privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்!!

ஈழம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்!!

-

ஈழம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்!!

ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறை என்பது அரசியல், கல்வி, பொருளாதாரம், ராணுவம் என்ற வடிவங்களில்தான் காலங்காலமாய் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்வி மற்றும் பொருளாதார அடக்குமுறை பற்றி என் அனுபவங்கள் மூலம் ஓரளவு சொல்லியிருக்கிறேன். எல்லா அடக்குமுறைகளையும் விட ராணுவ அடக்குமுறை தான் எங்களை நேரடியாகவே பாதிக்கிற என்பதை விட பலி எடுக்கிற அடக்குமுறை வடிவம் என்று சொன்னால் அது மிகையில்லை. ராணுவம் என்பதற்கு ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் வெவ்வேறு அர்த்தங்கள் இருக்குமா?

அதாவது மக்களை ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றும் ராணுவம், நாட்டிற்காக போரிடும் ராணுவம், அமைதிப்படை…. இப்படியாக. ஆனால், இலங்கையில் மட்டும் தமிழினத்தை அழிக்கவென்றே சிங்கள ராணுவத்தை கட்டியெழுப்பி வைத்திருக்கிறார்கள். இன்று இலங்கையில் நாட்டின் சனத்தொகைக்கும் ராணுவத்தின் விகிதத்திற்கும்  சம்பந்தமில்லாத வகையில் மிக அதிகமாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா கன்வென்ஷனையும் மீறினாலும், அதையெல்லாம் தாண்டி சிங்கள ராணுவம் விமரிசனத்திற்கு கூட அப்பாற்பட்ட புனிதர்கள் என்கிறார் இலங்கை அதிபர். இலங்கை ஓர் ஜனநாயக சோசலிச குடியரசு என்று சொல்கிறார்கள்.

ஏன் இப்படியொரு ராணுவ கட்டமைப்பு? இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது ராணுவ ஆட்சியா என்ற கேள்வி என் மனதில் அடிக்கடி எழுவதுண்டு. இன்று மனித உரிமைகள், தாராண்மை ஜனநாயகம் என்று பேசப்படுகின்ற காலத்திலும் ராணுவ அடக்குமுறையால் வாழ்வுரிமை கூடப்பறிக்கப்படுகிற இனங்களில் ஈழத்தமிழினமும் ஒன்றாகிவிட்டது. ராணுவம், இதன் அர்த்தம் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் சரியாகப் புரியும் என்பது என் அனுபவங்களினூடாக நான் கண்டறிந்த உண்மை.

நான் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் கூட எனக்கு இலங்கை ராணுவம் பற்றிய பயம் என் மனதிலிருந்து இன்னும் போகவில்லை. இந்நாட்களில் ராணுவ சீருடை போன்ற ஆடைகளை யாராவது அணித்திருப்பவர்களை பார்த்தாலும் எனக்கு ஒரு கணம் என் மூச்சு நின்றுவிடும் போலிருக்கும். மறுகணம் நான் இலங்கையில் இல்லை என்பதையும், நான் பார்க்கும் அந்த உருவம் இலங்கை/இந்திய ராணுவம் இல்லை என்பதையும் எனக்கு நானே மனதிற்குள் சொல்லி தேற்றிக்கொள்வேன்.

ஈழத்தில் ராணுவத்தை நான் நேரில் சந்தித்த நேரங்களிலெல்லாம் என் இதயத்துடிப்பே எனக்கு இடி போல கேட்கும். அப்படியொரு பயம் எனக்கு ராணுவத்திடம். தன்னை ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் இலங்கையில் ராணுவம் பற்றிய என் நினைவுகள் ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation) இற்கு முற்பட்ட காலங்கள் முதற்கொண்டு இந்திய அமைதி காக்கும் படை (மன்னிக்கவும் எங்கள் அமைதியை அழித்த ராணுவம்) வரை அப்பாவி தமிழர்களுக்கு அவர்கள் இழைத்த கொடுமைகளை, செய்த அட்டூழியங்களை மீட்டிப்பார்க்கிறேன்.

ராணுவம் (இலங்கை, இந்திய ராணுவம்) பற்றிய பயத்தினை, கசப்பினை, வெறுப்பினை வெறும் வார்த்தைகளில் வடிக்க முடியுமா தெரியவில்லை. நான் என் வாழ்நாளில் மீட்டிப்பார்க்க விரும்பாத நாட்கள் அவை. மீட்டினாலும், விட்டாலும் அதன் வலி மட்டும் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.

ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணம் வடமராட்சியில் ராணுவம் ஊரிக்காடு வல்வெட்டித்துறை முகாமிலிருந்து வந்துதான் எங்களுக்கு கஷ்டங்களையும் கொடுத்து, கூடவே எங்கள் அப்பாவி சகோதரர்களையும் கொலை செய்து காணாமற்போகச் செய்தும் கொண்டிருந்தார்கள். இந்த முகாம் பற்றி சொல்லவேண்டுமானால், இது ஆரம்பத்தில் காவல் நிலையமாக இருந்ததாகவும், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் அமுலாக்கப்பட்ட பின்னர் ராணுவமுகாமாக மாற்றப்பட்டதாகவும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இது ராணுவ முகாமாக மாற்றப்படக் காரணம் இம்முகாம் கடற்கரையை ஒட்டியதாகவும் ராணுவ தளவாட விநியோகங்களுக்கு ஏற்றதாகவும் இருப்பதுதான் என்றும் சொல்லப்படுகிறது.

இன்றுவரை இந்த ராணுவ முகாம் இன்னும் விஸ்தரிக்கப்பட்டு பாடசாலைகளையும், குடிமனைகளையும் தொழில்வாய்ப்புக்களையும் விழுங்கி ராணுவத்தால் நிரம்பி வழிந்து கொண்டுதானிருக்கிறது. இந்த ராணுவமுகாமில் இருந்து அடிக்கடி அன்றுமுதல் இன்றுவரை ராணுவம் ரோந்து போவது வழக்கம். அண்மையில் வன்னியில் இறுதிப்போர் நடந்துகொண்டிருந்த காலங்களில் நடந்த ஓர் சம்பவம். ஊரில் கோவில் திருவிழா என்றால் காலை, மாலை இருவேளைகளிலும் எல்லா வீடுகளிலும் வாசல் தெளித்து, கோலம் போடத்தெரிந்தவர்கள் கோலம் போடுவார்கள்.

என் உறவினர் ஒருவர் வீட்டில் அவர்களின் உறவுகள் வன்னியில் மாட்டிக்கொண்டதால் இவர்கள் திருவிழாக்கால சம்பிரதாயங்கள் எதையுமே செய்யவில்லை. ரோந்து போய்கொண்டிருந்த ராணுவம் இவர்களின் வீட்டில் புகுந்து நீங்கள் ஏன் எல்லோரையும் போல் வாசலை சுத்தம் செய்யவில்லை? உங்கள் உறவினர்கள் யாராவது வன்னியில் இருக்கிறார்களா என்று எகத்தாளமாக கேட்டிருக்கிறார்கள். இதில் வேதனையான விடயம் என்னவென்றால் வன்னியில் என்ன நடக்கிறது என்பது வடமராட்சித்தமிழனுக்கு தெரியாமலேயே ராணுவ அடக்குமுறை மூலம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் வழக்கமாக புலத்திலுள்ள தங்கள் உறவினர்கள் மூலமாகத்தான் வன்னியில் என்ன நடக்கிறது என்று தொலைபேசி மூலம் தெரிந்து கொண்டிருந்திருக்கிறார்கள். ராணுவம் இப்படி கேட்ட நாள் முதல் இவர்கள் இரண்டு வேளையும் வாசல் தெளித்து விட்டு, வீட்டுக்குள் தங்கள் உறவுகளை எண்ணி துடித்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

இது தான் யாழ்ப்பாணத்தில் என் உறவுகளின் இன்றைய அவல வாழ்வு. வெளியுலகுடன் சாதாரண மக்களுக்குள்ள ஊடகத்தொடர்புகள் ராணுவத்தால் திட்டமிடப்பட்ட முறையில் பறிக்கப்பட்டுள்ளன. அநேகமானோர் சொல்வது போல் யாழ்ப்பாணம் ஓர் திறந்த வெளி சிறைச்சாலையாக சிங்கள ராணுவத்தின் அடக்குமுறையில் திணறிக் கொண்டுதானிருக்கிறது.

நான் வடமராட்சியில் இருந்த காலங்களில் ராணுவம் முகாமிற்குள் முடக்கப்படுவதற்கு முற்பட்ட காலங்களில் ஊரடங்கு சட்டம் போட்டு ஊருக்குள் ராணுவத்தின் வெறியாட்டங்கள் கேள்விமுறையின்றி அரங்கேறியதும் உண்டு. அந்த பாதகங்கள் எதுவுமே வெளியுலகிற்கு தெரியாமலே போனதும் உண்டு. நான் சிறுமியாக இருந்த நாட்களில் என் அம்மாச்சி (பாட்டி)தான் சொல்வார் “இண்டைக்கு ஆமிக்காரன் சந்தியில நிண்ட பெடியளை பிடிச்சுக்கொண்டு போறாங்களாம்” என்று. ராணுவம் ட்ரக் வண்டிகளில் தான் வருவார்கள். அப்படி வரும்போது ரோட்டில் நிற்கும் இளைஞர்கள் சிலரை அள்ளி தங்கள் வண்டிகளில் போட்டுக்கொண்டு போய்விடுவார்கள். அவர்களில் சிலர் வீடு திரும்பியிருக்கிறார்கள். சிலர் இன்றுவரை காணாமற் போனவர்கள் தான்.

தமிழர்களை பிடித்துச் செல்லவோ அல்லது தடுத்து வைக்கவோ ராணுவத்திற்கு காரணம் ஏதும் தேவையில்லை. முன்பெல்லாம் பிரதான வீதியால் ரோந்து மட்டுமே சென்ற சிங்கள ராணுவம் பின்னாட்களில் சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டது. ராணுவ சுற்றிவளைப்பு என்றாலே ஊர் அமைதியாகி விடும். ஓர் மயான அமைதிதான் இருக்கும். அவ்வப்போது ஊரில் காகத்தின் சத்தத்தோடு துப்பாக்கி வேட்டுச்சத்தமும் கேட்கும். என்/எங்களின் உயிர் எங்களுக்கு மிஞ்சுமா என்று விவரிக்க முடியாத பயத்தோடும் வேதனையோடும் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு யுகமாக கழித்திருக்கிறேன்/கழித்திருக்கிறோம். அது மரண வேதனை. அதை சொல்லில் புரிய வைக்க முடியாது.

சிங்கள ராணுவம் திபுதிபுவென்று வீட்டிற்குள் நுழைவார்கள். நுழைந்த மாத்திரத்திலேயே “கொட்டியா (புலி) இரிக்கா?” என்பார்கள். வீட்டையே கிண்டி, கிளறி துவம்சம் பண்ணுவதோடு மட்டுமில்லாமல் சிலரது வீடுகளை அவர்களின் கண்முன்னாலேயே கொளுத்திவிட்டும் போயிருக்கிறார்கள். சிங்கள ராணுவத்துக்கு இப்படி செய்வதற்கு காரணங்கள் ஏதும் வேண்டியதில்லை. நாங்கள் தமிழர்களாக இருக்கும் ஒரு காரணம் போதாதா? எங்கள் வீட்டில் சிங்கள ராணுவம் நுழைந்த சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் இந்த நாசமாப்போனவங்களின் கேள்விக்கெல்லாம் என் பாட்டிதான் பதில் சொல்லியிருக்கிறார். ராணுவம் வீட்டிற்குள் நுழைந்து சோதனை போடும் சந்தர்ப்பங்களில் யாரையாவது தங்களோடு உள்ளே வரச்சொல்லுவார்கள். காரணம், உள்ளே சோதனை போடச்செல்லும் போது உள்ளேயிருந்து தங்களை யாராவது தாக்கிவிடுவார்கள் என்ற பயம் தான்.

அப்படியான சந்தர்ப்பங்களில் என் பாட்டி யாரையும் விடாமல் தானேதான் போவார். தான் வயதானவர்தானே, தன்னை ஆமிக்காரன் சுட்டாலும் பரவாயில்லை என்பார். தவிரவும் யாராவது பெண்கள் உள்ளே சென்றால் அவர்களை என்ன செய்வார்கள் என்பதை நான் சொல்லத்தேவையில்லை. என் பாட்டி சிங்கள ராணுவத்தை “ஐயா” என்று தான் விழிப்பார். எனக்கென்றால் கோபம் தலைக்கேறும். ராணுவம் போனபின் நான் என் பாட்டியோடு, அவர் ஏன் சிங்கள ராணுவத்தை ஐயா என்று அழைக்க வேண்டும் என்று மல்லுக்கு நின்றதும் உண்டு.

ராணுவ சுற்றிவளைப்பு என்றால் அந்த நாட்களில் நான் என் வீட்டிற்கு முன்னால் இருந்த என் சிறியதாயாரின் வீட்டில்தான் இருப்பது வழக்கம். ராணுவம் வீட்டுக்குள் நுழைகிறது என்றவுடனேயே என் பாட்டி என் சிறியதாயாரின் குழந்தைகளில் ஒருவரை என் கைகளுக்குள் திணிப்பார். குழந்தையை வைத்திருந்தால் ராணுவம் என்னை ஒன்றும் செய்யாது என்பது என் பாட்டியின் அப்பாவித்தனமான கண்டுபிடிப்பு. இப்படித்தான் ஒருமுறை என் சிறிய தாயாரின் மகனை நான் என் கைகளில் வைத்திருக்க அந்த குழந்தை பாட்டுக்கு சிங்கள சிப்பாய் ஒன்றுடன் தன் பாஷையில் ஏதோ பேசத்தொடங்கிவிட்டது. குழந்தை சிப்பாயுடன் பேச சிப்பாய் என்னைப்பார்த்து நக்கலாய் சிரித்துக்கொண்டிருந்தான். எனக்கு பயம் ஒருபுறமும் எரிச்சல் ஒருபுறமுமாய் ஏறக்குறைய அழுகையே வந்துவிட்டது.

இப்படித்தான் ஒவ்வொரு முறை ராணுவம் சுற்றிவளைக்கும் போதும் செத்து செத்து பிழைத்திருக்கிறேன். என் அம்மாச்சி அந்த நாட்களில் நான் வீட்டிலிருக்கும் சந்தர்ப்பங்களில் என்னை, தலைமுடியைப் பின்னல் போடாதே, குடும்பி வைத்துக்கொள், ராணுவத்தின் பார்வையில் உறுத்துகிற மாதிரி நில்லாதே என்றெல்லாம் எனக்கு அறிவுரை செய்து என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருப்பார். இப்போது என் நினைவுகளை மீட்டிப்பார்த்தால்…. இன்றும் எங்கள் பாட்டிகள், தாய்மார்கள் ஈழத்தில் தங்கள் பேத்திகளை, மகள்களை சிங்கள ராணுவம் என்ற வெறிநாய்களிடமிருந்து காப்பாற்ற எப்படி எல்லாமோ போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் இரண்டு அமெரிக்கப் பெண்மணிகள் ஈழத்தமிழ்ப் பெண்கள் பற்றிச் சொன்ன கருத்துகள் ஏனோ இந்த சந்தர்ப்பத்தில் என் மனதில் வலியோடு இடறுகிறது. ஒருவர் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன். அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றியபோது சொன்னது, இலங்கையில் தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறை சிங்கள ராணுவத்தால் ஓர் ஆயுதமாக பாவிக்கப்பட்டிருக்கிறது. இன்னொருவர் மனித உரிமைகளுக்காக போராடுபவர், எலின் ஷாண்டர், சொன்னது இலங்கையில் வதை முகாம்களில் தமிழ்ப்பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கும், வன்முறைக்கும் ஆளாவது மட்டுமல்ல அவர்கள் நிர்வாணமாக அலையவிடப்பட்டிருக்கிறார்கள். எங்கள் சகோதரிகள் அம்மணக் கட்டைகளாக அலைந்தாலென்ன? இல்லை, அவர்கள் கரிக்கட்டைகளாய் எரிந்தால் தான் என்ன? நாங்கள் எங்கள் சுயநல சிந்தனையோடும், சுயமோகத்தோடும் சுரணையற்ற ஜென்மங்களாக உலாவருவோம்…… இதற்கெல்லாம் நாங்கள் வெட்கப்படுவோமா என்ன?
யாழ்ப்பாணம் வடமராட்சியில் ராணுவம் முகாமிற்குள் அடைபடுவதற்கு முன்னைய நாட்களில் சுற்றிவளைப்பின் போது அப்படி அவர்கள் என்னதான் செய்தார்கள் என்று யோசிக்கிறீர்களா? வேறொன்றுமில்லை, கொட்டியாவை (புலி) தேடுகிறோம் என்ற பெயரில் இளைஞர்களை கைது செய்வது, காணாமற்போகச்செய்வது, அங்கங்கே தமிழர்களின் உடமைகளை கொள்ளையடிப்பது, பெண்களை பலாத்காரம் செய்வது, கூட்டமாக வரிசையாக நிற்கவைத்து ஆண்களை சுட்டுக்கொல்வது இவையெல்லாம் தான்.

சுற்றிவளைப்பின் போது ஆண்களை வீடுவீடாக சென்று கைது செய்து மிருகங்கள் போல் கூட்டிச்சென்று தார் ரோட்டில் வெயிலில் உட்காரவைத்து, பிறகு அவர்களில் தரம்பிரித்து சிலரை வீட்டற்கு அனுப்பிவிட்டு மீதம் உள்ளவர்களில் சிலர் காணாமற்போயும், சிலர் படுகொலை செய்யப்பட்டும் பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் அரசபயங்கரவாதம் உலகத்தின் கண்களுக்கு தெரியாமலேயே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. என் உறவினர் ஒருவர், எனக்கு சிறிய தகப்பனார் முறை, அவருடைய பதிவுப்பெயர் “பகவத் சிங்”. அவர் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எல்லோருக்கும் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்களைத்தான் வைத்திருந்தார்கள். இவர் இலங்கை ராணுவத்திடம் மாட்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம் இவரின் பெயருக்காகவே தாக்கப்பட்டிருக்கிறார்.

அடையாள அட்டையில் இவரின் பெயரைப் பார்த்துவிட்டு ராணுவத்தால் பலமுறை தாக்கப்பட்டு முகம் உடம்பெல்லாம் வீங்கிப்போய் வீடு வந்திருக்கிறார். “என்ர பேரைப் பாத்தவுடனேயே என்னை அடிக்கத் தொடங்கி விடுறாங்கள்” என்று அவர் வேதனையோடு சொன்னதை என் காதுகளால் கேட்டிருக்கிறேன். பாடசாலை முடிகிற நேரங்களில் ராணுவம் ரோந்து போகிறதென்றால் எங்களை அழைத்துப்போக பாடசாலைக்கே வந்துவிட்டிருந்தவர். இறுதியில் ஓர் நாள் சிங்கள ராணுவத்தால் வரிசையாக நிற்கவைத்து சுட்டு கொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவர் ராணுவத்தால் சுற்றிவளைப்பின் போது அழைத்துச்செல்லப்பட்டுவிட்டார் என்று தெரிந்தவுடனேயே அவருக்கு என்ன நேரப்போகுதோ என்று பயந்தபடியே இருந்தோம். ராணுவ சுற்றிவளைப்பு முடிந்து இருட்டிய நேரம்தான் சொன்னார்கள் வாசகசாலையில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்று. அவர் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்கலாம் என்று வீட்டிளுள்ளவர்களோடு நானும் தெருவில் ஓட எத்தனித்த போது யாரோ என்னை தடுத்தார்கள். அங்கே ஒரே ரத்த சகதியாய் கிடக்கு. பெண்கள் அதைப்பார்த்தால் தாங்கமாட்டார்கள் என்றார்கள். என் சித்தப்பாவின் உடல் வீட்டிற்கு இறுதிக்கிரியைக்காக கூட கொண்டுவரப்படவில்லை.

இவரின் மற்ற சகோதரர்கள், ஒருவர் கடற்படையாலும் இன்னொருவர் ராணுவத்தாலும் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள். ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரரின் பெயர் சுகதேவ். இப்படி ராணுவம் வெறியாட்டம் போட்டுவிட்டு போன பின்பும் ஊர் முழுக்க ஒரே மரண ஒலமாகத்தானிருந்தது. பிள்ளைகளை, கணவன்மார்களை இழந்த தாய்களும், மனைவிமார்களும் சிங்கள ராணுவத்தை சாபம் போட்டு திட்டிக்கொண்டிருப்பார்கள். அழுது, அழுது ஓய்ந்து சக்தியற்றவர்களாக நடைப்பிணமாய் செய்வதறியாது திகைத்துப்போய் நின்றிருக்கிறார்கள். இப்படித்தான் ராணுவ சுற்றிவளைப்பு நடக்கப்போகிறது என்றாலே எங்களை மரணபயம் ஆட்டிவைக்கும். அப்போதே எங்களுக்கு ராணுவத்தின் கொடுமைகள் தாங்க முடியவில்லை.

ஆனால் இப்போதோ எங்கள் உறவுகள் ராணுவத்தால் சூழப்பட்டு அடிமைகளை விட மோசமாய், மிருகங்களை விட கேவலமாய் நடத்தப்பட்டு தாங்கொணா வேதனைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் விவரிக்க அகராதியில் சொற்களே இருக்காது என்றுதான் தோன்றுகிறது.

இப்படி சாட்சியே இன்றி ராணுவ அடக்குமுறைமூலம் அரசபயங்கரவாதம் எங்களை வதைத்துக் கொண்டிருந்தது. இப்போது இருப்பது போல் தொழில்நுட்ப வசதிகள் ஏதும் அந்த நாட்களில் இல்லாத காரணத்தாலோ என்னவோ எங்களுக்கு சிங்கள ராணுவத்தால் இழைக்கப்பட்ட கொடுமைகள் வெளியுலகத்திற்கு தெரியாமலேயே போனது. இப்படிப்பட்ட ராணுவம் முகாமிற்குள் அடைக்கப்பட்டால் நாங்கள் சந்தோசப்படுவோமா, மாட்டோமா? இவ்வாறாக அடைபட்ட ராணுவம் வெளியேற எடுத்த முயற்சி தான் ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation).

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

ஈழத்தின் நினைவுகள் – பாகம் -1

ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் ! பாகம் –2

ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி ! – பாகம் -3

பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !- பாகம் -4

  1. //இலங்கையில் மட்டும் தமிழினத்தை அழிக்கவென்றே சிங்கள ராணுவத்தை கட்டியெழுப்பி வைத்திருக்கிறார்கள்.//

    ரதி, சிங்கள இராணுவம் தமிழர்களை ”மட்டும்” தான் கொன்றிருக்கிறதா? சிங்களவர்களைக் கொன்றதேயில்லையா?

    • Sangu, கேள்வி எப்படிவேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் இந்த பதிவில் மறைந்துள்ள எழுத்தையும் மீறி நம் மனதைத்தாக்கும் கொடுமைகள் உங்களுக்குப் புரியவில்லையா என்ன? சிங்கள ராணுவம் அட்டூழியங்கள்(கற்பனைகெட்டாத வகையில்) செய்தது தமிழினத்துக்குத்தான், சிங்களத்துக்கு அல்ல. அப்படிப்பார்க்கும் போது, சிங்கள அரசு ராணுவத்தை ஊட்டி வளர்ப்பது தமிழினத்தை அழிக்கவேயன்றி வேறெதற்கு?

  2. .ரயாகரனின் வரட்டுவாதம் தோற்கடிக்கப்பட்டு ரதி எழுத வந்தது மகிழ்ச்சியே.

  3. இலங்கையில் இருப்பது ஜனநாயக அரசு அல்ல பாசிச வெறி பிடித்த அரசு.

    எந்த பிரச்சனையாக இருந்தாலும் பெண்கள் மீதான வன்முறை ஓர் ஆயுதமாகவே மேற்கொள்ள‌ப்படுகின்றன‌. பெரும்பாண்மையான ஒடுக்கப்படும் மக்களின் தொடர்ச்சியான‌ போராட்டகளே இதற்கான‌ தீர்வு.

  4. // இந்திய அமைதி காக்கும் படை (மன்னிக்கவும் எங்கள் அமைதியை அழித்த ராணுவம்) வரை

    நாங்கள் இந்தியர்கள் என்பதற்காகவா இந்த ” மன்னிக்கவும்” என்ற வார்த்தை!!! தேவை இல்லை தோழி…. உங்கள் அமைதியை குலைதவர்களை நீங்கள் எந்த தயக்கமும் இன்றி பதியலாம்……….

    சிந்தித்து பாருங்கள் இதையே நீங்கள் இரு இலங்கையனிடம் இலங்கை ராணுவத்தின் வெறியாட்டத்தை பேச நேர்ந்தால்… எத்தனை மனிப்பு கோர வேண்டியிருக்கும் என்று…..

    என் ராணுவம் உங்கள் அமைதியை குலைததற்கு நான் தான் உங்களிடம் மன்னிப்பு கேட்க்க வேண்டி இருக்கும்……..

  5. ரதி,

    நீங்கள் அனுபவித்ததை உள்ளத்தை தொடும் முறையில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். தொடருங்கள்!

  6. மீண்டும் வந்தமைக்கு பாராட்டுக்கள்

    இனியாவது இரையாகரனில் சிங்கள இரையாகமல் சொல்ல வந்ததை துணிவுடன் எழுதுங்கள்

    • எல்லாளன்
      புலிகளை விமரிசிப்பவர்களெல்லாம் சிங்கள இனவெறிக்கு துணை போகிறவர்கள் என்ற உங்கள் கருத்து தவறானது.

    • செப்.26‍-27 ல் தமிழரங்கத்தால் அழைக்கப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட புலி மற்றும் இலங்கை அரசு அல்லாதவர்கள், மக்களை நோக்கி செயல்படவேண்டிய ஒரு அரசியல் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.  

      • என்ன பேத்தல் இது… அது என்ன புலி மற்றும் அரசு இல்லாதவர்… அப்போ உலகம் பூராகவும் புலிக்கொடியோடு போராடிய ஆயிரக்கணக்கான தமிழர்களும் அரசும் ஒன்றா, ‘உள்ளூர்’ மக்களையே ஒதுக்கி வைத்து இவர்கள் 2 பேர்மட்டும் ‘உலக’மக்களிடம் போகப்போகிறார்களா? வறட்டுவாதம் வாழ்க… மார்க்சியம் ஒழிக….ஆர்பாட்டமான கட்டுரைகள் வாழ்க வாழ்க….அறிபூர்வமான நடைமுறை ஒழிக ஒழிக

      • உள்ளூர்ல விலை போகாத சரக்கை தூக்கிகிட்டு வெளியூறு ஓடுனானாம் வெள்ளச்சாமீங்கற ஒரு கேவலமான பழமொழி இப்போன்னு பாத்து நியாபகத்துக்கு வருது..சனியன்!

  7. பயத்திலும், பீதியிலும் கழியும் வாழ்க்கை மனச்சிதைவை நிரந்தரமாக்கி விடும். ராணுவ அடக்குமுறைகள் இந்தியாவிலும் ஏராளம் உள்ளன. காஷ்மீர் மக்கள் தினம் தினம் அனுபவிக்கும் கொடுமை இது. இந்த அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் எதிர்வினையும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. மக்களுடைய போராட்டம் அதற்கான காரணத்தோடு பத்திரிகைகளில் விரிவாக இடம் பிடிக்கறது. இலங்கையில் இவை இரண்டும் இல்லாததற்கான காரணம், இலங்கை ராணுவத்தின் கூடுதலான இனக் காழ்ப்புணர்வு. திட்டமிட்ட ரீதியில் ஒரு இனத்தை அழிப்பது, இரண்டாம் தர குடிமக்களாக அவர்களை மாற்றுவது. இது பாசிசத்தின் அஜெண்டா. மோடி, இதனை குஜராத்தில் ராணுவத்தின் துணை இல்லாமல், போலீசை வைத்து மட்டுமே முசுலிம்களுக்கு எதிராக சாதித்தது உலக பாசிட்களுக்கு புதிய நம்பிக்கை.

  8. Dei Rathi,
              Also write about LTTE fascism. 
              They are also not less devilish than SL Army.
     
              People in India can realise how it will be when we submit to some idiotic and stupid revolutionary, money extorting gangs like LTTE and Naxalites.

    • Capitalist,

      ரதி அவர்கள் எழுதுவது அவரின் அனுபவங்கள். சிங்கள இனவெறியர்கள் தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை எடுத்துரைக்கும் அவரின் அனுபவங்கள். புலிகள் ஏதேனும் கொடுமைகள் செய்திருந்தாலோ அதை ரதி பார்த்திருந்தாலோ தான் அதை பற்றி ரதி அவர்கள் எழுத முடியும். அதுவும் கூட நீர் அவரை எழுது என்று நிர்பந்தம் செய்வது உமது ஆதிக்கத்தனத்தை காட்டுகிறது. நீர் அப்படி அனுப்பப்பட்டிருந்தால் நீர் ‘புலிகளின் பாசிசம்’ என்று தனியாக கட்டுரை எழுதலாம். அதை வினவு தளம் தாராளமாக வெளியிடும்.

  9. ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து ஈழ பிரச்சனை / ராணுவம் செய்யும் கொடுமைகள் பற்றி எழுவது பொதுவாக மக்கள் மத்தியில் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தும்.அதுவும் மூன்று லட்சம் மக்கள் அனுபவித்து வரும் இந்த கொடிய துன்பமான இந்த நேரத்தில் பலரையும் அனுதாபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
    ஆசிரியர் குறிப்பிடுகின்ற “ஊரிக்காடு ” என்ற ஊர் ,வல்வெட்டித்துறை யை சேர்ந்தது. ” என் பாட்டி சிங்கள ராணுவத்தை “ஐயா” என்று தான் விழிப்பார். எனக்கென்றால் கோபம் தலைக்கேறும். ராணுவம் போனபின் நான் என் பாட்டியோடு, அவர் ஏன் சிங்கள ராணுவத்தை ஐயா என்று அழைக்க வேண்டும் என்று மல்லுக்கு நின்றதும் உண்டு” என எழுதுகிறார் ரதி. சாதி வெறிக்கு பேர் போன இடம் தான் வடமராச்சி .அங்குள்ள சிறு பிள்ளைகளும் தாழ்த்தபட்ட முதியவர்களை அவமரியாதையாக பேர் சொல்லியே அழைப்பார்கள் ( “கந்தா”,முருகா” )அதை யாரும் அவமரியாதையாக கருதுவது கிடையாது .அது அவர்களுக்கு “இயல்பானது ” ! குறிப்பாக பெண்கள் வசவு புகழ் பெற்றது .பெண்களின் சாதி திமிரு அதைவிட புகழ் பெற்றது .தமிழகத்தின் தேவர் சாதி பெண்களின் வாய் கொழுப்புக்கு ஒன்றும் குறைந்ததல்ல . இந்த சாதி வாய் கொழுப்புக்கு செம அடி கொடுத்து அடக்கியது தோழர் .நா.ஷன்முகதாசன் தலைமையில் போராடிய கம்யூனிஸ்ட் கட்சி.கடத்தல் காரர்களின் தலைநகரம் தான் வல்வெட்டித்துறை .சாதியில் அவர்களை ” கரையார் ” என்றே அழைப்பார்கள் . கடத்தல் தொழில் (எமக்கு தொழில் கவிதை என்றானே பாரதி !!) செய்யும் கரையார் மீன் பிடிக்கும் மீனவர்களை ” கரையார் ” என்று அழைப்பது அங்குள்ள வேடிக்கை. ஏன் என்றால் பொருளாதரத்தில் இளைத்தவர்கள் .உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் . கடத்தலை தடை செய்வது என்பது உலகில் உள்ள எல்லா அரசாங்கங்களும் செய்யும் காரியம் தான் .அதைத்தான் இலங்கை அரசும் செய்தது.கடத்தல் காரர்களை கண் கணிக்கவே ஆர்மி கேம்ப் ஒன்று வல்வெட்டி துறையில் போடப்பட்டது . இப்படியான கடத்தல் மன்னர்களில் ஒருவர் தான் குட்டி மணி .பின்னாளில் இவர் பெரிய அரசியல் வாதி ஆக்கப்பட்டார்.

    இன்று நடந்து முடிந்துள்ள கொடுமைகளுக்கு எல்லாம் இரு பக்கமும் (சிங்கள /தமிழ் )உள்ள இனவாதிகளே காரணம் .அவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.தமிழீழம் என்ற கோஷம் வைக்கப்பட்ட போது 1976இல் அதை எதிர்த்து தோழர் .நா.ஷன்முகதாசன் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணிஇன தலைவர் தா.அமிர்தலிங்கம் பங்கு கொண்டு பகிரங்கமாக பட்டி மன்றம் நடாத்தினர்.தோழர் .நா.ஷன்முகதாசன் தமிழீழம் சாத்தியமற்ற ஒன்று அறுதியிட்டு பேசினார். நடுவர் இறுதியில் தனது தீர்ப்பில் “தமிழீழம் சாத்தியமற்ற ஒன்று ” என்று தீர்ப்பு கூறினார்.

    இந்த தொடரை எழுதுபவருக்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது .பெண் என்பதால் இறக்கம் காட்டுவதோ அல்லது அவர்களது அறியாமைகளை விமர்சித்தால் மட்ரவரை அவமதிப்பதும் ஆரோக்கியமானதல்ல .

    அறிவில்லாமல் மக்களை வெறும் தமிழ் உணர்ச்சியில் ஒரு பக்கமும் சிங்கள உணர்ச்சியில் மறு பக்கமும் அமுக்கியதன் பலாபலன்களை இன்று கண் முன்னே கான்கிறோம் .சிங்கள/தமிழ் என்ற உணர்ச்சியை விட வர்க்கம் என்ற ஒன்றும் உள்ளது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.

    வினவு போன்ற முற்போக்கான தளங்கள் அவற்றை ஊக்குவிக்க வேண்டுகிறேன்

  10. அன்புள்ள தோழர்களுக்கு,

    அதிரடியான் என்பவர் பொய்களையும்,அவதூறுகளையும் அள்ளி வீசி தனது கட்டுரைகளை கீற்று தளத்தில் வெளியிட்டு வந்தார். கீற்று தளமும் இதனை ஒரு உள்நோக்கத்துடனும்,வண்மத்துடனும் வெளியிட்டு வந்தது. இந்நிலையில் நாம் அவரை விவாதிக்க அழைப்பதன் மூலம் அவரை பொது தளத்தில் வைத்து அம்பலமாக்கலாம் என்று கருதி அழைத்தோம். இவருடனான விவாதத்தை தோழர்கள் கவனித்திருப்பீர்கள்.நமது பல்வேறு கேள்விகளுக்கும் தனது தரப்பிலிருந்து இவர் மழுப்பலான பதில்களையே தந்தார்.சிலவற்றை ‘கண்டுகொள்ளாமல்’ கடந்தும் சென்றார்.சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி,கேட்டதையே திரும்பத் திரும்ப கேட்டு அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார்.(அந்த அழகை பார்க்க வேண்டும் என்றால் இந்த விவாத சுட்டியில் சென்று அவருடைய விவாததின் தரத்தை காணுங்கள்-http://vrinternationalists.wordpress.com/2009/09/28/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99/#comment-404) போதை ஏறிய‌ ஒரு மதவாதியை போன்று முரட்டுத்தனமான தமிழ்தேசிய போதையை ஏற்றிக் கொண்ட‌ நபராக இருக்கும் இவரிடம் நாம் எவ்வளவு விளக்கம் கூறினாலும்,தெளிவு படுத்தினாலும் அது அவருடைய‌ மண்டையில் நிச்சயமாக ஏறப்போவதில்லை.கருத்துக்களை நேர்மையாக‌ அலசி ஆராயும் நாணயமும் இவரிடம் இல்லை.சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையைப் போல பழைய பாட்டையே பாடிக்கொண்டிருக்கிறார்.விவாதத்தில் இவருடைய தரப்பில் அரசியல் ரீதியான விமர்சனங்கள் எதுவும் இன்றி எனக்கும் மார்க்ஸியம் தெரியும் என்று மார்தட்டும் போக்கு தான் உள்ளது.அதுவும் அரை குறையாக தெரிந்து கொண்டு விவாதிக்கிறார்.அதற்கு லெனின் மேற்கோளை காட்டியதே உதாரணம்.

    இவர் தன்னை எந்த அமைப்பையும் சாராத நபர்,பொதுவான தமிழ் தேசிய ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்கிறார், இது ஒரு பொய் ! கூச்சமின்றி சொல்லும் பச்சைப் பொய்! இவர் ஓடுகாலிகளான த.நா.மா.லெ.க‌ அமைப்பை சேர்ந்தவர். தன்னுடைய அமைப்பு எது என்று கூட‌ சொல்லிக்கொள்ள துணிவில்லாத‌ அநாமதேயங்களுடன் விவாதிப்பது என்பது நாம் அவர்களுக்கு வழங்கும் அங்கீகாரமாகும்.நாம் மிகவு அவசரப்பட்டு இவரை விவாதிக்க அழைத்து விட்டோம், அது மிகவும் தவறான முடிவு என்பதை தற்போது உணர்கிறோம். இனிமேல் வேறு எந்த தோழர்களும் இந்த தவறை செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். முகவரியே இல்லாத நேர்மையும் இல்லாத இந்த நபருடன் விவாதிப்பது என்பது யார் என்றே தெரியாத அநாமதேயமான இவரை பெரிய ஆள் ஆக்குவதும், அங்கீகரிப்பதுமாகும் என்று கருதுகிறோம்.

    நாம் இவரை வென்றெடுக்கப் போவதில்லை,இவரும் நம்மை வென்றெடுக்கப் போவதில்லை. எனவே நாம் நமது நேரத்தை இவருடன் மல்லுக்கட்டி வீணடிக்காமல் இவரை புறக்கணிப்பதையே சரி என்று கருதுகிறோம். இதனால் நாம் ஓடிவிட்டோம் என்றும் பயந்து விட்டோம் என்றும் அவர் கீற்றில் போய் கூப்பாடு போடலாம். எனினும் நாம் அதையெல்லாம் சட்டை செய்யாமல் இவரை புறங்கையால் ஒதுக்கித்தள்ளிவிட்டு வேறு வேலைகளை பார்ப்பது தான் சரி என்று கருதுகிறோம்.

    சில தோழர்களுக்கு எமது இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளிக்கலாம். தோழர் வினவு இரண்டு நாட்களுக்கு முன்பு எமது தளத்தில் ஒரு பின்னூட்டதை இட்டுள்ளார். ஆனால் நாம் அதன் காரணமாக இந்த முடிவிற்கு வரவில்லை,நமது ஆழமான‌ பரிசீலனையே இந்த முடிவிற்கு காரணம். விவாதத்தின் இடையிலேயே இது பயனுள்ளதா என்கிற பரிசீலனைக்குள் போய் விட்டோம். தோழர் வினவின் பின்னூடம் முடிவை எடுக்க வைத்துள்ளது. இது சரியான முடிவு தான் என்று கருதுகிறோம்.எமது இந்த முடிவு சரியா தவறா என்று பிற‌ தோழர்கள் கருத்து சொல்லுங்கள்.

  11. தோழர் கீழ்கண்ட பிரச்சனை பற்றி வினவில் ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.

    http://inioru.com/?p=6163

    அன்புள்ள எஸ்.வி.ஆர். அவர்களுக்கு வணக்கம்.

    S.V.Rajadurai இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஜெர்மனியை தளமாகக் கொண்ட இயங்கும் ஐ.என்.எஸ்.டி எனும் தன்னார்வ அரசு சாரா நிறுவனத்தின் அனுசரணையில் திருவனந்தபுரத்தில் நடந்த மாநாட்டில் தாங்கள் சிறப்புரை ஆற்றினீர்கள் (எதுவரை – செப்டம்பர்-அக்டோபர் – 2009) என்பதைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன்.

    இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை எனச் சொல்கிற சுசீந்திரனின் முன்முயற்சியில் நடைபெற்ற நிகழ்வுதான் திருவனந்தபுரம் கூட்டம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நான் நம்புகிறேன்.

    இந்து பத்திரிக்கையின் என்.ராமினாலும், சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பியினாலும் தகவமைக்கப்பட்ட இலங்கை குறித்த அரசியல் பார்வை கொண்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்களான ச.தமிழ்ச் செல்வன், ஆதவன் தீட்சண்யா போன்றவர்களோடு திருவனந்தபுரம் கூட்டத் தளத்தை நீங்கள் பயன்படுத்தியிருந்தீர்கள் என அறிந்தபோது மேலும் அதிர்ந்து போனேன்.

    மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலங்கை சார்ந்த நிலைபாட்டுக்கு ஆதரவாக, சுசீந்திரன் போன்றவர்களை முன்வைத்து, இவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் நீங்கள் அறியாதவரல்ல என நினைக்கிறேன். இலங்கை அரசின்பாலான ஒரு மென்மையான நிலைபாட்டுடன் விடுதலைப் புலிகளை மட்டுமே நடந்து முடிந்த கொலைகளுக்குக் காரணமாக நிறுத்துகின்ற அரசியலை சுசீந்திரன் போன்றவர்கள் முன்வைத்து வருகிறார்கள். இந்த அரசியலைத் தமிழகத்தில் முன்னெடுத்து வருகிறவர் அ.மார்க்ஸ் என்பதையும் தாங்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை.

    இலங்கை பற்றிய, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலுக்குகந்த வகையிலான சுசீந்திரன் போன்றவர்களின் நேர்முகங்களையும், இவர்களுக்கு ஆதரவாக அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினது ஆதவன் தீட்சண்யா அங்கம் வகிக்கிற புதுவிசையில் அவர்தம் கட்சியினது அரசியல் பிரச்சாரத்தின் பகுதியாக வெளியிட்டார்கள் என்பதனையும் தாங்கள் அறிந்தே இருப்பீர்கள்.

    சுசீந்திரன் தனது தன்னார்வ நிறுவன அரசியலுக்கும், தனது இலங்கை அரசின்சார்பு அரசியலுக்கும் ஒரே தளத்தில் தங்களையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இணைத்திருக்கிறார் என்பதுதான் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்கிற சுசீந்திரன் கூட்டிய திருவனந்தபுரம் மாநாட்டில் தாங்கள் ஏன் கலந்து கொண்டீர்கள் எனச் சொல்வீர்களா?

    அன்று முதல் இன்று வரை இலங்கை அரசு சார்பான இந்து என்.ராமினதும், சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பியினதும் அரசியலையுமே முன்னெடுக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினது எழுத்தாளர்களுக்கும் தங்களுக்குமான, அக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான, பொதுக் காரணிகள் என்ன எனச் சொல்வீர்களா?

    தன்னார்வ மற்றும் அரசு சாரா அமைப்புகளின் அரசியல் பற்றித் தாங்கள் அறியாதிருப்பீர்கள் என நான் நம்பவில்லை. உலகெங்கிலும் புரட்சிகர அரசியல் முன்னெடுக்கப்படாது முடக்குவதும், அமெரிக்க ஐரோப்பிய பாணியிலான ஜனநாயகத்தையும் சிவில் சமூகத்தையும் அமைப்பதுமே அவர்களது அரசியல் என்பதையும் தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

    ஐ.என்.எஸ்.டி எனும் அமைப்பு ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வ அரசு சாரா அமைப்பு. இந்த அமைப்பு இலங்கை அரசியலும் இனப்பிரச்சினையும் தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. கருத்தரங்குகள் ஜெர்மனியின் பேட் போல் நகரில் அமைந்துள்ள பிராதஸ்தாந்து கிறித்தவ அமைப்பான எவாஞ்ஜலிக் அகாதமி துணையுடன் நடத்தப்பட்டு வருகிறது. Aadhavan

    ஐ.என்.எஸ்.டி அமைப்புக்காக சலுகையில் இக்கருத்தரங்குகளை இந்த அமைப்பு நடத்துகிறது. இக்கருத்தரங்கு தொடர்பு முகவரியாகவும் இந்த அமைப்பினது முகவரியே இக்கருத்தரங்க அழைப்பிதழில் உள்ளது.

    உலக தேவாலயக் கூட்டமைப்பிலும் எவாஞ்ஜலிக்கா அகாதமி அங்கம் வகிக்கிறது. ஜெர்மானிய அரசு, இலங்கை அரசு, அரசு சாரா அமைப்புக்கள், பிற ஈடுபாடுள்ள குழுக்கள் போன்றவற்றுக்கு இடையில் புரிந்துணர்வுக்காகவும் ஒத்துழைப்புக்காகவும் இக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. ஜெர்மனியிருந்தும், இலங்கையிலிருந்தும், உலகெங்கிலுமிருந்தும் ஐரோப்பியர்களும் ஆசியர்களும் இக்கருத்தரங்ககளில் பங்கு பெறுகிறார்கள்.

    மேலும் ஜெர்மனியிலும் உலகெங்கிலும் பிராதஸ்தாந்து அறத்தைப் பரப்புவதன் ஒரு பகுதியாகவே இந்தக் கருத்தரங்குகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது.

    மார்க்ஸியர்களும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்களும் தன்னார்வ அமைப்புக்களின் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் போது எழுப்பப்படும் கேள்விகளையே தங்கள் முன்பாகவும், தங்களோடு அக்கூட்டத்தில் பங்கு பற்றிய, தன்னார்வ நிறுவனங்கள் குறித்து புரட்சிகரமான அறம் பேசுகிற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்களான ச.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆதவன் தீட்சண்யா முன்பாகவும் முன் வைக்கிறேன்.

    தன்னார்வ நிறுவனங்கள் என்கிறபோது அதனது நிதியாதாரம் பற்றிய கேள்விகளை இடதுசாரிகளும் மார்க்சியர்களும் எழுப்புவது தவிர்க்க இயலாதது. பெருமளவிலான நிதிச்செலவுகளோடுவும் பயணச் செலவுகளோடும் உலகெங்கிலும் கருத்தரங்குகளை நடத்தும் ஐ.என்.எஸ்.டியின் நிதியாதாரம் குறித்த ஒரு ஆர்வலரின் கேள்விக்கு ஐ.என்.எஸ்.டி தளத்தில் பதில் சொல்லப் பட்டிருக்கிறது. இலங்கை அரசின் நிதியாதாரத்தில் ஐ.என்.எஸ்.டி இயங்குகிறது என்பது குற்றச்சாட்டு. இலங்கை அரசின் பணத்திலோ அல்லது விடுதலைப் புலிகள் பணத்திலோ ஐ.என்.எஸ்.டி இயங்கவில்லை எனப் பதில் தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமாக இதில் ஐ.என்.எஸ்.டியின் நிதியாதாரம் குறித்த பதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

    எவாஞ்ஜலிகல் அகாதமியாவின் உறவு, நிதி தொடர்பாக எழுந்திருக்கும் கேள்விகள், தமிழர்கள் மீதான இனப்படுகொலை எனச் சிக்கலானதொரு சூழ்நிலையில் தன்னார்வ மற்றும் அரசு சாரா நிறுவனமான ஐ.என்.எஸ்.டி நடத்திய கருத்தரங்கில், மார்க்சியராகத் தம்மை முன்னிறுத்தும் தாங்கள் கலந்து கொண்டதற்கான நிதி ஆதாரம் குறித்த தெளிவுறுத்தலையும், நியாயப்பாட்டையும் அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, தாங்கள் முன்வைக்க வேண்டும்.

    உலகெங்கிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தமது உரிமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இவ்வாறான மக்கள் இயக்கங்களை வழிநடத்துகிறவர்கள், நிறைய அரசியல் தவறுகளும் செய்கிறார்கள்.

    மதவழி நின்று இதனை அணுகுகிறவர்கள் இருக்கிறார்கள். வஹாபிசத்தையும் பிராதஸ்தாந்து அணுகுமுறையையும் இந்துத்துவ அணுகுமுறையையும் தீர்வாக முன்வைக்கிற அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். மார்க்சியர்கள் எனத் தம்மைக் கருதிக் கொள்கிறவர்கள் இவ்வழிகளில் பிரச்சினைக்கான தீர்வுகளை முயல்வதில்லை .

    அப்படி எனில், அன்புள்ள எஸ்.வி. ஆர். அவர்களே, தன்னார்வ மற்றும் அரசு சாரா நிறுவனமான ஐ.என்.எஸ்.டி நடத்திய இலங்கைத் தமிழர் தொடர்பான திருவனந்தபுரக் கூட்டப் பங்கேற்பை மார்க்சியர்களாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் தாங்களோ, தங்களோடு கூட்டத்தில் கலந்துகொண்ட ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் எவ்வகையில் நியாயப்படுத்த முடியும் எனக் கருதுகிறீர்கள்?

    தமிழ்செல்வனுக்கும், ஆதவன் தீட்சண்யாவுக்கும் ஒரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உலக தன்னார்வ அரசு சாரா நிறுவனங்களின் எதிர்ப்புரட்சி அரசியல் பற்றி ஒரு நூலையே எழுதியிருக்கிறார்.

    புS.Tamilselvanரட்சியாளர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் ச.தமிழ்ச்செல்வனும் ஆதவன் தீட்சண்யாவும், இலங்கை அரசு சார்பான, தன்னார்வ அரசு சாரா நிறுவனக் கருத்தரங்கில் கலந்து கொண்ட தங்கள் நடத்தைக்கு என்ன காரணத்தை முன்வைக்கிறீர்கள்?

    அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, இறுதியாக ஒரு முக்கியமான கேள்வி. தாங்கள் இலங்கை அரசைக் கடுமையாக எதிர்த்து வருகிறீர்கள். ஐ.என்.எஸ்.டி நடத்தி வரும் இலங்கை தொடர்பான கருத்தரங்குகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வரும் பத்திரிக்கையாளர் பௌஸர் என்பவர் யார் எனத் தங்களுக்குத் தெரியுமா?

    அவர் இலங்கை அரசுடன் செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பி செயலர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஐரோப்பியப் பிரதிநிதிகளில் ஒருவர் என்பது தங்களுக்குத் தெரியுமா?

    பௌஸர் ஆசிரியராக இருந்து நடத்தும் “எதுவரை” இதழில்தான் உங்கள் திருவனந்தபுரச் சிறப்புரை பற்றிய செய்தி வந்ததும், வேறு எந்த இலங்கைத்தமிழ் பத்திரிக்கைகளிலும், ஐ.என்.எஸ்.டி தளம் உள்பட படத்துடன் அந்தச் செய்தி வரவில்லை என்பதும் தங்களுக்குத் தெரியுமா?

    பௌஸர் பெயரிலோ, சுசீந்திரன் பெயரிலோ அக்கட்டுரை வராமல் தாஸ் எனும் அநாமதேயத்தின் பெயரில் அக்கட்டுரை வெளியாகி இருக்கிறது என்பதனையும் தாங்கள் அறிவீர்களா?

    தோழர் எஸ்.வி.ஆர். அவர்களே, இலங்கை அரசு சார்பான கொள்கையுடைய தன்னார்வ அரசு சாரா நிறுவனமொன்று இலங்கை அரசியல் தொடர்பாக நடத்தியிருக்கிற திருவனந்தபுரம் கருத்தரங்கில் நீங்கள் கலந்து கொண்டிருப்பதானது தாங்கள் இதுவரை பேசி வந்திருக்கிற புரட்சிகர மார்க்சியத்துக்கு ஒரு களங்கம் என்றே நான் நினைக்கிறேன்.

    இது பற்றி எங்களுக்குச் சொல்ல நீங்கள் என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்?

    மற்றபடி என்றும் போல அன்புடன்,
    அசோக் யோகன்

    http://inioru.com/?p=6163
    

  12. மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தி ஈழத்தமிழர்களின் முகத்திலறைந்த தமிழ்நாட்டுத் தமிழர்கள்.

    ஒருவரை வாழ்த்தி அல்லது அல்லது அவர் செய்த நற்செயல்களைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்துவது தான் தமிழர் மரபு. அப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் தலைவர்கள், மகிந்த ஈழத்தமிழர்களைக் கொன்றதைப் பாராட்டுகிறார்களா? அதற்காக வாழ்த்துகிறார்களா? அல்லது எதற்காக பொன்னாடை போற்றினார்கள்.

    பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது சகோதரர்களைப் பார்க்க, அனுமதி பெற்றுச் செல்லும் எவனாவது, அவனைச் சிறைப்பிடித்து வைத்திருப்பவனைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கட்டியணைத்து, பசப்பு வார்த்தை பேசுவதுண்டா? சிறையிலிருக்கும் உறவினர்களைப் பார்க்கப் போகிறவர்கள், சிறையின் வார்டனுக்கு பொன்னாடையணிவிக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூடத் தெரியவில்லை.

    இந்த இந்தியத் தமிழர்கள், ஈழத்தமிழர்களை உண்மையாகச் சகோதரர்களாக எண்ணினால், அவர்களின் நலன்களின் அக்கறையிருந்தால், பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களைப் பார்த்து விட்டு, இந்தப் பொன்னாடை, பன்னாடை எல்லாம் போர்த்திக் கொஞ்சிக் குலாவாமல், வெளியேறியிருக்கலாம். அதற்குப் பதிலாக, ஈழத்தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், யாரால் ஈழத்தமிழர்களின் குழந்தைகளும், உறவுகளும், எந்தவித உலக சட்டங்களையும் கருத்தில் கொள்ளாமல், அழிக்கப்பட்டனரோ அவர்களுக்கே தங்கள் கைகளால் பொன்னாடை போர்த்தி, ஈழத்தமிழர்களின் முகத்தில் ஓங்கி அறைந்து விட்டனர்.

    இந்தப் பொன்னாடை ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்குச் சிறிதும் மதிக்களிக்காமல், அவர்களைச் சீண்டிப் பார்ப்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம் போல் தான் தோன்றுகிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் தான் முகாம்களிலுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுமாறு கேட்கிறார்கள். அந்த வெள்ளைக்காரர்கள் கூட தமது கசப்புணர்வைக் காட்டும் வகையில் மகிந்தவுக்கு எந்தவிதமான பந்தாவும் செய்வதில்லை. அது மட்டுமல்ல, பல ,மேற்குலக நாடுகளின் தலைவர்கள் இலங்கை ஜனாதிபதியை தமது நாடுகளுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதையும் நிறுத்திக் கொண்டனர். ஈரான், லிபியா, கியூபாவை விட்டால் மகிந்தவை அழைக்க எந்த மேலைநாடுகளும் தயாராக இல்லை. மகிந்தவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டால் கூட, ஈழத்தமிழர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து, அவர்களின் வாக்குகளை இழந்து விடுவோமோ என்ற பயம் பல வெள்ளைக்கார அரசியல்வாதிகளுக்கு.

    இலங்கை ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் கூட்டத்துக்குப் போகாததன் காரணமே மேலை நாடுகளின்
    தலைவர்கள் முகத்தைச் சுழிப்பார்கள், அல்லது மகிந்தவின் சந்திப்பை வேண்டுமென்றே (snubbing) தவிர்த்துக் கொள்வார்கள், அல்லது ,முகாம்களிலுள்ள தமிழர்களின் விடுதலை பற்றி ஏடாகூடமாக ஏதாவது கேட்டு விடுவார்கள் என்ற பயத்தினால் தான். அப்படியிருக்க, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இவ்வளவு நெருக்கமாகக் கொஞ்சிக் குலாவுகின்றனர். தமிழ்நாட்டுத் தமிழர்கள் இதைப்பற்றிப் பெரிது படுத்த மாட்டார்கள், அல்லது தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் ஈழத்தமிழர்களுக்காகப் பெரியளவில் ஆதரவில்லை என்பதால் தான், அவர்கள் துணிந்து இப்படியொரு காரியத்தைச் செய்திருக்க முடியும்.

    தமிழ்நாட்டவர்களுக்கு உண்மையில் ஈழத்தமிழர்களின் மீது அக்கறையிருந்தால், இந்த்ப் பொன்னாடை தவிர்த்திருக்க வேண்டிய, தேவையில்லாத விடயம். மகிந்தவுக்குப் பொன்னாடை போர்த்தியவர்கள், ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக அதிகளவு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் சம்பந்தனுக்கும் ஒரு மலிவான, சின்னத்துண்டு பொன்னாடையாவது போர்த்தியிருந்தால், வெறும் சம்பிரதாயத்துக்காகத் தான் தமிழர்கள் பொன்னாடை போர்த்துவது வழக்கம் என்று, தமிழ்நாட்டுத் தலைவர்களை ஜோக்கர்கள் எனக் கூறி, எங்களை நக்கலடிக்கும் சிங்களவர்களிடம் நாங்களும் சப்பைக்கட்டுக் கட்டியிருக்கலாம்.

    Photo link http://www.asiantribune.com/sites/asiantribune.com/files/06_0.jpg

    • வணக்கம்
      தாங்கள் எவ்வகையில் ரயாகரனை வரட்டுவாதி என்று விமர்சிப்பதை அனுமதிப்பீர்கள்?
      வர்க்க உறவை மறுப்பது மார்க்சீயமா? வர்க்க உறவை பார் என்பது வரட்டுவாதமா?
      உங்களை விமர்சித்தால் உளவாளி அல்லது திரிபுவாதி அல்லது ஓடுகாலி என்ற பட்டம் இருக்கின்றது உங்களிடம் நல்லது தமிழகத் தோழர்களே சரியான மார்க்சீயத்தை ஏற்றுமதி செய்யுங்கள்.
      கொசிப்பு அடங்கும் வரை ரயாவைத் திட்ட அனுமதியுங்கள்.

      மற்றவர்களை வரட்டுவாதிகள் என்று கூறும் நீங்கள் ஏன் உளவாளியாக இருக்க முடியாது.
      ஏன் இந்திய மண்ணில் இருந்து உளவாளிகளாக சேகர் புளொட் அமைப்புடன் இருந்து செயற்பட்ட உளவாளி சாத்திரி என்பவர் இபிஆர்டஎல்எவ் இருந்து உளவாளியாக மாறிய புத்திஜீவி. இவ்வாறு தாங்களும் ம.கா.இ.காவில் உள்ள அரச உளவாளியாக இருக்கலாம் அல்லவா? ரயாவை அன்னியப்படுத்துவதே உங்கள் குறிக்கோளாக இருக்கின்றது.
      மக்களை ஒடுக்குபவனுக்கு ரயாவையும் ஒடுக்குவதே தேவையானது தானே. அதைத்தான் நீங்கள் செய்கின்றீர்கள்.

      உளவாளிகள் இப்போக எங்கும் இருக்கின்றார்கள்.

  13. வதை முகாம்களில் தமிழ்ப்பெண்கள்
    மார்ச் 8 1995
    புலிகளிடமுள்ள கைதிகள் பற்றிய விவரங்களின் தொகுப்பு 5-10 வரையான எமது அறிக்கைகளில் வெளிவந்தது. கொடூரமாகவும் தரக்குறைவாகவும் கைதிகள் நடத்தப்படுவதன் கருத்தியல் பின்னணி பற்றியும் இவ்வறிக்கைகளில் அலசப்பட்டது. புலிகள் மக்கள்பாலும் தமது இயக்க உறுப்பினர்கள் தொடர்பாகவும் கொண்டுள்ள மனோபாவம் புலிகளது சமூகப்பார்வை பற்றிய வினாக்களை எழுப்புகிறது.

    முழுமையான மேற்கண்ட குறிப்பை படிக்க

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6335:2009-10-19-19-02-32&catid=291:2009-02-23-21-05-22

    புளட் இயக்கத்தின்; சித்திரவதைக் கூடங்களில் குறிப்புகளை சித்திரவதைக்குள்ளான போராளி ஒருவரின் நினைவுகளிலிருந்து குறிப்புகளை விரைவில் தர முனைகிறோம்.

Leave a Reply to அஸ்கர்  பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க