privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைஇஸ்லாமிக் ஸ்டேட் கொல்கிறது - கொயாரா மருத்துவர்கள் காப்பாற்றுகிறார்கள்

இஸ்லாமிக் ஸ்டேட் கொல்கிறது – கொயாரா மருத்துவர்கள் காப்பாற்றுகிறார்கள்

-

ஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ்.ஐ.எல் (Islamic State of Iraq and the Levant) குழுவிடமிருந்து ஈராக்கில் 2016, ஆகஸ்டு மாதம் மீட்கப்பட்ட கொயாரா நகரில் தான் அந்தப் பிரதேசத்தின் முக்கியமான மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. முன்பு ஐ.எஸ்.ஐ.எல் குழுவினரால் காயமுற்ற தமது போராளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட இந்த மருத்துவமனைக்கு தற்போது அந்தப் பகுதி முழுவதும் இருந்து சிசேரியன் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள இராக்கியர்கள் வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் சுமார் 10 குழந்தைகள் இங்கே பிறப்பதாகச் சொல்கிறார் மருத்துவர் இமான் நோரி: “பத்தில் இரண்டு பிரசவங்கள் சிசேரியன் மூலம் நடக்கின்றது. உள்ளடங்கிய பிரதேசங்களில் அமைந்துள்ள முகாம்களில் இருந்து வரும் பெண்களுக்கே சிசேரியன் தேவைப்படுகின்றது. ஏனெனில், பொதுவாக அந்தப் பெண்களுக்கு சரியான ஊட்டச்சத்து உணவு கிடைப்பது இல்லை என்பதோடு நீண்ட தொலைவு நடந்தே வருவதாலும் உளவியல் ரீதியான அதிர்ச்சிக்கும் உள்ளாகியிருக்கின்றனர்” என்கிறார் மருத்துவர் இமான்.

சுமார் 450 இராக்கியர்களுடன் செயல்பட்டு வரும் “பெண்கள் மற்றும் சுகாதாரத்துக்கான சர்வதேச கூட்டுத்தாபனம்” (The Women and Health Alliance International) என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தான் வடக்கு ஈராக்கில் பிரசவ கால சுகாதார சேவை அளித்து வரும் ஒரே அமைப்பு.

முன்பு ஐ.எஸ்.ஐ.எல் குழுவால் மொசூல் நகரில் நடத்தப்பட்ட மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்த மருத்துவர் மரியம் நாசர், இங்கே மருத்துவ வசதிகளும் போதுமான உபகரணங்களும் இல்லை என்று குறிப்பிடுகிறார். கொயாரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதில் அவருக்கு மிகவும் பெருமை; “பெரும்பாலும் மனிதாபிமானப் பணியாளரைப் போல் உணர்கிறேன்.. ஏனெனில் இங்கே பெண்கள் தான் ஐ.எஸ்.ஐ.எல் அமைப்பால் பாதிக்கப்பட்டனர்” என்கிறார்.

கொயாரா மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக செயல்படுவதற்கு சில மாதங்களுக்கு முன் ஐ.எஸ்.ஐ.எல் குழுவால் கைப்பற்றப்பட்டது.

ஐ.எஸ்.ஐ.எல் குழுவால் கொயாரா நகரம் விடுவிக்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆன பின்னும், ஒவ்வொருவரின் மனதிலும் போர் உறைந்துள்ளது. இராணுவ வாகனங்கள் வரையப்பட்ட சுவர் ஒன்றை கடந்து செல்லும் இளையோர்.

ஐம்பத்தைந்து வயதான செவிலியர் மரியல் அலி ஹுசைன் கொயாரா நகரைப் பூர்வீகமாக கொண்டவர். “இப்போதும் பொதுமக்களிடையே கலந்துள்ள முன்னாள் ஐ.எஸ்.ஐ.எல் போராளிகள் மக்களைப் போல் நடித்துக் கொண்டு சிகிச்சைக்கு வருகின்றனர்” என்கிறார் மரியம்.

இந்தப் பிராந்தியத்தில் கொயாரா மருத்துவமனை ஒன்றில் தான் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எல் கட்டுப்பாட்டில் இந்நகரம் இருந்த போது நோயாளிகளிடம் கட்டாயமாக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து மருத்துவ பணியாளர் ஒருவர் விளக்கினார் : மருத்துவமனையில் நுழைய 2,000 ஈராக்கிய தினார் (110 ரூபாய்), ஒரு நாளுக்கான படுக்கை கட்டணம் 5,000 தினார் (273 ரூபாய்), சிசேரியன் சிகிச்சைக்கு 75,000 தினார் (4,160 ரூபாய்).

ஒவ்வொரு நாளும் புதிதாக சுமார் 10 பத்துக் குழந்தைகளின் பிறப்பு பதியப்படுகின்றது.

சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட தாய்மார்கள் 24 மணி நேரத்திற்கு பிரசவ வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர். இயற்கையாக குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் ஓரிரண்டு மணி நேரங்களுக்குப் பின் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

இருபத்தைந்து வயதான மருத்துவர் மரியம் நாசர் (நடுவில் நிற்பவர்) உள்ளிட்டு பெரும்பாலான மருத்துவப் பணியாளர்கள் ஐ.எஸ்.ஐ.எல் கட்டுப்பாட்டில் இருந்த போதும் பணிபுரிந்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எல் பிடியில் இருந்து நகரம் மீட்கப்பட்ட உடனேயே கட்டாயமாக்கப்பட்டிருந்த கருப்பு நிற பர்தாவை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார் மருத்துவர் மரியம்.

ஐ.எஸ்.ஐ.எல் பெண்களுக்கு கடுமையான உடைக்கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. உடல் முழுவதும் மறைக்கும் பர்த்தாவும், கண்களை மட்டும் வெளிக்காட்டும்படியான அபயாவும், கைகளுக்கும் கால்களுக்கும் கருப்பு நிற உறைகளும் கட்டாயமாக்கப்பட்டிருந்தன.

ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த போது ஒரு நாள் சிவப்பு நிற காலணியோடு நகருக்குச் சென்ற கொயாரா மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியரான ஷாஹாத் முதானாவுக்கு 50,000 (2,750 ரூபாய்) தினார்கள் அபராதமாக விதிக்கப்பட்டது

பத்தொன்பது வயதான சாரா இப்ராஹிம் தனது மூன்றாவது குழந்தையின் பிறப்புக்காக காத்திருக்கிறார். அவரது முதல் இரண்டு குழந்தைகள் பிறந்து சில மாதங்களிலேயெ இறந்து விட்டன.

2016 ஆகஸ்டு மாதம் கொயாரா நகரம் ஈராக்கிய படைகளால் விடுவிக்கப்பட்ட போது இந்த மருத்துவமனையின் ஒரு பகுதியை வெடிவைத்துத் தகர்த்தனர் ஐ.எஸ்.ஐ.எல் அமைப்பினர். “இன்னும் சில மாதங்களில் மருத்துவமனையின் மேல் தளங்கள் இரண்டையும் புனர் நிர்மாணம் செய்ய முடியும் என்று நம்புகிறேன்” என்கிறார் மருத்துவமனையின் இயக்குனரான மருத்துவர், மாஜித் ரமதான்.

“கொயாராவின் நிலைமை சீரடையாமலே உள்ளது” எனக் குறிப்பிடும் ஹுசென், “எந்த நேரமும் கருவுற்ற பெண்ணைப் போல் நடித்து வயிற்றில் குண்டுகளைக் கட்டி வந்து தகர்த்து விடும் வாய்ப்புகள் உள்ளன” என்கிறார்.

கொயாராவில் இருந்து தப்பிச் செல்லும் வழியில் இருந்த எண்ணை வயல்களை தீயிட்டுக் கொளுத்தி விட்டுச் சென்றனர் ஐ.எஸ்.ஐ.எல் தீவிரவாதிகள். இதன் காரணமாக நகர மக்கள் எந்நேரமும் ஆபத்தான புகையைச் சுவாசித்துக் கொண்டும் கருமேகங்களாய்த் திரண்டுள்ள புகையின் கீழுமே வாழ்ந்து வருகின்றனர்.

கொயாராவின் சுவர்கள் இன்னமும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடி உள்ளிட்டு ஆக்கிரமிப்பின் அசிங்கமான கதைகளைச் சுமந்து கொண்டுள்ளன. அவற்றில் சில அடையாளங்களின் மேல் தற்போது வெள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நன்றி : அல்ஜசீரா
– தமிழாக்கம்: முகில்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க