Wednesday, June 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 8

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 8

13. லெனின் தீர்க்கதரிசி என்ற முறையிலும் ராஜதந்திரி என்ற முறையிலும்

ராஜதந்திரி என்ற முறையிலும் வருங்காலத்தை உணர்ந்தவர் என்ற முறையிலும் லெனினது ஆற்றல் ஏதேனும் மாயாவாத உள்ளுணர்விலிருந்தோ வருவதை அனுமானிக்கும் சக்தியிலிருந்தோ அல்ல, ஒரு விஷயம் பற்றிய எல்லா மெய் விவரங்களையும் ஒன்று திரட்டவும் பின்பு அவற்றைப் பயன்படுத்தவும் அவருக்கு உள்ள திறமையிலிருந்தே தோன்றுகிறது என்பது தெளிவு. ருஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்னும் நூலில் இந்தத் திறமையை அவர் காட்டினார். ருஷ்யக் குடியானவர்களில் பாதிப் பேர் பாட்டாளிகள் ஆக்கப்பட்டு விட்டார்கள் என்றும், ஒரு சிறிது நிலம் அவர்களிடம் இருந்த போதிலும் இந்தக் குடியானவர்கள் எதார்த்தத்தில் “ஒரு துண்டு நிலம் வைத்திருக்கும் கூலி உழைப்பாளிகளே” என்றும் அந்த நூலில் லெனின் வலியுறுத்தித் தம் காலத்துப் பொருளாதாரச் சிந்தனைக்குச் சவால் விடுத்தார். இந்த வலியுறுத்தல் துணிகரம் மிக்கதாக இருந்தது எனினும் பிந்திய வருஷங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இதைச் சரி என்று காட்டின. லெனின் இந்த விஷயத்தை வெறுமே ஊகிக்கவில்லை. ஜெம்ஸ்த்வோக்களிலும்²¹ பிற துறைகளிலும் புள்ளிவிவரங்களை விரிவாகத் திரட்டித் தொகுத்த பின்னர் அது அவர் அளித்த தீர்ப்பு ஆகும்.

லெனின் பெற்றுள்ள பெருமதிப்புக்கு மூல காரணங்கள் யாவை என்பது பற்றி ஒரு நாள் பீட்டர்ஸுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவன் சொன்னான்: “அடிக்கடி எங்கள் கட்சியின் பிரத்தியேகக் கூட்டங்களில் நிலைமை பற்றிய தமது பகுத்தாராய்வின் அடிப்படையில் லெனின் குறித்த யோசனைகளை முன்வைப்பார். நாங்கள் அவற்றைப் பெரும்பான்மை வாக்குகளால் நிராகரித்து விடுவோம்.

லெனின் சொன்னது சரி, எங்கள் கருத்து தவறு என்பது பிற்பாடு நிரூபணமாகிவிடும்.” லெனினுக்கும் கட்சியின் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே செயல் தந்திரம் குறித்துக் கடும் போராட்டங்கள் நடந்துள்ளன. அப்புறம் வந்த நிகழ்ச்சிகள் இவற்றில் பொதுவாக லெனினது மதிப்பீட்டைச் சரி என்று காட்டியிருக்கின்றன.

திட்டமிடப்பட்ட நவம்பர் புரட்சியில் வெற்றி பெறுவது இயலாது என்று பிரபல போல்ஷெவிக்குகளாகிய காமினெவும் ஸினோவியேவும் அபிப்பிராயப்பட்டார்கள். “அது தோல்வி அடைவது இயலாது என்றார் லெனின் அவர் சொன்னதே சரி ஆயிற்று. போல்ஷெவிக்குகள் ஒரு பாய்ச்சல் காட்டியதுமே அரசாங்க அதிகாரம் அவர்கள் கைகளுக்கு வந்துவிட்டது. அரசாங்க அதிகார மாற்றம் இவ்வளவு சுளுவாக நடந்தேறியது குறித்து மற்றவர்களைவிட அதிக வியப்பு அடைந்தவர்கள் இந்த போல்ஷெவிக்குகளே.

அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்வது முடியலாம் எனினும் அதை நிலையாக வைத்திருப்பது இயலாது என்று மற்ற போல்ஷெவிக் தலைவர்கள் சொன்னார்கள். லெனின் சொன்னார், “ஒவ்வொருநாளும் நமக்குப் புதிய பலத்தைக் கொண்டுவரும்” என்று லெனின் கூறியதே சரி ஆயிற்று எல்லாப் புறங்களிலுமிருந்து நெருக்கும் பகைவர்களுக்கு எதிராக இரண்டு ஆண்டுகள் போரிட்ட பின்னர் சோவியத் எல்லா முனைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

ஜெர்மானியர்களை ஆசைகாட்டி மயக்குவதும் ஆனால் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட மறுப்பதுமாகத் தமது ஜாலவித்தைத் தந்திரத்தைக் காட்டிக்கொண்டிந்தார் த்ரோத்ஸ்கிய். அப்போது லெனின் சொன்னார்: “அவர்களுடன் விளையாடாதீர்கள். முன் வைக்கப்படும் முதல் உடன்படிக்கையில், அது எவ்வளவு மோசமாகயிருந்தாலும் சரி, கையெழுத்துதிடுங்கள். இல்லாவிட்டால் நாம் இன்னும் படுமோசமான உடன்படிக்கையில் கையொப்பம் இட நேரும்” என்று. இம்முறையும் லெனின் சொன்னதே சரி ஆயிற்று. வழிப்பறிக்காரர்களின்”, “கொள்ளைக் கூட்டத்தாரின்” சமாதான உடன்படிக்கையில் ருஷ்யர்கள் பிரேஸ்த்லித்தோவ்ஸ்க்கில் கையெழுத்திட வேண்டியதாயிற்று.

1918ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ஜெர்மானியப் புரட்சி பற்றிய கருத்தை உலகம் முழுவதும் எள்ளி நகையாடிக்கொண்டிருந்தபோது, பிரான்சில் நேச நாட்டினரின் படையணியைக் கெய்ஸரின் சேனை நொறுக்கிக்கொண்டிருக்கையில், என்னுடன் ஓர் உரையாடலின்போது லெனின் கூறினார்: “கெய்ஸரின் வீழ்ச்சி ஓர் ஆண்டுக்குள் வந்துவிடும் என்று இதற்கு ஒன்பது மாதங்கள் பின்னர் கெய்ஸர் தமது சொந்த நாட்டு மக்களிடமிருந்து தப்பி ஓட நேர்ந்தது.

“நீங்கள் அமெரிக்கா திரும்புவதாயிருந்தால் வெகு சீக்கிரம் புறப்பட  வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்கச் சைனியம் சைப்பீரியாவில் உங்களுக்கு எதிர்ப்படும்” என்று 1918 ஏப்ரலில் லெனின் என்னிடம் சொன்னார். இது வியப்பூட்டும் கூற்று. ஏனெனில் அந்தக் காலத்தில் மாஸ்கோவிலிருந்த நாங்கள் புதிய ருஷ்யாவின்பால் அமெரிக்கா மிக மிக நல்லெண்ணமே கொண்டிருப்பதாக நம்பத் தொடங்கியிருந்தோம். “அது நடவாத காரியம். சோவியத்துக்கள் அரசு அங்கீகாரம் பெறுவதற்குக்கூட வாய்ப்பு இருப்பதாக ரேய்மண்ட் ராபின்ஸ் நினைக்கிறாரே” என்று நான் மறுத்துரைத்தேன்.

“மெய்தான். ஆனால் ராபின்ஸ் அமெரிக்காவின் மிதவாத பூர்ஷ்வாக்களின் பிரதிநிதி. அமெரிக்காவின் கொள்கையை நிர்ணயிப்பவர்கள் அவர்கள் அல்ல. நிதி மூலதனமே அதை நிர்ணயிக்கிறது. நிதிமூலதனமோ சைபீரியாவைத் தன்வசம் வைத்திருக்க விரும்புகிறது. சைபிரியாவைக் கைப்பற்றுவதற்காக அது அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பும்” என்றார் லெனின். இந்த நோக்கு எனக்கு அபாண்டமாகப் பட்டது. ஆயினும், பிற்பாடு, 1918, ஜூன் 29ந் தேதி, விளாதிவஸ் தோக்கில் அமெரிக்கக் கடற்படைவீரர்கள் இறங்குவதை நான் கண்கூடாகப் பார்த்தேன். அதே சமயம் ஜாரின் ஆதரவாளர்களும் செக்குகளும் பிரிட்டிஷாரும் ஜப்பானியரும் பிற நேச நாட்டினரும் சோவியத் குடியரசின் கொடியை இறக்கி அகற்றிவிட்டுப் பழைய எதேச்சாதிகார அரசின் கொடியை ஏற்றினார்கள்.

லெனினுடைய முன்மொழிவுகள் நிகழ்ச்சிகளால் மிக அடிக்கடி மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆதலால் வருங்காலம் பற்றிய அவருடைய அபிப்பிராயம் குறைந்தபட்சம், அக்கறை என்பது முக்கியமானது. 1919, ஏப்ரலில் பாரிஸ் “தான்” பத்திரிகையில் லெனினுடன் நோதோவின் புகழ்பெற்ற பேட்டி விவரம் வெளியாயிற்று. அதன் சுருக்கம் வருமாறு:

லெனின் கூறினார்: “உலகின் வருங்காலமா? நான் தீர்க்கதரிசி அல்ல. ஆனால் இது மட்டும் நிச்சயம். முதலாளித்துவ அரசு, இங்கிலாந்து இதற்கு ஓர் எடுத்துக்காட்டு, மடிந்துகொண்டிருக்கிறது. பழைய அமைப்பின் தலைவிதி தீர்க்கப்பட்டுவிட்டது. யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார நிலைமைகள் புதிய அமைப்புக்கு வலிய இட்டுச் செல்லுகின்றன. மனிதகுலத்தின் வளர்ச்சி தவிர்க்க இயலாதவாறு சோஷலிஸத்துக்குக் கொண்டு செல்லுகிறது.

“அமெரிக்காவில் ரெயில் பாதைகள் தேசிய உடைமை ஆக்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு யார்தாம் நம்பியிருப்பார்கள்? அந்தக் குடியரசு எல்லா தானியத்தையும் அரசின் முழு நலத்துக்கு ஏற்பப் பயன்படுத்தும் பொருட்டு விலைக்கு வாங்குவதை நாம் பார்த்துவிட்டோம். அரசுக்கு எதிராகச் சொல்லப்பட்டது எல்லாம் இந்தப் பரிணாமத்தைத் தடைப்படுத்தவில்லை. குறைபாடுகளை நீக்கும் பொருட்டுப் புதிய கட்டுப்பாட்டுச் சாதனங்களை உண்டாக்குவதும் அமைப்பதும் அவசியம் என்பது உண்மையே. ஆனால் அரசு சர்வாதிகாரமாக உள்ளது. ஆவதைத் தடுக்கும் எந்த முயற்சிகளும் வீணே ஆகும். ஏனெனில் தவிர்க்க இயலாதது வருகிறது, தனது சொந்த விசையாலேயே வருகிறது. ‘பணியாரம் நன்றாயிருப்பதற்குச் சான்று அது உண்ணப்படுவதில் இருக்கிறது’ என்று ஆங்கிலேயர்கள் கூறுவதுண்டு சோஷலிஸப் பணியாரத்தைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். எல்லா நாடுகளும் அதை உண்கின்றன. மேலும் மேலும் அதிகமாக உண்ணும்.

“தொகுத்துரைக்கிறேன். ஒவ்வொரு மனிதக் குழுவும் சோஷலிஸத்தை நோக்கித் தனக்கே உரிய தனி வழியில் செல்கிறது என்பதை அனுபவம் நிரூபிப்பதாகத் தோன்றுகிறது. லாட்வியர்கள் கூட அதை நோக்கி ருஷ்யர்களிலிருந்து வேறான முறையில் செல்கிறார்கள். பற்பல தாற்காலிக வடிவங்களும் விதங்களும் இருக்கும். ஆனால் அவை எல்லாம் ஒரே குறிக்கோளை நோக்கி இயங்கும் புரட்சியின் வெவ்வேறு கட்டங்களே ஆகும். பிரான்சிலோ ஜெர்மனியிலோ சோஷலிஸ அரசு அமைப்பு நிறுவப்பட்டால் அதை நிரந்தரம் ஆக்குவது இங்கே ருஷ்யாவில் ஆக்குவதைக் காட்டிலும் மிக எளிதாயிருக்கும். ஏனென்றால் ருஷ்யாவில் காணப்படாத அமைப்புச் சட்டங்கள், ஸ்தாபனங்கள், எல்லா வகையான அறிவுத் துணைக்கருவிகள், பொருள்கள் ஆகியன மேற்கே சோஷலிஸத்துக்குக் கிடைக்கும்”

14. அறிவாளிகள்பால் லெனினது போக்கு

“நேர்மையுள்ள ஒவ்வொரு போல்ஷெவிக்குக்கும் முப்பத்தொன்பது கயவர்கள், அறுபது முட்டாள்கள் வீதம் இருக்கிறார்கள்.” விரிவாக மேற்கோள் காட்டப்படும் இந்த வாக்கியம் லெனினால் கூறப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீது இகழ்ச்சியும் அவநம்பிக்கையும் கொண்ட, பெருமிதம் மிக்க உயர்குலத்தவராக லெனினைச் சித்திரிக்கும் நோக்கத்துடன் இது புனையப்பட்டுள்ளது. விந்தையான இக்குற்றச்சாட்டுக்கு ஆதரவாகப் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்திய ஓர் அறிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. உழைக்கும் வர்க்கங்கள் ஒழுங்கமைப்பு பற்றிய அறிவு, முதலாளிக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தல், ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை கோருதல் முதலியவை தொழிற்சங்க உணர்வை மட்டுமே வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்றும் சோஷலிஸக் கருத்துகள் பெருமளவு வெளியிலிருந்தே, அறிவுஜீவிகளிடமிருந்தே தொழிலாளர்களுக்குக் கிடைத்துள்ளன என்றும் கூறுகிறது இந்த அறிக்கை.

லெனினும் சோவியத் அரசாங்கமும் தங்கள் எல்லாச் செயல்களிலும் ஆணைகளிலும் அறிவுக்குத் தாங்கள் அளிக்கும் பெருமதிப்பைக் காட்டுகிறார்கள் என்பது உண்மையே. ஒவ்வொரு துறையிலும் லெனின்  நிபுணருக்குப் பணிந்துபோகிறார். ஜார் ஆட்சிக் காலத்திய ஜெனரல்களைக்கூட இராணுவ விவகாரங்களில் நிபுணர்கள் என்ற வகையில் லெனின் மதிக்கிறார். புரட்சிச் செயல் தந்திரத்தில் லெனின் பிரமாணமாகக் கருதுவது ஜெர்மானியரான மார்க்ஸை என்றால் அமெரிக்கரான டெய்லர் உற்பத்திச் செயல்திறமைக்கு வெனினால் பிரமாணமாகக் கருதப்படுகிறார். தேர்ந்த கணக்கர், பெரிய பொறி இயலறிஞர், ஒவ்வொரு செயல் துறையிலும் தனித் தேர்ச்சியாளர் மிக மதிப்புள்ளவர்கள் என்பதை லெனின் எப்போதுமே வலியுறுத்தித்தி வந்திருக்கிறார் உலகம் முழுவதிலிருந்தும் இத்தகைய நிபுணர்களை ஈர்க்கும் காந்தமாக சோவியத் விளங்கும்  என்று அவர் நம்பினார். தங்கள் படைப்பு ஆற்றல்களுக்கு வேறு எந்த அமைப்பிலும்விட சோவியத் அமைப்பில் அதிக விரிவான செயல் வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் காண்பார்கள் என லெனின் எண்ணினார்.

ஹாரிமன் தமது பெரிய ரெயில்வேயை இயக்கி நடத்தும் வேலையைவிட அதற்கு நிதி வசதி செய்யும் பிரச்சினை காரணமாகவே பெரிதும் களைத்துச் சோர்ந்து போனார் என்று சொல்லப்படுகிறது. சோவியத் அமைப்பில் அவர் தமது ஆற்றலை நிர்வாக வேலையிலிருந்து நிதிவசதி செய்யும் வேலையில் ஈடுபடுத்த வேண்டியிராது. ஏனெனில் நாம் காங்கிரஸில் உள்ள நமது பிரதிநிதியிடம் அரசியல் அதிகாரத்தை ஒப்படைப்பது போலவே சோவியத் அமைப்பில் பொருளாதார அதிகாரம் தலைமை நிர்வாகியிடம் ஒப்படைக்கப்படுகிறது ருஷ்யாவின் பெருத்த வளங்கள் பண்படுத்தும் பொருட்டு அவர் பொறுப்பில் விடப்படுகின்றன. சோவியத் ஆட்சியில் ருஷ்யா பொறி இயலருக்கோ, நிர்வாக நிபுணருக்கோ செவ்வைப்படுத்துவதற்குத் தனது விசாலமான வளங்களை மட்டும் அல்ல, அவ்வாறு செயல்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படும் உற்சாகமும் உயிரோட்டமும் உள்ள உழைப்பாளிகளையும் நல்குகிறது.

கடைசியில் இந்த நிலைமை முதலாளித்துவ அமைப்பில் கிடையாது. அங்கே தொழிலாளியின் மிகப்பெரிய அக்கறை தனது வேலையை விடச் சம்பளத்தில்தான் இருக்கிறது. நிர்வாக அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே அங்கே இடைவிடாது பிணக்கு விளைந்துகொண்டிருக்கிறது. சோவியத் அமைப்பில் மனிதர்களின் ஆற்றல்கள் உற்பத்திப் பொருளின் பங்கீடு குறித்துச் சச்சரவிடுவதில் செலவிடப்படுவதற்குப் பதிலாக, அதிக விரிவான உற்பத்தியின் பொருட்டு விடுவிக்கப்படுகின்றன. வெகுஜனங்களின் உற்சாகம் மிக்க படைப்பு ஆற்றல்களை வெளிக்கொணரும் அதே சமயத்தில் அறிவாளிகளுக்கும் மேதாவிகளுக்கும் செயலாற்றச் சுதந்திரம் அளிக்கும் சோவியத் முறையிலிருந்து பெருத்த பயன்கள் விளையும் என லெனின் நம்பினார்.

தமது பார்வையில் சமூகச் சக்திகளின் வெவ்வேறு வகையான எல்லாப் பகுதிகளதும் மதிப்பை லெனின் அனுமானித்தார். புரட்சிக்கு முன்பும் பின்பும் அறிவாளிகள் தங்களுக்கு உரிய இடம் பெற்றார்கள் பிரசாரக் கிளர்ச்சியாளர்கள் என்ற முறையில் புரட்சி சாத்தியமாக அவர்கள் உதவ முடிந்தது. திறமையும் தொழில் நுட்பமும் வாய்ந்த நிபுணர்கள் என்ற வகையில் புரட்சியைச் சாசுவதமும் நிலைப்பும். கொண்டது ஆக்குவதற்கு அவர்கள் உதவ முடிந்தது.


21. ஜெம்ஸ்த்வோக்கள் மாபெரும் அக்டோபர் புரட்சிக்கு முன் மத்திய ருஷ்யப் பிரதேசங்களில் ஸ்தல அதிகாரத்தைச் செலுத்திய நிறுவனங்கள்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 நவம்பர், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 1 | 1990 நவம்பர் 16-30, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்துமதவெறி பாசிச அபாயமும் சமூகவிரோத
    கிரிமினல் கும்பலின் ஆட்சியும்
  • அயோத்தி: இந்துமதவெறி பாசிசத்தின் தாக்குதல்
  • அவதூறுகளையே விமர்சனங்களாக அடுக்கும் வீரமணி கும்பல்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவலம்
  • ஜெர்மன் பிளவுக்கு காரணம் யார்/
  • பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் ‘புரட்சி’ செய்யும் போலிகள்
  • மதவெறிக்கு எதிராக….
  • நம்பிக்கையின் ஒளிக்கீற்று
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 7

11. லெனினின் நேர்மையும் எதார்த்தமின்மைபால் வெறுப்பும்

லெனினது சக்தியின் மர்மங்களில் ஒன்று அவருடைய உளமார்ந்த நேர்மை ஆகும். தமது நண்பர்களிடம் அவர் நேர்மையைக் கடைப்பிடித்தார். அணிகளில் ஒவ்வொரு புது நபர் சேரும்பொழுதும் அவர் மகிழ்ச்சி அடையத்தான் செய்தார். ஆயினும் வேலை நிலைமைகளையோ வருங்கால வாய்ப்புக்களையோ கவர்ச்சியாகச் சித்திரிப்பதன் மூலம் ஒரு ஆளைக்கூட அவர் திரட்ட மாட்டார். மாறாக விஷயங்களை உள்ளதைவிட மோசமாக வருணிப்பதையே அவர் மேற்கொண்டார். லெனினுடைய பல பேச்சுக்களின் பல்லவி இதுதான்: “போல்ஷெவிக்குகள் அடைய முயலும் குறிக்கோள் தொலைவில் இருக்கிறது உங்களில் பெரும்பாலோர் கனவு காண்பதைவிடத் தொலைவில் இருக்கிறது. நாம் ருஷ்யாவைக் கரடுமுரடான பாதையில் நடத்தி வந்திருக்கிறோம். ஆனால் நாம் கடைப்பிடிக்கும் போக்கு நமக்கு மேலும் அதிகப் பகைவர்களையும் மேலும் பட்டினியையும் உண்டாக்கும். சென்ற காலம் கடினமாகவே இருந்தது. வருங்காலமோ இன்னும் கடினமான நீங்கள் நினைப்பதை விட அதிகக் கடினமான நிலைமைகளை கொண்டிருக்கும்” கவர்ச்சியூட்டும் ஆசை காட்டல் அல்ல இது. வழக்கமாகப் படை திரட்டுவதற்குரிய அழைப்பு அல்ல இது! எனினும் காயங்களும் சிறைவாசமும் மரணமுமே எதிர்ப்படும் என்று கூறிய காரிபால்டியை இத்தாலியர்கள் திரண்டு வந்து பின்பற்றியது போல ருஷ்யர்கள் திரண்டு வந்து லெனினைப் பின்பற்றினார்கள். தலைவர் தமது இயக்கத்தைப் பெருமைப்படுத்த வேண்டும். கேட்போர் மனம் மாறி அதில் சேர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தித் தூண்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பவனுக்கு இது ஓரளவு சங்கடமாயிருந்தது. ஆனால் லெனின் இந்தத் தூண்டுதல் உள்ளத்திலிருந்து வரும்படி விட்டு விட்டார்.

தமது வெளிப்படையான பகைவர்களிடமும்கூட லெனின் நேர்மையைக் கடைப்பிடிக்கிறார். அவரது அசாதாரணமான கபடின்மையைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஓர் ஆங்கிலேயர் அவருடைய போக்கு பின்வருமாறு இருந்தது எனச் சொல்லுகிறார்: “சொந்த முறையில் உங்கள்மீது எனக்குப் பகைமை எதுவும் இல்லை. ஆனால் அரசியல் நோக்கில் நீங்கள் என் பகைவர், உங்களை அழிப்பதற்கு எனக்குத் தோன்றும் எல்லா ஆயுதங்களையும் நான் பிரயோகித்தாக வேண்டும். உங்கள் அரசாங்கம் எனக்கு எதிராக இதையே செய்கிறது. இப்போது எவ்வளவு தூரம் நாம் சேர்ந்து செல்ல முடியும் என்பதைப் பார்ப்போம்.”

நேர்மையின் இந்த முத்திரை லெனினுடைய எல்லா வெளிப்படைக் கூற்றுக்களிலும் பதிந்திருக்கிறது. ராஜதந்திரி அரசியல்வாதிக்குரிய வழக்கமான சாதனங்கள் வெற்று வேட்டு, படாடோபமான சொற்கள், வெற்றி மனப்பான்மை ஆகியவை லெனினிடம் கிடையாது. அவர் விரும்பினாலுங்கூட மற்றவர்களை ஏய்க்க அவரால் முடியாது என்று தோன்றுகிறது. அதே காரணத்தினால் தம்மையே ஏமாற்றிக் கொள்ளவும் அவரால் முடியாது. அவரது விஞ்ஞான மனப்போக்கும் மெய் விவரங்கள்பால் அவருக்குள்ள தீவிர ஆர்வமுமே இதன் காரணம். அவருடைய தகவல் மார்க்கங்கள் எல்லாத் திசைகளிலும் சென்று கணக்கற்ற மெய் விவரங்களை அவருக்குக் கொண்டு தருகின்றன. இந்த விவரங்களை அவர் சீர்தூக்கிப் பார்த்து, சலித்தெடுத்து, சுத்தப்படுத்துகிறார். பிறகு அவர் போர்த்தந்திர நிபுணர், சமூகத் தனிமங்களைக் கொண்டு செயல்புரியும் தேர்ந்த இரசாயனி, கணித அறிஞர் என்ற முறையில் இவற்றைப் பயன்படுத்துகிறார். உதாரணமாக ஒரு விஷயத்தை அவர் பின்வரும் வழியில் அணுகுகிறார்:

“இப்போது நமக்குச் சாதகமான விவரங்கள் இவை: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு…” அவற்றை அவர் சுருக்கமாக எடுத்துரைப்பார். “நமக்கு எதிரான விவரங்கள் இவை.”

அதேமாதிரி இவற்றையும் அவர் எண்ணிக் கணக்கிடுவார், “ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு வேறு எவையேனும் உள்ளனவா? என்று கேட்பார். வேறு எதையேனும் கண்டு சொல்வதற்காக நாங்கள் மூளையைக் குடைந்துகொள்வோம், பொதுவாகப் பயனின்றி, சாதகமானவை, பாதகமானவை, இருதரப்பு விஷயங்களையும் விவரித்து விட்டு, கணிதப் பிரச்சினையை மதிப்பிடுவது போலத் தமது மதிப்பீட்டைச் செய்வார் லெனின்.

மெய் விவரங்களைப் பெருமைப்படுத்துவதில் அவர் வுட்ரோ வில்சனுக்கு நேர் எதிரானவர். வில்சன் ஒரு சொற்கலைஞர். எல்லா விஷயங்களுக்கும் நயமான சொற்களால் முலாம் பூசி, மக்களைப் பிரமிக்கவும், மதிமயங்கவும் புரிந்து, விஷயத்தில் அடங்கிய விகாரமான எதார்த்தங்களையும் திண்ணமான பொருளாதார விவரங்களையும் அவர்கள் காணவிடாதவாறு அவர் செய்துவிடுவார். லெனினோ அறுவைக் கத்தியுடன் சத்திர மருத்துவன் போல வருகிறார். ஏகாதிபத்தியவாதிகளின் ஆடம்பரமான பாஷைக்குப் பின் மறைந்துள்ள எளிய பொருளாதார நோக்கங்களை அவர் திறந்து காட்டுகிறார். ருஷ்ய மக்களுக்கு அவர்கள் விடுக்கும் பிரகடனங்களின் வெளிப் போர்வையை நீக்கி, அம்மணம் ஆக்கி, அவர்களுடைய நேர்த்தியான உறுதிமொழிகளின் பின்னே மறைந்திருக்கும் சுரண்டுவோரின் கரிய, சூறையாடும் கையை அவர் வெளிக்காட்டுகிறார்.

வார்த்தைப் பந்தல் போடும் வலதுசாரியினர்பால் அவர் சற்றும் இரக்கம் காட்டுவதில்லை. அதேசமயம், எதார்த்தத்திலிருந்து தப்புவதற்குப் புரட்சிக் கோஷங்களில் புகலிடம் தேடும் இடதுசாரியினரை அவர் கடுமையுடன் விளாசுகிறார். “புரட்சிகர ஜனநாயகச் சொல்வன்மை என்னும் இனிப்பூட்டப் பெற்ற நீரில் காடியையும் பித்தநீரையும் ஊற்றுவது தமது கடமை என அவர் கருதுகிறார். உணர்ச்சிப் பெருக்கில் உருகுபவனையும் வறட்டுக் கோட்பாடுகளை உரக்க முழங்குபவனையும் அவர் சுரீரெனத் தைக்கும் ஏளனத்துக்கு உள்ளாக்குகிறார்.

ஜெர்மானியர்கள் சோவியத் தலைநகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது ருஷ்யாவின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து தந்திகள் ஸ்மோல்னியுக்கு வெள்ளமாகப் பெருகி வந்தன. வியப்பும். திகிலும் ஆத்திரமும் அவற்றில் வெளியிடப்பட்டிருந்தன. “ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் நீடூழி வாழ்க!” “ஏகாதிபத்தியக் கொள்ளைக்காரர்கள் ஒழிக!” “கடைசித் துளி வரை இரத்தம் சிந்திப் புரட்சியின் தலைநகரைக் காப்போம்!” என்பது போன்ற கோஷங்களுடன் இந்தத் தந்திகள் முடிந்திருந்தன.

லெனின் அவற்றைப் படித்துவிட்டு எல்லா சோவியத்துக்களுக்கும் ஒரு தந்தி அனுப்புவித்தார். பெத்ரோகிராதுக்குப் புரட்சிக் கோஷங்களைத் தயவுசெய்து அனுப்பாமலிருக்கும்படியும் துருப்புக்களை அனுப்பும்படியும் அதோடு எத்தனை தொண்டர்கள் படைவீரர்களாகத் திரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கும்படியும், ஆயுதங்கள், போர்த் தளவாடங்கள் ஆகியவற்றின் இருப்பு பற்றியும் உணவு நிலைமை பற்றியும் அறிக்கை செய்து கொள்ளும்படியும் அதில் சோவியத்துக்கள் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தன.

12. நெருக்கடியில் செயலாற்றும் லெனின்

ஜெர்மானியர்களின் முன்னேற்றத்திற்கு கூடவே அயல்நாட்டினரின் வெளியேற்றம் நிகழ்ந்தது. “ஹூணர்களைக் கொல்லுங்கள்!” என்று காட்டுக்கூச்சல் போட்டவர்கள் எல்லோரும் இப்போது ஹூணன் கொல்லப்படும் தொலைவுக்குள் வந்ததும் கண் தலை தெரியாமல் விழுந்தடித்து ஓடியதைக் குறித்து ருஷ்யர்கள் அமிழ்ந்த வியப்பைத் தெரிவித்தார்கள். இந்தக் கும்பலோடு சேர்ந்து கம்பி நீட்டுவது எனக்கும் நன்றாய்த்தான் இருந்திருக்கும், ஆனால் கவசமோட்டார் மீது நின்று நான் அளித்த வாக்குறுதி என்னைத் தடுத்தது. எனவே நான் செஞ்சேனையில் சேர முன்வந்தேன். இடதுசாரிக் கம்யூனிஸ்ட் புகாரின் நான் லெனினைக் காண வேண்டும் என்று வற்புறுத்தினார்.

“எனது வாழ்த்துக்கள்! எனது மகிழ்வுரைகள்!” என்றார் லெனின், “எங்களது நிலைமை இப்போது மிக மோசமானதாகத் தோன்றுகிறது. பழைய சைனியம் போரிடாது. புதிய சைனியமோ பெரும்பாலும் காகிதத்தில்தான் இருக்கிறது. ப்ஸ்கோவ் நகரம் எதிர்ப்பு இன்றி இப்போதுதான் சரணடைந்துவிட்டது. இது கடுங்குற்றம். அந்த வட்டார சோவியத் தலைவன் சுடப்பட வேண்டும். நமது தொழிலாளர்களிடம் பெருத்த தன்னலத் தியாகமும் வீரம் இருக்கிறது. ஆனால் இராணுவப் பயிற்சி இல்லை, கட்டுப்பாடு இல்லை.”

இவ்வாறு சுமார் இருபது சின்ன வாக்கியங்களில் நிலைமையைத் தொகுத்துரைத்துவிட்டு முடிவில் லெனின் கூறினார்: “நான் காண்பது எல்லாம் சமாதானந்தான். எனினும் சோவியத் போருக்கு ஆதரவாக இருக்கலாம். என்னவாயினும், புரட்சிச் சேனையில் சேர்ந்ததற்கு என் வாழ்த்துக்கள். ருஷ்ய பாஷையுடன் உங்கள் போராட்டத்துக்குப் பிறகு ஜெர்மானியர்களுடன் போர் புரிய நீங்கள் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டுமே” சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபின் அவர் மேலும் கூறினார்:

“ஒரு வெளிநாட்டான் நிரம்பச் சண்டை போட்டுவிட முடியாது. ஒருவேளை மற்றவர்களும் உங்களுடன் சேர்ந்துகொள்ளலாம்.”

ஒரு படைப்பிரிவு அமைக்க நான் முயலக்கூடும் என்று நான் அவரிடம் சொன்னேன்.

லெனின் நேரடியாகச் செயலாற்றுபவர் திட்டம் யோசனையில் உதித்ததுமே அதைச் செயல்படுத்துவதில் அவர் முனைந்தார். சோவியத் கமாண்டர் க்ரிலேன்கோவுக்குப் போன் செய்ய முயன்றார் அது முடியாமல் போகவே பேனாவை எடுத்து அவருக்கு ஒரு குறிப்பு எழுதினார்.

இரவு ஆவதற்குள் நாங்கள் சர்வதேச லீஜியன் அமைத்து விட்டோம். அயல்மொழிகள் பேசும் ஆடவர் அனைவருக்கும் இந்தப் புதிய படைப்பிரிவில் சேருமாறு அழைப்பு விடுத்தோம். ஆனால் லெனின் விஷயத்தை இத்துடன் விட்டு விடவில்லை. காரியத்தை ஆடம்பரமான முறையில் தொடங்கி வைத்ததுடன் அவர் திருப்தி அடையவில்லை. அவர் அதை விடாது, விவரமாகத் தொடர்ந்தார் அழைப்பு அறிக்கையை ருஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் அச்சிடுமாறு பிராவ்தா அலுவலகத்துக்கு இரண்டுமுறை போன் செய்து உத்தரவிட்டார் பின்பு அதைத் தந்தி மூலம் நாடெங்கும் பரப்பினார். இவ்வாறு யுத்தத்தையும் சிறப்பாக அதைப் பற்றிய புரட்சிக் கோஷங்களால் தங்களுக்கு வெறி ஏற்றிக் கொண்டிருந்தவர்களையும் ஒருபுறம் எதிர்த்த அதே சமயத்தில் போருக்கு ஆயத்தமாவதற்காக எல்லாச் சக்திகளையும் லெனின் திரட்டிக் கொண்டிருந்தார்.

பெத்ரோப்பாவ்லவ்ஸ்க்காயா கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த புரட்சி எதிர்ப்பு இராணுவ அதிகாரிகளில் சிலரை அழைத்து வருமாறு செங்காவற்படையினருடன் ஒரு காரை அனுப்பிவைத்தார்.

ஜெனரல்கள் லெனினது அலுவலகத்துக்குள் வரிசையாக வந்து சேர்ந்ததும் அவர், “கனவான்களே, நிபுணர்கள் என்ற முறையில் உங்களிடம் ஆலோசனை கேட்பதற்காகவே உங்களை இங்கே அழைத்திருக்கிறேன். பெத்ரோகிராத் அபாயத்தில் இருக்கிறது. அதன் தற்காப்புக்கான இராணுவச் செயல் தந்திரத்தை உங்களால் வகுத்துத்தர முடியுமா?” என்றார். அவர்கள் சம்மதித்தார்கள்.

வரைப்படத்தில் செம்படையினரின் அணிகளும் போர்த்தளவாடங்களும் சேமிப்புப் படையினரும் இருக்கும் இடங்களைக் காட்டிவிட்டு லெனின் தொடர்ந்தார்:

எங்கள் படைகள் இதோ இருக்கின்றன. எதிரித் துருப்புக்களின் எண்ணிக்கையையும் இட அமைப்புக்களையும் பற்றி எங்களுக்குக் கிடைத்துள்ள கடைசியான தகவல்கள் இவை ஜெனரல்களுக்கு வேறு ஏதேனும் தேவையானால் அவர்கள் கேட்கலாம்.”

ஜெனரல்கள் வேலையில் முனைந்தார்கள். மாலையாகும் போது தங்கள் யோசனைகளின் முடிவுகளை லெனினிடம் அளித்தார்கள். பின்பு அவர்கள் நைச்சியமாக, “இப்போது, எங்களுக்கு அதிக வசதியான இருப்பிடங்கள் அளிப்பதற்கு முதலமைச்சர் அன்புகூர்ந்து இணங்குவாரா?” என்றார்கள்.

“மிக மிக வருந்துகிறேன். வேறு ஒரு சமயம் பார்ப்போம், ஆனால் இப்போது அல்ல. கனவான்களே, உங்கள் இருப்பிடங்கள் சௌகரியம் இல்லாதவையாக இருக்கலாம், ஆனால் பாதுகாப்பானவை என்ற அனுகூலம் அவற்றில் உண்டு” எனப் பதிலளித்தார் லெனின். அதிகாரிகள் பெத்ரோப்பாவ்லவ்ஸ்க்காயா கோட்டைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விகடன் முதல் விஜய் டிவி வரை: நெரிக்கப்படும் குரல்வளை!

ந்தியாவில் ஊடகம் என்பது ஜனநாயகத்தை தாங்கும் நான்காவது தூண் என்று கூறப்படுகிறது. ஜனநாயகத்திற்கு வேண்டுமென்றால் சுதந்திர ஊடகங்கள் தேவைப்படலாம். ஆனால், அதானி – அம்பானி; ஆர்.எஸ்.ஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலின் ஆட்சியில் சுதந்திர ஊடகம் என்பது ஒரு தடைக்கல்லாகவே பார்க்கப்படுகிறது. எனவேதான் தேசிய ஊடகங்கள் முதல் சமூக ஊடகங்கள் வரை அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பல்வேறு முயற்சிகளை பாசிச மோடி அரசு மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில், தமிழ்நாட்டில் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் “நீயா நானா” எனும் விவாத நிகழ்ச்சியில், புதிய கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டம் குறித்து “மும்மொழித் திட்டத்தை ஆதரிப்போரும் – எதிர்ப்போரும்” என்கிற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு படப்பிடிப்பும் முடிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சி மோடி அரசின் நிர்பந்தத்தினாலும் விஜய் டி.வி-யின் புதிய முதலாளி முகேஷ் அம்பானியின் உத்தரவினாலும் நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்நிகழ்ச்சியில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேசுவதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஆனந்தன் அய்யாசாமி என்கிற பா.ஜ.க. பிரமுகர் உட்பட யாராலும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக எந்த நியாயமான வாதத்தையும் தர்க்க ரீதியாக எடுத்து வைக்க முடியவில்லை. இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால் பா.ஜ.க-வின் மும்மொழிக் கொள்கை அம்பலப்பட்டுப் போகும் என்பதை உணர்ந்துகொண்ட ஆனந்தன் அய்யாசாமி, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மூலம் இந்நிகழ்ச்சியை தடை செய்ய வைத்துள்ளார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதேபோல், சில வாரங்களுக்கு முன்பு “ஆனந்த விகடன்” இணையப் பத்திரிகையில் மோடியின் அமெரிக்க அடிமைத்தனத்தை அம்பலப்படுத்தும் விதமாக கார்ட்டூன் வெளியிட்டதற்காக, தேசத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு எந்தவித முன்னறிவிப்புமின்றி விகடனின் இணையதளம் முடக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கும் இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் இந்திய ஊடகச் சுதந்திரத்தின் நிலையைப் புரிந்துகொள்வதற்கான சமீபத்திய சான்றுகளாகும்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலோ ஊடக சுதந்திரம் என்பது கல்லறையில் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுவதும் போலீசால் சிறையிடப்படுவதும் கிரிமினல் கும்பலால் படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நடைமுறையாக மாறிவருகிறது. நிலவரத்தைப் புரிந்துகொள்ள சில சம்பவங்களை மட்டும் சுருக்கமாகப் பார்ப்போம்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில், சுயேட்சையான பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர் என்பவர், “நிலாஸ்னார்- மிர்தூர்- கங்கலூர்” சாலை கட்டுமான ஒப்பந்தம் 56 கோடியிலிருந்து சுமார் 120 கோடியாக உயர்த்தப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதை அம்பலப்படுத்தியிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர்கள் ஜனவரி 1 அன்று முகேஷ் சந்திராக்கரை கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அவரது உடல் ஜனவரி 3 அன்று ஒப்பந்ததாரரின் புதிய கட்டடத்தின் செப்டிக் தொட்டியில் போடப்பட்டு கான்கிரீட் சிதறல்களால் மூடப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் 1. முகேஷ் சந்திராகர் 2. ராகவேந்திர பாஜ்பாய்

இதேபோல், கடந்த மார்ச் மாதம் 9-ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில், இந்தி நாளிதழ் ஒன்றில் பத்திரிகையாளராக பணிபுரிந்துவந்த ராகவேந்திர பாஜ்பாய் என்பவர் கிரிமினல் கும்பலால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நெல் கொள்முதல் முறைகேடுகள் மற்றும் நில கொள்முதலில் முத்திரை வரி ஏய்ப்பு குறித்து செய்திகள் வெளியிட்டதால், ராகவேந்திராவுக்கு சமீப காலமாக கொலை மிரட்டல்கள் வந்ததாக அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இறுதியாக, தற்போது இந்திய அளவில் பேசுபொருளாகியிருக்கும் நகைச்சுவையாளர் குணால் கம்ரா விவகாரம். கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி “நயா பாரத்” (புதிய இந்தியா) என்ற தலைப்பில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை குணால் நடத்தியிருந்தார். அதில், மோடியின் புதிய இந்தியா குறித்தும் நாட்டில் உள்ள நீதிமன்றங்களும், அமலாக்கத்துறையும் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும், மகாராஷ்டிரா துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தும் கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த விமர்சனங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள துணிவில்லாத பா.ஜ.க. கும்பல், ஷிண்டே பிரிவைச் சார்ந்த சிவசேனா குண்டர்படை மூலம் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தப்பட்ட கிளப் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், மும்பை போலீசு குணால் கம்ரா மீது வழக்கும் பதிவு செய்துள்ளது.

வட இந்தியாவில், பா.ஜ.க. அரசின் மக்கள்விரோத கொள்கையையும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையையும் எதிர்க்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நினைக்கும், இந்து மதவெறிக்கு எதிராக மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கும் ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் பலரும் மிரட்டப்படுவதும் போலீசின் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுவதும், கிரிமினல் கும்பல் மற்றும் காவிக் குண்டர் படையால் வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

உலக சமாதானத்திற்காக செயல்படும் அமைப்பாக கூறப்படுகின்ற “அம்னஸ்டி இன்டர்நேஷனல்” (Amnesty International) மோடி அரசின் அடக்குமுறைகள் காரணமாக சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் 2020-இல் தனது இந்தியக் கிளையை மூடிவிட்டுப் போய்விட்டது. இவையெல்லாம் கருத்துரிமை மீதான மோடி அரசின் அடக்குமுறைகளை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

இந்து குழுமத்தின் இயக்குநர் என்.ராம், “மோடி ஆட்சிக்குப் பிறகு இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மிகவும் வெட்டி சுருக்கப்பட்டிருக்கிறது. உலகின் பத்திரிகை சுதந்திரம் பற்றிய குறியீடுகளில் (World Press Freedom Index) 2004-இல் 114-வது இடத்தில் இருந்த இந்தியா 2024-இல் 159-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது” என்று கூறுகிறார். மேலும், “2014-லிருந்து 2024 வரையிலான 10 ஆண்டுகளில் 19 பத்திரிகையாளர்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காயமடைந்தவர்கள், மிரட்டப்பட்டவர்கள், வேலையிழந்தவர்கள் இன்னும் ஏராளம். குறிப்பாக, இன்றைய நிலையில் பத்திரிகையாளர்களுக்கு இந்தியா அபாயமிக்க நாடாக கருதப்படுகிறது” என்றும் கூறுகிறார்.

டெல்லியைச் சேர்ந்த வரலாற்றியலாளரும் எழுத்தாளருமான முகுல் கேசவன், “ஊடகங்களையும் பத்திரிகைகளையும் கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றுவது, தொடரப் போகும் பெரும் சதி திட்டங்களுக்கான முன் தயாரிப்பு நடவடிக்கையாகும்” என்று கூறுகிறார். மேலும், “மாற்றுக் கருத்துகளை நசுக்குவது என்பதுதான் கார்ப்பரேட்டுகளின் முதன்மையான இலக்காக இருக்கிறது. ஆனாலும், பெரும்பாலான பத்திரிகை ஊடகங்கள் அவற்றின் முதலாளிகளின் நோக்கங்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அரசுக்கு ஆதரவானதாக மாறிப் போய்விட்டன” என்று குற்றம் சுமத்துகிறார். இது தொடர்ந்தால் ஜனநாயகத்திற்கு அழிவு காலம்தான் என்கிறார் முகுல் கேசவன்.

அரசை விமர்சிப்பவர்கள் எதிர் கருத்து அல்லது மாற்றுக் கருத்து சொல்பவர்கள் அவற்றை தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்கள் என்று அனைவர் மீதும் வழக்கு தொடுப்பது, சிறையிலடைத்து கொடுமைப்படுத்துவது என்றால், இது என்ன ஜனநாயகம் என்று கேள்வி எழுப்புகிறார் தெற்காசியாவின் மனித உரிமை கண்காணிப்பகத்தின் (South Asian Director of Human Rights Watch) இயக்குநர் மீனாட்சி கங்குலி.

மக்கள் அமைப்பாக அணிதிரளவும், எதிர்த்துப் போராடவும், பேரணி நடத்தவும் பொதுவெளியில் பேசவும், தங்கள் கருத்துக்களை பதிவிடவும் என்று எல்லா உரிமைகளும் உள்ளது என அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கின்றன. நடைமுறையில் அவ்வாறு இல்லையெனினும், கொஞ்சநஞ்சம் இருந்த உரிமைகளை கூட முற்றுமுழுதாக பறிக்கும் வேலையில் பாசிச மோடி அரசு இறங்கியுள்ளது.

அதுவும் மக்களின் இந்த அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுவது வெறுமனே வாய் வழியாக, அடாவடித்தனமாக நடத்தப்படுவது மட்டுமல்ல, அவை தேச விரோதமாகவும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும், தீவிரவாத சக்திகளுக்கு ஊக்கம் கொடுப்பதாகவும், நாட்டைக் காட்டி கொடுப்பதாகவும் இதே சட்டத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றது. சட்டத்தின் ஆட்சி என்ற கேடயத்தின் பின்னால் இருந்துகொண்டு நீதிமன்றங்களும் இவற்றை ஆதரித்து நிற்கின்றன. இதுதான் அடிப்படை பிரச்சினையாகும்.

எல்லாம் அரசின் விருப்பம் என்று ஆக்கப்பட்டிருக்கின்றது. அரசு மட்டுமே சமூகத்தின் ஒரே நிறுவனம் அதற்கு எதிராக இயங்கும் எவையும் தேசவிரோதம் என்று வெளிப்படையாக பேசுகின்றனர். இதில் பலியிடப்படுவது ஜனநாயகம்தான் என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பதே நமது சமூகக் கட்டமைப்பின் அவலம். இவ்விடத்தில்தான் ஜனநாயக சக்திகளின் கடமையும், இயக்கமும், செயல்பாடும் முக்கியத்துவமடைகின்றன.


ஆதி

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 அக்டோபர், 1-15 நவம்பர், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 23-24 | 1990 அக்டோபர் 16-31, நவம்பர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இரத்த வெள்ளத்தில் இந்தியா
  • கர்நாடக ஆட்சிக் கவிழ்ப்பு: சாராய அதிபர்களிடம் ராஜீவ் சோரம்!
  • கேரள கடற்கரையை ஆளுவது ‘மார்க்சிஸ்டு’களல்ல! மாஃபியாக்கள்!
  • பிழைப்புவாதிகளின் புழுதி அரசியல்
  • “பயிற்சி மட்டும் இருந்தால், இந்திய ராணுவத்தைக் கொன்று பழி தீர்ப்பேன்”
  • ஜெர்மன் ஐக்கியம்: மேற்கு கிழக்கை முழுங்கியது
  • ‘பரிசுத்த ராஜா’ ஆட்சியில் பல்லாயிரம் கோடி சுங்கவரி மோசடி
  • அயோத்தி விவகாரத்தின் ஆதிமூலம்: பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சிகள்
  • அமெரிக்க அரசே செயலிழந்தது
    பாலஸ்தீன படுகொலைக்கு வக்காலத்து
    முதலாளிதுவத்தின் மகிமை
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 6

9. லெனினது அசாதாரண நிதானம்

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் லெனின் மிகுந்த தன்னடக்கத்தை மேற்கொண்டிருந்தார். மற்றவர்களை வெறி கொள்ளச் செய்த நிகழ்ச்சிகள் அவரிடம் அமைதியையும் கம்பிரத்தையும் தோற்றுவித்தன.

அரசியல் நிர்ணய சபையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரே கூட்டத்தில் இரண்டு கட்சிப் பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று கொலை வெறியுடன் மோதிக்கொண்டன. ஒரே கொந்தளிப்பும் குழப்பமுமான காட்சியாக விளங்கியது அது. பிரதிநிதிகள் போர்க் கோஷங்களை முழங்கினார்கள், சாய்வு மேஜைகளைத் தடதடவென்று தட்டினார்கள். பேச்சாளர்கள் அச்சுறுத்தல்களையும் சவால்களையும் கூறி ஆர்ப்பரித்தார்கள். இரண்டாயிரம் குரல்கள் இன்டர்நேஷனலையும் புரட்சி அணிநடைப் பாட்டையும் ஆவேசத்துடன் பாடின. இவைஎல்லாம் சூழ்நிலையை மின்னேற்றம் கொண்டது ஆக்கின. இரவு முதிர முதிர சபையின் மின்னோட்டம் மேலும் மேலும் அதிகரிப்பதாகத் தோன்றியது. பார்வையாளர் வரிசைகளில் இருந்த நாங்கள் அழிக் கம்பிகளைப் பற்றிக் கொண்டோம். எங்கள் பற்கள் நெறுநெறுத்தன, நரம்புகள் முறுக்கேறின. லெனினோ முன்வரிசை இடம் ஒன்றில் சலிப்படைந்தவர் போன்று உட்கார்ந்திருந்தார்.

கடைசியில் அவர் எழுந்து மேடையின் பின்புறத்துக்கு நடந்து போய் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்த படிகள் மீது கால்களை நீட்டி அமர்ந்தார். விசாலமான கூட்டத்தினர் மீது தற்செயலாகப் பார்வை செலுத்தினார். பிறகு “இத்தனை மனிதர்கள் நரம்புச் சக்தியை வீணாக்குகிறார்கள். நல்லது, ஒரு மனிதன் அதைக் கொஞ்சம் சேமிக்கப் போகிறான்” என்று சொல்பவர் போலக் கைமீது தலையைச் சாய்த்து உறங்கிவிட்டார். பேச்சாளர்களின் சொல்வன்மையும். கூட்டத்தினரின் ஆரவாரமும் அவர் தலைக்கு மேலே அலையடித்துப் பெருகின. அவரோ, அமைதியாகத் தூங்கினார். ஓரிரு தடவைகள் கண்களைத் திறந்து, இமைகளைக் கொட்டியவாறு இங்கும் அங்கும் பார்த்தார். பின்பு மறுபடி உறங்கலானார்.

முடிவில் எழுந்து சோம்பல் முறித்துவிட்டு முன்வரிசையில் தமது இடத்திற்குச் சாவகாசமாக நடந்தார். தருணம் வாய்த்ததென்று கண்டு ரீடும் நானும் கீழே நழுவி, அரசியல் நிர்ணய சபை நடவடிக்கைகளைப் பற்றி அவரிடம் கேள்விகள் கேட்டோம். அவர் அலட்சியமாகப் பதில் அளித்தார். பிரசார இலாக்காவின்¹⁸ வேலைகள் பற்றி அவர் விசாரித்தார். பிரசுரங்கள் டன் கணக்கில் அச்சிடப்படுவதாகவும் அவை உண்மையாகவே பல தடைகளை கடந்து ஜெர்மானியச் சைனியத்திற்குள் வினியோகமாகி வருகின்றன என்றும் நாங்கள் சொன்னதும் அவர் முகம் பளிச்சிட்டது. ஜெர்மானிய மொழியில் வேலை செய்வது எங்களுக்குக் கடினமாய் இருப்பதாகச் சொன்னோம்.

திடீரென்று உற்சாகத்துடன் “ஆ!” என்றார் அவர், கவச மோட்டாரில் எனது சொற்பொழிவு முயற்சியை நினைவுபடுத்தி, “ருஷ்ய மொழிப் பயிற்சி எந்த அளவில் இருக்கிறது? இந்தப் பேச்சுக்களை எல்லாம் இப்போது நீங்கள் புரிந்துகொள்ள முடிகிறதா?” என்று கேட்டார்.

“ருஷ்ய மொழியில் ஏராளமான சொற்கள் உள்ளனவே” என்று பட்டும் படாமலும் பதில் அளித்தேன். “அதுதான் விஷயம். நீங்கள் முறையாக அதைப் பயில வேண்டும். மொழியின் முதுகெலும்பை எடுத்த எடுப்பிலேயே முறித்துவிட வேண்டும். அதைப் பயில்வதற்கான எனது முறையை உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் லெனின்.

சாராம்சத்தில் லெனினது முறை இதுதான்: முதலில் எல்லாப் பெயர்ச்சொற்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு முறையே எல்லா வினைச்சொற்களையும் எல்லா வினையுரிச்சொற்களையும் பெயர்ச்சொற்களையும் எல்லாப் பிற சொற்களையும் கற்க வேண்டும். அப்புறம் இலக்கணம் முழுவதையும் வாக்கிய அமைப்பு விதிகள் யாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் எங்கும் எல்லோருடனும் மொழியைப் பேசிப் பழக வேண்டும். லெனினுடைய முறை முழுமையானது எனினும் அவ்வளவு நுட்பமானதல்ல என்பதை இதிலிருந்து காணலாம். சுருங்கக் கூறின் பூர்ஷ்வாக்களை வெல்வதற்கான அவரது முறை மொழியை வெல்வதற்காகக் கையாளப்படுவதே. எடுத்த காரியத்தில் தயவுதாட்சண்ணியமின்றி ஈடுபடுவதே இது. ஆனால் அவர் இதில் மிகுந்த உற்சாகம் காட்டினார்.

தமது இருக்கையிலிருந்து குனிந்து விழிகள் சுடர, அங்க ஜாடைகளால் தமது சொற்களை எங்கள் மனதில் பதிய வைத்தார். எங்கள் சக நிருபர்கள் பொறாமை ததும்பப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். லெனின் எதிர்த்தரப்பினரின் குற்றங்களை வன்மையாகத் தொலைத்தெடுக்கிறார், அல்லது சோவியத்தின் இரகசியங்களை வெளியிடுகிறார், அல்லது புரட்சிபால் இன்னும் அதிக உற்சாகம் காட்டும் படி எங்களைத் தூண்டி ஊக்குவிக்கிறார் என்று அவர்கள் நினைத்தார்கள் இத்தகைய நெருக்கடியின்போது, மாபெரும் ருஷ்ய அரசின் தலைவர் இவ்வளவு ஆற்றலை வெளியிடுவது இத்தகைய விஷயங்கள் குறித்தே இருக்க முடியும் என அவர்கள் எண்ணினார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது தவறு. ருஷ்ய முதலமைச்சர் அயல் மொழி ஒன்றைக் கற்பது எப்படி என்பது பற்றி வெறுமனே விளக்கிக் கொண்டிருந்தார். நட்பார்ந்த சிறு உரையாடலால் கிடைத்த பொழுபோக்கை ரசித்துக் கொண்டிருந்தார், அவ்வளவுதான்.

பெருத்த விவாதங்களின் இறுக்கத்தில், எதிர்த்தரப்பினர் தம்மை இரக்கமின்றி விளாசிக்கொண்டிருக்கையில் லெனின் கம்பீரமான அமைதியுடன் வீற்றிருப்பார். இந்த நிலைமையில் நகைச்சுவையைக் கூட காண்பார். நான்காவது காங்கிரஸில் பேசியபின், மேடையில் தமது இடத்தில் அமர்ந்து தமது ஐந்து எதிர்த்தரப்பினரின் தாக்குதல் களைச் செவிமடுத்தார் லெனின் தமக்கு எதிரான வாதம் நல்லதாகப்பட்டால் அவர் முகம் மலர்ந்து முறுவலிப்பார், கைதட்டலில் கலந்து கொள்வார். எதிர்த்தரப்பு வாதம் கேலிக்கிடமான தாகத் தோன்றினால் கிண்டலாகப் புள்ளகை செய்து கட்டைவிரல் நகங்களை ஒன்றோடொன்று அடித்து நையாண்டிக் கரகோஷம் செய்வார்.

10. அந்தரங்கப் பேச்சில் லெனின் நடத்தை

ஒரே ஒரு தடவைதான் அலுப்பின் குறியை நான் அவரிடம் கண்டேன் சோவியத்தின் நள்ளிரவுக் கூட்டம் ஒன்றின் பின் தமது மனைவியுடனும் சகோதரியுடனும் “நேஷனல் ஹோட்டல்” லிப்டில் புகுந்தார் லெனின் “மாலை வணக்கம்” என்று ஓரளவு அலுப்புடன் சொல்லிவிட்டு, “இல்லை, காலை வணக்கம் என்பதே சரி. பகலும் இரவும் முழுவதும் நான் பேசிக் கொண்டிருந்தேன். களைத்துப் போய்விட்டேன். ஒரு மாடிதான் ஏற வேண்டும் என்றாலும் லிப்டில் போகிறேன்” என்றார்.

ஒரே ஒரு தரம்தான் அவரிடம் பரபரப்பையும் அவசரத்தையும் கண்டேன். அது பிப்ரவரி மாதம் நேர்ந்தது. அப்போது “தவ்ரிதா அரண்மனை” மறுபடியும் காரசாரமான பூசலுக்கு அரங்கு ஆயிற்று. ஜெர்மனியுடன் போரைத் தொடர்வதா அல்லது சமாதானம் செய்து கொள்வதா என்பது பற்றி விவாதம் நடந்துகொண்டிருந்தது. திடீரென்று லெனின் தென்பட்டார். நீண்ட ஹாலைக் கடந்து பிரசங்க மேடையின் புகு வாயிலை நோக்கி விரைவாக, சுறுசுறுப்பாக அடி வைத்து அநேகமாகப் பாய்ந்தார். பேராசிரியர் சார்ல்ஸ் குந்த்ஸும் நானும் அவருக்காகப் பதிபோட்டுக் காத்திருந்தோம். “ஒரு நிமிடம் தவாரிஷ் லெனின்” என்று அவரைக் கூவி அழைத்தோம்.

அவர் தமது விரைந்த பாய்ச்சலை நிறுத்தி அனேகமாக இராணுவப் பாங்கில் கால்களைச் சேர்த்து நின்று, ஆழ்ந்த தோற்றத்துடன் தலை வணங்கிவிட்டு, “தயவுசெய்து இப்போது என்னைப் போக விடுங்கள், தோழர்களே.எனக்கு ஒரு வினாடி நேரம்கூட இல்லை. ஹாலுக்கு உள்ளே அவர்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். தயவு செய்து இந்தத் தடவை என்னை மன்னித்துவிடும்படி வேண்டிக் கொள்கிறேன்” என்றார். இன்னொரு முறை தலைவணங்கி, கைகுலுக்கிவிட்டு அவர் மறுபடியும் பாய்ச்சலாக விரைந்துவிட்டார்.

போல்ஷெவிக் எதிர்ப்பாளரான வில்காக்ஸ் என்பவர் அந்தரங்க உறவுகளில் லெனினுடைய வசீகரத் தன்மையைப் பற்றிக் கூறுகையில் பின்வரும் நிகழ்ச்சியை விவரிக்கிறார்: ஒரு ஆங்கிலேய வியாபாரி தமது குடும்பத்தினரை நெருக்கடியான நிலைமையிலிருந்து தப்புவிக்கும் பொருட்டு லெனினது சொந்த உதவியைக் கோரச் சென்றார். “இரத்த வெறி கொண்ட கொடுங்கோலர்’ என்று வருணிக்கப்பட்ட லெனின் சாந்தமான நடத்தையும், மரியாதையும் பரிவும் உள்ள தோற்றமும் கொண்ட மனிதர் என்பதையும் தம் சக்திக்கு உட்பட்ட எல்லா உதவியையும் செய்ய அவர் ஆர்வமாக முன்வந்ததையும் கண்டு பெருவியப்பு அடைந்தார் அந்த வர்த்தகர்.

உண்மையில் லெனின் அபரிமித மரியாதை காட்டுவதாகவும் மிகையான முறையில் காட்டுவதாகவும் சில வேளைகளில் தோன்றியது. இதன் காரணம் அவரது ஆங்கிலப் பிரயோகமாக இருக்கலாம். மரியாதையான உரையாடலுக்குரிய விரிவான வடிவங்களைப் புத்தகங்களிலிருந்து அப்படியே எடுத்து வழங்குவார் அவர். அல்லது மக்களுடன் பழகுவதற்கான அவரது முறையின் ஓர் அம்சமாக இது இருக்கலாம். ஏனெனில் மற்றத் துறைகளில் போலவே இந்தத் துறையிலும் லெனின் மிகுந்த திறமைசாலி. அவசியமற்ற மனிதர்களுக்காக நேரத்தை வீணாக்க அவர் மறுத்தார். அவரைச் சந்திப்பது எளிதல்ல. அவரது வரவேற்பறையில் பின்வரும் குறிப்பு காணப்பட்டது: “மிக ஏராளமான அலுவல்கள் உள்ள ஒரு மனிதருடன் தாங்கள் பேசப் போகிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுமாறு பார்வையாளர்கள் வேண்டப்படுகிறார்கள். தாங்கள் சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் விவரிக்கும்படி அவர்களை அவர் கேட்டுக்கொள்கிறார்.”

லெனினைச் சந்திப்பது மிகக் கடினம். ஆனால் ஒருமுறை அவரைச் சந்தித்து விட்டால் அவரது முழுமையான கவனத்தை நாம் பெற்று விடுவோம். அவரது திறமைகள் அனைத்தும் நமக்குக் கூச்சம் உண்டாக்கும் அளவுக்குத் தீவிரமான முறையில் நம்மீது ஒருமுனைப் படுத்தப்படும். மரியாதையாக, அநேகமாக உணர்ச்சி வெளிப்பாட்டுடன், முகமன் தெரிவித்த பிறகு அவர் நம்மை நெருங்குவார். அவருடைய முகம் நமக்கு ஓர் அடி தூரத்துக்கு மேல் இராத அளவுக்கு அவர் கிட்டத்தில் வந்துவிடுவார். உரையாடல் நடந்து கொண்டிருக்கையில் அடிக்கடி அவர் இன்னும் அருகே வந்து நமது விழிகளுக்குள் பார்வையைச் செலுத்துவார். நமது மூளையின் மிக ஆழத்திலுள்ள இடுக்குகளை அவர் துருவி ஆராய்வது போலவும் நமது ஆன்மாவுக்குள் கூர்ந்து நோக்குவது போலவும் தோன்றும். மலினோவ்ஸ்க்கிய் போன்ற சற்றும் நாணமற்ற பச்சைப் புளுகன் மட்டுமே அந்தப் பார்வையின் நிலைத்த தாக்குதலுக்கு எதிர்த்து நிற்க முடியும்.

ஒரு சோஷலிஸ்டை நாங்கள் அடிக்கடி சந்திப்பதுண்டு. 1905ஆம் ஆண்டு மாஸ்கோ எழுச்சியில் கலந்து கொண்டு தடையரண்களில் நன்றாகப் போரிடக் கூடச் செய்தவர். தொழிலும் வாழ்க்கையின் வசதிகளும் அவருடைய ஆரம்ப கால உளமார்ந்த ஈடுபாட்டிலிருந்து அவரை விலகச் செய்துவிட்டன. ஓர் ஆங்கிலச் செய்தித்தாள் சிண்டிகேட்டுக்கும் பிளெகானவின்¹⁹ யெதின்ஸ்த்வோ²⁰ பத்திரிகைக்கும் நிருபராக வேலை செய்து வந்த அவரது தோற்றம் செல்வச் செழிப்பைக் காட்டியது. பூர்ஷ்வா எழுத்தாளர்களை நேரத்தை வீணாக்குபவர்கள் என்று லெனின் கருதினார். ஆனால் தமது சென்ற காலப் புரட்சிச் செயல்களைப் பிரமாதப்படுத்தியதன் மூலம் இந்த மனிதர் லெனினுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதில் வெற்றி பெற்று விட்டார். லெனினைச் சந்திக்கப் போகும்போது அவர் ஒரே உற்சாகமாக இருந்தார். சில மணி நேரத்துக்குப் பிறகு அவர் கலக்கமுற்றிருக்கக் கண்டேன். இதன் காரணத்தை அவர் விளக்கினார்.

அலுவலகத்துக்குள் போனதும் 1905 புரட்சியில் எனது பங்கைக் குறிப்பிட்டேன். லெனின் என் பக்கத்தில் வந்து, “சரி தோழரே, ஆனால் இந்தப் புரட்சிக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அவருடைய முகம் எனக்கு ஆறு அங்குல தூரத்துக்கு மேல் இல்லை. அவருடைய விழிகளோ நேராக என் விழிகளுக்கு உள்ளே நோக்கிக்கொண்டிருந்தன. மாஸ்கோ தடையரண்களில் எனது பழைய நாட்களைப் பற்றிப் பேசியவாறு நான் ஓர் அடி பின்வாங்கினேன். ஆனால் லெனின் ஓர் அடி முன்னே வைத்து, என் விழிகளிலிருந்து பார்வையை அகற்றாமலே, “சரி தோழரே, ஆனால் இந்தப் புரட்சிக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என மீண்டும் கேட்டார். எக்ஸ்ரே போலிருந்தது அது. கடந்த பத்து ஆண்டுகளில் நான் செய்தவற்றை எல்லாம் அவர் கண்டுகொண்டது போன்று தோன்றியது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை. குற்றம் புரிந்த குழந்தை போல நான் தரையை நோக்க நேர்ந்தது. பேச முயன்றேன், ஆனால் பயனில்லை. நான் வெளியே வர வேண்டியதாயிற்று. சில நாட்களுக்குப் பிறகு இம்மனிதர் இந்தப் புரட்சிக்குத் தொண்டு செய்யத் தொடங்கி, சோவியத்துக்காக உழைப்பவர் ஆகிவிட்டார்.


18. 1918ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ருஷ்யக் கம்யூனிஸ்ட் (போல் ஷெவிக்) கட்சியில் நிறுவப்பட்ட அயல்நாட்டுக் குழுக்களின் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்டிருந்தது பிரசார இலாகா வெளிநாட்டு எழுத்தாளர்களும் பிரசாரகர்களும் கொண்டது இது. பல்வேறு பிரசுரங்களை இது வெளியிட்டு வினியோகித்தது ஏகாதிபத்திய லல்லரசுகளின் துருப்புக்களுக்கு இடையே பிரசாரம் நடத்தி வந்தது.

19. பிளெகானல் கிவ (1856-1918) ருஷ்யாவில் மார்க்சியத்தை முதன்முதலாகப் பரப்பியவர். பொருள்முதல்வாத உலகக் கண்ணோட்டத்தின் உறுதியான பிரசாரகர் ருஷ்ய சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் பிரதானச் செயலர்களில் ஒருவர். அதே சமயம், தமது தத்துவ, அரசியல் நோக்குகளிலும் நடைமுறைச் செயல்களிலும் அவர் ஆழ்ந்த தவறுகள் செய்தார். மென்ஷெவிக் தலைவர்களில் அவர் ஒருவராக இருந்தார். முதலாவது உலக யுத்தத்தின்போது சோஷலிஸ நாட்டுவெறிப் போக்கை மேற்கொண்டார்.

20. “ஒற்றுமை.”

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 அக்டோபர், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 22 | 1990 அக்டோபர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ராமஜென்ம பூமி விவகாரம்: விட்டுக் கொடுப்பது தீர்வாகாது!
  • இடைத்தேர்தல் தயாரிப்புகள்: கொள்கையற்ற கூட்டணியும் குறுக்குவழித் திட்டங்களும்
  • கரூர் வட்டாரத்தில்… திடீர் பிள்ளையார் கோவில்களின் பின்னணி!
  • கருணாநிதி நிர்வாக புலியா?
  • தொலைக்காட்சிக்கு தன்னாட்சி உரிமை: கத்தரிக்கோலுக்கு சுதந்திரம் கருத்துரிமைக்கு கல்லறை!
  • இடஒதுக்கீடு எதிர்ப்பு கலவரம்: சூத்திரதாரிகள் யார்?
  • தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து யாரால்?
  • விவசாயிகளுக்கு நாமம் அதிகாரிக்கு லாபம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • தென்னாப்பிரிக்கா: கருப்பினத்திவரிடையே மோதல் நிறவெறியர்களுக்கு ஆதாயம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 5

8. லெனினை இடைவிடாது சூழ்ந்திருந்த ஆபத்து

அவர் குறிப்பிட்ட அடுத்த தடவை வராமலே போய்விடும் போன்ற நிலைமை அநேகமாக ஏற்பட்டது. லெனின் ஏறியிருந்த கார் மண்டபத்திலிருந்து வெளியே வந்ததும் மூன்று தெளிவான வெடியோசைகள் ஒலித்தன. மூன்று குண்டுகள் அவருடைய காரை உடைத்து உள்புகுந்தன. லெனினுடன் அதே ஆசனத்தில் உட்கார்ந்திருந்த சுவிட்சர்லாந்துப் பிரதிநிதி பிளாட்டனை¹⁶ ஒரு குண்டு காயப்படுத்தியது. எவனோ கொலைகாரன் பக்கத்துத் தெருவிலிருந்து குறிவைத்தான், அது தவறிவிட்டது.

போல்ஷெவிக் தலைவர்கள் உயிரை இழக்கும் அபாயத்தால் எப்போதும் சூழப்பட்டிருந்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பூர்ஷ்வா சூழ்ச்சியாளர்களின் கவனத்துக்கு முதன்மையாக உரியவராக இருந்தவர் இயல்பாகவே லெனின்தான். அவரது ஊக்கமுள்ள மூளையிலேயே தங்கள் அழிவுக்கான திட்டங்கள் உருவாக்கப் படுகின்றன என்று அவர்கள் சொன்னார்கள். அந்த மூளையை ஓயச்செய்வதற்கு ஒரு குண்டு கிடைக்காதா! இதுவே புரட்சி விரோதிகளின் வீடுகளிலிருந்த பலிபீடங்களிலிருந்து நாள்தோறும் உளமாரச் செய்யப்பட்ட பிரார்த்தனை.

மாஸ்கோவில் இத்தகைய ஒரு வீட்டில் நாங்கள் அளவு மீறிய விருந்தோம்பலுடன் எப்போதும் வரவேற்கப்பட்டோம். பெரிய சாப்பாட்டு மேஜை மீது ஆவி உமிழும் ஸமோவார் வைக்கப்பட்டிருக்கும். பழங்களும், கொட்டைப் பருப்புக்களும், மதிமயங்கச் செய்யும் பணியார வகைகளும் ஆர்தர் ரான்ஸம்17  “மிட்டாய்கள்” என அழைத்த அவருக்கு மிக விருப்பமான தின்பண்டங்களும் மேஜைமேல் குவிந்திருக்கும் யுத்தத்தால் இந்த வீட்டாருக்கு மிகுந்த நலம் விளைந்தது. கள்ள வியாபாரத்தின் எல்லாக் கிளைகளும், இரகசிய வழியாக ஜெர்மனிக்குச் சரக்குகளை அனுப்புவதும், பிரமாண்டமான அளவில் நேர்த்தியாகக் கொள்ளை லாபம் அடிப்பதும் இந்தக் குடும்பத்தினரைச் செல்வச் சீமான்கள் ஆக்கியிருந்தன திடீரென எங்கிருந்தோ வந்து குதித்தார்கள் போல்ஷெளிக்குகள் இந்தக் குடும்பத்தினரின் செல்வச் செழிப்பினது அஸ்திவாரத்தையே இடித்துப் பெயர்த்தவாறு, அவர்கள் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார்கள் அவர்களோடு வாதாடிப் பயனே இல்லை. காட்டுத்தனமான பைத்தியக்காரப் பயல்கள்! எல்லாவற்றுக்கும், கள்ள வியாபாரம், கொள்ளை லாபம், எல்லாவற்றுக்குமே முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார்கள் அவர்கள்! இதைத் தவிர்க்கும் ஒரே வழி அவர்களுக்கே முற்றுப்புள்ளி வைப்பது தான். கழுவிலேற்று அவர்களை! சுட்டுத் தள்ளு! உச்சியில் லெனினிலிருந்து தொடங்கு.

முன்னேறிக்கொண்டிருந்த இந்த மாஸ்கோ கள்ள வியாபாரி இளைஞன் ஆழ்ந்த முறையில் எனக்கு அறிவித்தான்: ‘லெனினைக் கொல்லும் மனிதனுக்குக் கொடுப்பதற்காகப் பத்து லட்சம் ரூபிள்கள் இந்த நிமிடத்தில் என்னிடம் இருக்கின்றன இந்தக் காரியத்துக்காகத் தலைக்குப் பத்து லட்சம் ரூபிள்கள் ஒதுக்கி வைத்திருக்கும் இன்னும் பத்தொன்பது பெயரை நாளைக்கே நான் பிடிக்க முடியும்”

எத்தகைய அபாயத்தில் அவர் இருக்கிறார் என்பது லெனினுக்குத் தெரியுமா என்று எங்கள் போல்ஷெவிக் நண்பர்கள் ஐவரைக் கேட்டோம். “ஆமாம், அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர் கவலைப்படுவதில்லை சொல்லப் போனால் எதற்குமே அவர் உண்மையில் கவலைப்படுவதில்லை” என்றார்கள். எதற்கும் லெனின் கவலைப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

சுரங்க வெடிகளும், வீழ்கிடங்குகளும் நிறைந்த பாதையில் அவர் கிராமாந்தர கனவான் போன்ற மன அமைதியுடன் நடந்தார். மனிதர்களின் நரம்புகளை ஆட்டித் தளர்த்தி அவர்களுடைய முகங்களை வெளிறச் செய்த நெருக்கடிகளில் அவர் நிதானத்துடனும், பதற்றமின்றியும் திகழ்ந்தார். லெனினைக் கொல்லும் பொருட்டு வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகளும் புரட்சி விரோதிகளும் செய்த சூழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோல்வி அடைந்தன. ஆனால் 1918 ஆகஸ்ட் கடைசியில் சூழ்ச்சியாளர்கள் அநேகமாக வெற்றி பெற்றுவிட்டார்கள்.

மிஹெல்ஸோன் தொழிற்சாலையின் 15,000 தொழிலாளர்கள் முன் லெனின் சொற்பொழிவாற்றினார். பின்பு அவர் தமது காருக்குத் திரும்பிவந்து கொண்டிருக்கையில் ஒரு பெண் முதலமைச்சருக்கு ஏதோ விண்ணப்பம் சமர்ப்பிக்கும் பாவனையில் கையில் ஒரு காகிதத்துடன் ஓடிவந்தாள். காகிதத்தை வாங்குவதற்காக அவர் கையை நீட்டினார். அப்போது இன்னொரு பெண், கப்ளான் என்ற குலப்பெயர் உடையவள், மூன்று குண்டுகளை அவர் மேல் சுட்டாள். அவற்றில் இரண்டு குண்டுகள் அவர் உடலில் பாய்ந்து நடைபாதையில் அவரை வீழ்த்திவிட்டன. அவரைத் தூக்கிக் காரில் ஏற்றிக் கிரெம்ளினுக்குக் கொண்டு போனார்கள். காயங்களிலிருந்து குருதி வெள்ளமாய்ப் பெருகிக் கொண்டிருந்த போதிலும் அவர் மாடிப் படிகளில் தாமே நடந்து ஏறுவதாகப் பிடிவாதம் செய்தார். அவர் எண்ணியதைவிட அதிக அபாயகரமான காயங்கள் அவருக்கு ஏற்பட்டிருந்தன. பல வாரங்கள் அவர் சாவுக்கு வெகு அருகே இருந்தார். தமது இரத்த நாளங்களில் இருந்த காய்ச்சலுடன் போராடி வென்ற பிறகு எஞ்சிய பலத்தை நாடு முழுவதும் பரவியிருந்த பழிவாங்கும் காய்ச்சலைப் போராடித் தீர்ப்பதற்கு அவர் செலவிட்டார்.

ஏனெனில், தங்களது எல்லாச் சுதந்திரங்களுக்கும் அபிலாஷைகளுக்கும் சின்னமாக விளங்கிய மனிதரைக் கொடிய பிற்போக்குச் சக்திகள் தாக்கி வீழ்த்திவிட்டதால் சீறியெழுந்த மக்கள் பூர்ஷ்வாக்கள் மீதும் முடியரசுவாதிகள் மீதும் “செம்பயங்கர” முறைகளின் வடிவில் எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள்.

கமிஸார்கள் கொலை செய்யப்பட்டதற்கும், லெனினைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டதற்கும் பல பூர்ஷ்வாக்கள் தங்கள் உயிர்களை விலையாகச் செலுத்த நேர்ந்தது. மக்களின் சீற்றம் மிக ரௌத்திராகாரமாகப் பொங்கியபடியால் லெனின் மட்டும் ஆத்திரத்தை அடக்கிக்கொள்ளும்படி மக்களை வேண்டிக் கொண்டிராவிட்டால் நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்திருப்பார்கள் இந்த அமளிதுமளி முழுவதிலும் ருஷ்யாவில் யாவரினும் அமைதியாக இருந்தவர் லெனின்தான் என்று தயங்காமல் சொல்லலாம்.


16. பிளாட்டன். பி. சுவிட்ஸர்லாந்தின் இடதுசாரி சோஷலிஸ்ட் பின்னர் கம்யூனிஸ்ட் 1905இல் ரீகாவில் புரட்சி வேலை செய்தார். ருஷ்யப் புரட்சி இயக்கத்தில் பொதுவாகவே ஊக்கத்துடன் பங்காற்றினார். 1912-18இல் அவர் சுவிஸ் சோஷலிஸ்ட் கட்சிச் செயலாளராக இருந்தார். 1917, வசந்தகாலத்தில் சுவிட்ஸர்லாந்திலிருந்து ருஷ்யாவுக்கு லெனினது பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். சுவிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்தார்.

17. ஆர்தர் ரான்ஸம் பிரிட்டிஷ் லிபரல் பத்திரிகை ஒன்றின் நிருபர் சோவியத் ருஷ்யாவில் ஆறு வாரங்கள் என்ற நூலை எழுதியவர்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



இந்துக்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள் | மோடிக்கு தெரிந்து நடந்த தாக்குதல்? | தோழர் மருது

இந்துக்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்..
மோடிக்கு தெரிந்து நடந்த தாக்குதல்?
| தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 4

7. பொதுக் கூட்டச் சொற்பொழிவில் லெனின்

இரவுபகல் இடைவிடாத இந்தக் கடும் சோதனையின் கஷ்ட நஷ்டங்கள் இருப்பினும் லெனின் ஓயாமல் பொதுக் கூட்ட மேடைகளில் தோன்றிப் பேசி வந்தார். அவரது பேச்சுக்கள் இரத்தினச் சுருக்கமானவை. அறிவு விழிப்பு சுடர்பவை, நிலைமைகளைக் காரணங்காட்டி விளக்குபவை, பரிகாரங்களைக் குறிப்பவை, அவற்றைக் கையாளும் பொருட்டுக் கேட்போரைச் செயலுக்குத் தூண்டி அனுப்புபவை. கல்வியறிவற்ற வர்க்கத்தினரிடையே லெனினது சொற்பொழிவுகள் ஏற்படுத்திய உற்சாகத்தைக் கண்டு பார்வையாளர்கள் வியப்படைந்தார்கள். லெனினது உரைகள் விரைவாக,தடையின்றிப் பெருகும். புள்ளிவிவரங்கள் அவற்றில் ஏராளமாக நிறைந்திருக்கும். ஆனால் அவரது மேடைத் தோற்றம் போலவே அவரது உரைகள் பொதுவாக வண்ணக் கவர்ச்சியோ, காவிய வனப்போ அற்றவையாக இருந்தன. அவற்றை மனத்தில் வாங்கிக் கொள்வதற்கு இடையறாத சிந்தனை தேவைப்பட்டது. அவை கேரென்ஸ்கியின் உரைகளுக்கு நேர்மாறாக இருந்தன. கேரென்ஸ்கி தோற்றக் கவர்ச்சி உள்ளவர். சொல்வன்மை மிக்கப் பேச்சாளர், மேடைப் பிரசங்கிக்கு உரிய கலை நுட்பங்களும் ஆவேசங்களும் அவருக்குக் கைவந்தவை “அஞ்ஞானிகளும் எழுத்தறியாதவர்களுமான ருஷ்யர்களை” இந்தப் பண்புகள் யாவும் ஒரேயடியாக ஆட்கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றும். உண்மையிலோ, ருஷ்ய மக்கள் கேரென்ஸ்கியால் வசீகரிக்கப்படவில்லை. ருஷ்ய இயல்பில் உள்ள இன்னொரு முரண்பாடு இது. இந்தத் தேர்ந்த மேடைப் பிரசங்கியின் பகட்டான வாக்கியங்களையும் இரத்தினக் கச்சிதமான இடைநிறுத்தங்களையும் பொதுமக்கள் கேட்டார்கள். அப்புறம் எதிர்த்திசையில் திரும்பி லெனினுக்கு, நூலறிவும், தர்க்க முறையும் அளவார்ந்த சிந்தனையும் கோட்பாட்டுக்கு இயைந்த பேச்சும் வாய்ந்த லெனினுக்குத் தங்கள் விசுவாசத்தை அளித்தார்கள்.

தர்க்க இயலிலும் வாக்குவாதத்திலும் லெனின் தேர்ந்த நிபுணர். விவாதத்தில் அவரது பதற்றமின்மை எதிர்க்கட்சியினருக்கு எரிச்சலூட்டுவது விவாதத்தில் அவரது திறமை உச்ச கட்டத்தை எட்டிவிடும் என்று ஒல்கின்¹⁴ சொல்லுகிறார்: “லெனின் எதிரிக்குப் பதில் அளிப்பதில்லை. எதிரியின் வாதங்களைக் கூறுபோடுகிறார். அவர் மழிப்புக் கத்தி முனை போலக் கூர்மையானவர். அவருடைய அறிவு வியப்பூட்டும் நுண்மையுடன் செயல்படுகிறது. வாதப் போக்கில் உள்ள எல்லாப் பிழைகளும் அவருக்குப் புலனாகிவிடுகின்றன. தமக்கு ஏற்பில்லாத முதனிலைகளை அவர் நிராகரிக்கிறார், அவற்றிலிருந்து மிக மிக அபத்தமான முடிவுகளைப் பெறுகிறார். அதே சமயம் அவர் கிண்டலும் செய்கிறார். தமது எதிரியை அவர் எள்ளி நகையாடுகிறார்.விளாசுகிறார். தமது தாக்குதலுக்கு உள்ளானவன் அறிவிலி, மடையன், அகந்தைமிக்க அநாமதேயம் என்று கேட்பவர்களுக்குப் படும்படி செய்துவிடுகிறார். அவருடைய தர்க்கத்தின் ஆற்றல் கேட்பவர்களை ஆட்கொண்டுவிடுகிறது. அவருடைய அறிவு ஆவேசம் கேட்பவர்களை வசப்படுத்தி விடுகிறது”.

வாதத்தின் விரைந்த போக்கில் ஓரளவு இடையீடு அளிப்பதற்காக அவர் சிற்சில சமயங்களில் சிறிது நகைச்சுவையைக் கையாள்கிறார், அல்லது பின்வருவது போன்ற சுருக்கென்று தைக்கும் பதிற் சொற்களைப் பாய்ச்சுகிறார்: தோழர் காம்கோவின் கேள்விகள், ‘பத்து அறிவாளிகள் விடை அளிக்க முடிவதைவிட அதிகமான கேள்விகளை ஒரு மடையனால் கேட்க முடியும்’ என்ற மூதுரையை எனக்கு நினைவு படுத்துகின்றன.” போல்ஷெவிக் பத்திரிகை எழுத்தாளர் ராதேக் என்பவர் ஒருமுறை லெனினைப் பார்த்து, “பெத்ரோகிராதில் ஐந்நூறு தைரியசாலிகள் இருப்பார்களேயானால் நாங்கள் உங்களைச் சிறைக்கு அனுப்பிவிடுவோம்” என்று கூறியபோது லெனின் அமைதியாகப் பின்வருமாறு விடையளித்தார்: “சில தோழர்கள் சிறை செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வாய்ப்புக் கூறுகளை நீங்கள் கணக்கிட்டால் நீங்கள் என்னைச் சிறையில் இடுவதைவிட நான் உங்களைச் சிறையில் இடுவதே அதிகச் சாத்தியமானது என்பதைக் காண்பீர்கள்.” சில வேளைகளில் அவர் புதிய அமைப்புக்கு விளக்கம் தரும் சாதாரண நிகழ்ச்சி ஒன்றை விவரிப்பார்: குடியானவக் கிழவி நிலச்சுவான்தாரின் காட்டில் விறகு சேகரித்துக் கொண்டிருக்கிறாள். புதிய காலட் படைவீரனோ அவளைக் கொடுமைப்படுத்துபவனாக இன்றி அவளது காவலனாகப் பணியாற்றுகிறான்.

துன்ப அனுபவம், நிகழ்ச்சிகளின் அழுத்தம் ஆகியவை காரணமாக இந்த மனிதருக்குள் மறைந்திருக்கும் ஆவேசக்கனலும் உணர்ச்சிப் பெருக்கும் வழக்கமான கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டுவிட்டன போலத் தோன்றியது. ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் லெனின் ஓரளவு தயக்கமும், சிக்கலும் நிறைந்த வாக்கியங்களுடன் உரையைத் தொடங்கியதாகவும், உரை ஓரளவு தொடர்ந்த பிறகு அதிகத் தெளிவாக விளங்கும் வகையில் பேசினார் என்றும் அண்மையில் அவரது பேச்சைக் கேட்ட ஒருவர் கூறினார். லெனின் மேலும் மேலும் ஆற்றொழுக்காகவும், துடிதுடிப்புடனும் பேசத் தொடங்கினாராம். வெளிப்படையான பிரயாசை மிகுதியாக இன்றி மேலும் மேலும் அதிகரிக்கும் உள்கிளர்ச்சியுடன் அவர் உரையாற்றினாராம். அது வரவர அதிகப் பாதிப்பு விளைவித்ததாம். “கட்டுக்கு அடங்கிய ஒரு வகை உணர்ச்சிக் கனிவு அவரது ஆன்மாவில் ஊடுருவிப் பரவிற்று. அவர் பல சைகைகள் செய்தார், சில அடிகள் பின்னும் முன்னுமாக நடந்த வண்ணமாக இருந்தார். மிகுந்த ஆழமான, ஒழுங்கற்ற சுருக்கங்கள் அவரது நெற்றியில் ஏற்பட்டன. மிகத் தீவிரமான ஆழ்ந்த சிந்தனையை, அனேகமாகத் துன்புறுத்தும் மூளை உழைப்பைக் காட்டின இவை” என்று விவரித்தார் மேற்குறித்த அன்பர் லெனின் முதன்மையாக அறிவையே தமது இலக்காகக் கொண்டார். உணர்ச்சிகளை அல்ல. எனினும் கேட்டவர்கள் மீது அவரது சொற்கள் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து வெறும் அறிவுத் தன்மையின் உணர்ச்சி ஆற்றலை நாம் காண முடிந்தது.

ஒரே ஒரு தடவைதான் அவரது சொற்பொழிவு கேட்போருக்கு உற்சாகமூட்டாததை நான் கண்டேன். இது நடந்தது டிசம்பரில், மிஹாய்லவ்ஸ்க்கிய் குதிரையேற்றப் பயிற்சி மண்டபத்தில், புதிய செஞ்சேனையின் முதல் பிரிவு போர் முனைக்குப் புறப்பட்ட தறுவாயில் கொழுந்து விட்டெரியும் தீவத்திகள் மண்டபத்தின் அகன்று பரந்த உள்புறத்தில் ஒளிபரப்பின. நீண்ட வரிசைகளாக நின்ற சுவச மோட்டார்கள் அவற்றின் பிரகாசத்தில் ஏதோ விந்தை யான தொடக்கக் கால விகிருதிகள் போன்று தோற்றம் அளித்தன. புதிய படைவீரர்கள் விசாலமான அரங்கில் நெடுகிலும் மொய்த்திருந்தார்கள். மோட்டார்கள் மேல் தொற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஆயுத சாதனங்கள் குறைவாகவே இருந்தன. ஆனால் புரட்சி ஆவேசத்தில் அவர்கள் வலிமை மிக்கவர்களாயிருந்தார்கள். உடம்பில் சூடேற்றிக்கொள்வதற்காக அவர்கள் நடனமாடினார்கள், தரையில் கால்களை அடித்துக்கொண்டார்கள். உற்சாகம் பெறுவதற்காகப் புரட்சிக் கீதங்களையும் நாடோடிப் பாடல்களையும் பாடினார்கள்.

பெருத்த ஆரவாரம் லெனினது வருகையை அறிவித்தது. பெரிய கார்களில் ஒன்றில் ஏறி நின்றுகொண்டு அவர் பேசத் தொடங்கினார். அரை இருளில் கூட்டத்தினர் ஏறிட்டு நோக்கிக் கவனமாகக் கேட்கலாயினர். ஆனால் அவருடைய சொற்கள் அவர்களைத் தூண்டி ஊக்குவிக்கவில்லை. கரகோஷத்துக்கிடையே அவர் பேச்சை முடித்தார். எனினும் வழக்கமான உற்சாக ஆரவாரத்துக்கும் இந்தக் கரகோஷத்துக்கும் வெகுதூரம். அன்று அவரது பேச்சு உப்புசப்பற்றதாக இருந்தது. உயிர் வழங்குவதற்காகச் செல்லவிருந்த மனிதர்களின் மன நிலைக்கு அது ஏற்றதாக இல்லை. கருத்துகள் சாதாரணமாக இருந்தன. சொற்கள் வீரியமற்றிருந்தன. அவருடைய உணர்ச்சியின்மைக்குக் காரணங்கள் இருந்தன. மட்டுமீறிய உழைப்பும், வேறு விஷயங்களில் அவர் மனம் ஈடுபட்டிருந்ததுமே தான். எனினும் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் லெனின் பொருளாழம் அற்ற உரை ஆற்றினார் என்ற உண்மை இந்தக் காரணங்களால் மாறிவிடவில்லை. இந்த உழைப்பாளிகள் இதை உணர்ந்தார்கள். ருஷ்யப் பாட்டாளிகள் கண்மூடித்தனமான வீரவழிபாட்டினர் அல்ல. புரட்சியின் பாட்டனாரும் பாட்டியாரும் கண்டறிந்தது போல, பழைய அருஞ்செயல்களையும் மதிப்பையும் கொண்டே ஒருவர் காலந்தள்ள முடியாது. ஒருவர் இப்போது தாம் வீரர் என்று செயலில் நிரூபிக்காவிட்டால் வீரருக்கு உரிய புகழ்ச்சியை அவர் பெற முடியாது.

லெனின் காரிலிருந்து இறங்கியதும், “ஒரு அமெரிக்கத் தோழர் உங்கள் முன் பேசுவார்” என்று பொத்வோய்ஸ்க்கிய் அறிவித்தார். கூட்டம் உன்னிப்பாகக் கவனிக்கலாயிற்று நான் அந்தப் பெரிய காரில் ஏறிக்கொண்டேன்.

“அப்படியா, நல்லது. நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள். என்னை மொழிபெயர்க்கவிடுங்கள்” என்றார் லெனின்.

“வேண்டாம். நான் ருஷ்ய மொழியில் பேசுகிறேன்” என்று ஏதோ யோசனையற்ற உந்தலால் தூண்டப்பட்டு நான் பதில் அளித்தேன்.

ஏதோ வேடிக்கையை எதிர்பார்ப்பவர் போலப் பளிச்சிடும் கண்களுடன் லெனின் என்னை நோக்கினார். விரைவிலேயே வேடிக்கை தொடங்கி விட்டது. முன்கூட்டித் தயாரித்துக்கொண்ட தொடக்க வாக்கியங்களைப் பேசித் தீர்த்தபின் நான் தயங்கினேன், பேச்சை நிறுத்தினேன். மறுபடி ருஷ்ய மொழியில் பேச்சைத் தொடர்வதில் எனக்குச் சிரமம் ஏற்பட்டது. வெளிநாட்டினர் தங்கள் மொழியை என்னதான் சித்திரவதை செய்தாலும் ருஷ்யர்கள் மரியாதையைக் கடைப்பிடித்தவாறு சகித்துக்கொள்வது வழக்கம். கற்றுக்குட்டியின் முறையைப் பாராட்டாவிடினும் அவனது முயற்சியை அவர்கள் மதிப்பார்கள். எனவே எனது பேச்சுக்கு நடு நடுவே கைதட்டல்கள் நீண்ட அவகாசங்களை ஏற்படுத்தின. இன்னும் சிறிது தூரம் முன்னேறுவதற்குத் தேவையான சொற்களைக் கோவைப் படுத்திக் கொள்வதற்கு ஒவ்வொரு கைதட்டலின்போதும் எனக்கு நேரம் கிடைத்தது. பெருத்த நெருக்கடி எதிர்ப்பட்டால் நானே செஞ்சேனையில் படைவீரனாகச் சேர உவப்புடன் முன்வருவேன் என்று சொல்ல நான் விரும்பினேன். நான் ஒரு சொல்லுக்காகத் தட்டித் தடவியவாறு தயங்கினேன். லெனின் என்னைப் பார்த்து, “என்ன வார்த்தை உங்களுக்கு வேண்டும்” என்று கேட்டார். “படை வீரனாகச் சேர என்றேன்.”வ்ஸ்துப்பீத்” என்று அவர் சொல்லிக் கொடுத்தார்.

அதன்பிறகு எனக்குத் தடங்கல் ஏற்பட்டபோதெல்லாம் லெனின் தேவையான சொல்லை என்னிடம் வீசுவார். நான் அதைப் பிடித்து, எனது அமெரிக்க ஒலியழுத்தத்தினால் சிதைத்துத்தான் என்றாலும், கூட்டத்தினர் மீது எறிவேன். இந்த விஷயமும், தாங்கள் வெகுவாகக் கேள்விப்பட்டிருந்த சர்வதேசியத்தின் பெருமை பெற்ற சின்னமாக நான் அங்கே நின்றதும் சிரிப்புப் புயல்களையும் கைதட்டல், இடி முழக்கங்களையும் கூட்டத்தினரிடையே ஏற்படுத்தியது. இவற்றில் லெனினும் மனப்பூர்வமாகக் கலந்துகொண்டார்.

“நல்லது, ருஷ்ய மொழியில் இது தொடக்கம் வேறொன்றும் இல்லாவிட்டாலும், ஆனால் நீங்கள் இதில் முனைந்து பாடுபட வேண்டும் என்றார் அவர். பின்பு பெஸ்ஸி பீட்டியை¹⁵ நோக்கி, நீங்களும் ருஷ்ய மொழி கற்க வேண்டும். பரிமாற்றுப் பாடங்கள் கோரிச் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யுங்கள். அப்புறம் ருஷ்ய மொழியில் மட்டுமே படியுங்கள், எழுதுங்கள், பேசுங்கள், அமெரிக்கர்களுடன் பேசாதீர்கள். அதனால் எவ்வகையிலும் எந்த நன்மையும் உங்களுக்கு உண்டாகாது” என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டு, “அடுத்த தடவை உங்களைப் பார்க்கும்போது பரீட்சை நடத்துவேன்” என்றார்.


14. ஒல்கின் என்பது I.G. நொவொமேய்ஸ்க்கியின் புனைபெயர். அவர் கட்டுரையாளர். 1914இல் அவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்று சோவியத் யூனியனைப் பற்றி பல கட்டுரைகளும் நூல்களும் எழுதினார்.

15. பெஸ்ஸி பீட்டி – அமெரிக்கப் பத்திரிகை பெண் எழுத்தாளர். 1917ஆம் ஆண்டுப் புரட்சியின்போது அவர் ருஷ்யாவில் இருந்தார். ருஷ்யாவின் செவ்விதயம் என்ற நூலையும் அக்டோபர் புரட்சி பற்றிய பல கட்டுரைகளையும் எழுதினார்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 செப்டம்பர், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 21 | 1990 செப்டம்பர் 16-30, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பதவிப்போனாலும் பாசிசத்தன்மை மாறவில்லை!
  • கல்லூரி முதல்வரின் ரௌடித்தனம்! தொடரும் மாணவர் போராட்டம்!
  • வளைகுடா நெருக்கடி: அமெரிக்கக் கழுகு அடைகாத்ததன் விளைவு!
  • சென்னை மதக் கலவரம்: படர்ந்துவரும் ஆர்.எஸ்.எஸ் பார்த்தீனியம்
  • போபார்ஸ்: மீண்டும் புதிய ஆதாரங்கள்! திட்டமிட்ட குழப்பங்கள்!
  • வேலைவாய்ப்பு: அடிப்படை உரிமையாக்க அடிப்படியே இல்லை!
  • காவிரியில் நீரில்லை! விவசாயிகளுக்கும் வாழ்வில்லை
  • சத்துணவு ஊழியர்: ஏளனமான தாக்குதலின் இலக்கு! ஏப்பம் விடுவது ஊழியர்களா?
  • இடஒதுக்கீடும் ஓட்டுக்கட்சிகளும்
  • ‘தாழ்த்தப்பட்டோர்’ மீது சாதிவெறித் தாக்குதல்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 செப்டம்பர், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 20 | 1990 செப்டம்பர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பஞ்சாப்: பிரதமரின் பாதயாத்திரை
    காந்திய நாடகங்கள் – மோசடிகள் பலிக்காது
  • ராணிப்பேட்டையில் ஒரு வெள்ளைக்காடு!
  • “ஆட்டோ” சங்கர் சர்வகட்சி கிரிமினல்
  • இடஒதுக்கீடு ஆதரவும் எதிர்ப்பும்: பதவிவேட்டைக்கான மேல்சாதிசண்டை!
  • ஈழத்தில் இந்தியத் தலையீடு! அம்பலமாகும் ரகசியங்கள்!
  • சமூக பாசிஸ்டுகளாக போலிகள்!
  • உயிர்க் கொல்லிகளா? பூச்சிக் கொல்லிகளா?
  • போதைப் பொருட்கள் பெருக்கம்! அதிகாரிகள் பச்சைக்கொடி!
  • போலிச் சுதந்திரத்தை அம்பலப்படுத்தி…
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 3

5. கம்யூனிஸ நடைமுறை மக்களை சோவியத்துக்கள் தரப்பில் ஒன்றுதிரட்டுகிறது

பூர்ஷ்வா வெளியீடுகளில் லெனின் இதற்கு நேர் எதிராகவே சித்திரிக்கப்பட்டார். கொடும் பேயின் அவதாரம், தன்னலம் படைத்த, எல்லாவற்றையும் பறித்துக்கொள்ளும் அரக்கர் என்றே அவர் வருணிக்கப்பட்டார். எனினும் பொய்களின் இந்தப் போர்வைக்கு உள்ளிருந்து உண்மை லெனின் கொஞ்சங்கொஞ்சமாக வெளிப் பட்டார். லெனினும் அவரது கூட்டாளிகளும் மக்களுடன் அற்ப உணவைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்ற செய்தி ருஷ்யாவில் பரவியதும், வெகுஜனங்கள் அவர்கள் தரப்பில் ஒன்று திரண்டு விட்டார்கள்.

தனது அற்ப ரேஷனைப் பற்றி முணுமுணுக்க விரும்பும் உரால் பிரதேசச் சுரங்கத் தொழிலாளி, உணவு, துணிமணி, இருப்பிடம் ஆகியவற்றின் பொதுச் சேமிப்பிலிருந்து ஒவ்வொருவரும் சமபங்கே பெறுகிறார் என்பதை நினைவுபடுத்திக்கொள்கிறான். அப்படியிருக்கையில் தனது கறுப்பு ரொட்டித் துண்டைக் குறித்து அவன் முணுமுணுப்பானேன்? என்ன ஆனாலும் இந்த ரொட்டித் துண்டு, அளவில் லெனினுக்குக் கிடைப்பது போன்றதேதான். பட்டினி வேதனையுடன் அநீதியால் உண்டாகும் எரிச்சலூட்டும் வேதனையும் சேர்ந்துகொள்வதில்லை.

வோல்கா ஆற்றிலிருந்து வீசும் கடுங்குளிர் காற்றில் விறைத்து நடுங்கும் குடியானவப் பெண்ணுக்கு ஜாரின் இடத்திற்கு வந்துள்ள மனிதர் பற்றி அனேகமாக ஒன்றும் தெரியாது. ஆனால் அடிக்கடி அவர் வெப்பமூட்டப் பெறாத அறையிலேயே வேலை செய்கிறார் என்று அவள் கேள்விப்படுகிறாள். இப்போது அவள் குளிரால் வருந்தினாலும் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளால் துன்புறுவதில்லை.

நீஷ்னிய் நகரத்து எஞ்சினியர் அறுநூறு ரூபிள் மாதச் சம்பளம் தன் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அறவே போதாது என்பதைக் கண்டு மனக்கசப்பு அடையத் தொடங்குகிறான். கிரெம்ளினில் உள்ள மனிதர் இதைவிட அதிகச் சம்பளம் பெறுவதில்லை என்பது அப்புறம் அவன் நினைவுக்கு வருகிறது. இந்த எண்ணத்தால் அவனது குரோதம் அகன்றுவிடுகிறது.

நேச நாட்டினரின் பீரங்கிக் குண்டுகளுக்கு எதிர் நிற்கும் சோவியத் படைவீரன், பின்னணியில் இருந்தபோதிலும் லெனினும் குண்டுத் தாக்குதலுக்கு எதிர் நிற்கிறார் என்பதை அறிவான். ஏனெனில் ருஷ்யாவில் மற்ற எல்லாவற்றையும் போலவே அபாயமும் சமூக உடைமை ஆக்கப்பட்டுவிட்டது. அதனால் பாதிக்கப்படாதவர் ஒருவரும் இல்லை. பின்னணியில் கொல்லவும் காயப்படுத்தவும் பட்ட சோவியத் தலைவர்களின் சதவிகிதம் முனைமுகத்தில் கொல்லவும் காயப்படுத்தவும் பட்ட சோவியத் படைவீரர்களின் சதவிகிதத்தை விஞ்சிவிட்டது. லெனினது உடலில் கொலைகாரர்களின் குண்டுகள் இரு முறை பாய்ந்திருக்கின்றன. உரீத்ஸ்கியும்11 வொலதார்ஸ்க்கியும் டஜன் கணக்கான மற்றவர்களும் கொலை செய்யப்பட்டார்கள். எனவே செம்படை வீரனின் கண்களுக்கு லெனின் போரிலிருந்து ஒதுங்கித் தனிமையில் வாழ்பவர் அல்ல, போராட்ட நடவடிக்கையின் ஆபத்துக்களையும், கஷ்டங்களையும் பகிர்ந்துகொள்ளும் முனைமுகத் தோழர், எனவே படுகிறார்.

புல்லிட் என்பவரால் தயாரிக்கப்பட்ட, ருஷ்யாவுக்குச் சென்ற அமெரிக்க தூதுகோஷ்டியின் அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:

“இன்று லெனின் அநேகமாகத் தீர்க்கதரிசியாகவே மதிக்கப்படுகிறார். வழக்கமாகக் கார்ல் மார்க்ஸின் படத்தோடுகூட அவருடைய படம் எங்கும் தொங்குகிறது. நான் லெனினைக் காணச் சென்றபோது, குடியானவர்களின் பிரதிநிதிக் குழு ஒன்று அவருடைய அறையிலிருந்து வெளியேறும் வரை நான் சில நிமிடங்கள் காத்திருக்க நேர்ந்தது. தோழர் லெனின் பட்டினி கிடப்பதாக அவர்கள் தங்கள் கிராமத்தில் கேள்விப்பட்டார்களாம். லெனினுக்கு கிராமத்தின் பரிசாக எண்ணூறு “பூட்”12 தானியத்தை எடுத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்து அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்குச் சற்று முன்னர் குடியானவர்களின் இன்னொரு பிரதிநிதிக் குழு லெனினிடம் வந்திருந்ததாம். தோழர் லெனின் வெப்பமூட்டப் பெறாத அறையில் வேலை செய்வதாக அவர்கள் கேள்விப்பட்டார்களாம். ஒரு கணப்பையும் அதை மூன்று மாதங்கள் சூடுபடுத்தப் போதுமான விறகையும் எடுத்துக்கொண்டு வந்தார்களாம். இம்மாதிரிப் பரிசுகள் பெறும் ஒரே தலைவர் லெனின் மட்டுமே. அவர் அவற்றைப் பொதுச் சேமிப்பில் சேர்த்து விடுகிறார்”.

பொதுச் செல்வத்தையும் பொது வறுமையையும் ஒரே மாதிரிப் பகிர்ந்துகொண்டது முதலமைச்சரிலிருந்து பரம ஏழைக் குடியானவன் வரையில் அனுதாபம் என்ற பொது உறவை ஏற்படுத்திவிட்டது. இதனால் சோவியத் தலைவர்களுக்கு மக்களின் ஆதரவு மேலும் மேலும் அதிகமாகக் கிடைத்தது.

6. கம்யூனிஸ நடைமுறை மக்களின் நாடித்துடிப்பை அறிய லெனினுக்கு உதவுகிறது

மக்களுக்கு அவ்வளவு அருகில் வாழ்ந்தமையால் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பொதுஜன உணர்ச்சியின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் அறிந்திருந்தார்கள்.

மக்களின் உணர்ச்சிகளையும், மனப்பாங்கையும் அறிவதற்காக ஒரு விசாரணைக் குழுவை அனுப்புவது லெனினுக்குத் தேவைப்படவில்லை. உணவில்லாமல் சமாளிக்கும் மனிதன் பசித்த மனிதனின் மனநிலையை வெறுமே ஊகிக்க வேண்டியது இல்லையே. அவன் இதை அறிவான். மக்களுடன் சேர்ந்து பட்டினி கிடந்து, மக்களுடன் சேர்ந்து குளிரால் விறைத்த லெனின் அவர்களுடைய உணர்ச்சிகளை உணர்ந்தார், அவர்களுடைய எண்ணங்களை எண்ணினார், அவர்களுடைய விருப்பங்களை வெளியிட்டார்.

இந்த முறையிலேயே, அதாவது, பொது மக்களின் எண்ணங்களை நேரடியாகப் பிரதிபலிக்கும் சாதனமாகவும் அவற்றை வெளியிடும் ஒலிக்கருவியாகவுமே, தான் செயல்படுவதாகக் கம்யூனிஸ்ட் கட்சி உரிமை கொண்டாடுகிறது.

கம்யூனிஸ்டுகள் சொல்கிறார்கள்: “சோவியத்துக்களை நாங்கள் உண்டாக்கவில்லை. மக்களின் வாழ்க்கையிலிருந்து அவை தாமே உதித்தன. நாங்கள் ஒரு செயல்திட்டத்தை எங்கள் மூளையில் உருவாக்கி, பிறகு அதை வெளியில் எடுத்து மக்கள் மேல் ஒட்டி வைக்கவில்லை. மாறாக நேரே மக்களிடமிருந்தே நாங்கள் எங்கள் செயல்திட்டத்தை எடுத்துக்கொண்டோம். ‘நிலம் குடியானவர்களுக்கு’, ‘தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு’, ‘சமாதானம் உலகம்முழுவதற்கும்’ என்று மக்கள் கோரி வந்தார்கள். இந்தக் கோஷங்களை எங்கள் பதாகைகள் மீது பொறித்துக்கொண்டு மக்களுடன் சேர்ந்து அணிநடை நடந்து அதிகாரப் பீடத்தில் அமர்ந்தோம். மக்களைப் புரிந்துகொள்வதில்தான் எங்கள் வலிமை அடங்கியுள்ளது. உண்மையில் நாங்கள் மக்களைப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. நாங்களேதாம் மக்கள்”. இது சாதாரணத் தலைவர்களின் விஷயத்தில் நிச்சயமாக உண்மை. பெத்ரோகிராதில் நாங்கள் முதன்முதல் சந்தித்த ஐந்து கம்யூனிஸ்டுகள் போலவே இவர்கள் மக்களின் உடலும் உயிருமாகத் திகழ்ந்தார்கள்.

ஆனால் லெனின் போன்ற அறிவாளிகளோ? அவர்கள் எப்படி மக்களின் பெயரால் பேச முடியும்? வெகுஜனங்களின் உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் அவர்கள் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? அவர்களால் முடியவே முடியாது என்பதுதான் இதன் பதில். இதில் சந்தேகமே இல்லை. ஆனால் இன்னொரு விஷயமும் இவ்வளவே நிச்சயமானது. தல்ஸ்த்தோய்13 காட்டியதுபோல, மக்களின் வாழ்க்கையை வாழ்பவன் மக்களுடைய போராட்டங்களிலிருந்து தனித்து ஒதுங்கியிருப்பவனைவிட அவர்களை நெருங்கி அறிகிறான் என்பதே அது.

தமது எதிரிகளுக்கு இல்லாத ஒரு பெரிய நல்வாய்ப்பு லெனினுக்குக் கிடைத்திருந்தது. உரால் பிரதேசச் சுரங்கத் தொழிலாளி, வோல்கா பிரதேசக் குடியானவன், அல்லது சோவியத் படைவீரனுடைய உணர்ச்சிகளை அவர் வெறுமே அனுமானிக்க வேண்டியிருக்கவில்லை. அவர் அவற்றை அறிந்திருந்தார், ஓரளவு ஏறத்தாழ, நிச்சயமாக அவருடைய அனுபவங்களும் ஆகும். எனவே, எதிரிகள் இருட்டில் தட்டித்தடவிக் கொண்டிருந்த போது, லெனின் விஷயத்தை நன்கு அறிந்தவருக்கு உரிய நிச்சயத்துடன் விரைவாக முன்னேறினார்.

சோவியத் தலைவர்களால் கம்யூனிஸம் நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டது. சோவியத் அரசாங்கத்துக்கு ஆதரவாக வலிமையைத் திரட்டுவதற்கான ஆற்றல்மிக்க காரணிகளில் ஒன்றாகும். ருஷ்யாவுக்கு வெளியே இந்த உண்மை ஒன்று கவனிக்காமல் விடப்பட்டது, அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டது. ஆனால் லெனின் இதைக் குறைத்து மதிப்பிடவில்லை. கம்யூனிஸத்தை நடைமுறையில் மேற்கொள்வதே பாட்டாளி வர்க்க ராஜதந்திரிகள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரே உண்மையான வழி என்பதை அவர் அரசும் புரட்சியும் என்ற நூலில் விளக்கியிருக்கிறார். இது கடினமான வழி இதைப் பின்பற்றுவோர் அரிதாகச் சிலரே.


11. உரீத்ஸ்கிய், மி. ஸெ. (1873-1918) அக்டோபர் புரட்சியில் ஊக்கத்துடன் பங்காற்றியவர். பெத்ரோகிராத் ச்செக்காவின் (புரட்சி எதிர்ப்பு, மறைமுக நாசவேலை, கள்ள வியாபாரம் ஆகியவற்றை ஒடுக்குவதற்கான அகில ருஷ்யக் கமிஷன்) தலைவர் என்ற முறையில் பிற்போக்கை எதிர்த்துத் தீர்மானமான போராட்டம் நடத்தினார். 1918, ஆகஸ்ட் 30ந் தேதி புரட்சி எதிர்ப்பாளர்களால் கொல்லப்பட்டார்.

12. பூட் என்பது 16.38 கிலோகிராம் கொண்ட ருஷ்ய எடை (மொ-ர்).

13. தல்ஸ்தோய், லே. நி (1828-1910) மாபெரும் ருஷ்ய எழுத்தாளர்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மாணவர்களைப் பண்டமாகப் பார்க்கும் தனியார் கல்வி நிலையங்கள் | தோழர் வெற்றிவேல் செழியன்

மாணவர்களைப் பண்டமாகப் பார்க்கும் தனியார் கல்வி நிலையங்கள்
| தோழர் வெற்றிவேல் செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஆகஸ்டு, 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 19 | 1990  ஆகஸ்டு 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இடஒதுக்கீடு: மீண்டும் மேல்சாதி, மேட்டுக்குடிச் சண்டை
  • தேவிலால் நீக்கம் – தீருமா நெருக்கடி?
  • இலங்கையில் ‘ரா’வின் சூழ்ச்சிகள் புதிய தகவல்கள்
  • பம்பாய் பயஙகரவாத சட்டம்
    தொழிலாளர்களை ஒடுக்க புதிய சதி
  • பெனாசிர் ஆட்சிக் கவிழ்ப்பு
    மீண்டும் ஜியா சகாப்தம்
  • ‘மார்க்சிஸ்டு’கள் – மதவெறியர்கள் கூட்டணி
  • வீரமணி கும்பலின் பிழைப்புவாதம்
    சுயமரியாதை சொல்லுக்கு அவமரியாதை
  • வளைகுடா விவகாரம்: ஈராக்கின் அடாவடித்தனம்! அமெரிக்கவின் ஆதிக்கவெறி
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram