privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!

முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!

-

மூண்டெழுமா முத்துக்குமார் இட்ட தீ?

அவநம்பிக்கையால் நிரம்பிய சூழலிலும் நம்பிக்கையூட்டும் தருணம் எப்போதாவது தோன்றத்தான் செய்கின்றது. ஆயினும் அது தோன்றி மறையும் ஒரு தருணம் மட்டுமா, அன்றி புதியதொரு நிகழ்வுப் போக்கின் துவக்கமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.

இப்பதிவை எழுதும் இந்த நேரத்தில் முத்துக்குமாரின் இறுதிப் பயணம் கொளத்தூரிலிருந்து பெரம்பூரைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்பினரும் அமைப்பு சாராத தமிழ் உணர்வாளர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு செல்ல, அந்த வெள்ளத்தின் மீது மிதந்து செல்கிறான் முத்துக்குமார்.

பேரணியின் துவக்கத்தில் பாதையெங்கும் மலர் தூவிச்செல்லும் ஒரு வாகனம். அதனைத் தொடர்ந்து எமது  தோழர்கள் ( ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ) முழக்கமிட்டுச் செல்கிறார்கள். இந்திய மேலாதிக்கத்துக்கு எதிரான முழக்கங்கள். மேலாதிக்கத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள். ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவான முழக்கங்கள். இரண்டு நாள் போர் நிறுத்தம் எனும் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள். காஷ்மீரிலும் வட கிழக்கிந்தியாவிலும் தேசிய இனங்களை நசுக்கும் இந்திய இராணுவத்துக்கு எதிரான முழக்கங்கள். தமிழின விரோத பார்ப்பனக் கும்பலுக்கு எதிரான முழக்கங்கள்.

அடுத்த வரிசையில் வருகிறார்கள் கட்சித் தலைவர்கள். முன்னே அணிவகுத்துச் செல்லும் முழக்கங்கள் பலவற்றின் கருத்துடன் முரண்படும் தலைவர்கள். இந்த தன்னெழுச்சியின் வெள்ளத்தில் தம்மையும் தம் அடையாளத்தையும் பேணிக் கரைசேர்வதெப்படி கொள்வதெப்படி எனும் சிந்தனையில் ஆழ்ந்தபடி நடைபோடும் தலைவர்கள்.

அவர்களைத் தொடர்ந்து வருகிறது கருத்துகள் ஏதும் எழுப்பாத பாண்டு வாத்தியம்.

அதன் பின்னே முத்துக்குமாரைத் தாங்கிய வாகனம். தமிழகத்தின் மவுனத்தையும், கட்சிகளின் துரோகத்தையும் கண்டு மனம் வெதும்பி, தீப்பாய்வது என்ற முடிவில் முத்துக்குமார் எழுதிய கடிதம் அவனுடைய சிந்தனையோட்டத்தின் தடயங்களைக் காட்டுகிறது. மரிக்குமுன்னர் தன் இறுதி யாத்திரையை அவன் மனக்கண்ணில் ஓட விட்டிருப்பான். ஐயமில்லை. அந்தக் காட்சி இதுதானா, இதனினும் வலிதா?… யாரறிவார்? மரணம் விட்டுச்செல்லும் புதிர்களில் இதுவும் ஒன்று.

முத்துக்குமாரின் பின்னே பல்லாயிரக்கணக்கில் மக்கள் வெள்ளம். பல்வேறு அமைப்பினர்…. பல்வேறு முழக்கங்கள்…. குமுறி வெடிக்கும் கதறல்கள்…. கோபங்கள்.

“ராஜபக்சே ஒழிக! பொன்சேகா ஒழிக! காங்கிரசு ஒழிக! ஓட்டுக்கட்சி துரோகிகள் ஒழிக! பிரபாகரன் வாழ்க! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்! சோனியாவே இத்தாலிக்கு ஓடு! ஜெயலலிதா ஒழிக! போர்நிறுத்தம் செய்! தமிழர்களைக் கொல்லாதே!”

ஒழுங்கமைக்கப்படாத இரைச்சலாக, ஒழுங்கமைக்கப்பட்ட கோபமாக, தன்னை முன்னிறுத்தும் நடிப்பாக, தன்னுணர்விழந்த கதறலாக.. முத்துக் குமாரைத் தொடர்கிறது மக்கள் வெள்ளம். கட்சிக் கொடிகளோ பதாகைகளோ வேண்டாம் என்பதை எல்லோரும் ஆரம்பத்தில் கடைப்பிடித்திருப்பதாக கூறுகின்றனர் பேரணியில் சென்று கொண்டிருக்கும் எமது தோழர்கள். ஆயினும் பின்னர் பல்வேறு அமைப்புக்களின் பதாகைகள் ஊர்வலத்தை வண்ணமயமாக்கின.

கொடிகள் இல்லையெனினும் கட்சிகள் இருக்கத்தானே செய்கின்றன? பதாகைகள் இல்லையெனினும் கொள்கைகள் இருக்கத்தானே செய்கின்றன? “என்னுடைய உயிரை ஆயுதமாக ஏந்துங்கள்” என்று தன் உயிலில் குறிப்பிட்டிருந்தான் முத்துக் குமார்.

ஆயுதம் ஒன்று இல்லாததனால்தான் தமிழகத்தில் போர் தொடங்கவில்லை என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். அல்லது தன் உடல் எனும் ஆயுதமே போரையும் போர்க்குணத்தையும் தமிழகத்தில் தோற்றுவித்துவிடுமென்று அவன் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதுதான் கேள்வி.

நேற்று முன்தினம் இரவு முத்துக்குமாரின் உடலை கொளத்தூர் வணிகர் சங்க கட்டிடத்திற்குக் கொண்டு வந்தார் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன். நேற்று காலை 9 மணி முதல் தலைவர்கள் வரத்தொடங்கினர். மருத்துவர் ராமதாசு, திருமா, நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், நல்லகண்ணு  என பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த அனைவரும் வந்து அஞ்சலி செலுத்திய பின் வணிகர் சங்கக் கட்டிடத்தினுள் சென்றனர். வெளியே முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. செங்கல்பட்டில் உண்ணாவிரதமிருந்து கைது செய்யப்பட்ட மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பச்சையப்பன் கல்லூரி வாயிலில் காலை மறியல் போராட்டம் செய்த பு.மா.இ.மு தோழர்கள் ஊர்வலமாக முழக்கமிட்டபடி வந்து கொண்டிருந்தனர்.

அஞ்சலி செலுத்துவதற்காக இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் சகிதம் மேடையில் ஏறினார் புரசை திமுக எம்.எல்.ஏ பாபு. போலீசை மேடையை விட்டு இறங்கச் சொன்னார்கள் எமது தோழர்கள். “என் பாதுகாப்புக்குத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள்” என்றார் எம்.எல்.ஏ. “எங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போலீசு பாதுகாப்பா?” என்று மக்கள் கூட்டம் கொந்தளிக்க அந்த இடத்திலிருந்து ஓடினார் எம்.எல்.ஏ. ஆள் படை சகிதம் பந்தாவாக வந்து இறங்கிய அதிமுக மதுசூதனன் நிலைமையைப் புரிந்து கொண்டு, படை பரிவாரங்களை ஓரமாக நிற்க வைத்துவிட்டு, தனியாக வந்து மாலையைப் போட்டுவிட்டு அவசரம் அவசரமாக இடத்தைக் காலி செய்தார்.

இறுதி ஊர்வலத்தை எப்படி நடத்துவது என்ற ஆலோசனை உள்ளே நடக்கத் தொடங்கியிருந்தது. இன்றைக்கே, (அதாவது 30ம் தேதி வெள்ளிக்கிழமையன்றே) அடக்கம் செய்து விடலாம் என்பது தலைவர்களின் ஒருமனதான கருத்து. “குறைந்த பட்சம் ஒரு நாளாவது வைத்திருந்து மக்களை ஏராளமாகத் திரட்ட வேண்டும். அவருடைய மரணத்தின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்” என்பது ம.க.இ.க தோழர்கள் முன்வைத்த கருத்து. வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். “இங்கிருந்து ஊர்வலமாக தூத்துக்குடி எடுத்துச் செல்லலாம்” என்று முத்துக்குமாரின் உறவினர் சிலர் கருத்து கூறினர்.

இது தொடர்பான விவாதத்தில் தலைவர்கள் கூறிய கருத்துகள் கண்ணாடிப் பேழைக்குள் உறங்கிக் கொண்டிருந்த முத்துக் குமாரின் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

“உடனே எடுக்காவிட்டால் கூட்டம் அதிகமாகி சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகிவிடும் என்று எச்சரித்தார் ஒரு தலைவர். “நேரம் ஆக ஆக கூட்டம் உணர்ச்சிக்கு ஆட்பட்டு நிலைமை கட்டு மீறிவிடும்” என்று வழிமொழிந்தார் இன்னொருவர். “உடல் தாங்காது” என்றார் ஒரு தலைவர். “சனிப்பிணம் தனிப்போகாது என்பது மக்கள் நம்பிக்கை. அதைக் கணக்கில் கொள்ள வேண்டும்” என்றார் இன்னொரு தலைவர். இன்றே எரியூட்டி விட்டு அஸ்தியை தமிழகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துப் போகலாமே என்ற மாற்று வழியையும் சிலர் முன் மொழிந்தார்கள்.

“தனது உடல் எதிரிகளைத் துன்புறுத்தும்” என்ற நம்பிக்கையில் தீக்குளித்தான் முத்துக்குமார். ஆனால் அவ்விருப்பத்துக்கு விரோதமாக அவன் உடல் “நண்பர்களை” துன்புறுத்திக் கொண்டிருந்தது. வணிகர் சங்கத்தின் அறைக்கு வெளியே அனல் பறக்கத் தொடங்கி விட்டது. உள்ளேயோ புழுக்கம் கூடிக் கொண்டிருந்த்து.

தலைவர்கள் முன்கூட்டியே தீர்மானித்து இறுதி யாத்திரைக்கான வண்டிக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள் போலும்! அலங்கரிக்கப்பட்ட வண்டி உள்ளே நுழைந்தது. உடனே வண்டியை மறித்தார்கள் எமது தோழர்கள். “வண்டி மிஞ்ச வேண்டுமானால் உடனே இடத்தைக் காலி செய்” என்று எச்சரித்தார்கள். எதுவும் புரியாமல் பயந்து போன ஓட்டுனர் மறுகணமே இடத்தைக் காலி செய்தார்.

சேரன், வடிவேலு, அமிர், சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணி என திரையுலகத்தினர் வந்திறங்கினர். “இறுதி யாத்திரையை எப்படி நடத்துவது, எப்போது நடத்துவது என்று எந்த தலைவரும் முடிவு செய்ய முடியாது. இங்கே கூடியிருக்கும் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார் சேரன். பேச முடியாமல் கண்ணீர் விட்டார் சத்யராஜ். “ஓட்டுக் கட்சிகள்.. துரோகிகள்” என்று சரமாரியாக வெடித்தார்கள் திரையுலகப் பேச்சாளர்கள்.

தாங்கள் உணர்வு பூர்வமாகப் பேசினோமா  அல்லது சூழலால் உந்தப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விட்டோமா என்ற கேள்விக்கான விடை இந்நேரம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். எவ்வாறாயினும் அந்தப் பேச்சு கூட்டத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது.

ஆலோசனை முடிந்து முடிவை அறிவிக்க மேடையேறினார் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன். “இரண்டு கருத்துகள் இருக்கின்றன. நாளை அடக்கம் செய்யலாம் என்பது ஒரு கருத்து” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் அதனை ஆமோதித்த்து கூட்டம். “இரண்டாவதாக தலைவர்களின்  கருத்து என்னவென்றால்..” என்று அவர் பேச முயன்றார். கூட்டம் அதனை அனுமதிக்கவில்லை. “துரோகிகள் ஒழிக” என்று முழக்கமிடத் தொடங்கியது. “நீங்கள் என்னைப் பேச அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்கள். தலைவர்களுடைய கருத்தை அவர்களே சொல்லட்டும்” என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.

எந்த தலைவர் பேசுவது? திருமா கையில் மைக்கை கொடுத்தார்கள். அவரைப் பேசவிடாமல் கூட்டம் கூச்சல் எழுப்பியது. ஒரு மோதல் சூழ்நிலை ஏற்படவே அதனை அமைதிப் படுத்த வேண்டியதாயிற்று. மீண்டும் மைக் சேரன் கைக்கு வந்த்து. “நாளை அடக்கம்” என்ற கருத்தில் திருமாவும் உடன்பட்டார். மற்ற தலைவர்களுக்கு… வேறு வழியில்லை.

தலைவர்கள் புறப்பட்டனர். உரைகள் தொடர்ந்தன.. சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படவேண்டும். கொளத்தூர், பெர்ரம்பூர், ஜமாலியா, பின்னி குக்ஸ் ரோடு, ஒட்டேரி, புரசவாக்கம் ஐ ரோடு, டவுட்டன், சூளை, யானைக்கவுனி வழியாக மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைய வேண்டும் என்பது முடிவு.

ஆனால் முத்துக் குமாரின்  இறுதிப் பயணம் தீர்மானிக்கப்பட்ட பாதையில் செல்லவில்லை.

தொடரும்…

  1. மக்கள் திரள் போராட்டம் வெடிக்கட்டும்,
    இந்திய மேலாதிக்க அரசை மோதி வீழ்த்துவோம்,

    தன் உடலையே ஆயுதமாக்கிவிட்டார், முத்துக்குமார், அவரை எரிப்பதோடு மட்டுமல்ல,அந்தச்சாம்பல் சூடு சொரணையற்ற மக்களுக்கு உயிர் கொடுக்கட்டும், தமிழகம் முழுக்க கொண்டு செல்வோம், இனி அந்த சாம்பலும் ஆயுதமே,

    அவரின் ஆயுதம் ஏந்துவோம்,

    மேலும் ம க இ க ,பு.மா.இ.மு ஆகிய புரட்சிக அமைப்புக்கள் போர்க்குணத்தை ஓட்டு கட்சிகளும் மாணவர்களும் புரிந்து கொண்டிருப்பர்,

    மேலும் பு.ம.இ.மு அங்கு செய்த போரைக்காண நக்கீரனில் ….

    http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=118

    கலகம்

  2. முத்துக்குமரனுக்கு இறுதி அஞ்சலி.

    புரட்சி பொங்கி வெடிக்க வேண்டிய பொழுது, குறைந்த பட்சம்…. தமிழகத்திலாவது திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்து புரட்சி வெடிக்க வேண்டும். மானமுள்ளவர்கள் இந்த மூன்று கட்சிகளையும் கட்டாயம் புறக்கணிக்க வேண்டும்.

  3. மீண்டும் ஒரு முத்துக்குமாரைப் பறிகொடுக்கக்கூடாது.
    வீரத் தமிழனுக்கு எங்கள் வீரவணக்கங்கள்.

    ஈழத் தமிழர்கள்

  4. தன்னுயிரை ஈந்த முத்துக்குமரனை மெச்சுகிறோம் ……ஆனால் உயிரை விட நீங்கள் செய்யவேண்டியது நிறையவே உள்ளதால் தமிழக உறவுகளே மீள கிடைக்காத உயிரை வீணாக்காதீர்கள் .ஒரு முத்துக்குமரன் போதும.உங்கள் தியாகத்தை போற்றுகிறோம் .நம் ஈழத்தில் செல் மழை ,விமான குண்டு வீச்சு நிறுத்த ஏதாவது செய்யுங்கள் . அங்கு பத்திரிகைத்த்டை தொண்டு நிறுவனக்கள் செல்லதடை எது வித உண்மையுமே உலகுக்கு வரவில்லை. ஈழமக்கள் துயர் தீர வழி செய்யுங்கள். . நிலாமதி , .

  5. hai all iam periyar t.k,,,,, puthiya jananayagam 13 varusama padikiran aanalum avinga ampalapattathu muthukumar matterluthaN,,, MUTHUKUMARA avangaloda varrkaparvaila randu naala varuthu eduthuthaanga,,, thedeernu paasam pongi eeruthi oorvalam varai poiddanga

  6. ஹாய் விஜய்,
    யுவர் ஸ்டொமக் பர்னிங் டூ மச்
    டு யூ வான்ட் ஜெலுசில் ஆர் ஈனோ…
    எனிதிங் அவெய்லபில் ரெடிலி
    24 அவர்ஸ் நான் ஸ்டப் சர்வீஸ்
    ஒன் ரெக்வஸ்ட்…!

    உங்களால் முடிந்தால் முத்துக்குமாருக்கு உரிய முறையில் அஞ்சலி செலுத்துங்கள்…அதை விடுத்து ஏன் இப்படி…?

  7. எத்தனையோ சாதனைகள் செய்யவேண்டிய நேரத்தில் எங்கேயோ பறந்து சென்றுவிட்டாயே முத்துக்குமார.

    பதிவிற்கு நன்றி .

    தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

    http://www.newspaanai.com/easylink.php

  8. முத்துகுமாரின் தியாகம்,நம்மில் மேலும் ஒற்றுமையை வளர்க்கட்டும்.தமிழர்கள் ஒன்றூபடுவோம்.மத்திய அரசை எதிர்த்து போராடுவோம். 6 கோடி தமிழ்ர்களின் உண்ர்வுகளை மதிக்காத காங்கிரஸையும்,சோனியாவையும் தமிழகத்தில் இனி அனுமதிக்க மாட்டோம் என்று சபதம் கொள்வோம்

    வரும்,பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைத்தாலும் அவர்களை அணைத்து தொகுதிகளீலும் தோற்கடிக்க வேண்டும் என்று உறுதி கொள்ளவேண்டும்.

    இனி தேசிய கட்சிகள்,நமக்கு தேவையில்லை.தமிழர்களின் உயிர்கள் அவர்களுக்கு பெரியதாக படவில்லை.இன்று ஈழ தமிழன் ,நாளை நமக்கும் அந்த நிலைவரலாம்.தமிழர்களே ஒன்றுபடுங்கள்.

    வேறு மாநிலங்களில்,தேசியகட்சிகள்,அந்த மாநிலத்தின் நலனை முன் வைத்து போராடாமல் அங்கு அவர்கள் கட்சி நடத்தமுடியாது.
    ஆனால்,இங்கு,காங்கிரஸ்,தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டே, அரசியல் செய்கிறார்கள்.இந்த தைரியம் அவர்களுக்கு யார் கொடுத்தது.
    முத்துகுமார் தியாகத்தில் விளைந்த இவ்வெழுச்சியை தமிழகத்தின் மூலை முடுக்கல்லாம் கொண்டு செல்வோம்
    காங்கிரஸை இனி தமிழகத்தில் வளர விடகூடாது.
    தமிழக மீனவர்கள்,பல்லாயிரம் பேர் ஆண்டு முழுவதும் கொல்லபடுகிறார்கள்.அதற்கு இலங்கை மீது போர் தொடுக்காமல் ,அவர்களுக்கே ஆயுதம் தந்து நம் தமிழ் சகோதரர்களை கொன்று குவிக்க உதவுகிறது.

    ஆனால்,மும்பை தாக்குதலில் சில நூறு பேர் இற்ந்ததற்கு ,பாகிஸ்தான் மீது போர் தொடுப்போம் என்று அச்சுருத்துகிறது நம் இந்திய அரசு.

    வட மாநில மக்கள் என்றால் ஒரு நிலை,தமிழக மீனவர்கள் என்றால் ஒரு நிலை.தமிழனின் உயிருக்கு அவ்வள்வு தான் மதிப்பு.தமிழக மீனவர்களை காப்பாற்றாத ,ந்ம் இந்திய அரசு,ஈழ தமிழனை காப்பாற்றும் என்று எதிர்பார்ப்பது.
    காங்கிரஸ் ஒழிக,தமிழர்களை கொன்று குவிக்கும் சோனியாகாந்தி ஒழிக்.

  9. புலிகளுடன் அரசியல் தீர்வு பற்றி பேசவேண்டும் என்பதை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.

    அதுமட்டுமல்ல, இந்தியா இலங்கையிடம் கேட்டுக்கொண்டு இலங்கையில் வாழும் எல்லா தமிழ்

    மக்களையும் புலிகளிடம் கொடுக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். பிரபாகர்னின் கீழ்

    இருக்கும் போராளிகள் விடுதலை வீரர்கள். அவர்கள் ஈழத்தவரின் விடுதலைக்காக ஓயாது உழைத்து

    வருகிறார்கள். அவர்களுக்கு இலங்கை ஈழத்தையும் ஈழத்தவர்களையும் கொடுக்க எல்லாவிதமான

    உதவிகளும் செய்யவேண்டும். எந்த ஈழத்தவராவது பிரபாகரனை விட்டுவிட்டு இலங்கை அரசாங்கத்திடம்

    வந்தால் அவர் கைது செய்யப்பட்டு பிரபாகரனிடம் ஒப்படைக்கவேண்டும். கருணா, டக்ளஸ்

    ஆகியோரை கைது செய்து பிரபாகரனிடம் ஒப்படைக்கவேண்டும். அதுமட்டுமல்ல, சந்திரிகா, ராஜபக்ச

    ஆகியோரின் உறவினர்களாக இருக்கும் தமிழர்களையும் இதே போல கைது செய்து பிரபாகரனிடம்

    ஒப்படைக்கவேண்டும். அதுமட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கை தமிழர்களும்

    திருப்பி அனுப்பப்பட்டு அவர்களும் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும்

    வலியுறுத்துகிறேன். பல்கலைக்கழகங்களிலும் மற்ற வேலைகளிலும் இருக்கும் எல்லா ஈழத்தமிழர்களும்

    கட்டாயமாக அந்தந்த நாட்டினரால் வேலை பிடுங்கப்பட்டு பிரபாகரனிடம் அனுப்பி வைக்கப்படவேண்டும்

    என்பதையும் வலியுறுத்துகிறேன்.

    அதே போல மும்பையில் பயங்கரவாதம் செய்த பயங்கரவாதிகளுடனும் இந்திய அரசு போரிட்டு

    அவர்களை கொன்றதை கண்டிக்கிறேன். அவர்களுடன் அரசியல் தீர்வு பற்றி பேசவேண்டும். அவர்கள்

    இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க விரும்பினால் அதனை அவர்களுக்கு

    செய்து தரவேண்டும். அது மட்டுமல்ல, அவர்கள் இந்தியாவை பாகிஸ்தானின் அடிமை நாடாக ஆக்க

    விரும்பினால், அதற்கும் அவர்கள் கோரிக்கை படி நடந்து பாகிஸ்தானின் அடிமை நாடாக

    எழுதித்தரவேண்டும். அவர்களை கொல்லக்க்கூடாது. அது இஸ்லாமியர்களது உரிமைகளை பறிப்பதாகும்.

    எவ்வளவு சிறிய சமூகமாக இருந்தாலும் அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்பதால்,

    இந்தியாவிலுள்ள எல்லா சமூகத்தினருக்கும் தனி நாடு கொடுக்க ஆவன செய்யவேண்டும். தமிழ்நாட்டில்

    வாழும் தெலுங்கர்களுக்கு தமிழ்நாட்டில் தனி நாடு கொடுக்க வேண்டும். தமிழ் நாட்டில் வாழும்

    கன்னடத்தினருக்கு தனி நாடு கொடுக்க வேண்டும்.தமிழ்நாட்டில் வாழும் வன்னியர்களுக்கு தனி நாடு

    கொடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் கோமுட்டி செட்டிகளுக்கும் தனி நாடு கொடுக்கப்பட

    வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் இலப்பை முஸ்லீம்களுக்கு தனி நாடு கொடுக்கப்படவேண்டும்.

    தமிழ்நாட்டில் வாழும் உருது பேசும் முஸ்லீம்களுக்கு தனி நாடு கொடுக்கப்படவேண்டும். தமுமுகவுக்கு

    ஒரு தனி நாடும், தவ்ஹீத் ஜமாத்துக்கு ஒரு தனி நாடும் கொடுக்கப்படவேண்டும்.

    இஸ்லாமிய பயங்கரவாதிகள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட அவர்கள் அப்பாவிகளை கொல்வது

    பற்றி யாரும் பேசக்கூடாது. உரிமைப்போராட்டத்தில் அப்படி சில கொலைகள் நடப்பது இயல்பானதுதான்

    என்று எல்லோரும் பேசவேண்டும். அவ்வாறு கொலைகள் செய்வது தவறு என்று பேசுபவர்கள் உடனே

    கொளுத்தி கொல்லப்படவேண்டும். இல்லையேல் முத்துக்குமார் போல இஸ்லாமியர்களும் தற்கொலை

    செய்து கொள்வார்கள் என்பதை இங்கே குறிப்பிடவேண்டும். ஆனால், எந்த உரிமைப்போராளிகளையும்

    இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ கொல்லக்கூடாது, அவர்கள் பொதுமக்களையும்

    கொல்லக்கூடாது. அது மிகவும் தவறானதாகும் என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்.

    புலிகள் இஸ்லாமிய பயங்கரவாதிகள், நக்ஸலைட்டுகள் ஆகியோர் இந்திய போர்வீரர்களையும் இலங்கை

    போர்வீரர்களையும் போலீஸையும் அப்பாவி பொதுமக்களையும் கொல்ல எல்லா உரிமையும் உள்ளது

    என்பதை இங்கே மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    வாழ்க புலிகள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நக்ஸைலைட்டுகள்.
    ஒழிக அரசாங்கம், ஒழிக பொதுமக்கள்

  10. முத்துக்குமாரன் தற்கொலையும், தனிநபர் பயங்கரவாதமும்

    இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்று திட்டமிட்ட வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டது. இரண்டாவது உணர்வுகளின் அடிப்படையில் தற்செயலானது. இவை இரண்டும், அரசியல் ரீதியாகவே தற்கொலைதான்.

    புலிப்பாசிசம் எப்படி தனிநபர் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு, சமூகத்தை தனக்கு எதிராக நிறுத்தி சீரழிந்து அரசியல் ரீதியாக தற்கொலை செய்கின்றதோ, அப்படித்தான் தனிநபர் தற்கொலையும்;. இந்த வகையில் முத்துக்குமாரனின் தற்கொலையும், புலியிச அரசியல் எல்லைக்கு உட்பட்டதுடன், அதுஎதான் வழிகாட்டியுள்ளது. மக்கள் விடுதலைக்கு வழிகாட்டாத புலிப்போராட்டமோ, தற்கொலையை தேர்ந்தெடுத்தது. அதையே தன் தோல்வியிலும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுகின்றது.

    சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து, அவர்களைச் சார்ந்து போராட முடியாது போன நிலையில் தான், புலியிசம் மனித அவலத்தை தன் அரசியலாக உற்பத்தி செய்கின்றது. இதேபோன்று, தமிழ்நாட்டு போலி தமிழ் தேசிய உணர்வாளர்களில் நம்பிக்கை இழந்து, தனிமனித தற்கொலை மூலம் தனிமனிதர்கள் தீர்வை நாடுகின்றனர். அது அனுதாப அலையாக மாறி வடிகின்றது. இப்படி இவை தனித்தனி அவலமாக வெடிக்கின்றது.

    சமூகத்தை அணிதிரட்டி அவர்கள் போராடுவதன் மூலம் தான், எதையும் சாதிக்க முடியும் என்ற அடிப்படையான விடையத்தை நிராகரித்து, தனிமனிதன் தன்னைத்தான் மாய்த்துக் கொள்வதன் மூலம், சொல்லும் செய்தி கூட சமூக அதிர்வை ஏற்படுத்துகின்றது. ஆனால் அது தீர்வைத் தருவதில்லை. அனுதாப அலையாக, பிழைப்புவாதிகளிள் பிழைப்புக்கு அனுகூலமாக மாறுகின்றது.

    தனிநபர் பயங்கரவாத தாக்குதல் சொல்லும் அதே செய்தியைத்தான், தற்கொலைத் தாக்குதல் தருகின்றது. ஆனால் இவ்விரண்டையும் ஒரு அரசியல் வழியாக, தீர்வாக யாரும் முன்வைக்க முடியாது.

    தனிமனிதன் எல்லையில் அது கலகமாக இருந்தாலும், தனிமனிதன் இந்த சமூகத்துக்கு எதிராக தன் உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், அவை சமூகத்தின் விடுதலையை வழிகாட்டுவது கிடையாது.

    அனுதாபம், கண்மூடித்தனமான உணர்ச்சி சமூகத்தை அறிவியல் பூர்வமாக வழிநடத்துவதில்லை. முத்துக்குமாரன் வெளிப்படுத்திய செய்தியை, பிழைப்புவாத புலிப்பாசிச எடுபிடிகளின் சொந்த சுயநலத்துக்கு ஏற்ப அது அம்மணமாகிவிட்டது. அந்த எல்லைக்குள் முத்துகுமாரனின் அறிவு சுருங்கி கிடந்தது. வெறும் உணர்ச்சி, நம்பிக்கை மீதான கீறல், அங்குமிங்கும் ஏற்பட்ட சொந்த சிதைவு தற்கொலையாக மாறுகின்றது.

    இப்படி சமூகத்தில் நம்பிக்கையற்ற இந்திய விஸ்தரிப்புவாத பொருளாதார நலனுக்கு உட்பட்ட விசுவாசிகளிள் அரசியல் எல்லைக்குள், அவை மாரடிக்கின்றது. அந்த வகையில் அந்த இளைஞனின் உணர்ச்சிவசப்பட்ட அறியாமை, சமூகத்தின் ஓட்டுமொத்த பிற்போக்கு சமூகக் கூறுகளை இனம் காணத் தவறிவிடுகின்றது. இந்த அரசியல் மூலம், இந்தியாவின் தமிழர் சார்பு தலையீpட்டின் மூலம் தீர்வு காண முடிகின்றது.

    இந்திய அரசின் தலையீட்டை தமிழர் சார்பாக கோரும் அரசியல் எல்லையில், மக்கள் போராட்டத்தை நிராகரிக்கும் எல்லைக்குள், இந்த தற்கொலை அரசியல் சாரம் அமைந்துள்ளது. மக்கள் விரோத புலி அரசியல் மீதான விமர்சனமின்றிய, ஓரு தலைப்பட்சமான வழிபாடு, அந்த அரசியல் கண்ணோட்டம் மொத்த தமிழ் மக்களுக்கு எதிரானதாக மாறுகின்றது.

    இந்திய ஆளும் வர்க்கங்கள், அதன் எடுபிடி பார்ப்பனிய கும்பல் வரை பேரினவாதத்தை ஆதரிக்கின்றது என்ற எடுகோள், மறுபக்கத்தில் உள்ள பாசிசத்தின் மக்கள் விரோத கூறை அரசியல் ரீதியாக முன்வைத்து அரசியல் ரீதியாக அணிதிரட்ட தவறுவது, நிலைமைக்கும் உணர்ச்சிக்கும் பின்னால் வால்பிடித்து செல்லும் அரசியலாகும். தமிழ் மக்கள் பேரினவாதம் மற்றும் புலிக்கு எதிராக வாழ்கின்ற எதார்த்தத்தை இனம் காணத்தவறுவது, அதை அம்பலப்படுத்த தவறுவது, படுமோசமான அரசியல் தவறுகளுக்கு தமிழக இளைஞர்களை எடுத்துச்செல்லுகின்றது.

    வலதுசாரி பாசிசம் இலங்கை முழுக்க இலங்கை அரச வடிவிலும் புலிகள் வடிவிலும் மக்களுக்கு எதிராக இருப்பதை கவனத்தில் எடுக்காது, ஒரு தலைப்பட்சமாக பேரினவாத அரசுக்கு எதிராக காண்பது, ஓட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எதிரானதாக பயன்படுத்துவதாகும். இதில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் மற்றொரு பக்கத்தை மூடிமறைத்து அதை பாதுகாப்பது மன்னிக்க முடியாது. இதில் இடதுசாரிகள் பலர், தமிழ் குறுந்தேசிய இன உணர்வுடன் ‘சிங்களவன்” என்று ஒருமையில் அடையாளப்படுத்தி கூறுவது, சிங்கள பாட்டாளி வர்க்கத்தை தம் எதிரியாக முத்திரை குத்தும் அரசியல் அபத்தம் வெறும் உணர்ச்சிவசப்பட்ட இனவாத உணர்வாகும்.

    தமிழன் என்ற குறுந்தேசிய இன உணர்வை விமர்சமின்றி அங்கீகரித்து அதை தூக்கி முன்னிறுத்துவதும், மறுபக்கத்தில் சிங்களவன் என்று தூற்றுவதும் பாட்டாளி வர்க்க அரசியல் உணர்வல்ல. எம்முடன் நெருங்கிய இந்திய தோழர்கள் மத்தியில், இதை கண்டு அதிர்ந்து போகின்றோம். வால்பிடித்தல், உணர்ச்சிவசப்படல், பெரும் அலைக்கு பின்னால் ஒடுதல் எல்லாம் பாட்டாளி வர்க்க உணர்வை மறுதலிப்பதாக உள்ளது. இலங்கையில் தமிழ் பாட்டாளி வர்க்கம் என்ன செய்யவேண்டும் என்ற கருதுகோள்களை, எமது போராட்டத்தின் அடிப்படையை தகர்த்து தனிமைப்படுத்தி கூனி கூறுக வைத்துள்ளது. சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் துணையற்ற தனித்த எதிர்நீச்சலாக இருப்பதும், அதை துணிச்சலுடன் எதிர் கொள்வதும் நாம் சந்திக்கும் சவால்தான்.

    இதன் பின்னணியில் தான், இந்த தற்கொலையின் பின்னுள்ள அரசியல் வெற்றிடமாகும். இந்த வகையில் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் வெளியில், அறிவியல் பூர்வமாக வழிகாட்டி எடுத்துச்செல்லும் அரசியல் தலைமையின் இன்மைதான், வெம்பி தற்கொலையாகின்றது. ஈழத்தமிழ் மக்கள் எதார்த்த உண்மையில் புரிந்து கொண்ட செயல்பாடு, அதை அடிப்படையாக்கிய அரசியல் முன்முயற்சி, இந்த தற்கொலையை தடுத்து நிறுத்தும். வெறும் அற்ப உணர்ச்சிக்கும், பொது அலைக்கு பின்னால் வால் பிடித்து ஒடுவதும், அப்பாவி இளைஞர்களின் தற்கொலைக்கு உதவுகின்றது.

    போலியான தேசியவாத அரசியல் பித்தலாட்டங்களில் கருணாநிதி முதல் நெடுமாறன் வரை, நம்பிய இளைஞர்கள் வெம்பி மடிவது அரசியல் தற்கொலையாக நிகழ்கின்றது.

    புலித்தேசியம் அரசியல், இராணுவ வழியின்றி பேரினவாதம் மூலம் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடும் மனித அவலத்தை, ஒரு தலைப்பட்சமாக ஊதிப்பெருக்கி விடும் உண்மைக்கு வெளியில் தற்கொலை அரங்கேறுகின்றது. புலிகள் தம் அரசியல் வழியில் தேர்ந்தெடுத்த அதே தற்கொலையை, மற்றவன் மீது திணிக்கின்றது.

    மனித அவலத்தை விதைத்து, அதில் அறுவடை செய்யும் பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும், தற்கொலையையும் தம் பிழைப்புக்காகத் தான் ஊக்குவிக்கின்றனர். இந்திய விஸ்தரிப்புவாத பொருளாதார நலனை கேள்விக்குள்ளாக்காத பிழைப்புவாத நாய்களுக்கு, முத்துக்குமரன் போன்ற அப்பாவிகள் மரணம் அரசியல் ரீதியாக அவசியமாகிவிட்டது. புலிகளுக்கு தமிழ் மக்களின் மரணங்கள் எப்படி அரசியல் ரீதியாக அவசியமாகி அதுவே அவர்கள் அரசியலாகிவிட்டதோ, அப்படியே முத்துக்குமரன் மரணம் இந்திய போலி தமிழினவுணர்வு பிழைப்புவாத கழிசடைகளுக்கு அவசியமாகிவிட்டது.

    பி.இரயாகரன்
    31.01.2009

  11. ரயாகரன் தோழரே,
    நீங்கள் இந்த பிரச்சனையை மிகவும் வறட்சியாக‌ பார்க்கிறீர்கள் என்று நான் விமர்சிக்கிறேன்.

  12. முத்துக்குமரன் தற்கொலை செய்யத் தூண்டிய கருத்தின் பின் அவனின் அறியாமையும் உள்ளது. அவன் தமிழினத்தை காப்பற்ற நம்பும் தலைமை எது? அவன் கூறுகின்றான் ‘களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே… அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள்.” தமிழகம் உதவ தமிழீமம். இங்கு அவன் கோருவது தலையீடு. அது தமனுக்கு சார்பாக. இப்படி அவன் நம்புகின்ற அரசியல் எல்லைக்குள்ளா?, சர்வதேசியவாதிகள் உள்ளனர்.

    அவன் நம்பும் தலைமை ஈழத்தமிழனத்தை அழித்துவிட்டது. அது அவனுக்கு தெரியாமல் பொய்யிருக்கின்றது. இப்படி தமிழ் நாட்டுக்கே தெரியாமல் போய்யிருக்கின்றது. இன்றைய தலைமுறைக்கு சர்வதேசியவாதிகள் இதை தெளிவபடுத்தவில்லை என்பதுதான் இங்கு உண்மை.

    அவன் நம்பும் தலைமை பத்தாயிரத்துக் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. வடக்கில் இருந்து ஒரு லட்சம் முஸ்லீங்களை 24 மணி நேரத்தில் போட்டு இருந்த உடுப்பைத் தவிர அனைத்தையும் உருவிய பின் வடக்கில் இருந்து துரத்தியவர்கள். இன்றம் அவர்கள் அகதி முகாமில்தான் வாழ்கின்றனர். பள்ளிவாசல் முதல் பல கிராமங்களில் வாழ்ந்த அப்பாவி மக்களை நூற்றுக்கணக்கில் வெட்டியும் சுட்டும் கொன்றவர்கள். தமழ் மக்களின் கருத்து எழுத்து பேச்சு சதந்திரம் கொடுத்;தால் புலிகள் ‘அரசியல் அனைதையாகிவிடவார்கள்” என்று கூறி, அதை தமிழ் மக்களுக்கு மறுத்தவார்கள். போரட்டத்தின் ஐக்கியத்தை மறுத்து, அவர்களை கொன்றவார்கள். இப்படி பல. இனறுற மக்களை தம் கேடயமாக்கி பலியிடுகின்றனர். இவர்கள் எப்படி தமிழனத்தைக் காப்பாற்றும் தலைவனாவன்.

    இப்படி நம்பும் அப்பாவித்தனம், அதை தெளிவபடுத்த தவறிய அரசியல் பொது அரசியல் தளம் சர்வதேசிய அரசியல் அடிப்படை ஆட்டுகின்றது. இப்படி தலைவனாக நம்பும் எல்லைக்குள் சமூகம். இதை விழிபுற வைக்காமை அடிப்படையான அரசியல் தவறல்லவா!?

    அங்கு புலிகள் ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தை நடத்தவதாக நம்புவதும், தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் பற்றி மதிப்பீடுகளும், தற்கொலைகான குறுகிய அரசியலாக உள்ளது. மரணத்தில் உள்ள நோக்கம் எவ்வளவுதான் நேர்மையாக இருந்தாலும்;, அவனின் அரசியல் அடிப்படை தெளிவற்றது. இந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் உள்ளனர் என்பதும், இதை தெளிவுபடுத்தும் அரசியல் அவர்களின் உணர்வுக்குள் இல்லை என்பதும் வெளிபடையான உண்மை. அதை சர்வதேசியம் தன் கடமையாக முன்னிலைப்படுத்தி செய்யவில்லை.

    அவர்களின் இயலாமை தற்கொலையாகின்றது.

  13. பி.இரயாகரன் பார்வை நியாயமானது, வினவு புலிகளின் பிரசார தளமானவே மாறியது ஆச்சரியம்.
    கருணாநிதி முதல் நெடுமாறன் வரை என்பதில் கருணாநிதி முதல் வினவு வரை என்று இனி எழுதலாம்.

  14. வறட்சியாக பார்க்கின்றோம் என்பது, உணர்ச்சின் பின்னால் ஒடுவதல்ல. எழுச்சிக்கு பின்னால் வால்பிடிப்பதல்ல. தமிழன் என்ற அடையாளத்தின் பின்னால் ஒடுவதல்ல.

    ஈழத் தமிழ் பாட்டாளி வர்க்கம் என்ன செய்வது? இந்த தற்கொலையை மற்றவர்கள் பார்பதில் இருந்து எப்படி நீங்கள் வேறுபாடாக பார்க்கின்றீர்கள்.

    முத்துக்குமாரன் வைத்த அறிக்கையில் எதில் முரண்பாடுகின்றீர்கள்? அதை எங்கே எப்படி விளங்கப்பபடுத்தியுள்ளீர்கள்?

    இதைச் செய்யாமல் போற்றுவது, கூட்டத்துடன் கூட்டமாக நிற்பது சர்வதேசியமல்ல. இது ஈழத்து அரியலை தீர்மானிக்கின்றது. வர்க்கம் கடந்த தேசியத்தை எமக்கு திணிக்கின்றது தோழர். தனி விமர்சனம் இன்று வெளியிட உள்ளோம்.

  15. ஒரு தற்கொலை என்ற அளவில் முத்துக்குமாரின் மரணம் ஒரு புலி ஆதரவாளனின் இயலாமை அல்லது ஏதாவது செய்தாகவேண்டும் என்ற உந்துதல் என்பதாக குறுக்கிவிடாமல் அந்த மரணத்தின் பின்னணியில் இந்திய அரசின் கொடூரத்தனத்தை அம்பலப்படுத்தும் திக்கில்தான் முத்துக்குமாரின் தற்கொலையை பார்க்கவேண்டுமென கருதுகிறேன். நிச்சயமாக இது புலி ஆதரவு இயக்கமோ, பிரச்சாரமோ அல்லது புலிகளுக்கான தார்மீக பலம்தரும் நிகழ்வுப்போக்கோ அல்லவெனக் கருதுகிறேன்.

    தோழமையுடன்
    செங்கொடி

  16. ‘ஒரு தற்கொலை என்ற அளவில் முத்துக்குமாரின் மரணம் ஒரு புலி ஆதரவாளனின் இயலாமை அல்லது ஏதாவது செய்தாகவேண்டும் என்ற உந்துதல் என்பதாக குறுக்கிவிடாமல் அந்த மரணத்தின் பின்னணியில் இந்திய அரசின் கொடூரத்தனத்தை அம்பலப்படுத்தும் திக்கில்தான் முத்துக்குமாரின் தற்கொலையை பார்க்கவேண்டுமென கருதுகிறேன். – தோழமையுடன் செங்கொடி”

    அதை நாம் மறுக்கவில்லை.

    ‘நிச்சயமாக இது புலி ஆதரவு இயக்கமோ, பிரச்சாரமோ அல்லது புலிகளுக்கான தார்மீக பலம்தரும் நிகழ்வுப்போக்கோ அல்லவெனக் கருதுகிறேன்.”

    இதில் நீங்கள் கருதுகின்றீர்கள். பொதுத்தளத்தில் அப்படியல்ல. இதற்கு வெளியில், ஈழப் போராட்ட அரங்கில் ‘புலி ஆதரவு இயக்கமோ, பிரச்சாரமாக” இருக்காத வண்ணம் போராட்டம் அமையவில்லை. பொதுக் கோசம் சரியாக உள்ளது. ஆனால் ஒரு எல்லைக்கு உட்பட்டது. புலிப்பாசிசம் மீதான, அதன் மக்கள் விரோத கூறுகள் மீது உங்கள் போராட்டம் நடக்கவில்லை. 10 வருடத்துக்கு முந்தை பழைய பு.ஐ, பு.க இதழ்கள் இதை செய்துள்ளன. ஆனால் இன்று அதை செய்யவில்லை. குறிப்பான இன்றைய போராட்டச் சூழலில், இதில் ஒரு மௌனம்.

  17. திமுக, அதிமுக, காங்கிரசு, பா.ஜ.க, அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் ஆகிய அனைவரும் ஓரணியில் திரண்டிருந்தனர். முத்துக்குமார் ஓரங்கட்டப்பட்டிருந்தார்.//

    :(((((((((((

  18. அவன் தமிழினத்தை காப்பற்ற நம்பும் தலைமை எது? அவன் கூறுகின்றான் ‘களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே..

    ஆமா, அந்தத் தலைமை, நம்ம இராயகரன் தானு முத்துக்குமார் எழுது வைத்துடு போயிருந்தா. நம்ம இராயா கம்முனு இருபாரு.

  19. Muthu Kumaran by his death evoked the real sentiments of people in Tamil Nadu. His martyrdom defeated the influence of the views of Indian Intelligence on Tamils here that India is not supporting the cause of Elam since the perpetrators of Rajiv’s death are LTTE. No more people in Tamil Nadu are ready to subscribe to these views. It also exposes the Congress party and erodes its root in Tamil Nadu. While brushing aside the martyrdom of Muthu Kumar, it is unfortunate Rayakaran disguises himself as a Muslim fanatic and narrates the suffering of Muslims alone. Comparing the mistakes of Muthu Kumaran’s statement with the faults LTTE is ridiculous. His death is primarily directed to Tamils in Tamil Nadu. Once the awareness is created which was hitherto silenced by the compromising ways of mainstream politicians it is up to the genuine parties to regulate the struggle through their uncompromising views. So ridiculing his martyrdom would echo only the perception of Karunanidhi that Muthu Kumaran’s deah is politicised

  20. >>சே குவேராவையும், மாவோவையும், ஹோ சி மின்னையும் காட்டிலும் தலை சிறந்த இராணுவத்தலைவன் பிரபாகரன்” என்று சம்மந்தமே இல்லாமல் மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார் வைகோ. அவருக்கு நேர் எதிரில் நின்று கொண்டிருந்த மாணவர் கூட்டமோ ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரிப்பதில் தீவிரமாக இருந்தது.<<<> பிரபாகரன் ஆயுதம் தூக்க விரும்பவில்லை. தூக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்”
    சே குவேராவையும், மாவோவையும், ஹோ சி மின்னையும் காட்டிலும் தலை சிறந்த இராணுவத்தலைவன் பிரபாகரன்”<<<

    அட ஈழ மக்களுக்கு போராட்டம் நடத்திட்டு அங்க நீங்கள் நின்னு பூர்சுவா, தரகு முதலாளி அது இதுன்னு தொடர்பில்லாமக் கத்தலயா? அது போல தான்னு வச்சுக்கோங்க.

    முத்துக்குமார் இறுதியாக மருத்துவமனையில் சொன்னதும் புலிகள் தலைவர் பிரபாகரனின் பேரத் தான், ஆகையால இதெல்லாம் இங்க சொல்ரடு ஒண்ணும் தப்பா தெரியல.. நீங்க தான் கண்டுக்கலன்னு சொல்றிங்க. அங்க வந்த மதவங்க வேற மாறி சொல்றாங்க. எல்லாமெ உங்க பார்வையில உங்களுக்கு சார்பானத நல்லா வளைச்சு எழுதி இருக்கீங்க. வைகோ, இராமதாஸ், திருமா அரசியல் ஆதயம் தேடுவாங்கன்னு தெரியும், ஆனா இந்த பெரிய எழுச்சில ‘ தமிழ்ப் பாட்டாளிகளும், சிங்களப் பாட்டாளிகளும் சேர்ந்து போராடணும்.." என்ற தோரணையில சோவின் எதிர்வடிவான இனோரு சோ அ.மார்க்ஸ், இந்து ராமின் எதிர்வடிவான இன்னொரு ராமான இராயகரன் போன்றோரின் அரைவேக்காட்டு ஒற்றைத்தனமான கருத்துக்களைப் பிடித்துக் கொண்டு பேசிட்டிருந்த நீங்கலாம் இப்போ தமிழீள விடுதலைக்காய்த் தன்னை அர்ப்பணித்த முத்துகுமரனின் வித்துடல் வழியனுப்பலில் போய் கிடைக்குற சந்திலும் அரசியல் பண்ணிற்று வந்திருக்கீங்க என்பது தன் புதிய செய்தி.

  21. தோழரே வணக்கம்.

    முத்துக்குமாரை தற்கொலைக்குத் தூண்டிய கருத்தின் பின் அவருடைய‌ அறியாமை உள்ளது என்று கூறுகியிருக்கின்றீர்கள்.
    அது ஈழத்தமிழ் மக்களுக்கு இது தான் சரியான தலைமை என்பதை பற்றிய‌ அறியாமையாக இருக்கலாம். உண்மைதான். ‌நாமும் அதைப்பற்றி நியாயப்படுத்தவில்லையே,
    அவருடைய அந்த தலைமை பற்றிய சாகசவாத கருத்து தமிழ்நாட்டில் தேசியவாதிகள் உருவாக்கி வைத்துள்ள தவறான‌ கருத்தாகும்.அதை சரியானது என்று நாம் எங்கேயும் கூறிட‌வில்லையே.

    மேலும் நீங்க‌ள் இட்டுள்ள‌ பிண்னூட்டங்கள் மூன்றிலும் அவ‌ர‌து த‌ற்கொலையை புலி ஆத‌ர‌வாள‌னின் த‌ற்கொலை என்றே குறிப்பிடுகிறீர்க‌ள்.த‌மிழ‌க‌த்தில் புலி ஆத‌ர‌வு த‌மிழ்தேசிய‌ பித்த‌லாட்ட‌க்கார‌ர்கள் ப‌ல பல ர‌க‌ங்களில் நிறைய இருக்கிறார்க‌ள்.
    ம‌ர‌பு தேசிய‌ வெறிய‌ர்க‌ளும் உள்ளார்கள்,தேசியத்தை மார்க்சிய கண்ணோட்டத்துடன் பார்ப்பதாக கூறிக்கொண்டு இனவாத வெறியர்களாக இருப்பவர்களும் உள்ளார்கள்‌.
    முத்துக்குமார் இந்த இனவாதிகளின் அச்சாக நமக்குத் தெரியவில்லை தோழரே ஆனால் இனவாதிகளின் பல போலி நம்பிக்கைகள் அவரிடமும் இருந்துள்ளது உண்மை.
    அவருடைய கடிதத்தை வாசிக்கின்ற போது அவற்றை கான முடிகின்றது.
    உதாரண‌மாக‌ பிரபாகரனை நாயகனாக வழிபடுவது,கருணாநிதியை நம்பியிருந்தது பிறகு அவன் கழுத்தை அறுத்ததும் அவனை துரோகி என்று நெடுமாறனைப் போல ஜெயலலிதாவை விட கருணாநிதியை கூடுதலாக‌ திட்டித்தீர்ப்பது [நெடுமாறன் அந்த வேலையை பார்ப்பன கும்பலின் பத்திரிகையான தினமணியில் கூட‌ வெட்கமின்றி செய்து வருகிறார்]ஒபாமாவிடம் கோரிக்கை வைப்பது இவை அனைத்தும் அவரை அவர்களுடன் அடையாளப்படுத்துகின்றது என்றாலும் முத்துக்குமார் முழுக்க முழுக்க‌ தமிழினவாத சந்தர்ப்பவாதிகளை போல இல்லை என்றே கருதுகின்றேன்,
    ஏனெனில் அவர் அவ்வாறு இருந்திருப்பாரெனில் இப்படி துணிச்சலாக தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார்.அவரைப்பற்றி நமக்கு விமர்சன‌ம் இருக்கலாம் ஆனால் அவருடைய நடவடிக்கையில் தமிழினவாதிகளிடம் இல்லாத‌ ஒரு நேர்மை இருக்கிறது.
    ஆனால் அவரும் தொடர்ந்து தமிழ்தேசிவாதிகள் ஏற்றிப்போற்றும் அதே கருத்துக்களோடும், கற்பனைகளோடுமான‌ அரசியலில் பயணித்திருந்தால் பின்னாட்களில் அவரும் அவர்களைப் போல மாறியிருக்கக்கூடும்.

    தமிழ்தேசியவாதிகளின் விமர்சனமற்ற அரசியல் சந்தர்ப்பவாத கருத்துக்களால் பிரபாகரனை கதாநாயகனாக தூக்கிப்பிடிக்கும் சாகசவாத ஆட்டத்திற்கு தமிழ் உணர்வுள்ள நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான‌ இளைஞர்கள் பலியாகியிருப்பது உண்மை அப்படி நாம் முத்துக்குமாரைப்போன்ற‌
    துடிப்பும்,வேகமும் கொண்ட ஏராளமான

    [எந்த ‌இயக்கம்,அமைப்புகளையும் சாராத மற்றும் சார்ந்த‌]

    இளைஞர்களை கான முடியும் தமிழினவாதிகள் அவர்களை[‌இயக்கம்,அமைப்புகளை சாராதவர்களை]அமைப்பாக்குவதுமில்லை விமர்சன முறைகளை கற்றுத்தருவதுமில்லை. புலிகளை விமர்சிக்கும் அமைப்புகள் எதிரி என்பதை மட்டும் ஆழப்பதியவைத்துவிட்டு[இதோ அதற்கு மேலே உள்ள‌ பிண்னூட்டத்தை பாருங்கள்
    அதற்கு இது ஒரு வகை மாதிரி]
    அவர்களை தமிழுணர்வு என்கிற வட்டத்திற்குள்ளேயே சுற்றி சுற்றி வரும்படி பழக்கி அப்படியே திரியவிட்டுவிடுகிறார்கள். அவர்களை சரியான திசைவழியில், மார்க்சிய வழியில் கம்யூனிஸ்ட் கட்சி தான் அழைத்து வந்து வழி நடத்த வேண்டும். எனவே அப்படிப்பார்த்தால் இங்கே நிறைய பேர் அது போலத்தான் தோழரே இருக்கிறார்கள்.ஆனால் நாம் இப்போது அதற்கெல்லாம் போக வேண்டியதில்லை அவருடைய தற்கொலை ஈழத்தில் இந்திய அரசின் பயங்கரவத்தை அம்பலப்படுத்துவதைத் தான் நோக்கமாக கொண்டிருந்தது அதற்காகத் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
    நாம் அவருடைய தற்கொலைக்கான‌ நோக்கத்தை,இந்திய அரசின் துரோகத்தை மேலும் பிரச்சாரம் செய்கின்றோம்.
    இது தான் இங்கே நடப்பது.
    இது செய்யக்கூடாத காரியமா ?
    இது தான் நாங்கள் இங்கிருந்து ஈழ மக்களுக்கு செய்யக்கூடிய ஒரே காரியம்.இந்திய அரசை அம்பலமாக்குவது தான் முக்கிய வேலை அது தான் இங்கே யாரும் செய்யாத வேலை.

    முத்துக்குமார் எதிர்பார்த்த முழு அளவிலான‌ நோக்கத்தை அவருடைய‌ தற்கொலை நிறைவு செய்துள்ளதா என்று தெரியவில்லை ஆனால் அது தமிழ் இளைஞர்களிடையே ஒரு உணர்ச்சி அலையை கிளப்பியுள்ளது நிச்சயமாக நாம் அந்த அலையில் மூழ்கி காணாமல் அடித்துக்கொண்டு போய்விடவில்லை.
    நாம் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து எந்த தேசிய உணர்ச்சிக்கும் பலியாகிவிடவில்லை.

    நீங்கள் எதிர்பார்ப்பது அவரைப்பற்றிய விமர்சனத்தையும் கூடவே செய்திருக்க‌ வேண்டும் என்பது
    ஆனால் அதை இப்போது செய்வது சரியா என்று என்ணிப்பாருங்கள் தோழரே.

    தோழமையுடன்
    சூப்பர்லிங்ஸ்

  22. தோழமையுடன் சூப்பர்லிங்க்கு

    உங்கள் இந்த கருத்துடன் நாம் உடன்படுகின்றோம். இதில் முரண்பாடு கிடையாது. முரண்பாடு எங்கே என்றால், தொடர்ச்சியாக நடக்கும் போராட்டத்தில், இந்த வேறுபாட்டை வேறுபடுத்த தவறியதுதான். முத்துக்குமாரன் நிகழ்வு, இதில் குறிப்பிடத்தக்க ஒன்று.

    தனிபட்ட உரையாடல்களில் இந்த முரண்பாட்டை செய்கின்றீர்களா என்பது எமக்கு தெரியாது. ஆனால் எழுத்தில் இது செய்யப்படவில்லை.

  23. ”இப்போ தமிழீள விடுதலைக்காய்த் தன்னை அர்ப்பணித்த முத்துகுமரனின் வித்துடல் வழியனுப்பலில் போய் கிடைக்குற சந்திலும் அரசியல் பண்ணிற்று வந்திருக்கீங்க என்பது தன் புதிய செய்தி.” மக்களை பலியிட்டு அரசியல் செய்யும் புலியிசத்தின் எச்சம் இது.

    தன் இறுதிகாலத்தில் தன் வழியில் அனைத்தையும் சிந்திக்கின்ற முளைச்சலவை அரசியல், தன்னைப்போல் அனைத்தையும் சிந்திக்கின்றது.

  24. >>விமர்சன முறைகளை கற்றுத்தருவதுமில்லை. புலிகளை விமர்சிக்கும் அமைப்புகள் எதிரி என்பதை மட்டும் ஆழப்பதியவைத்துவிட்டு[இதோ அதற்கு மேலே உள்ள‌ பிண்னூட்டத்தை பாருங்கள்
    அதற்கு இது ஒரு வகை மாதிரி]<>தன் இறுதிகாலத்தில் தன் வழியில் அனைத்தையும் சிந்திக்கின்ற முளைச்சலவை அரசியல், தன்னைப்போல் அனைத்தையும் சிந்திக்கின்றது.<<
    Hehehe… சீரியசான பதிவுல உங்க காமெடி தேவையா! உங்களுக்குனு தனியா காமெடி டைம் இருக்குல… அங்க வச்சுக்கோங்க பாஸ்

  25. >>> >>விமர்சன முறைகளை கற்றுத்தருவதுமில்லை. புலிகளை விமர்சிக்கும் அமைப்புகள் எதிரி என்பதை <<<

    அட, அறிவுசீவியே, உங்கள விமர்சிச்சா அத விட்டுருவீங்களா? இதுல நீங்க என்ன புலிகள் என்ன, எல்லாரும் ஒன்று தான். அவங்க யாரையும் குறை சொல்லி புலம்பிட்டு இருக்காம, செயல்ல காட்டறாங்க, அர்ப்பணிப்போட, உங்க மாதிரி ஆளுங்க கிட்ட அது இல்ல. இராயகரன் பதிவுல மாற்றுக் கருத்து பின்னூட்டம் போட்டாலே அந்த ஆளு வெளியிடுறதில்ல, இந்த இலட்சணத்துல
    விமர்சனம் அது இதுன்னு, ஓவரா காமெடி பண்ண வேணாம். நாம தான் ஒழுக்க சீலர்கள், நம்ம பண்ணறது தான் அரசியல், நம்ம தான் கொள்கை பிடிப்பு, வாயுப் பிடிப்போட இருக்கறோம்னு பேசிட்டிருக்றது நீங்க தான்.
    அவங்க இல்ல! புலிகள் பத்தி நேரடியா விமர்சனம் செஞ்சிருக்கேன், அவர்கள் பலரிடமும் சொல்லி இருக்கேன்.
    விமர்சனம் பொது நிலைல , நடு நிலைல இருந்து செய்யப் படனும்.

    தமிழ்த் தேசியம் லாம் அற்பம், எங்க கொள்கை தான் பெரிய புண்ணாக்குனு நீங்க தான் சொல்லி பினாத்திட்டு இருக்கிங்க. முடிஞ்சா தியாகு, சு.ப.வி, மணியரசன் போன்றோரிடம் வாதிட்டு உணமைய நிலைநாட்டி வென்று வாங்க, பேசலாம்.

  26. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மக்கள் சக்தியைத் திரட்டும் பணியை முத்துக்குமார் செய்திருக்கலாம். விலை மதிக்க முடியாத தன் உயிரை மாய்த்து பலருக்கும் தவறான முன்னுதாரணமாக ஆனது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இவரைப் பார்த்து மேலும் பலரும் தற்கொலைக்கு முயற்ச்சிப்பதாக செய்திகள் வருவது வேதனையிலும் வேதனை.

    முத்துக்குமாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படும் பொதுமக்களின் நிலை மிகவும் அதிர்ச்சிக்குரியது. இந்திய அரசு இனியும் தாமதிக்காது இலங்கைத் தமிழர்களை காக்க முடிந்ததை செய்ய வேண்டும்.

  27. முத்துகுமாரின் தியாகம் தற்பொழுது மக்கள் மத்தியில் ஒரு உணர்வு அலையை ஏற்படுத்தி இருந்தாலும், பல கேள்விகளுக்கு விடை எனக்கு தெளிவாகவில்லை..
    1. இம்மாதிரியான தனி மனிதனின் உடலை ஆயுதமாக்கும் செயல்களை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஆதரிப்பது சரியா..?
    2. இது மக்களை ஒன்றிணைத்து போராட முடியாத இயலாமையின் வெளிப்பாடா? அல்லது முத்துகுமார் உயிரோடு இருந்து மக்களோடு இணைந்து செயலாற்றி இருந்தால் இந்த அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பாரா?
    3. பாலஸ்தீனத்தில் எல்லா வழிகளிலும் அடக்கி, ஒடுக்கப் படும் மக்கள் சில சமயங்களில் இம்மாதிரி தனது உயிரை ஆயத்தமாக பயன்படுத்துகின்றனர்… சில நேரங்களில் சுயமாக, சில நேரங்களில் மத ரீதியாக… இவற்றையும் நாம் ஆதரிக்கலாமா? கூடாதா?
    4. இந்திய அரசின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் நாம், புலிகளின் பாசிசத்தையும் எதிர்ப்பது அவசியம் இல்லையா? நம்மில் பலர் புலிகளின் நடவடிக்கைகளின் பேரில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்ற நேரத்தில் இது முக்கியம் இல்லையா..?

    இந்த மாதிரியான கேள்விகளுக்கு வினவோ அல்லது மற்ற தோழர்களோ விளக்கம் அளித்தால், என்னை போன்ற பலருக்கும் உதவியாய் இருக்கும்…

    நான் தோழர் ராயகரனுடைய கருத்துக்கு உடன்படுகிறேன்… அதாவது, புலி பாசித்தையும், இந்திய அரசின் மேலாதிக்கத்தையும் ஒரு சேர எதிர்க்க வேண்டும் .

  28. தோழர் ரயாகரன் அவர்களுடைய நியாயமான கேள்விகளை தமிழரங்கத்தில் போய் படித்து விட்டு பதில் சொல்லவும். அதை விட்டுவிட்டு Raya_unaku _aapu என்ற பெயரில் தோழர் ரயாகரன் அவர்களை இழிவுபடுத்துவது கோமாளித்தனமான செயல் ஆகும்.
    இதை வன்மயாக கண்டிக்கிறேன். பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்து அதற்காக போராடி கொண்டிருப்பவர் என்பது தோழருடைய நூல்களையும், tamilcircle.net -யும் தொடக்கத்தில் இருந்து படிப்பவர்களுக்கு நன்றாக தெரியும். இங்கே நடக்கும் விவாதத்தை பயன்படுத்திகொண்டு சில விச பாம்புகள் கொம்பு சீவலாம் என்ற நப்பாசையில் நெளிகின்றன.

    ஆனால் இவர்களின் பருப்பு இங்கே
    (தோழர் ரயாகரன், வினவு,சூப்பர் லிங்க் ஆகியோரிடம்) வேகாது

    ————————————————————

    தோழர் ரயாகரன் அவர்களுக்கும்
    சூப்பர் லிங்க் கும் நடப்பது ஆரோக்கியமான விவாதம் இதில் தேவையில்லாமல் சில பார்ப்பன கும்பல்கள் உள்ளே புகுந்து கொண்டு உளறி கொண்டு இருக்கின்றன

    விடுதலை

  29. //1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. ///

    முத்துக்குமாரின் கடிதத்தில் இருந்து

  30. Mr.vijay tiruppur,

    //dear all,, pulikalai facistta sollvathum , muthu savai thirippathaiyum sari ma ka e ka SOL seithu parthathu,,,,purinthu kollungal,,,, parppanar sathi,,\\

    //enda, neenga muthukumara facist nu sonneega mai ularthukulla enda maarninga???? kooddam serntha zaisang poduveengala??????
    vijay fm tirupur\\

    // tamillarangam seithi kaddurAI POIYA? neenga poiya?
    ennada visayam? aall pidikka ponneengala???? \\

    // hai all iam periyar t.k,,,,, puthiya jananayagam 13 varusama padikiran aanalum avinga ampalapattathu muthukumar matterluthaN,,, MUTHUKUMARA avangaloda varrkaparvaila randu naala varuthu eduthuthaanga,,, thedeernu paasam pongi eeruthi oorvalam varai poiddanga\\

    ஈழ மக்களின் மீதான பச்சை படுகொலையை தடுத்து நிறுத்த கோரியும் , இதில் இந்தியாவின் நேரடியான பங்கை அம்பலப்டுத்தியும்
    போரடிகொண்டுருக்கும் மக இக
    தியாகி முத்துகுமார் ஊர்வலத்திலும் அப்படியே நட்ந்துகொண்டனர், இதில் பெரியார் தீ.க. விற்கு என்ன இழப்பு வந்து விட்டது?

    சாவு வீட்டில் வந்து சண்டை போடும் உங்களை யெல்லாம் என்னவென்று சொல்வது?

    ஆள் பிடிக்கும் வேலை என்பது என்ன? சாமி கும்பிடும் ஒருவனை தந்தை பெரியாரின் கொள்கைகளில் சேர சொல்வதை ஆள் பிடிக்கும் வேலை என்பீர்களா?

    நல்ல விசயத்திற்கு ஆள் பிடிப்பது தப்பு இல்ல கண்ணு!

    மூட நம்பிகைகளிலும் , கடவுள் நம்பிகைகளிலும் மூழ்கி கிடந்த தமிழ் நாட்டு மக்களை திருத்த அவர்களிடமே
    ஆள் பிடிக்கதான் சென்றார் தந்தை பெரியார். அதை தனது இறுதி மூச்சு வரை செய்தார்.
    நாமும் அதை செய்வோம் வருங்கள்!

    மக இக என்றுமே பெரியார் தி.க.வை போட்டி அமைப்பாக பார்ப்பது இல்லை
    ஆனால் விஜய் தோழர்களை வாடா போடா என்று எழுதுவது , வயிற்றெரிச்ச்ல் படுவதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.
    காரனுக்குதான் சாதகமாய் அமையும்.

    எங்களுக்கும் பதிலுக்கு எதையாவது ஆதாரத்தை காட்டி திட்ட முடியும் ஆனால் எழவு வீட்டில் காசு பொறுக்கும் கழிசடைதனத்தை நம் செய்ய விரும்பவில்லை.

    விடுதலை

  31. இராயகரன் தனக்கு பதில் சொல்லக் கஷ்டமா இருக்கும் கேள்விகளை, உவப்பில்லாத பின்னூட்டங்களை தமிழரங்கத்தில் அனுமதிப்பதில்லை. அது தெரியாதா? என் பருப்பு வேகுதா வேகாதா என இதை படிக்கும் நடுநிலைத் தோழர் அறிவர். இராயகரன் போன்ற கீழ் உத்தி படைத்த கற்பனைவாதக் கலகக்காரர் இது தான் ஈழத்தின் வரலாறு எனப் பினாத்துவதைக் கேட்காமல் , முடிந்தால் ம.க.இ.க தங்கள் பிரதிநிதிகள் சிலர் அனுப்பி ஈழத்தில் என்ன நடக்கிறது, யார் போராடுறார்கள், யார் வாய் கிழியப் பேசுகிறார்கள், போராடும் சக்திகள் எங்ஙனம் போராடுகிறார்கள் எனப் பார்த்து வந்து தம் கருத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும். புலிகள் அழிந்தாலும் அழியாவிட்டாலும் இராயகரன் ஒன்றும் செய்யப் போவதில்லை,
    கனவு கண்டு நன்றாகக் கற்பனைவாத உளறல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பார், மக்கள் அவர் பக்கம் போக போவதுமில்லை. கி.பி. 2020லும் யாரையாவது பாசிச சக்தி, பன் சாப்பிட்ட சக்தி என உளறிக் கொண்டு தான் இருக்கப் போகிறார். அவ்வளவு தான் அவர்!

    இதைச் சொல்வதால் என்னை இங்கு பார்ப்பனிய சக்தி எனச் சிலர் சொல்லலம், இது தான் அவர்கள் விமர்சனங்களை எடுத்துக் கொள்ளும் விதம் என்பேன் நான். இராயகரன் போன்ற அரைவேக்காடுகளை எதிர்த்து யாராவது
    ஏதும் சொல்லி விட்டால் உடனே அவர்கள் பார்ப்பனியர், என்ன கதைய்யா இது? தமிழினம் ஒன்றுபட்டு தம் தேசியத்தை அடைய வேண்டும் என்பதை எதிர்த்து இன்னும் ஒன்றுபட்ட இந்தியா, சிங்களப் பாட்டாளி, தமிழ் பாட்டாளி, ஐக்கிய இலங்கை என பார்ப்பான் சொல்லும் அதே சொத்தை வாதங்களுடன் வேறு முனையில் இருந்து வரும் நீங்கள் எல்லோரும் தான் பார்ப்பனியத்தின் குரலை ஒத்து இருக்கிறேர்கள்?!!? இராயகரனை விமர்சித்தால் யாருமும், அவர் மார்க்சியரா, பெரியாரியரா, இடதுசாரித் தமிழ்த் தேசியரா இருப்பினும் பார்ப்பனியக் குடுவைக்கு அடைக்கபடுவர்! எப்படி இருக்கிறது இது? இதுக்குள்ள மத்த இயக்கங்களப் பத்தி நொள்ளைப் பேச்சு வேற!

  32. தோழர் ரயாகரனிடைய கேள்விகள் உணர்ச்சிவசப்படாமல் விசயத்தை பரிசீலிக்க கோருகின்றன. அது நல்லதுதானே.

  33. >> மக இக என்றுமே பெரியார் தி.க.வை போட்டி அமைப்பாக பார்ப்பது இல்லை
    ஆனால் விஜய் தோழர்களை வாடா போடா என்று எழுதுவது , வயிற்றெரிச்ச்ல் படுவதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.
    காரனுக்குதான் சாதகமாய் அமையும். <<

    டவுட்டு தனபால் கேட்கிறாரு:
    புலிகள் மேல் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக அவதூறுகளை புனைவது
    சிங்கள பேரினவாதிகளுக்குச் சாதகமாய் அமையாதோ?

  34. >> எங்களுக்கும் பதிலுக்கு எதையாவது ஆதாரத்தை காட்டி திட்ட முடியும் ஆனால் எழவு வீட்டில் காசு பொறுக்கும் கழிசடைதனத்தை நம் செய்ய விரும்பவில்லை.<<

    இந்தப் பதிவுல இது வரை அதைத்தான் செஞ்சு வந்தீங்கனு உணரலையா?

  35. ஒரு கடைந்தெடுத்த வலதுசாரிய பாசிச புலிகளுக்கும் சிங்கள பேரினவாத போர்வெறியர்களுக்கும் இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசுக்கும் இரத்தப்பலியாகிக் கொண்டிருக்கும் தமிழ்மக்கள் மேலான எல்லா அடக்குமுறைகளும் கொன்றழிப்புகளும் இன்றல்ல நேற்றல்ல ஆரம்பம். இதுவே நாங்கள் வாழ்ந்த வாழும் சூழல்.

    இந்திய இராணுவ நடவடிக்கையின் போது :

    – சிதறிக்கிடந்த அப்பாவி பொதுமக்களின் பிணங்களை தெருநாய்கள் குதறுவதிலிருந்து மீட்டெடுத்த வேளை.

    – புலிகளுக்கு எதிரான (தமிழ்மக்களுக்கு) கண்மண் தெரியாத எறிகணைத்தாக்குதலில் குற்றுயிரும் குலையுயிருமாய் சதைக் குன்றுகளாய் கை கால் அவயவங்கள் சிதைக்கப்பட்டு ஊனப்பட்டு எழுந்து நகரமுடியாதபடி இரத்தக் காயங்களுடன் புழுதியில் அழுந்திக் கிடந்த குழந்தைகளை பெண்களை முதியவர்களை இளைஞர்களை மழையாய் பொழிந்த துப்பாக்கிச் சன்னங்களுக்கிடையில் அப்புறப்படுத்திய பின்னாலும் தகுந்த மருத்துவ வசதியின்றி அவர்களை காப்பாற்ற முடியாத கையறு நிலையிலிருந்த வேளை

    – மீட்கப்பட்டவர்கள் உயிர் ஊசலாடியபடி கண்முன்னே அவர்கள் கிடந்து மரணித்துப் போனவேளை அவர்களின் கைகளை வெறுமனே பற்றிக் கொண்டு உடனிருப்பதைப் தவிர காப்பாற்றும் மார்க்கங்கள் யாவும் அடைபட்டிருந்த வேளை.

    திலீபன் என்ற உண்ணாநிலைப் போராளி இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கெதிராய் உயிர்ப்பலியான வேளை.

    ஒரு அந்திய இராணுவமாய் இந்திய “அமைதிப்படை” வந்து அழிக்கும் படையாய் தமிழ் மக்கள் மேல் ஏவி விடப்பட்ட போது, வீடுவீடாய் உருவாக்கிய இழவுகளும் செய்த அட்டூழியங்களும் பாலியல் கொடுமைகளும் கட்டுக்கடங்காது போன வேளை.

    கருணா பிளவின் போது கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கொத்துக் கொத்தாய் தங்களிடமிருந்து பிரிந்து சென்ற முன்னைநாள் போராளிகளை கொடுமையிலும் கொடுமையாய் கொன்றழித்த புலிகள் பாசிட்டுக்களாய் கோரத் தாண்டவமாடிய வேளை.

    முத்துக்குமரன்களுக்கு முன்னமேயே ஈழத்துத் தெருக்களில் மாற்று இயக்கப் போராளிகள் உயிரோடு தீயில் வெந்து சாம்பலாகும் கோரத்தை நடாத்தி யாருக்காக போராடுவதாக கூறினார்களோ அந்த மக்களின் மனங்களில் அச்சத்தை உறைய வைக்கும் நோக்குடன் தம்மை எதிர்ப்பவர்களுக்கு தண்டனை எவ்வாறமையும் என்று கற்பிப்பதற்காக சொந்தமக்களையே எச்சரிப்பதற்காகவே இவ்வாறு தெருவோரங்களில் நாம் இவர்களை தீயிலிட்டு அழிக்கின்றோம் என்ற நியாய குதர்க்கம் கூறிக்கொண்டே நரபலி வேட்டையாடிய கொடிய பாசிட்டுக்கள் தெருவெங்கும் கோலோச்சிய வேளை.

    யாழ்குடாநாட்டிலிருந்து முஸ்லீம் மக்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டு போக்கிடம் இன்றி உடமைகள் எதுவுமின்றி துரத்தியடிக்கப்பட்ட அவலம் நடந்தேறிய வேளை.

    உள்ளியக்கத்தினுள் எழுந்த முரண்பாடுகளால் ஜரோப்பிய நாடுகள் வரை தேடியழிக்கப்பட்ட கொலைகள் பல போராளிகளின் உயிர்களை காவு கொண்ட வேளை

    சிங்கள கிராமங்களில் பொதுமக்கள் மேல் குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என்ற எதுவித பாகுபாடுமின்றி வெட்டியும் குத்தியும் கொலைக்கரங்களை ஏவிவிட்டு போராட்டத்தின் மீதான நியாயப்பாட்டை சிங்களப்பாட்டாளி மக்கள் புரியாத வண்ணம் களங்கப்படுத்திய வேளை.

    முஸ்லீம்களின் வணக்கத்தலங்களில் (புத்தளம், காத்தான்குடி பள்ளிவாசல்கள்) தொழுகைநேரத்தில் புகுந்து “விடுதலைப் போராளிகள்” இரத்த ஆற்றில் அவர்களை மிதக்கவிட்டு உயிர்ப்பலி கொண்ட வேளை.

    இந்திய கைக்கூலிகளாய் அநுராதபுரப்படுகொலையை நிகழ்த்தி “விடுதலைப் போராளிகள்” கூலிப்படைகளாய் விலைபோன வேளை.

    சிங்கள கடற்படை நெடுந்தீவு குமுதினிப்படகுப் பயணிகளை இடைமறித்து வெட்டிச்சாய்த்து இனவெறிக் கொடுங்கரங்களால் கொன்றழித்த வேளை

    தமிழ்மக்கள் மேல் இனவெறிப்போர் தொடுத்து இராணுவ அடக்குமுறைகளை நாளும் பொழுதுமாய் பேரினவாதிகள் ஏவிவிட்டு கொக்கரித்து நின்று இன்றுவரைக்கும் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை தனது காலில் போட்டு மிதித்து இனத்துவம்சம் செய்யும் பேரினவாதிகள் ” மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கும் ” இராணுவ நடவடிக்கையாய் தமது இனத்துவம்சப் போரை பிரச்சாரம் செய்யும் “தார்மீகத்தை” அவர்கள் பக்கம் தள்ளிவிட்ட தவறுகளை தமது பாசிசக்கரங்களால் தாமே மக்கள் மேல் குந்தியிருந்து உருவாக்கிய வேளை.

    தமிழ் சிங்கள பாட்டாளி வர்க்க கூட்டை தேசிய இனப்பிரச்சனையில் அப்புறப்படுத்தும் வகையில், சிங்களப்பேரினவாதம் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலுக்கேற்ப நடாத்தும் இனவெறிக்கூச்சலுக்கு உரம் சேர்க்கும் ஒரு இனக்கலவரம் ஒன்றை மீண்டும் உருவாக்கி பெரும்பான்மை மக்கள் பகுதிகளில் பெருமளவிலான பொதுமக்களின் உயிரிழப்பை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ்மக்கள் மேலான கலவரம் ஒன்றை ஏவிவிட்டு அவர்களின் உயிரிழப்பின் மேல் இறந்த உடலங்களின் மேல் மூன்றாம் தரமான கேவலமான பிரச்சாரமேடை ஒன்றை அமைக்க போராளிகளை குண்டுதாரிகளாள வெடித்துச் சிதறச் செய்த வேளை.

    ஒப்பபாரும் மிக்காருமின்றிய புலித்தலைமை இடதுசாரிகளும் முற்போக்கான அணிகளும் தலையெடுக்காத வண்ணம் ஏகாதிபத்திய கள்ளக்கூட்டுடன் இனவெறி ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து சமாதான காலத்தில் அழித்தொழித்த வேளை.

    போராட்டம் ஆரம்பமான நாளிலிருந்தே ஊடகங்களை மிரட்டிப் பணிய வைத்து தங்களின் தாழ்பணிந்த ஊதுகுழலாய் மாற்றிய புலிகளிடமிருந்தே பேரினவாதம் ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பது எவ்வாறு என பாடம் கற்றுக்கொண்டது. புலிகளால் உயிருக்கு அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் மவுனிகளாக்கப்பட்ட வேளை. ( யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்)

    யாழ் பல்கலைக்கழகத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காய் போராடிய மாணவப் போராளிகளுக்கு மரணதண்டனை பரிசளிக்கப்பட்ட வேளை.

    பல்கலைக்கழக மாணவர்கள் (விஜிதரன், செல்வநிதி தியாகராஜா, தர்மசீலன் ) கடத்தப்பட்டு காணாமல் போன வேளை.

    மனித உடற்கூற்று விரிவுரையாளர் திருமதி ரஜனி திரணகமவை பல்கலைக்கழக வாசலிலேயே துப்பாக்கிதாரிகள் கொன்றழித்த வேளை

    அன்றைய ஈழ மக்கள் புரட்சிகர முன்னணிப் (EPRLF)போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டு சிறைக்குள்ளேயே (கந்தன் கருணை) கைக்குண்டுகளால் கூண்டோடு கொலைசெய்யப்பட்ட வேளை.

    யாழ் பல்கலைக்கழக போராட்டத்தில் முன்னணி போராளியாய் இருந்த காரணத்துக்காகவும் மாற்று இயக்க உறுப்பினர் என்ற காரணத்திற்காகவும் இராயகரன் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு உயிரைப்பணயம் வைத்து கூரையைப் பிரித்து குதித்து தப்பி வந்த பின் மரணத்தின் நிழல்களால் பின்தொடரப்பட்டு சொந்தப் பிரதேசம் பாதுகாப்பற்றதாக மாற பேரினவாத இடர்கள் இருந்தும் கொழும்பு நகரம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக உணரப்பட்ட வேளை.

    அதே பாதுகாப்பின்மை மற்றும் புலிகளால் கண்காணிக்கப்படும் காரணங்களால் தங்கள் சொந்தப்பிரதேசங்களை விட்டு தலைநகர் கொழும்பிற்கு வந்ததன் பின்னாலேயே மூச்சுவிடும் நிலைமைகள் சற்றேனும் கிடைத்ததென ” சரிநிகர்” பத்திரிகை வெளியிட்ட குழுவினர் தமக்கிருந்த மட்டுப்படுத்தப்பட்ட இயல்பு வாழ்வுக்குள்ளும் சிங்கத்தின் குகைக்குள் சிறுமுயலாய் இனவாத அரசின் குகைக்குள்ளேயே பேரினவாத அரசுக்கு எதிரான குரலாய் தம்மை வெளீப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்கள். புலிகளால் மறுக்கப்பட்ட அவர்களது நடமாட்டங்கள் கொழும்புத் தெருக்களில் “உரிமையாய்” அவர்கள் அநுபவித்தபோது விடுதலைப் பிரதேசங்கள் சிறைவாழ்வாய் படிப்படியாய் மக்களுக்கு அந்நியமாகிக் கொண்டிருந்த வேளை.

    வெறும் சுத்த இராணுவக் கண்ணோட்டத்தினையும் குவியத் தத்துவத்தினையும் வழிமுறையாய் கொண்டு ஆயுதங்களை வணங்கிய துப்பாக்கி மனிதர்களிடம் எமது போராட்டத்தின் கடிவாளம் ஏகாதிபத்தியங்களால் பறித்துக் கொடுக்கப்பட்டதன் பின்னால் தமிழ் தேசியப் போராட்டம் இனவெறிப்பாதைக்கு இழுத்துச்செல்லப்பட்ட தருணங்களில் எல்லாம் இன்றைய முடிபுகளை அன்றே முன்னெதிர்வு கூறிய விமர்சனங்கள் ஓற்றை வரிகளில் இனத் துரோகிகள் என்று ஒதுக்கி அழிக்கப்பட்ட வேளைகளில்

    மூதூரிலிருந்து முஸ்லீம் மக்கள் விரட்டப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட வேளைகளில்

    இன்றிந்த வேளை நடக்கும் மக்களை மாய்விக்கும் போரின் ஆரம்பம் கிழக்கிலங்கையில் தான் தொடங்கியது. பிரதேச இழப்புகள், மக்கள் இடம் பெயர்ந்த மனித அவலங்கள் அன்றே ஆரம்பித்து விட்டது. அன்று அந்த மக்களின் அவலங்கள் புலம் பெயர் தழிழர்களால் புறக்கணிக்கப்பட்ட வேiளை

    இந்திய மண்ணிலேயே கொன்றழிக்கப்பட்ட பத்மநாபா குழுவினரின் குருதியின் மேல் தமிழ்மக்கள் போராட்டத்தை தடம் புரளச் செய்ய சத்தியப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட புலிகள் தலைதெறித்து ஆடிய வேளைகளில்

    இந்த இந்த வேளைகளில் எல்லாம் வேதனை, வலி கொள்ளாத இந்திய தமிழின இனவாளர்கள் மற்றும் திரையில் நடித்தது போதாதென்று இந்திய பாட்டாளி மக்களின் விடுதலைக்கே வேட்டுவைக்க புறப்பட்டிருக்கும் கட்சித்தலைவர்களாயிருக்கும் நடிகர்களின் கூக்குரல்கள் என்றுமே புலிகளை எதிர்நிறுத்தி எழாது என்பது தெரிந்ததே.

    இன்று வன்னிமக்களை கேடயமாக்கி அந்த மக்களின் இறப்புகளை பிரச்சாரமாக்கி தப்பிப்பிழைக்க முனையும் புலியின் மூன்றாம்தர வலதுசாரி பாசிச அரசியலை இவர்கள் யாருமே அம்பலப்படுத்தப் போவதில்லை. அது இந்த இனவுணவாளர்களின் குணாம்சம். அவர்களும் தங்கள் அரசியலை அவ்வாறே அறுவடை செய்து கொள்வார்கள்.

    தேசம் இனம் கடந்த உணர்வுகளின் மேலால் நிறுவப்படும் சர்வதேச பாட்டாளி வர்க்க ஓருமைப்பாடு முத்துக்குமரனின் தற்கொலையோடு இனவுணர்வுடன் இழுபட்டு சென்று தமிழ் சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் கால்களை வாரிவிட முனையக் கூடாது.

    இலங்கை பேரினவாத அரசுக்கும் இந்திய வல்லாதிக்க அரசுக்கும் தமிழ்மக்கள் துரும்பும் தூசும் தான். புலிகளுக்கும் அவர்கள் சொந்தமக்கள் அவ்வாறே தான் என்பதுவும் அவர்கள் நடாத்துவது தேசிய விடுதலைப் போராட்டமல்ல என்பதுவும் ஏகாதிபத்தியங்களினால் அவர்களது கள்ள உறவில் பிறந்த குழந்தை இன்று தோழர் மருதையன் மிகச் சரியாகவே குறிப்பிட்டபடி இந்திய டாட்டா அம்பானிகளுக்கு ஒதுங்கி வழிவிட வேண்டியிருப்பதால் கைவிடப்படுகிறார்கள் என்பதுவும் தான் யதார்த்தம். இவர்கள் தேசிய போராட்டசக்திகள் இல்லையென புரட்சிகர அணிகளுக்கு இனம் காட்டப்படுவதை விடுத்து அவர்களோடு வளைந்து செல்வது அணிகளை தவறாக வழிகாட்டும் என்ற விமர்சனத்தை நாம் முன்வைக்கின்றோம்.

    எதிர்ப்புக் கோசங்களை தெளிவாக இந்திய இலங்கை அரசுகளுக்கெதிராகவும் எதிர்த்தரப்பில் புலிகளை வர்க்க அடிப்படையில் இனம் காட்டியும் மக்களின் இன்றைய அவலங்களுக்கு அவர்களும் பொறுப்பாளிகளே என்பதை தெளிவாக இனம் காட்டியும் உங்கள் போராட்டங்கள் அமையட்டும்.

  36. இம்புட்டு நேரமா மாஞ்சு மாஞ்சு குளைறாப்புலயே என்னங்க இன்னும் யாருன்னு புரியலீயா? ,
    இன்னா ரமேசு பாப்பூஊஊஊஊஉ
    நல்லா இருக்கியா/ அதானே பாத்தேன் முத்துக்குமாரை எரிக்கும் போது எதை உங்கப்பன் சீபீஎம்க்குதான் பாடை கட்டிட்டாங்களே, இங்கெ இன்னா வந்து கூவுற வரதராசன் ஏதாவது சொல்லிவுட்டாறா ?
    சரி தம்பி நீனு என்னா வெசம் போட்டுகினு வந்தாலும் தெரியுதே

    த பெ தி க பத்தி யெல்லாம் பேசாத அவங்க பெரியார் கொள்கையில இன்னமும் இருக்கறவுங்க
    நீ போயி ஏதாவது பார்ப்பன முன்னணி,சங்கராச்சாரிக்கு கழுவுற முன்னணி ஆரம்பிக்கலாமே
    இங்க யேம்மா வந்து அவுமானப்பட்டுப்போற

  37. பிண மலையாகத் தமிழர்கள் வன்னியில் குவிந்தாலும் சரி, முத்துக்குமாரர்களாக “சாஸ்திரி பவன்” முற்றத்தில் தமிழர்கள் எரிந்தாலும் சரி – அன்னை சோனியாவின் ஆன்மா கரையப் போவதில்லை.

  38. இந்தப் போர் ஒரு முடிவுக்கு வருவதற்கு இந்தியா விடப்போவதே இல்லை: அதாவது, சிறிலங்கா விரும்பினாலும் கூட இந்தப் போர் நிற்கப் போவதில்லை.

    இந்தியப் படை அதிகாரிகள் – வன்னிப் போர் முனையில் – வெறுமனே பிரதான கட்டளை மையங்களில் மட்டுமன்றி – நேரடியான போர்ச் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர்.

    இந்திய உளவு வானூர்திகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை 24 மணி நேரமும் கண்காணித்தபடியே உள்ளன.

    இந்திய கடற் கண்காணிப்பு கதுவீ (Radar) கருவிகள் வங்காள வரிகுடாவை 24 மணித்தியாலமும் கண்காணித்த வண்ணம் உள்ளன.

  39. நோர்வேயின் எரிக் சொல்கெய்ம் – மிக அண்மையில் – புலிகளிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார், “இப்போது எமது கையில் எதுவுமே இல்லை”, என்று.

    உலகத் தமிழர்களே! இது எமக்குரிய நேரம்: இதுவே தான் எமக்கான நேரம்!

    எமக்காக எழுந்துவிட்ட ஏழு கோடி தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து – உலகத் தமிழர்கள் நாம் – எம்மைப் பழி தீர்க்க முனையும் இந்தியாவின் இந்த குரூர வெறிக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும்.

  40. என்றுமில்லாத அளவுக்கு பேரெழுச்சி கொண்டுள்ள தமிழக மக்களுக்குப் பின்னால் உலகத் தமிழர்கள் உடனேயே அணிதிரள வேண்டும். எமக்காகப் போராடும் அவர்களோடு நாம் ஒன்றிணைய வேண்டும்.

    விடுதலைப் புலிகளின் கோலாகலமான ஒரு போர் வெற்றிக்காக இரண்டு வருடங்கள் நாம் காத்திருந்தோம்: எதுவுமே நடக்கவில்லை; நடக்க இந்தியா விடவில்லை.

  41. தோழர் பகத் மற்றும் ரயாகரன் கேள்விகளுக்கு வினவு தளம் விரிவான பதிலை அளிக்கும் என்று கருதுவதால் அதற்குள் போகாமல் மேலே ஒருவர் தொடர்ந்து போடும் காமெடி கமெண்ட்ஸ்க்கு மட்டும் சிறிய ஒரு பதிலை கூறிவிட்டு
    நகர்கிறேன்.

    ///////அட, அறிவுசீவியே, உங்கள விமர்சிச்சா அத விட்டுருவீங்களா? இதுல நீங்க என்ன புலிகள் என்ன, எல்லாரும் ஒன்று தான். அவங்க யாரையும் குறை சொல்லி புலம்பிட்டு இருக்காம, செயல்ல காட்டறாங்க, அர்ப்பணிப்போட, உங்க மாதிரி ஆளுங்க கிட்ட அது இல்ல. இராயகரன் பதிவுல மாற்றுக் கருத்து பின்னூட்டம் போட்டாலே அந்த ஆளு வெளியிடுறதில்ல, இந்த இலட்சணத்துல விமர்சனம் அது இதுன்னு, ஓவரா காமெடி பண்ண வேணாம். நாம தான் ஒழுக்க சீலர்கள், நம்ம பண்ணறது தான் அரசியல், நம்ம தான் கொள்கை பிடிப்பு, வாயுப் பிடிப்போட இருக்கறோம்னு பேசிட்டிருக்றது நீங்க தான்.
    அவங்க இல்ல! புலிகள் பத்தி நேரடியா விமர்சனம் செஞ்சிருக்கேன், அவர்கள் பலரிடமும் சொல்லி இருக்கேன். விமர்சனம் பொது நிலைல,நடு நிலைல இருந்து செய்யப் படனும்.

    தமிழ்த் தேசியம் எல்லாம் அற்பம், எங்க கொள்கை தான் பெரிய புண்ணாக்குனு நீங்க தான் சொல்லி பினாத்திட்டு இருக்கிங்க.முடிஞ்சா தியாகு, சு.ப.வி, மணியரசன் போன்றோரிடம் வாதிட்டு உணமைய நிலைநாட்டி வென்று வாங்க, பேசலாம்/////////

    உங்க‌ள விமர்சனம் பன்னுனா விட்ருவீங்களான்னு கேட்கிறாரு இந்த மொக்கை அரசியல்காரர்,நீங்கள் என்ன நினைத்தீர்கள் புலிகளை போல கொன்னுபோடுவோம்ன்னு நினைத்தீரோ.
    சரி அதெல்லாம் இருக்கட்டும் விமர்சனம் பன்றதுக்கு முதல் தகுதி என்னன்னாவது தெரியுமா உங்களுக்கு ? தெரியலன்னா முதல்ல போயி உங்க தமிழ்தேசிய குருக்களிடம் கற்றுக்கொண்டு வாருங்கள்.
    ம.க.இ.க வை விமர்சிக்கிறது முன்னாடி் விமர்சனம் பன்ன உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்குன்னு யோசிச்சு பாருங்க உங்களுக்கு அந்த அருகதை இருப்பதாக நீங்களே உணர்ந்தால் அதற்க‌ப்புறம் நீங்கள் தாராளமாக விமர்சனம் பன்னலாம்.

    அப்புறம் புலிகளை பத்தி அவர்களிடம் நீங்க என்ன விமர்சனம் சொன்னீங்க அதை இங்கே சொல்லுங்க.

    அப்புறம் உங்க காமெடி டிராக்கின் பைனல் சீன் தான் சூப்பரோ சூப்பர்..

    யாருக்கிட்ட போயி வாதம் பன்னனும்னு சொல்றீங்க‌ தியாகுகிட்டயும்,சு.ப.வீ கிட்டேயும்,மணியர்சன்கிட்டேயுமா உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா பங்காளி..
    இர‌க்கமே இல்லாம இப்படி காமெடி பன்னீகிட்ருக்கீங்க.

    இந்த மூன்று மூலவர்களின் சந்தர்ப்பவாத தமிழ்தேச கற்பனைகள் அனைத்தும் கடந்த கால‌ புஜ இதழ்களி்ல் நார் நாராக கிழித்து தொங்கவிடப்பட்டிருக்கின்றன.
    எனவே அவர்களில் தியாகுவை தவிர்த்த மற்ற இருவரிடமும் அரசியலாக பேசவே ஒன்றும் இல்லை.அவர்களின் சில‌ அரசியல் நடைமுறை நிகழ்வுகளே அவர்களின் யோக்கியதையை புட்டுப்புட்டு வைத்துவிடும்.

    சு.ப.வீ யின் சந்தர்ப்பவாதங்கள் ஏராளமானவை அவற்றையெல்லாம் நாம் நம்முடைய நேரத்தை வீனடித்து இங்கே பட்டியலிட்டுக்கொண்டிருக்க வேண்டியதில்லை.ஒரே வரியில் சொன்னால்,
    மு.க அழகிரிக்கும், கனிமொழிக்கும் மொத்தத்தில் தி.மு.க விற்கு கூஜா தூக்கி அதன் வழியே தமிழ்தேசியத்தை எட்டுவது தான் அவ‌ரது தமிழ்தேசிய திட்டம்.இதை அவரே மறுக்க மாட்டார் வேண்டுமானால் நீங்களே போய் கேட்டுப்பாருங்கள்.

    இரண்டாமவர் மணியரசன்.இவருடைய பிராடுத்தனமும் ஊர்பூராவும் நாறுகிறது நம்மவருக்கு மட்டும் மணக்கிறது போலும்.

    தமிழ்தேசியத்தை சாதிக்க வேண்டும் அதற்கு கட்சியை வலுவாக்க வேண்டும் கட்சியை வலுவாக்க வேண்டுமென்றால் தேவை ஊழியர்கள் அல்ல‌ ‘பணம்’ வேண்டும் என்ற முடிவுக்கு வந்த மணியரசன் அன்ட் கோவின் த.தே.பொ.க அதற்காக சீட்டுக்கம்பெனி் நடத்தியது.எதற்காக தமிழ்தேசிய புரட்சியை சாதிப்பதற்காக.
    யப்பா புரட்சிக்கு முன்பே ஒரு புரட்சி அல்லவா இது
    இதுபோன்ற ஒரு புரட்சியை நாம் எங்கேயாவது பார்த்திருக்க முடியுமா?

    அப்படிப்பட்ட ஒரு புரட்சிகர தமிழ்தேசியக்கட்சியின் புரட்சிகரத்தலைவர் தான் நம்து மணியரசன்.
    இவர் அதற்குப்பிறகு என்ன செய்தார் தெரியுமா
    சில வெளி நாடுகளுக்கு சென்றிருந்த பொழுது புலம்பெயர்ந்து வாழும் ஈழ மக்களை சந்தி்த்து தமது கட்சி தமிழகத்தில் தமிழ்தேசிய புரட்சிக்காக வேலை செய்கிறது அதற்காகா நன்கொடை தாருங்கள் என்று பல பேரிடமும் மொத்தமாக ஒரு பெரிய தொகையை வசூலித்து வைத்துக்கொண்டார்.
    பிற‌கு தமிழகம் வந்‌து தமது கட்சிக்கூட்டங்களில் உட்கார்ந்து வெளி நாட்டு அனுபவங்களை எல்லாம் தமது சகாக்களுடன் பகிர்ந்துகொண்டார்.
    அப்போது ஈழத்தமிழர்கள் கட்சிக்காக கொடுத்த நண்கொடையை பற்றி மூச்சு கூட வி்டவில்லை,
    அதை அப்படியே மறைத்து வி்ட்டு தோழர்களுக்கு வெளி நாட்டு சாக்லேட்டுகளை காட்டி நாக்கில் நீர் சுரக்க வைத்தார்.
    பின்னர் அவருடைய இந்த ஊழல் மற்ற ‘யோக்கியர்’களால் அம்பலப்படுத்தப்பட்டது.

    இந்த தமிழ்தேச கதாநாயகர்களை பற்றி மேற்கூறியவை எல்லாம் சும்மா ஒரு சாம்பிள் தான் இன்னும் நிறைய இருக்கிறது.
    எனவே இவர்களிடம் அரசியல் என்று பேசுவதற்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
    எல்லாம் சந்தர்ப்பவாதம்.

    தியாகுவின் அரசியல் சந்தர்ப்பவாதம் பு.ஜ வில் பல முறை அம்பலப்படுத்தப்பட்டடுள்ளது.
    நம் நண்பருக்கு விருப்பமும் ஆர்வமும் இருந்தால் அவற்றையெல்லாம் தேடிப்பிடித்து படிக்கட்டும்.எல்லாவற்றையும் நாமே கொண்டு வந்து அவருக்கு கை மேல் கொடுக்க முடியாது ஆனால் அவற்றை அவர் வாசிக்கும் முன் தமிழ்தேசிய உணர்ச்சி என்கிற மாய‌வெளியிலிருந்து வெளியேறிய
    [உணர்ச்சி ரீதியாக மட்டும் தான் சொகிறேன்]
    பிறகு வாசிப்பது நலம்.

  42. தமிழ் இனத்தைப் படுகொலை செய்து அழிக்கும் போரின் சூத்திரதாரி சிறிலங்கா அல்ல; இந்தியா தான்
    ஓரு பழம்பெரும் இனத்தை அழிக்கும் நாடு என்ற அவமான வெட்கத்தை இந்தியாவின் முகத்தில் நாம் பூச வேண்டும்.

  43. சர்வதேசியத்தை கைவிட்டா ஈழப்போராட்டத்தை அணுக வேண்டும்!?

    ஈழத் தமிழ் மக்களின் அவலம் இலங்கை இந்திய தமிழர்கள் மத்தியில், கொந்தளிப்பையும் உணர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. தொடரும் இன அழிப்பும், அதற்குள் மக்கள் பலியிடப்படல் என்ற எல்லைக்குள் அரசியல் செய்யப்படுகின்றது.
    நீ தமிழன் என்றால், பாசிச புலியை ஆதரி என்று மிரட்டப்படுகின்றோம். இல்லையென்றால், பேரினவாத கைக்கூலிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றோம். சர்வதேசியத்தை கைவிட்டு, வர்க்கம் கடந்த தமிழனாக மாறி புலிப் பாசிசத்தை ஆதரிக்க மறுக்கும் நாம், தமிழ்நாட்டு சர்வதேசியவாதிகளிடம் இருந்து எமக்கான ஊக்கத்தை எதிர்பார்த்தோம். ஆனால் அங்கிருந்து அவை வெளிப்படுவதற்கு பதில்;, தமிழன் என்ற அடையாள உணர்வூடாக புலியை விமர்சிக்காத கருத்துக்களாக வெளிவருகின்றது. எமக்கோ கிடைப்பது நெத்தியடிதான்.

    இன்றைய நிலைக்கு வலதுசாரிய பாசிசப் புலிகள் காரணம் என்பதும், அவர்கள் தம் தோல்வியை தடுக்க மக்களை பணயமாக வைத்து பலியிடுகின்றனர் என்பதும் வெளிப்படையான உண்மை.

    இது இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரமோ, இந்திய ஆளும் வர்க்கங்கள் முதல் பார்ப்பனியம் வரை இட்டுக்கட்டியவையல்ல. அதை அவர்கள் தமக்கு சாதகமாக எடுத்துச் சொல்வதால், ஒரு உண்மை பொய்யாகிவிடாது.

    மாபெரும் உண்மைகளைக் கூட, கொச்சைப்படுத்திவிட முடியும். இலங்கையில் சர்வதேசியத்தை முன்நிறுத்தும் எம் நிலையைக் கொச்சைப்படுத்தி, அதை வெறும் புலம்பலாக மாற்றிவிடுகின்ற அளவுக்கு அவை மாறியிருப்பதை நாம் உணருகின்றோம்.

    இந்தியா வை.கோ முதல் பெரியாரிஸ்ட்டுகள் வரை, புலிகளை முன்னிறுத்தியும், புலிகளின் பாசிச பிரச்சாரத்தை பொதுஅரசியல் அரங்கில் முன்னிறுத்துகின்ற சூழலில், சர்வதேசவாதிகள் இதற்கு மாறாக தம் அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்.

    பொதுவான மையக் கோசத்தில், இந்திய ஆளும் வர்க்கம், இலங்கை ஆளும் வர்க்கம், இலங்கை தமிழ் மக்களுக்கு பிரிந்துசெல்லும் சுயநிர்ணய உரிமை என்பதை தெளிவாகவே, வேறுபடுத்தி நிற்கின்றனர். பலரும் தத்தம் கோசங்களுடன் களத்தில் இறங்குகின்றனர்.

    ஆனால் புலிகள் விடையத்தில் இதை தெளிவுபடுத்தவில்லை. வேறுபடுத்தவில்லை. நடப்பது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டமா என்ற விடையத்தில், எந்த அரசியல் கோசத்தையும் உயர்த்தாதது ஏன்;? வை.கோ முதல் சர்வதேசியம் வரை, ஒரே பாதையில் நடப்பது போல் பாசாங்கு செய்வது அதிரவைக்கின்றது. முத்துக்குமாரன் அங்குமிங்குமாக தன் கருத்துக்களை அள்ளித்தெளிப்பதும், இதனால் தான்.

    ஈழத்து தமிழ்மக்கள் வெறுமனே பேரினவாதிகளிடம் இருந்து மட்டும் ஒடுக்குமுறையைச் சந்திக்கவில்லை. மாறாக தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறும் புலிகளிடமிருந்தும் தான். இதை தமிழக மக்கள் அறியக் கூடாதா!? அறிய வைப்பது சர்வதேசியத்தின் கடமையல்லவா!?

    இலங்கை – இந்திய எதிரிகள் எதை தம் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்? பாசிசப் புலிகளின் நடத்தைகளையும், தேசிய விடுதலைப் போராட்டமல்லாத அதன் பிற்போக்கு கூறுகளையும் முன்னிலைப்படுத்தியே அதைப் பிரச்சாரம் செய்கின்றான். அதை முறியடிப்பது என்பது, அதை கண்ணை மூடிக்கொண்டு மறுப்பதல்ல. மாறாக அந்த பிரச்சாரத்தின் பின் உள்ள உண்மைகளைத் தெளிவுபடுத்தி, ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்துவது அவசியம். இந்த வகையில் மக்கள் விரோத புலிகளின் செயலை விமர்சிப்பது அவசியம். இதன் மூலம் தான் தமிழ்நாட்டு சமூகத்தை, இரண்டு தளத்தில் விழிப்புற வைக்கமுடியும்.

    1. எதிரி தன் பின் அணிதிரட்டும் மக்களை, சரியான பக்கத்துக்கு கொண்டுவர முடியும். அதாவது எதிரியின் எதிரி விடும் தவறுகளையும், அதன் மக்கள் விரோதக் கூறுகளையும் சரியாக சுட்டிக்காட்டும் போது மக்கள் இதில் இருந்து விழிப்புறுகின்றனர்.

    2. தவறுகளையே தேசியப் போராட்டமாக காட்டி, ஒரு பாசிசத்தை தேசியமாக சித்தரிப்பதை அனுமதிப்பது சர்வதேசியமல்ல. நடக்கும் மனித அவலம் மீதான போராட்ட ஆதரவுத்தளத்தில், பின் உள்ள உண்மையான மனித விரோதக் கூறுகளை அம்பலப்படுத்தி தனிமைப் படுத்துவதன் மூலம், போராடும் மக்கள் உண்மையான நிலைமையை சார்ந்து நிற்கமுடியும்.

    இதைச் செய்யவில்லை. இந்த நிலையில் சர்வதேசவாதிகள், இலங்கை தமிழ் பாட்டாளி வர்க்கத்துககு; என்னத்தை கூற முனைகின்றீர்கள். எந்த வகையில் உதவுகின்றீர்கள். சிங்கள பாட்டாளி வர்க்கத்துக்கு எந்த அறைகூவலை விடுகின்றீர்கள்.

    பொதுவான தளத்தில் ஏற்பட்ட தெளிவற்ற விலகல், சர்வதேசியவாதியத்தை ஆதரிக்கின்ற அல்லது அதனுடன் உள்ள உறுப்புகள் வெறும் இனவுணர்வாக மாறி நிற்பதை காண்கின்றோம். ஈழத்தைச் சேர்ந்த நாம் என்றுமே பயன்படுத்தாத ‘சிங்களவன்” என்ற புலிகளின் மலிவான வர்க்க விரோத பொது அடையாளப்படுதல்களின் ஊடாக சிங்கள மக்களையே எதிராக நிறுத்திப் பார்க்கின்ற குறுந்தேசிய உணர்வுகள் சர்வதேசியத்தின் கருத்தாக வருகின்றது. சிங்கள ஆளும் வர்க்கம் வேறு, சிங்கள மக்கள் வேறு. இதுபோல் தமிழ் ஆளும் வர்க்கம் வேறு, தமிழ் மக்கள் வேறு. எந்த இடைவெளியுமற்ற அரசியல், மக்களுக்கு எதிரானது. தமிழன் என்று வர்க்கம் கடந்த பார்வைகள், தற்கொலை செய்த முத்துக்குமரன் மீதான ‘வீரத்தமிழன்” என்ற மதிப்பீடுகள் எல்லாம் சர்வதேசிய வர்க்க எல்லைக்குள் நின்று பார்க்கத் தவறிவிடுகின்றது. அதுவோ புலியிசமாக மாறிவிடுகின்றது.

    முத்துக்குமரன் தற்கொலை செய்யத் தூண்டிய கருத்தின் பின் அவனின் அறியாமையும் உள்ளது. அவன் தமிழினத்தை காப்;பாற்ற நம்பும் தலைமை எது? அவன் கூறுகின்றான் ‘களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதலைப் புலிகளே… அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள்.” தமிழகம் உதவ தமிழீழம். இங்கு அவன் கோருவது இந்திய தலையீடு. அது தமிழனுக்கு சார்பாக. இப்படி அவன் நம்புகின்ற அரசியல் எல்லைக்குள்ளா?, சர்வதேசியவாதிகள் உள்ளனர்.

    அவன் நம்பும் தலைமை ஈழத்தமிழினத்தை அழித்துவிட்டது. அது அவனுக்கு தெரியாமல் போயிருக்கின்றது. இப்படி தமிழ்நாட்டுக்கே தெரியாமல் போயிருக்கின்றது. இன்றைய தலைமுறைக்கு சர்வதேசியவாதிகள் இதை தெளிவுபடுத்தவில்லை என்பதுதான் இங்கு உண்மை.

    அவன் நம்பும் தலைமை பத்தாயிரத்துககு; மேற்பட்ட தமிழர்களையே கொன்று குவித்துள்ளது. வடக்கில் இருந்து ஒரு லட்சம் முஸ்லீங்களை 24 மணி நேரத்தில் போட்டு இருந்த உடுப்பைத் தவிர, அனைத்தையும் உருவிய பின் வடக்கில் இருந்து துரத்தியவர்கள் தான். இன்றும் அவர்கள் அகதி முகாமில்தான் வாழ்கின்றனர். பள்ளிவாசல் முதல் பல கிராமங்களில் வாழ்ந்த அப்பாவி மக்களை நூற்றுக்கணக்கில் வெட்டியும் சுட்டும் கொன்றவர்கள். தமிழ் மக்களின் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரம் கொடுத்;தால் புலிகள் ‘அரசியல் அனைதையாகிவிடுவார்கள்” என்று கூறி, அதை தமிழ் மக்களுக்கு மறுத்தவர்கள். போராட்டத்தின் ஜக்கியத்தை மறுத்து, அவர்களை கொன்றவர்கள். இப்படி பல. இன்று மக்களை தம் கேடயமாக்கி பலியிடுகின்றனர். இவன் எப்படி தமிழினத்தைக் காப்பாற்றும் தலைவனாவான்.

    இப்படி நம்பும் அப்பாவித்தனம், அதை தெளிவுபடுத்த தவறிய அரசியல், பொது அரசியல் தளமாகி சர்வதேசிய அரசியல் அடிப்படையை ஆட்டுகின்றது. இப்படி தலைவனாக நம்பும் எல்லைக்குள் சமூகம். இதை விழிப்புற வைக்காமை அடிப்படையான அரசியல் தவறல்லவா!?

    அங்கு புலிகள் ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தை நடத்துவதாக நம்புவதும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பற்றிய மதிப்பீடுகளும், தற்கொலைக்கான குறுகிய அரசியலாக உள்ளது. மரணத்தில் உள்ள நோக்கம் எவ்வளவுதான் நேர்மையாக இருந்தாலும்;, அவனின் அரசியல் அடிப்படை தெளிவற்றது. இந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் உள்ளனர் என்பதும், இதை தெளிவுபடுத்தும் அரசியல் அவர்களின் உணர்வுக்குள் இல்லை என்பதும் வெளிப்படையான உண்மை. அதை சர்வதேசியம் தன் கடமையாக முன்னிலைப்படுத்தி செய்யவில்லை.

    அவர்களின் சமூக இயலாமை தற்கொலையாகின்றது. மறுபக்கத்தில் இந்திய அரசுக்கு எதிரான மையக் கோசம் சிந்திக்கத் தூண்டுகின்றது. இதுவும் உண்மை. ஆனால் அவர்களை அணிதிரட்டி அரசியல் அடிப்படைகள், புலியிசம் பற்றிய மதிப்பீடுகள், தமிழ் தேசியம் பற்றிய பொதுக் கண்ணோட்டம், ஈழத்தில் தமிழ் தேசியப் போராட்டம் நடப்பதாக நம்பும் அறியாமை, எல்லாம் தெளிவற்ற விம்பமாகி, அவை எதிர்ப்புரட்சிகரமானதாக உள்ளது. புரட்சிகரமான நிலைப்பாட்டை ஈடுபடுத்த சர்வதேசியம் தவறும் போது, ஈழத்து பாட்டாளி வர்க்கத்தை மேலும் ஒடுக்கவே அவை உதவுகின்றது.

    பத்திரிகை செய்திகளை ஆதாரமாக கொள்ளுதல்

    நம்ப முடியாத அபத்தங்கள்;, ஆபாசங்கள். தமிழக பத்திரிகைகள் செய்திகள் என்பது, புனைவுகள், உணாச்சியூட்டல், திரித்தல் எல்லாம் கொண்ட ஒரு சாக்கடை. இந்தியா முஸ்லீம் மக்கள் பற்றியும், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், நக்சலைட்டுகளைப் பற்றியும், பயங்கரவாதம் பற்றியும் அவர்கள் எழுதுகின்ற பொய்யும் பித்தலாட்டமும் உலகறிந்தது. இந்திய தோழர்களுக்கு இதை நாம் சொல்ல வேண்டிய தேவையில்லை.

    ஈழத்து விவாகாரத்தில் இந்த சாக்கடை செய்தியாகவில்லையா? புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்ற இரண்டு தளத்திலும் இது உள்ளது. இதற்கு மேலாக சிங்கள பேரினவாதம், தமிழ் புலியிசம் கட்டிவிடுகின்ற பொய்களும் புரட்டுகளும். இதை அடிப்படையாக கொண்ட கருத்துகள், போராட்டங்கள் அற்பத்தமானவையாக அமைகின்றன.

    உண்மையை தெளிவுபடுத்துவதற்கு பதில், இதன் பின் ஒடுவது பொதுவான கண்ணோட்டமாகிவிட்டது. எதார்த்த உண்மைக்கு பதில் பொய்யை விதைத்து, தமிழ் மக்களின் உண்மை நிலைமையை மழுங்கடிக்க முடியாது.

    ஈழத்து மக்களின் உண்மை நிலை பற்றி அக்கறையின்றி, மக்களின் நிலையில் நின்று எல்லாவற்றையும் பார்த்தல் என்ற விடையத்தை மறுப்பதை நாம் எண்ணிப் பார்க்கமுடியாது. சர்வதேசியத்தின் எல்லையைக் கடந்து நாம் செல்லமுடியாது.

    முத்துகுமரனின் மரணத்தை நாம் வறட்சியாக பார்க்கின்றோம்!

    அப்படி நாம் பார்க்கவில்லை. அதன் பின்னுள்ள அரசியல் போக்கை, ஒரு அலையின் பின்னால் புலிப் பாசிசம் நியாயப்படுத்தப்பட்டு, அது பலப்படுத்தப்பட்டு, அதனூடாக எம் மக்களுக்கு நிகழும் பொது அழிவைப் பார்க்கின்றோம். சிங்கள பேரினவாதத்தின் கோரமான குண்டு வீச்சுக்குள், தமிழ் மக்களை பலியிடும் புலியிசத்தை நியாயப்படுத்தும், அரசியல் பொதுப்போக்கை பார்க்கின்றோம். இதுவா எம் வறட்சி.

    நாம் வறட்சியாக பார்க்கின்றோம் என்பது, உணர்ச்சியின் பின்னால் ஒடுவதல்ல. எழுச்சிக்கு பின்னால் வால்பிடிப்பதல்ல. தமிழன் என்ற அடையாளத்தின் பின்னால் ஒடுவதல்ல.

    ஈழத் தமிழ் பாட்டாளி வர்க்கம் என்ன செய்வது? இந்த தற்கொலையை மற்றவர்கள் பார்ப்பதில் இருந்து, எப்படி நீங்கள் வேறுபாடாக பார்க்கின்றீர்கள்?

    முத்துக்குமாரன் வைத்த அறிக்கையில் எதில் முரண்படுகின்றீர்கள்? அதை எங்கே எப்படி விளங்கப்பபடுத்தியுள்ளீர்கள்?

    இதைச் செய்யாமல் போற்றுவது, கூட்டத்துடன் கூட்டமாக நிற்பது சர்வதேசியமல்ல. இது ஈழத்து அரசியலை தீர்மானிக்கின்றது. வர்க்கம் கடந்த தேசியத்தை எமக்கு திணிக்கின்றது. புலிப் பாசிசத்தை எற்க நிர்பந்திக்கின்றது. அதையா நாம் செய்வது!? சொல்லுங்கள் தோழர்களே!

    பி.இரயாகரன்
    01.02.2009

  44. Government has Closed All Colleges and Hostels, Now what can be done:
    1. Students will return to their Native Places
    2. In each and every Towns and Villages, these students should form “College Going Students Association”
    3. Irrespective of their colleges, be it Law or Arts or Medical and locations i.e Chennai College, Madurai College etc , All the Students from one native place to become part of that Association.
    4. By this way of Associating College students at Native Place itself, they can take forward their agitation and spread the news in nearby places.
    5. This will ensure the spreading of Tamils Agitation in each and every place in Tamil Nadu and teach lessons for Congress, it’s slave DMK and ADMK in the Coming Parliament Election.
    6. Note: At native places, there is chance for Caste and religions gaps. Students should trash those gaps and unite for this Tamil Nobel Cause.

  45. Boycott Tamil Nadu Medias, which Boycotts Eelam related News and act as mouthpiece of Shingala Sri Lankan Govt & it’s co-brother Indian Govt headed by Cong, supported by the back-stabber DMK.

    Need to boycott Sun Picture Movies & TV all across World by Tamils, until they cover Eelam related news and Tamil’s Protests all across World.

    NRI Tamils and Eelam Tamils living abroad and their organizations should communicate this to SUN TV. If their business get affected, and sure they’ll change their stand.

  46. அன்று உண்ட நஞ்சும், இன்று மூண்ட தீயும்…

    அன்று சிவகுமாரன் உண்ட நஞ்சு, அவன் கையில் இருந்த ஆயுதம் அவன் மனதில் இருந்த உறுதியான போராட்ட உணர்வு இவைகள் அனைத்தையும் மீறி அவனை மரணத்துக்குத் தள்ளியது. அவன் அன்று எடுத்த எடுப்பில் தனது உயிரை மாய்த்து விடவில்லை. அவன் உண்ட நஞ்சு கூட ஒரு நொடிப் பொழுதில் தன்னை அழித்துவிடும் நஞ்சாகக் கூட அது இருந்திருக்கவில்லை!சிறையும் வீடுமான அவனது போராட்ட வாழ்கை, அன்றைய மிதவாதத் தமிழ்த் தலைமைகளின் மீதான வெறுப்பு ஒர் ஆயுதப் போராட்டத்துக்கான அவசர வருகையாகவே அது இருந்தது. அவன் மரணப்படுக்கையில் இருந்த போது கூட, அவனது உயிர் மீண்டு வருவதற்கான மாற்று மருந்துகளும் அவனுக்கு அருகிலேயே இருந்தன. ஆனால் அவன் சந்தோசமாக தமிழ் மண்ணுக்காக இறந்து போவதையே விரும்பினான்.

    அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவதால், சிறையிலிருந்தும், சித்திரவதைகளிலிருந்தும் தான் மீண்டு வர முடியாதென்றும், இனித் தன்னால் இந்த மக்களுக்காக போராடுவதற்கான எந்தச் சந்தர்ப்பத்தையும் இந்த அரசு விட்டுவைக்காது என்பதையும் உணர்ந்தான். அதனால் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இந்தத் தமிழ் மக்களுக்காகக் கொடுத்து விடுவதால், தன்னைப் போல ஆயிரம் ஆயிரம் சிவகுமாரன் பிறப்பார்கள் என்று நம்பினான்.

    பிறந்தார்கள்! பல்லாயிரக்கணக்கான சிவகுமாரன்கள் கழுத்தில் நஞ்சோடு போராடினார்கள் !!- புலி வடிவில். புலிகள் 91ல் குடாநாட்டில் தமது நிர்வாகத்தை அமைத்தும் இருந்தனர். 91-94 ஆண்டுக் காலங்களில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் தேடித் தேடிப் புலிகளால் பலியெடுக்கப்பட்ட போது… அன்றைய சமூக நெருக்கடியால் தனது கவிதைகளோடு தன்னையே தீயிட்டு எரித்தாள் சிவரமணி. பெண்ணாயப் பிறந்த இந்தச் சிவரமணி இட்ட தீ அன்று எந்த மதுரையையும் எரித்து விடவில்லை!. எந்தச் சலசலப்பும் இல்லாத அவளது மரணம் எவர்களுக்கும் எந்தவித அரசியல் இலாபங்களையும் ஈட்டித்தர முடியாத ஒரு மரணமாக இருந்து விட்டதை இன்று வரலாறு சுட்டிக் காட்டி நிக்கிறது.

    சிவகுமாரனுக்குப் பின்னரான 35 வருட கால ஆயுதப் போராட்டத்தின், தமிழ் போரினவாத மக்கள் விரோத அரசியல் இன்று தமிழ் மக்களையே தற்கொலையாக நிறுத்தி வைத்துள்ளது. புலிகளின் தலைமை மீதான நெருக்கடி, அவர்களின் வாழ்வா சாவா என்ற பிரச்சனையை தமிழ் மக்களின் உயிர்களின் மீது முடிச்சாகப் போட்டு வைத்துள்ளது புலிகள்.

    புலிகள் போட்ட கணக்கு பிசகாகிப் போன நிலையில், இன்று இதற்கான விடைகளை மேலும் சிக்கலாக்கி விட்டது. கூட்டுவதா? கழிப்பதா? பிரிப்பதா? பெருக்குவதா? எதுவுமே தெரியாத சூணியக் கணக்காகக் குழப்பியடித்து விட்டார்கள்.

    குழப்பத்தோடு குழப்பமாக முத்துக்குமாரனும் தீக்குளித்து விட்டான்! தமிழ் நாட்டில் கொட்டைப் பாக்கின் துள்ளலாகத் துள்ளிய ஓட்டுக் கட்சிகளின் அரசியற் பிழைப்புக்கு கிடைத்து விட்டது இலட்டு.
    முத்துக்குமாரனின் மரணம் புலிகள் மக்களை விடவேண்டும் என்ற தார்மீகப் பொறுப்புக்கு அப்பாற் பட்டதாம்!. “புலிகளின்: சுயநிர்ணயக் போரிக்கைக்கும்” ,”இந்திய மேலாதிக்கத்துக்கு எதிரானது” மட்டும் தானாம். ஐயோ பாவம்! ஒரு பத்திரிகையாளனின் -பெண்ணே நீ – கோழைத்தனமான தற்கொலை!, மாவோவின் வார்த்தைப் பொறுக்கலுக்குள் பொருத்திவிடும் மாயாஜாலங்கள்!!. மாவோ கூட இன்றிருந்தால் இவற்றைப் பார்ப்பதற்கு அவருக்கு ஆயிரம் கண்கள் வேண்டும்.

    தமிழ் நாட்டில் ஓட்டுக்கட்சி அரசியலுக்காக தீக்குளிச்ச புண்ணியவான்களுக்கு வெளியிலே, புலிகளுக்காகத் தீக்குளித்த அப்பாவிப் புண்ணியவான்! உலகப் புரட்சியை படைக்கப் போவதாகக் கூறுகின்ற `புரட்சியாளர்களுக்கு` கூட இவனது மரணத்தை விட்டால் வேறு வழி இல்லைப் போல் தெரிகிறது! ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை. இந்திய மேலாதிக்கம் தமிழ் மக்களுக்கும் மட்டுமானதா? முழு இலங்கை மீதானது என்றால் பரந்துபட்ட சிங்கள மக்களுக்கு இன்றைய நிலைமை பற்றி உங்களின் கருத்தென்ன? தமிழ் பேசும் சிறுபான்மை இன மக்களான முஸ்லீம், மலையக, மலே, பறங்கிய ….. மக்களுக்கான உங்களின் விடை என்ன?

    இன்னும் சொல்லப் போனால்… இன்றைய தென் கிழக்காசிய பிராந்திய வல்லரசுகளான இந்திய – சீனா மேலாதிக்கத்தில் இலங்கைச் சிங்கள மக்களின் பாத்திரமென்ன? இன்றைய உலக ஒழுங்கமைப்பில் காலனித்துவத்தில் `சுயநிர்ணயக்` கோரிக்கை எப்படிப் பார்ப்பது. நிலப்பிரபுவத்தை வீழ்த்திவிட்டு வளந்து வந்த முதலாளித்துவ ஜனநாயகத்துக்கும், தரகு முதலாளித்துவத்தின் வர்க்கப் பண்புக்கும்: காலனித்துவத்தில் உருவாக்கப்பட்டு பாலுாட்டிச் சீராட்டி வளத்த இந்த முதலாளித்துவ ஜனநாயகத்துக்கும், தரகு முதலாளித்துவ பண்புக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. காலனித்துவத்தில் `சுயநிர்ணயக்` கோரிக்கையை இந்தச் சப்பாணி முதலாளிகளிடம் தள்ளி விட்ட தண்டணையை இன்று இலங்கையில் பாட்டாளி வர்க்கங்கள் நன்றாகவே அனுபவித்து வருகின்றன.

    இந்தக் கொடிய யுத்தத்தில் பலியெடுக்கப்பட்டவர்கள் வெளிநாடு போகடமுடியாத, இந்தியா மற்றும் தலைநகர் கொழும்பில் வாழ முடியாத வறிய கீழ் நிலை மக்கள்தான் என்பதை ஏன் இன்னும் உணரமுடியவில்லை. புலிகளின் முன்னணி உறுப்பினர்களின் பிள்ளைகளும் உறவினர்களும் வெளிநாடுகளுக்கு இடம் பெயரும் முரண் எதிலிருந்து உருவாகியது. ஆனால் வன்னிமக்கள் மட்டும் யுத்தக் களத்துக்குள்ளோயே நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென்ற முரணும் அதன் ஆசைகளும் எதிலிருந்து உருவாகிறது…

    இவற்றை எல்லாம் புரிந்து கொள்ள முடியாத ஒரு பத்திரிகையாளன் தீக்குளித்து விட்டான்! என்பதற்காக, இதில் உடைப்பெடுக்கும் உணர்ச்சி வெள்ளத்தில் அள்ளுப்பட வேண்டுமா என்ன? அல்லது இன்று தமிழ் நாட்டில் பூத்துக்கிடக்கும் இனவாத நச்சுக் காளான்களில் ஏதாவது அரசியலை சமைத்துப் பார்க்க வேண்டுமென்ற கட்டாய ஆசைதான் உண்டா?

    முத்துக்குமாரன் ஈழமக்களின் பிரச்சனையை வைத்து தமிழ் நாட்டில் பிழைப்பு நடத்துவதற்கு எதிராகத் தீக்குளித்தான் என்ற செய்தியும் அரசல் புரசலாக அடிபடுகிறது. அவன் தீக்குளிக்கும் போது அவன் கைகளில் இருந்த துண்டுப்பிரசுரம் இன்னும் வெளிப்படையாக பரவலான மக்களின் பார்வைக்குக் கொண்டு வரப்பப் பட்டிருக்கவுமில்லை. அவனது சொந்தக் கருத்துக்கள் முன்னிலைக்கு வராமலே அவனது கட்டையும் வேகி விட்டது!

    சிவகுமாரன் உண்ட நஞ்சும், முத்துகுமாரன் இட்ட தீயும் வேவ்வேறு காலகட்டத்தில் நடந்தாலும் சிவகுமாரன் உண்ட நஞ்சு புலியை வாழவைத்தது! முத்துக்குமாரன் இட்ட தீ என்ன செய்யப் போகிறது?ஒருவேளை வரலாற்றுச் சக்கரத்தை தலைகீழாக புரட்டும் சக்தி தமிழனுக்கு வந்துவிடுமோ?

    சுதேகு
    010209

  47. தோழர் ரயாகரனுக்கு,

    எனது சிற்றறிவுக்கு எட்டிய சில விளக்கங்கள்..

    இது புலிகளை அம்பலப்படுத்துவதற்கான நேரமில்லை… இது இந்திய அரசின் வல்லாதிக்கக் கனவுகளையும் அதற்கு வால்பிடித்துச் செல்லும் உள்ளூர் துரோகிகளையும் இவர்களின் செயல்கள் சிங்கள இனவெறிக்குத் துனை போய்க்கொண்டிருப்பதையும் மிக விரிவாக அம்பலப்படுத்த வேண்டிய நேரம்..

    உங்களுக்கு இங்கேயுள்ள நிலவரத்தின் முழு பரிமாணம் கிடைத்திருக்கவில்லை என்பது என் விமர்சனம்

    இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்ததையே பெரும் சாதனைகளாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க உள்ளிட்ட சில ஓட்டுக்கட்சிகள் ( திருமா இதில் சேர்த்தியில்லை என்றே நினைக்கிறேன்.. ஓரளவு நேர்மையுடன் அவர் செயல்படுவதாகவே எனக்குத் தெரிகிறது ) இவ்வாறான சூழலில் முதலில் இந்தப் போரில் உண்மையில் தமிழர்களைக் கொல்வது யார்? அதற்குத் துனை போகும் உள்ளூர் துரோகிகள் யார்? என்பதை மக்கள் முன் அம்பலப்படுத்துவதே உடனடியாக நாம் செய்யக்கூடியது…

    துட்டகைமினியின் காலம் திரும்பி விட்டதாக சிங்கள அரசியல்வாதிகள் குதூகலித்து வரும் இந்த வேளையில் புலிகள் ( நீங்கள் ஆசைப்படுவது போல) ”காற்றில் கரைந்து” விட்டால் எஞ்சியுள்ள தமிழ் மக்களின் கதி என்ன? ( இந்த நிலை இன்று ஏற்பட புலிகள் தமது வரலாற்றில் செயல்பட்ட விதம் ஒரு காரணம் என்ற உண்மையை உணர்ந்தே இந்தக் கேள்வியைக் கேட்கிறேன் ) அப்படியான சூழலில் சிங்கள மக்களிடையே எஞ்சிய அப்பாவித் தமிழர்களைக் கொல்லாதே என்று கோரிக்கை வைக்கக் கூட ஜனநாயக இயக்கங்கள் இல்லாத நிலை இருக்கிறது என்பது தானே நிதர்சனம்?

    ஒரு பாசிசத்துக்கு பதில் இன்னொரு பாசிசம் என்பது போல் எனது பின்னூட்டம் பொருள்படுகிறது என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன் – ஆனால் இந்தப் பதில் தான் மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா?

    புலிகள் வென்று தமிழீழம் அவர்கள் தலைமையில் அமைந்த பின் அவர்களின் பாசிச நடைமுறைகளுக்கு அந்தத் தமிழ் மக்களே தீர்ப்பளிப்பார்கள் – வரலாற்றில் அவ்வாறு தான் நடந்துள்ளது….

    இப்போது புலிப்பாசிசம் என்று பேசி சிங்கள பாசிசம் வெல்ல வழிவகுக்காதீர்கள்… புலிப்பாசிசமே ஜெயிக்கட்டும் – மக்களின் உயிராவது மிஞ்சட்டுமே?

    தமிழர்களை ஒட்டுமொத்தமாக சிங்களன் ஒழித்துக் கட்டியபின் எந்தப் பாசிசத்தை எதிர்த்து போராடுவது – குறைந்தபட்சம் நீங்கள் போரடவாவது புலிப்பாசிசம் மிச்சமிருக்கட்டுமே? கூடவே மக்களும்!!!!!

    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    மன்னிக்க வேண்டும் தோழர்.. உங்கள் ஆய்வுகளை நிறைய படித்து உங்கள் மேல் நிறைய மதிப்பு வைத்திருப்பவன் தான் இந்தப் பின்னூட்டத்தை எழுதுகிறேன்… — உங்கள் பார்வை நீக்கு போக்குகள் அற்று, எதார்த்தத்தை கணக்கிலெடுக்காத வரண்ட பார்வை என்பது என் குற்றச்சாட்டு..

    தோழமையுடன்

  48. திரு லவெர் பாய்,

    உங்களுடைய விமர்சனம் மிகத்தவறான பார்வையில் அமைந்திருக்கிறது, சிங்கள பாசிசம் மட்டுமல்ல புலிப்பாசிசமும் மக்களை கொல்கிறது,அதை நாம் வர்க்க ரீதியில் அம்பலப்படுத்த வேண்டும்.அதை தான் நாம் இன்று வரை செய்து வருகிறோம்.

    கலகம்

  49. தோழர்களுக்கு,

    இது இக்கட்டுரைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாததே.

    தில்லை கோயில் சம்பந்தமான வழக்கில் தீர்ப்பு வந்து விட்டது

    “தில்லைக்கோயிலில் கணக்கு வழக்குகளை பார்க்க இந்து அற நிலையத்துறைக்கு அதிகாரம் உண்டு”

    கலகம்

  50. கலகம்,

    உங்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறேன்… மேலும் எனது அந்தப் பின்னூட்டத்தில் இருக்கும் ஹிப்போக்ரஸியை உணர்ந்தே எழுதினேன்..

    இன்றைய குழம்பிய சூழலில் புலி வென்றாலும் பாசிச வெற்றி தான் – சிங்களம் வென்றாலும் பாசிச வெற்றி தான் ( மூன்றாம் தீர்வுக்கு “இன்றைய” { அழுத்தம் } சூழல் இடம் கொடுக்க வில்லை ) – இதில் புலியின் வெற்றி குறைந்த பட்சம் மக்கள் உயிரோடு இருக்க விடுகிறது – சிங்கள வெற்றி ஒட்டு மொத்தமாக அழித்து தமிழனை கடலில் போட்டு விட்டுதான் ஓய்வேன் என்கிறது ( குறைந்த பட்சம் தமிழர்களில் புலியல்லாத சாமனியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று பேசும் ஒரு சிங்கள அரசியல் இயக்கத்தையாவது நீங்கள் காட்ட முடியுமா நன்பரே?)…

    நான் சொல்கிறேன் குறைந்த பட்சம் மக்கள் உயிரோடு வாழ வாய்ப்பளிக்கும் புலி வெற்றி வந்து விட்டுப் போகட்டுமே? பாசிச எதிர்ப்பு அரசியல் நடக்கவாவது மக்கள் இருக்க வேண்டுமல்லவா?

    அவருக்கான எனது கேள்வி – ஆளில்லாத கடையில் மட்டும் தான் டீ ஆத்துவேன் என்று ஏன் அடம் பிடிக்கிறீர்கள்? என்பதே.

    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    //“தில்லைக்கோயிலில் கணக்கு வழக்குகளை பார்க்க இந்து அற நிலையத்துறைக்கு அதிகாரம் உண்டு”//

    நல்ல செய்தி!!! நன்றி

  51. லவ்வர்பாய்,

    இந்த கேள்வி வினவுக்கானதென்றால்,
    வினவு 4ம் தேதி வேலை நிறுத்தத்தைஆதிரிக்கின்றது.

    நட்புடன்
    வினவு

  52. //4 ஆம் தேதி பந்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?//

    வினவு நிர்வாகிகளுக்கும் மற்ற நன்பர்களுக்கும்

    கடைசியாக வந்துள்ள இந்தப் பின்னூட்டம் நான் இட்டதல்ல..

    குழப்பத்தைத் தவிர்க்க பின்னூட்டமிட தனியே ஒரு ஐ.டி துவங்கி அதிலிருந்தே எனது பின்னூட்டங்கள் இனி வெளிவரும்

  53. முத்துக்குமார் இறந்து விட்டான். ஆனால் முத்துக்குமாரின் கனவுகள் மீது மாத்திரம்தான் தமிழ் மக்கள் நடக்க வேண்டுமா? துருப்புச் சீட்டிலிருந்து ஆரம்பித்து ஆடமுடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே முத்துக்குமாரின் பார்வையை மேலும் வளர்த்து அதில் தொக்கி நிற்கும் உணர்ச்சி மட்டுமே மேவும் பல பகுதிகளுக்கு உணர்வுப்பூர்வமான அரசியல் திசைவழியை மாணவர்கள் கண்டுபிடித்துப் போராட வேண்டியுள்ளது.

    கலைஞர் விடுதிகளை மூடியதால் வீட்டிற்கு திரும்பியதன் மூலம் தமிழக மாணவர்கள் தமது அரசியலற்ற வெறும் இன அபிமானத்திற்கு இரையாகியுள்ளதும், தங்களது அரசியல் நோக்கத்திற்காகக் கூட அவர்களை ஒரு அமைப்பாக்கி இயக்கத் தவறிய இனவாத அரசியல் தனத்தின் கையாலாகாத்தனமும் வெள்ளிடை மலையாகி உள்ளது.

    முத்துக்குமாரின் சவ ஊர்வலத்தில் வந்த வைகோ, திருமா, கோ.க. மணி, நெடுமாறன் போன்றவர்களுக்கு ஊருக்கு ஒரு கல்யாண மண்டபமும், வணிகர் சங்கத்திடம் கோரிப் பெறுவதற்கு அரிசி, பருப்பு, காய்கறியும் நன்கொடையாகக் கிடைக்காமலா போய்விடும். மாணவர்களை தங்கவைத்து கல்லூரியைத் இன்று திறக்க வைத்திருக்கலாம். அவர்களது ஈழம் பற்றிய அக்கறையை வேறு எப்படி அளவிடுவது.

    அதற்கும் வழியில்லையா? மாணவர்கள் குடிசைப்பகுதிகளில் தங்குவற்கு சென்றிருந்தால் மக்கள் இன உணர்வு அடிப்படையில் உதவியிருப்பார்கள். மாணவர்களுக்கும் மக்களைப் படித்தறிய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். 65 ன் போராட்டங்களை திமுக பயன்படுத்தியது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு தேர்தல் பாதை திருடர்களும் 2009 நாடாளுமன்றத்திற்கு அடிப்போடத்தான் கூடியிருக்கிறார்கள். இவர்களது பந்த், நெடுமாறன் போன்றோரின் 5 ஆண்டு மேடை மௌனப் புரட்சி என நீளும் இப்பட்டியலில் இருந்து மாணவர்களின் உணர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட போவதில்லை.

    ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் மைய முழக்கமாக புலிகள் மீதான தடையை நீக்கு, பிரபாகரன் வாழ்க என்ற முழக்கங்கள் உருவானது உண்மைதான். ஆனால் உணர்ச்சி மட்டுமே மேவும் இந்தச் சொற்களின் சுகத்தில்தான் தமிழகத்தின் பல பினாமிகள், பதிப்பகங்கள் நடத்தியவர்கள் எல்லாம் பிழைப்பு நடத்துகின்றார்கள் என்பது மாணவர்களுக்கு அடையாளம் காட்டப்படவில்லை. இந்திராவின் ஆட்சியில் எம்ஜிஆர் ன் செல்லப்பிள்ளைகள் புலிகள் என்ற வாதமும் அது தோற்றுவிக்கும் திரைமறைப்பு நம்பிக்கைகளும் மக்களை உசுப்பேற்றுகின்றன. நகல் எடுங்கள் என்பார்கள்; நம்பி விடாதீர்கள். அதுவும் நம்ம ஆளு கடையிலே தரமா இருக்கும் என்பார்கள். முத்துக்குமார் என்ற அசலை நகலெடுக்கப் போகின்றீர்களா? அல்லது அவரது கடிதத்தை நகலெடுப்பதோடு நமது கடமை முடிந்தது என வாளாவிருப்பீர்களா?

    இன்னமும் தாக்கப்படாத இலங்கை துணைத்தூதரகம் உள்ளது. அவர்களுக்கு உதவும் மைய அரசின் ராணுவ அலுவலகங்கள் உள்ளது. இவற்றை அடித்து நொறுக்கும் போது உங்களிடம் வெறும் இனவாதக் கவர்ச்சி மிஞ்சியிருந்தால் அதனையும் அரசியல் படுத்துங்கள். அதாவது எந்த இனமாக இருந்தாலும் இன ஒழிப்பு என்பது நாகரீகமடைந்த மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது, அது சிங்களவர்களாகவே இருந்தாலும். உங்களது சக்தியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தேர்தல் கூட்டுக்காக களமிறங்கிய துரோகிகளை விரட்டிவிட்டு இந்திய அளவில் நடைபெற உள்ள ஒரு புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள வேண்டியுள்ளது. அப்புரட்சியின் ஒரு அங்கம்தான் நமது ஈழ சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கான ஆதரவு. இதன் உட்கிடையாக
    ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் தனது நாட்டு அரசு மற்ற நாட்டில் நடைபெறும் இன ஓழிப்பிற்கோ, அடக்குமுறைக்கோ ஆதரவாக செயல்பட்டால் அதனைக் கண்டிப்பது ஒரு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவசியத் தேவை.

    தற்போதைய மாணவ எண்ணங்களின்படி புலிகள் மீதான தடை நீக்கப்பட்டாலே ஈழம் மலர்ந்து விடுமா? குறைந்தபட்சம் தமிழ்மக்கள் மனிதர்களாக நடத்தப்படுவதை இது சாத்தியமாக்குமா ? என்ற கேள்வியை மாணவர்கள் தொடர்புபடுத்தி கேட்க வேண்டும். பார்ப்பான் மீதான விமர்சனங்களை விட முன்னிற்பது உங்கள் மீதான விமர்சனம். புலிகள் போன்ற போர்க்கள தியாகிகள் என்ற நினைப்பில் அவர்களை உடன்பிறப்பாகக் கருதிக்கொண்டு நீங்கள் சும்மா இருப்பது எப்படி சரி. அதற்கும் கருணாநிதியின் அமைதிக்கும் என்ன வித்தியாசம்? உண்மையிலேயே பார்ப்பனக் கும்பல்கள் தமிழர்களை விசிலடிச்சான் குஞ்சுகள்தான் எனக்கருதி ஊடகங்களில் நம்மினத்தின் குரலை மறைத்தது சரிதானே என்பதை ஏற்பது போல் அல்லவா இருக்கிறது உங்களது இந்த மௌனம்.

    விடுதலை இயக்கமோ, கம்யூனிச இயக்கமோ ஒரு ராணுவ கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு மக்களுடனும் மாற்று அமைப்புகளுடனும் விவாதிக்க பொறுமையும் அவசியம். அப்போதுதான் காரியத்தை சாதிக்க முடியும். இல்லாவிடில் ஜெயலலிதாவிற்கு பயந்து காந்தியை விட அகிம்சை வழியில் மேடைகளில் 5 ஆண்டுகளாக அமைதியாகவே இருந்து போராடும் நெடுமாறன் போன்றவர்களை நம்பித்தான் ஜனநாயக வெளியை நிரப்ப முடியும். ஆண்டியாஸ் நிலமாகிய தாயை அணைந்து இருப்பதைப் போல நமது கொள்கையும், திட்டமும், அரசியலும் மக்களைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டும். புலிகளின் அரசியல் சரி என நீங்கள் கருதினால் இணையத்தில் அவர்களது இயக்கத்தின் திட்டம் உள்ளது. அதனையும் பிரதியெடுங்கள்; தமிழகத்தின் உழைக்கும் மக்களிடம் செல்லுங்கள். அதனை விளக்க முயற்சி செய்யுங்கள். அதன் ஊடாக மக்களை மட்டுமல்ல, உங்களையும் நீங்கள் அரசியல் படுத்திக் கொள்ளலாம்.

    ஒருவேளை தமிழனில்லை என்பதற்காக விதர்பா விவசாயிகளின் தற்கொலைக்காக உங்களது கண் கசிய மறுத்திருந்தால் அந்த நேரத்தின் தங்களது மன உணர்வை வழிநடத்திய தவறான இனவாதம் மண்டையில் சுத்தியலால் அடிக்கலாம். டெலோ மீதான தாக்குதலுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் மக்களை இரண்டாம்பட்சமாக்கிய புலிகளையும் புரிந்து கொள்ளலாம். புலிகளை விமர்சிக்க இது தருணமல்ல என்ற வாதம் ஒருவகையில் சில நல்லெண்ணங்களின் தொகுப்பாக இருந்துவிட முடியாது. அதே நேரத்தில் இந்திய உதவி கிடைக்கும் என நம்பிக்கை அளித்த ஓட்டுப் பொறுக்கிகள் இந்தியாதான் ஆயுதத்தை ராணுவத்தை இலங்கைக்கு கொடுத்து உதவுகிறது என்பது ஜனவரி 26 க்கு பிறகுதான் பேச ஆரம்பித்தார்களே, அது ஏன் என்பதை ஏன் அவர்களிடம் நீங்கள் கேட்கவில்லை. ஜெயலலிதாவிடம் எங்களது ஈழம், புலிகள் பற்றிய கொள்கைகளை விளக்கி விட்டோம். அவரோ உங்கள் கொள்கை வேறு எனது கொள்கை வேறு எனக் கூறிவிட்டு, கூட்டணி உண்டு என்றார் எனக் கூறும் மதிமுக வும், சிபிஐ ம் என்ன சொல்ல வருகிறார்கள். கூட்டணிக்கு கொள்கை இல்லை என்பதுதானே. இந்த வெங்காயங்களை நம்பியா போராடப் போகின்றீர்கள். இவர்களை மேடையேற்றிய த.ஓ.வி.இ காரர்களே ! மன்சூர் அலிகானை பேச அழைத்தபோது கேட்ட விசில் சப்தத்திற்காக தமிழனை சொரணை அற்றவர்கள் என்றீர்களே, மன்சூராவது பரவாயில்லை திரையில்தான் வில்லன், வைகோ வை என்ன சொல்லுவது காமெடியனா, குணச்சித்திர நடிகனா, வசன கர்த்தாவா … எத்தனை முகங்கள் இருந்தென்ன ? மாணவர்களது உணர்ச்சியை பயன்படுத்தி பாஜக வை ஆட்சியேற்றத்தானே அவ்வளவு முயற்சியும். இந்த தூய இனவாதம் அன்று திமுகவை ஆட்சியேற்றிய அளவுக்கு இன்று சங்க பரிவாரத்துக்கும்தானே உதவப் போகின்றது.

    புலிகளின் தியாகத்தைக் காட்டிலும் முத்துக்குமரனின் தியாகம் உயர்ந்ததுதான். முத்துக்குமரனின் கடிதமும் போராட்டத்திற்கான வேதப்புத்தகம் என்று சொல்லிவிட முடியாதுதான். ஆனால் ஜனநாயகத்திற்கான இயக்கங்களைப் பற்றி தேர்தல் பாதை மூலமாகவே கண்டறிந்த சமூகத்தில் ஜனநாயத்திற்கான மாணவர் போராட்டத்தை தனது மரணத்தின் மூலம் துளிர்க்க வைத்தத்தான் முத்துக்குமரனின் தியாகத்தை ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றது. கடிதம் மேசையாவுக்காக ஏங்குகிறது.. பிரபாகரனை முன்னிறுத்துகின்றது…ஒபாமாவை நம்பிக்கையுடன் பார்க்கும் தெளிவின்மை இருக்கின்றது. இது இரண்டாவது பிரச்சினைதான். ஆனால் அதில் தொக்கி நிற்கும் உணர்ச்சிதான் எல்லோரையும் கண்கலங்க வைக்கின்றது. படிப்பவர்களுக்கு அக்கடிதம் தங்களையும் விமர்சிக்கின்றது எனப் படுவதில்லை. மாணவர்கள் பற்றிய அவரது புரிதலில் ஒருவித ரோமாண்டிக்கான பார்வை உள்ளதுதான். அந்தப் புள்ளிதான் சினிமாக்காரர்களையும், அவர்களை மிஞ்சுகின்ற மேனாமினுக்கி அரசியல்வாதிகளையும் ஒன்றிணைத்தது. மாணவர்களுக்கு புரியவைக்கப்பட வேண்டியிருந்த அரசியல் காயடிக்கப்பட்டது. தன்னந்தனியாக ஒரு இளைஞன் தான் கேட்டறிந்த உலகத்திலிருந்து நமீதாவுக்கு கோயில் கட்டாமல், மானாட மயிலாட பார்க்காமல் தன்னையே பலிகொடுக்கவும், தான் ஏன் பலியாகின்றோம் என்பதையும் விளக்க முயற்சித்திருப்பது, அதுவும் அட்டைக்கத்திகளே நிரம்பிய அரசியல்வாதிகளுக்கு மத்தியில் முயன்றிருப்பது மிகவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது. பல்தேசிய மக்களை ஆதரிக்க கோரியிருப்பது மிக முக்கியமான ஒன்று எனலாம்.

    சினிமா உலகத்தோடு அவருக்கிருந்த தொடர்பு அவரை ஒரு கற்பனையான உலகை, நீதி நியாயங்களுக்கு அஞ்சி நடக்கும் அரசியல்வாதிகள் நிறைந்த உலகத்தை படைப்பதற்கு உதவியிருக்கலாம். இவற்றின் மொத்த உருவமாக பிரபாகரனை அவர் கருதியிருக்கலாம். ரஜனி திசாரனாமக கூடக் கொல்லப்பட வேண்டியவராக அவருக்குத் தெரிந்திருக்கலாம். தவறான புரிதல்கள் கொண்டவர் முத்துக்குமார் ஆகவே அவரைக் கண்டிப்போம் என துக்ளக் சோ போலப் பேச முடியாது. இதுவரை பேசிப்பழகாத உதடுகளைப் பொது இடங்களில் பேசவைக்கவும், ஜனநாயக மறுப்பு நிலவும் தேசத்திற்கு எதிராகப் போராடவும் உதவியிருக்கிறது இந்த மரணம்.

    பிப்ரவரி 4 ம் தேதி பந்த் க்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள் அட்டைக்கத்திகள். அன்றைக்குத்தான் இலங்கை குடியரசான தினம். அநேகமாக முல்லைத்தீவு அன்றைக்கே சிங்கள ராணுவ வசமாகி விடலாம். தங்களது பெற்றோரை, சகோதரனை இழந்த அந்த அப்பாவி உணர்வாளர்கள் செத்தால் கூட அங்கிருந்து வெளியேற மாட்டார்கள். விடுதலையை போலியாகவே பெற்ற ஒரு தேசம் அதற்காகப் போராடாததைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆம் தங்களுடைய விடுதலைக்காக உண்ணாவிரதம் இருப்பார்கள், ஹர்த்தால் அனுசரிப்பார்கள். இந்தப் பேடிக் காந்திகளின் வழித்தோன்றல்கள் வழிநடத்த 4ம் தேதி பந்த நடக்க உள்ளது. ஜீவமரணப் போராட்டத்தை வைத்து பிழைப்புவாத அரசியல் நடத்த கிளம்பி விட்டார்கள் யோக்கிய சிகாமணிகள்.

    ஊர்வலம் சென்ற வழியில் எல்லாம் காங்கிரசு கொடிகளையும், ஹிந்து பத்திரிகை விளம்பரங்களையும், ஜெயா படத்தை மாத்திரமே அடித்துக் கொண்டு சென்ற மாணவர்களின் தமிழின உணர்ச்சி மயானத்திலிருந்து வெளியேறும்போதே மாணவர்களிடம் வடிந்து விட்டது. ஐடிசி விட்டாச்சு, வீட்டுக்கு கௌம்பு என்று கிளம்பி விட்டார்கள். உணர்ச்சியின் எழுச்சிக்கு ஆயுசு குறைவு என்பது மாணவர்களது வயதுக்கு புரியாத ஒன்று. உணர்ச்சியை ஒரு உணர்வாக அதாவது சிந்தித்து புரியப்பட்ட அரசியலுக்கு உட்படுத்தி ஒரு தலைமைக்கு கட்டுப்பட்ட அமைப்பாக செயல்படுவதும், எதிரி யார் என்பதை வரையறை செய்வதும், மெழுகுவர்த்தி ஏந்துவது, பூப் போடுவது, அஸ்திகலசத்தை ஊர்வலம் விடுவது போன்ற முத்துக்குமரனின் ரொமாண்டிக் தீர்வுகள் சினிமாக்காரர்களுக்குதான் உதவும் என்பதைப் புரிந்து கொண்டு அவற்றைப் புறக்கணிக்க வேண்டும். மைய மாநில அரசின் சட்டம் இங்கு செல்லாது என்பதை முரசறிவிக்க எல்லாத் தரப்பினரையும் (நீதிமன்றம், கலெக்டர் ஆபீஸ், தாலுக்கா ஆபீஸ், பள்ளிகள், என அனைத்து மத்திய மாநில அரசு நிறுவன ஊழியர்களையும், விவசாயிகளை, வணிகர்கை, தொழிலாளிகளை, தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை ….) போராட்டத்தில் பங்கேற்கவும் வேலைநிறுத்தம் செய்யவும் வலியுறுத்தி அவர்களை சந்தித்து மாணவர்கள் பேச வேண்டும். ஒருநாள் போராட்டம் என்பது துரோகம். தொடர் போராட்டம்தான் சாதிக்கும்.

    துருப்புச்சீட்டு என்பதற்கு இருபொருள் உண்டு. சீட்டாட்டத்தில் தோற்கும் நிலையில் உள்ளவனுக்கு வராது வந்த மாமணியாக வந்து ஜெயிக்கவைக்கும் சீட்டு அது, முத்துக்குமரனைப் போல. விளையாடத் தெரியாதவன் கையில் அது கிடைத்து விட்டால் அது உண்மையில் ஒரு ஜோக்கர் தான்.

    .தளபதி

  54. // ஒருநாள் போராட்டம் என்பது துரோகம். தொடர் போராட்டம்தான் சாதிக்கும். \\

    மிக சரி!

  55. ணா, ரெம்பத் தேன் ஜூடாயிடிங்க, ப்ரெசெர் ஏறிடப் போவுதுணா… அடங்குங்க… அட , அவங்க இதப் பண்ணாங்க, அதப் பண்ணாங்கனு தண்டவாளம் கட்டறத வுட்டுட்டு முடிஞ்சா கீற்றுல ஒரு விவாதத்த ஒழுங்கு பண்ணி அங்க உங்க பார்ப்பன்னிய தலய அனுப்பி வைங்க, தத்துவார்த்த ரீதியா விவாதிக்க.

    மத்தவங்கள விமர்சனம் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.. உங்க பார்ப்பனத் தலைமைக்குத் தான் தமிழ் மக்கள் விடுதலை பத்திப் பேச என்ன தகுதி இருக்கு..? உச்சாணிக் கொம்புல நீங்க இருக்கறதா நீங்க வேணா கற்பனை பண்ணிக்கலாம், உங்களுகு கீழ தான் எல்லாரும் இருக்காங்க, மத்தவங்க லாம் கறை பட்டவங்க, நீங்க தான் தூயவங்க, உண்மை யானவங்க போன்ற கற்பனைல மிதந்திட்டு கெடங்கணா.. இது உங்க பார்ப்பனத் தலைமை, இந்திய பார்ப்பன்னரிடமுள்ள உயர்நிலை மனப்பான்மை, இட்லரின் தூய ஆரிய மனநிலைக்கு ஒப்பான சங்கதிய உங்க கிட்ட
    புகுத்தி இருக்கறதா ஊரில எல்லாரும் சமுசயப் படறோமுங்க.

    அங்க பொயி குத்துச்சண்டை போடுண்ணா, மேடை சொத்த, லைட்டு கம்மி, சூ கெடயாது எங்கிட்ட, அவன் மூஞ்சி இப்ப்டீகீது, இவன் அபடிங்கறீங்க. கொள்கை ரீதியாக விவாதிக்கத் துப்பில்ல. ஆளுங்களப் பந்தாடுறீங்க.

    >>உங்க‌ள விமர்சனம் பன்னுனா விட்ருவீங்களான்னு கேட்கிறாரு இந்த மொக்கை அரசியல்காரர்,நீங்கள் என்ன நினைத்தீர்கள் புலிகளை போல கொன்னுபோடுவோம்ன்னு நினைத்தீரோ.<<<

    ணா, இத்துலாம் ரெம்ப ரெம்ப ஓவெர்ணா, அழித்தொழிப்பு அது இதுனு முன்னாடி லாம் இதத் தானே பண்ணீட்டிருந்தீங்கணா. போங்கணா உங்களோட ஒரே தமாசு தான்.

    அப்புறம் பாசு, புஜ, குஜா இதழ்லாம் என்ன ஜூரிகள் குழு ஆய்ந்தறிஞ்சு அறுதியா
    விட்ட இறுதி ஆய்வறிக்கைகளன்ணா, அதுல லாம் உங்களுக்கு புடிக்காதவங்கள நல்ல
    திட்டி எழுதிருப்பீங்கணா, அதானே?

    ணா, ரெம்ப காமெடி பண்ணுரீங்க, இதுக்கு இராயாணாவே பர்வால. போங்கண்ணா..கிச்சு..கிச்சு…

  56. அருமையாக வடித்துள்ளீர்கள்.
    நன்றி
    காவியத் தலைவன்
    முத்துக்குமரனுக்கு கண்ணீர் அஞ்சலி.

    ஆனாலும்
    முத்து ஆயுதம் ஏந்தாமல்
    தன்னை ஆயுதமாக்கியுள்ளார்.

    இந்த பாதையை
    இனி எவரும் பின் பற்ற வேண்டாம்
    அதுவே பணணிவான வேண்டுகோள்.

    உயிரோடு இருந்து போராடும் உங்கள் பலம்தான் ஈழத்து ததமிழருக்கு ஆறுதலாகப் போகிறது.

    சுவிஸ் வானோலியில் முத்துக்குமரனுக்கு
    சமர்பனமாகியுள்ள நிகழ்ச்சியை கேட்கவும்
    http://www.radio.ajeevan.com/

  57. வர்ரவ… போரவனையும், அணுவுல ஆரம்பித்து வெளிக்கு போனா தொடைக்கர கல்லுவரைக்கும் கருத்துச்சொல்லி புதுசா வலைக்கு வாரா பசங்கல ஏதோ உலகத்திலேயே கொளுகைக்கு அத்தாரிட்டி வாங்கினவங்கன நாங்கதேனு நம்ப வெச்சு பூஜா காஜா மூஜானு பல பேர்ல கருத்துச் சொல்ற கம்யூட்டர் கருத்து கந்தசாமியான ம க இ க-வுக்கு ஈழ பிரச்சனையில் என்ன நிலைபாடு? ஜெ.வி.பி பத்தி கருத்தென்ன? ஒன்று பட்ட இலங்கையா? மாபெரும் மக்கள் திரள் ம க இ க தலைமையில் தனி ஈழமா? இப்படி எதுலையுமே ஓப்பனா ஒன்னுமே சொல்லாம, படிக்கரவனையெல்லாம் கே.பி-யாக்கி விடர வேலையை விட்டுட்டு ஈழத்துக்கு போயி ஜெ.வி.பி பங்காளியோட சேந்து மக்கள தமிழ்நாட்டை போலவே மாபெரும் அணிதிரட்டல் நடத்த மூளை பூர்வமான வாழ்த்துக்கள்

  58. முத்துக்குமாருக்கு கூட்டம் சேராதுனு விமர்சனம் பண்றது, அப்புறம் கூட்டம் சேந்தா கொடிய புடுச்சுக்குனு கும்மி அடிக்கிறது. தூ… தூ… கருணாநிதி தேவல.

  59. சரி நண்பரே! முத்துக்குமார் மனச்சிதைவால் கொள்கை குழப்பத்தால இறந்துட்டார்னு வெச்சுக்குவோம்… இதை எழுதர நீங்க கொள்கை என்ற வார்த்தைக்கே வடிவம் கொடுக்கிற நீங்க இது வரைக்கும் ஈழத் தமிழருக்காக என்ன கிழுச்சீங்க, முன்தாநாளு ஈழ காத்தடிக்கிதுனு தூத்திக்கலாம்னு ஆர்பாட்டம் நடத்துனது தவிர… இன்னைக்கு முத்துக்குமார் ஊர்வலத்துல என்ன மயிருக்கு கலந்துக்கிட்டீங்க? கொளுக வெட்கம் வரலையா? எழவு வீட்டிலையும் ஆள்புடிக்கிற அரசியலா? “எந்த ஒரு செயலையும் செய்யாதவனே, எந்த தவறும் செய்யமாட்டான்” –உண்மை கம்யூனிஸ்ட் லெனின்.

  60. எல்லா பின்னூட்டங்களுக்கும் சேர்த்து, தோழர்.வினவு அவர்களிடமிருந்து விரிவான பதிலை எதிர்பார்க்கிறேன்/எதிர்பார்க்கிறோம்!

  61. ஈழத் தமிழன் பெயரையும் புலிகள் பெயரையும் சொல்லிக்கொண்டு சினிமா காரனுக்கும் அரசியல்வாதிக்கும், மில் ஓனருக்கும் சொம்பு தூக்கும் தமிழினவாதிகளே உங்கள் வருத்தம் புரிகின்றது….முத்துக்குமார் செத்த மேட்டர வச்சு மாணவரகள தூண்டிவிட்டு, ஒப்பாரிவச்சு கூட்டம் போட்டு கலெக்ஷன் பாக்கலாம்னு நீங்க நெனச்ச வேளையில இந்த ம.க.இ.க காரன் உள்ளார பூந்து சரியான அரசியல் பாதையில் மாணவர்களை கொண்டு போயிட்டானேன்னு நீங்க வெக்ஸ்ஆகி இருப்பது புரியுதுமா ஆனா இன்னா செய்யறது இன்றைய தமிழக இளைஞர்கள் உங்க செல்லரிச்சு போன அரதப் பழசான தத்துவத்துக்கு வர மாட்டாங்கம்மா ஏன்னா இந்த உலகமய கால கட்டத்துல அவங்க வாழறதே ஒரு சர்வதேசிய வாழ்க்கை அதுல உங்க இனவாத்ததுக்கு இடமே இல்லை. இன்னிக்கு வால்ஸ்டிரீட் கிரேஷ் ஆச்சுன்னா வால்டாக்ஸ் ரோடுல வேல போவது இந்த நேரத்துல நீங்க போயி தனிதமிழ்நாடு வந்தா நம்ம பிரச்சனையெல்லாம் தீந்துடூமின்னு போசுனா அவன் வாயால சிரிக்கமாட்டான்!

    அடுத்த பரச்சனை ஈழத்தை பற்றியது… ம.க.இ.க காரங்க ஒரு பொது முழக்கத்துக்கு கீழ தமிழகம் பூரா ஆர்பாட்டம்/ மறியல் நடத்தராங்க இங்க வந்து வக்கன பேசும் விஜய் மற்றும் பேரில்லா பிச்சையான போங்கடா போன்ற கேசுகளெல்லாம் எத்தன போராட்டம் நடத்துனீங்க, எங்க எத்தன பேர் கைதானீங்க போன்ற விவரங்களை சொல்லுங்க. ஜனங்க ரெண்டையும் கம்பேர் செஞ்சு பாத்துகட்டும். அத உட்டுட்டு பொலம்பறது, திட்டறது, கிண்டலடிகிறது போன்ற வேலைகளில் இறங்கினால் அம்பலப்படப் போவதென்னவோ நீங்கதான்.

    ஏன்னா கூச்சல் போடறது, அப்புறம் கலைஞரே தமிழின காவலரேன்னு கூஜா தூக்கறதுன்னு உங்க அரசியல் நடவடிக்கை முடிஞ்சு போச்சு. இன்னிக்கு முத்துக்குமார் சாவலன்னா நீங்க இன்னமும் கலைஞர் காலடியிலதானே கிடந்திருப்பீங்க. இப்ப அடுத்த தமிழன காவலருக்காக நீங்க வெயிட்டிங். ஏன்னா கூச்சலும் கூஜாவும்தான் உங்களுக்கு தெறிந்த அரசியல். அத வச்சு நீங்க இதுவரைக்கும் ஈழத்துக்காக சாதித்த்தை பட்டியல் போட முடியுமா?

    ம.க.இ.க புலிகள ஆதரிக்கல அதனால அவங்க தமிழர்களுக்கு எதிரின்னு நீங்க கூச்ச்ல் போடுறீங்க, சரி. புலிகள்=தமிழர்கள் அப்பிடீங்கறீங்க, சரி, ஈழ விடுதலை உங்க சொத்து மாதிரியும் ம.க.இ.க காரன் அத திருடிட்ட மாதிரியும் பேசுரீங்க சரி அப்ப உங்களுக்கும் உங்க தலைவர்களும் இங்க என்ன வேலை. போங்க வன்னிக்கு, ஆளுக்கு நாலு டஜன் சிப்பாய சுட்டு விடுதலையை வாங்க வேண்டியதுதானே. சீரியஸா கேக்குறேன்…

  62. I have copied article on Muthukumar from Idlivadai. The sooner we get rid of Tamil tigers, and the corrupt unscrupless DMK/Vaiko etc, the better
    இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் இலங்கையில் நடந்து வரும் ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமார் என்ற வாலிபர் சென்னையில் இன்று காலை தீக்குளித்தார்.

    எல்லா ஊடகங்களும் அரசியல் தலைவர்கள் வழக்கம் போல் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் கண்டனங்கள் தெரிவித்த வண்ணம் உள்ளார்கள். இவர்களின் அறிக்கையில், ’தமிழ் ஈழம், போர் நிறுத்தம், இழந்து தவிக்கும்’ போன்ற வார்த்தைகளை எடுத்துவிட்டால், மீதம் இரண்டு வரி கூட மிஞ்சாது

    முத்துக்குமரன் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் போது பா.ம.க எம்.எல்.ஏ வேல்முருகன் இன்று சட்டசபையில் இவ்வாறு பேசியுள்ளார்

    முத்துக்குமார் என்பவர் சென்னையில் இன்று தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. முத்துக்குமாரை காப்பாற்றுவதற்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும். ஒரு வேளை காப்பாற்ற முடியாமல் இறந்து போனால் அவருடைய குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்

    ஆக முத்துகுமார் என்ற இளைஞரின் உயிர் 10 லட்சம் ரூபாய்.

    ஈழத்தமிழரின் தியாக வரலாற்றில், முத்துக்குமாரின் தியாகமும், புகழும் நிலைத்து நிற்கும். தாய்த் தமிழகத்தின் இளந்தமிழ் மனங்கள் எரிமலையாக சீறத் தொடங்கிவிட்டதை இப்போதாவது தமிழருக்கு துரோகம் செய்யும் மத்திய அரசு உணரட்டும்

    என்று உளறி கொட்டியுள்ளார் வைகோ. இதை எப்படி தியாகம் என்று இவர் சொல்லுகிறார் ? அப்படியே இதை தியாகம் என்றால் ஏன் இவர் இதை செய்யவில்லை. இதை தியாகம் என்றால் மற்ற இளைஞர்கள் இதை பின்பற்ற வேண்டும் என்கிறார் போல

    எல்லாவற்றிருக்கும் மேலே திருமாவளவன்
    ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமார் தீக்குளித்திருக்கிறார். இதற்கு மேலேயும் இந்திய அரசு ஈழத்தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் பல முத்துக்குமரன் உருவாகுவதைத் தடுக்க முடியாது. முத்துக்குமரனின் மரணத்துக்கு இந்திய அரசே காரணம்
    என்று சொல்லியிருக்கிறார்.

    முத்துக்குமரன் தீக்குளிக்க யார் காரணம் ?

    சும்மா சீரியல் பார்த்துக்கொண்டிருந்தவர்களை அரசியல்வாதிகள் ஓட்டுக்காக மனித சங்கலி, பந்த், உண்ணாவிரதம், பேரணி, ரஜினாமா நாடகம், என்று ஆரம்பித்து உசுப்பிவிட்டது தான் காரணம்.

    இவ்வளவு வாய்கிழிய பேசும் தமிழக தலைவர்கள் திருமங்கலம் இடைத்தேர்தலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? கவியரங்கத்தில் மட்டும் தான் பேச வேண்டுமா ? இலங்கை தமிழர் பிரச்சனை ப்ற்றி பிரச்சாரம் செய்ய தைரியமில்லாத தலைவர்களுக்கு பிரியாணி மட்டும் தான் போட தெரியுமா ?

    இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்தால் தான் இவர்களுக்கு ஈழ தமிழர்கள் மீது பரிவு ஏற்படுமா ? இரண்டு வருஷம் முன்பு எங்கே போனது இந்த பாசம் ?

    நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, போன்றவர்கள் செங்கல்பட்டு மணவர்களின் உண்ணாவிரத பந்தலில் மாணவர்களை உசுப்பிவிடுகிறார்கள். ஏன் இவர் பையன் “ஸ்டுடண்ட் நம்பர் ஒன்” சிபி இதில் கலந்துக்கொள்ள கூடாது ? தமிழ் சினிமா துறையினருக்கு பெரும் அளவு பணம் விடுதலைப்புலிகளிடமிருந்து வருகிறது என்ற குற்றச்சாட்டை நான் சொல்லவில்லை, காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் சொல்லுகிறார். இதில் நிச்சயம் உண்மை இருக்கும் என்று நம்புகிறேன்.

    முத்துக்குமரன் சாவுக்கு அரசியல் வாதிகளை போல் மீடியாவுக்கும் பங்கு உள்ளது, அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல், இங்கே தங்கள் வியாபாரத்துக்கு கவர் ஸ்டோரி, exclusive என்று தமிழ் மக்களின் கஷ்டத்தை வியாபாரம் செய்கிறார்கள்.

    ஹேமந்த் கர்க்கரே என்பவரை எத்தனை பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது? முத்துக்குமரன் இன்னும் எவ்வளவு நாள் மானாட மயிலாடவை மீறி நிற்கப்போகிறான் ?

    முத்துக்குமரன் போல் இன்னும் எவ்வளவு முட்டாள்குமரன் உள்ளார்களோ ?

    முத்துக்குமரனை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்துக்கு இட்லிவடையின் ஆழ்ந்த அனுதாபங்கள்

    Read More…

    Collapse…

    Posted by IdlyVadai at 1/30/2009 12:41:00 AM 96 comments Links to this post

    Labels: செய்திவிமர்சனம்

  63. I am proud that I took part in the final procession:i came all the way from Karaikal and shouted against Jeya&Karunanidhi&singh bastard!
    This is my first field experience:though there were around 15,000 police in both the sides of the road,none of the participants afaraid of them!
    Brave enough to shout against anti tamil bastards:
    wishes to ur team,which made EFFORTS in full and i shall be glad if ur team send me my photo to
    pathiplans@sify.com

  64. what else we can expect from blog like idlyvadai(which suggests modi as the next pm).yes these ppl frustration is undrstandable.they expectd a public outrage for sankaracharya arrest but these silly emotional tamilians are crying out for muthukumar…….no no muttalkumar in their slang

  65. தோழர் இரயாகரன் விமர்சனம் சிறப்பானதாகவே இருக்கிறது. ஆனால், முன்பு புலிகளை எதிர்த்துவந்தோம், தற்போது ஆதரிக்கமுனைகிறோம் என்பதுபோல தொனிக்கிறது. இன்றும் புலிகளை எதிர்த்து சமரசமற்ற அரசியல் விமர்சனங்கள் செய்வது தமிழகத்தில் மகஇக மட்டும்தான். முத்துக்குமார் விசயத்தில் புலிகள், இந்திய அரசு என்ற இரண்டில் இந்தியஅரசை அம்பலப்படுத்துவதை முன்னிலைப் படுத்தியுள்ளோம். அதேநேரம் புலிகளையும் சேர்த்து அம்பலப்படுத்தியிருக்கவேண்டும். முத்துக்குமாரின் தற்கொலையில், அவரின் இறுதிஊர்வலத்தில் மக்களின் உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்துவதற்கு புலிகளை விட இந்திய அரசை அம்பலப்படுத்துவதே சரியானதாக இருக்கும். ஆனாலும் முத்துக்குமாரின் தற்கொலைக்கான காரணியும் பின்னணியும் ஈழத்தமிழ் விடுதலைக்கு உதவாது புலியிசத்திற்கே உதவும் என்பதில் தோழரின் விமர்சனங்கள் சரியானவைகள் தாம்.

    தோழமையுடன்
    செங்கொடி

  66. வினவு ஓட்டுப் பொறுக்கிகளால் தீர்மானிக்கப்பட்ட 4ஆம் தேதிய பந்த்தை எப்படி ஆதரிக்கிறீர்கள்? ஏற்கனவே தனியாக இலங்கைப் பிரச்சனைக்கு ஆர்ப்பாட்டம் செய்தால் கூட்டம் சேராது என்பதால், முதலாளித்துவ எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் தமிழகம் தழுவிய அளவில் கூட்டம் சேர்த்துக் கொண்டு பின்னர் திடீரென்று மறுநாளே அந்தக் கூட்டத்தை வைத்து தமிழின அடையாளத்துடன் தங்களது அணிகளை புல்லரிக்க வைத்ததோடு, தற்போது தொடர்ந்து ஓட்டுக் கட்சிகளால் தீர்மானிக்கப்பட்ட பந்த் நடவடிக்கையும் ஆதரிக்கிறோம் என்று கூறுவது வெளிவேசம் இல்லையா? அந்த ஓட்டுப் பொறுக்கிகளின் கோஷத்தோடு உங்களது கோஷமும் எப்படி இணைகிறது. சந்தர்ப்பவாதத்தின் மறுபெயர் ம.க.இ.க. இனவாதம்! விட்ட புரட்சியா ஈழத்துலப்போய் நடத்துவீர்கள் போல இருக்கே! லெனினியத்தின் வர்க்க உணர்வின் அடிப்படையிலான எழுச்சிகளையெல்லம் கைவிட்டு விட்டு பிணத்தின் மீதான அனுதாப உணர்ச்சியின் விளைவாக எழுந்துள்ள அரசியலை முதன்மைப்படுத்தும் உங்களத புரட்சி சிந்தனை ஓ ஓஹா.

  67. ஜனங்களே,
    இந்த போலி கம்மூனிஸ்டு சிபீஎம் விடுதலையின் டாப் 10 காண்டுகள்…

    1)அவனால சொந்தமா எழுத முடியாதுஅதனால நல்லா எழுதறவன பாத்தா காண்டு

    2)சந்திப்பு ஈமெயில் அனுப்றத அப்படியே படிக்காம பின்னூட்டம் போடனும். ஏன்னா இவனுக்கு சரியா படிக்கவறாது அதனால படிக்கறவன கண்டா காண்டு

    3) சந்திப்பு அளவுக்கு இவனுக்கு கூலி கொடுக்கறதில்ல அதனால சந்திப்பு மேல காண்டு

    4) ம.க.இ.க வுக்கு கூட்டம் வந்தா காண்டு

    5) ஆசையிருந்தாலும் முத்துக்குமார் பிணத்தை வைத்து ஓட்டு பொறுக்க முடியலையே அதனால காண்டு

    6) சிதம்பரம் போராட்டத்துல ம.க.இ.க ஜெயிச்சதுல காண்டு

    7) வினவு தளத்தை ஒருநாளைக்கு ஆயிரக்கணக்குல மக்கள் பாக்கும் போது இவன் பிளாக 9 பேர் மட்டும் பாக்கறதுல காண்டு

    8.) ம.க.இ.க தோழர்கள் இணையத்தெருக்களில் இந்த போலி கம்யூனிஸ்டு சீபீஎம் கூட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்பதால் காண்டு

    9) ஈழப் பிரச்சனையில ம.க.இ.க தமிழ்நாடு பூரா ஆர்பாட்டம் நடத்தும் போது சீபிஎம் காரங்க பச்ச சட்ட போட்டுகிட்டு போயஸ் தோட்டத்துல புல் புடுங்கத பாத்து மக்கள் வாயால மட்டுமில்லாம பல வழிகளில் சிரிப்பதால் காண்டு

    10) ஒரளவுக்கு சொரணையிருக்குற இவங்க கட்சி அணிகள் பின்னங்கால் புடனியில இடிக்க ம.க.இ.க பக்கம் ஓடிவர்ரதால காண்டு…

    இன்னும் எத்தன காண்டுகளோ
    யப்பா விடுதலை எனப்படும் சந்திப்பு எனப்படும் காண்டு கஜேந்திரங்களே எப்படிடா சமாளிக்கிறிங்க… நம்பவே முடியலடா சாமி!

    அப்புறம் அன்பரசு, செம்புலம், போலி லவ்வர்பாய், போலி விடுதலை, திருப்பூர் விஜய், சந்திப்பு, டவுசர், பாப்பு…. இப்படி எந்த பேருல வேணுமின்னா வாங்க ஆனா தயவுசெஞ்சு டவுசர போட்டுகிட்டு வாங்கடா…ஆபாசம் தாங்கல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    மகா ஜனங்களே வேஸ்டு பண்ண நெறைய நேரம் இருந்தா இந்த பதிவுல இந்த தறுதலை ச்சி விடுதலையோட கமெண்டெல்லாம் படிச்சு விவரமாயிகங்க
    கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

  68. anna ellaam saringanna j.v.p pathi vaayee thorakka maattingalaa…..? yenna ungalulukkum avangalukkum karananithikkum mukkona kadhala… fidalcostro- vaia vegu naal neenga kadalkollaiyannu thane salampuneenga.. puligal thappu seithirukkalam aana atha vimarsikka ungalukku yokiyathai illai…..

  69. vanakkamannaa… chithamparam pirachanaiyileyum.. push-ku seruppati vilunthathilayum unga comedy oooooooooverungannaaaaaaaaa………….. neenga pannuna athu periya purrrrrratchi.. mathavanganna varrrrrrrrrratchi.. muthalla vimarsanam,,, suya vimarsanam panni palagunganna. over supirioty complex-a vidunganna…

  70. anna naanga davusar pottukkarathu irukkatum. neenga angey “poli nadagam” potama rayagaran katturaya xerox etuthu kotukka thuppilleye yen? unga kovanathai uruvikittu vitturuvangannu payama boss. vimarsanam-na ella itathulayum nermaiya natakkanumkira “ARIVU NANAYAM” illathavanayellam naanga communist-nu othukkarathillai…

  71. ஏப்பா விஜய் திருப்பூர்

    ஏயா ஊர் மானத்த வாங்குற!
    எதோ பேசுனும்னு பேசறியா!
    நல்ல ஆரோக்யமான விவாதத்துக்குதான் இந்த தளம்
    உன்னமாதிரி கிறுக்கனுக்கலாம் சந்திப்புன்னு ஒரு பரதேசி கஞ்சா அடிச்சுட்டு சாராய தளம் நடத்துறான் அங்க போயி வாந்தி எடுங்கடா!

    மக இ க போராட்டம் நடத்துனா வயிறு எரியரையே !

    ஏன் நீ போயி போராட்டம் நடத்த் வேண்டியதுதான மக இ க வேணாணா சொன்னாங்க?

    ஜேவீபீய பத்தி பழைய புதிய ஜனநயகத்துல வந்துருக்குது அத படிச்சுடு வந்து பேசுடா காக்காயா!

    ஜேவீபீய பத்தி போலி கம்யூனிஸ்டு (சுப்பராயான் ) கிட்ட கேளூ!

    உங்களுக்கு உண்மையிலேயே மானம் இருந்தா துரோகி கருணாநிதிக்கு ஓட்டு கேக்கமாட்டோம்னு
    சொல்ல துணிவு இருக்குதா (இதுக்கு எதையாவது பெனாத்திடு எஸ்கேப் ஆவ கூடாது)

    குறைந்த பட்சம் பெரியார் பேர சொல்லி பொறுக்கி திங்கும் வீரமணிய அம்பல படுத்தி கூட்டமாவது போடமுடியுமா

    நியாயாமா பதில் சொல்லு இல்லனா மூ…….. காதர் பேட்டையில போவாண்டா வாங்கி தின்னுபோட்டு கவுந்தடிச்சு படு.

  72. ma.sea. tum,, ne uttopio va??? ma ka eka ethana paer tamil nadu muluvathum kaithanaga? athula NSA ethanainu nee sollu pappom? entha tumeel vidura velaya pangali CPM kidda vachuko,,,,, orea thamasu,,,, NAN KEAKIRATHA MUTHALLA PURUNSUGADA VENNAI,,, MUTHUKUMAR MELA VIMARSANAM KARA PERALA NEENGA ELUTHINAIYELAM MARAITHUVITTU ANGA YEAN POI VESAM POTTINGA???? aama unakku’ espiranda’ na ennanu thiriyumaaaa?????

  73. ma.sea thambi, katharpettaiku sarva thesiyavaanthi ,neethanda poi ponda sappittu RSS karan kadaiyula paaanparaaaaag vangi thinanum,,,appuram onnu,,,karunanithiku unga puja vulathanda pulangakitham adanjeenga???? chennaila bjp off mela attack pathi sorinji eluthinathu maranthu pocha thambi,, neega eppatithen vaiko koppula ularavendiyathu,,, abburam vangi kattikavendiyathu,,,,,

  74. sorry thambi ma.sea neethan viduthalainu nenaichu eluthittan,, yebba viduthalai thamasukku alavillaiya?? ma ka e ka engappa porattam natathuchu??? ethana par NSA vula ponanganu nee sonna na ethukaran, tiruppurla makaeka engakka??? enakkonum vairu eriyala, vai veeram pesurathai vittutu vealaila kami,, tup la oru 500 ella 100 pera thirati (Tiruppur karan mattum, SL, RUSIA, HUNGERI, SWISS, HOLLAND, Ellam ella,) porattam natathu, nee sonna kettukaran,,,

  75. Eppa vituthala,,,, nan kettathukku pathil sollama nee pattuku un pangali kuda koorthu vidura,,, enn nee poi ketta solla matarakkum??? NAN YAARUKUN OOOTU KEKKA MATTENDA venna,, unna mari poiya vaai puratchi pesuravanukkum makkal kidda pogamayea vittatha pathu verikaravanukkum thozhar LENIN pathil sollararu paru,,,,, sarva thesiyam pathi Stalian nuku,,,,puthagam padi padi padi

  76. aama VIDUTHALAI kannu nan kettathuku pathila kanom?????? muthukumar urvalathula ethukku built up kodutheenga???? muthukumara kadumaiya net la vimarsanam pannuna neenga athai urvalathula makkal thiral katta XEROX nagal koduthu vivaatham panni erukkalamea??? Ella kalanthu kama erukkalamea???? kannu ennakum neraiya vimarsam erukkuthu,,, nee mattumea saringara manapanmaiya vittozhi appuram summa kosam podurathaiyum, kadurai elurathaiyum puratchi nu ninaikira podipayala nee??? tup na, va na unakku thozhamaiya alaipu viduran,,,,

  77. ARA TICKETU,,, nesamalumea pearu superappu,,, karunanithi rasikar manram=dmk
    jaya rasikar=admk
    sokkavaikum sonia=cong
    entha varisaila nee
    maruthaiya iyer=ma ka e ka vaakum?????
    kannu vaaiiiiikoooo varisaila edam undu kannu,,,,,,,
    neega porattam naduthuna styla pathu tha Greece la manavar copy adichutanganu puja vula eluthatha koraitha,,,, eluthiruvengalo? payama erukku???

  78. attn ma sea,,,, cho cho cho enna panurathu??? neeya ularatha vidu, keatta kealvikku pathil sollasonna neeya pulli vatchu kolam podathe,,, o k , ootu porukiya vidu, avanavathu avanukku mattumavathu ,,,,,,,,,
    nee ethana porattam 1 masathukku munnala pannuna,,,, how many arrest in non peyilable section??? kannu appuram enna sonna,,, manavarkalai sariyana pathaiku eluthu vanthitaya??? ha ha ha ha etha pathuthan pin poriyala sirippanga enna panarathu elavu vettla sirikkakudathu,,,,,

  79. ரயாகரனுக்கு,…and to ALL who “OPPOSE” LTTE and PRabakaran…

    What is the kind of struggle you want to take against SINHALA oppression?(i hope u will agree that there is oppression in SL against tamils!..if u say there is no oppression u NEEDNOT go to next question!)

    Who should be the LEADER?

    What shud we do about “INDIAs negative interference” in LANKA…?

    CAn you show us 100% Faultless freedom struggle ANYWHERE in HISTORY of human kind?

  80. கேள்வி மட்டும் கேக்கும் விஜய் திருப்பூர் !
    நீ எந்த அமைப்பு ?
    முதலில் உங்க அமைப்பு சார்பாகவோ (அல்ல்து தனியா நீ மட்டும்) ஈழ பிர்ச்சனைக்காக என்ன செஞ்சீங்க அத சொல்லு மீதிய அப்புறம் ஆரம்பிக்கலாம்

    (மொதல்ல தமிழ்ல எழுதுயா)

  81. திருப்பூர் விஜய் அவர்களே … தங்களது கேள்விகளுக்கு விவாதித்து புரியவைக்க முயற்சிக்கிறேன். தமிழில் எழுதுவதற்கு ஆன்லைனில் http://kanimai.com/tamil99.html என்ற முகவரியில் சென்றால் டைப் அடித்து கட் அண்டு பேஸ்டு பண்ணி விடுங்கள். தமிழ் படிப்பது எளிதாக புரிய உதவும்

  82. still i recollect my feeelings when i participated in Muthukumar’s final procession….my body was shivering for some time….
    i have seen cloth donation,money donation,blood donation:Is ther anyone who can GIFT LIFE donation like Muthukumar?
    I will tell my daughters,grand daughters/grand sons,regarding my participation in Muthukumar’s final procession!
    k.pathi
    karaikal

  83. thozhar thalapathi,,,,
    tamila elutha muyarrchikkiren thangalathu karuthukku nanri,,,,,
    vivatham enbathu suya thavarukalai sari seivatharkkum nam nammai mealum valarthu kollvatharkkum uthavum,, aanal eivarkal atharkku thayaraga illai,, ean endral uyair manapanmai enpathu engea parppanarku uriyathu,,,
    varalaaru namakku aasan, sila vealai aathikkavaathikalum adimaikalin mugamudiel varuvaarkal,,,,,,

  84. thambi viduthalai,
    na 2 masama mattum eela pirachinala eedupadu kattalai ungala pola,,,, aama viduthai pushkku serrupadi kotutha AL-JAITHI ya MAA KAA E KAA Nu(maakkanu purinchukkathinga) sollama eruntha sari, rayakaran uncle kitta sollunga “eantha oru seayalaiyum,,,,,,,,,,”

  85. ஏப்பா விசயீ,
    உங்கப்பன் சந்திப்புக்கு வாயிலாயே ஆப்பு வச்சுட்டாங்களாமே
    படிச்சியா தமிழரங்கத்துல,
    சரி வுடு உன்ன மாதிரி ஓட்டு பொறுக்கி அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
    எங்க மறுக்கா மறுக்கா நீபேசுவேன்னு நான் ரொம்ப எதிர்பார்ப்பேன்,சரியா?
    ஆமா தீட்சிதரெல்லாம் உங்க ஆத்தா செயா வூடுக்கு போனாங்களாமே நீனு போவுலீயா,
    ஓகோ
    சிதம்பரத்துல இருந்து பாண்டி பக்கம் தானெ உன்கிட்ட தான் ரூட் கேட்டுட்டு போயிருப்பாங்க,இதுக்கும் நீ கண்டிப்பா லூசு மாதிரி பேசனும் சரியா

    டாடா பைபை ஜு ஜு ஜு ஜு ,

    சரி ஏன் இப்புடி விசனப்படுற சேமியா ஐஸ் ஆத்தா வாங்கி தரலீயா ஒன்னும் கவலப்படாதே கேழ வீதியில நம்ம மணி சேமியா ஐஸ் கட வச்சுருக்காரு அவருக்கிட்ட வாங்கி நல்லா சாப்பிடு சரியா

    வரட்டுமா ப்பாப்ப்ப்பூஊஊஊஊஉ

  86. தமிழருக்காக தன்னையே எரித்து கொண்ட திருச்செந்தூர் முத்துகுமாரின் தியாகத்தை போற்றி கவிதை
    சத கோடி நிலவெரிக்கும் தமிழ் சூரியன் முத்துகுமார்
    அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாம் அன்று சொன்னான் ஒரு தமிழன்;
    இங்கோ அறமும் பிழைக்கவில்லை அரசியலும் பிழைக்கவில்லை;
    செல்வம் கொழிக்கும் அரசியல்வாதிகள் கையில் அராஜக ஆட்சி;
    ஆளுக்கு ஒரு வேட்டு ஆட்டு மந்தையாக்க கிரிக்கெட்டு
    அடமானம் மக்கள் ஓட்டு அன்னிய வங்கியில் நாட்டு மக்கள் நோட்டு
    ஆட்டுகறி கோழிகறி ஆட்சிக்கு வந்தால் மனித கறி
    சாதி அரசியல் சாக்கடையிலும் ஊழல்
    நதியெல்லாம் கூவம் நாடெல்லாம் காடு
    நந்தவனமெல்லாம் நாசமான குப்பைமேடு
    இது நல்ல மாற்றமாம் சமூக வளர்ச்சியாம்;
    இது புரத சத்தின் திரட்சி என்கிறான் பொறுப்பற்றவன்;
    இல்லை இது புற்று நோயின் அறிகுறி என்கிறான் புரிந்தவன்;
    வெளிப்படையான அரசாங்கமாம், சொல்கிறார் வெளி நாட்டில் படித்த மந்திரிமார்கள்;
    ஆனால் அவர்களது சொத்து கணக்கு மட்டும் சோதனைக்காளாக கூடாதாம்!
    அடுத்த நாட்டு அரசியலில் தலையிட கூடாதாம் அதிகாரிகளின் வாதம்;
    ஆனால் ஆயுதம் வழங்கி இன அழிப்பை இன்முகத்துடன் தொடரலாமாம்;
    சிந்தனையை சிதறடிக்கும் சினிமா அரசியல்
    சிந்திப்பவரை நிந்திக்கும் சில்லரை அரசியல்
    மக்கள் உரிமைகளை மறக்கடிக்கும் மதவாத அரசியல்
    திருடர்களை விட்டு விட்டு தெருவில் போவோரை சிதைக்கும் தீவிரவாத அரசியல்
    சரியாய் சொன்னாய் செந்தூர் முத்து
    அரசாட்சி செய்வது மட்டும்தானா அரசியல்?
    புரட்சியும் அரசியல்தான்!
    அரியனை துறப்பதும்தான்!
    அறம் வெல்ல நின் வாழ்வினையல்லவா துறந்தாய்!
    சத கோடி நிலவெரிக்கும் சூரியன் நீ
    தங்களால் எங்களுக்கு இரவில்லை இனி
    எவருக்கும் இரவில்லை இனி
    தன்னிலே சத கோடி நிலவெரிக்கும் வெண்முத்து நீ
    தங்களால் தமிழருக்கு இரவில்லை இனி
    தரணிக்கு இனி இரவில்லை!

    சத கோடி நிலவெரிக்கும் செந்தூர் முத்துவின் சிதை சாம்பல்

    நீ சென்ற இடமெல்லாம் சிறக்கட்டும் தமிழர் நலம்
    செந்தூர் முத்து நின் சிதை சாம்பல்
    சென்ற இடமெல்லாம் சிறக்கட்டும் தமிழர் நலம்;
    அங்கெல்லாம் அறம் தழைக்கட்டும் ஆற்றல் சிறக்கட்டும்!
    உண்மை விளங்கட்டும் ஊழல் ஒழியட்டும்!
    பெருமை விளையட்டும் பேரன்பு திளைக்கட்டும்!
    கல்லடியும் சொல்லடியும் படட்டும்
    கசடுகளும் கயவர்களும்!
    தன்னலம் இன்றி தமிழர் நலம் நாடுவோர் மீது
    கனல் எரியும் காட்டு பன்றிகள் சிரம் அழியட்டும்!
    செந்தூர் முத்து நின் சிதை சாம்பல்
    சென்ற இடமெல்லாம் சிறக்கட்டும் தமிழர் நலம்.

  87. ஹோமம் வளர்க்கும் பார்ப்பன தியாகிகளே,

    ஐந்து அறிவு மாடு செத்தா உனக்கு ரொம்ப கோபம் வருது…
    ஆறு அறிவு உள்ள எங்க மக்கள் சாகும்போது மட்டும் அரசியல் வருது ??
    தமிழனாக கூட வேண்டாம், மனிதனாக கூடவா உனக்கு இரக்கம் இல்லை. உனக்குன்னு ஒரு கூட்டம் இருக்கும் அங்க பொய் நொட்டு….

  88. who knows truth, no one knows
    polytics, communism all are waste, here all are failure, now 300000 people in jail, who is going to take care………..

    Muthukumar, prabharan are your communism, no one……

Leave a Reply to sharm பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க