அன்பார்ந்த நண்பர்களே,
வினவின் அடுத்த கட்ட பயணமாக ” புதிய ஜனநாயகம்” மார்க்சிய லெனினிய அரசியல் ஏட்டின் அனைத்துக் கட்டுரைகளையும் பி டி எஃப்பாகவும் (PDF), தமிழ் யூனிகோடிலும் இந்த மாதம் முதல் வெளியிடுகிறோம். இந்த சேவை புதிய ஜனநாயகம் வெளிவந்த அன்றே உங்களுக்கு கிடைக்கும். இதற்கு அனுமதியும், உதவியும் அளித்த புதிய ஜனநாயகம் தோழர்களுக்கு எமது நன்றிகள்.
சவால்கள், சபதங்கள், சவடால்கள் என்று ஒட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிகைகள் மத்தியில், அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை, அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு புதிய ஜனநாயகம்.
பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையே இந்த புரட்சிகர அரசியல் ஏடு தமிழகத்தில் 24 ஆண்டுகளாக வெளிவருகிறது. தமிழகத்தில் காங்கிரசு, தி.மு.க, போலிக் கம்யூனிஸ்டுகள் முதலான பெரிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ கட்சிப் பத்திரிகைகளின் விநியோகத்தை விட புதிய ஜனநாயகத்தின் விநியோகம் அதிகம். ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் தோழர்களால் நேரடியாக மக்களிடையே விற்பனை செய்யப்படும் இந்த இதழ் கால் நூற்றாண்டுகளாக தமிழகத்தின் அரசியல் வரலாற்றை மட்டுமல்ல அதற்கு தீர்வையும் வைத்து பரந்து பட்ட மக்களை புரட்சிகர அரசியலுக்காக அணிதிரட்டி வருகிறது.
நாடு மீண்டும் காலனியாக்கப்படுவதற்கு எதிராகவும், இந்து வெறி பார்ப்பன பாசிசத்துக்கு எதிராகவும் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வூட்டும் புதிய ஜனநாயகம் இதழ் இம்மாதம் முதல் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது என்பதில் வினவு மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்கிறது. கூடிய விரைவில் இவ்விதழின் பழைய இதழ்களை ஆவணப்படுத்தும் வேலையை செய்து முடிப்போம். இந்த பயனை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதோடு மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் பரந்து பட்ட மக்களுக்கு புரட்சிகர அரசியலை கொண்டு சேர்ப்பதற்கு உதவி செய்ய முடியும்.
நட்புடன்
வினவு
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?
ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியிருக்கிறது. இது, புலிகள் இயக்கத்தின் தோல்வி மட்டுமல்ல; ஈழ விடுதலைப் போராட்டம் சந்தித்திருக்கும் ஒரு பாரிய பின்னடைவு. இத்தகையதொரு நிலைமை நெருங்குகிறது என்பதைக் கடந்த சில மாதங்களில் களநிலைமைகளிலிருந்து அனைவருமே புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும், இம்முடிவு நம்மை மாளாத் துயரத்தில் ஆழ்த்துகின்றது.
கொட்டகைகள், கூடாரங்கள், பதுங்குக் குழிகள் என 3 சதுர கி.மீ. பரப்பளவில் சிக்கித் தவித்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு போர்த் தாக்குதலை நடத்தி ஈவிரக்கமின்றி கோரமாகக் கொன்றொழித்திருக்கிறது, இனவெறி பிடித்த சிங்கள பாசிச அரசு. சூடானின் டார்ஃபரில் நடந்த இனப்படுகொலையை ஒத்ததாக நடந்துள்ள ஈழத் தமிழினப் படுகொலையில், கடந்த மே முதல் நாளிலிருந்து 19ஆம் தேதி வரை நாளொன்றுக்குச் சராசரியாக 1000 பேர் வீதம் குண்டு வீச்சினால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இந்நாட்களில் மட்டும் 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த “தி டைம்ஸ்” நாளேடு கூறுகிறது. செயற்கைக் கோள் மூலம் பிடிக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையிலும், போர் நிறுத்தப் பகுதியில் பணியாற்றிய மருத்துவர்கள் கூறிய சாவு எண்ணிக்கையின் அடிப்படையிலும் அந்நாளேடு வெளியிட்டுள்ள இச்செய்தி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 50,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு வாய்ப்புள்ளது என ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உற்றார் உறவினர்களைப் பறிகொடுத்துவிட்டு, யாருமே இல்லாத அனாதைகளாக படுகாயமடைந்தும் கைகால்கள் முடமாகியும், முட்கம்பியிடப்பட்ட வதை முகாம்களில் வேதனையில் துடிக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். 1983 ஜூலை கலவரத்தையடுத்து சிங்கள இனவெறி ஜெயவர்த்தனே அரசுக்கு எதிராகவும், ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் பொங்கி எழுந்த தமிழகம், இன்று ஒரு பார்வையாளனாக நிற்கிறது.
இக்கொடிய இன அழிப்புப் போரில் சீனாவும் பாகிஸ்தானும் ஆயுதங்களை வழங்கியுள்ளதோடு, சிங்கள பாசிச அரசுக்கு அரணாகவும் நின்றிருக்கின்றன. அமெரிக்காவையும் மேற்குலக நாடுகளையும் ராஜபக்சே அலட்சியப்படுத்திப் பேசிய பின்னரும் அந்நாடுகள் எதையும் செய்யவில்லை. ஐ.நா. மன்றமும் தலையிடவில்லை. எல்லாம் முடிந்த பிறகு எட்டிப் பார்த்துவிட்டு, கடமை முடிந்ததென பறக்கிறார் பான்கிமூன்.
இந்திய அரசோ, இந்த இனப்படுகொலைக்கு இறுதிவரை துணை நின்று வழிநடத்தியிருக்கிறது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் நிர்பந்தத்தால், ஐ.நா மனித உரிமை பாதுகாப்புபு பேரவையில் மேலை நாடுகள் இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதாகக் குற்றம் சாட்டி கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யா, சீனா, பாகிஸ்தானோடு இந்தியாவும் இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்று அத்தீர்மானத்தைத் தோற்கடித்துள்ளது. “நாங்கள் பயங்கரவாதப் புலிகளுக்கு எதிராக நடத்திய போர் எங்களுக்காக மட்டுமல்ல; இந்தியாவுக்காகவும்தான்” என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார், ராஜபக்சே.
ஈவிரக்கமின்றி நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் இந்தப் படுகொலையின் கடைசி நாட்கள், இந்திய மேலாதிக்கத்தின் கோரமுகத்தை நமக்குக் காட்டுகின்றன. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, இறுதித் தாக்குதலைத் தீவிரப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு வழிகாட்டி இயக்கியிருக்கிறது இந்திய அரசு. தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவாளர்களோ, மே 16 அன்று தேர்தல் முடிவுகள் வரும்வரை இறுதி முடிவு எதையும் எடுக்க வேண்டாமென புலிகளுக்கு ஆலோசனை கூறியிருப்பார்கள் போலும்!
மூன்று சதுர கி.மீ. பரப்பளவே கொண்ட நிலப்பரப்பில், தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட நிலையிலும் “துப்பாக்கிகளை மவுனிக்கச் செய்வது” என்ற தங்களது இறுதி முடிவை அறிவிப்பதற்கு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (மே 16) தெரியும்வரை புலிகள் காத்திருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தோல்வியை நோக்கித்தான் தள்ளப்பட்டுள்ளோம் என்பதும், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளை ராஜபக்சே அரசு நிராகரித்து விட்டது என்பதும் அவர்கள் அறியாததல்ல. இருப்பினும், அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்களும் புலிகளும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட போதிலும், கடைசியாக எஞ்சியிருந்த புலிகள் இயக்கத் தலைவர்களே கொல்லப்படும் நிலை ஏற்பட்ட போதிலும், டெல்லியில் ஆட்சி மாறினால், மறுகணமே போர் நிறுத்தம் ஏற்பட்டு விடும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். கடைசி நாட்களின் நிகழ்வுகள் இதனைத் தெளிவாக நமக்குக் காட்டுகின்றன. இந்த மூட நம்பிக்கை மிகவும் பாரதூரமான இழப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
ஒருவேளை தமிழினவாதிகள் எதிர்பார்த்தது போல, ஜெயலலிதாவும் பாரதீய ஜனதாவும் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் மறுகணமே போர்நிறுத்தம் வந்திருக்குமா? அப்படியொரு பிரமை புலிகளுக்கு இருந்திருந்தால், இங்கிருக்கும் தமிழினவாதிகள் அவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மாறாக, அத்தகையதொரு பிரமையை உருவாக்கும் பணியைத்தான் தமிழினவாதிகள் இங்கே செய்து கொண்டிருந்தார்கள்.
தேர்தலில் ஈழ எதிரி ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து அவரையே தனிஈழம் தேவையெனப் பிரச்சாரம் செய்ய வைத்தனர். போரில் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்கள் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த அனுதாபத்தையும், இனப்படுகொலைக்கு எதிராக தமிழகத்தில் நடந்த தீக்குளிப்புகளையும் வைத்து மாபெரும் ஆதரவு இருப்பதாக நம்பி, இதையே தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் மதிப்பிட்டனர். போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசுக்கு அமெரிக்கா உதட்டளவில் விடுத்த கோரிக்கையை, ஏதோ அமெரிக்க வல்லரசே தலையிட்டுப் போர்நிறுத்தம் செய்யக் கிளம்பி விட்டதைப் போல பிரமையூட்டி, ஒபாமாவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நோக்கி ரோசாப் பூங்கொத்து ஊர்வலம் நடத்தினார், பழ.நெடுமாறன்.
இவர்கள் உருவாக்கிய பிரமைக்குத் தங்கள் உயிரையும் கவுரவத்தையும் பலி கொடுத்திருக்கிறார்கள், தமிழீழ விடுதலைப் புலிகள். தேர்தலின் போது தனி ஈழம் பற்றி சவடால் அடித்த ஜெயலலிதா, தேர்தல் தோல்விக்குப் பிறகு கோடநாடு எஸ்டேட்டுக்குச் சென்று படுத்துக் கொண்டார். தேர்தலுக்குப் பின் அவர் விடுத்த அறிக்கையில் தனி ஈழம் பற்றியோ, ஈழத் தமிழினப் படுகொலை பற்றியோ, ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்றோ ஒரு வார்த்தை கூட இல்லை. இந்த அம்மையாரின் வெற்றிதான் போர் நிறுத்தத்தைக் கொண்டு வரும் என்று ஈழத் தமிழ் மக்களையும் புலிகளையும் நம்ப வைத்து படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள், இந்த ஈழ ஆதரவாளர்கள். இவர்கள் யாரை ஆதரித்தார்களோ, அந்தப் புலிகளையே காவு வாங்கிவிட்டது இவர்களின் பிழைப்புவாத அரசியல்!
தமிழீழத்தின் தலைநகராக புலிகளால் சித்தரிக்கப்பட்ட கிளிநொச்சி, சிங்கள இராணுவத்தால் கடந்த ஜனவரியில் தாக்கி அழிக்கப்பட்ட பின்னர் புலிகள் பின்வாங்கி முல்லைத் தீவுக்கு நகர்ந்தார்கள். சிங்கள இராணுவத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் புலிகளோடு முல்லைத் தீவு நோக்கி நெடும்பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
இம்மக்கள் கூட்டத்தின் நடுவே இருந்தால் சிங்கள இராணுவம் தங்கள் மீது பாரிய தாக்குதல் தொடுக்காது என்றும், அதையும் மீறி தாக்குதல் தொடுத்தால், மக்கள் கொல்லப்படுவதன் விளைவாக மேலைநாடுகள் தலையிட்டுப் போரை நிறுத்துமாறு சிங்கள அரசை நிர்பந்திக்கும் என்றும் புலிகள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், சிங்கள இராணுவமோ, கனரக ஆயுதங்களைக் கொண்டும் பாஸ்பரஸ் குண்டுகளை வீசியும் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றொழித்தது. வாயளவில் கண்டனம் தெரிவித்தற்கு மேல் எந்தவொரு மேலை நாடும் சிங்கள அரசை நிர்பந்திக்கவோ, தலையீடு செய்யவோ முன்வரவுமில்லை.
எந்த மக்களைப் பாதுகாப்புக் கேடயமாக புலிகள் கருதினார்களோ, அந்த மக்கள் சிங்கள இராணுவத்தின் கொடிய போர்த் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்க, புலிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தக் கையறு நிலையில், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற ஆரம்பித்தார்கள். புலிகளால் இதனைத் தடுக்கவும் இயலவில்லை. பின்வாங்கும் பயணம் நீண்டு போகப் போக, புலிகள் தமது ஆயுதக் கிடங்குகளையும் பாதுகாப்பு அரண்களையும் கைவிட்டு செல்ல வேண்டியதாயிற்று. எந்த ஆயுதங்களைத் தமது விடுதலைக்கான அச்சாணியாக புலிகள் கருதினார்களோ, அவையெல்லாம் பெருஞ்சுமையாக மாறிப்போயின. சிங்கள இராணுவமோ, நவீன ஆயுதங்களைக் கொண்டு கொடூரத் தாக்குதலை வகைதொகையில்லாமல் கூட்டிக் கொண்டே போனது.
கொரில்லாப் போர் முறையிலிருந்து முன்னேறி, கிரமமான இராணுவத்தையும் வான்படையையும் கட்டியமைத்து வலுவடைந்த புலிகள், பிந்தைய அசாதாரண நிலையை கவனத்தில் கொண்டு, தமது நிலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், இலட்சக்கணக்கான மக்களைப் பாதுகாக்கவும் இராணுவ ரீதியில் தமது செயல்தந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய தேவை எழுந்த போதிலும் அதனை உதாசீனப்படுத்தினார்கள். கிரமமான படைகளைக் கலைத்துவிட்டு, மீண்டும் தற்காப்பு கொரில்லா போர்முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு புறநிலைமைகள் நிர்பந்தித்த போதிலும், அதை ஏற்க மறுத்தார்கள். மேலைநாடுகள் சிங்கள அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும், இந்தியத் தேர்தல் முடிவுகள் போர்நிறுத்தத்தைக் கொண்டு வரும் என்று குருட்டுத்தனமாக நம்பிப் பேரழிவையும் பின்னடைவையும் சந்தித்துள்ளார்கள்.
புலிகள் மட்டுமே தமிழீழத்தின் ஏகபோக பிரதிநிதிகளாகச் சித்தரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், புலிகள் இயக்கத் தலைவர்களும் தளபதிகளும் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டு, புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ள பெருந்தோல்வியால், இன்று ஈழ விடுதலைப் போராட்டம் தலைமை ஏதுமின்றித் தத்தளிக்கிறது. புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான பத்மநாபன், தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்களால் ‘துரோகி’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையில், இயக்கத்தை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்ல எவருமே இல்லாத அவலம் நீடிக்கிறது. ஈழத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வந்த இதர குழுக்களும் தனிநபர்களும் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டு புலிகளால் ஒடுக்கப்பட்டு விட்ட நிலையில், இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திச் செல்ல தலைமை ஏதுமின்றி, ஒரு பாரிய வெற்றிடம் நிலவுகிறது.
இது கசப்பான உண்மை என்ற போதிலும், இத்தகைய பின்னடைவுக்கும் பேரழிவுக்கும் காரணம் என்ன? சீனாவும் பாகிஸ்தானும் சிங்கள பாசிச அரசுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி ஆதரவாக நின்றதும், இந்தியா இந்த இனப்படுகொலைப் போருக்கு இறுதிவரை துணை நின்று வழிநடத்தியதும் தான் காரணமா? அல்லது ஐ.நா. மன்றமும் மேலை நாடுகளும் பாராமுகமாக இருந்ததுதான் காரணமா?
இவையெல்லாம் புறக்காரணிகள்தாம். இத்தகைய நிலைமைகளை எதிர்கொண்டு இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் ஆற்றல்மிக்கதாகச் சித்தரிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் மூடத்தனமும் இராணுவ சாகசவாதமும்தான் இப்பேரழிவுக்கும் மீளமுடியாத பின்னடைவுக்கும் பெருந்தோல்விக்கும் முதன்மையான காரணங்கள். புலிகளிடம் சரியான அரசியல் தலைமை இல்லாமை, சரியான இராணுவ உத்திகள் இல்லாமை, யாரையும் பயன்படுத்திக் கொண்டு காரியம் சாதிப்பது என்கிற சந்தர்ப்பவாதம்; அரசியல் நேர்மையற்ற அணுகுமுறை, புலிகள் இயக்கத்துக்குள்ளும் ஜனநாயகமற்ற பாசிச சர்வாதிகாரம் முதலான ஈழ விடுதலைக்கே எதிரான போக்குகளே இப்பேரழிவையும் மீண்டெழ முடியாத தோல்வியையும் தோற்றுவித்துள்ளன.
எந்தவொரு விடுதலைக்கான இயக்கமும் இலட்சியத்தையும் கடமைகளையும் வகுத்துக் கொண்டு, அந்த இலட்சியத்தை அடைவதற்குத் தடையாக நிற்கும் எதிரிகள் யார், நண்பர்கள் யார், ஊசலாட்டம் கொண்ட சமரச சக்திகள் யார், எந்தச் சக்திகளுடன் ஐக்கியப்பட வேண்டும், எந்த சக்திகளை வென்றெடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாக வகுத்துக் கொண்டு தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் விடுதலைப் புலிகளோ தொடக்கம் முதலே இந்த அடிப்படையான பிரச்சினையில் தெரிந்தே தவறிழைத்தார்கள்.
ஈழ விடுதலைக்குத் தொடக்கம் முதலே எதிரியாக இருந்து சீர்குலைத்த இந்திய அரசுடன் பகைத்துக் கொள்ளாமல், “தாஜா” செய்ததோடு, இந்திய உளவுப் படையான “ரா” (RAW)விடம் ஆயுதங்களும் பயிற்சியும் நிதியும் பெற்று, அதன் வழிகாட்டுதலின்படி அப்பாவி சிங்கள குடிமக்களைக் கொன்றும், ஈழத்திலிருந்து இசுலாமியர்களைக் கெடு வைத்து விரட்டியும், இதர போராளிக் குழுக்களை அழித்தொழித்தும், தமது ஏகபோக சர்வாதிகாரத்தை நிறுவிக் கொண்டனர்.
எந்தவொரு விடுதலைக்கான இயக்கமும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஜனநாயகப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்க வேண்டும். மக்கள் மத்தியில் எந்தளவுக்கு ஜனநாயகம் பேணப்படுகிறது என்பது, இனவிடுதலையின் மீது கொண்டுள்ள உறுதிக்கு ஒரு அளவுகோல். ஆனால் சிங்கள இனவெறியை எதிர்த்தும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் நின்று, புலிகளின் மனித உரிமை மீறல்களையும் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளையும் விமர்சித்த குற்றத்திற்காக ராஜினி திரணகம, வசந்தன் முதலாலோனார் உள்ளிட்டு ஏராளமானோர் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டார்கள்; அல்லது அவர்கள் காணாமல் போனார்கள். புலிகள் இயக்கத்துக்குள்ளேயே பல முன்னணித் தலைவர்களும் தளபதிகளும் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். பிரபாகரனும் அவரது வட்டாரத்தைச் சேர்ந்த விசுவாசிகளும் கொண்ட சிறுகும்பலாக இயக்கத் தலைமை மாறிப் போனது.
தேசிய இன விடுதலை என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டதாகவும் சுயசார்பானதாகவும் இருக்க வேண்டும். எந்த அளவுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஒரு தேச விடுதலை இயக்கம் ஊன்றி நிற்கிறது என்பதுதான் அதன் புரட்சிகர தன்மைக்கான அளவுகோல். இன்றைய சூழலில், ஏகாதிபத்திய உலகமயமாக்கலை எதிர்க்காமல், எந்தவொரு தேசிய இனமும் விடுதலையைச் சாதிக்கவும் முடியாது.
ஆனால் புலிகளோ, எந்த ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து எந்தப் போராட்டத்தையும் நடத்தியதேயில்லை. தமது தலைமையிலான தமிழீழம் இந்தியாவுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் கீழ் படிந்தே இருக்கும் என்று புலிகள் வாக்குறுதி அளித்து, அந்நாடுகளைத் “தாஜா” செய்தார்கள். கிழக்கு திமோர், கொசாவோ பாணியில் மேலைநாடுகள் தலையிட்டு தமக்கென தனி ஈழத்தை அமைத்துத் தரும் என்று நம்பினார்கள். அந்த அளவுக்குத்தான் அவர்களது உலக அரசியல் கண்ணோட்டம் இருந்தது. ஏகாதிபத்திய உலகக் கட்டமைவில் தேசிய இன விடுதலை என்பது எவ்வளவு சிக்கலானது, உலக நாடுகளின் மக்கள் மத்தியில் இதற்கு ஆதரவாக பொதுக்கருத்தையும் பொது நிர்பந்தத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பன போன்ற விரிந்த அரசியல் பார்வை புலிகளிடமோ, அவர்களின் ஊதுகுழலாகச் செயல்பட்ட தமிழக பிழைப்புவாத அரசியல்வாதிகளிடமோ இருந்ததில்லை. மேலை நாடுகள் தங்களைப் பயங்கரவாதிகள் எனத் தடை செய்திருப்பதற்கான உலக அரசியல் சூழல் மற்றும் பிற காரணிகளைப் புலிகள் புரிந்து கொள்ளவுமில்லை.
ஒருபுறம் அமெரிக்க உலக மேல்நிலை வல்லரசு; அதன் தெற்காசிய விசுவாச அடியாளாக இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசு. மறுபுறம், உலகமயமாக்கலைச் சாதகமாக்கிக் கொண்டு புதிய சந்தைக்காகவும் ஆதிக்கத்துக்காகவும் விரிவடைந்து வரும் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் போட்டா போட்டி. இந்துமாக் கடலில் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, இன்று இந்த ஆதிக்க சக்திகளின் பகடைக் காயாக மாற்றப்பட்டிருக்கிறது. ஏகாதிபத்திய சக்திகளின் போட்டியையும் கூட்டையும் பயன்படுத்திக் கொண்டு, ஈழ விடுதலைப் போரை அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் ராஜபக்சே அரசு எவ்வித எதிர்ப்புமின்றி நசுக்கும் சூழலைப் பற்றி புலிகள் பாரதூரமாக உணரவில்லை. அதற்கேற்ப தமது அரசியல் இராணுவ செயலுத்திகளை வகுத்துக் கொள்ளவுமில்லை.
இன்னும் சொல்லப்போனால், மக்களைத் திரட்டி எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் புலிகள் நடத்தியதேயில்லை. கடந்த பத்தாண்டுகளில் போர் நிறுத்தத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் அணிதிரட்டலையும் அரசியல் போராட்டங்களையும் நடத்த புலிகள் முயற்சிக்கவேயில்லை. அரசியல் பிரிவு என்றழைக்கப்பட்ட ஒரு குழுவை புலிகள் உருவாக்கியிருந்த போதிலும், அது மக்களிடம் அரசியல் பிரச்சாரம் எதையும் செய்ததுமில்லை. மக்களின் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு மாபெரும் அரசியல் எழுச்சிகளைத் தோற்றுவித்து எதிரியை மண்டியிடச் செய்ய முடியும் என்பதை புலிகள் எந்தக் காலத்திலும் உணரவுமில்லை.
அவர்களது கவனமெல்லாம் நவீன ஆயுதங்களின் இருப்பை அதிகரிப்பதிலும் சாகசவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும்தான் இருந்தது. சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக இராணுவ ரீதியில் மேலாண்மை பெற்றுவிட்டாலே, ஏகாதிபத்திய நாடுகள் சிங்கள அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து தனி ஈழத்தை உருவாக்கித் தரும் என்று கணக்கு போட்டு, ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவைப் பெறுவதுதான் அவர்களது ‘அரசியல்’ வேலையாக இருந்தது.
சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சே கும்பலின் இனவெறி பாசிச சர்வாதிகாரத்தை எதிர்க்கும் அரசியல் சக்திகளுடன் இணைந்து, பொது எதிரிக்கு எதிராக பரந்த ஐக்கிய முன்னணி கட்டியமைத்துப் போராட சாத்தியப்பாடுகள் இருந்தபோதிலும், அரசியல் மூடத்தனத்தால் அவற்றை புலிகள் அறிந்தே புறக்கணித்தார்கள். இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தேர்தலில் தோற்றதற்கும், ராஜபக்சே கும்பல் ஆட்சிக்கு வந்ததற்கும் மிக முக்கிய காரணமே புலிகளின் சந்தர்ப்பவாத அரசியல்தான்.
இந்த சந்தர்ப்பவாதம் 2002இல் தாய்லாந்து நாட்டில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானபோது அப்பட்டமாக வெளிப்பட்டது. தேசிய சுயநிர்ணய உரிமைக்கு சந்தர்ப்பவாதமாகவும் துரோகத்தனமாகவும் “பிரதேச தன்னாட்சி” என்று விளக்கமளித்தார், புலிகளின் அரசியல் தலைமை குருநாதர் ஆண்டன் பாலசிங்கம். ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டு தமது ஏகபோக ஆட்சி அமைவதையே “பிரதேச தன்னாட்சி” என்று விளக்கமளித்தார். அதேசமயம், தனிஈழம் கோரிக்கையை இன்னமும் கைவிட்டுவிடவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக இது “இடைக்காலத் தீர்வு” என்று பூசி மெழுகினார்.
இப்படி சந்தர்ப்பவாதமும் சாகச வழிபாடும் தனிநபர் துதியும் கொண்ட புலிகள், முப்பதாண்டு காலமாக பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் கண்ட ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வு செய்து படிப்பினைகளைப் பெற முன்வராமல், தொடர்ந்து பிரமைகளில் மூழ்கிப் போயினர். மறுபுறம், ஏகாதிபத்தியங்களின் ஆசியோடும், சிங்கள இனவெறி சக்திகளின் ஆதரவோடும், நவீன ஆயுதங்களின் வலிமையோடும் மிகக் கொடிய போரை ராஜபக்சே கும்பல் ஈழ மக்கள் மீது ஏவியது. உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனவெறிப் படுகொலைகளில் ஒன்றாக அமைந்த இப்போரில், பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களோடு, புலிகளின் தலைமையும் கொன்றொழிக்கப்பட்டு, ஈழ விடுதலைப் போராட்டம் பேரழிவையும், பின்னடைவையும் சந்தித்து கையறு நிலையில் தத்தளிக்கிறது. ஈழத் தமிழினத்தையே தோற்கடித்து விட்ட வெற்றிக் களிப்பில் கூத்தாடுகிறது, சிங்கள இனவெறி.
இன்றைய சூழலில், சிங்கள இராணுவ வதை முகாம்களிலிருந்து ஈழத் தமிழர்களை மீட்டு அவர்களை மீளக் குடியமர்த்துவது, தமிழர் பகுதிகளைச் சிங்கள காலனியாக்க முயலும் இந்தியஇலங்கை அரசுகளின் கூட்டுச் சதியை முறியடிப்பது, ராஜபக்சே கும்பலை போர்க்குற்றவாளியாக அறிவித்துத் தண்டிப்பது, ஈழ மக்களின் நியாயமான சுயநிர்ணய உரிமைப் போரை மீண்டும் கட்டியமைப்பது ஆகிய பெரும் போராட்டக் கடமைகள் ஈழ மக்களின் முன்னே, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் முன்னே, ஈழ ஆதரவாளர்களின் முன்னே நிற்கிறது. கடந்த முப்பதாண்டு கால ஈழ விடுதலைப் போராட்டத்தை விருப்பு வெறுப்பின்றி மீளாய்வு செய்து படிப்பினைகள் பெறுவதும், ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்குவதும், ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான இயக்கப் போக்கின் ஒரு பகுதியான ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு அனைத்துலக மக்களிடம் ஆதரவு திரட்டுவதும் இதற்கு முன்தேவையாக இருக்கிறது.
புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலும், ஈழத் தமிழ் மக்கள் தமது நியாயமான விடுதலைப் போராட்டத்தைத் தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமை; நம் கடமை.
புதிய ஜனநாயகம், ஜூன்’2009
புதிய ஜனநாயகம், ஜூன்’2009 மின்னிதழ் வடிவில் PDF கோப்பாக பெற இங்கே சொடுக்கவும்
புதிய ஜனநாயகம், ஜூன்’2009 இதழ் MS WORD கோப்பாக பெற இங்கே சொடுக்கவும்
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
nalla karuthukal anal puligalai ivvalavu vimarsanam seiya venduma
மிக நல்ல வெளிப்படையான கருத்துக்கள்…கடந்த காலத்தை மறந்து நிகழ் காலத்தைப் பற்றிச் சிந்திப்போம்..
அன்புடன் இட்டாலி வடை
புலிகள் செய்ததெல்லாம் தவறு என்ற அடிப்படையிலேயே எழுதப்பட்ட கட்டுரை. பிழைகளை மட்டுமே சொன்ன நீங்கள் புலிகள் என்ன செய்திருந்தால் இந்த சூழ்ச்சியில் இருந்து வெளியே வந்திருக்கலாம் என்பதையும் நீங்களே சொல்லுங்கள்.
தமிழ் நிலா. கட்டுரையிலேயே புலிகள் என்னென்ன செய்திருக்கக் கூடாது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. சக போராளிகளையும் அப்பாவி சிங்களர்களையும் கொன்றிருக்கக் கூடாது. தான் மட்டுமே ஏகபோக பிரதிநிதி போல காட்டிக் கொண்டிருக்கக்கூடாது (ஈழம் = புலிகள் என்ற நிலை வந்ததுதான் புலிகளைப் பிடிக்காத பட்சத்தில் என்னைப் போன்ற சாதாரணத் தமிழர்கள் வெளிப்படையாக ஈழ ஆதரவு தர முடியாத நெருக்கடி ஏற்பட்டதன் காரணம்). அமைதிப் பேச்சு வார்த்தையில் நாணயம் காட்டியிருக்க வேண்டும். மக்களைத் திரட்டி அரசியல் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். இந்திய அரசியல்வாதிகள் தலையிடுவார்கள் என்று பகல் கனவு கண்டிருக்கக் கூடாது. பொதுமக்களைக் கேடயமாகப் பயன் படுத்தியிருக்கக் கூடாது. தமிழ் முஸ்லீம்களை விரட்டியடித்திருக்கக் கூடாது.
இது தவிர கட்டுரையில் சொல்லாத கருத்துக்கள். ராஜீவ் காந்தியையும் உடன் 20 அப்பாவிகளையும் கொன்றிருக்கக்கூடாது. தமிழ் நாடும் ஒருநாள் தமிழீத்துடன் சேர விரும்பும் என்ற குருட்டு நம்பிக்கையில் தமிழ் மண்ணில் ஆயுதம் சேர்க்கவும் தன் போராட்டக் கருத்துக்களை பரப்பவும் வன்முறைக் கலாச்சாரத்தைப் புகுத்த முயற்சித்திருக்கக் கூடாது. அமிர்தலிங்கம் போன்ற ஒரு தலைவரை அழித்து விட்டு ஆண்டன் பாலசிங்த்தைப் போன்ற ஒருவரைப் போயி உலகத்தலைவர்கள் மதிப்பார்கள் என்று நினைத்தது மிகப் பெரிய தவறு.
மொத்தத்தில் புலிகள் தன் மமதையால் ஆயிரக்கணக்கான உயிர்களை ஒரு பிரயோசனமும் இல்லாமல் காவு வாங்கி விட்டார்கள்.
வித்தகன்
உங்கள் கருத்து புலி எதிற்பு மட்டுமே அன்றி உண்மையான தமிழ் உணர்வு இல்லை.புலிகள் செய்தது 100 வீதம் சரி என்று நான் சொல்லவில்லை.அவர்களும் சாதாரண மனிதர்களே. விடுதலை இயக்கங்கள் தோன்றிய நாள் முதலே துரோகங்களும் ஆரம்பித்து விட்டன.என்றுமே கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றது புலிகள் மட்டும் தான்.இந்தியா என்றைக்குமே தமிழரின் பிரச்சனை தீரவேண்டும் என்று நினைத்து செயற்படவில்லை.மாறாக தவறான கொள்கைகளையே இந்தியா அன்றும் கொண்டிருந்தது இன்றும் கொண்டிருக்கிறது. கிழற்சியாளர்களை உருவாக்கி இலங்கையில் ஓர் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கி அதன் முலமாக இலங்கை அரசு வேறு நாடுகள் பக்கம் சாய்வதை தடுப்பதே இந்தியாவின் நோக்கம்.இதை முழுமையாக விளங்கிக் கொண்டது பிரபாகரனும் அவருடன் கூடஇருந்தவர்கள் மட்டுமே.தாம் வரிந்துகொண்ட இலக்கினை அடைவதற்காக இடையில் இருந்த தடைக்கற்களை புலிகள் அகற்றவேண்டிய நிலை இருந்தது.அதை அவர்கள் செய்தார்கள்.ஓரு விடுதலை இயக்கம் செய்யவேண்டியதைத்தான் அவர்கள் செய்தார்கள்.
புலிகள் இந்திய தமிழக தலைவர்களை நம்பினார்கள் என்பதெல்லாம் எவ்வாறு உண்மையாகும்.
இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவih புலிகள் மக்களையே நம்பினார்கள்.மக்களின் காலிலேயே நின்றார்கள்.தாங்கள் தான் ஏகபோக பிரதிநிதிகளாக இருக்கவேண்டும் என்றால் இந்திய அரசு அன்று சொன்ன போராளிகளின் செலவுக்கு மாதாந்தம் லட்ச ருபாக்களும் வடக்கின் முதலமைச்சர் பதவியையும் ஏற்றிருந்திருப்பார்கள்.
இறுதியாக உங்களிடமே ஒரு கேள்வி?
இன்றுதான் புலிகள் இல்லையே இன்றைய நிலையில் நீங்கள் சொல்வதைப்போல புலிகளால் ஒதுக்கப்பட்டு நீங்களே சொல்லிக்கொள்ளும் யனநாயக நீரோட்டத்தில் இணைந்த உங்களால் இதயசுத்தியோடு தமிழரின் தலமையை ஏற்று உங்களால் ஒடுக்கப்பட்ட மிழ் இனத்திற்கு தன்னாட்சியுடன் கூடிய ஒரு தீர்வை பெற்றுத்கொடுக்கமுடியுமா?
ஒடுக்கப்பட்ட தமிழருக்கு நீதியை பெற்றுக் கொடுக்கமுடியுமா?
லட்சக்கணக்கில் இன்று வதைமுகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களை சுதந்திரமாக அவரவர் இடங்களில் பாதுகாப்பாக மீழ் குடியேற்ற முடியுமா உங்களால்?
நன்றி
தமிழ்நிலா
வித்தகன்,
//தமிழ் நாடும் ஒருநாள் தமிழீத்துடன் சேர விரும்பும் என்ற குருட்டு நம்பிக்கையில் தமிழ் மண்ணில் ஆயுதம் சேர்க்கவும் தன் போராட்டக் கருத்துக்களை பரப்பவும் வன்முறைக் கலாச்சாரத்தைப் புகுத்த முயற்சித்திருக்கக் கூடாது. //
இது அபாண்டம். அவதூறு. நீங்களாக அபத்தமாக எதையாவது கற்பனை பண்ணிவிட்டு அதை புலிகள் மீது சுமத்தாதீர்கள். தமிழீழம் தமிழ்நாட்டுடன் சேர்வதா? உங்களுக்கு ஏதாவது புத்தி பேதலித்து விட்டதா?
நாங்கள் இவ்வளவு உயிர்களை காவு கொடுத்தது, தியாகங்கள் செய்வது, சர்வதேசத்திடம் அவமானப்படுவது எல்லாமே எங்களின், ஈழத்தமிழனத்தின், விடிவுக்காய், விடுதலைக்காய் மட்டுமே. இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் சுதந்திரத்தை மறுபடியும் நாங்கள் இந்தியாவிடம் அட்கு வைப்போம் என்று நீங்கள் கற்பனை பண்ணுவது உங்கள் அறிவீனம். உங்கள் அறிவீனத்திற்கு பதில் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், உங்களின் அபத்தமான கற்பனைக்கும், அறிவீனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கத்தான் இந்த பதில்.
கனவில் கூட நினைக்காதீர்கள் தமிழீழம் தமிழ்நாட்டுடன் சேரும் என்று.
தமிழ்நாடு என்றைக்குமே தமிழ்நாடுதான்.
தமிழீழம் கிடைக்கும் காலத்தில் அது என்றைக்குமே தமிழீழம் மட்டும்தான்.
தமிழ் நிலா! எது உண்மையான தமிழ் உணர்வு எது தமிழ் உணர்வில்லை என்று வரையறுக்கும் தகுதியை உங்களுக்கு வழங்கியது யார்? நான் பேசுவது புலி எதிர்ப்பு மட்டும்தான். அதைக் கேட்க உங்களுக்கு காது கூசுகிறது. அதற்காக என்னைத் தமிழ் உணர்வில்லாதவன் என்று சொல்ல உங்களுக்கோ மற்றவர்களுக்கோ உரிமை இல்லை. புலிகளை ஆதரிப்பது தமிழர்களை அழிப்பதற்கு சமம். அதனால் புலி ஆதரவாளர்கள் தமிழ் துரோகிகள் என்று நான் பதிலுக்கு சொல்லட்டுமா?
ரதி. புத்தி பேதலித்தவன், அறிவிலி என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டும் முன் நான் எழுதியதை இன்னும் ஒரு முறை படியுங்கள். தமிழீழம் தமிழ் நாட்டுடன் சேரும் பகல் கனவு என்று நான் எப்போதும் எழுதவில்லை. “தமிழ் நாடும் ஒருநாள் தமிழீத்துடன் சேர விரும்பும் என்ற குருட்டு நம்பிக்கையில்” என்றுதான் எழுதியிருக்கிறேன். இரண்டிற்கும் அடிப்படை வித்தியாசம் கூட உங்களுக்குத் தெரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே மாற்றி எழுதி வெறுப்பை உமிழ்கிறீர்களா?
உங்கள் புரிதலின் படி ஈழம் தமிழ்நாட்டுடன், இந்தியாவுடன் இணைய விரும்புகிறது என்று நான் சொல்லியதாகப் பொருள் வருகிறது. இது கடைந்தெடுத்த முட்டாள்தனம். இருக்கும் நாட்டில் இருந்து பிரிய விரும்பும் இனம் இன்னோரு நாட்டுடன் சேர ஆசைப் படும் என்று நான் ஏன் நினைக்க வேண்டும்? அதோடு எங்களுக்கு இருக்கிற இந்தியாவும் அதன் தலைவலிகளும் போதும். இன்னும் தேவையில்ல.
நான் சொல்லியிருப்பது ஈழம் உருவானால் தமிழகம் அதில் ஒரு அங்கமாக (தனித் தமிழ் நாடாக, இந்தியாவிலிருந்து பிரிந்து) சேர்ந்து விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் அகதிகளாக வந்த இலங்கைத்தமிழர்கள் அத்து மீறி விட்டார்கள் என்கிறேன். நெடுமாறன் போன்ற இந்திய எதிர்ப்பாளர்கள் தமிழர்கள் இந்த நாட்டில் நிம்மதி இல்லாமல் இருப்பது போலவும், இலங்கையில் நடக்கும் நியாயமான இனப் போராட்டம் போல இங்கும் ஒன்று நடக்க வேண்டும் என்பது போலவும் பிரமையை விடுதலைப் புலிகளுக்கு உருவாக்கி விட்டார்கள். 90 முதல் 93 வரை தென் இந்தியாவில் எங்கெங்கெல்லாம் எத்தனை வெடிப் பொருட்கள் சிக்கின என்று நினைவிருக்கிறதா? விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டையும் தன் நாட்டைப் போல் நினைக்க வில்லையென்றால் இத்தனை ஆயுதங்கள் இங்கு பதுக்கப் பட்டிருக்குமா? அதுவும் IPKF உடன் போர் நடந்து முடிந்திருந்த வேளையில்!!
பிரபாகரன் தலைமையில் ஈழம் உருவாகி இருந்தால் சில ஆண்டுகளில் தமிழ் நாட்டிலும் பிரிவினை விதை விதைக்கப் பட்டிருக்கும். இப்போது அந்தப் பிரச்சினை இல்லை.
பிரச்சினை என்னவென்றால் புலிகள் தன்னை மட்டுமே முன்னிறுத்தி (மற்றவர்களை அழிக்க எத்தனையோ காரணம் சொன்னாலும்) அவர்கள் அழிவோடு ஈழ விடுதலையையும் பின்னடைய வைத்து விட்டார்கள். சிங்கள ராணுவம் வெற்றிபெற்ற ராணுவம். இனிமேல் அவர்கள் கொடுப்பதுதான் கிடைக்கும் என்ற உண்மையை உணர்ந்து சம உரிமையை மனித நேய அடிப்படையில் பெறுவதுதான் இரண்டாவது படி. முதல் படி முகாம்களில் இருக்கும் மக்கள் குடியமர்த்தப் படுவது. அங்கு செல்ல முயற்சிப்பவன் என்ற முறையில் நான் கேள்விப்பட்டது முகாம்களில் கலந்திருக்கும் புலிகள் பிரிக்கப்படும் வரையில் அங்கு உதவிக்கு செல்ல முயல்வது பலன் தராது என்பதே.
கிட்டத்தட்ட ஒத்த கருத்துடைய தமிழ் நிலா, ரதி, வித்தகன் ஆகி மூவரையும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள வைத்ததும் புலிகளின் சாதனைகளில் ஒன்றாகக் கொள்ளலாம்.
வணக்கம் வித்தகன்
வித்தகன் என்ற பெயரைப் பார்த்தவுடன் கொஞ்சமெண்டாலும் விபரமிருக்கும் என்று தான் நினைத்து தவறு செய்துவிட்டேன் மன்னிக்கவும்.எது உண்மையான தமிழ் உணர்வு எது உண்மையான தமிழ் உணர்வு இல்லை என்று வரையறுக்கும் தகுதியை உங்களுக்கு வளங்கியது யார் என்று கேட்கிறீர்கள் ஒரு கிலோ தகுதியை நான் ஒரு கடையில வாங்கின்னான்.ஏன் உங்களுக்கும் வேணுமா?
தகுதி என்பது தானாக வருவது.கேட்டு வாங்குவதல்ல முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள் சகோதரன்.நீங்கள் எதிற்பது யாரை? புpரபாகரனையா? அல்லது புலிகளையா? ஏன் இதற்கான உங்களின் தெளிவான பதில் என்ன? நான் முதலிலேயே கேட்ட கேள்விகளுக்கே நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை.புலிகளை எதிற்கிறேன் என்கிறீர்கள்.!புலிகள் செய்தது பிழை என்கிறீர்கள்!புலிகள் மக்களை கேடயமாக வைத்திருந்தார்கள் என்று கிளிப்பிள்ளை மாதிரித்தான் சொல்கிறீர்களே அன்றி சிந்தித்து நீங்கள் சொல்லவில்லை. களமாடி விழுந்த ஒவ்வொரு போராளிகளினது தியாகத்தை கொச்சைப் படுத்தாதீர்கள்.புலிகள் பிழை செய்தார்கள் தான்.பிற ஆதிக்க சக்திகளுக்கு அடிபணியாது வளைந்து கொடுக்காது இலட்சிய உறுதியோடு கடைசிவரை போரிட்டு மடிந்தது பிழைதான்.திருகோணமலையையும் தலைமன்னாரையும் அமெரிக்க வல்லரசிம் கொடுத்து தமிழரின் வாழ்க்கையை அவர்களுக்கு அடைவுவைத்திருந்தால் புலிகளுக்கு அமெரிக்காவிலும் ஏனைய மேற்கு நாடுகளிலும் செங்கம்பள வரவேற்பு கிடைத்திருக்கும்.இதை செய்யாமல் விட்டு தமிழருடைய பாரம்பரிய இடங்களை காத்தது புலிகள் செய்த தவறுதான் அன்பரே!
இன்று உலகத் தமிழ்மக்களிடையே உள்ள சோர்வு நிலையை சாதகமாக்கி உங்களுடைய கருத்துக்களை திணிக்க முயலாதீர்கள்.அன்றும் இன்றும் என்றுமே உலகத்தமிழரின் மாசற்ற பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே. இதற்குள் உங்களைப் போன்ற விதிவிலக்குகள் அடங்காது.
இந்தியாவின் போரை சொறிலங்கா நடத்தியது. இந்தியாவின் இறையாண்மையை காத்து எல்லாவற்றையும் இழந்தது புலிகள் இயக்கம்.புலிகள் அனுமதித்திருந்தால் இந்தியாவின் வல்லரசுக் கனவு இந்தியாவின் பாதுகாப்பு என்பன இன்று கேள்விக்குறியாகியிருக்கும்.இது வரலாற்று உண்மை.
அன்புடன் *
தமிழ்நிலா
வணக்கம் வித்தகன்
வித்தகன் என்ற பெயரைப் பார்த்தவுடன் கொஞ்சமெண்டாலும் விபரமிருக்கும் என்று தான் நினைத்து தவறு செய்துவிட்டேன் மன்னிக்கவும்.எது உண்மையான தமிழ் உணர்வு எது உண்மையான தமிழ் உணர்வு இல்லை என்று வரையறுக்கும் தகுதியை உங்களுக்கு வளங்கியது யார் என்று கேட்கிறீர்கள் ஒரு கிலோ தகுதியை நான் ஒரு கடையில வாங்கின்னான்.ஏன் உங்களுக்கும் வேணுமா?
தகுதி என்பது தானாக வருவது.கேட்டு வாங்குவதல்ல முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள் சகோதரன்.நீங்கள் எதிற்பது யாரை? புpரபாகரனையா? அல்லது புலிகளையா? ஏன் இதற்கான உங்களின் தெளிவான பதில் என்ன? நான் முதலிலேயே கேட்ட கேள்விகளுக்கே நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை.புலிகளை எதிற்கிறேன் என்கிறீர்கள்.!புலிகள் செய்தது பிழை என்கிறீர்கள்!புலிகள் மக்களை கேடயமாக வைத்திருந்தார்கள் என்று கிளிப்பிள்ளை மாதிரித்தான் சொல்கிறீர்களே அன்றி சிந்தித்து நீங்கள் சொல்லவில்லை. களமாடி விழுந்த ஒவ்வொரு போராளிகளினது தியாகத்தை கொச்சைப் படுத்தாதீர்கள்.புலிகள் பிழை செய்தார்கள் தான்.பிற ஆதிக்க சக்திகளுக்கு அடிபணியாது வளைந்து கொடுக்காது இலட்சிய உறுதியோடு கடைசிவரை போரிட்டு மடிந்தது பிழைதான்.திருகோணமலையையும் தலைமன்னாரையும் அமெரிக்க வல்லரசிம் கொடுத்து தமிழரின் வாழ்க்கையை அவர்களுக்கு அடைவுவைத்திருந்தால் புலிகளுக்கு அமெரிக்காவிலும் ஏனைய மேற்கு நாடுகளிலும் செங்கம்பள வரவேற்பு கிடைத்திருக்கும்.இதை செய்யாமல் விட்டு தமிழருடைய பாரம்பரிய இடங்களை காத்தது புலிகள் செய்த தவறுதான் அன்பரே!
இன்று உலகத் தமிழ்மக்களிடையே உள்ள சோர்வு நிலையை சாதகமாக்கி உங்களுடைய கருத்துக்களை திணிக்க முயலாதீர்கள்.அன்றும் இன்றும் என்றுமே உலகத்தமிழரின் மாசற்ற பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே. இதற்குள் உங்களைப் போன்ற விதிவிலக்குகள் அடங்காது.
இந்தியாவின் போரை சொறிலங்கா நடத்தியது. இந்தியாவின் இறையாண்மையை காத்து எல்லாவற்றையும் இழந்தது புலிகள் இயக்கம்.புலிகள் அனுமதித்திருந்தால் இந்தியாவின் வல்லரசுக் கனவு இந்தியாவின் பாதுகாப்பு என்பன இன்று கேள்விக்குறியாகியிருக்கும்.இது வரலாற்று உண்மை.
அன்புடன்
தமிழ்நிலா
அன்புள்ள தமிழ்நிலா. பெயரை வைத்துப் பகடி செய்வதை நீங்கள் நட்பு பாராட்டவே விழைவதாக எண்ணி நான் பதிலுக்கு பதில் ஒன்றும் சொல்லப் போவதில்லை.
நான் புலிகள் இலங்கை இராணுவம் அல்லாத பிறர் மீது திணித்த வன்முறையை வெறுக்கிறேன். சாதாரண சிங்களர்கள், இலங்கைத் தமிழர்கள், இந்தியர்கள் (ராஜீவ் காந்தி உட்பட இறந்த 20 பேர்), புலிகள் அல்லாத மற்ற போராளிகள், அமிர்தலிங்கம் போன்ற மிதவாதிகள் இவர்களது கொலைகளை ஒதுக்கி விட்டு புலிகளைப் புகழ்வது ஒரு சிலருக்கு கட்டாயமாக இருக்கலாம். சர்வதேச சமூகத்திற்கு, இந்தியத் தமிழர்கள் உட்பட, அந்த அவசியம் இல்லை.
ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மட்டுமே திரிபுற்று, படிப்படியாக, நான் முதல் இடுகையில் பட்டியலிட்ட தவறுகள் நடக்கையில், புலிகள் மீது இருந்த பற்று எனக்கு நசிவுற்றுப் போய்விட்டது. தமிழீழம் என்றாலே புலிகள் என்று பிரபாகரனால் வரையறுக்கப் பட்ட காலத்தின் கட்டாயம் இன்று அவர்கள் தோல்வியுற்ற நிலையில் எடுத்துக் கொண்ட கொள்கையையே பலகீனமாக்கி விட்டது.
மற்றபடி புலிகளின் தவறுகள் என்ற பெயரில் நீங்கள் அவர்களது உன்னதமான நிலைப்பாடுகளைப் பட்டியலிடுவது பிரபலங்கள் பேட்டியளிக்கும் போது என் கணவரின் ஒரே குறை உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் குணம்தான் என்று சொல்வது போல இருக்கிறது.
நண்பரே. எனக்கு என் மொழியின் மீதும் நாட்டின் மீதும் இருக்கும் பற்று ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் மேல் இருக்கும் மதிப்பை விட அதிகமாக இருக்கவே கூடாது. உங்களுக்கு இனப்பற்றும் அதற்கும் மேலாக புலிகள் மீதுள்ள அபிமானமும் தூக்கலாக இருந்து அவர்களின் உண்மையான குறைகளை மறைக்கின்றன என்று எனக்குத் தெரிகிறது.
புலிகள் மாசற்றவர்கள் என்று உங்களைப் போலவே ஏராளமானோர் ஒருவேளை நினைக்கும் பட்சத்தில் அதற்கு நேர் எதிர் கருத்துக் கொண்டுள்ள சர்வதேச சமூகம் சிரமப்படும் இலங்கைத்தமிழர்களுக்கு உதவ யோசிப்பார்களே என்று வருத்தப் படுகிறேன். உங்கள் எண்ணம் ஆங்காங்கே மட்டும் ஒலிக்கும் மிகச் சிலரது கருத்தாகவே இருந்தால் புலிகள் மீண்டு வர மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வித்தகன்,
//நான் சொல்லியிருப்பது ஈழம் உருவானால் தமிழகம் அதில் ஒரு அங்கமாக (தனித் தமிழ் நாடாக, இந்தியாவிலிருந்து பிரிந்து) சேர்ந்து விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் அகதிகளாக வந்த இலங்கைத்தமிழர்கள் அத்து மீறி விட்டார்கள் என்கிறேன்.//
உங்கள் நாட்டில் என் சனம் உயிரை காப்பாற்ற தஞ்சம் கோரியுள்ளார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. என் இனமும் என் சனமும் (அதாங்க, உங்கள் பாஷையில் “அகதிகள்”) தமிழ்நாட்டில் எங்கே அத்துமீறினார்கள் என்று கொஞ்சம் விளக்கமாகத்தான் சொலுங்களேன். மேலே நீங்கள் சொன்ன கூற்று நீங்கள் ஏதாவது கருத்து கணிப்பு செய்ததன் முடிவா? எதை வைத்து என் உறவுகள் மீது இப்படி ஒரு பழியைப்போடுகிறீர்கள்.
வித்தகன், ஒரு உண்மையை நான் கண்டிப்பாக ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அதாவது, இந்த தளத்தில் நான் ஏறக்குறைய எல்லோருடைய கருத்துகளையும் படித்திருக்கிறேன். ஆனால், யாரும் இப்படி முன்னுக்குப்பின் முரணாக பேசி என்னை குழப்பியது கிடையாது.
/கிட்டத்தட்ட ஒத்த கருத்துடைய தமிழ் நிலா, ரதி, வித்தகன் ஆகி மூவரையும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள வைத்ததும் புலிகளின் சாதனைகளில் ஒன்றாகக் கொள்ளலாம்.//
நானும் நீங்களும் எந்த காலத்தில் (கிட்டத்தட்ட ?) ஒத்த கருத்தை கொண்டிருந்தோம்?
புலிகளுக்கு வேறு வேலையே கிடையாதா? ரதியும் வித்தகனும் நடத்தும் வெட்டிவாரியத்தில் அவரகளின் வேலையற்ற வீணாய்ப்போன வெட்டிப்பேச்சையும் சண்டையும் மூட்டிவிடுவதுதான் அவர்களின் இலட்சியமா? உங்க comedy க்கு ஒரு வரைமுறையே இல்லையா?
//நானும் நீங்களும் எந்த காலத்தில் (கிட்டத்தட்ட ?) ஒத்த கருத்தை கொண்டிருந்தோம்? //
இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஈழம் என்ற தனி நாடு கிடைத்தால்தான் அவர்களுக்கு வாழ்வுரிமை நிலை பெறும் என்பதில் நாம் மூவருமே ஒத்துப் போவோம் என்று கருதுகிறேன். புலிகள் பற்றிய நிலைப் பாட்டில் நமக்கு ஒத்த கருத்து இல்லாததுதான் இந்த வாக்கு வாதங்களுக்குக் காரணம்.
நான் பேச்சு மாற்றுவதாக சொல்லுகிறீர்கள். அது உங்கள் புரிதலில் உள்ள குறைபாடு. எனக்கு விடுதலைப்புலிகளின் செயல் பாடுகள் பிடிக்காது. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு நிகழும் கொடுமைகளைக் கண்டு மனம் வருந்துகிறது. இலங்கைத் தமிழர்களும் புலிகளும் வேறு வேறு என்ற என் பார்வை உங்களுக்குப் புரிபடவில்லை. அதனால் நான் மாற்றி மாற்றிப் பேசுவதாகக் குறை சொல்கிறீர்கள்.
//என் இனமும் என் சனமும் (அதாங்க, உங்கள் பாஷையில் “அகதிகள்”) தமிழ்நாட்டில் எங்கே அத்துமீறினார்கள் என்று கொஞ்சம் விளக்கமாகத்தான் சொலுங்களேன்.//
தமிழ் நாட்டில் வந்து தங்கும்போது டன் டன்னாக வெடி மருந்துகளைக் கடற்கரையோரம் பதுக்கியிருந்தது அத்து மீறல் இல்லையா? பத்ம நாபாவையும் 13 பேரையும் சென்னை மண்ணில் சுட்டுக் கொன்றது அத்து மீறல் இல்லையா? பாண்டி பஜாரிலே பேட்டை ரவுடிகள் போல பிரபாகரனும் வேற்றுக் குழுப் போராளியும் (சபா ரத்தினம் தானே?) பட்டப் பகலிலே துப்பாக்கியில் சுட்டுக் கொண்டது எங்களுக்குத் தேவையா? ராஜிவ்வ் காந்தியையும் 20 பேரையும் மனித வெடி குண்டால் சிதற அடித்தது கூட அத்து மீறல் இல்லையா? என்ன நடந்தாலும் நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?
இதையெல்லாம் அத்து மீறல் என்று புரிந்து கொள்ளக் கூட முடியாத அளவு உங்களுக்கு மூளைச் சலவை ஆகியிருப்பது வருந்தத் தக்கது.
அல்லது ஒன்று செய்யுங்கள். நான் குறிப்பிட்ட எல்லாமே புலிகள் செய்ததுதான். மொத்தமாக இலங்கைத் தமிழர் மீது பழி போடாதீர்கள் என்று சொல்லுங்கள். அதுதான் நான் 91 ஆம் ஆண்டிற்குப் பிறகு கொண்டுள்ள நிலைப்பாடு. ஒரு வாறாக என் வழிக்கு வந்து விட்டீர்கள் என்று நினத்துக் கொள்கிறேன்.
என்ன பதில்?
வித்தகன்,
//என்ன நடந்தாலும் நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?//
இதையே தான் நானும் கேட்கிறேன். இந்தியாவின் தேசிய நலன்களுக்காக ஈழத்தில் எங்களுக்கு பிடிக்காத ஒரு ஒப்பந்தம் போட்டு ஏறக்குறைய ஒரு ஏழாயிரம் அப்பாவித்தமிழனை அழித்தீர்கள். நாங்கள் யாரிடமாவது முறையிட முடிந்ததா?
இப்போது, புலிகளை அழிக்கிறோம் பேர்வழி என்று ஒரு ஐம்பதாயிரம் உயிர்களை காவு வாங்கியாகிவிட்டது. ஈழத்தமிழன் இனப்படுகொலையில் இந்தியாவிற்கும் பங்குண்டு என்று எத்தனை ஊடகங்கள், ராஜபக்க்ஷேக்கள் சொன்னாலும் வித்தகனுக்கு புரியவே புரியாதா?
//ஒரு வாறாக என் வழிக்கு வந்து விட்டீர்கள் என்று நினத்துக் கொள்கிறேன்.//
எது உங்கள் வழி? அதற்கேன் நான் வரவேண்டும்?
மீண்டும் வணக்கம் வித்தகன்.
உங்களுக்குத் தெரியுமா தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது தூங்குபவனை எழுப்பலாம் தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்ப முடியாது இது உங்களுக்கு 100 வீதம் பொருந்தும் நீங்கள் தூங்குபவன் போல் நடிப்பவர்.
இதற்கு நீங்களே சொல்லுங்கள் புலிகள் எத்தனை அப்பாவி சிங்கள மக்களை கொன்றார்கள் எத்தனை சிங்கள இளம் பெண்களை பாலியல் வதைக்கு உள்ளாக்கினார்கள் என்று.
ரஜீவ் காந்தி! தவறான வழிநடத்தலில் வரலாற்றுப்பிழை செய்தவர் (இன்றும் இதைத்தான் இந்தியா செய்கிறது நிச்சயம் தண்ணிக்கப்படும்) உங்கட மக்கள் 20 பேர் இறந்ததற்காக இவ்வளவு கேட்கிறீர்களே உங்கள் தலைவர் எங்கள் மண்ணிலே எங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் படைகளை அனுப்பி செய்த கொடுமைகளை எப்படி நாங்கள் மறப்போம்.ஈழத்தமிழனெண்டால் அவ்வளவு இழக்காரமாகப் போய்விட்டதா இந்தியாக்காறனுக்கு.நீங்கள் செய்ததுக்கு தண்டனை கொடுத்தோம் அவ்வளவுதான்.
ஈழத்தமிழனை அடகுவைக்கும் எவனுக்குமான தண்டனை தான் அமிர்தலிங்கம் போன்றோருக்கானது.
அதென்ன புலிகளை புகழ்வது? ஏனன்காக! ஏன்னைக் காப்பதற்காக உயிரைக் கொடுப்பவனை புகழாமல் என் இனத்தை விற்பவனையா நான் புகழமுடியும்?
தமிழீழம் என்றால் புலிகள் இல்லை சகோதரா புலிகளால் மட்டுந்தான் தமிழீழம் என்கின்ற உன்னதமான இலக்கை அடையமுடியும்.
காலத்தின் கட்டாயத்தால் அவர்கள் இன்று தோல்வியுறவில்லை.20 நாடுகள் இனத்துரோகிகளின் காட்;டிக்கொடுப்பு இவற்றால்தான் இந்தப்பின்னடைவு.இந்த இழப்பும் பின்னடைவும் உலகிற்கும் தமிழ் இனத்திற்தும் பல உண்மைகளை உணர்த்தம் வரலாறு மீண்டும் திரும்பும் இது காலத்தின் கட்டாயம்.நாட்டுக்காக தன்னை அர்ப்பணிப்பவன் புனிதன்.
இன்று புலிகள் இல்லாத நிலையிலே என் இனம் அழிகிறது.இதைத் தடுக்க யாரால் முடியும்? புலிகள் இல்லாதநிலையில் தமிழனுக்கு நீதி வழங்க யார் முன்வருவார்கள்?எவராலும் முடியாது.
புலிகளால் மட்டுமே முடியும்.
திருவாளர்கள் தமிழ் நிலா, ரதி. நான் உங்களைப் போல் புலிகளைக் கொண்டாட மாட்டேன். புலிகளைத் தியாகிகள் என்று புகழ்ந்தால்தான் இலங்கைத் தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவன் என்ற மூளைச் சலவை செய்யப் பட்ட கருத்துக்களை மதிக்க மாட்டேன். எக்காரணம் கொண்டும் புலி ஆதரவு அரசியல் வாதிகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன்.
விடுதலைப் புலிகள் தான் எல்லாமே என்று நினைத்துக் கொண்டு இருக்கும் உங்களைப் போன்றவர்கள், தமிழின உணர்வு என்று தவறாக சொல்லிக் கொண்டு புதைத்து வைத்த பூதத்தை திரும்பவும் வெளியே எடுக்காமல் இருங்கள். புலிகள் அழிந்ததால் நிம்மதியாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் அவர்கள் மறுவாழ்வுக்கும் இது போன்ற எண்ணங்களும் நடவடிக்கைகளும் தான் தடையாக இருக்கும்.
//நீங்கள் செய்ததுக்கு தண்டனை கொடுத்தோம் அவ்வளவுதான்.//
தமிழ் நிலா. இது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான பேச்சுக்களும் திமிரும்தான் புலிகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டன. இந்தியா என்ற ஜனநாயக நாட்டை தண்டிக்க ஆயுதம் தாங்கிய இந்த முரட்டுக் கூட்டத்திற்கு எந்தத் தகுதியும் இல்லை. அத்து மீறியதற்கு மன்னிப்புக் கேட்காமல் இன்னமும் இவ்வளவு திமிராகப் பேசுபவர்கள் உயிர் போகும் நிலையில் உதவி கேட்டு இறைஞ்சுவானேன்? இந்தியாவின் காலைப் பிடித்து உயிர்ப் பிச்சை கேட்டுக் கெஞ்சும் போது இந்த தண்டிக்கும் திமிர் எங்கே போச்சாம்? எப்போது உயிர்ப்பிச்சை கேட்டார்கள் என்று கேள்வி கேட்காதீர்கள். பிரபாகரன் கொல்லப் படும் வரை தினசரி புதினத்திலும் தமிழ் நெட்டிலும் அய்யா சாமி காப்பாத்துங்க கதறல் காதைக் கிழித்துக் கொண்டிருந்தது. அப்போது இந்தியா முகத்தைத் திருப்பிக் கொண்டது சரிதான் என்று இந்த அகங்காரமான (அதுவும் தோற்றுப் போன கூட்டத்தின் அகங்காரம்) வசனம் மீண்டும் நிரூபிக்கிறது. பயங்கரவாதிகள் வேட்டையாடப் பட்டதை தியாகம், வீர மரணம் என்று கூவிக் கூவி விற்காதீர்கள். ஒருவரும் வாங்க மாட்டார்கள்.
இப்போது புலிகளைப் புதைத்த இடத்தில் புல் முளைத்து விட்டது. அந்த புல்லையும் எரித்து விடுவதுதான் உலகத்துக்கு, குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு, நல்லது.
//எது உங்கள் வழி? அதற்கேன் நான் வரவேண்டும்?//
ரதி. எண்பதுகளில் பிரபாகரனை வரலாற்று நாயகனாக வரிந்து கட்டிக் கொண்டிருந்த நான் அமிர்தலிங்கம் கொலைக்குப் பின், ராஜீவ் காந்தி கொலைக்குப் பின், தமிழகத்தில் புலிகளின் ஆயுதப் பதுக்கல்கள் வெளிவந்த பின் என்று படிப்படியாக புலிகளை இலைங்கைத் தமிழர்களிடமிருந்து பிரித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். என் வழி தமிழ் ஈழ ஆதரவு, புலிகள் மறுப்பு.
ஏன் அதற்கு வருவது உங்களுக்கு உசிதம் என்றால், 32 நாடுகளால் தடை செய்யப் பட்ட, இப்போது அழித்து ஒழிக்கப்பட்ட ஒரு தீவிர வாத இயக்கத்தையும் மக்கள் பிரச்சினையையும் ஒன்றாக்கி அதனால் ஈழ விடுதலைக்கு ஆதரவில்லாமல் ஆக்கி விடாதீர்கள் என்பதுதான்.
Mr வித்தகன்,
//விடுதலைப் புலிகள் தான் எல்லாமே என்று நினைத்துக் கொண்டு இருக்கும் உங்களைப் போன்றவர்கள், தமிழின உணர்வு என்று தவறாக சொல்லிக் கொண்டு புதைத்து வைத்த பூதத்தை திரும்பவும் வெளியே எடுக்காமல் இருங்கள். புலிகள் அழிந்ததால் நிம்மதியாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் அவர்கள் மறுவாழ்வுக்கும் இது போன்ற எண்ணங்களும் நடவடிக்கைகளும் தான் தடையாக இருக்கும்.//
“பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய இரத்த வெறியே காரணம்!” என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர். நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்த யாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பது?
சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956 இல் அறிவிக்கப்பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா – செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958 இல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974 இல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடிகுண்டு வீசி மோசமான தாக்குதலை முன்நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977 இல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? ‘தமிழரின் அறிவுக்கோயில்’ என்று கொண்டாடப்பட்ட யாழ். நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக்கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27 ஆம் நாள் 18 தமிழரும் குரூரமாகக் கொல்லப்பட்டது யாரால்?
சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல்களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது. புத்த பூமியை இரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர்கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.
சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும். ‘புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?’ என்று பண்டாரநாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்சவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்… அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபாகரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும்.
//ராஜிவ்வ் காந்தியையும் 20 பேரையும் மனித வெடி குண்டால் சிதற அடித்தது கூட அத்து மீறல் இல்லையா? என்ன நடந்தாலும் நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?//
காங்கிரஸ்காரர்கள் எது சொன்னாலும் அப்படியே நம்பி விடுவீர்களா? உங்கள் சிந்தித்துப் பார்க்க முடியாதா? ராஜீவ் கொலையை புலிகள் மறுத்து ஜெயின் கமிஷனுக்கு கடிதம் அனுப்பிவுள்ளனர். ஆனால் ராஜீவ் கொலை நடந்த அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே சுப்ரமணிய சாமியிடம் புலிகள் தான் ராஜீவ்வை கொலை செய்தார்கள் என்று அவசரமாக கூறுவதற்கு என்ன காரணம்? ஏன் அன்று நடந்த கூட்டத்தில் ராஜீவ் தவிர மூத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை? முதலில் போபர்ஸ் ஊழலை திருப்பிப் பாருங்கள். அப்புறம் புரியும் யார் ராஜீவ்வை கொலை செய்தார்களென்று. அப்படிப் பார்த்தால் கூட, ராஜீவ் கொலையில் சோனியாதான் குற்றவாளி என்று சுப்ரமணிய சாமி சொன்னான். அதையும் அப்படியே நம்பி விடுவீர்களா?
Mr. செந்தில் விளக்கமான பதிலுக்கு நன்றி. சுப்பிரமணிய சாமி சொன்னதால்தான் ராஜீவ் கொலைக்குப் புலிகள் காரணம் என்று நான் நினைப்பதாக நீங்கள் கூறுவது என்னை அவமானப் படுத்துகிறது. போயும் போயும் சாமி போன்ற அயோக்கியரின் பேச்சையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருப்பது ஆன்டன் பாலசிங்கம் போன்ற கோமாளியின் பேச்சைக் கேட்பதற்கு இணையான முட்டாள்தனம் என்று எனக்குத் தெரியும். புலிகள் ராஜீவைக் கொல்லவில்லையென்பது பூசணித் தோட்டத்தையே ஒரு பருக்கையில் ஒளிக்கும் முயற்சி. நடக்காது.
மற்றபடி சிங்கள அராஜகம் தான் புலிகளை ஆயுதமெடுக்க வைத்தது என்பதிலோ, ஈழத்தில் தமிழர்கள் வாழ்வு மேம்பட விடுதலைதான் சிறந்த வழி என்பதிலோ எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் படிப் படியாக பிரபாகரன் செய்த தவறுகளாலும, பிற இலங்கைத் தமிழ்ப் போராளிகள் மேல் செய்த வன் சூழ்ச்சிகளாலும் விடுதலைப் போராட்டம் பின் தள்ளப் பட்டு பயங்கரவாதம் மட்டுமே மிஞ்சியது. இப்போது புலிகள் அழிவு தமிழர்கள் மறுவாழ்வுக்கு ஆரம்பமாக இருக்கச் செய்ய வேண்டியது எல்லாரின் கடமை. அதற்கு புலி புராணம் பாடாமல் அடுத்த வேலையைப் பார்ப்பதுதான் சிறந்த வழி.
Mr வித்தகன்,
//சுப்பிரமணிய சாமி சொன்னதால்தான் ராஜீவ் கொலைக்குப் புலிகள் காரணம் என்று நான் நினைப்பதாக நீங்கள் கூறுவது என்னை அவமானப் படுத்துகிறது.//
உங்களை நான் அவமானப் படுத்துவதாக நீங்கள் உணர்ந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். சுப்பிரமணிய சாமி சொன்னதால்தான் ராஜீவ் கொலைக்குப் புலிகள் காரணம் என்று அர்த்தமல்ல. ராஜீவ் கொலையில் சுப்ரமணிய சாமியையும், அரசியல் சாமியார் சந்திரா சாமியையும் விசாரித்திருந்தாலே போதும் ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளி யார் என்று தெரிந்திருக்கும் என்றுதான் கூற வருகிறேன். ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகள் தப்பி விட்டார்கள் என்பதுதான் உண்மை. அது மனசாட்சி உள்ளவர்களுக்கும் உண்மையை ஆராய்ந்து உணர்பவர்களுக்கும் நன்கு தெரியும்.
//ஆனால் படிப் படியாக பிரபாகரன் செய்த தவறுகளாலும், பிற இலங்கைத் தமிழ்ப் போராளிகள் மேல் செய்த வன் சூழ்ச்சிகளாலும் விடுதலைப் போராட்டம் பின் தள்ளப் பட்டு பயங்கரவாதம் மட்டுமே மிஞ்சியது.//
இதை நான் மறுக்கிறேன். பிரபாகரன் செய்த தவறு தமிழீழ லட்சியத்திற்கு சூழ்ச்சி செய்து முட்டுக்கட்டை போட்ட தலைவர்களையும் இனவெறி இலங்கை அரசியல் தலைவர்களுக்கு துணை போனவர்களையும் திருப்பி தண்டித்ததுதான் (மற்றவர்கள் பார்வைக்கு அது வன்முறை ஆகிவிட்டது).
//இப்போது புலிகள் அழிவு தமிழர்கள் மறுவாழ்வுக்கு ஆரம்பமாக இருக்கச் செய்ய வேண்டியது எல்லாரின் கடமை. அதற்கு புலி புராணம் பாடாமல் அடுத்த வேலையைப் பார்ப்பதுதான் சிறந்த வழி.//
ஈழத் தமிழர்கள் பற்றி கட்டுரை எழுதுபவர்கள் அனைவரும், சிங்களர்கள் செய்த இனப்படுகொலைகள் பற்றியும் அதற்கு எதிராக புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழகத் தமிழர்கள் செய்ய வேண்டிய போராட்டங்கள் பற்றி எழுதாமல் புலிகள் பற்றியே எழுதிக்கொண்டிருந்தால் அந்தக் கட்டுரைக்கு திரும்பி மறுமொழியும் போது புலிகள் பற்றித்தான் பேச வேண்டியிருக்கிறது.
நண்பர் செந்தில் அவர்களே. மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டியதில்லை. உங்கள் கருத்து இப்போது புரிகிறது,
உங்களுக்கும், தமிழ் நிலாவுக்கும், ரதிக்கும் நான் என் தரப்பிலிருந்து சொல்ல இனிமேல் எதுவும் இல்லை. என் கருத்து இவ்வளவுதான். சக தமிழன் என்ற முறையில் என்னால் இலங்கைக்கு சென்று முகாம்களில் பணியாற்றும் விருப்பம் நிரைவேறாத ஏமாற்றத்தை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். விசா கிடைக்காது. கிடைத்துச் சென்றாலும் முகாம்களுக்கு செல்ல அனுமதி மிகவும் கடினம் எனத் தெரிகிறது. டிசம்பரிலாவது இலங்கை செல்ல முடிகிறதா என்று முயற்சிக்கப் போகிறேன். அதற்குள் முகாம்கள் கலைக்கப் பட்டு மக்கள் குடியமர்த்தப் பட்டால் அதை விட மகிழ்ச்சி எதுவும் இருக்காது.
ஆனால். ஒரு தொண்டு நிறுவனம் வாயிலாக 6 பிள்ளைகளின் கல்விச் செலவு பள்ளிப் படிப்பு முடியும் வரை ஏற்றுக் கொண்டுள்ளோம். பணக்காரத்தனமான ஒப்புக்குச் செய்யும் சமூகசேவையாக இல்லாமல் உண்மையாகவே உதவி தேவைப்படும் அப்பாவிக் குழந்தைகளுக்கு கரம் கொடுக்க எடுக்கும் முயற்சிதான் இது.
தோழர் வித்தகன் அவர்களே,
//ஒரு தொண்டு நிறுவனம் வாயிலாக 6 பிள்ளைகளின் கல்விச் செலவு பள்ளிப் படிப்பு முடியும் வரை ஏற்றுக் கொண்டுள்ளோம். பணக்காரத்தனமான ஒப்புக்குச் செய்யும் சமூகசேவையாக இல்லாமல் உண்மையாகவே உதவி தேவைப்படும் அப்பாவிக் குழந்தைகளுக்கு கரம் கொடுக்க எடுக்கும் முயற்சிதான் இது.//
உங்களின் இந்த மேலான பணிகளை கடைசி வரை செவ்வென தொடருங்கள். முடிந்த அளவு உங்களுடைய மற்ற தோழர்களையும் உங்களின் இந்தப் பணியில் ஈடுபட முன் வரச் சொல்லுங்கள். ஈழத் தமிழர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உறுதுணையாக உள்ளோம் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டி விரைவில் தமிழீழத்தை வென்றெடுக்க முனைவோம்.
‘தமிழா இருப்பாய் நெருப்பாய், இருந்தது போதும் செருப்பாய்’.
உங்களின் தோழர் செந்தில்.
வித்தகன்,
//என் வழி தமிழ் ஈழ ஆதரவு, புலிகள் மறுப்பு.//
உங்கள் தமிழீழ ஆதரவுக்கு நன்றி. ஆனால், எனக்கு எங்கள் தேசியத்தலைவர் என் தாய் போன்றவர். என் தாயை பழிசொல்லிவிட்டுதான் ஒரு தமிழரான நீங்கள் எனக்கு உதவுவீர்கள் என்றால் அதை என் மனம் ஏனோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மன்னிக்கவும். நீங்கள் புலிகளை மறுங்கள். அது உங்கள் தனிமனித கருத்து சுதந்திரம்.
//இப்போது அழித்து ஒழிக்கப்பட்ட ஒரு தீவிர வாத இயக்கத்தையும் மக்கள் பிரச்சினையையும் ஒன்றாக்கி அதனால் ஈழ விடுதலைக்கு ஆதரவில்லாமல் ஆக்கி விடாதீர்கள் என்பதுதான்.//
உங்களோடு அதிகம் வாதம், எதிர்வாதம் செய்ய மனம் எனக்கு இப்போது ஒப்புவதில்லை. ஆனாலும், இறுதியாக இந்தியா, மேற்குலகம், வித்தகன் எல்லோரும் புலிகள் பயங்கரவாதிகள் என்று சொன்னாலும், அதை ஈழப்பிரச்சனையை புரிந்து கொண்டவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. காரணம், நான் மேற்சொன்ன மூன்று பேருமே மக்கள் பிரச்சனை வேறு, புலிகள் வேறு என்று வெட்டிவாதம் செய்பவர்கள். ஈழமக்களின் உரிமைப்பிரச்சனைக்காகத்தான் புலிகள் போராடினார்கள் என்பதை இவர்கள் தங்கள் வசதிகேற்றவாறு மறைத்துவிடுகிறார்கள். அந்த பொய்யையே திரும்பத்திரும்ப சொல்லி அடுத்த்வரை ஏமாற்றப்பார்க்கிறார்கள்.
பொய்யை எத்தனை தரம் திருப்பிச் சொன்னாலும் அது மெய்யாகாது. புலிகள் ஈழமக்கள் பிரச்சனைக்காகத்தான் போராடினார்கள். இன்று, அவர்கள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் உங்களைப்போன்றவர்களால் ராஜபக்க்ஷேக்களிடமிருந்து எங்களுக்குரிய உரிமைகளை வாங்கித்தர முடியுமா உங்களால்?
புலிகள் யார் என்பதை ஈழத்தமிழர்கள் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இன்று ஈழத்தமிழன் பேசினாலே இந்தியா, மேற்குலகம், வித்தகன் போன்றோர்களுக்கு பிடிக்கவில்லை. நாங்கள் புலிகளை நேசிக்கிறோம் என்பதற்காகவே “பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்தப்படுகிறோம். இந்தியாவும், மேற்குலகமும் ஒரு முறை, ஒரேயொருமுறை ஈழத்தமிழனின் மனக்குமுறலை உண்மையான இதயசுத்தியோடு காது கொடுத்து கேட்டாலே எங்கள் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். கேட்பார்களா இதயசுத்தியோடு?
//இன்று ஈழத்தமிழன் பேசினாலே இந்தியா, மேற்குலகம், வித்தகன் போன்றோர்களுக்கு பிடிக்கவில்லை.//
இல்லவே இல்லை. நான் புலிகளைக் குறை சொன்னால் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை. உங்களையும் உங்கள் கருத்துக்களையும் யாரும் உதாசீனம் செய்யவில்லை!
//இந்தியாவும், மேற்குலகமும் ஒரு முறை, ஒரேயொருமுறை ஈழத்தமிழனின் மனக்குமுறலை உண்மையான இதயசுத்தியோடு காது கொடுத்து கேட்டாலே எங்கள் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். கேட்பார்களா இதயசுத்தியோடு?//
அவர்கள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும். கேட்பார்கள் என்றே நம்புவோம். இந்தியாவும் மேற்குலகும் உங்கள் குரலைக் கேட்க வைப்பதற்கு நீங்களும் கொஞ்சம் வேறு குரலில் பேசத்தான் வேண்டும். புலிகள் தோல்வியுற்றுள்ள நிலையில் அவர்கள் பேரால் இனிமேல் எதுவும் நடக்காது என்பதை உணர்ந்து வேறு வழிகளில் போராடினால்தான் ஈழக் கனவு அழியாமல் இருக்கும்.
உங்கள் பதிவில் இருக்கும் பிரபாகரன் பற்றிய கருத்துக்களை நான் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், உங்கள் உணர்வுகளை மதித்து ஒதுங்கிக் கொள்கிறேன்.
வணக்கம் வித்தகன்.
(திருவாளர்கள் தமிழ் நிலா ரதி. நான் உங்களைப் போல் புலிகளைக் கொண்டாட மாட்டேன். புலிகளைத் தியாகிகள் என்று புகழ்ந்தால்தான் இலங்கைத் தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவன் என்ற மூளைச் சலவை செய்யப் பட்ட கருத்துக்களை மதிக்க மாட்டேன். எக்காரணம் கொண்டும் புலி ஆதரவு அரசியல் வாதிகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன்.
நாங்கள் அல்லது யாராவது வந்து கேட்டார்களா உங்களிடம் புலிகளைக் தூக்கிவைத்து கொண்டாடுங்கள் என்று.ஐயா பெரியவரே மக்களின் ஆதரவு இல்லாமல் புலிகளால் எவ்வளவு காலம் செயற்பட்டிருக்க முடியும்?நீங்கள் சொல்லலாம் புலிகள் ஆயுத முனையில் மக்களை அடக்கி வைத்திருந்தார்கள் என்று! மக்கள் சக்தியை எதிற்து புலிகளால் நிற்கமுடியமா? ஓன்றை மட்டும் விளங்கிக் கொள்ளுங்கள் மக்களால் மக்களுக்காக மக்களில் இருந்து தோன்றியவர்கள் தான் புலிகள்.
(இந்தியா என்ற ஜனநாயக நாட்டை தண்டிக்க ஆயுதம் தாங்கிய இந்த முரட்டுக் கூட்டத்திற்கு எந்தத் தகுதியும் இல்லை.)
யனநாயகம்
இந்தியாவிற்கு வெளியில் இருப்பவர்களை விடுங்கள்.ஏன் ஐயா நீங்களே சொல்லுங்கள் இந்தியா யனனாயக நடா?!!!!!!!!!!உங்கள் நாட்டின் தெருக்களில் மாலை 6 மணிக்குப் பிறகு ஓர் இளம் பெண் தனியாக நடந்துபோக முடியுமா ஐயா?!!! கயவர் காடயர்களை விடுங்கள் உங்கள் நாட்டின் காவல்துறையே கடித்துக் குதறி விடுவார்களே தனியாகப் போகும் பெண்களை.ஓருவேளை இதுதான் உங்கள் யனநாயகமோ?!!!!!!
ஓன்றைப்பற்றி எழுதுமுன் தெளிவாக தெரிந்துகொண்டு எழுத வேண்டும்.
புலிகள் கேட்டது மக்களை காப்பாற்றச் சொல்லியே அன்றி தங்களை காப்பாற்றும்படி இல்லை.நேராக மோதமுடியாமல் ச