் என்பதை மீண்டும் எடுத்துறைத்தது. பொதுவான வேலை நிலைமைகளை சீர் செய்ய வேண்டும், நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காகவும் அத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றது. மாற்றியமைக்கப்பட்ட தீர்மானம் குறிப்பாக 8 மணி நேர வேலைநாள் மே தின ஆர்ப்பாட்டத்தின் வர்க்கத் தன்மையை வலியுறுத்துவதாக இருந்தது. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் வேலைநிறுத்தம் நடைபெற வேண்டும் என்று தீர்மானம் சொன்னது. அதே நேரத்தில் மே தின ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தவும் ஸ்தூலப்படுத்தவும் அகிலம் முயற்சி எடுத்தது. பிரிட்டிஷ் தொழிலாளர் தலைமையே ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளோடு சேர்ந்துகொண்டு, மே முதல் நாள் வேலை நிறுத்தத்தை ஏற்க மறுத்து அதை அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று வாக்களித்தது. இதன் மூலம் அது தன் சந்தர்ப்பவாத்தை வெளிக்காட்டியது.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 பிப்ரவரி, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 6 | 1991 பிப்ரவரி 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நாடாளுமன்ற – சட்டமன்ற ரௌடித்தனம்! எதுவுமே புனிதமில்லை! ஏன் இந்தப் பம்மாத்து!
  • மதுரை சட்டக்கல்லூரி: அநீதிக்கு எதிராக தொடரும் பயணம்
  • எருமைத்தோல் அதிகாரிகளுக்கு புரியும் மொழியில் போராட்டம்!
  • வளைகுடா யுத்தம் எண்ணெய்க்கு ரத்தம்!
  • உளவியல் யுத்தம்! புரட்சியாளர்கள் தடுமாற்றம்!
  • வளைகுடா போருக்கு எதிராக…
  • காவிரி நீர்: வஞ்சகத் தீர்ப்புக்கு எதிராக
  • ராஜீவின் சந்தேக நோய்
  • பா.ஜ.க.வின் பாசாங்கு கலைந்தது
  • அரசின் சில்லறைத்தனம்!
  • வீட்டுமனைப் பிரச்சினை: தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக சாதிவெறியர்கள் எதிராக கொட்டம்
  • நெருப்பின் மேல் இந்தியா!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • கோர்பச்சேவின் கதி என்ன?
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பஹல்காம் தாக்குதல்: தேசவெறியில் மூழ்கடிக்கப்படும் உண்மைகள்

காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு, “நாங்கள் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், பிரதமர் மோடி அரசாங்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து பயங்கரவாத சூழலையும் அழித்துள்ளது” என்று கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற “ஜே&கே மற்றும் லடாக் த்ரூ தி ஏஜஸ்” (JK & Ladakh Through The Ages) என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கொக்கரித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஆனால், சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டப் பிறகு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்தே வந்துள்ளன.

அத்தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டப் பிறகு, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் அதிகப்படியான மக்கள் உயிரிழந்துள்ளது இந்த பஹல்காம் தாக்குதலில்தான்.

இத்தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் மற்றும் தாக்குதலைத் தடுக்க முயன்ற சையது ஆதில் ஹூசைன் என்ற காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த குதிரை சவாரிக்காரர் என மொத்தம் 26 பேர் பயங்கரவாதிகளால் ஈவிரக்கமின்றி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் தங்கள் கண்முன்னே படுகொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்ததை பார்த்து பாதிப்புக்குள்ளான மக்கள் அதிர்ச்சியிலிருந்தும் சோகத்திலிருந்தும் இன்னும் மீளவில்லை. திருமணமான ஒரு வாரத்திலேயே பெண் ஒருவர் தனது கணவனை இழந்திருப்பது, ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் கொல்லப்பட்டிருப்பது என இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் ஆறுதல்படுத்த முடியாதவை.

இத்தகைய கொடியத் தாக்குதல் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆன போதிலும், இத்தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது, எத்தனை பேர் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான விவரங்கள் அரசு தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. மாறாக, ஊடகங்கள்தான் சந்தேகம் என்ற பெயரில் நொடிக்குநொடி பரப்பரப்பாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. தாக்குதல் நடத்தியதற்கு “லக்‌ஷர்-இ-தொய்பா” பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான “தி ரெசிஸ்டென்ஸ் ப்ரண்ட்” என்ற அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது என்றும் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூவரின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களில் ஒருவன் பாகிஸ்தானின் இராணுவப் பிரிவான எஸ்.எஸ்.ஜி-யைச் சேர்ந்தவன் என்று சந்தேகம் உள்ளதாகவும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

சங்கிகளின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு கிடைத்த சம்மட்டி அடி

இஸ்லாமிய வெறுப்பைக் கக்குவதற்காக நாக்கைத் தொங்கவிட்டு காத்துக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பலும், அதன் ஆதரவு ஊடகங்களும் பஹல்காம் தாக்குதல் நடந்த உடனேயே இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கின.

பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளிடம் இந்துவா? முஸ்லீமா? என்று கேட்டும், ஆடைகளை அவிழ்த்து முஸ்லீம் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டும், இந்துகளை மட்டும் படுகொலை செய்ததாக தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதன் உண்மைத்தன்மை சோதிக்கப்படும் முன்பே இச்செய்திகளை பரப்பி காவிக் கும்பல் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்கியது; காஷ்மீரில் வாழும் இஸ்லாமிய மக்கள் பயங்கரவாதத்திற்கு துணைபோவதாகப் பொய்யாக சித்தரித்தது. பா.ஜ.க-வை சேர்ந்த சுவேந்து அதிகாரி, இத்தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணிடம், அவருடைய கணவர் இந்து என்பதால் கொல்லப்பட்டார் என்று சொல்லக் கூறி மிரட்டும் காணொளிகள் வெளியாகி பாசிசக் கும்பலின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தின.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள்தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று சித்தரிக்கும் வகையிலான கருத்துகள், புகைப்படங்கள், காணொளிகளை காவிக் கும்பல் சமூக வலைத்தளங்களில் பரப்பியது. பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்களில் “பாகிஸ்தான் வாழ்க” என்று முழக்கங்கள் எழுப்பப்படுவதாக காணொளிகளை திரித்து வெளியிட்டது. மேற்குவங்கத்தில் உள்ள பிதான் சந்திரா வேளாண் பல்கலைக்கழகத்தின் விளம்பர சுவரில் “நாய்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அனுமதியில்லை” என்று சுவரொட்டி ஒட்டப்பட்டது. வட மாநிலங்களில் சில சாலைகளில் பாகிஸ்தான், வங்கதேசம், பாலஸ்தீன நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்டன. இதன் உச்சமாக, உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் இந்துமதவெறி போதை தலைக்கேறிய காவிக் குண்டர், இஸ்லாமிய இளைஞர் இருவரை சுட்டுக்கொன்ற கொடூரமும் அரங்கேறியது.

ஆனால், பஹல்காமில் தாக்குதலுக்குள்ளான மக்களை காஷ்மீரின் இஸ்லாமியர்கள் காப்பாற்றிய காணொளிகள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி காவிகளின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தன. காயமடைந்த சிறுவனை பல கிலோமீட்டர் தொலைவிற்கு முதுகில் சுமந்து சென்று காப்பாற்றிய சஜ்ஜாத்தின் காணொளி; காஷ்மீர் மக்கள்தான் தங்களை பாதுகாத்தார்கள் என்பதை காஷ்மீரில் இருந்து திரும்பிய சுற்றுலாப் பயணிகள் ஊடகங்களில் தெரிவித்தது; தாக்குதலில் தந்தையை பறிக்கொடுத்த பெண் ஒருவர் தனக்கு காஷ்மீரில் இரண்டு அண்ணன்கள் கிடைத்துள்ளார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறியது போன்றவை சங்கிக் கும்பலின் வெறுப்புப் பிரச்சாரத்தின் மீது காரி உமிழ்ந்தன.

இஸ்லாமியர்கள்தான் இத்தாக்குதலுக்கு காரணம் என்று சங்கிக் கும்பல் ஊளையிட்டுக் கொண்டிருந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது சங்கிக் கும்பலின் சதித்திட்டத்தில் மண்ணை அள்ளிப்போட்டது. அதிலும், ஜனவரி 23 அன்று ஜம்மு காஷ்மீரில் இப்பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் காஷ்மீர் மக்கள் பயங்கரவாதத்தை ஒருபோதும் விரும்பவில்லை என்பதை எடுத்துக்காட்டியது. இவையன்றி, பல்வேறு ஜனநாயக சக்திகளும் நடிகர்களும் சமூக வலைத்தளங்களில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும் மதநல்லிணக்கத்தை உயர்த்திப்பிடித்தும் கருத்துக்களை தெரிவித்து பாசிசக் கும்பலால் இஸ்லாமிய வெறுப்பை தீவிரமாக எடுத்துச் செல்ல முடியாமல் செய்தனர்.

தேசவெறியில் மூழ்கடிக்கப்படும் உண்மைகள்

தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் எடுபடாததை உணர்ந்துகொண்ட மோடிக் கும்பல், தேசவெறிப் பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுக்க ஆரம்பித்தது. பாகிஸ்தானுக்கு எதிராக தேசவெறியை தூண்டிவிடும் வகையில், தாக்குதல் நடந்த அடுத்த நாளே பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டுமென உத்தரவிட்டது; இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தண்ணீர் விநியோக ஒப்பந்தமான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்தது; வாகா எல்லையை மூடியது உள்ளிட்ட ஐந்து நடவடிக்கைகளை மோடி அரசு அடாவடித்தனமாக மேற்கொண்டது. பா.ஜ.க. அடிவருடி ஊடகங்களின் துணையுடன் வடமாநில மக்களை இலக்கு வைத்து இந்நடவடிக்கைகளை ஊதிப்பெருக்கியது. இந்தியாவை பார்த்து பாகிஸ்தான் நடுங்கிக் கொண்டிருப்பதை போன்ற தோற்றத்தை மோடி ஊடகங்கள் கட்டமைத்தன.

ஆனால், பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் துளியளவும் நெருக்கடியை ஏற்படுத்தாத மோடி அரசின் இந்நடவடிக்கைகளால், மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்த மக்களும், பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்துவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவி மக்களுமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மறுபுறம், பாகிஸ்தான் அரசும் தன்பங்கிற்கு போர் தயாரிப்புகளில் ஈடுபடுவதை போன்று அறிவிப்புகளை வெளியிட்டு உள்நாட்டு நெருக்கடியில் இருந்து மக்களை திசைதிருப்ப முயற்சிக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் தனது அரசியல் நெருக்கடியை தீர்த்துகொள்வதற்கான நல்வாய்ப்பாகவே இத்தாக்குதலை பார்க்கின்றன. இந்தியாவில் தேசவெறியை தூண்டிவிடும் வகையில் நாள்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டுவரும் மோடி அரசு, இதன்மூலம் உண்மைகளை மறைத்து பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மக்களைத் திசைத்திருப்பும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளது.

முதலாவதாக, பஹல்காம் தாக்குலையொட்டி மோடி அரசின் பாதுகாப்பு குறைபாடு குறித்து பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடைபெற்ற பஹல்காம் பகுதியில் மட்டும் ஏன் இராணுவ வீரர்கள் இல்லை? தாக்குதல் நடந்த பிறகும் மக்களை காப்பாற்ற உடனடியாக இராணுவ வீரர்கள் ஏன் அங்கு வரவில்லை?

அதேபோல், காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கசிந்திருந்த போதிலும், நடவடிக்கை எடுக்கவில்லை என “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 19-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த மோடியின் காஷ்மீர் பயணம் கடைசி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதும் சந்தேகத்தை எழுப்புகிறது.

அதேபோல, காஷ்மீரில் தாக்குதல் நடந்தவுடன் தன்னுடைய சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசரமாக இந்தியாவிற்கு வந்த மோடி, தாக்குதல் நடத்தப்பட்ட காஷ்மீருக்கு செல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்காமல் பீகாருக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டது நமக்கு புல்வாமா தாக்குதலையே நினைவுப்படுத்துகிறது.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலின் போது இதேபோன்று சங்கிக் கும்பலால் தேசவெறி கிளப்பிவிடப்பட்டது. ஆனால், புல்வாமா தாக்குதலின்போது காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் மோடிக்கு தெரிந்தே அல்லது மோடியால் அனுமதிக்கப்பட்டே நடைபெற்றது என்பதை அம்பலப்படுத்தினார். இதன்மூலம் தன்னுடைய தேர்தல் ஆதாயத்திற்காக 40 உயிர்களை மோடிக் கும்பல் தெரிந்தே பலிக்கொடுத்தது என்பது அம்பலமானது.

தற்போதும், பஹல்காம் தாக்குதலை பயன்படுத்தி பீகார் தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகிறது. இதனைப் பார்க்கும்போது பஹல்காம் தாக்குதலையும் மோடி அரசு தெரிந்தே அனுமதித்துள்ளாதா? என்று கேள்வி நமக்கு இயல்பாக எழுகிறது.

ஆனால், நியாயப்பூர்வமான இக்கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தனக்கே உரிய பாசிசத் திமிருடன் மோடி அரசு நடந்து கொள்கிறது. மோடி அரசை பார்த்து கேள்வியெழுப்பியதற்காக பாடகர் நேஹா சிங் ரத்தோர், டாக்டர் மெடுசா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்துள்ளது. அதன்மூலம் காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியாத தன்னுடைய கையாலாகத்தனத்தை மறைத்துக்கொள்கிறது.

பாசிச கும்பலின் சதித்திட்டம்

ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற போதெல்லாம் மாநில அரசாங்கத்தைக் கலைக்க வேண்டும், பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று கூச்சலிட்ட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், தற்போது இத்தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு ‘இந்துக்களின் மீட்பர்’, ‘தேசத்தின் பாதுகாவலர்’ என்றெல்லாம் மோடிக்கு பொய்யான பிம்பங்களை கட்டியமைக்க முயற்சிக்கிறது.

ஏனென்றால், விவாசாயிகள் போராட்டம் உள்ளிட்டு நாடுமுழுவதும் நடந்த மக்கள் போராட்டங்களால் பாசிசக் கும்பல் தோல்வி முகத்திற்கு தள்ளப்பட்டதையடுத்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே மோடியின் ‘வளர்ச்சி நாயகன்’, ‘தேசத்தின் பாதுகாவலன்’ போன்ற முகமூடிகள் கிழிந்துவிட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றாலும் பெரும்பான்மையை பெற முடியாமல் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டது. ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள் பா.ஜ.க-விற்கு உத்வேகத்தை அளித்தாலும் அது நீண்ட நாட்களுக்கு கைக்கொடுக்கவில்லை.

நாடுமுழுவதும் நடந்துவரும் மக்கள் போராட்டங்கள், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க-விற்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகள், இராமன் கோவில் திறப்பிற்கு பிறகு நாடுத்தழுவிய நிகழ்ச்சிநிரலை உருவாக்க முடியாத தோல்விகள், சர்வதேச அளவில் பாசிச டிரம்பின் வரி விதிப்புகள் போன்றவை பாசிச கும்பலின் நெருக்கடியையும் தோல்வி முகத்தையும் மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இதிலிருந்து சமாளித்து கொள்வதற்காக பஹல்காம் தாக்குதலை பயன்படுத்தி இந்தியா முழுவதும் தேசவெறியை கிளப்பிவிடுகிறது. இதனை தனது தேர்தல் ஆதாயத்திற்கு பயன்படுத்த திட்டமிடுவதுடன், வக்ஃப் திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் உள்ளிட்டு நாடுமுழுவதும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கத் துடிக்கிறது.

பஹல்காம் தாக்குதலில் மோடி அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து நியாயமான கேள்விகளையெழுப்பும் ஊடகவியலாளர்கள், ஜனநாயக சக்திகள் மீது தேச விரோதி என்ற முத்திரையைக் குத்தி சிறையிலடைத்து வருகிறது பாசிச கும்பல்.

மறுபுறம், பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு ஜம்மு-காஷ்மீரில் வாழும் இஸ்லாமிய மக்கள் மீது இராணுவ அடக்குமுறைகளை அதிகரித்திருக்கிறது. இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்று கூறி ஆதரங்கள் ஏதுமின்றி இதுவரை 12-க்கும் மேற்பட்ட மக்களின் வீடுகளை இடித்து, காஷ்மீர் இஸ்லாமிய மக்கள் மீது புல்டோசர் பயங்கரவாதத்தை ஏவி வருகிறது.

அதேபோல், ஏப்ரல் 24-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை அழைக்காமல் புறக்கணித்தது; “காஷ்மீரில் தேர்தலை நடத்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்குமா?” என்று சங்கி அர்ணாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தை நோக்கி கேள்வி எழுப்பியிருப்பது ஆகிய நடவடிக்கைகள் காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்து காஷ்மீரை இராணுவ சர்வாதிகார பிடியின் கீழ் இருத்த வேண்டும் என்ற பாசிசக் கும்பலின் நோக்கத்தை அம்பலப்படுத்துகின்றன.

குறிப்பாக, காஷ்மீரில் மிகப்பெரும் அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் உள்ளிட்ட அரியவகைத் தனிமங்களை சூறையாடும் நோக்கிலேயே பாசிசக் கும்பல் 370 சட்டப்பிரிவை இரத்துச் செய்தது. அதனையடுத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் காஷ்மீரை சூறையாடிவந்த நிலையில், கடந்த ஆண்டில் ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு தேர்தல் நடந்து அங்கு தேசிய மாநாடு கட்சி ஆட்சியமைத்தது பாசிச கும்பலை எரிச்சலூட்டியது. அதன் தொடர்ச்சியாக, காஷ்மீரில் சந்தேகத்திற்குரிய வகையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்ததுயடுத்து, “இது தேசிய மாநாடு கட்சியின் ஆட்சியை கலைப்பதற்கான முயற்சியாக இருக்கலாம்” என அக்கட்சியை சார்ந்த ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்தார். தற்போது பஹல்காம் தாக்குதல் நடந்துள்ள நிலையில், காஷ்மீரில் மோடி அரசின் அதிகாரத்தை விரிவுப்படுத்திக்கொண்டு அங்கு கனிமவளச் சூறையாடலை தீவிரப்படுத்துவதற்கான சதி அரங்கேறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

இவ்வாறு இத்தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு பாசிச கும்பல் பல்வேறு காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது. தேசவெறி பிரச்சாரங்கள் மூலம் மக்களை திசைதிருப்பிவிட்டு தனது பாசிச சதித்திட்டங்களை அரங்கேற்ற துடிக்கிறது. ஆனால், பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மோடி கும்பலின் தேசவெறி பிரச்சாரத்திற்கு பலியாகி அதன் ஊதுகுழலை போல கருத்து தெரிவித்து வருகின்றன. இச்சூழலில், மோடி அரசின் சதித்திட்டங்களை முறியடிக்க வேண்டிய கடமை இந்தியா முழுவதுமுள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் தோள்களிலேயே சுமத்தப்பட்டுள்ளது.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – மே 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகம் – மே 2025 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் மே 2025 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – மே 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மே தின வரலாறு | அலெக்ஸாண்டர்  ட்ராச்டென்பர்க் | பாகம் 2

மே தின வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்புகள்

1877ல் மிகப் பெரிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிரப் போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கெதிராக ராணுவம் ஏவப்பட்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர். இப்போராட்டம் தொழிலாளர் இயக்கம் முழுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின் முதல் மாபெரும் தேசிய அளவிலான வெகுஜன இயக்கமாக விளங்கியது. அரசு மற்றும் முதலாளிகளின் கூட்டுச் சதி காரணமாக இவ்வியக்கம் தோற்கடிக்கப்பட்டது.

இப்போராட்டங்களின் விளைவாக அமெரிக்கத் தொழிலாளி வர்க்கம் தன் வர்க்க நிலைப்பாடு குறித்து மேலும் தெளிவை அடைந்தது. அதன் போர்க்குணமும் ஒழுக்கநெறியும் மேலும் செழுமையடைந்தன. இப்போராட் டங்கள் பென்சில்வேனியா சுரங்க அதிபர்களுக்கு ஒரு வகையான பதிலடியாக அமைந்தன.

ஏனெனில், இரண்டாண்டுகளுக்கு முன்புதான் 1875ம் ஆண்டு சுரங்கத் தொழிலாளர் சங்கங்களை அழிக்கும் பொருட்டு தீவிரப் போர்க்குணமுள்ள பத்து தொழிலாளர்களை சுரங்க அதிபர்கள் தூக்குமரத்திலேற்றினார்கள்.

அமெரிக்கத் தொழிற்துறை மற்றும் உள்நாட்டுச் சந்தை 1880-90க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் தீவிர வளர்ச்சியடைந்தது. ஆனபோதிலும் 1884-85க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு மந்த நிலை நிலவியது. இந்நிலை 1873ல் ஏற்பட்ட நெருக்கடியின் தொடர்ச்சியாகும். அப்போது வேலையில்லாத் திண்டாட்டமும் மக்கள் துன்பமும் பெருகியது. இது குறைவான வேலைநாளுக்கான இயக்கத்திற்கு உந்துதல் சக்தியைத் தந்தது.

கூட்டமைப்பு அப்போதுதான் உருவானது. ‘நைட்ஸ் ஆப் லேபர்’ என்ற தொழிலாளர் ஸ்தாபனம் அதற்கு முன்பே இருந்தது. அது தொடர்ந்து வளர்ந்து வந்தது. எட்டு மணி நேர வேலை என்ற கோஷத்தின் கீழ் இவ்விரு அமைப்புகளுக்கும் வெளியே உள்ள தொழிலாளர்களைத் திரட்ட முடியும் என்று கூட்டமைப்பு உணர்ந்தது. 8 மணி நேர வேலைநாள் இயக்கத்துக்கு ஆதரவு தருமாறு ‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தைக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. அனைத்துத் தொழிலாளர்களும் பொதுவாக ஒரு நடவடிக்கையில் இறங்கினால்தான் தனக்கு சார்பான பலனைப் பெற முடியும் என்று கூட்டமைப்பு உணர்ந்திருந்தது.

1885ல் கூட்டமைப்பு மாநாடு, அடுத்த ஆண்டு மே முதல் நாள் வேலைநிறுத்தம் செய்வது பற்றி மீண்டும் எடுத்துரைத்தது. பல தேசிய சங்கங்கள் போராட்டத்துக்கான தயாரிப்புகளில் இறங்கின. குறிப்பாக மரவேலை மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் தயாரிப்புகளில் இறங்கினர். இந்தப் போராட்டத்தின் காரணமாக அப்போதிருந்த தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்தது. கூட்டமைப்பைக் காட்டிலும் பிரபலமாக விளங்கிய ‘நைட்ஸ் ஆப் லேபரின் உறுப்பினர் எண்ணிக்கை 20 லட்சத்திலிருந்து 70 லட்சத்திற்கு உயர்ந்தது. அதே நேரத்தில் 8 மணி நேர இயக்கத்தையும் அதற்கான நாளையும் நிர்ணயித்த கூட்டமைப்பின் மதிப்பு உயர்ந்தது. அதன் உறுப்பினர் எண்ணிக்கையும் பெருமளவு உயர்ந்தது. வேலைநிறுத்தத்திற்கான நாள் நெருங்க நெருங்க ‘நைட்ஸ் ஆப் லேபர்’ அமைப்பின் தலைமை, குறிப்பாக, டெரன்ஸ் பௌடர்லி என்பவன் நாச வேலைகளில் இறங்கினான். தன்னுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாமென ரகசியமாக அறிவுறுத்தினான். இந்த விஷயம் வெளியானதும் கூட்டமைப்பின் புகழ் மேலும் உயர்ந்தது. இரு ஸ்தாபன ஊழியர்களும் போராட்டத் தயாரிப்புகளில் உற்சாகத்தோடு இறங்கினர். 8 மணி நேர வேலைநாள் குழுக்களும் சங்கங்களும் பல நகரங்களில் எழுந்தன. தொழிலாளர் இயக்கம் முழுவதும் போர்க்குணத்தின் தன்மை மேலிட்டது. திரட்டப்படாத தொழிலாளர்களையும் இது பற்றிக்கொண்டது. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு புதிய நாள் அப்போது விடிந்துகொண்டிருந்தது.

தொழிலாளர்களின் அப்போதைய மனநிலையை அறிய சிறந்த வழி அவர்களின் போராட்ட அளவையும், ஆழத்தையும் ஆராய்வதே ஆகும்.  அப்போது நிகழ்ந்த பல வேலை போராட்ட குணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கின.  முந்திய ஆண்டைக் காட்டிலும் 1885-86ல் வேலை நிறுத்தங்களின் எண்ணிக்கை அதிகமாகியது.  1886 மே முதல் நாளுக்கான வேலைநிறுத்தத் தயாரிப்புகளோடு 1885 ஆம் ஆண்டு எண்ணிக்கையும் ஏற்கனவே பெருகியது.  1881-84ல் நிகழ்ந்த வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 500. வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,50,000.  ஆனால் 1885ல் வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 700 ஆகவும், பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,50,000 ஆகவும் உயர்ந்தது.  1885ல் நடைபெற்ற வேலைநிறுத்தங்களைப் போல் இரு மடங்கு 1886ல் நடைபெற்றது.  கிட்டத்தட்ட 1572 வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன.  6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.  1885ல் 2467 ஆக இருந்த பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 1886ல் 11562 ஆக உயர்ந்ததிலிருந்து வேலை நிறுத்தங்கள் பரவிய வேகத்தை தெரிந்து கொள்ளலாம்.  ‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தின் நாசவேலையில் இருந்த போதிலும் 8 மணி நேர வேலைநாளுக்கான போராட்டத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள்  கலந்துகொண்டார்கள் எனக் கணக்கிடப்படுகிறது.

இவ்வேலைநிறுத்தத்தின் மையமாக விளங்கியது சிக்காகோ நகரமாகும்.  இங்குதான் வேலைநிறுத்த இயக்கம் மிகப் பரவலாக பரவி இருந்தது.  மேலும் பல நகரங்களில் மே முதல் நாள் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன.  நியூ யார்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சிநாட்டி, செயின்ட் லூயிஸ், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களில் வேலைநிறுத்தங்கள்  சிறப்பாக நடைபெற்றன.  உதிரி மற்றும் பயிற்சி பெறாத தொழிலாளர்களின் எண்ணிக்கை அப்போது அதிக அளவில் இருந்தது.  இவர்களும் இப்போராட்டத்தால் கவரப்பட்டது இவ்வியக்கத்தின் சிறப்பம்சமாகும்.  ஒரு புரட்சிகரமான உணர்வு நாடு முழுவதும் நிலவியிருந்தது.  முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் இதை சமூகப் போர் என்றார்கள்.  மூலதனத்தின் மீதான வெறுப்பு என்றார்கள்.  அப்போது கீழ்மட்ட ஊழியர்களிடையே நிலவிய அற்புதமான உற்சாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.  மே முதல் நாள் வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களில் பாதிப்பேர் வெற்றி கண்டதாகச் சொல்லப்படுகிறது.  மற்ற இடங்களிலும் 8 மணி நேர வேலைநாளை அடைய முடியா விட்டாலும் ஏற்கனவே இருந்த வேலை நேரத்தில் கணிசமான அளவு குறைக்கப்பட்டது.

சிக்காகோ வேலை நிறுத்தமும் ‘ஹே’ சந்தையும்

சிக்காகோவில் மே முதல் நாள் வேலைநிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது. தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் குறித்து போதுமான தெளிவு இல்லாவிட்டாலும் அது ஒரு போராட்ட இயக்கமாக விளங்கியது. தொழிலாளர் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை விருத்தி செய்யும் பொருட்டு எந்த நேரத்திலும் தொழிலாளர்களை போராட்டத்தில் இறங்க வைப்பதாயும், அவர்களின் போராட்ட உணர்வைக் கூர்மைப்படுத்துவதாகவும் அவ்வியக்கம் விளங்கியது.

போர்க்குணமுள்ள தொழிலாளர் குழுக்களால் சிக்காகோவின் வேலைநிறுத்தம் பெருமளவுக்குப் பிரகாசித்தது. வேலை நிறுத்தத்திற்கு வெகுமுன்பே அதற்கான தயாரிப்புகளைச் செய்ய 8 மணி நேர சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த 8 மணி நேர சங்கம் ‘நைட்ஸ் ஆப் லேபர்’ சோஷலிஸ்ட் தொழிலாளர் கட்சி (அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்தின் முதல் அரசியல் சோஷலிஸ்ட் கட்சி) போன்ற ஸ்தாபனங்களில் இணைந்துள்ள ஐக்கிய முன்னணி ஸ்தாபனமாக விளங்கியது. இந்த 8 மணி நேர சங்கத்துக்கு இடதுசாரி தொழிற்சங்கங்களைக் கொண்ட மத்திய தொழிற்சங்கமும் முழு ஆதரவு அளித்தது. மே முதல் தினத்துக்கு முந்திய நாளான ஞாயிற்றுக்கிழமையன்று மத்திய தொழிற்சங்கம் ஏற்பாடு செய்த தொழிலாளர்களைத் திரட்டும் ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 25,000 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

மே முதல் நாள் சிக்காகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது. எட்டு மணி நேர வேலைநாள் கோரிக்கையின் முக்கியத்துவமும், வேலை நிறுத்தத்தின் பரந்த மற்றும் தீவிரத் தன்மையும் இந்த இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அரசியல் முக்கியத்துவத்தைத் தந்தது. அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இந்த முக்கியத்துவம் மேலும் தீவிரமானது. 1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகோன்னத அத்தியாயத்தை உருவாக்கியது.

அதே நேரத்தில் தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்க்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கிவிடலாம் என கனவு கண்டார்கள். மே 3, 4 தேதிகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் வைக்கோல் சந்தை (ஹே சந்தை) விவகாரம் என்றழைக்கப்படும் நிகழ்ச்சிக்கு வழி வகுத்தன. மே 3ம் நாள் வேலைநிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை எதிர்த்து மே 4 ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தக் கூட்டம் அமைதியாக நடந்தது. போலீஸ் மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பிக்கும்போது கூட்டம் தள்ளிவைக்கப்பட இருந்தது.  கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவனைக் கொன்றது.  இதன் விளைவாக எழுந்த ஒரு மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லபட்டனர்.  வைக்கோல் சந்தை சதுக்கத்தில் ஏற்பட்ட ரத்த ஆறும், போர்க்குணமிக்க சிக்காகோ தொழிலாளர் தலைவர்களைச் சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியதுதான் சிக்காகோ நகர  முதலாளிகளின் பதிலாயிருந்தன.  நாடெங்கிலுமுள்ள முதலாளிகளும் சிக்காகோ நகர முதலாளிகளுக்கு ஆதரவு தந்தனர்.

1886ஆம் ஆண்டின் பிற்பாதி முழுவதும் முதலாளிகளின் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் தொடர்ந்தது.  இதன் மூலம் வேலைநிறுத்த இயக்கத்தின்போது இழந்த தங்கள் பழைய நிலையை மீண்டும் அடைய அந்த முதலாளிகள் தீர்மானித்தார்.

சிக்காகோ தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு 1888ல் செயின்ட் லூயிஸில் கூட்டமைப்பு கூடியது.  (தற்போது அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்று அறியப்படுகிறது).  அப்போது 8 மணி நேர இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்கத் தீர்மானித்தது.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு வர்க்க அரசியல் பிரச்சினையை அடிப்படையாக வைத்து, ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்திய மே முதல் நாளையே மீண்டும் 8 மணி  நேர இயக்கத்தைத் துவக்குவதற்கான நாளாக அறிவித்தார்கள்.  1889 ஆம் ஆண்டு சாமுவேல் கோம்பர்ஸ் தலைமையில் நடந்த அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாடு வேலைநிறுத்த இயக்கத்தை முறைப்படுத்துவதில்  வெற்றிகண்டது.  வலுவான முறையில் தயாரிப்புகளோடு விளங்கிய மரவேலைத் தொழிலாளர் சங்கம் முதலில் வேலைநிறுத்தத்தில் இறங்குவது என்றும் வெற்றி பெற்ற பின் மற்ற சங்கங்கள் இறங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஜனவரி, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 5 | 1991 ஜனவரி 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: போர்முனையில் ஆதிக்கவெறியன் அமெரிக்காவும் ஆக்கிரமிப்பாளன் ஈராக்கும்
  • கரும்பு விவசாயிகளைச் சாறுபிழியும் அதிகாரி
  • இந்து மதவெறிக்கெதிராக
  • பத்தாண்டுகளில் வலுத்தோர் கொழுத்தனர் உழைத்தோர் மெலிந்தனர்
  • புலிவாலைப்பிடிக்கும் புது அரசாங்கம்
  • மான் கொடுத்த மனுவில் இருப்பது இதுதான்!
  • சாலையார் மீதான மதிப்பீடு சரிதான்
  • பாசிஸ்டுகளே! சிந்தனையைச் சிறையிட முடியுமா?
  • சமூக விரோதிகளின் பிடியில் தொலைபேசியகம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • போலிக் கம்யூனிஸ்டு ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். அமோக வளர்ச்சி
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 ஜனவரி, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 4 | 1991 ஜனவரி 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜெயலலிதா: தமிழ்நாட்டின் அரசியல் சீக்கு
  • வாசகர் கடிதம்
  • மத்தியப் படைகள் குவிப்பு மாநில அதிகாரம் பறிப்பு
  • பொருளாதாரத் தாக்குதலின் துவக்கம்
  • அரசியல் சூதாட்ட துருப்புச் சீட்டுகள்
  • கூட்டுக் கொள்ளைக்குக் கூட்டுறவு சங்கங்கள்
  • கொலையாளிகளின் காவலர்களாக போலீசு
  • இதில் யார் முஸ்லீம்? யார் இந்து? மதவெறி -நரபலி
  • விலைபோகும் நீதித்துறை
  • அவதூறுகளையே விமர்சனங்களாக்கும் வீரமணி கும்பல்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • வானளாவிய அதிகாரத்தின் விளைவு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மே தின வரலாறு | அலெக்ஸாண்டர்  ட்ராச்டென்பர்க் | பாகம் 1

மே 1, 1909 அன்று நியூயார்க் நகரில் நடந்த பேரணி

குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப் பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஓர் அமைப்பாக வளர்ந்தபொழுது இப்போராட்டம் வெளிப்பட்டது.

இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஆரம்ப நாட்களில் பல வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘அதிக ஊதியம் வேண்டும்’ என்பதுதான் இந்த வேலை நிறுத்தங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப்பட்டது. இருந்தபோதிலும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வகுத்த போதெல்லாம் குறைந்த வேலை நேரம், சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சினைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் வெகுவாக சுரண்டப்பட்ட காலகட்டம் அது. நீண்ட வேலை நேரங்கள் அவர்களை மேலும் துன்பப்படுத்தின. எனவே, வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக எழுப்பப்பட்டது.

‘அதிகாலை முதல் அந்தி சாயும்வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக் குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதினான்கு, பதினாறு, ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள். 1806 ஆம் ஆண்டு பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களின் தலைவர்கள் மீது சதி வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மின்போது தொழிலாளர்கள் பத்தொன்பது. இருபது மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டார்கள் என்ற விஷயம் வெளியே வந்தது.

1820 மற்றும் 30களில் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று பற்பல வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘பத்துமணி நேர வேலைநாள்’ என்ற கோரிக்கை பல தொழில் மையங்களில் முன் வைக்கப்பட்டது. பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற்தொழிற்சங்கமாகக் கருதப்படுகிறது. இந்த தொழிற்சங்கம் உருவான இரு ஆண்டுகளுக்குப் பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் துவங்கின. பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன்முதலாக வைத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு. 1827ல் பிலடெல்பியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தில் தான் இந்தக் கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. 1834ல் நியூயார்க்கில் ரொட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த ரொட்டித் தொழிலாளர்கள் எகிப்திய அடிமைகளைக் காட்டிலும் அதிகம் துன்புற்றனர். நாளொன்றுக்கு அவர்கள் பதினெட்டிலிருந்து இருபது மணி நேரம் வேலை செய்ய வேண்டி வந்தது என்ற செய்தியை அப்போது வெளியான ‘தொழிலாளருக்காக வாதிடுபவன்’ (Workingmen’s Advocate) என்ற பத்திரிகை வெளியிட்டது. பத்து மணி நேர வேலைநாளுக்கான இப்போராட்டங்கள் விரைவிலேயே ஓர் இயக்கமாக உருவெடுத்தன. 1837ல் ஏற்பட்ட நெருக்கடி ஒரு தடையாக இருந்தபோதிலும் வேன் பியுரன் தலைமையிலான அரசாங்கம், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலைநாள் அறிவித்தது. எல்லோருக்கும் பத்து மணி நேர வேலைநாள் என்பதற்காக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய உடனே தொழிலாளர்கள் 8 மணி நேர வேலைநாள் என்ற கோஷத்தை எழுப்பினர்.

தொழிற்சங்க இயக்கத்தின் அதிவேக வளர்ச்சியால் 1850களில் இக்கோரிக்கை புதிய உத்வேகத்தை அடைந்தது. 1857ல் ஏற்பட்ட நெருக்கடி இந்த உத்வேகத்திற்கு ஒரு தடையானது. இருந்தபோதிலும் நன்கு வளர்ச்சி பெற்ற தொழிற்சங்கங்கள் அதற்கு முன்பே இக்கோரிக்கையை அடைந்தன.இவ்வாறு குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட அனைத்து வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக வெகுதூரத்தில் இருந்த ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேரப் பொழுது போக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன்வைத்து 1858ல் அதை அடைவதில் வெற்றியும் பெற்றனர்.

எட்டு மணி நேர இயக்கம் அமெரிக்காவில் துவங்கியது

1884ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின்போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன. ஆனாலும், இதற்கு ஒரு தலைமுறை முன்பே தேசிய தொழிற்சங்கம் குறைந்த வேலை நேரத்துக்கான கோரிக்கையை முன்வைத்து பரந்த இயக்கத்தையே நடத்தியது. ‘தேசிய தொழிற்சங்கம்’ அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க ஸ்தாபனமாக அப்போது விளங்கியது.

1861-62ல் உள்நாட்டுப் போர் துவங்கியது. இதற்கு சற்று முன்பே துவங்கப்பட்ட வார்ப்பட அச்சுத் தொழிலாளர் சங்கம், இயந்திரத் தொழிலாளர்கள் சங்கம், கொல்லர்கள் சங்கம் போன்ற தேசியத் தொழிற்சங்கங்கள் அப்போது மறையத் துவங்கின. ஆனபோதிலும் அதற்கடுத்த சில ஆண்டுகளில் பல உள்ளூர் தேசியத் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் எழுச்சியும் உருவானது. இவ்வாறு பல தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து 1866 ஆகஸ்டு 20ம் நாள் பால்டிமோர் என்னுமிடத்தில் தேசியத் தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இதன் தலைவராக வில்லியம் எச். சில்விஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாற்றியமைக்கப்பட்ட வார்ப்பட அச்சுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராவார். தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியமானவராய் கருதப்பட்ட இவர் ஓர் இளைஞர். இவர்லண்டனில் இருந்த முதலாவது இண்டர் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். இதன் நேஷனல் காரணமாக தேசிய தொழிற்சங்கத்துக்கும் இன்டர்நேஷனலின் பொதுக் குழுவுக்கும் இடையே உறவை ஏற்படுத்தியது அவரால் முடிந்தது.

தேசியத் தொழிற்சங்கத்தின் முதல் மாநாடு 1866ல் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலைநாள் என்பதை சட்டமாக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ அடிமைத்தனத்திலிருந்து நாட்டின் உழைப்பை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனையடைய நாம் நமது சக்தி அனைத்தையும் ஒன்றுத் திரட்டத் தீர்மானிக்கிறோம்.”

மேலும் இம்மாநாட்டில் 8 மணி நேர வேலைநாளை சட்டபூர்வமாக சுயேச்சையான அரசியல் நடவடிக்கை வேண்டும் மற்றும் தொழிலாளர் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. தேசியத் தொழிற்சங்கப் போராட்டங்களினால் 8 மணி நேரக் குழுக்கள் ஏற்பட்டன. மேலும், இச்சங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் பல மாநில அரசுகள் அரசு வேலைகளில் எட்டு மணி நேர வேலைநாளை அமுல்படுத்தின. 1868ல் அமெரிக்க காங்கிரசும் இதே போன்ற ஒரு சட்டத்தை இயற்றியது. பாஸ்டனைச் சேர்ந்த இயந்திரத் தொழிலாளியான ‘ஐராஸ் டூவர்டு’ என்பவர்தான் இந்த 8 மணி நேர இயக்கத்தின் எழுச்சியூட்டும் தலைவராக விளங்கினார். ஆரம்ப தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் பழமையானதாக இருந்தன. இவை எல்லா நேரங்களிலும் சரியாக இருந்தன என்றும் சொல்ல முடியாது. ஆனாலும், அடிப்படையில் இந்த இயக்கம் பாட்டாளி வர்க்கத்தின் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருந்தது. மேலும் திருத்தல்வாதத் தலைவர்கள், முதலாளித்துவ அரசியல் வாதிகள் இந்த இயக்கத்தில் ஊடுருவாமல் இருந்திருப்பார்களினால் இந்த இயக்கம் போர்க்குணமிக்க தோழிலாளர் இயக்கத்தின் ஆரம்ப கட்டமாக இருந்திருக்கும். இவ்வாறு நான்கு தலைமுறைகளுக்குப் பின் அமெரிக்காவில் தேசியத் தொழிற்சங்கமானது முதலாளித்துவ அடிமைத்தனத் திற்கெதிராகவும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்காகவும் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டது.

சில்விஸ் தொடர்ந்து லண்டனிலுள்ள இண்டர்நேஷனலோடு தொடர்பு கொண்டிருந்தார். இவரைத் தலைவராகக் கொண்ட 1867ல் நடைபெற்ற தேசியத் தொழிற்சங்க மாநாடு சர்வதேச தொழிலாளிவர்க்க இயக்கத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என முடிவு செய்தது. 1869ல் இண்டர்நேஷனலில் பொதுக்குழுவின் அழைப்பிற்கிணங்க பேச்சில் நடைபெற்ற இண்டர்நேஷனல் காங்கிரசுக்கு ஒரு பிரதிநிதியை அனுப்ப முடிவு செய்தது. ஆனால், துரதிஷ்டவசமாக மாநாட்டிற்குச் சற்று முன்பு சில்விஸ் மரணமடைந்தார். எனவே சிக்கா கோவிலிருந்து வெளிவந்த “வொர்க்கிங்மென்ஸ் அட்வகேட்” பத்திரிகையின் ஆசிரியரான ஏ.சி. காமெரான் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார்.

மாநாட்டில் பொதுக்குழு அந்த நம்பிக்கையூட்டும் இளம் அமெரிக்கத் தொழிலாளர் தலைவனுக்கு ஒரு சிறப்பு தீர் மானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. “பாட்டாளி வர்க்க ராணுவத்தின் தளபதியாக பத்தாண்டு காலம் மாபெரும் திறமையோடு பணியாற்றிய சில்விஸ் எல்லோருடைய கவனமும் திரும்பும் வகையில் செயல்பட்டவர். ஆம் அந்த சில்விஸ்தான் இறந்துவிட்டார்” என்றது அஞ்சலித் தீர்மானம். சில்விஸின் மறைவு தேசியத் தொழிற்சங்கத்தின் அழிவுக்கு ஒரு காரணமாகி பின்னால் அது மறையவும் காரணமாயிற்று.

எட்டு மணி நேர இயக்கம் குறித்து மார்க்ஸ்

1866ஆம் ஆண்டு 8 மணி நேர வேலைநாள் என்ற முடிவை தேசியத் தொழிற்சங்கம் எடுத்தது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் கூடிய இண்டர் நேஷனலின் காங்கிரசும் இதே கோரிக்கையைப் பின்வருமாறு முழங்கியது.

“வேலைநாளுக்கு சட்டபூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது… வேலைநாளுக்கான சட்டபூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும் என்று இம்மாநாடு முன்மொழிககிறது”. தேசிய தோழிற் சங்கத்தின் இந்த 8 மணி நேர இயக்கத்தைக் குறித்து மார்கள் 1867ல் வெளியான ‘மூலதனம்’ புத்தகத்தில் ‘வேலை நாள் குறித்து’ எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார். கறுப்பு மற்றும் வெள்ளைத் தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையைப் பற்றிய அந்த புகழ்பெற்ற பத்தியில் பின்வருமாறு எழுதுகிறார்: “அமெரிக்க ஐக்கியக் குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என்று முத்திரையிடப்பட்டிருக்கும் வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலை தேடிக்கொள்ள முடியாது. ஆனால், அடிமைத்தனத்தின் அழிவிலிருந்துதான் புதிய உத்வேகமுள்ள வாழ்க்கை பிறந்தது. உள்நாட்டுப் போரின் முதல் பலனே 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டமாகும். இது ஒரு இயக்கமாக அதி வேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசிபிச் வரையிலும், நியூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது.”

இரு வார வித்தியாசத்தில் நடைபெற்ற பால்டிமோர் தொழிலாளர் மாநாடும், ஜெனிவா இண்டர்நேஷனல் காங்கிரசும் ஒரே சமயத்தில் 8 மணி நேர வேலைநாளை முன்மொழிந்தன என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு அட்லாண்டிக்கின் இருபுறமும் உற்பத்தி முறை நிலைமையால் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இயல்பாக ஏற்பட்ட வளர்ச்சி ஒரே விதமான இயக்கத்தை அதாவது எட்டு மணி நேர வேலைநாளுக்கான இயக்கத்தை உருவாக்கியது.

ஜெனிவா காங்கிரஸ் முடிவு எவ்வாறு அமெரிக்க முடிவோடு ஒத்துப்போகிறது என்பதை தீர்மானத்தின் பின்வரும் பகுதி காட்டுகிறது. “வடஅமெரிக்க ஐக்கிய நாட்டுத் தொழிலாளர்களின் பொதுவான கோரிக்கையாக இந்த அளவு இருப்பதால், இந்த காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை உலகத்தின் அனைத்து தொழிலாளர்களுக்குமான பொது மேடையில் முன்வைக்கிறது.”

அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்தின் இந்த செல்வாக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு இதே போன்ற காரணங்களுக்காக இன்னும் வேகமாக சர்வதேச காங்கிரசில் செலுத்தப்பட்டது.

அமெரிக்காவில் மே தினம் பிறந்தது

முதல் இண்டர்நேஷனல் 1872ல் தன் தலைமையகத்தை லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு மாற்றியது. அது அப்போது சர்வதேச ஸ்தாபனமாக விளங்கவில்லை. பின் 1876ல் இது அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. பின் இது மாற்றியமைக்கப்பட்டு இரண்டாவது இண்டர்நேஷனல் என்று அழைக்கப்பட்டது. இதன் முதல் மாநாடு 1889ல் பாரிஸில் நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் மே முதல் நாள் என்பது உலகத் தொழிலாளர்கள் தங்கள் அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் கீழ் மிக முக்கிய அரசியல் கோரிக்கையாக 8 மணி நேர வேலைநாளுக்கு போர்க் குரல் கொடுக்க வேண்டிய தினம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1884, அக்டோபர் 7ம் நாள் சிக்காகோவில் அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பின் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு முடிவே பாரிஸ் மாநாட்டு முடிவுக்கு அடிகோலாக விளங்கியது. அம்மாநாட்டில் அமெரிக்க மற்றும் கனடா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்கள் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

“1886 மே முதல் நாள் முதல் சட்டப்பூர்வமான வேலை நாள் என்பது 8 மணி நேரம்தான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் ஸ்தானப் படுத்தப்பட்ட தொழிற்சங்கம் மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தீர்மானிக்கிறது. எனவே எல்லா தொழிலாளர் அமைப்புகளும் தங்கள் அதிகார வரம்பிற்குரிய இடத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இத்தீர்மானத்திற்கு ஏற்ப தங்கள் சங்க விதிகளை அமைத்துக்கொள்ளுமாறு இம்மாநாடு பரிந்துரைக்கிறது.”

எட்டு மணி நேர வேலை நேரத்தை எப்படி கொண்டு வருவது என்பது பற்றி கூட்டமைப்புத் தீர்மானத்தில் ஏதும் சொல்லப்படவில்லை. இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50,000க்கு உட்பட்டது. தங்கள் உறுப்பினர்கள் வேலை செய்யும் கடை, ஆலை, சுரங்கங்களில் போராடி இன்னும் அதிகமான தொழிலாளர்களைத் திரட்ட வேண்டும் என்பதை அறிந்திருந்தது. அப்போதுதான் 8 மணி நேர வேலைநாளை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பதை அறிவிக்க முடியும் என்பதையும் உணர்ந்திருந்தது. 1886, மே முதல் நாள் 8 மணி நேர வேலைக்காக போராடும் தொழிலாளிகளுக்கு உதவும் பொருட்டே “தீர்மானத்திற்கேற்ப சங்க விதிகள் அமைய வேண்டும்” என அறிவித்திருந்தது. வேலைநிறுத்தத்தின்போது வெகு நாட்கள் வெளியே தங்க நேரிடலாம். அப்போது சங்கத்தின் உதவி தேவை. மேலும், இவ்வேலைநிறுத்தம் தேசிய அளவில் நடைபெறுவதாலும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் கலந்துகொள்வதால் அவர்கள் விதிப்படி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு தங்கள் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகிறது. இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கூட்டமைப்பானது தற்போது அமெரிக்கத் கூட்டமைப்பைப் போலவே சுயேச்சையாகக் கூட்டமைப்பு முறையில் தொழிலாளர் உருவானது. எனவே கூட்டமைப்பில் இணைந்த தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்தால்தான் தேசிய மாநாட்டின் முடிவுகள் அவற்றைக் கட்டுப் படுத்தும்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 10

17. தொழிலாளர்கள், குடியானவர்களின் சாதனைகள் லெனின் எதிர்பார்த்ததற்கும் மேலானவை

சோவியத் அரசாங்கத்தின் வலிமையும் நீடித்த நிலைப்பும் சிலர் அனுமானிப்பது போல எல்லா நியதிகளும் மீறப்படுவதிலோ, அறிவுக்கு எட்டாத விதியின் விந்தை விளையாட்டிலோ அடங்கியிருக்களில்லை. அது எதை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று லெனின் சொன்னாரோ அதையே தொழிலாளர்கள், குடியானவர்களின் திண்ணமான சாதனைகளையே அது ஆகாரமாகக் கொண்டிருக்கிறது.

பொருளாதாரத் துறையில் லினன், நெருப்புக் குச்சிகள் ஆகியவை தயாரிப்பதற்கும் ருஷ்யாவின் பேரளவான முற்றாக நிலக்கரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய செயல்முறைகளை அவர்கள் தொடங்கியுள்ளனர். இயந்திரத் தொழிற்சாலைகளையும் மின்னாக்க நிலையங்களையும் நிறுவுவது முதல் பால்டிக் கடலுக்கும் வோல்கா ஆற்றுக்கும் இடையே பெரிய கால்வாயை ஆழப்படுத்துவது. நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்துக்கு இருப்புப் பாதைகள் அமைப்பது வரை விரிவான பொறி இயல் நிறுவனச் செயல்களை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இராணுவத் துறையில் தொழிலாளர்களும் குடியானவர்களும் கண்டிப்பான இராணுவக் கட்டுப்பாட்டுக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டார்கள். இந்தக் கட்டுப்பாடு செஞ்சேனையை உலகிலேயே விறல்மிக்க போர் இயந்திரங்களில் ஒன்றாக மாற்றிவிட்டது. இந்தப் பாட்டாளிகள் தனிவகை உளத்திண்மையும், உற்சாக உணர்ச்சியும் கொண்டிருக்கிறார்கள். இதற்குமுன் அவர்கள் எப்போதும் ஏதேனும் மேல் வகுப்பினரின் நலன்களுக்காகவே போரிட்டு வந்திருக்கிறார்கள். தங்கள் நலன்களுக்காகவும் உலகின் உழைப்பாளிகள், சுரண்டப்படும் மக்களுடைய நலன்களுக்காகவும் இப்போதுதான் முதல் தடவையாக உணர்வுபூர்வமாக அவர்கள் போர்கள் புரிந்து வருகிறார்கள்.

ஆயினும் பண்பாட்டுத் துறையில்தான் இந்த “அறிவு மங்கிய மக்களின்” வெற்றிகள் மிகக் குறிப்பிடத்தக்கவை ஆகும். மனிதனைக் கட்டற்றவன் ஆக்கிவிட்டால் அவன் படைக்கிறான். புத்துணர்ச்சியின் ஊக்கமூட்டும் ஸ்பரிசத்தின் விளைவாகப் பத்து புதுப் பல்கலைக்கழகங்களும் டஜன் கணக்கான நாடக மன்றங்களும் ஆயிரக்கணக்கான நூலகங்களும், பதினாயிரக்கணக்கான பொதுப் பள்ளிகளும் தோன்றியுள்ளன.

இந்த எதார்த்தங்கள்தாம் மக்ஸீம் கோர்க்கியை²⁶ சோவியத்துக்களின் ஆதரவாளராக மாற்றின. அவர் எழுதுகிறார்: “ருஷ்ய அரசாங்கத்தின் பண்பாட்டுப் படைப்புச் செயல் மனித குல வரலாற்றில் இதற்குமுன் அறியப்படாத பரப்பு எல்லையையும் வடிவத்தையும் விரைவில் மேற்கொண்டுவிடும். பண்பாட்டுத் துறையில் ருஷ்யத் தொழிலாளர்களின் சென்ற ஆண்டுச் சாதனையின் பெருமாண்பை வியந்து பாராட்டாமல் இருக்க வருங்கால வரலாற்று ஆசிரியனால் முடியாது.”

பொதுமக்கள் எத்தகைய இடையூறுகளுக்கு நடுவே உழைத்தார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இந்தச் சாதனைகள் இன்னும் பிரம்மாண்டமானவையும் முக்கியத்துவம் உள்ளவையும் ஆகிவிடுகின்றன. அவர்கள் அரசாங்கத்தைக் கையில் எடுத்துக்கொண்ட போது நூற்றாண்டுக்கணக்காகக் கொடுமைப்படுத்தவும் வறுமைக் குள்ளாக்கவும் நசுக்கவும் பட்டு வந்த மக்களே மரபுரிமையாக அவர்களுக்குக் கிடைத்திருந்தார்கள். உலக மகாயுத்தம் அவர்களுடைய உழைப்புத் திறன் கொண்ட இருபது லட்சம் ஆண்களைப் பலிவாங்கியிருந்தது. இன்னும் முப்பது லட்சம் ஆண்களை அது அங்கவீனர்கள் ஆக்கியிருந்தது லட்சக்கணக்கான அனாதைகளையும் குருடர்கள், செவிடர்கள், ஊமைகள் ஆகியோரையும் பராமரிக்கும் பொறுப்பு அவர்கள் மீது சார்ந்திருந்தது. இருப்புப் பாதைகள் தகர்க்கப்பட்டிருந்தன, சுரங்கங்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. உணவு, எரிபொருள் சேமிப்புகள் அனேகமாகத் தீர்ந்து போயிருந்தன. யுத்தத்தினால் சிதறுண்டு போய், புரட்சியினால் மேலும் தகர்க்கப் பட்டிருந்த பொருளாதார இயந்திரத்தின் மீது ஒரு கோடிப் படைவீரர்களைப் படைக் கலைப்புச் செய்யும் பொறுப்பு திடீரென்று சுமத்தப்பட்டது. அவர்கள் அமோகமாக தானியப் பயிர் விளைத்திருந்தார்கள். ஆனால் ஜப்பானியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், அமெரிக்கர்கள் ஆகியோரின் உதவியுடன் செக்கோஸ் லோவாக்கியர்கள்²⁷ சைபீரியத் தானிய வயல்களிலிருந்து அவர்களுடைய தொடர்பைத் துண்டித்துவிட்டார்கள். உக்ரேனியத் தானிய வயல்களிலிருந்து பிற புரட்சி எதிர்ப்பாளர்கள் இவ்வாறே அவர்களைத் துணிந்து அகற்றிவிட்டார்கள். “இப்போது பட்டினியின் எலும்புக்கை மக்களின் குரல்வளையை நெரித்து அவர்களுக்குப் புத்தி புகட்டும்” என்றார்கள். சோவியத் தொழிலாளர்கள் சர்ச்சை அரசிலிருந்து சமயவிலக்குச் செய்யப்பட்டார்கள். பழைய அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக மறைமுக நாச வேலைகள் செய்தார்கள். அறிவுஜீவிகள் அவர்களைக் கைவிட்டார்கள், நேச நாட்டினர் அவர்களை முற்றுகையிட்டார்கள். நேச நாட்டினர் எல்லா வகையான அச்சுறுத்தல்களாலும் கைக் கூலிகளாலும் கொலைகளாலும் சோவியத் தொழிலாளர்களின் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றார்கள். பிரிட்டிஷ் ஏஜெண்டுகள் பெரிய நகரங்களுக்குத் தேவைப் பொருள்கள் செல்லவிடாது தடுக்கும் பொருட்டு பாலங்களை வெடிவைத்துத் தகர்த்தார்கள். தங்கள் தாதுவ நிலையங்களிலிருந்து காப்புரிமை பெற்றிருந்த பிரெஞ்சு ஏஜெண்டுகள் ரெயில் எஞ்சின்களின் உராய்வு தாங்கிகளில் குருந்தக் கல்லை வைத்து அவற்றைச் சிதைத்தார்கள்.

இந்த எதார்த்த நிகழ்ச்சிகளுக்கு எதிர் நின்று லெனின் பின்வருமாறு கூறினார்:

“ஆம், நமக்கு விறல்மிக்க பகைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை எதிர்ப்பதற்குப் பாட்டாளிகளின் இரும்புப் பட்டாளம் நம்மிடம் உள்ளது. விரிவான பெரும்பான்மையினர் இன்னும் உண்மையாக உணர்வு பெறவில்லை. அவர்கள் இன்னும் ஊக்கத்துடன் செயல்படவில்லை. இதன் காரணம் தெளிவு அவர்கள் போரினால் களைத்து, பசியால் வாடிச் சோர்ந்திருக்கிறார்கள். புரட்சி இப்போது மேற்போக்காகத்தான் இருக்கிறது. ஆனால் ஓய்வு கிடைத்ததும் மக்களிடையே பெருத்த உளமாற்றம் ஏற்படும். அது உரிய நேரத்துக்குள் மட்டும் ஏற்பட்டுவிட்டால் சோவியத் குடியரசு காப்பாற்றப்பட்டுவிடும்.”

லெனினது கருத்துப்படி 1917, நவம்பர் மாத நிகழ்ச்சி திரளான பொதுமக்கள் காட்சிப் பகட்டான முறையில் பாய்ந்து தாக்கி ஆட்சியைக் கைப்பற்றியது புரட்சி அல்ல. இந்தத் திரளான மக்கள் தங்கள் குறிக்கோளை உணர்ந்து, கட்டுப்பாட்டையும் ஒழுங்கான உழைப்பையும் மேற்கொண்டு, தங்களது பெருத்த படைப்பாற்றல்களையும் ஆக்கத் திறன்களையும் செயலில் ஈடுபடுத்துவதுதான் புரட்சி ஆகும்.

அந்தத் தொடக்க நாட்களில் சோவியத் குடியரசு காக்கப்பட்டுவிட்டது என்ற உறுதியான நம்பிக்கை லெனினுக்கு ஒருபோதும் ஏற்படவில்லை. “இன்னும் பத்து நாட்கள்! அப்புறம் நாம் பாரிஸ் கம்யூன் அளவு காலம் நீடித்து நிலைத்திருந்தவர்கள் ஆகிவிடுவோம்” என்றார். பெத்ரோகிராதில் நடந்த சோவியத்துக்களின் மூன்றாவது அகில ருஷ்யக் காங்கிரஸின் முன் தமது உரையை அவர் பின்வரும் சொற்களில் தொடங்கினார்: “தோழர்களே, பாரிஸ் கம்யூன் எழுபது நாட்களே நிலைத்திருந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். நாம் ஏற்கெனவே அதை விட இரண்டு நாட்கள் அதிகமாக நீடித்திருந்துவிட்டோம்.”

பதின்மடங்கு எழுபது நாட்களுக்கும் மேல் மாபெரும் ருஷ்யக் கம்யூன் பகைவர்களின் உலகத்தை எதிர்த்துத் தாக்குப் பிடித்துவிட்டது. பாட்டாளி மக்களின் விடாப்பிடி இடையறா முயற்சி, அசையா உறுதி, வீரம் ஆகியவற்றின் மீதும் பொருளாதார, இராணுவ பண்பாட்டுத் துறைகளில் அவர்களுடைய வருங்கால வாய்ப்புக்கள் மீதும் லெனின் கொண்டிருந்த நம்பிக்கை மிகப் பெரிது. அவர்களுடைய சாதவைகள் அவரது பற்றார்ந்த நம்பிக்கையின் மெய் மட்டுமே அல்ல அவருக்கே அவை பெரு வியப்பின் ஊற்றுக்கண்ணாக விளங்குகின்றன.

18. ருஷ்யப் புரட்சி லெனினைச் சாராது தனித்த வெற்றி ஆகும்.

லெனின் ருஷ்ய வானில் எழுந்து உலக அரங்கின் மையப் பிரமுகர் ஆகிவருகையில் அவரைச் சுற்றி ஒரு விவாதப் புயல் உக்கிரமாக வீசிக் கொண்டிருக்கிறது.

திகிலடைந்த பூர்ஷ்வா வர்க்கத்துக்கு அவர் எதிர்பாராப் பேரிடியாக இயற்கையின் பயங்கர உற்பாதமாக, உலகையே அழிக்கும் கொள்ளை நோயாகத் தோற்றம் அளிக்கிறார்.

இரகசியவாதப் போக்கு உள்ளவர்களுக்கு, விந்தையான முறையில் நிறைவேறிய போருக்கு முந்திய தீர்க்கதரிசன உரையில் குறிப்பிடம் பட்ட மாபெரும் “மங்கோலிய ஸ்லாவியர்” வடிவில் அவர் காட்சி தருகிறார். இந்தத் தீர்க்கதரிசன உரை தல்ஸ்தோயால் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. உலக மகாயுத்தம் நிகழும் என்று முன்னுரைத்தபின் இந்த உரை கூறுவதாவது: “ஐரோப்பா முழுவதும் தீப்பட்டெரிவதையும் குருதி பெருக்குவதையும் நான் காண்கிறேன். பெரிய போர்க்களங்களின் புலம்பல்களை நான் கேட்கிறேன். 1915ஆம் ஆண்டு வாக்கில் வடக்கிலிருந்து ஒரு விந்தை மனிதர் இந்த உதிரப் பெருக்கு நாடகத்தில் பிரவேசிக்கிறார். அவர் இராணுவப் பயிற்சி அற்றவர். எழுத்தாளர் அல்லது பத்திரிகையாளர். ஆயினும் ஐரோப்பாவின் பெரும் பாகம் 1925 வரை அவருடைய பிடிக்குள் இருக்கும்.”

பிற்போக்குச் சர்ச்சின் கண்களுக்கு லெனின் கிறிஸ்து விரோதி. புனிதக் கொடிகளையும் தேவ உருவங்களையும் சுற்றிக் குடியானவர்களை அணிதிரட்டி அவர்களைச் செஞ்சேனைக்கு எதிராக நடத்திச் செல்லப் பாதிரிகள் முயல்கிறார்கள். ஆனால் குடியானவர்களோ, “அவர் கிறிஸ்து விரோதியாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு நிலமும், விடுதலையும் கொண்டு தருகிறார். அப்படியிருக்கும்போது அவருக்கு எதிராக நாங்கள் எதற்காகச் சண்டை செய்ய வேண்டும்?” என்று சொல்லுகிறார்கள்.

சாதாரண மனிதர்களுக்கோ லெனின் அனேகமாக அதிமனித மகத்துவம் உள்ளவராகத் தோன்றுகிறார். அவர் ருஷ்யப் புரட்சியை ஆக்கியவர். சோவியத்தை நிறுவியவர், ருஷ்யாவின் இன்றையச் சிறப்புக்கள் எல்லாவற்றுக்கும் காரண புருஷர். “லெனினையும் த்ரோத்ஸ்கியையும் கொன்றுவிட்டால் புரட்சியையும், சோவியத்துக்களையும் கொன்றுவிடுவீர்கள்”

இவ்வாறு நினைப்பது வரலாற்றை மாபெரும் மனிதர்களின் படைப்பு என்று கருதுவதாகும். பெரிய நிகழ்ச்சிகளும் சகாப்தங்களும் மாபெரும் தலைவர்களாலே நிச்சயிக்கப்படுவது போல இது அர்த்தப்படும். ஒரு சகாப்தம் முழுவதும் ஒரு தனி நபரின் வெளியீடு பெறலாம் என்பதும் ஒரு பெரிய பொதுஜன இயக்கம் ஒரு தனி மனிதரைக் குவிமுனையாகக் கொண்டிருக்கலாம் என்பதும் உண்மையே. ஆனால் வரலாற்றில் தனி நபரின் பங்கு பற்றிய கார்லைலின் கருத்துக்கு நாம் இந்த அளவுக்கு மட்டுமே விட்டுக் கொடுக்க முடியும்.

ருஷ்யப் புரட்சி ஒரு தனி மனிதரையோ அல்லது மனிதர்களின் ஒரு குழுவையோ ஆதாரமாகக் கொண்டு இயங்குவதாகக் காட்டும் வரலாற்று விளக்கம் எதுவும் தவறான வழியில் இட்டுச் செல்வது ஆகும். ருஷ்யப் புரட்சியின் நற்பேறு தமது கைகளிலோ தமது கூட்டாளிகளின் கைகளிலோ இருக்கிறது என்ற கருத்தை எல்லோருக்கும் முன்னர் லெனினே எள்ளி நகையாடுவார்.

ருஷ்யப் புரட்சியின் தலைவிதி அது எந்த ஊற்றுக் கண்ணிலிருந்து உற்பத்தி ஆயிற்றோ அதிலேயே வெகுஜனங்களின் உள்ளங்களிலும் சுரங்களிலுமேயே இருக்கிறது. எந்தப் பொருளாதாரச் சக்திகளின் அழுத்தம் இந்த வெகு ஜனங்களைச் செயலில் ஈடுபடுத்தியதோ, அவற்றை அது சார்ந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இந்த மக்கள் அசைவின்றி பொறுமையாக, நீண்ட துன்பத்தில் உழன்று வந்தார்கள். ருஷ்யாவின் விரிந்த பெருவெளிகள் எங்கணும், மாஸ்கோச் சமவெளிகளிலும் உக்ரேனிய ஸ்தெப்பிகளிலும் சைபீரியாவின் பேராறுகளை ஒட்டிய பகுதிகள் யாவற்றிலும் இந்த மக்கள் வறுமையின் சாட்டையடியால் உந்தப்பட்டு, மூடநம்பிக்கைகளால் பிண்ணிப்பினைந்து உழைத்து வந்தார்கள். அவர்களது நிலைமை கால்நடைகளின் நிலைமையைவிட மேம்பட்டதாக இல்லை. ஆனால் எல்லா விஷயங்களுக்கும் ஏழைகளின் பொறுமைக்குக்கூட முடிவு உண்டு.

1917, மார்ச் மாதம் நகர மக்கள் தங்கள் விலங்குகளை உலகம் எங்கும் கேட்ட மடார் ஒலியுடன் உடைத்து எறிந்தார்கள். படை வீரர்களின் சைனியத்தின் பின் சைனியமாக அவர்களது உதாரணத்தைப் பின்பற்றிக் கிளர்ச்சி செய்தது. பின்பு புரட்சி கிராமங்களுக்குள் புகுந்து பரவியது. மேலும் மேலும் ஆழச் சென்று மிகப் பின்தங்கிய பகுதியினரின் உள்ளங்களிலும் புரட்சி உணர்ச்சியை மூட்டிவிட்டது. முடிவில் பதினாறு கோடி மக்கள் பிரெஞ்சுப் புரட்சியில் இருந்ததுபோல் ஏழு மடங்கு மக்கள் தொகை கொண்ட நாடு அனைத்தும் தீவிர எழுச்சிக் கொந்தளிப்புற்றது.

மாண்புசால் காட்சி ஒன்றால் வசீகரிக்கப்பட்டு ஒரு மக்களினம் முழுவதும் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு புது அமைப்பை நிறுவமுற்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளில் மனித உணர்ச்சியின் மிகப் பெருத்த இயக்கம் இது ஆகும். வெகு ஜனங்களின் பொருளாதார நலன் என்ற மூலக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நியாயத்தின் பொருட்டு நடத்தப்பெறும் யாவற்றிலும் அசையா உறுதிமிக்க தாக்குதல் இதுவே ஆகும். ஒரு நாடு முழுவதும் அறப்போர் வீரனாக மாறி, புது உலகம் பற்றிய காட்சிக்கு உரிய விசுவாசத்தைக் கடைப்பிடித்தவாறு, பட்டினியையும், யுத்தத்தையும் முற்றுகையையும் சாவையும் மதியாமல் வீறுநடை நடந்து முன்னே செல்கிறது. மக்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ளாத தலைவர்களை ஒருபுறம் பெருக்கித் தள்ளிவிட்டு, அவர்களுடைய தேவைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் ஏற்பச் செயலாற்றுபவர்களைப் பின்பற்றியவாறு அது விரைந்து முன்னே ஏகுகிறது.

ருஷ்யப் புரட்சியின் விதி வெகுஜனங்களையே, அவர்களது கட்டுப்பாட்டையும் ஆழ்ந்த பற்றையுமே சார்ந்திருக்கிறது. அதிர்ஷ்டம் அவர்களிடம் மிகவும் அன்பு காட்டியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. பேரறிவும் எஃகுச் சித்தவுறுதியும் வாய்ந்த ஒருவரை, விரிந்த நூற்பயிற்சியும் அச்சமற்ற செயல்வன்மையும் கொண்ட ஒருவரை, மிக உயர்ந்த ஆதர்சவாதமும் மிகக் கண்டிப்பான நடைமுறை மதிநுட்பமும் உடைய ஒருவரை அவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளக்குபவராகவும் அது நல்கியிருக்கிறது.


26. மக்ஸீம் கோர்க்கி (பேஷ்கல் அ.ம.) (1868-1936) மாபெரும் பாட்டாளி வர்க்க எழுத்தாளர்.

27. ருஷ்யாவில் செக்கோஸ்லோவாக்கியப் படைப்பிரிவுகள் முதலாவது உலக யுத்தத்தின்போது செக், ஸ்லோவாக் போர்க் கைதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டன. 1918, மே மாதத்தில் பிரெஞ்சு பிரிட்டிஷ் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் சோஷலிஸ்ட் புரட்சிவாதிகள், மென்ஷெவிக்குகள் ஆகியோரின் செயலூக்கமுள்ள உதவியுடன் வோல்காப் பிரதேசத்திலும் சைபீரியாவிலும் செக் படைப் பிரிவுகளில் புரட்சி எதிர்ப்புக் கலகத்தை மூட்டிவிட்டார்கள்.

(முற்றும்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஜே.என்.யு தேர்தல்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – ஏ.பி.வி.பி அடித்தளத்தை வேரறுக்க வேண்டும்! | தோழர் தீரன்

ஜே.என்.யு தேர்தல்:
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – ஏ.பி.வி.பி அடித்தளத்தை
வேரறுக்க வேண்டும்! |
தோழர் தீரன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 9

15. அமெரிக்கர்களையும் முதலாளிகளையும் சலுகைகளையும் பற்றிய லெனினது போக்கு

அமெரிக்கத் தொழில்நுட்ப நிபுணர்களையும், பொறி இயலாரையும் நிர்வாகிகளையும் லெனின் சிறப்பாகப் பெரிதும் மதித்தார். அவர்கள் ஐயாயிரம் பெயர் வேண்டும் என அவர் விரும்பினார். அவர்கள் உடனே வேண்டுமென விரும்பினார். அவர்களுக்கு மிக உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கத் தயாராயிருந்தார். அமெரிக்காவின்பால் தனிப்பட்ட மனச்சாய்வு கொண்டிருந்ததற்காக அவர் இடைவிடாது தாக்கப்பட்டு வந்தார். அவருடைய எதிரிகள் அவரை “அமெரிக்க பாங்கு முதலாளிகளின் ஏஜெண்டு” என்று இகழ்ச்சியாகக் குறிப்பிட்டார்கள். விவாத மும்முரத்தில் இடதுசாரியினர் இந்தக் குற்றச்சாட்டை நேரிலேயே பயன்படுத்தினார்கள்.

உண்மையில் அமெரிக்க முதலாளித்துவம் எந்தப் பிற நாட்டின் முதலாளித்துவத்தையும்விடத் தீமையில் குறைந்தது என அவர் எண்ணவில்லை. ஆனால் அமெரிக்கா வெகு தொலைவில் இருந்தது. சோவியத் ருஷ்யாவின் வாழ்க்கைக்கு அது நேரடி அபாயம் விளைவிக்கவில்லை. சோவியத் ருஷ்யாவுக்குத் தேவையாயிருந்த சரக்குகளையும், நிபுணர்களையும் அளிக்கும் நிலையில் அது இருந்தது. “எனவே, விசேஷ ஒப்பந்தம் செய்துகொள்வது இரு நாடுகளின் பரஸ்பர நலன்களுக்கும் ஏன் ஏற்றதாகாது?” என்று கேட்டார் லெனின்.

ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் அரசு முதலாளித்துவ அரசுடன் உறவுகள் வைத்துக்கொள்ள முடியுமா? இந்த இரு வடிவங்களும் அருகருகே வாழ முடியுமா? இந்தக் கேள்விகள் லெனினிடம் நோதோவால் கேட்கப்பட்டன.

“ஏன் முடியாது?” என்றார் லெனின். “எங்களுக்குத் தொழில்நுட்ப நிபுணர்களும் விஞ்ஞானிகளும் பல்வகை இயந்திரத் தொழில் செய்பொருள்களும் தேவை. இந்த நாட்டின் பிரம்மாண்டமான வளங்களை அபிவிருத்திச் செய்ய நாங்கள் தனியே திறனற்றவர்கள் என்பது தெளிவு. இந்த நிலைமைகளில், ருஷ்யாவில் நாங்கள் கடைப்பிடிக்கும் கோட்பாடுகள் எங்கள் எல்லைகளுக்கு வெளியே அரசியல் ஒப்பந்தங்களுக்கு இடம் கொடுத்து விலகிக்கொள்ள வேண்டும் என்பதை, இது எங்களுக்கு உவப்பாக இல்லாவிடினும்,ம்நாங்கள் ஒப்புக்கொண்டாக வேண்டும். எங்கள் வெளிநாட்டுக்கடன்களுக்கு வட்டி கொடுப்பதாக நாங்கள் மிக நேர்மையுடன் சொல்லுகிறோம். ரொக்கமாகக் கொடுக்க இயலாவிடில் நாங்கள் அவற்றைத் தானியமாகவும், எண்ணெயாகவும் எங்களிடம் வளமாக உள்ள எல்லா வகைக் கச்சாப் பொருள்களின் வடிவிலும் செலுத்துவோம்.

“ஆந்தாந்த் வல்லரசுகளின் குடிகளுக்கு காடுகள், சுரங்கங்கள் பற்றிய சலுகைகள் வழங்க நாங்கள் நிச்சயித்துள்ளோம். எப்போதும் இதற்கான நிபந்தனை, ருஷ்ய சோவியத்துக்களின் முக்கியக் கோட்பாடுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதாகும். தவிரவும் பழைய ருஷ்ய சாம்ராஜ்யத்தின் ஏதேனும் பிரதேசத்தைச் சில நேச வல்லரசு களுக்கு ஒப்படைக்க மகிழ்வுடன் அல்ல, போனால் போகட்டும் என்ற உணர்வுடன்தான் என்றாலும் நாங்கள் சம்மதிக்கக் கூடச் செய்வோம். ஆங்கில, ஜப்பானிய, அமெரிக்க முதலாளிகள் இத்தகைய சலுகைகளை மிகப் பெரிதும் விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

” ‘வெலீக்கிய் ஸேவெர்னிய் பூத்’, அதாவது மாபெம் வடக்கு ரெயில்பாதை கட்டுவதை ஒரு சர்வதேசக் கழகத்திற்கு நாங்கள் ஒப்படைத்துள்ளோம். நீங்கள் அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது சுமார் 3,000 கிலோமீட்டர்கள் நீளமான ரெயில் பாதை ஒனேகா வளைகுடாவின் அருகே தொடங்கி கோட்லாஸின் வழியாக உரால் மலைத் தொடரைக் கடந்து ஓப் ஆறு வரை இது செல்லும் 80 லட்சம் ஹெக்டேர் நிலமும் பயன்படுத்தப்படாத எல்லாவகைச் சுரங்கங்களும் கொண்ட பிரம்மாண்டமான கன்னிக் காடுகள் இருப்புப் பாதை நிறுவும் கம்பெனியின் அதிகார எல்லைக்குள் வரும்.

“இந்த அரசு உடைமை குறித்த காலத்துக்கு, ஒருவேளை எண்பது ஆண்டுகளுக்கு, விட்டுக் கொடுக்கப்படுகிறது, மீட்டுப் பெறும் உரிமையுடன். எட்டு மணி வேலைநாள், தொழிலாளர் ஸ்தாபனங்களின் கட்டுப்பாடு ஆகியவை போன்ற சோவியத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கோருகிறோம். இதற்கும் கம்யூனிஸத்துக்கும் வெகுதூரம் என்பது உண்மையே. எங்களது ஆதர்சத்துக்கு இது சற்றும் பொருந்தவில்லை. சோவியத் சஞ்சிகைகளில் இந்தப் பிரச்சினை மிகக் கடுமையான விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது என்பதை நான் சொல்லிவிட வேண்டும். ஆனால் பரிணமிப்புக் காலகட்டத்தில் தேவையாயிருப்பதை ஒப்புக்கொள்ள நாங்கள் நிச்சயித்திருக்கிறோம்.”

நோதோ சொன்னார்: “அப்படியானால், வெளிநாட்டு முதலாளிளுக்கு இங்கே எதிர்ப்படும் அபாயங்களை இந்த அபாயங்கள் அகற்றப்பட்டுவிட்டதாகத் தெரியவில்லை. எந்த நேரத்திலும் இவை இன்னும் கடுமையாகலாம் என்ற அச்சம் இருக்கிறது கருத்தில் கொண்டால், ருஷ்யாவுக்கு வரவும் அது புய செல்வ வளங்களை விழுங்க அனுமதிக்கவும் நிதியதிபர்கள் துணிவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? தங்கள் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சைனியத்தின் பாதுகாப்பு இல்லாமல் இம்மாதிரிக் காரியத்தை அவர்கள் தொடங்க மாட்டார்கள். வெளிநாட்டுப் படைகள் உங்கள் பிரதேசத்தை இவ்வாறு கைப்பற்றிக் கொள்வதற்கு நீங்கள் இசைவீர்களா?”

“இதற்குத் தேவையே இருக்காது. ஏனெனில் தான் விதித்துக் கொண்ட நிபந்தனையை சோவியத் அரசாங்கம் உண்மையுடன் கடைப்பிடிக்கும். ஆனால் எல்லா நோக்கு நிலைகளும் பரிசீலிக்கப் படலாம்.”

மாபெரும் மாஸ்கோ பொருளாதார ஆலோசனை சபையின் 1919, ஜூன் மாதக் கூட்டத்தில்,ஜெர்மனியுடன் பொருளாதாரக் கூட்டுறவை ஆதரித்துப் போராடியவர்களுக்கு எஞ்சினீயர் க்ராஸின்²² தலைமை தாங்கியதாகவும் அவருக்கு எதிராக, அமெரிக்காவுடன் பொருளாதாரக் கூட்டுறவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதை ஆதரித்து லெனினும் சிச்சேரினும்²³ போராட்டம் நிகழ்த்தியதாகவும் மேற்படிக் கூட்ட விவரங்கள் தெரிவிக்கின்றன.

16. பாட்டாளிகள் மீது லெனின் கொண்டிருக்கும் பெருத்த நம்பிக்கை

பாட்டாளி வர்க்கமே புரட்சியின் இயக்கு சக்தி, அதன் ஆன்மாவும் தசை நாணும் என்று லெனின் திண்ணமாகக் கருதினார் புதிய சமூகம் நிறுவப்படுவதற்கான நம்பிக்கைக்கு ஒரே ஆதாரம் பொது மக்களே என அவர் எண்ணினார். ஆனால் பொதுவாகப் பரவியிருந்த கருத்து இது அல்ல. ருஷ்ய மக்களைப் பற்றி பொதுவாக நிலவும் கருத்து, அவர்கள் மண்ணை நம்பி வாழும் பாங்கற்ற பிராணிகள், திறமையற்றவர்கள், சோம்பேறிகள், எழுத்தறிவில்லாதவர்கள், வோத்காவையே குறியாகக் கொண்ட இருள்மதியினர், ஆதர்சவாதம் அற்றவர்கள், விடாப்பிடியாக முயலத் திறன் இல்லாதவர்கள் என்பதே ஆகும்.

இதற்கு எதிராக மேலெழுந்து நிற்கிறது “அறிவீனர்களான” வெகு ஜனங்கள் பற்றிய லெனினது மதிப்பீடு. அவர்களுடைய அசைவற்ற உளத் திண்மையையும், பற்றுறுதியையும், தியாகங்கள் செய்யவும் துன்பங்களைத் தாங்கவும் அவர்களுக்குள்ள திறனையும் பெரிய அரசியல் கருத்துகளைப் புரிந்துகொள்ளும் அவர்களது சக்தியையும், அவர்களுக்குள் மறைந்திருக்கும் பெருத்த படைப்பு, ஆக்க ஆற்றல்களையும் லெனின் பல நீண்ட ஆண்டுகளாக விடாது வலியுறுத்தினார். வெகுஜனங்களின் சுபாவத்தின் மீது அநேகமாகத் துணிச்சலான நம்பிக்கை போல இது தோன்றுகிறது. ருஷ்யத் தொழிலாளி மீது நம்பிக்கை வைக்கும் லெனினது துணிவை விளைவுகள் எவ்வளவு தூரத்துக்குச் சரி என்று காட்டியுள்ளன?

ருஷ்யாவில் மேற்பரப்புக்கு அடியில் பார்வை செலுத்தியுள்ள எல்லா அவதானிக்கையாளர்களும் பெரிய அரசியல் கருத்துகளைப் புரிந்து கொள்ளும் ருஷ்யத் தொழிலாளிகளின் திறனைக் கண்டு பெரு வியப்பு அடைந்திருக்கிறார்கள். ரூட் தூதுக் கோஷ்டியின்²⁴ ஓர் உறுப்பினர் இதனால் ஆச்சர்யம் அடைந்து பின்வருமாறு கேட்டார்: “மெய்யாகவே கற்றறிந்தவர்கள் எல்லோராலும் அறிவினர்கள், மந்த புத்தி உள்ளவர்கள் என்று கருதப்பட்ட ருஷ்ய மக்களின் பெருந்திரளின் இவ்வளவு பெரிய பகுதியினர் ஏனைய உலகிற்கு இவ்வளவு புதியதும், அதற்கு இவ்வளவு தூரம் முன்னே உள்ளதுமான சமூகத் தத்துவத்தை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டது எவ்வாறு நிகழ்ந்தது?” “இளைஞர் கிறிஸ்துவ சங்கத்தாலும்”²⁵ பிற ஸ்தாபனங்களாலும் அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ருஷ்யத் தொழிலாளிகளுக்குப் புதிராக இருந்தார்கள். இந்தப் “பயிற்சி நிபுணர்கள்” அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள். எனினும் சோஷலிஸத்துக்கும் சிண்டிக்கலிஸத்துக்கும் அராஜக வாதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை இவர்கள் அறிந்திருக்கவில்லை. லட்சோப லட்சம் ருஷ்யத் தொழிலாளிகளின் கல்வியிலோ இது அரிச்சுவடிக்கு ஒப்பாயிருந்தது.

அமெரிக்கப் பிரசார ஏஜெண்டுகள் ஜனாதிபதி வில்ஸனின் பதினான்கு அம்சங்கள் பற்றிய உரையின் பிரதிகளை லட்சக்கணக்கில் ருஷ்யாவில் வினியோகித்தார்கள்.

தொழிலாளர்கள் அல்லது குடியானவர்களுக்கு இந்தப் பிரதி களைக் கொடுத்துவிட்டு, “இந்த உரையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று அவர்கள் கேட்பார்கள்.

”படிப்பதற்கு நன்றாய்த்தான் இருக்கிறது” என்று ருஷ்யர்கள் பொதுவாகப் பதில் அளிப்பார்கள். “ஆனால் இதன் பின்னே ஒன்றும் இல்லை. ஜனாதிபதி வில்சனின் மூளையில் இந்த ஆதர்சங்கள் இருக்கலாம் ஆயினும் தொழிலாளிகள் அரசாங்கத்தை நிர்வகிக்காவிட்டால் சமாதான உடன்படிக்கையில் இந்த ஆதர்சங்களில் எதுவும் இராது”.

ருஷ்யர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட பிரபல அமெரிக்கப் பேராசிரியர் அவர்களுடைய சந்தேகப் போக்கு குறித்து நகைத்தார். இப்போதோ, தமது வெகுளித்தனமான நம்பிக்கையை எண்ணி அவர் நகைக்கிறார். பின்தங்கிய ருஷ்யாவின் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த சிறு சோவியத்துக்களில் உள்ள இந்த “அறிவு மங்கிய மக்கள்” சர்வதேச அரசியலைத் தம்மைவிட நன்றாகப் புரிந்துகொண்டது எப்படி என்று அவர் அதிசயிக்கிறார்.

பொதுமக்களின் உடனடியான தன்னலத்தைத் தூண்டி விடுவது ஒன்றுதான் அவசியமானது என்ற திட்டத்தின் பேரில் பிரிட்டிஷார் செயல் புரிந்தனர். மக்களை ஏமாற்றித் தம்பால் ஈர்ப்பதற்காகப் பழக்கூழ், விஸ்கி, கோதுமை மாவு ஆகியவற்றுடன் அவர்கள் அர்காங்கேல்ஸ்க் நகருக்கு வந்து சேர்ந்தார்கள். பட்டினியால் நலிந்த மக்கள் இந்தப் பரிசுகளைப் பெற்று மகிழ்ந்தார்கள். ஆனால் இவை தங்களைக் குருடாக்குவதற்கான கைக்கூலிகள் என்பதையும் இந்தப் பொருள்களின் விலை ருஷ்யாவின் பிரதேச முழுமையும் விடுதலையுமே என்பதையும் கண்டதும் அவர்கள் படையெடுப்பாளர்களுக்கு எதிராகக் கிளம்பி அவர்களை நாட்டை விட்டுத் துரத்தியடித்தார்கள்.

ருஷ்யப் பொதுமக்களின் விடாப்பிடியையும், அசையா உறுதியையும் பற்றிய லெனினது நம்பிக்கையைக் காலமும் சரி என மெய்ப்பித்து விட்டது. 1917ஆம் ஆண்டு கூறப்பட்ட பயங்கரமான வருங்கால உரைகளை இன்றைய உண்மை விவரங்களுடன் ஒப்பு நோக்குங்கள். “மூன்றே நாட்களில் அவர்கள் ஆட்சி ஒழிந்துவிடும்” என்று அப்போது கொக்கரித்தார்கள் சோவியத்துக்களின் பகைவர்கள். மூன்று நாட்களும் மேலும் அத்தனை நாட்களும் கழிந்தபின், “அதிகமாய்ப் போனால் மூன்றே வாரங்கள் மட்டுமே சோவியத் நிலைத்திருக்க முடியும்” என்ற கூச்சல் கிளப்பப்பட்டது. மீண்டும் அவர்கள் கூச்சலை மாற்ற நேர்ந்தது. இந்தத் தடவை அது “மூன்று மாதங்கள்” ஆயிற்று. இப்போது, எண் மடங்கு மூன்று மாதங்கள் கழிந்துவிட்டபின் சோவியத்துக்களின் விரோதிகள் தங்கள் ஆதரவாளர்களுக்குக் கூறக்கூடியதெல்லாம் “மூன்று வருஷங்கள்” என்பதே.


22. க்ராஸின் லி.பொ. (1870-1926) – முக்கியமான சோவியத் ராஜதந்திரி, ஆட்சியாளர்.

23. சிச்சேரின் கி.வ.(1872-1936) – முக்கியமான சோவியத் ராஜதந்திரி, ஆட்சியாளர்.

24. ரூட் தூதுக் கோஷ்டி எ.ரூட் (1845-1937) என்பவரின் தலைமையில் 1917ஆம் ஆண்டு ருஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட விசேஷ அமெரிக்கத் தூதுக் கோஷ்டி ருஷ்யா போரிலிருந்து விலகுவதைத் தடுப்பதும் புரட்சி இயக்கத்தை எதிர்த்துப் போராடத் தற்காலிக அரசாங்கத்துக்கு உதவுவதும் இதன் நோக்கம்.

25. இளைஞர் கிறிஸ்துவ சங்கம் இளைஞர்களின் பூர்ஷ்வாஸ்தானம். ருஷ்யாவில் இதன் பிரதிநிதிகள் மதப் பிரசாரமும் சோவியத் எதிர்ப்புப் பிரசாரமும் செய்து வந்தார்கள்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 டிசம்பர், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 3 | 1990 டிசம்பர் 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பரவும் மதவெறி பாசிசம் – பயங்கரம்
  • தண்ணீர் கேட்டால் ரத்தம் கேட்கும் போலீசு
  • கடற்படையில் தளபதியின் பதவிச் சண்டை
  • ராஜீவ் – சந்திரசேகர் கூட்டு உருவாக்கும்
    புது அரசியல் பாரம்பரியம்
  • அசாம்: பாசிச கும்பலின் பகற்கனவு பலிக்காது
  • தி.மு.க. ஆட்சி கலைக்கப்படுமா?
  • அயோத்தி: அகழ்வாராய்ச்சி மோசடி
  • அவதூறுகளையே விமர்சனங்களாக்கும் வீரமணி கும்பல்
  • வல்லம்: தி.க.வின் மேல்சாதிவெறி
  • மூச்சுத் திணறவைக்கும் விலையேற்றம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • வங்கதேசம்: எர்ஷாத் வீழ்ந்தான்
  • பாகிஸ்தான்: அரங்கேறும் சர்வாதிகாரம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஜகபர் அலி, ஜாகிர் உசேன்.. தொடரும் படுகொலைகள் – கிரிமினல்மயமான அரசே குற்றவாளி!

படுகொலை செய்யப்பட்ட ஜகபர் அலி மற்றும் ஜாகிர் உசேன்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிவெறித் தாக்குதல்கள், திருட்டு, கொலை, கொள்ளை என தமிழ்நாட்டில் நாள்தோறும் பல குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கெதிராக குரலெழுப்பும் எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகள் பலரும் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆனால், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவே இப்பிரச்சினைகளுக்கான காரணம் என்பது ஒரு பக்கப் பார்வை மட்டுமே. ஏனெனில், இக்குற்றங்களுக்கு பின்னணியில் சமூக-பொருளாதார-அரசியல் காரணங்களும் இருக்கின்றன. புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிவந்த ஜகபர் அலி, மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள், நெல்லையில் செயல்பட்டுவந்த சமூக சேவகர் ஜாகிர் உசேன் ஆகியோரின் அடுத்தடுத்த படுகொலைகள் இதனை நிரூபிக்கின்றன.

சமூக ஆர்வலர்களின் படுகொலைகள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் காட்டுப்பாவா பள்ளிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யபுரம், துலையானூர், லெம்பலாக்குடி பகுதிகளில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அப்பகுதியிலுள்ள மண்ணையும் மலைகளையும் புறம்போக்கு நிலங்களையும் கனிமவள மாஃபியா கும்பல்கள் ஆக்கிரமித்து, எம்.சாண்ட், ஜல்லி என அப்பகுதி இயற்கை வளங்களைச் சூறையாடி வருகிறது.

இதற்கெதிராக போராடிவந்த ஜகபர் அலி, இக்கொள்ளையில் முதன்மையாக ஈடுபட்டுவரும் ஆர்.ஆர். குழுமம் 70,000 லாரி அளவிலான கற்களைத் திருடி வைத்திருப்பதாகவும், தட்டிக் கேட்பவர்களை குண்டர் படைகளைக் கொண்டு மிரட்டுவதாகவும், தான் கொல்லப்படுவதற்கு முன்பு கடைசியாக வெளியிட்ட காணொளியில் கூறியிருந்தார். இக்கனிம வளக் கொள்ளைக் குறித்து மாவட்ட ஆட்சியர், டி.ஆர்.ஓ., கோட்டாட்சியர், வட்டாட்சியர், கனிம வளத்துறை என பல்வேறு அரசுத்துறைகளிடம் மனு கொடுத்து முறையிட்டதாகவும், “கொஞ்ச நாள் பொறுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம்” என்று அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும், இதனால் மக்களைத் திரட்டி போராட உள்ளதாகவும் அக்காணொளியில் ஜகபர் அலி குறிப்பிட்டிருந்தார்.

ஜனவரி 10 அன்று விரிவான ஆதாரங்களுடன் கோட்டாட்சியரிடம் புகாரளித்துவிட்டு இக்காணொளி வெளியிடப்பட்டிருந்த நிலையில், புகார் கொடுத்த ஒரு வாரத்தில் ஜகபர் அலி லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டார். ஜனவரி 18 அன்று மதியம் தொழுகை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த ஜகபர் அலி மீது டிப்பர் லாரி மோதி தூக்கியெறியப்பட்டதில் நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜகபர் அலியின் படுகொலையை விபத்தாக சித்தரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர், ஜனநாயக சக்திகள் மற்றும் சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் ஆகியோரின் தொடர் போராட்டத்தால்தான் அவரது மரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்பது அவரது மரணத்தைவிட கொடூரமானதாகும்.

இவரது மரணம் சமூக ஊடகங்களிலும், தமிழ்நாடு அரசியல் களத்திலும் பெரும் விவாதப்பொருளாகிய பிறகுதான், ஆர்.ஆர். கல் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ், லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் ஆகியோர் போலீசால் கைது செய்யப்பட்டனர். ஜகபர் அலி வழக்கானது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. அவரது மரணத்திற்கு பிறகே, கனிமவளத்துறை அதிகாரிகள் ஆர்.ஆர். குழுமத்தின் சட்டவிரோத கல்குவாரிகளை ‘ஆய்வு செய்ததாக’ செய்திகள் வெளியாகின.

அடுத்ததாக, மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டிக் கேட்டதற்காக ஹரிஷ், ஹரிசக்தி என்ற இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், இப்படுகொலைக்கும் சாராய விற்பனைக்கும் தொடர்பில்லை என்றும் வாய் தகராறு காரணமாகத்தான் இக்கொலை நடந்துள்ளதாகவும் அப்பட்டமாக பொய்யுரைத்தது போலீசு. ஆனால், வாய் தகராறு காரணமாக கொலை நடந்திருந்தால், இவ்வழக்கை விசாரித்துவந்த பெரம்பூர் போலீசு நிலையத்தின் 19 போலீசுகள் ஏன் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர் என்று கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது.

ஏற்கெனவே, இப்பகுதியில் சாராய விற்பனை குறித்து பலமுறை புகாரளித்தும் போலீசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒருவேளை போலீசு முன்னரே சாராய விற்பனையை தடுப்பதற்கு முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்விரு இளைஞர்களின் உயிர் பறிபோய் இருக்காது என்பதே கசப்பான உண்மை.

இறுதியாக, தமிழ்நாட்டை உறையவைத்த ஓய்வுபெற்ற போலீசு உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் படுகொலை. 60 வயதான உசேன் நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் மசூதியில் நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். எனவே, வக்ஃப் வாரிய சொத்துகளைப் பாதுகாப்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.

குறிப்பாக, வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற தவ்ஃபீக் என்ற நபரிடமிருந்து அந்தச் சொத்தை பாதுகாப்பதன் மூலம் அதில் ஏழை, எளியோருக்கான நற்காரியங்களை செய்ய வேண்டும் என்பதே ஜாகிர் உசேனின் நோக்கமாக இருந்துள்ளது. கிருஷ்ணமூர்த்தி என்ற தவ்ஃபீக் இந்துவாக இருந்து இஸ்லாமியராக மதம் மாறியவராவார். இந்த தவ்ஃபீக்தான், கூலிப்படை மூலம் உசேனை படுகொலை செய்திருக்கிறார்.

உசேன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு உருக்கமான ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். “என்னை 30-க்கும் மேற்பட்ட கும்பல் கொலை செய்ய சுற்றிக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான நபர் தவ்ஃபீக். இந்தக் கொலை மிரட்டலுக்கு காரணம் நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் செந்தில்குமார். எப்படியும் என்னை கொன்றுவிடுவார்கள்” என்று அவர் கூறுவதுடன் அக்காணொளி நிறைவடைகிறது.

ஜாகிர் உசேன், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பல முறை புகாரளித்தும் போலீசு அதனை கண்டுகொள்ளவில்லை. மாறாக, கோபால கிருஷ்ணன், செந்தில்குமார் ஆகிய இரண்டு போலீசு அதிகாரிகளும் தவ்ஃபீக்கிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஜாகீர் உசேன் மீது பொய்வழக்கு போட்டதோடு, அவரை மிரட்டி பணம் பறிக்கவும் முயன்றுள்ளனர்.

மேலும், உசேனின் கொலையில் உதவி மின்பொறியாளர் அருணன் மற்றும் எம்.ஏ.கே. டைல்ஸ் நிறுவன முதலாளி ஆகியோருக்கு சம்பந்தமிருப்பதாக உசேனின் மகள் கூறியிருப்பதன் மூலம், இக்கொலைக்கு வெறும் 36 சென்ட் நிலம் மட்டும் காரணம் இல்லை என்பது தெளிவாகிறது.

உசேன் படுகொலை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜாகிர் உசேன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமூக வலைதளங்களில் காணொளி வெளியிட்டதை தொடர்ந்து, ஏற்கெனவே பதியப்பட்ட சி.எஸ்.ஆர். அடிப்படையில், அவரை அச்சுறுத்துவதாக குறிப்பிட்ட எதிர்த்தரப்பினரை திருநெல்வேலி மாநகர போலீசு நிலையத்துக்கு அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணை நடைபெற்றுவரும் சூழ்நிலையிலேயே, இந்தக் கண்டிக்கத்தக்க சம்பவம் நடைபெற்றுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

மு.க.ஸ்டாலினோ, எதிர்க்கட்சிகளோ கூறுவது போல இப்படுகொலைகளுக்கான காரணம் முன்விரோதமோ சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையோ மட்டுமல்ல. இப்படுகொலைகளை வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாக சுருக்குவதென்பதே பிரச்சினையின் முழுப் பரிமாணத்தை மக்களிடமிருந்து மூடிமறைப்பதாகும்.

அரசு கட்டமைப்பு கிரிமினல்மயம்

தனிப்பட்ட ரீதியில் போலீசு, அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காததால் இப்படுகொலைகள் நடக்கின்றன என்று சுருக்கிப் பார்ப்பதாலேயே மேற்குறிப்பிட்ட கொலைகள் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், கொல்லப்பட்டவர்கள் தனிநபர் பிரச்சினைக்காக கொலை செய்யப்படவில்லை, அவர்கள் சமூகத்திற்காக செயல்படக் கூடியவர்களாக, குற்றத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களாக இருந்துள்ளனர். இவர்களைப் பாதுகாக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு இந்த அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் இருக்கிறது. அப்படியிருக்கும்போது ஏன் இவ்வாறான படுகொலைகள் அரங்கேறுகின்றன?

சான்றாக, மதுரையில் நடந்த கிரானைட் கனிமவளக் கொள்ளையை எடுத்துக்கொள்வோம். கிரானைடைக் கொள்ளையடிப்பதற்காக அரசின் மேல்மட்டத்திலிருந்து, கீழ்மட்டம் வரை அரசு அதிகாரிகள்-ஊழியர்கள் என அனைவரையும் விலைக்கு வாங்கி பி.ஆர்.பழனிச்சாமி ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்தினான். திருச்செந்தூரில், தாதுமணலைக் கொள்ளையடிப்பதற்காக வி.வி.மினரல்ஸின் வைகுண்டராஜன் நடத்திய கிரிமினல் சாம்ராஜ்யம் மற்றொரு மாதிரி. ஆனால், ஆற்று மணல், கிரானைட் போன்ற இயற்கைவளக் கொள்ளைக்கு அடித்தளம் போட்டுக்கொடுத்து கொள்ளையடிப்பதன் பரிமாணம் தற்போது மாறியிருக்கிறது. அதாவது, கொள்ளைக்கு மூளையாக செயல்படுவதிலிருந்து கொள்ளைக்காரக் கும்பலாகவே அரசு-அதிகார வர்க்கம் மாறியிருக்கிறது. தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையை அமல்படுத்தியதன் மூலம், அரசு என்ற முறையில் சமூகத்திற்கு தான் செய்ய வேண்டிய குறைந்தபட்ச பொறுப்புகளைக் கூட கைகழுவுவதுடன், கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக கிரிமினல்மயமாகிக் கொண்டிருக்கிறது அரசு கட்டமைப்பு.

எனவேதான், இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராகவோ அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காகவோ போராடுபவர்கள் படுகொலை செய்யப்படுவதை இந்த அதிகார வர்க்கம் கண்டுகொள்வதில்லை என்பதுடன், அப்படுகொலைக்குக் கூட்டாளியாகவும் செயல்படுகிறது. ஜகபர் அலி கொடுத்த புகார் குறித்து ஆர்.ஆர். குழுமத்திற்கு தெரிவித்த தாசில்தார், நடவடிக்கை எடுக்காத அதிகார வர்க்கம், தவ்ஃபீக்குக்கு ஆதரவாக ஜாகிர் உசேனை பணம் கேட்டு மிரட்டிய போலீசு அதிகாரிகள், பலமுறை புகாரளித்தும் சாராய விற்பனையை தடுக்காத போலீசு அதிகாரிகள் அனைவரின் நடவடிக்கையும் அரசுக் கட்டமைப்பு கிரிமினல்மயமாகி வருவதையே காட்டுகின்றன.

ஜகபர் அலியின் மரணத்தைத் தொடர்ந்து, கனிம வளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் குறைவான கல்குவாரிகள் மட்டுமே அரசின் அனுமதியுடன் இயங்குவது தெரிய வந்துள்ளது. ஆனால், 3000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. அதேபோல், சுமார் 5000 கிரஷர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசுக்கட்டமைப்பு மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவின்றி இவ்வளவு குவாரிகளும், கிரஷர்களும் சட்டவிரோதமாக செயல்பட முடியுமா? இதிலிருந்தே ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கொள்ளையின் பரிமாணம் எந்தளவிற்கு பரந்துவிரிந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

அரசியல் கட்சிகள் ஓட்டு வாங்குதற்காக தங்களுக்கிடையே அரசியல் முரண்பாடுகள் இருப்பதாக காட்டிக்கொண்டாலும், திரைமறைவில் தங்களுடைய தொழில் நலன்களுக்காக கட்சி வேறுபாடின்றி நெருக்கமாகத்தான் இருக்கின்றனர். பா.ஜ.க-வைப் போல, கிரிமினல்களை நேரடியாக தங்களது கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளவில்லையென்றாலும், இந்த கிரிமினல் கூலிப்படைகளின் உதவியின்றி தங்களது தொழிலை நடத்த முடியாது என்பதுதான் தற்போதைய அரசியல் கட்சிகளின் நிலை.

அரசு-அரசாங்கம்-கூலிப்படை என இவற்றிற்கிடையே இருந்த கோடுகள் மறுகாலனியாக்கக் கொள்கை அமல்படுத்தப்பட்ட இந்த 30 ஆண்டுகளில் மறைந்திருப்பதே, இக்கொள்கையால் நாடு கண்ட ‘வளர்ச்சி’யாகும். இதற்கு சிறந்த சான்றுதான், கடந்த ஜூலையில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் படுகொலையாகும். ரியல் எஸ்டேட் – ஸ்கிராப் உள்ளிட்ட பல விவகாரங்களில் ஏற்பட்ட பிரச்சினையில், பா.ஜ.க, அ.தி.மு.க., தி.மு.க. என பல கட்சி பிரமுகர்கள்-போலீஸ்துறை-கூலிப்படையின் கூட்டால் அப்படுகொலை அரங்கேறியது.

ஒருபுறம் அரசுக் கட்டமைப்பு கிரிமினல்மயமாகி வருவதும், மறுபுறம் அரசுக் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஊடுருவல் தீவிரமாகி வருவதும் இக்கட்டமைப்பை மேலும் நஞ்சாகவும், மக்கள் விரோதமாகவும் மாற்றி வருகிறது. அரசுக் கட்டமைப்பு கிரிமினல்மயமாவது – ஆர்.எஸ்.எஸ். ஊடுருவுவதானது பாசிசம் அரங்கேறுவதற்கான அடிப்படைகளாக உள்ளன. எனவே, இத்தகைய அபாயமிக்க நிகழ்ச்சிப்போக்கின் பின்னணியிலிருந்து இப்படுகொலைகளை புரிந்துகொண்டு, அதற்கெதிராக குரலெழுப்புவதும் போராட்டங்களை கட்டியமைப்பதும் முன்நிபந்தனையாகும்.


வாகைசூடி

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 டிசம்பர், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 2 | 1990 டிசம்பர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் பாசிச பாதந்தாங்கிகள்
  • போர் வெறிபிடித்த அமெரிக்காவின் போலிசுக்காரன் வேலை
  • அம்பானி – இந்துஜா கும்பல் ஏலத்தில் எடுத்த ஆட்சியுரிமை ‘ஜனநாயக’ சாத்தான்கள்
  • அதிர்ச்சி! போதை மருந்து கடத்தி இஸ்ரேலிடம் ராணுவ பயிற்சி!
    புலிகளின் சீரழிவு பற்றி புதிய ஆதாரங்கள்
  • அவதூறுகளையே விமர்சனங்களாக்கும் வீரமணீ கும்பல்
  • தொலை தொடர்புத்துறை ஊழியர் போராட்டம்
    வர்த்தக சூதாடிகள் பாய்ச்சல்! தொழிற்சங்கங்களின் மலட்டுத்தனம்!
  • தொடர்கிறது மதக்கலவரம்! படர்கிறது இந்துமதவெறி பாசிசம்!
  • புதிய ஜனநாயகம்
    ஆறாவது ஆண்டுவிழா!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • போலீசு – ரௌடிகள் நடத்தும் திடீர் கலவரங்கள்!
  • மதுரை சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம் போலீசு தாக்குதல்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 8

13. லெனின் தீர்க்கதரிசி என்ற முறையிலும் ராஜதந்திரி என்ற முறையிலும்

ராஜதந்திரி என்ற முறையிலும் வருங்காலத்தை உணர்ந்தவர் என்ற முறையிலும் லெனினது ஆற்றல் ஏதேனும் மாயாவாத உள்ளுணர்விலிருந்தோ வருவதை அனுமானிக்கும் சக்தியிலிருந்தோ அல்ல, ஒரு விஷயம் பற்றிய எல்லா மெய் விவரங்களையும் ஒன்று திரட்டவும் பின்பு அவற்றைப் பயன்படுத்தவும் அவருக்கு உள்ள திறமையிலிருந்தே தோன்றுகிறது என்பது தெளிவு. ருஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்னும் நூலில் இந்தத் திறமையை அவர் காட்டினார். ருஷ்யக் குடியானவர்களில் பாதிப் பேர் பாட்டாளிகள் ஆக்கப்பட்டு விட்டார்கள் என்றும், ஒரு சிறிது நிலம் அவர்களிடம் இருந்த போதிலும் இந்தக் குடியானவர்கள் எதார்த்தத்தில் “ஒரு துண்டு நிலம் வைத்திருக்கும் கூலி உழைப்பாளிகளே” என்றும் அந்த நூலில் லெனின் வலியுறுத்தித் தம் காலத்துப் பொருளாதாரச் சிந்தனைக்குச் சவால் விடுத்தார். இந்த வலியுறுத்தல் துணிகரம் மிக்கதாக இருந்தது எனினும் பிந்திய வருஷங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இதைச் சரி என்று காட்டின. லெனின் இந்த விஷயத்தை வெறுமே ஊகிக்கவில்லை. ஜெம்ஸ்த்வோக்களிலும்²¹ பிற துறைகளிலும் புள்ளிவிவரங்களை விரிவாகத் திரட்டித் தொகுத்த பின்னர் அது அவர் அளித்த தீர்ப்பு ஆகும்.

லெனின் பெற்றுள்ள பெருமதிப்புக்கு மூல காரணங்கள் யாவை என்பது பற்றி ஒரு நாள் பீட்டர்ஸுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவன் சொன்னான்: “அடிக்கடி எங்கள் கட்சியின் பிரத்தியேகக் கூட்டங்களில் நிலைமை பற்றிய தமது பகுத்தாராய்வின் அடிப்படையில் லெனின் குறித்த யோசனைகளை முன்வைப்பார். நாங்கள் அவற்றைப் பெரும்பான்மை வாக்குகளால் நிராகரித்து விடுவோம்.

லெனின் சொன்னது சரி, எங்கள் கருத்து தவறு என்பது பிற்பாடு நிரூபணமாகிவிடும்.” லெனினுக்கும் கட்சியின் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே செயல் தந்திரம் குறித்துக் கடும் போராட்டங்கள் நடந்துள்ளன. அப்புறம் வந்த நிகழ்ச்சிகள் இவற்றில் பொதுவாக லெனினது மதிப்பீட்டைச் சரி என்று காட்டியிருக்கின்றன.

திட்டமிடப்பட்ட நவம்பர் புரட்சியில் வெற்றி பெறுவது இயலாது என்று பிரபல போல்ஷெவிக்குகளாகிய காமினெவும் ஸினோவியேவும் அபிப்பிராயப்பட்டார்கள். “அது தோல்வி அடைவது இயலாது என்றார் லெனின் அவர் சொன்னதே சரி ஆயிற்று. போல்ஷெவிக்குகள் ஒரு பாய்ச்சல் காட்டியதுமே அரசாங்க அதிகாரம் அவர்கள் கைகளுக்கு வந்துவிட்டது. அரசாங்க அதிகார மாற்றம் இவ்வளவு சுளுவாக நடந்தேறியது குறித்து மற்றவர்களைவிட அதிக வியப்பு அடைந்தவர்கள் இந்த போல்ஷெவிக்குகளே.

அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்வது முடியலாம் எனினும் அதை நிலையாக வைத்திருப்பது இயலாது என்று மற்ற போல்ஷெவிக் தலைவர்கள் சொன்னார்கள். லெனின் சொன்னார், “ஒவ்வொருநாளும் நமக்குப் புதிய பலத்தைக் கொண்டுவரும்” என்று லெனின் கூறியதே சரி ஆயிற்று எல்லாப் புறங்களிலுமிருந்து நெருக்கும் பகைவர்களுக்கு எதிராக இரண்டு ஆண்டுகள் போரிட்ட பின்னர் சோவியத் எல்லா முனைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

ஜெர்மானியர்களை ஆசைகாட்டி மயக்குவதும் ஆனால் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட மறுப்பதுமாகத் தமது ஜாலவித்தைத் தந்திரத்தைக் காட்டிக்கொண்டிந்தார் த்ரோத்ஸ்கிய். அப்போது லெனின் சொன்னார்: “அவர்களுடன் விளையாடாதீர்கள். முன் வைக்கப்படும் முதல் உடன்படிக்கையில், அது எவ்வளவு மோசமாகயிருந்தாலும் சரி, கையெழுத்துதிடுங்கள். இல்லாவிட்டால் நாம் இன்னும் படுமோசமான உடன்படிக்கையில் கையொப்பம் இட நேரும்” என்று. இம்முறையும் லெனின் சொன்னதே சரி ஆயிற்று. வழிப்பறிக்காரர்களின்”, “கொள்ளைக் கூட்டத்தாரின்” சமாதான உடன்படிக்கையில் ருஷ்யர்கள் பிரேஸ்த்லித்தோவ்ஸ்க்கில் கையெழுத்திட வேண்டியதாயிற்று.

1918ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ஜெர்மானியப் புரட்சி பற்றிய கருத்தை உலகம் முழுவதும் எள்ளி நகையாடிக்கொண்டிருந்தபோது, பிரான்சில் நேச நாட்டினரின் படையணியைக் கெய்ஸரின் சேனை நொறுக்கிக்கொண்டிருக்கையில், என்னுடன் ஓர் உரையாடலின்போது லெனின் கூறினார்: “கெய்ஸரின் வீழ்ச்சி ஓர் ஆண்டுக்குள் வந்துவிடும் என்று இதற்கு ஒன்பது மாதங்கள் பின்னர் கெய்ஸர் தமது சொந்த நாட்டு மக்களிடமிருந்து தப்பி ஓட நேர்ந்தது.

“நீங்கள் அமெரிக்கா திரும்புவதாயிருந்தால் வெகு சீக்கிரம் புறப்பட  வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்கச் சைனியம் சைப்பீரியாவில் உங்களுக்கு எதிர்ப்படும்” என்று 1918 ஏப்ரலில் லெனின் என்னிடம் சொன்னார். இது வியப்பூட்டும் கூற்று. ஏனெனில் அந்தக் காலத்தில் மாஸ்கோவிலிருந்த நாங்கள் புதிய ருஷ்யாவின்பால் அமெரிக்கா மிக மிக நல்லெண்ணமே கொண்டிருப்பதாக நம்பத் தொடங்கியிருந்தோம். “அது நடவாத காரியம். சோவியத்துக்கள் அரசு அங்கீகாரம் பெறுவதற்குக்கூட வாய்ப்பு இருப்பதாக ரேய்மண்ட் ராபின்ஸ் நினைக்கிறாரே” என்று நான் மறுத்துரைத்தேன்.

“மெய்தான். ஆனால் ராபின்ஸ் அமெரிக்காவின் மிதவாத பூர்ஷ்வாக்களின் பிரதிநிதி. அமெரிக்காவின் கொள்கையை நிர்ணயிப்பவர்கள் அவர்கள் அல்ல. நிதி மூலதனமே அதை நிர்ணயிக்கிறது. நிதிமூலதனமோ சைபீரியாவைத் தன்வசம் வைத்திருக்க விரும்புகிறது. சைபிரியாவைக் கைப்பற்றுவதற்காக அது அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பும்” என்றார் லெனின். இந்த நோக்கு எனக்கு அபாண்டமாகப் பட்டது. ஆயினும், பிற்பாடு, 1918, ஜூன் 29ந் தேதி, விளாதிவஸ் தோக்கில் அமெரிக்கக் கடற்படைவீரர்கள் இறங்குவதை நான் கண்கூடாகப் பார்த்தேன். அதே சமயம் ஜாரின் ஆதரவாளர்களும் செக்குகளும் பிரிட்டிஷாரும் ஜப்பானியரும் பிற நேச நாட்டினரும் சோவியத் குடியரசின் கொடியை இறக்கி அகற்றிவிட்டுப் பழைய எதேச்சாதிகார அரசின் கொடியை ஏற்றினார்கள்.

லெனினுடைய முன்மொழிவுகள் நிகழ்ச்சிகளால் மிக அடிக்கடி மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆதலால் வருங்காலம் பற்றிய அவருடைய அபிப்பிராயம் குறைந்தபட்சம், அக்கறை என்பது முக்கியமானது. 1919, ஏப்ரலில் பாரிஸ் “தான்” பத்திரிகையில் லெனினுடன் நோதோவின் புகழ்பெற்ற பேட்டி விவரம் வெளியாயிற்று. அதன் சுருக்கம் வருமாறு:

லெனின் கூறினார்: “உலகின் வருங்காலமா? நான் தீர்க்கதரிசி அல்ல. ஆனால் இது மட்டும் நிச்சயம். முதலாளித்துவ அரசு, இங்கிலாந்து இதற்கு ஓர் எடுத்துக்காட்டு, மடிந்துகொண்டிருக்கிறது. பழைய அமைப்பின் தலைவிதி தீர்க்கப்பட்டுவிட்டது. யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார நிலைமைகள் புதிய அமைப்புக்கு வலிய இட்டுச் செல்லுகின்றன. மனிதகுலத்தின் வளர்ச்சி தவிர்க்க இயலாதவாறு சோஷலிஸத்துக்குக் கொண்டு செல்லுகிறது.

“அமெரிக்காவில் ரெயில் பாதைகள் தேசிய உடைமை ஆக்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு யார்தாம் நம்பியிருப்பார்கள்? அந்தக் குடியரசு எல்லா தானியத்தையும் அரசின் முழு நலத்துக்கு ஏற்பப் பயன்படுத்தும் பொருட்டு விலைக்கு வாங்குவதை நாம் பார்த்துவிட்டோம். அரசுக்கு எதிராகச் சொல்லப்பட்டது எல்லாம் இந்தப் பரிணாமத்தைத் தடைப்படுத்தவில்லை. குறைபாடுகளை நீக்கும் பொருட்டுப் புதிய கட்டுப்பாட்டுச் சாதனங்களை உண்டாக்குவதும் அமைப்பதும் அவசியம் என்பது உண்மையே. ஆனால் அரசு சர்வாதிகாரமாக உள்ளது. ஆவதைத் தடுக்கும் எந்த முயற்சிகளும் வீணே ஆகும். ஏனெனில் தவிர்க்க இயலாதது வருகிறது, தனது சொந்த விசையாலேயே வருகிறது. ‘பணியாரம் நன்றாயிருப்பதற்குச் சான்று அது உண்ணப்படுவதில் இருக்கிறது’ என்று ஆங்கிலேயர்கள் கூறுவதுண்டு சோஷலிஸப் பணியாரத்தைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். எல்லா நாடுகளும் அதை உண்கின்றன. மேலும் மேலும் அதிகமாக உண்ணும்.

“தொகுத்துரைக்கிறேன். ஒவ்வொரு மனிதக் குழுவும் சோஷலிஸத்தை நோக்கித் தனக்கே உரிய தனி வழியில் செல்கிறது என்பதை அனுபவம் நிரூபிப்பதாகத் தோன்றுகிறது. லாட்வியர்கள் கூட அதை நோக்கி ருஷ்யர்களிலிருந்து வேறான முறையில் செல்கிறார்கள். பற்பல தாற்காலிக வடிவங்களும் விதங்களும் இருக்கும். ஆனால் அவை எல்லாம் ஒரே குறிக்கோளை நோக்கி இயங்கும் புரட்சியின் வெவ்வேறு கட்டங்களே ஆகும். பிரான்சிலோ ஜெர்மனியிலோ சோஷலிஸ அரசு அமைப்பு நிறுவப்பட்டால் அதை நிரந்தரம் ஆக்குவது இங்கே ருஷ்யாவில் ஆக்குவதைக் காட்டிலும் மிக எளிதாயிருக்கும். ஏனென்றால் ருஷ்யாவில் காணப்படாத அமைப்புச் சட்டங்கள், ஸ்தாபனங்கள், எல்லா வகையான அறிவுத் துணைக்கருவிகள், பொருள்கள் ஆகியன மேற்கே சோஷலிஸத்துக்குக் கிடைக்கும்”

14. அறிவாளிகள்பால் லெனினது போக்கு

“நேர்மையுள்ள ஒவ்வொரு போல்ஷெவிக்குக்கும் முப்பத்தொன்பது கயவர்கள், அறுபது முட்டாள்கள் வீதம் இருக்கிறார்கள்.” விரிவாக மேற்கோள் காட்டப்படும் இந்த வாக்கியம் லெனினால் கூறப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீது இகழ்ச்சியும் அவநம்பிக்கையும் கொண்ட, பெருமிதம் மிக்க உயர்குலத்தவராக லெனினைச் சித்திரிக்கும் நோக்கத்துடன் இது புனையப்பட்டுள்ளது. விந்தையான இக்குற்றச்சாட்டுக்கு ஆதரவாகப் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்திய ஓர் அறிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. உழைக்கும் வர்க்கங்கள் ஒழுங்கமைப்பு பற்றிய அறிவு, முதலாளிக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தல், ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை கோருதல் முதலியவை தொழிற்சங்க உணர்வை மட்டுமே வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்றும் சோஷலிஸக் கருத்துகள் பெருமளவு வெளியிலிருந்தே, அறிவுஜீவிகளிடமிருந்தே தொழிலாளர்களுக்குக் கிடைத்துள்ளன என்றும் கூறுகிறது இந்த அறிக்கை.

லெனினும் சோவியத் அரசாங்கமும் தங்கள் எல்லாச் செயல்களிலும் ஆணைகளிலும் அறிவுக்குத் தாங்கள் அளிக்கும் பெருமதிப்பைக் காட்டுகிறார்கள் என்பது உண்மையே. ஒவ்வொரு துறையிலும் லெனின்  நிபுணருக்குப் பணிந்துபோகிறார். ஜார் ஆட்சிக் காலத்திய ஜெனரல்களைக்கூட இராணுவ விவகாரங்களில் நிபுணர்கள் என்ற வகையில் லெனின் மதிக்கிறார். புரட்சிச் செயல் தந்திரத்தில் லெனின் பிரமாணமாகக் கருதுவது ஜெர்மானியரான மார்க்ஸை என்றால் அமெரிக்கரான டெய்லர் உற்பத்திச் செயல்திறமைக்கு வெனினால் பிரமாணமாகக் கருதப்படுகிறார். தேர்ந்த கணக்கர், பெரிய பொறி இயலறிஞர், ஒவ்வொரு செயல் துறையிலும் தனித் தேர்ச்சியாளர் மிக மதிப்புள்ளவர்கள் என்பதை லெனின் எப்போதுமே வலியுறுத்தித்தி வந்திருக்கிறார் உலகம் முழுவதிலிருந்தும் இத்தகைய நிபுணர்களை ஈர்க்கும் காந்தமாக சோவியத் விளங்கும்  என்று அவர் நம்பினார். தங்கள் படைப்பு ஆற்றல்களுக்கு வேறு எந்த அமைப்பிலும்விட சோவியத் அமைப்பில் அதிக விரிவான செயல் வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் காண்பார்கள் என லெனின் எண்ணினார்.

ஹாரிமன் தமது பெரிய ரெயில்வேயை இயக்கி நடத்தும் வேலையைவிட அதற்கு நிதி வசதி செய்யும் பிரச்சினை காரணமாகவே பெரிதும் களைத்துச் சோர்ந்து போனார் என்று சொல்லப்படுகிறது. சோவியத் அமைப்பில் அவர் தமது ஆற்றலை நிர்வாக வேலையிலிருந்து நிதிவசதி செய்யும் வேலையில் ஈடுபடுத்த வேண்டியிராது. ஏனெனில் நாம் காங்கிரஸில் உள்ள நமது பிரதிநிதியிடம் அரசியல் அதிகாரத்தை ஒப்படைப்பது போலவே சோவியத் அமைப்பில் பொருளாதார அதிகாரம் தலைமை நிர்வாகியிடம் ஒப்படைக்கப்படுகிறது ருஷ்யாவின் பெருத்த வளங்கள் பண்படுத்தும் பொருட்டு அவர் பொறுப்பில் விடப்படுகின்றன. சோவியத் ஆட்சியில் ருஷ்யா பொறி இயலருக்கோ, நிர்வாக நிபுணருக்கோ செவ்வைப்படுத்துவதற்குத் தனது விசாலமான வளங்களை மட்டும் அல்ல, அவ்வாறு செயல்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படும் உற்சாகமும் உயிரோட்டமும் உள்ள உழைப்பாளிகளையும் நல்குகிறது.

கடைசியில் இந்த நிலைமை முதலாளித்துவ அமைப்பில் கிடையாது. அங்கே தொழிலாளியின் மிகப்பெரிய அக்கறை தனது வேலையை விடச் சம்பளத்தில்தான் இருக்கிறது. நிர்வாக அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே அங்கே இடைவிடாது பிணக்கு விளைந்துகொண்டிருக்கிறது. சோவியத் அமைப்பில் மனிதர்களின் ஆற்றல்கள் உற்பத்திப் பொருளின் பங்கீடு குறித்துச் சச்சரவிடுவதில் செலவிடப்படுவதற்குப் பதிலாக, அதிக விரிவான உற்பத்தியின் பொருட்டு விடுவிக்கப்படுகின்றன. வெகுஜனங்களின் உற்சாகம் மிக்க படைப்பு ஆற்றல்களை வெளிக்கொணரும் அதே சமயத்தில் அறிவாளிகளுக்கும் மேதாவிகளுக்கும் செயலாற்றச் சுதந்திரம் அளிக்கும் சோவியத் முறையிலிருந்து பெருத்த பயன்கள் விளையும் என லெனின் நம்பினார்.

தமது பார்வையில் சமூகச் சக்திகளின் வெவ்வேறு வகையான எல்லாப் பகுதிகளதும் மதிப்பை லெனின் அனுமானித்தார். புரட்சிக்கு முன்பும் பின்பும் அறிவாளிகள் தங்களுக்கு உரிய இடம் பெற்றார்கள் பிரசாரக் கிளர்ச்சியாளர்கள் என்ற முறையில் புரட்சி சாத்தியமாக அவர்கள் உதவ முடிந்தது. திறமையும் தொழில் நுட்பமும் வாய்ந்த நிபுணர்கள் என்ற வகையில் புரட்சியைச் சாசுவதமும் நிலைப்பும். கொண்டது ஆக்குவதற்கு அவர்கள் உதவ முடிந்தது.


21. ஜெம்ஸ்த்வோக்கள் மாபெரும் அக்டோபர் புரட்சிக்கு முன் மத்திய ருஷ்யப் பிரதேசங்களில் ஸ்தல அதிகாரத்தைச் செலுத்திய நிறுவனங்கள்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram