ஈழத் தமிழருக்கு அடுத்தபடியாக தமிழ்ப் பதிவுகளை அதிகம் படிக்கும் ஐ.டி. நண்பா, இந்தப் பதிவு உனக்காக எழுதப்படுகிறது. அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி கடல் தாண்டி இந்தியாவையும் பாதித்திருப்பதை உன் அனுபவத்தில் உணர்ந்திருப்பாய். சத்யம், இன்போசிஸ், விப்ரோ, எண்ணற்ற மென்பொருள், பி.பி.ஓ, கால் சென்டர் நிறுவனங்களில் ஆட்குறைப்பு அரங்கேறி வருகிறது.
சம்பள உயர்வு, இன்சென்டிவ்ஸ், அத்தனையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. கசக்கி பிழிபடுவதற்கு தயாராக இல்லாத ஊழியர்கள் தயவு தாட்சண்யமின்றி தூக்கி எறியப்படுகின்றனர். புதியவர்கள் சில ஆயிரம் குறைவான சம்பளங்களுக்கு வேறெந்த சலுகையுமின்றி சேர்க்கப்படுகின்றனர். அதிகரித்து வரும் டாலர் மதிப்பினால் முந்தைய ஒப்பந்தப்படி போடப்பட்ட வரவினால் ஏற்படும் நட்டத்தை ஊழியர் தலையில் கட்டுவதற்கு நிறுவனங்களின் மனிதவளத் துறை மேலாளர்கள் புதிது புதிதாக யோசித்து வருகின்றனர். பணிச்சுமையும், நேரச்சுமையும் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. முன்பு போல அலுவலக நேரத்தில் பதிவுகளை ஹாயாக படிப்பதற்கு உனக்கு இனி நேரமிருக்காது. இந்த பாதிப்பு ஏன் என்று நீ யோசித்ததுண்டா?
அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் போதுமான அளவு வரவில்லை, அதனால் முதலாளிகளுக்கு இலாபம் குறைந்திருக்கிறது என்பதால் இந்த நெருக்கடிகள் என்று நீ பதிலளிக்கக்கூடும். அது உண்மையெனும் பட்சத்தில் அமெரிக்கா நன்றாக இருந்த காலங்களில் உன்னுடைய முதலாளி அந்த இலாபத்தில் ஏன் பங்களிக்கவில்லை என்ற கேள்விக்கு நீ பதிலளிக்க வேண்டும். மாதம் ஒன்றிற்கு பல ஆயிரங்கள் சம்பளம் என்பதைத் தாண்டி உன் நிறுவனத்தின் வரவு செலவு குறித்து உனக்கு ஒன்றும் தெரியாது என்பதோடு அது குறித்து நீயும் பெரிய அளவுக்கு கவலைப் பட்டிருக்கமாட்டாய்? அது தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று நீ கேட்கக்கூடும். அது தெரியா விட்டால் உனது நிச்சயமற்ற எதிர்காலத்தின் அபாயம் உனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் அதிர்வுகளை உன்னால் சரி செய்ய முடியாது.
அது கிடக்கட்டும் அமெரிக்கா இருமினால் இந்தியா ஏன் வாந்தி எடுக்கவேண்டும்? அமெரிக்க பொருளாதாரம் பாதிப்படைந்தால் இந்தியாவுக்கு ஏன் நெறி கட்டவேண்டும்? ஏதோ அமெரிக்கா நம்மைப் போன்ற பலரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என உன்னில் சிலர் நினைக்கக் கூடும். இல்லை நண்பா, அமெரிக்காதான் பல ஏழை நாடுகளைச் சுரண்டி வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சுரண்டலில் அமெரிக்காவின் நடுத்தர வர்க்கமும் அவதிப்படுகிறது என்பதையும் நீ புரிந்து கொள்ளவேண்டும். அமெரிக்காவில் ஒரு மணிநேர வேலைக்கு ஒரு தொழிலாளிக்கு கொடுக்கப்பட வேண்டிய பணத்தில் சிறு அளவுதான் இந்தியாவில் அதே வேலைக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் ஒரு அமெரிக்க தொழிலாளிக்கு வரவேண்டிய வேலை பறிபோகிறது என்பதோடு உனக்கு கொடுக்கப்படும் குறைவான சம்பளத்தின் மூலம் உன்னை உருவாக்கிய இந்த நாடும் சுரண்டப்படுகிறது. இப்படி இரு பக்கமும் இலாபம் அடிப்பதால்தான் அமெரிக்கா பணக்காரர்களுக்கான நாடாக இருக்கிறது.
இப்போது அமெரிக்காவில் உள்ள பிரச்சினை என்ன? பல நிறுவனங்கள் திவாலாகியிருக்கின்றன. திவலானதற்குக் காரணம் பொருளாதாரத்தில் அந்த நிறுவனங்கள் நடத்திய சூதாட்டம்தான். இந்த சூதாட்டம் பொழுது போக்கிற்காக நடந்தது அல்ல, அமெரிக்க மற்றும் உலக மக்களின் வருமானத்தை தூண்டில் போட்டு அள்ளுவதற்கு நடந்த பகல் கொள்ளை. இந்தப் பகல் கொள்ளையினால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய இந்தியாவும் இழக்க வேண்டுமென்றால் அந்த லாஜிக் சரியா? அமெரிக்காவில் சில முதலாளிகள் வருமானம் பார்க்க நாம் பலிகடா ஆகவேண்டுமென்றால் இந்த அடிமை நிலை இந்தியாவிற்கு நல்லதா? அமெரிக்க சிக்கலுக்கு இந்தியா உதவி செய்வது கடமை என்று உனது பிரதமர் மன்மோகன் சிங் ஜால்ரா தட்டுவதைப் பார்த்து உனக்கு கோபம் வந்ததா இல்லை மகிழ்ச்சி அடைந்தாயா?
அமெரிக்காவின் தும்மலால் மும்பைப் பங்கு சந்தைக்கு விக்கல் ஏற்பட்டு 20,000த்தில் இருந்த புள்ளி இப்போது 10,000த்தில் தள்ளாடுகிறது. உடனே நிதியமைச்சர் வங்கிகளின் ரொக்க இருப்பைக் குறைத்து, வட்டி விகிதத்தையும் குறைத்து ரிசர்வ் வங்கி மூலம் இரண்டரை லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தையில் சூதாடுவதற்கு இறக்கி விட்டிருக்கிறார். இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை இந்தியாவில் தொடர்ந்து போட்டு விளையாடுவார்களாம். பத்தாயிரம் புள்ளி இழப்பில் வந்த நட்டம் அனைத்தும் உன்னைப் போன்று கொஞ்சம் ஆசைப்பட்டு பங்குச் சந்தையில் சேமிப்பை முதலீடு செய்த நடுத்தர வர்கக்த்திற்கு ஏற்பட்டது என்றால் நிதியமைச்சரோ வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்து கவலைப்படுகிறார். இந்த இரண்டரை இலட்சம் கோடி ரூபாயும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படப் போவதில்லை. உன்னைப் போன்ற சற்று காசு உள்ளவர்கள் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏமாறாலம் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவதற்குத்தான் இந்த நாடகம் நடத்தப்படுகிறது என்பது உனக்குத் தெரியுமா?
பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆரம்பிப்பதற்குப் பணமில்லை என்று எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு இப்போது முதலாளிகளைக் காப்பாற்றுவதற்கு மட்டும் இவ்வளவு பெரிய பணம் எங்கிருந்து வந்தது, உனக்குத் தெரியுமா? இதெல்லாம் உனக்கேன் தெரியப் போகிறது? அதிக சம்பளம் கொடுத்து அலுவலகப் பணியில் கசக்கிப் பிழிந்து, ஓய்வு நேரத்தையும் பொழுது போக்கு என்ற பெயரில் எடுத்து கொண்டு கொடுக்கப்பட்ட பணத்தை எப்படிச் செலவழிப்பது என்று அதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து உன்னை மொத்தத்தில் ஒரு அரசியல் தற்குறியாக மாற்றிவிட்டார்களே என்ன செய்வது? இதனால் நீ கோபப்படலாம். ஆனாலும் மற்றவர்களைப் போல ஐ.டி.துறையில் விவாகரத்து மலிந்து விட்டது, பாலியல் சீரழிவு அதிகரித்து வருகிறது என்று நான் கவலைப்படவில்லை. மாறாக அரசியல் ரீதியில் நீ சீரழிக்கப்பட்டிருப்பது குறித்துத்தான் வருத்தமடைகிறேன்.
வருடத்திற்கு சில இலட்சம் சம்பளம், வருடத்திற்கு ஒரு முறை வெளிநாட்டு சுற்றுலா, ஒரு இந்திய சுற்றுலா, இருமாதத்திற்கு ஒரு தடவை பிக்னிக், மாதந் தோறும் கேளிக்கைப் பூங்காக்கள், வாரந்தோறும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடிகர் நடிகைகளை கூட்டி வந்து சாட்டில் பேசுவது, புதிய படத்திற்கு முதல் காட்சிக்கு அழைத்துச் செல்வது, வெறுமனே ஜாலி மட்டுமல்லாமல் சில நவீன சாமியார்களைக் கூட்டி வந்து தியானம் சொல்லிக் கொடுப்பது, உடலை இளைக்க வைக்க வகுப்புக்கள், அலுவலகத்திலேயே விளையாடுவதற்கு உள்ளரங்குக் களங்கள், கார், அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்கு ஏற்பாடு செய்வது, பல நுகர்வுப் பொருட்களை மாதத் தவணையில் வாங்குவதற்கு அலுவலகத்திற்கே வந்து செய்யப்படும் விற்பனை மேளாக்கள், மாதக் கூப்பன் கொடுத்து பேரங்காடிகளில் பொருள் வாங்குவது, இது போக தாகமெடுத்தால் கோக், பசியெடுத்தால் பிஸா, போரடித்தால் சத்யம் தியேட்டர், இப்படித்தானே நண்பா நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? இந்த வசதிகளை வழங்கிய உலகமயமாக்கம்தான் இதே காலத்தில் சில இலட்சம் விவசாயிகளை தற்கொலை செய்ய வைத்திருக்கிறது. இந்த முரண்பாட்டுக்கு உன்னுடைய பதில் என்ன?
உன்னுடைய ஆடம்பரங்களெல்லாம் நிலையானவை அல்ல நண்பா, அவை எந்நேரமும் உன்னிடமிருந்து பறிக்கப்படலாம். உன் பணிச்சூழல் எப்படி இருக்கிறது என்று பார். வேலைக்கு நேர வரையறை கிடையாது, பதவி ஏற்றத்துக்கும், இறக்கத்துக்கும் எந்த அளவு கோலும் இல்லை, நன்றாக வேலை செய்பவர் நிறுவனத்தை விட்டே துறத்தப்படுவதும், நன்றாக வேலை செய்யாவிட்டாலும் நிறுவனத்தால் தக்கவைக்கப்படுவதற்கும் எந்த தர நிர்ணயமும் இல்லை, ஊழியர் கொள்கையில் பின்பற்றப்படும் இரக்கமற்ற தன்மை, மற்ற தொழிற்சாலைகளில் இருக்கும் எந்த தொழிற்சங்க உரிமையும், பாதுகாப்பும், சலுகைகளும் ஐ.டி.நிறுவனங்களில் செல்லுபடியாகாது என்ற நிலை, நூற்றுக்கணக்கில் ஆட்குறைப்பு செய்தாலும் மறுமொழியின்றி அதை ஏற்றுக் கொள்ளும் அடிமைத்தனம், எந்த நிறுவனத்திலும் நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிச்சயமற்ற சூழல், இன்னும் எத்தனை அநீதிகளுக்கு மத்தியில் நீ வேலை செய்கிறாய் என்பதை நான் சொல்லி விளக்கத் தேவையில்லை. ஆனால் இவையெதனையும் நீ அடிமைத்தனம் என்று கருதவில்லை. அதுதான் கவலைக்குறியது நண்பா!
உன்னை விட பல மடங்கு குறைவாக சம்பளத்தை வாங்கும் ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளி கூட தன்னுடைய பணிப்பாதுப்புக்காக, சுயமரியாதைக்காக தொழிற்சங்கம் கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். நிர்வாகம் பல தடைகளை அரசின் ஆதரவோடு அமல்படுத்தினாலும் அந்தத் தொழிலாளர்கள் தம்முடைய போராட்டத்தில் உறுதியாக நிற்கின்றனர். இப்போது ஐ.டி துறையில் உனக்கிருக்கும் நிச்சயமற்ற நிலைக்கும், சுயமரியாதை அற்ற சூழலை எதிர்ப்பதற்கும் உனக்கிருக்கும் ஓரே வழி தொழிற் சங்கம் கட்டுவதுதான். உன்னைத் திருத்துவதற்கு மட்டுமல்ல உன்னுடைய முதலாளிகளின் அட்டூழியத்தை தட்டிக் கேட்பதற்கும் அது ஒன்றுதான் வழி. இன்றைய உனது வாழ்க்கை நாளைக்கே கூட இல்லாமல் போய்விடலாம். அமெரிக்காவின் ரத்த ஓட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் உன்னுடைய நிறுவனம் உன்னுடைய நலனுக்காக இயங்குபவை அல்ல. உன்னுடைய நலனும் இந்தியாவின் நலனும் ஒன்றிணையும் ஒரு பொருளாதாரத்தில்தான் உனக்கு மட்டுமல்ல தற்கொலை செய்யும் விவசாயிகளுக்கும் விடிவைத் தரும் வாழ்க்கையை உருவாக்க முடியும். அதற்கு முதல் படியாக உன்னுடைய இடத்தில் தொழிற்சங்கத்தை முதலில் கட்டு. பிறகு பார் அதனுடைய வலிமையை.
ஐ.டி.துறை நண்பா, உனக்கு ரோஷம் வேணுன்டா !
தொழிற்சங்கம்,செங்கொடி,உண்டியல் இதெல்லாம் இல்லாமல் நீங்க அரசியல்
நடத்த முடியாது. அதற்காக அடுத்தவனை
உசுப்பிவிட்டு நீங்க போயிடுவிங்க.ஆனா
ஐ.டி மக்கள் முட்டாள் இல்ல.
நல்ல கட்டுரை.
//அது தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று நீ கேட்கக்கூடும். அது தெரியா விட்டால் உனது நிச்சயமற்ற எதிர்காலத்தின் அபயாம் உனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் அதிர்வுகளை உன்னால் சரி செய்ய முடியாது.//
நச் !!
இதை உடனே பார்க்கவும்
http://orumaipadu.blogspot.com/2008_03_25_archive.html
ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க…….
என்னடா இது ரொம்ப கருத்து சொல்றாரே நு பார்த்தா கடைசியில தான் தெரியுது இவரோட சிவப்பு கலரு….
செங்கொடி நண்பா இந்த தொழிர்சங்கத்த வெச்சு நீங்க என்ன இதுவரைக்கும் சாதிசுருகீங்கன்னு கொஞ்சம் சொன்ன என்ன மாதிரி ரோஷம் கெட்ட பசங்க எல்லாரும் கேட்டுப்போம்???
போங்கண்ணா போய் ஏதாவது நல்ல வேலையா பாருங்க….
//அது தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று நீ கேட்கக்கூடும். அது தெரியா விட்டால் உனது நிச்சயமற்ற எதிர்காலத்தின் அபயாம் உனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் அதிர்வுகளை உன்னால் சரி செய்ய முடியாது//
அது தெரிந்து நீங்கள் இதுவரை என்ன செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா?. நீங்கள் ஐ.டி. துறையில் இல்லை என்பது தெளிவு. அதிர்வு கிதிர்வு என்று உளற வேண்டாம். உங்கள் தொழிற்சங்கம் மூலமாக என்ன சாதித்தீர்கள் என்றாவது சொல்ல முடியுமா? சமூகத்தில் மேல் மட்ட மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த சவுகர்யங்கள் ஐ.டி. துறை வந்த பிறகு மிடில் கிளாஸ் மக்களும்க்கும் கிடைத்தது. அது உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் ஒரு ஜெலுசில் சாப்பிடவும்.
//அரசியல் ரீதியில் நீ சீரழிக்கப்பட்டிருப்பது குறித்துத்தான் வருத்தமடைகிறேன்// ஆஹா. ஐ.டி. துறையை மட்டும் அரசியல் ரீதிரில் சீரழிக்கிறார்கள். உடனடியாக அதை எதிர்த்து நீங்கள் மட்டும் தலைமைச் செயலகம் முன்பாக ஒரு வாரம் உண்ணா விரதம் இருங்கள்.
அமெரிக்காவைப் பொறுத்த வரை ஐ.டி. துறையில் அமெரிக்கனுக்கும், இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் ஒரே சம்பளம் தான். ஆனால் அவுட் சோர்ஸிங்கினால் அவர்களுக்கு காசு மிச்ச்மாகிறது என்பது உன்மைதான். அப்படி அவுட் சோர்ஸிங் செய்யப்படும் இந்தியாவில் ஐ.டி. மக்களுக்கு கிடைக்கும் சம்பளம் என்பது மற்ற துறைகளில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பது தெரியும் தானே?.
ஐ.டி. துறையில் அமெரிக்காவில் கொடுக்கப்படும் அதே அளவு சம்பளம் இந்தியாவில் இந்தியனுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று கூவுவது அறிவீனம். அமெரிக்காவில் நியூ ஜெர்ஸீயில் ஒரு இரண்டு பெட்ரூம் அபார்ட்மென்ட்டின் வாடகை 1350 டாலர்கள். ஆனால் இந்தியாவில் அதே அளவு வீட்டின் வாடகை பெரு நகரங்களிலேயே ஒரு 10000 – 15000 ரூபாய்தான் இருக்கும். எல்லாமே ரிலேடிவ் அய்யா.
உங்களின் தொழிற்சங்கத்தில் மும்பையில் கொடுக்கப்படும் அதே அளவு கூலி நெய்க் காரப்பட்டியில் கொடுக்கப்பட வேண்டும் என்று போராடுவீர்களா?
//இந்தப் பகல் கொள்ளையினால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய இந்தியாவும் இழக்க வேண்டுமென்றால் அந்த லாஜிக் சரியா// நீங்கள் ரொம்ப கவலைப்பட வேண்டாம். இந்த இழப்பினால் அமெரிக்கா இழந்ததை கம்பேர் செய்யும் போது இந்தியா இழந்தது குறைவுதான்.
//அமெரிக்காவின் நடுத்தர வர்க்கமும் அவதிப்படுகிறது என்பதையும் நீ புரிந்து கொள்ளவேண்டும்// அமெரிக்க நடுத்தர வர்க்கத்துக்காகவும் தொழிற்சங்கம் தொடங்கினால் எல்லாம் சரியாகப் போய்விடும்.
போன வாரம் பசுமை விகடனில் படித்த ஒரு கட்டுரையில் காம்ரேடுகள் டிராக்டர் விவசாயத்துக்கு தடை செய்து கொடி பிடித்தார்களாம். அய்யா, விவசாயத்துக்கு கூலி ஆளும் கிடைக்காது ஆனால் இயந்திரங்களும் பயன் படுத்தக்கூடாது. வெளங்கிடும்யா வெளங்கிடும்.
//அதிகரித்து வரும் டாலர் மதிப்பினால் முந்தைய ஒப்பந்தப்படி போடப்பட்ட வரவினால் ஏற்படும் நட்டத்தை ஊழியர் தலையில் கட்டுவதற்கு நிறுவனங்களின் மனிதவளத் துறை மேலாளர்கள் புதிது புதிதாக யோசித்து வருகின்றனர்// அய்யோ அய்யோ. அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்தால் அமெரிக்க வேலையை செய்யும் இந்தியர்களுக்கு அதிக ரூபாய் கிடைக்கும். 3 டாலருக்கு ஏறுமதி செய்து கொண்டிருந்த பனியனுக்கு 120 ரூபாய் முதலில் கிடைத்தால் இப்போது 150 ரூபாய் கிடைக்கும்.
//நூற்றுக்கணக்கில் ஆட்குறைப்பு செய்தாலும் மறுமொழியின்றி அதை ஏற்றுக் கொள்ளும் அடிமைத்தனம், எந்த நிறுவனத்திலும் நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிச்சயமற்ற சூழல்,// யாருக்கு வேண்டும் நிரந்தர வேலை? நிறுவனம் நல்லபடி நடந்தால் ஊழியர்களுக்க் கொடுக்கும். இல்லையென்றால் குறைத்துக் கொடுக்கும். அதுவும் இல்லயென்றால் ஆட்குறைப்பு செய்யும். அதுதான் வாழ்க்கை.
இன்னும் எழுதனும். ஆனா இப்போதைக்கு இது போதும். மிச்சத்த மத்தவங்க செய்வாங்க.
இது ஒரு தற்காலிக சூழ்நிலைதான், மீண்டும் ஈ சீ ஆறும் , ஒ எம் ஆறும் புத்துணர்வு பெறும்.
ஐ டி நிறுவனகள் வந்த பிறகுதான் அலுவலக அரசியல், அனுபவம் நிறைந்த ஊழியர்கள் புத்தாக படித்து வந்த ஊழியர்களை புறக்கணித்தல், அலுவலக ஜால்ராக்கள், திறமை இல்லாவிட்டலும் வருடா வருடம் நிரந்தர முன்னேற்றம் போன்ற பழைய சடங்குகள், பழைய அழுக்குகள் அலுவலகங்களில் ஒழிந்தது.
ஐ டி, பீ பி ஒ, பன்னாட்டு நிறுவனங்கள் வந்த பிறகுதான் ஊழியர்களிடம் பரந்த மனப்பான்மை வந்தது.
நீங்கள் இந்த மாறுதல் வேண்டாம் என்கிறீர்கள். இப்போதும் சென்னையில் விப்ரோ, டி சி எஸ் , ஷெல் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அளிக்கும் அலுவலக பேருந்தை பாருங்கள். அதோடு அசோக் லேய்லாந்து, எண்ணூர் பௌந்டரிஎஸ், பேருந்தையும் பாருங்கள்.
ஐ டி நிறுவனங்கள் தான் முதல் முதலாக ஊழியரை ஒரு மனிதனாக, சொத்தாக நினைத்தன. ஹ்யுண்டை, எண்ணூர் பௌண்டரி, முருகப்பா குழுமங்கள் ஒழ்ஜியர்களை மற்றும் ஒரு இயந்திரமாகவே எண்ணின.
பொறாமை வேண்டாம் நண்பரே.
குப்பன்_யாஹூ
//ஐ டி, பீ பி ஒ, பன்னாட்டு நிறுவனங்கள் வந்த பிறகுதான் ஊழியர்களிடம் பரந்த மனப்பான்மை வந்தது//
சரியாக சொன்னீர்கள் குப்பன். பரந்த மனப்பான்மை மட்டுமல்ல, குழுவாக இயங்குதல் என்ற கான்செப்டே இப்போதுதான் மக்களுக்கு தெரியும்.
முந்தைய அரசு அலுலவகல தலைமுறையில் ஒன்று அவர் சொல்ல பிறர் அடிபணிந்து கேட்பார்கள், அல்லது அவர்கள் பிறரிடம் அடிபணிந்து கிடப்பார்கள். சம அளவில் நட்புடன் சக அலுவலரை அவர்களுக்கு சமமாக மதிக்கவே தெரியாது. ஒரு வித தான் தோன்றித்தனத்துடன் செய்ல்படுவார்கள். சொல்வது தவறே என்றாலும் அதையும் புகழ்ந்து சொம்பு தூக்கினால்தான் ஒருவன் முன்னேர முடியும் என்ற நிலை இருந்தது.
அதை இந்த பிற்போக்குவாதிகள் அதுதான் வாழ்க்கை முறை என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது இந்த மாற்றம் நதுக்கே என்றாலும் இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததற்கு காரணம், “இரண்டு காசு சம்பாதிப்பவனை விட நாலு காசு சம்பாதிப்பவன் புத்திசாலி மற்றும் பெரிய ஆள்” என்ற அடிமை மனப்பான்மையே. என்றைக்காவது மேலதிகாரி சொல்வதில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டி இருக்கிறார்களா? ஆனால் ஐ.டி. யில் மட்டுமே குழு மனப்பான்மையுடன் வேலை செய்து வரும் கிரெடிட்டை மொத்த முழுவும் அனுபவிக்கும் நிலை உள்ளது. (இதிலும் அடுத்தவன் வேலையின் கிரெடிட்டை திருடுபவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் மற்ற துறைகளை கம்பேர் செய்யும் போது மிக மிக குறைவு).
இவர் பேசுவது அடிமைத்தனத்தைப் பற்றி. கொடுமைடா சாமி.
To some extent I support your view.
//வருடத்திற்கு சில இலட்சம் சம்பளம், வருடத்திற்கு ஒரு முறை வெளிநாட்டு சுற்றுலா, ஒரு இந்திய சுற்றுலா, இருமாதத்திற்கு ஒரு தடவை பிக்னிக், மாதந் தோறும் கேளிக்கைப் பூங்காக்கள், வாரந்தோறும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடிகர் நடிகைகளை கூட்டி வந்து சாட்டில் பேசுவது, புதிய படத்திற்கு முதல் காட்சிக்கு அழைத்துச் செல்வது, வெறுமனே ஜாலி மட்டுமல்லாமல் சில நவீன சாமியார்களைக் கூட்டி வந்து தியானம் சொல்லிக் கொடுப்பது, உடலை இளைக்க வைக்க வகுப்புக்கள், அலுவலகத்திலேயே விளையாடுவதற்கு உள்ளரங்குக் களங்கள், கார், அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்கு ஏற்பாடு செய்வது, பல நுகர்வுப் பொருட்களை மாதத் தவணையில் வாங்குவதற்கு அலுவலகத்திற்கே வந்து செய்யப்படும் விற்பனை மேளாக்கள், மாதக் கூப்பன் கொடுத்து பேரங்காடிகளில் பொருள் வாங்குவது, இது போக தாகமெடுத்தால் கோக், பசியெடுத்தால் பிஸா, போரடித்தால் சத்யம் தியேட்டர், இப்படித்தானே நண்பா நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்?//
என்னங்க இதெல்லாம்? கொஞ்சம் பிட்டு போட சொன்னா எக்கச் சக்கமா பிட் போட்டுட்டீங்க….
சிரிப்பு தாங்கல
நடுவில ஏதோ நல்லது சொல்ல வரீங்கன்னு நினைச்சா, கடைசியில எண்ணத்துல மண்
// அதற்கு முதல் படியாக உன்னுடைய இடத்தில் தொழிற்சங்கத்தை முதலில் கட்டு. பிறகு பார் அதனுடைய வலிமையை.//
இவ்வளவு நாளாக இருந்த தொழிற்சங்கள் என்ன செய்தன? ஏன் இந்த விவசாயத் தற்கொலைகளை இந்த சங்கங்களால் தடுக்க முடியவில்லை?? வெறும் கோஷம் போடுவதாலும் கொடி பிடிப்பதாலும் எதுவும் நடந்துவிடாது
நண்பர்களே,
தொழிற்சங்கம் என்றாலே, கொடி, உண்டியல், கோஷம் என்று சலித்துக்கொண்டு ஹிந்து பத்திரிகைக்கு வாசகர் கடிதம் எழுதும் பழம் பெரிசுகள் கட்சியில் நின்று கொண்டு பேசுவதால் நீங்கள் எதை சாதிக்கப் போகிறீர்கள்? எட்டுமணிநேரப் பணி, ஈ.எஸ்.ஐ, பி.எப், சி.எல், ஈ.எல் விடுமுறைகள், கான்டீன் வசதி என இன்று நீங்கள் அனுபவிக்கும் பல உரிமைகளை உலகமெங்கும் உள்ள தொழிலாளர்கள் போராடி, உயிரிழந்து தியாகம் செய்து பெற்றனர். ஆர்வமும், நேர்மையும் இருப்பின் இணையத்தில் மே தின வரலாறு பற்றி தேடி எடுத்து படித்துப் பார்க்கவும். இந்த வரலாறே அமெரிக்காவில் இருந்துதான் தொடங்குகிறது.
ஐ.டி.துறையில், தான் மட்டும் வாழமுடியும் என்ற தனிநபர் வாதம்தான் முதலாளிகளால் மூடநம்பிக்கை போல கற்றுத்தரப்படுகிறது. கருணையின்றி, எந்தக் காரணமுமின்றி பல ஊழியர்கள் பல நிறுவனங்களிலிருந்து தூக்கி எறியப் பட்டிருக்கின்றனர். மற்றவர்களுக்கு நடந்தது நமக்கு மட்டும் நடக்காது என்று நம்புவது நமக்கு மட்டும் சாவே வராது என்று கருதுவது போலத்தான். இதுவரை மற்ற தொழிற்சங்கங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று கருதும் பட்சத்தில் நீங்கள், சாதிக்கக் கூடிய சங்கங்களை கட்டுவதை யார் தடுக்கப் போகிறார்கள். தனிநபராக இருப்பதை விட சங்கமாக ஒன்றாக இணைந்தால் அது எதைப் பெற்றுத் தருமோ நிச்சயம் சுயமரியாதை என்றால் என்ன என்பதைக் கற்றுத்தரும்.
இன்றைக்கும் நாம் சமூகம் எனப்படும் மக்கள் கூட்டமாக இருப்பதினால்தான் வாழ்கிறோம். நான் தனிநபராகத்தான் கிழிப்பேன் என்றால் நாம் செல்லவேண்டிய இடம் யாரும் அண்டாத காடு அல்லது பாலைவனம்.வாழ்க்கையில் இருக்கும் இந்த உண்மை நமது அலுவலகப் பணிக்கும் பொருந்தும். அதே சமயம் சி.பி.எம், சி,பி.ஐ போன்ற போலிக் கம்யூனிஸ்டுகள் தொழிற்சங்கங்களை அரசியலற்ற முறையில் போனசுக்காக மட்டும் குரல் கொடுக்கும் கூட்டமாக மாற்றியிருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதே சமயம் நேர்மறையில் வீச்சாக செயல் படும் தொழிற்சங்கங்கள் உலகெங்கும் இருக்கத்தான் செய்கின்றன.
உங்கள் அளவுக்கு படிப்பும், ஊதியுமும் , வாழ்க்கைத் தரமும் இல்லாத சாதரணத் தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைக்கு சென்று தொழிற் சங்கம் எப்படி செயல் படுகிறது என்று விசாரித்தறியுங்கள். அந்தச் சாதரணர்கள் எளிய மொழியில் உங்களுக்கு புரிய வைப்பார்கள். ஆனால் அதை செய்வதற்கும் ஒரு பணிவு வேண்டுமே?
அப்படி ஒரு எதிர்பார்ப்புடன்
வினவு
I.T. & B.P.Oதுறையிலிருக்கும் பலருக்கும் தாங்கள் மக்களின் ஒரு பகுதி தான் என்பதில் நம்பிக்கை இல்லை.
தான் ஒரு மக்களுக்கு மேல் ஒரு பிரிவாகவே கருதுகின்றனர்.தங்களை தங்களே ஏமாற்றி கொள்ளும்
வித்தையை நன்றாக கற்றிருக்கின்றார்கள். தனக்கு எல்லாமே கிடைப்பதால்
அவர்கள் போராடவேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றனர். தற்போது ஒவ்வொன்றாக பறி போன பின்னரும் போராட வில்லை யெனில் .அத்துறைகளிலிருந்து வெளியேற்றப்படுவோர் நேரே
சுடுகாட்டுக்கு செல்வர் தற்கொலைகள் மூலமாக.
கலகம்
http://kalagam.wordpress.com/
சட்டக்கல்லூரி பிரச்சனை குறித்து உண்மை நிலையை உடனே வெளியிட்டதற்கு
வினவு அவர்களுக்கு மிக்க நன்றி . உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
சட்டக்கல்லூரி பிரச்சனை குறித்து மேலும் இன்று எழுதுவீர்கள் என எதிர்பார்த்தோம்.
கலகம்
சாதிக்கெதிராய் கலகம். பகுதி -2
சட்டகல்லுரி குறித்து வினவு எழுதியிந்தமைக்கு சிலர் இப்படிதான் மறு மொழிந்திருக்கின்றார்கள்.
“பாவபட்ட தேவர்கள் ஒன்று படுவோம்.””இன்று முதல் சாதி வெறியனாகிவிட்டேன்”.இங்கு பாவப்பட்ட என்பதற்கு அர்த்தம் ” நம்ம ஊருல
தொழிற்சங்கம் என்பதை விட ஊழியர் குழுக்கள் தேவை.
பல ஐ.டி நிறுவன நிர்வாகங்கள் தன்னிச்சையாக நடவடிக்கைகளை எடுக்கின்றன. உதாரணமாக வேரியபிள் சம்பள பகுதியில் கண்ட கண்ட காரணங்கள் சொல்லி குறைக்கிறார்கள். ஞாயமே இல்லாத அப்ரெய்சல்கள், இவைகளைப் போக்க ஊழியர்கள் ஒன்று பட்டுத்தான் ஆக வேண்டும்.
தொழிற்சங்கம் எல்லாம் வந்தா பந்து, போராட்டம் இதற்கெல்லாம் இந்த வர்க்கம் தயாராக இல்லை. அது மட்டுமல்ல இவர்கள் எங்கிருந்தாலும் பிழைக்கும் சாமர்த்தியசாலிகள் (சந்தர்ப்பவாதிகள் என்று படிக்கவும்)!
தாங்கள் அஞ்சிலக்கச் சம்பளம் வாங்குவதால், உலகமே சுபிச்சமாக இருக்கிறது என்ற கற்பனையில் மிதக்கிற பின்னூட்டப் புண்ணாக்குகள், தொழிற்சங்கங்களில் வரலாறு தெரிந்து கொண்டு பேசட்டும். கோட் அடித்துக் கொடுத்து கம்பீட்டர் முன்ன்னால் உக்காந்து வேலை பார்ப்பதால், வருகிற எகத்தாளம் புரிகிறது. கொஞ்சம் பொறுமை..
ஆமா தெரியாமத்தான் கேக்கிறேன், இந்த புண்ணாக்குகள் கோட் அடிச்சு கூலி வாங்குது. அதே கம்பேனில பெருக்கரவன் தொடைக்கிறன், டெலிபோன் ஆப்பரேட்டர், அக்கவுண்ட் அசிஸ்டடண்ட்டுன்னு , கோட் அடிக்காதவன் இருக்க மாட்டாங்களா? அவங்க எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன இருப்பாங்களா?
இவனுங்க கம்பீட்டர் படிப்பு படிக்கிறதுக்கு இவங்க அப்பனாத்தா வேலை தொழிற்சாலைல வேலை செஞ்சு, குறைந்த பட்ச ஊதியத்தோட வீட்டுக்கு வந்து சமைச்சுப் போட்டாங்க இல்லியா, அதுக்குக் காரணமே தொழிற்சங்கங்கள் தான். நாளொண்ணுக்கு 18 மணிநேர வேலை, எப்ப வேணா வேலை உட்டுத் தூக்க்றது, மத்த எந்த சலுகைகளும் கிடையாது ன்னு இருந்த அராஜகமான நிலையெல்ல்லாம் மாத்தி, குறைந்த பட்ச ஊதிய, ஊதிய உயர்வு, பேறு கல விடுமுறை, போனஸ் எல்லாத்தையும் மொதலாளிகள் சும்மாவே தூக்கிக் குடுத்துட்டாங்களா? அதெல்லாம் இல்லாட்டி, நாமெல்ல்லம் இன்னேரம் நக்கிகிட்டுதான் இருக்கணும். ஸ்ட்ரைக்கு பண்றத மட்டும் டீவி நூஸ்ல உர்லக்கிழங்கு சிப்ஸ் சாப்ட்டுட்டே பாத்துட்டு , தொழிற்சங்கம்னாலே வேலை நிறுத்தம் தான்னு புண்ணூட்டம் போடற புண்ணாக்குகள், அயோ என் வேலை போச்சே, கேக்க ஆருமில்லியான்னு பொலம்பற காலம் வரத்தாம் போகுது மகா… ஜஸ்ட் வெய்ட் மாடி.
வினவு, பின்னூட்டம் பார்த்தேன். அனுபவத்தில் சொல்கிறேன். இதல்லாம் இவனுங்களுக்கு உறைக்காது. ஏதோ வயித்தெரிச்சலில் பேசுவது போலத்தால் பார்ப்பார்கள். இணையத்தில் உலவுவதில், பெரும்பான்மையானவர்ள் ஐடி துறையில் இருப்பவர்கள் என்பதால், உடனுக்குடன் பின்னூட்டம், குதர்க்கவாதம் எல்லாம் வெளியாகி அயர்ச்சி ஏற்படுத்துமே ஒழிய, எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில், ஆயிரம் பேரை நீக்கி இருக்கிறார்கள். ஆனால், அது பற்றி, இவர்களில் ஒருத்தர் கூட இணையத்தில் வாயைத் திறக்கவில்லை. சுயலம் தானே காரணம்? ஒருத்தனுக்குக் கூடவா இந்த நிலைமையின் தீவிரம் உறைக்காது? பிரயோசனமில்லை. அதனால், ஜட்டி ச்சே… ஐட்டி துறையை விட்டு ஒதுக்கி வைத்து விட்டு, உருப்படியாக வேறு ஏதேனும் பேசுங்கள். கேட்கிறோம்.
நச்னு இருந்தது உங்கள் கட்டுரை நண்பரே,,,
இவங்கள பாவம் பாத்து நீங்க சங்கம் வைக்க சொன்னா உங்களத்தான் வையுவாய்ங்க…
//எட்டுமணிநேரப் பணி, ஈ.எஸ்.ஐ, பி.எப், சி.எல், ஈ.எல் விடுமுறைகள், கான்டீன் வசதி என இன்று நீங்கள் அனுபவிக்கும் பல உரிமைகளை உலகமெங்கும் உள்ள தொழிலாளர்கள் போராடி, உயிரிழந்து தியாகம் செய்து பெற்றனர். ஆர்வமும், நேர்மையும் இருப்பின் இணையத்தில் மே தின வரலாறு பற்றி தேடி எடுத்து படித்துப் பார்க்கவும். இந்த வரலாறே அமெரிக்காவில் இருந்துதான் தொடங்குகிறது.
//
அய்யா நீங்கள் சொல்வது எல்லாமே உண்மைதான். தொழிற்சங்கங்கள் குறந்த பட்ச ஊதியத்தை வாங்கிக்கொடுக்கும். ஆனால் அதைவிட பன்மடங்கு அதிக சம்பளம் பெறும் ஐ.டி. ஊழியர்களுக்கு என்ன கொடுக்க முடியும். மேலும் சம்பளம் கொடுக்கும் கம்பனி எப்படி நாசமாகப் போனாலும் தனக்கு சம்பளம் வர வேண்டும் என்ற தொழிற்சங்க மனப்பான்மை அடிப்படையிலேயே தவறு. நேர்மைக்கு இங்கு என்ன பிரச்சினை?
//மற்றவர்களுக்கு நடந்தது நமக்கு மட்டும் நடக்காது என்று நம்புவது நமக்கு மட்டும் சாவே வராது என்று கருதுவது போலத்தான்// அதற்குத்தான் சேமிப்பு என்ற ஒன்று இருக்கிறது. அது இல்லையென்றால் தொழிற்சங்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது.
//தனிநபராக இருப்பதை விட சங்கமாக ஒன்றாக இணைந்தால் அது எதைப் பெற்றுத் தருமோ நிச்சயம் சுயமரியாதை என்றால் என்ன என்பதைக் கற்றுத்தரும்// சங்கம் என்ற ஒன்று இல்லாமலே அவர்கள் சுய மரியாதையுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்களின் ரோஷம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதும் இங்கு சொல்லியிருக்கும் சுய மரியாதை என்ற வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லுங்கள் முதலில். அதாவது பச்சை நிறத்தை, குழந்தியிலிருந்து மஞ்சள் என்று நம்பி விட்டால் அடுத்தவன் பச்சை என்று சொல்லும் போதெல்லாம் இல்லை அது மஞ்சள் என்றே சொல்லுவார்கள்.
//அந்தச் சாதரணர்கள் எளிய மொழியில் உங்களுக்கு புரிய வைப்பார்கள்// அவர்கள் சொல்லாமலே ஐ.டி. க்காரர்களுக்கு தெரியும். இதை கேட்பதற்கு எதற்கு பணிவு. இது என்ன வேத கால குரு குலமா?. உங்களுக்கு சிலது தெரியும், மற்றவர்களுக்கு சிலது தெரியும். உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து உங்களுக்கு தெரியாததை மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். பணிவு, மரியாதை கோபம் ரோஷம் போன்ற சொற்களுக்கெல்லாம் அர்த்தமே தவறாக சொல்லிக் கொடுக்கப்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை.
//அதே சமயம் நேர்மறையில் வீச்சாக செயல் படும் தொழிற்சங்கங்கள் உலகெங்கும் இருக்கத்தான் செய்கின்றன.// என்ன சொல்ல வருகிறீர்கள்? இருப்பதெல்லாம் போலி ஆனால் நல்லதும் இருக்கிறது என்கிறீர்களா? அந்த “உலகெங்கும்” எங்கு என்பது தெரிந்தால் அங்கு போய் கற்றுக்கொண்டு முதலில் இருக்கும் போலிகளை திருத்தலாமே?
//அவர்கள் போராடவேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றனர்// இல்லை. எங்கு எதற்காக போராட வேண்டும் என்று தெரிந்தவர்கள் அவர்கள். எந்த போராட்டத்திலும் “WIN-LOSE” சிச்சுவேஷன் இருந்தால் அது போராட்டமாக இருக்காது. போராகத்தான் இருக்கும். ஐ.டி. துறையில் எந்த வாக்குவாதமும் “WIN-WIN” சிச்சுவேஷன்தான். “WIN-WIN” சிச்சுவேஷன் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
//அத்துறைகளிலிருந்து வெளியேற்றப்படுவோர் நேரே
சுடுகாட்டுக்கு செல்வர் தற்கொலைகள் மூலமாக// உங்களுடைய மேலான ஆசிர்வாதத்திற்கு பல கோடி நன்றிகள்.
முதலில் மற்ற துறைகளைப் பாருங்க. அப்புறம் கணிப்பொறித் துறைக்கு வரலாம்.
இன்று படுத்துள்ள பொருளாதாரம் நாளை மீண்டால், மறுபடி சரியாகி விடும்.
செங்கொடி பிடிக்கும் செம்மல்களே, சைனா என்னும் செங்கொடி நாடு நமது எல்லையைப் பிடிக்க நினைக்கிறது. ஆனால் இங்கு உள்ள அறிவு ஜீவி செங்கொடிக்காரர்கள், அங்கு நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு, அவர்களுக்கு ஜால்ரா அடித்து விட்டு இங்கு வந்துவிட்டர்கள்.
சைனா, இப்போது அருணசல ப்ரதேசத்தைக் கேட்கிறது. இங்குள்ள வசூல்ராஜாக்கள்(செங்கொடிகள் வாய் மூடி அமைதி காக்கிறது.)
சிங்கூர் விவசாயிகளின் வயிற்றில் அடித்து நிலத்தைப் பிடுங்கி, டாடா போன்ற பண முதலைகளிடம் பணம் வாங்கிக் கொண்டு சோரம் போன செங்கொடியாளர்களே. எதைப் பற்றியும் பேச உங்களுக்கு அருகதை இல்லை.
தமிழ் நாட்டில் இருந்து அரிசி கடத்தப்பட்டு கேரளா செல்கிறது. ஏழை தமிழ் குடியானவன், அரிசி உண்ண வக்கு இல்லை. அவை எல்லாம் கேரளாவில் உள்ள செங்கொடியாளருக்கு உணவாகப் போகிறது.
ரேஷன் அரிசி தமிழனுக்கு இல்லை.கேரள செங்கொடியாளர் மூலம்.
அதை நிறுத்துக செங்கொடியாளரே.
கணிணித்துறையைப் பற்றிப்பேச உனக்குத் தகுதி இல்லை.
மானம் காக்க துணி இல்லாமல் உடல் அழுத போது, தலையில் மணம் வீச, பூ இல்லையே என்று கூந்தல் அழுததாம்.
ஆடு நனையுது என்று ஓணாய் அழுகிறது.
4 வருடம் ஆட்சியில் இருந்து குளிர் காய்ந்து விட்டு இப்போது கொள்கை என்று பிதற்றும் வீணர்களே.
அண்டை நாடான பாகிஸ்தான் பெட்ரோல் விலையை குரைத்து விற்கிறது.
இந்தியாவின் மொத்த பொருளாதாரம் கேவலமான நிலையில் உள்ளது.
முதலில் அதைக் கவனியுங்கள் செங்கொடியாளர்களே.
தொழிற்சங்கம் அமைச்சுட்டு அடுத்து?
குர்காவ்ன்-ல மாதிரி கூட்டமாப் போயி கம்பெனி எம்.டிய போட்டுத் தள்றதா?
வினவு மற்றும் பிற நண்பர்களே,
தங்களின் அளவு கடந்த கரிசனமும், ச்சே, நம் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறார்களே என்ற ஆதங்கமும், ச்சே, உங்களப் பாத்தாலே வெக்ஸ் ஆவுதுறா என்கிற விவேக் பாணி எரிச்சலும் புரிகிறது. கட்டுரையின் பல இடங்களில் லாஜிக் இன்றி பல்வேறு கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள். சில நண்பர்கள் லாஜிக் இன்றி கூவுவது நகைப்புக்கு உரியதாக உள்ளது. அய்.டி பணியாளர்கள் தேவைப்படின் தங்களை அணுகுவார்கள். அதுவரை பொருமை காக்கவும்.
அய்.டிக்காரர்கள் நல்ல நாளில் நிறைய சம்பாதித்தார்கள். இன்று நிலமை மோசம். சரியாக சேமிப்பை வைத்திருந்தால் இக்கால கட்டத்தை தாண்டி மீள்வார்கள். 1999லிருந்து இது மூன்றாவது இறக்கம். 2000 டாட்காம் பபிள், 2001 இரட்டைக் கோபுர தாக்குதல், இப்பொழுது ரிசெஷன். ஒவ்வொரு சரிவிலிருந்தும் மீண்டு வந்தார்கள். அய்.டியில் தாக்குப் பிடிக்க முடியாதவர்கள் வேறு துறைக்கு மாறுகிறார்கள். இதுவும் கடந்து போகும். நாளைய எதிர்காலம் நல்லபடியாக அமையும்.
அதுவரை,
தங்களின் உதவும் எண்ணத்திற்கு நன்றி. ஸீயா!!!!
//உனக்கு கொடுக்கப்படும் குறைவான சம்பளத்தின் மூலம் உன்னை உருவாக்கிய இந்த நாடும் சுரண்டப்படுகிறது. //
அவுட் ஸோர்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாமல் வெறும் ‘அமெரிக்கா அமெரிக்கா’ என்று கூப்பாடு போட்டிருக்கிறீர்கள்.
அமெரிக்காவில் வேலைபார்க்கும் எந்நாட்டவரானாலும் ஒரே சம்பளம்தான். இந்தியாவிலிருந்து செய்யும் வேலைக்கு அமெரிக்க சம்பளம் கொடுக்க சொல்கிறீர்களா?
நீங்கள் சொல்லும் குறைந்தபட்ச சம்பளம் இந்தியாவின் தனிநபர் வருமானத்தை விட வெகு அதிகமாக இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா?
உங்கள் கருட்த்தின்படியே இந்த மிச்சபடுத்தலால் யார் பயன்பெறுகிறார்கள்? முதலாளிகள் மட்டுமா? இல்லை. அந்த நிறுவனங்களின் சேவைத் தரமும், வீச்சும் அதிகரித்து அதனால் பயனீட்டாளர்கள் அதிகமாகிறார்கள். நீங்கள் இந்தக் கட்டுரையை எழுத பயன்படுத்திய பெரும்பாலான கருவிகள் கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக விலை குறைந்திருக்கின்றன. இது எப்படி சாத்தியமாயிற்று? இந்த விலை குறைவால் உங்களைப் போன்ற எண்ணற்றவர்கள் பயன்பெறத்தான் செய்கிறார்கள்.
வளர்ச்சி விகிதிம், வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரம் இதெல்லாம் மாறும்பொழுது மனித வளத்தின் விலையும் மாறத்தான் செய்கிறது.
குறைந்தபட்ச ஊதியம், ஒரு வாரத்திற்குண்டான அதிகபட்ச பணிநேரம், ஓய்வூதிய நிதி, தன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வசதி செய்தல் என்று பல விசயங்களையும் நன்றாகவே அமல்படுத்தியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து எந்த யூனியனும் சாதிக்காத விசயம் இது.
இம்மாதிரி கட்டுரை எழுதும் முன்னர் கொஞ்சமாவது நடப்பு விசயங்களை தெரிந்து கொண்டு எழுதுதல் கட்டுரையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
அமெரிகாவிலும் யாரும் வேலையிழக்கவில்லை. புதிய வேலை வாய்ப்புகள் உருவாகிக் கொண்டுதானிருக்கின்றன.
உதாரணத்திற்கு மெக்ஸிகன்ஸ் என்று சொல்லப்படும் ஹிஸ்பானியர்கள் பெரும வரவால் புதிதாக பல வேலை வாய்ப்புகள் உருவாகின. இன்று அமெரிக்காவில் ஆப்பிரிக்கர் போல ஹிஸ்பானியர்கள் மற்றும் ஆசியர்கள் இரண்டற கலந்துவிட்டார்கள்.
whatever you say, `they` will see only `their` meaning. let us wait for some more time…just another six months.. and i will like to see what godzilla and other such creatures do and say
//whatever you say, `they` will see only `their` meaning. let us wait for some more time…just another six months.. and i will like to see what godzilla and other such creatures do and say//
சும்மா ‘நச்’சுன்னு சொல்லியிருக்கீங்க சாரே! 🙂
உங்கள் கட்டுரையில் சொல்லப்படும் பல விஷயங்கள் நிஜம்தான். ஆனால் இன்னொரு நிஜமும் நான் சொல்ல ஆசைப்படுகிறேன். மற்ற நிறுவனங்களை போல் இல்லாது இங்கு இருப்பது ஒரு பரஸ்பர இலாப நோக்கம்தான். நிறுவனங்களுக்கு தேவையில்லையெனில் நீ வேண்டாம் போ என்று சொல்வதும் நிறுவனத்தில் வேலை சரியில்லையெனில் வேறு நிறுவனம் மாறுவதும்.
மற்றபடி செங்கொடி ஊன்றியிருக்கும் கேரள நாட்டிலும் வேலை நிறுத்தமன்று கம்யூட்டர் கம்பெனிகளின் பணி நிற்காது. இத்தனைக்கும் பெரும்பாலான கம்பெனிகள் அவர்களின் தொழிற்சங்கத்தில் உறுப்பினர்கள்.
Rudran, why six months, you can even wait more.
after that perhaps you may get more patients from these commie outfits than from elsewhere.i suspect
that you are anyway treating many from these outfits.
Vinavu has no clue to the reality. Those who see the world through pages of PJ/PK and think that what PJ/PK writes is the only truth deserve only pity. None of these marxist intellectuals could predict the rise of IT industry in India or its growth. they were simply
agitating against computerisation and were
clueless about the things to come. They cannot
accept the reality that world has bypassed their
obsolete theories and slogans and India has
simply ignored them and grew despite them.
Dont worry, employees in IT sector dont need you or Vinavu and can take care of themselves.
வணக்கம் மெத்தப் படித்த மேதாவிகளே,
இந்தியாவில் பார்க்கும் வேலைக்கு அமெரிக்க சம்பளம் கொடுக்க முடியுமா? சரி தான் அமெரிக்கன் பார்க்கவேண்டிய வேலையை இங்கிருந்து நீங்கள் பார்க்கிறீர்கள். உங்களால் வேலையிழந்த அமெரிக்கனினுக்கு உங்கள் பதில் என்ன?
“அமெரிகாவிலும் யாரும் வேலையிழக்கவில்லை. புதிய வேலை வாய்ப்புகள் உருவாகிக் கொண்டுதானிருக்கின்றன.” இந்த ஒரு வரியே போதும் யதார்த்த உலகிலில்லாமல் நீங்கள் தனி உலகில் இருக்கிறீர்கள் என்பதற்கு. கொஞ்சம் கண்ணை கசக்கிவிட்டு பாருங்கள் நண்பர்களே!
அமெரிக்காவில் இருந்து உங்களுக்கு வந்த வேலை, நாளை உங்களிடமிருந்து பங்களாதேஷுக்கோ, கென்யாவுக்கோ போகும் போதும் வின் வின் பாலிசி பேசுவீர்களா நண்பர்களே?
நுனி நாக்கு ஆங்கிலமும், கணிணிப்புலமையும் இருந்ததால் தான் லட்சத்தில் சம்பளம் என்று திறமை பேசும் நண்பர்களே, உங்களைப்போல் திறமையுள்ளவர்கள் தேனீர்குவளை கழுவுவது தெரியுமா உங்களுக்கு?
உங்கள் வேலைச்சூழல் தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படாத நண்பர்களே, காட்டில் விலங்குகளும் தான் அதன் சூழல் தவிர வேறெதையும் சிந்திப்பதில்லை.
நீங்கள் அனுபவிக்கும் அத்தைனை உறிமைகளுக்குப் பின்னும் போராட்டங்களும், தியாகங்களும் உறைந்து கிடக்கின்றன. எவனோ செய்த போராட்டத்தின் பலனை அனுபவிப்பதற்கு மட்டும் தயாரென்றால், உங்களை உயர்திணை என அழைப்பதில் பொருட்பிழை உண்டாகும் சம்மதமா?
கேரளா அரிசி செங்கொடி இதையெல்லாம் முடித்துவிட்டு கணிணிப்பக்கம் வரவேண்டும் என ஆலோசனை சொல்பவர்களே, அதுவரை நீங்கள் என்ன செய்வதாய் உத்தேசம்? எந்த விரயங்களும் இல்லாமல் வாழ்க்கையை சுவைத்துக்கொண்டிருப்பீர்களா?
சுவையான வாழ்வை மட்டுமல்ல, சுவைப்பதற்கு நாவையும் இழந்து கொண்டிருக்கிறீர்கள்.
அண்டா நீரில் நீந்தும் தவளைகளே, வெதுவெதுப்பை அனுபவிப்பதோடு நின்றுவிட்டால் வெந்துபோவீர்கள். தீ மூட்டப்பட்டிருப்பதை உணர்ந்தால் மட்டுமே பிழைப்பீர்கள்.
யார் நீங்கள் வேகும் தவளைகளா? இல்லை தாவிக்குதிக்கப் போராடும் தவளைகளா?
தோழமையுடன்,
செங்கொடி
அய். டி. அடிமைகளே கொன்சம் யோசிச்சி எழுதுங்கடா…………..
ஏண்டா வடபழனி டி.சி.எஸ் மூடியாச்சி சத்யம், விப்ரோ ல தினம் தினம் வேலையை விட்டு தூக்கிகிட்டு இருக்கான் எச்.சி.எல் ல 2000 பேர வேலையைவிட்டு தூக்கிட்டான் இன்னும் 31 க்குள் 4 அல்லது 5 ஆயிரம் பேரை தூக்கபோரான் (ந்ம்பலைனா ஒ.எம்.ஆர் ல “உண்மை செய்தி” அப்படினு ஒரு ஓசி பதிரிக்கை வரும் அதை படிச்சிபாரு ) இந்த நெலமையிலும் ஒங்கலோட திமிரு கொறயல.
அப்பறம் தொழிற்சங்கம் பத்தியல்லாம் பேசியிருக்கியலடா, ஜெ.பி.ஆர், எஸ்.ஆர்.எம் காலேஜ், நெல்காஸ்ட், இன்னும் பொன்னேரி, ஒசூர் பல இடங்கள்ல போய் பாருங்கடா தொழிற்சங்கம், தொழிற்சங்கத்தோட உரிமை இதல்லாம் புரியும்.
ஒங்கலாள 3000 சம்பளம் வாங்குகிறவர்கள் எல்லாம் வீட்டு வாடகை குடுக்க முடியாம தின்டாடிகிட்டு இருக்காங்க. ஒரு 1/4 கிரவுண்ட் எடம் வாங்க முடியல. இதுக்கல்லாம் என்னடா சொல்றிங்க. அதுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைனு சொல்லாதிஙக.
உங்க வசதிக்காக அல்லது உங்க முதலாளிகளின் வசதிக்காக ரப்பர் சாலை, மேம்பாலம், விமான நிலையம் விரிவாக்கம், இன்னும் ஏராள உலகவங்கி கடன் திட்டம் எல்லாம் உழைக்கும் மக்கள் தலையில் விடியும் கடன்.
உங்களின் தண்ணீர் வசதிக்காக (குடிக்க, கழுவ) சென்னையை சுற்றியுள்ல ஏறிகளின் அதிகபட்ச தண்ணீர் சப்ளை. நகர மக்கள் தண்ணீருக்கு அவதிபடுகையில்.
உங்களால் இந்த நாட்டு மக்களுக்கு என்ன பயன்.
கேளிக்கை விடுதி, மதுபான கடை,(இன்னும் அசிங்க, அசிங்கமா வந்துடும்) முதலாளிகளுக்குதான் பயன்.
இன்னைக்கு இருக்க கூடிய நிலைமையில் பெரும்பான்மை மக்களுக்கு உள்ள பிரச்சனைக்கு மத்தியில் உங்களையும் முதுகெலும்பு உள்ள மனுசனா மதிச்சி எழுதி இருக்காரு அதுக்கு வரின்சி கட்டிக்கிட்டு வந்துட்டங்க.
இன்னும் நெறய திட்டனும் போல இருக்கு அப்பறம் வரேன்………
very good sir
வினவு,
இதே தொழிற்றுறையில் பணியாற்றுபவன் என்ற ரீதியில் சில கருத்துக்களை முன்வைக்கிறேன்.
நீங்கள் இக்கட்டுரையின் இலக்கு வாசகர்களாகக் கொண்டிருப்பவர்கள் பின் முதலாளியத்தின் மிக நுணுக்கமான பரப்புரைகள், கல்வி போன்றவற்றின் தாலாட்டில் வளர்ந்தவர்கள்.
பழைமை – நவீனம் என்ற எதிர்வினூடாக எல்லாவற்றையும் பார்ப்பவர்கள்.
எது பழசு எது நவீனம் என்பதனை முதலாளியப்பரப்புரைகளிடமிருந்து இவர்கள் கற்றுத் தெளிந்தவர்கள்.
கம்யூனிசம், தொழிற்சங்கம், போராட்டம் எல்லாமே ஆதிகாலத்தில் தோன்றி தோற்றுப்போன தவறான போக்குகள் என்ற எண்ணம் மிக வலுவாக நம்பப்படுகிற தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.
இவர்களின் கண் முன்னால் சிவப்புச்சட்டை போட்டுக்கொண்டு காலத்தோடும் ஒத்துவராமல், மக்களோடும் சார்ந்தில்லாமல் முதுகெலும்பில்லாதவர்களாக, செயல் திறனற்றவர்களாக தேங்கிப்போன அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் இடதுசாரிகளே தென்படுகிறார்கள்.
இத்தகைய இடதுசாரிகளே இங்கே இலங்கையில் (இந்தியாவிலுமா?) பெரும்பான்மை.
கம்யூனிசம் தோற்றுவிட்ட பழம் பண்டம் என்பதை ஆரம்பக்கல்விமுதல் முதலாளியம் வகுத்துத்தந்த உயர்கல்வி வரைக்கும் கற்று விட்டு பின்னர் கொஞ்சம் தேடல் இருந்து தேடத்தொடங்கினால் போஸ்ட்மொடர்னிசம் ஆவி பிடித்து கம்யூனிசம் செத்துப்போன கதையை உருவேற்றி விட்டுவிடும் நிலையில் மார்க்சியம் சார்ந்த எந்தவொரு சொல்லும் இவர்களுக்கு எரிச்சலூட்டுவதாகத்தான் மாறிப்போகும்.
நவீனம் என்பதாக இவர்கள் நம்பிக்கொண்டிருப்பது கார்பரேட் கலாசாரத்தை. இவர்களது கனவுகளும், இலக்குகளும் அன்றாடம் வயிற்றைக்கழுவுவதல்ல, பிள்ளைகளை படிப்பிக்க காசு சேர்ப்பதல்ல,
அதை முதலில் போராட அழைக்கும் இடதுசாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவர்களுக்கு அடிப்படை வசதிகளுக்கு மேலதிகமாகவே எல்லாம் செய்துகொடுக்கப்பட்டிருக்கிறது. தன்னையும் இன்னொரு முதலளியாக, நிறுவனப்படி நிலையில் மேல் மட்டங்களில் இருப்பவராக மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதே இவர்களது வெறி கொண்ட இலக்கு.
இங்கே முதலாளியத்தை வீழ்த்தும் நோக்கமானது தம்மையும் வீழ்த்தும் நோக்கமாகவே புரிந்துகொள்ளப்படுகிறது.
கார்பரேட் கலாசாரத்தின் மீதான விமர்சனங்கள் எல்லாம் தம்மை விமர்சிகும், தம்மை கீழ்மைப்படுத்தும் வரட்டு விமர்சனங்களாகவே இவர்களால் கொள்ளப்படுகிறது.
பொருளாதாரம் பற்றிய, வளர்ச்சி பற்றிய, நாடுகளினிடையேயான பொருளாதாரத்தொடர்புகள் பற்றிய இவர்களது அறிவு யாவும் முதலாளித்துவத்தால் வழங்கப்பட்டது.
விஞ்ஞான ரீதியான இவர்களது புரிதல் அனைத்துமே முதலாளியத்தின் அடிப்படையில் அமைந்திருக்க, வெறும் விமர்சனங்களாக மட்டுமே மார்க்சிய அடிப்படையிலான கருத்துக்கள் இவர்கள் முன் வைக்கப்படுகிறது.
மார்க்சிய பொருளாதார அணுகுமுறை என்பது இவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் பொருளியல் உலகையும் அதன் கோட்பாடுகளையும் விட மிக மிக நவீனமானது என்பதை இவர்களுக்கு அறிமுகப்படுத்த் ஆளில்லை.
கார்பரேட் கல்சர் என்று காட்டப்படும் பகட்டான neat look உலகம் தனக்கடியில் எவ்வளவு கேவலமான சாக்கடையை ஓட விட்டு அதன் மீதே, அதை நம்பியே, அதைக்குடித்தே உயிர்வாழ்கிறது என்பதை இவர்களுக்கு முறைப்படி கற்றுக்கொடுக்க ஒரு மார்க்கமில்லை.
கணினி விலை கூடியது. கணித்தொழிநுட்பம் விலை கூடியது. மென்பொருட்கள் விலை கூடியன. அதனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் தொழிலாளர்களுக்கான அலுவலக வசதிகளும் அதனடிப்படையில் மேம்பட்டவையாகவே இருக்கும்.
மிக மிக நவீனமான சுரண்டல் உத்தி இவர்கள் மீது பயன்படுத்தப்படுகிறது. தமக்கொரு நெருக்கடி வரும் வேளையொன்றைத்தவிர, இந்த ஆடம்பரத்துக்கு ஆப்பு விழும் நாளொன்றைத்தவிர வேறெப்போதும் இதனை இவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.
போராடுவதற்கான உந்துதல் வாழ்க்கை, சூழல் விரட்டி அடிப்பதிலிருந்தே உருவாக முடியும். போராடுவதைத்தவிர வேறு வழியில்லை என்ற நிலையே போராட்டங்களை உருவாக்கும்.
அந்த நிலையை கணித்தொழில் உள்ளிட்ட ஆடம்பரத் தொழிற்றுறைகளுக்கு இந்த நெருக்கடி கொண்டுவந்து சேர்க்கும் என்று நான் பெரிதாக நம்பவில்லை. முதலாளியம் , ஏகாதிபத்தியம் இந்த நெருக்கடியை தனக்கே உரிய லாவகத்தோடு எதிர்கொண்டு வெல்லும்.
இத்தொழிற்றுறை வெறுமனே கணிநுட்பர்களை மட்டும் சுரண்டுவதல்ல. அவர்களை மட்டும் நம்பி சீவிக்கக்கூடியதுமல்ல. இவர்களுக்கும் கீழ் நிலையில் இருக்கும் தொழிலாளர்களையும் அது நம்பியிருக்கிறது.
முதலாளியாகும் கனவில் முதலாளிகளோடு குலவிக் குழைந்து வாழ்வின் உச்சங்களுக்கு போகத்துடிக்கும் ஒரு வர்க்கத்தை போராடுவதைத்தவிர வாழ வழியின்றிப்போன வர்க்கத்தோடு ஒன்றாகப்பார்த்து ஒரே அளவுகோல்களோடு அணுகுவது பயனற்றது.
மார்க்சியப்பொருளியல் எவ்வளவு நவீனமானது என்பதை இவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். ஆகக்குறைந்தது இவர்களுள் , இந்த அமைப்புக்கு எதிரான உணர்வையாவது கொண்டிருக்கக்கூடிய வீதியில் நிற்கும் வேலை இழந்துபோன நுட்பர்களை திரட்டிக்கொள்ளுங்கள். இவர்களது தொழிற்றுறை தங்கியிருக்கும் அடிமட்டத்தொழில் புரியும் தோழர்களையும் திரட்டுங்கள். இதுவே போர்க்குணாம்சம் கொண்ட கூட்டணியாக அமையும்.
எட்டுமணி நேர ஓய்வினை அலுவலகத்தின் மெல்லிய இசை கசியும் இணையத்துடன் கூடிய குளிரூட்டப்பட்ட சூழலிலேயே எடுத்துக்கொள்கிறோம் என்று இவர்கள் உங்களை விரட்டி விடுவார்கள் .
இந்த சுகபோகச்சுரண்டலில் நாம் எமது நாடும் எவ்வளவு தூரம் ஏமாற்றப்பட்டு சுரண்டப்பட்டுப்போகிறதென்பதை அதன் விளைவுகள் வந்து தாக்கும்போதே இவர்களால் புரிந்துகொள்ள முடியும்.
There is no reservation in IT sector. Your caste does not determine what you get whereas in govt. your caste matters most, more than your talent and qualification. If you are talented you can make the most in IT sector. There are many first generation entrepruners in IT sector who have created employment and wealth and have contributed to the nation’s progress.This is something that cannot be
tolerated by the commies and their lackeys who still
swear by Karl Marx. Bring in unions and create problems so that IT sector suffers is their objective.
Vinavu objects if India sends Chandrayan. These guys
cannot tolerate the growth of the Indian economy and progress made my middle classes who have gained
from globalisation. It is sheer envy that drives them
to write like this. Let us forgive these petty minds.
அய்யா வினைவு, உங்க கருத்துல ஓரளவுக்கு உண்மையிருக்கு அதுக்காக ஏன் ஐ.டி காரண (தலைப்பு போட்டு) வம்பிழுத்து இருக்கீங்கன்னு தெரியல. இதுல ஐ.டி கார நன்பண் மட்டும் ரோஷப்படவோ/வெட்கப்படவோ தேவையில்லை. பி.ஜே.பி ஆட்சியில் இந்தியா ஒளிர்ந்ததோ இல்லியோ, ஐ.டி-யால தமிழகம் ஒளிருதுங்கிறது நீங்க எல்லோரும் ஓத்துக்கனும்.
இது உலகமயமாதலின் விளைவால் வந்த கேடு. தேள் எங்கயோ கடிக்க ஏன் ஐ.டி காரணுக்கு மட்டும் நெறிகட்டனும்?
அய்யா நீங்க பனமரத்துக்கு கீழ நின்னு மோர குடிக்கிறீங்க… ஏதோ ஐ.டி கார புள்ளைங்க பீர குடிக்கிறாங்க…
//கார்பரேட் கல்சர் என்று காட்டப்படும் பகட்டான neat look உலகம் தனக்கடியில் எவ்வளவு கேவலமான சாக்கடையை ஓட விட்டு அதன் மீதே, அதை நம்பியே, அதைக்குடித்தே உயிர்வாழ்கிறது என்பதை இவர்களுக்கு முறைப்படி கற்றுக்கொடுக்க ஒரு மார்க்கமில்லை.//
அட்ரா சக்கை
//கணினி விலை கூடியது. கணித்தொழிநுட்பம் விலை கூடியது. மென்பொருட்கள் விலை கூடியன. அதனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் தொழிலாளர்களுக்கான அலுவலக வசதிகளும் அதனடிப்படையில் மேம்பட்டவையாகவே இருக்கும்.//
தெளிவாக கூறியுள்ளீர்கள்
//மிக மிக நவீனமான சுரண்டல் உத்தி இவர்கள் மீது பயன்படுத்தப்படுகிறது. தமக்கொரு நெருக்கடி வரும் வேளையொன்றைத்தவிர, இந்த ஆடம்பரத்துக்கு ஆப்பு விழும் நாளொன்றைத்தவிர வேறெப்போதும் இதனை இவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.//
நீங்கள் கூறியது சரி என்று இங்கு வரும் மறுமொழிகளே நிருபிக்கின்றன 🙂 🙂
//எட்டுமணிநேரப் பணி, ஈ.எஸ்.ஐ, பி.எப், சி.எல், ஈ.எல் விடுமுறைகள், கான்டீன் வசதி என இன்று நீங்கள் அனுபவிக்கும் பல உரிமைகளை உலகமெங்கும் உள்ள தொழிலாளர்கள் போராடி, உயிரிழந்து தியாகம் செய்து பெற்றனர். //
அது சரி,
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் தொடர்ந்து 33 மணி நேரம் பணி புரிய வேண்டி உள்ளதே. அதற்கு நீங்கள் ஏதாவது செய்துள்ளீர்களா
Thanks Vinavu.
I am in IT. However, My father was a communist and I read about Marx, Engels and Lenin. At that age, I was able to understand their life but not the Marxism, i mean his economic articles.
Could you please explain it in a new Post?
We are ready to get united.
To Godzilla,
Why should we blindly fight against their each and every word?
Let’s discuss and decide.
//அய்யா நீங்க பனமரத்துக்கு கீழ நின்னு மோர குடிக்கிறீங்க… ஏதோ ஐ.டி கார புள்ளைங்க பீர குடிக்கிறாங்க…//
நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்று புரியவில்லை
இது போன்ற(IT) துறையில் வேலை செய்து கைநிறைய சம்பளம் வாங்குபவர்களுக்கு தமது சுயநலம் மட்டுமே முக்கியம். அவர்களுக்கு மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் அக்கறையில்லை. அதனால் மற்றவர்களும் அவர்களைப் பற்றி அக்கறைப்பட தேவையில்லை.
அவர்களை இப்படி பேச வைப்பதே, அவர்கள் சார்ந்த வர்க்க குணாம்சம் என்ற அடிப்படை மார்க்சிசம் தெரியாத அப்பாவிகள். இயேசு கூறியது போல: “இவர்கள் தாம் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்றே தெரியாதவர்கள்.” மன்னித்து விடுவோம்.
//உங்கள் அளவுக்கு படிப்பும், ஊதியுமும் , வாழ்க்கைத் தரமும் இல்லாத சாதரணத் தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைக்கு சென்று தொழிற் சங்கம் எப்படி செயல் படுகிறது என்று விசாரித்தறியுங்கள். அந்தச் சாதரணர்கள் எளிய மொழியில் உங்களுக்கு புரிய வைப்பார்கள். ஆனால் அதை செய்வதற்கும் ஒரு பணிவு வேண்டுமே? //
இதே யோசனையை நீங்களும் பின்பற்றலாம் தோழர்.
தொழிற்சங்கங்கள் வகுத்ததை விட சிறப்பாகவே ISO 9001 போன்ற முறைகள் இருக்கின்றன.
இங்கு வந்திருக்கும் பல பின்னூட்டங்கள் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு எழுதப்பட்டு சலிப்பைத்தான் தருகின்றன.
Sridhar Narayanan said:
நீங்கள் இந்தக் கட்டுரையை எழுத பயன்படுத்திய பெரும்பாலான கருவிகள் கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக விலை குறைந்திருக்கின்றன. இது எப்படி சாத்தியமாயிற்று? இந்த விலை குறைவால் உங்களைப் போன்ற எண்ணற்றவர்கள் பயன்பெறத்தான் செய்கிறார்கள்.
Would you please read the following article?
இன்று உலகில் கணணி, மற்றும் மொபைல் தொலைபேசி போன்ற இலத்திரனியல் பொருட்களின் விலை குறைந்து பாவனை அதிகரித்து இருக்கின்றதென்றால், அதற்கு முக்கிய காரணம், அவற்றிற்கான மூலப்பொருட்கள் கொங்கோவில் இருந்து பெருமளவில் கொள்ளையடிக்கப்படுவது தான். இது வெறும் கொள்ளை சம்பந்தமான பிரச்சினை மட்டுமல்ல, கனிம வள சுரங்கங்களை கைப்பற்றி சுரண்டுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் தமது வாழிடங்களில் இருந்து விரட்டப்பட்டனர், அல்லது படுகொலை செய்யப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலத்திரனியல் நிறுவனங்களின் மாபெரும் கொள்ளைக்காக நான்கு மில்லியன் அப்பாவி மக்கள் பலிகொடுக்கப்பட்டனர்.
http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_10.html
ஐரோப்பிய அல்லது அமெரிக்க மக்கள், எவ்வாறு வசதியான வாழ்க்கையால் புரட்சியை நினைத்துப் பார்ப்பதில்லையோ, அவ்வாறு தான் I.T. துறை சார்ந்த நண்பர்களும். எல்லாம் பணம் செய்ற வேலையுங்கோ…. இவர்களுக்கு கல்வியறிவு இருப்பதால் தான், முதலாளி சம்பளம் என்ற பெயரால், அதிக பணத்தை லஞ்சமாக கொடுத்து விலைக்கு வாங்கி வைச்சிருக்கான்.
It must be observed the tendency of imperialism to divide the workers, to encourage opportunism among them and to cause temporary decay in the working class movement…..
(by Lenin, Imperialism, The Highest stage of Capitalism)
October 7, 1858 Engels wrote to Marx:
“The English proletariat is becoming more and more bourgeois…
Sridhar Narayanan,
//அமெரிகாவிலும் யாரும் வேலையிழக்கவில்லை. புதிய வேலை வாய்ப்புகள் உருவாகிக் கொண்டுதானிருக்கின்றன.//
ROTFLMAO
இது ராய்டர் செய்தி…
http://www.reuters.com/article/newsOne/idUSTRE4A60GV20081107
அதிலிருந்து ஒரு பகுதி
So far this year 1.2 million U.S. jobs have been lost, with 651,000 in the past three months alone as the slide in the national labor market picked up in intensity.
நீங்க பண்ண தப்பு என்னான்னா ‘
//அமெரிகாவிலும் யாரும் வேலையிழக்கவில்லை. புதிய வேலை வாய்ப்புகள் உருவாகிக் கொண்டுதானிருக்கின்றன.//
அப்படீங்குற உங்க பொன்மொழிய அமெரிக்காவுல ஒரு பிரஸ்மீட் போட்டு நவம்பர் 3ம் தேதியே சொல்லீருந்தீங்கன்னா பாவம் அந்த கிழம் மெக்கெய்னும் அட்டு பிகர் சாரா பேலினும் ஜெயிசிருப்பாங்க. உங்க பேரும் வரலாற்றுல நின்னிருக்கும்….
இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிறல இந்தியாவுல ஏப்ரல்ல எலக்ஸன்…ஏதாவது செய்யுங்க பாஸ்
//ROTFLMAO
இது ராய்டர் செய்தி…
//
பென்டுகாலன்,
அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் அதிகரிப்பு அவுட்ஸோர்ஸிங்கினால் இல்லை என்பதே எனது கருத்து. தற்போதைய வேலையிழப்பு பொருளாதார நெருக்கடியினால் நிறுவனங்கள் தங்கள் செல்வை குறைக்கின்றன. இம்மாதிரி செலவு குறைப்புகள் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது அது செய்தியாகிறது.
2000-ம் வருடவாக்கில் ‘தொழில்நுட்பம்’ ‘இணையதளம்’ என்று சொன்னாலே பணம் செலவழிக்க எல்லாரும் தயாராக இருந்தார்கள். பின்னர் திடீரென்று விழித்துக் கொண்டு இந்த இணைய தளங்கனினால் எங்களுக்கு என்ன பயன் என்று தங்கள் செல்வினத்தை குறைத்துக் கொண்டார்கள். அது பெரும் செய்தி ஆனது. ஆனால் இப்பொழுதும் இணையம் மூலமாக பல்வேறு தொழில்கள் நடக்கின்றன. அப்பொழுது காட்டிலும் இப்பொழுது ஏராள இலவச சேவைகள் கிடைக்கின்றன. ஆனால் அவை செய்தி ஆவதில்லை. டெட்ராய்டில் வாங்கப்படாத வீடுகளைப் பற்றிய செய்திகள் முன்னர் வருவதில்லை. இப்பொழுது பொருளாதார நெருக்கடியினால் 5000 டாலருக்கு வீடுகள் கிடைக்கின்றன என்பது செய்தி ஆகிறது. உண்மையில் அம்மாதிரி வசிக்க இயலா வீடுகள் எல்லாக் காலங்களிலும் இருக்கத்தான் செய்கின்றன. அவை பற்றி யாரும் விரிவாக ஆராய்ந்து செய்தி இடுவதில்லை.
சென்ற வருடம் சந்தை நன்றாக இருந்த போதும் அதே 5000 டாலர் வீடு 10000 டாலருக்கு கிடைத்தது.
உங்களுடைய மறுமொழியில் இன்னொரு இழையில் வேலை வாய்ப்பிழப்பிற்கும் அமெரிக்க குடியரசு கட்சிக்கும் முடிச்சுப் போட்டிருந்தீர்கள். ஜனநாயக கட்சி வேலை வாய்ப்பிற்கான பெரும் திட்டங்கள் எதுவும் முன்வைக்கவில்லை. இந்த விசயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் பெரிதாக வித்தியாசம் ஏதும் இல்லை.
அவுட்ஸோர்ஸிங்கினால் இந்தியா மட்டுமல்ல நண்பரே, சீனா, பிலிப்பைன்ஸ், அர்ஜெண்டினா போன்ற ஏகப்பட்ட நாடுகள் பயன்பெறத்தான் செய்கின்றன. உலக எல்லைகள் சுருங்கிவிட்டதினால், அவரவர்க்கு தேவையான சேவையை நாடு எல்லைகள் கடந்து பெறுவதில் எந்தவித தவறுமில்லை.
நான் சொன்ன வேலை வாய்ப்பு அதிகரிப்பு என்பது கடந்த 25 ஆண்டுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் விசயம். ஹிஸ்பானியர்களும், ஆசியர்களும், ஆப்பிரிக்கர்களும் அமெரிக்காவின் பல்வேறு தளங்களில் புதிய வேலைவாய்ப்புகளை தாங்களே உருவாக்கிக் கொண்டுதானிருக்கிறார்கள்.
யூனியன்களினால் தொழிலாளர் பயனடந்தது பற்றி எந்த வித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் பிரபல ஐடி நிறுவனங்களில் நடைபெறும் ஜனநாயக நடைமுறைகள் பற்றி துளியும் தெரியாமல் எழுதப்படும் கட்டுரைகளுக்கு என்ன மாதிரி எதிர்வினை செய்ய முடியும் என்பதுதான் சிக்கல்
//அப்படீங்குற உங்க பொன்மொழிய அமெரிக்காவுல ஒரு பிரஸ்மீட் போட்டு நவம்பர் 3ம் தேதியே சொல்லீருந்தீங்கன்னா பாவம் அந்த கிழம் மெக்கெய்னும் அட்டு பிகர் சாரா பேலினும் ஜெயிசிருப்பாங்க. உங்க பேரும் வரலாற்றுல நின்னிருக்கும்….//
🙂 🙂