privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்அனுஷ்காவின் நாய்கடியும் ஜெயமோகனின் இலட்சியவாதமும்!

அனுஷ்காவின் நாய்கடியும் ஜெயமோகனின் இலட்சியவாதமும்!

-

கால-பைரவர்யக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படம் ‘இரண்டாம் உலகம்’. ஆர்யாவும், அனுஷ்காவும் ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஜார்ஜியாவில் நடந்தது. அப்போது நடைபெற்ற ஒரு சம்பவம் தெரியவரும் போது ஜெயமோகன் வயிற்றில் பால் வெள்ளம் பொங்குவது உறுதி.

படப்பிடிப்பு சமயத்தில் ஜார்ஜியாவை சேர்ந்த தெரு நாய் ஒன்று, யூனிட் ஆட்கள் எங்கு சென்றாலும் கூடவே சென்றிருக்கிறது. எனவே அனைவருக்கும் நண்பராகவும் மாறியிருக்கிறது. ஒருநாள் யூனிட்டை சேர்ந்த ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுவிட்டு, தன் வாயை டிஷ்யூ பேப்பரால் துடைத்து தூர எறிந்திருக்கிறார். இதைப் பார்த்த அந்த நாய், ஓடிச்சென்று அந்த டிஷ்யூ பேப்பரை கவ்வி சாப்பிட ஆரம்பித்திருக்கிறது.

உடனே அனுஷ்கா, பதறி விட்டார். டிஷ்யூ பேப்பரை சாப்பிட்டால், நாயின் உடல்நலம் பாதிக்கும். பேதியாகும். எனவே ஓடிச்சென்று நாயின் வாயை பற்றி திறந்திருக்கிறார். அத்துடன் தன் கையை நாயின் வாயில் விட்டு அந்த டிஷ்யூ பேப்பரை முழுமையாக எடுக்க முயன்றிருக்கிறார். நாய்க்கு இது பிடிக்கவில்லை. கேவலம் ஐந்தறிவு படைத்த உயிரினம்தானே? எனவே எங்கே தன் உணவை பறிக்க அனுஷ்கா முயல்கிறாரோ என்று நினைத்து கோபத்துடன் அவர் கையை கடித்து விட்டது.

அனுஷ்கா அசரவேயில்லை. வசிஷ்டரில் ஆரம்பித்து ரமணர் வரை சகல ஞானிகளும் அருள்வாக்கு வழங்கிய இந்துஞான மரபின் ஜீவகாருண்யத்தை அல்லவா உண்டு செறித்து வாழ்கிறார்? எனவே நாய் கடியையும் தன் பல்லைக் கடித்தபடி பொறுத்துக் கொண்டார். முழுமையாக டிஷ்யூ பேப்பரை நாயின் வாயில் இருந்து எடுத்த பிறகே தன் கையை வெளியே எடுத்தார். நாயை காப்பாற்றிய திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது. இதன் பிறகு நாய் கடித்ததால், தொடர்ந்து மூன்று நாட்கள் அனுஷ்கா ஊசி போட்டுக் கொண்டது தனிக்கதை.

ஒரு தெருநாய் அதுவும் சினிமா யூனிட்டின் எச்சில் பருக்கைகளை உண்டு வாழும் நாயின் கடியை பொறுத்துக்கொண்டு அனுஷ்கா செய்திருப்பது சாதாரணமான செய்கையல்ல. தனது வீட்டு நாயைக் குளிப்பாட்டவில்லை என்று வீட்டு டிரைவரை அடித்தும் பிற்காலத்தில் ஹைதராபாத்தின் ப்ளூ கிராஸ் தலைவராக உயர்ந்த முன்னாள் நடிகை அமலாவின் செய்கையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய ஒன்றுதான் அனுஷ்காவின் தியாகம்.

அனுஷ்காவின் இந்த தியாகத்தை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளும் ஜீவாத்மா மற்றும் பரமாத்மா இந்த உலகில் ஜெயமோகன் மட்டுமே என்பது நமது உறுதியான கணிப்பு. மாறுபடுபவர்கள் ஆதாரங்களை காண்பிக்கலாம்.

இந்தியாவில் இலட்சியவாதத்தின் மறைவு குறித்து அடிக்கடி துக்கப்படுபவர் ஜெயமோகன். இலட்சியவாதம் என்றால் என்ன என்று ஜெயமோகன் அளவுக்கு அறிவில்லை என்றாலும் வாசகருக்காக ஒரு இலக்கணம் தர முயற்சி செய்கிறோம். அதாவது கறாரான விழுமியங்களுடன், புற உலகு பேதமிட்டு பிரிந்தாலும், அர்ப்பணிப்புடன் வாழும் இலட்சியவாதிகளின் அரசியல், சமூக, ஆன்மீக நடைமுறைகள்தான் இலட்சியவாதம். இந்த இலட்சியவாதிகள் அநேகமான எல்லா நிறுவனங்களோடும் முரண்பட்டாலும் தமது இ.வாதத்தை விடமாட்டார்கள்.

ஆனாலும் இந்த இலட்சியவாதிகள் கையெடுத்து கும்பிடும் வண்ணம் வரலாற்றின் பக்கங்களுக்குள் மட்டும்  ஒளித்து வைக்கப்படுவதாக ஜெயமோகன் வருந்துகிறார். அண்ணா ஹசாரேவின் எழுச்சியும், பிறகு வீக் எண்ட் புரட்சியாளர்கள் அவரைக் கைவிட்டதும் அவருக்கு பெரும் துக்கத்தை கொடுத்திருக்கிறது. அதே போல குஜராத்தில் அமுல் ராஜ்ஜியத்தை கட்டியமைத்த குரியனின் மறைவும் அவரை சொல்லணாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இடையில் ஜெயமோகன் அன்புடனும், ஆன்மீக அர்ப்பணிப்புடனும் வளர்த்த ஹீரோ எனும் நாயும் சமீபத்தில் இறந்திருக்கிறது.

ஆனால் இந்த நாயின் சோகத்திலிருந்தும், இலட்சியவாதத்தின் மறைவு குறித்தும் இனி ஜெயமோகன் வருந்தத் தேவையில்லை. இரண்டின் அறத்தையும் வியப்பூட்டும் விதத்தில் அனுஷ்கா உயிர்ப்பித்திருக்கிறார்.

அனுஷ்கா அடிப்படையில் ஒரு யோகா டீச்சர் என்பது ஒரு முக்கியமான விசயம். அதன்படி ஜெயமோகன் மட்டுமே விளக்கும் அருகதை கொண்ட பதஞ்சலி யோக சூத்திரத்தை கற்று செரித்த ஒரு ஞானம் அனுஷ்காவிடம் உண்டு. அதனடிப்படையிலேயே தனது கட்டழகை பராமரிப்பதோடு பிரபல தமிழ் வலைப்பதிவர்கள் உள்ளிட்டு மிகப்பெரும் இரசிகர்களையே கட்டிப்போட்டிருக்கிறார். தென்னிந்தியாவின் இப்போதைய நடிகைகளில் ஏன் இந்திய அளவில் கூட அவரது அழகுக்கும் அறிவுக்கும் ஈடான ஒருவர் கிடையாது என்பது சத்தியமான உண்மை.

அத்தகைய அனுஷ்கா ரசிய நாட்டிலே ஒரு தெருநாயின் கடியைப் பொறுத்துக் கொண்டு அதைக் காப்பாற்றியிருக்கிறார் என்றால் இதைக் கேள்விப்படும் ரசிகர்கள் அதன்படி தங்களது தெருநாய்களை காப்பாற்ற துணிவார்கள் என்பது நிச்சயம். இப்படி நடிகையாக இருந்தாலும் ஒரு ஞானப்புரட்சியை, ஜீவகாருண்யத்தை தனது இமேஜை வைத்து பரப்புகிறார் என்றால் இந்தியாவில் இலட்சியவாதம் ஏன் மறைய வேண்டும்? அதுவும் மற்றவர் காமக்கண்ணால் பறிக்கும் அழகைக் கொண்டிருப்பவர், அதையே நடிப்பு என சம்பாதிப்பவர் செய்யும் செயலா இது? கண்டவர் விண்டிலர்.

அனுஷ்கா, காப்பாற்றியது நாயை அல்ல. பைரவரை. அதுவும் கால பைரவரை. எனவே காலத்தை அழியாமல் அனுஷ்கா பார்த்துக் கொண்டிருக்கிறார்… என்று அர்த்தம் சொல்லி, இடம் சுட்டி பொருள் விளக்கி, குறியீட்டுடன் ஜெயமோகன் எழுதுவார் என மலையாள பகவதியின் மேல் சத்தியம் செய்வதும் கொலைக் குற்றமாகவே கருதப்படும்.

இவ்வளவு பெரிய மன நிம்மதியையும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் நடிகை அனுஷ்கா, தனக்கு கொடுப்பார் என ஜெயமோகன் துளியும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவரையே நம்பி இயங்கும் ‘விஷ்ணுபுர வாசகர் வட்டம்’ கூட தராத பரிசு இது. என்ன செய்ய, அவரது மொழியில் சொல்வது என்றால், தற்செயலாக நிகழ்பவைதானே வரலாற்றை எழுதுகிறது?

கமான் ஜெயமோகன், உங்களது விசைப்பலகையை தட்டுங்கள்! அறம் வரிசையில் அனுஷ்காவின் நாய்க்கடியை மகுடமேற்றும் மந்திரசக்தி உங்கள் கைகளுக்குத்தான் உண்டு!

ஜெய் ஹிந்த்!

_____________________________________________________________

படம் – காலபைரவர் வாயில் பிரசாதம் வைத்து, எடுக்கும் பக்தை படஉதவி கூகிள்

______________________________________________________