privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!

சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!

-

vote-012“என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை” என்ற ரொமான்டிக்கான தலைப்பில், சென்னை மாநகரத்தில்  ஒரு கூட்டம் நடக்கப் போகிறதாம். பெயர் வைக்கும் உரிமையை நமக்குக் கொடுத்திருப்பதால் ஒரே ஒரு சொல்லை மட்டும் இந்த தலைப்பில் சேர்க்க விரும்புகிறோம். “என் கவிதைகளுக்கு கம்யூனிசத்தை எதிர்த்தல் என்று பெயர் வை” என்பதே அவர்கள் சொல்லத் தயங்குகின்ற உண்மையான தலைப்பு.

எதற்கு இந்தக் கூட்டம்? உலகின் அழகிய முதல் பெண்ணும், பெண் படைப்பாளிகளின் ஏகப் பிரதிநிதியுமான லீனா மணிமேகலை எனும் பெயர் தாங்கிய சீமாட்டியின் கவிதைகளுக்காக அவர் மீது வழக்கு போடச்சொல்லி இந்து மக்கள் கட்சியின் யாரோ ஒரு தல போலீசில் பெட்டிசன் கொடுத்தானாம். அந்தப் புகார் மீது போலீசு எப்.ஐ.ஆர் கூடப் போடாமல், அந்தக் காகிதத்தைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது.

போடாத அந்த வழக்கின் விளைவாக பெண் படைப்பாளிகளுக்கு நேரக்கூடிய ஆபத்து பற்றி மீடியாவில் கவரேஜ். ஏனென்றால் இந்து மக்கள் கட்சி ஸ்ரீமான்கள், கவிதாயினியாகிய ஸ்ரீமாட்டி ஆகிய ரெண்டு தரப்புக்குமே மீடியாவில் ஆள் உண்டு. இப்படியாக கமிசனர் ஆபீஸ் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட புகார் வரலாற்று ஆவணமாகிவிட்டது.

பெண் படைப்பாளிகளுக்கு நேர்ந்திருக்கும் இந்த ஆபத்து இணையம் வரைக்கும் வந்துவிட்டதாம். அதனை எப்படியாவது தடுத்து நிறுத்துவதற்காக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். தனக்கு ஏற்பட்ட ஆபத்தை ஒண்டியாக நின்று சமாளிக்கும் கலை தெரியாதவரல்ல சீமாட்டி. அவருக்கு பெரிய்ய்ய இடத்திலெல்லாம் ஆள் இருக்கிறது. என்ற போதிலும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு 20, 30 அறிஞர்களை பக்கவாத்தியம் வாசிக்க வைத்தால், அப்படியே தானும் ஒரு பாடகியாக (படைப்பாளி) அரங்கேற்றம் பெற்று விடலாம் என்பது சீமாட்டியின் திட்டமாக இருக்கக் கூடும். பக்கவாத்தியக் கலைஞர்கள் இந்த மேட்டர் புரிந்துதான் போகிறார்களா என்று தெரியவில்லை.

சரி. மெய் உலகில் இந்து மக்கள் கட்சியால் ஆபத்து. மெய்நிகர் உலகில் யாரால் ஆபத்து? சீமாட்டியோ அவரது படைப்பு உரிமைக்கு காவல் நிற்கும் ஸ்ரீமான்களோ அதனை வெளிப்படையாகச் சொல்லவில்லை. கவிதாயினி என்பதால் தனது உதடுகளுக்குள் அந்த கவித்துவ உண்மையை அவர் ஒளித்து வைத்திருக்கக் கூடும்.

அந்தச் சொல் வினவு.

லீனா மணிமேகலை – ஷோபாசக்தி – செங்கடல் விவகாரம் குறித்து முதன்முதலில் வினவு தளத்தில்தான் எழுதினோம். தினத்தந்தி கிரைம் நியூஸ் பகுதியின் வாயிலாகத்தான் லீனா என்ற படைப்பாளி எங்களுக்கு அறிமுகமானார். செங்கடல் என்ற ஆவணப்படத்தின் படப்பிடிப்புக்குப் பின், தமக்குரிய பேட்டாவை ஒரு வாரமாக கேட்டும் பெறமுடியாத தொழிலாளிகள் படப்பதிவை எடுத்துச் சென்றுவிட்டனர்.  தீபக் என்ற தொழிலாளிதான் (காமெரா அசிஸ்டென்ட்)  இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டி, மேற்படி படைப்பாளிகள் தீபக்கைத் தாக்கினர். தீபக் போலீசிலும், தனது தொழிற்சங்கத்திலும் புகார் கொடுத்தார். மேலிடத்துத் தொடர்புகளைப் பயன்படுத்தி, சிறைக்குப் போகாமல் ஃபைன் மட்டும் கட்டிவிட்டு, எஸ்கேப் ஆனார்கள் இந்தப் படைப்பாளிகள்.

சம்பள பாக்கியோ வேறு வில்லங்கங்களோ இருந்தால், பாக்கியைக் கொடுக்கும் வரை படச்சுருளை லேப் இலேயே முடக்கி வைப்பது திரையுலகின் விதி. பிரசாத் லேப் முதலாளியாக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார். தொழிலாளியை அடித்த படைப்பாளிகள் அந்த முதலாளியை அடித்திருப்பார்களா?

அம்மையாரின் படைப்புத்திறனால் பாதிக்கப்பட்டவர் தீபக் மட்டுமல்ல, இன்னும் பலர் என்ற விவகாரமும் தெரிய வந்தது.  எழுதினோம். கேஸ் போடுவேன் என்று மிரட்டினார் சீமாட்டி. பணத்தைப் பறிகொடுத்த ஈழத்தமிழர் லீனா செய்த மோசடியை தேசம் நெற் தளத்தில் எழுதி, “தைரியமிருந்தால் கேஸ் போடு” என்றார். அப்புறம் அடிபட்ட தொழிலாளி தீபக்கின் பேட்டி இனியொரு தளத்தில் வெளிவந்தது.

லீனாவும் ஷோபாசக்தியும் படவேலை முடிவதற்காக அமைதி காத்தார்கள். “ஆமா அடிச்சேன், 1700 ரூபாய் அபராதம் கட்டினேன். அடிச்சது சரிதான்” என்று தெனாவெட்டாய் திமிருடன் தனது தளத்தில் எழுதினார் ஷோபாசக்தி. அந்தக் கட்டுரையைத் தனது தளத்தில் வெளியிட்டு வன்மத்துடன் ஆமோதித்தார் லீனா.

மீண்டும் வினவுக்கு வருவோம். தீபக்கை அடித்த சம்பவத்தைப் பார்த்த பிறகுதான், ‘தோழர்’ லீனாவும், ‘தோழர்’ ஷோபாசக்தியும் சித்தாந்த ரீதியிலும், நடைமுறையிலும் வெறி கொண்ட தொழிலாளி வர்க்க எதிரிகள் என்பது தெளிவானது. அம்மாவின் கவிதையில் வழியும் கொழுப்பும், திமிரும் தீபக்கின் மீது விழுந்த அடியில் வெளிப்பட்ட கொழுப்பும் வேறு வேறல்ல என்பதை அவரது கவுஜையைப் படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். இவையிரண்டுக்கும் உள்ள உறவை நாங்கள் அம்பலப்படுத்தினோம். அதைத்தான் தனிப்பட்ட தாக்குதல் என்று கூவுகிறார் சீமாட்டி.

__________________________________________

உக்கிரமான அல்லது உன்மத்தமான நிலையில் வெளிப்படுவதல்லவோ கவிதை. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் லீனா குழுவினர் தொழிலாளிகளின் கன்னத்தில் எழுதிய கவிதையையும் (பிளஸ் ஆர் மைனஸ் மொழி) இணையத்தில் எழுதிய கவிதையையும், அதாவது உணர்ச்சி வெளிப்பாட்டின்  இந்த இரு களங்களையும் ஒன்றாக்கி விட்டோம் என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டு.

புஷ் முதல் மார்க்ஸ் வரை அனைவரது வழித்தோன்றல்களும் ஆணாதிக்கப் பொறுக்கிகளே என்பது அவரது கருத்து. சுதந்திரப் பாலுறவு பற்றிய லெனினுடைய கருத்து எள்ளி நகையாடத்தக்கது என்றும் அவர் ஃபிராய்டைப் புணர்ந்து பாலியல் உறவு குறித்த தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் லெனினுக்கு அவர் வழங்கும் உபதேசம். தனது மாற்றுக் கருத்துகளை அம்மையார் தாராளமாக கருத்தியல் தளத்தில் விவாதத்துக்கு கொண்டு வந்திருக்கலாம். மாறாக கவிதைக்குள் புகுந்து கொள்கிறார். மூளையின் இடது பகுதிக்கு அதிகம் வேலை கொடுக்காததால் சற்று ஊனமுற்றவர்கள், அதனை சரிக்கட்ட வலது பகுதியை சார்ந்திருக்கும் முயற்சி இது. யோனி, குறி என்று எழுதி புரட்சிப் பட்டம் வாங்கும் இந்த அறிவுத்துறை தப்பிலித்தனத்துக்கு கவிதை என்று பெயர் சூட்டிக் கொள்வதும், எனது வெளிப்பாட்டு மொழி கவிதை என்பதும் ஒரு தரம் தாழ்ந்த தந்திரம். அல்லது சீமாட்டியின் தரத்துக்குப் பொருத்தமான தந்திரம்.

_____________________________________________

சீமாட்டியின் கவிதையில் வழியும் கொழுப்பை அம்பலப்படுத்தினால் அது தனிப்பட்ட தாக்குதலாம். பிரதிகளை முடிவின்றி கட்டுடைக்கும் உரிமை அவர்களுக்கு மட்டும்தானா, மற்றவர்களுக்கு கிடையாதா?

தெரியாமல்தான் கேட்கிறோம். லீனாவின் கவிதையை நாங்கள் விமரிசித்திருக்கிறோம். அதற்கு லீனாவும், லீனா ரசிகர் மன்றத்தினரும் பதில் சொல்லியிருக்கிறார்கள். மறுபடி நாங்கள் எழுதுவோம். நீயும் எழுது. இதில் எது சரி என்பதை படித்து வாசகன் முடிவுக்கு வரட்டுமே? இதில் படைப்பாளி சுதந்திரத்திற்கு என்ன ஆபத்து?

உன் வாதம் என்ன? உன் கருத்துக்கு யாரும் மறுப்பு சொல்லக்கூடாது. அல்லது நீ விரும்புகிற முறையில் விமரிசிக்க வேண்டும் என்பதுதானே! இதுதான் உண்மையான பாசிசம்.

லீனாவின் மீதான விமரிசனம், பெண் எழுத்தின் மீதான கலாச்சார அடிப்படை வாதிகளின் தாக்குதலாம்! இப்போது குரல் கொடுக்காவிட்டால், இனி பெண்கள் எழுதவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமாம். அடேங்கப்பா, சீமாட்டி இப்போது பெண்குலத்தின் பிரதிநிதியாகிவிட்டார். “பெண்ணென்றும் பாராமல் என்னை… ” என்று டயலாக் பேசி முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றிய அம்மாவின் ஞாபகம்தான் வருகிறது.

படைப்பாளி என்று அழைத்துக்க கொள்ளும் ஒரு பாசிஸ்டு குழு தனது உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கு, இன்னொரு பாசிஸ்டு கும்பலான இந்து மக்கள் கட்சியை வில்லனாக சித்தரிக்கிறது. லீனா – இந்து மக்கள் கட்சி சண்டை என்பது அசப்பில் ஜெயல்லிதா பாரதிய ஜனதா சண்டை மாதிரியே இருக்கிறது. நல்ல தமாஸ்தான்.

இந்து மக்கள் கட்சி பெரியார் சிலையை உடைத்த போது ம.க.இ.க தோழர்கள் சீரங்கம் கோயில் வாசலில் ராமன் படத்தைக் கொளுத்தினார்கள். ஓசூரில் மோதி மண்டை உடைந்து சிறை சென்றார்கள். பெரியார் தி.க காரர்கள் என்.எஸ்.ஏ வில் சிறை சென்றார்கள். சிதம்பரத்துல தீட்சிதனுக்கு காவல் நிற்கும் இந்து மக்கள் கட்சியை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள் எங்கள் தோழர்கள்.

சீமாட்டி என்ன செய்தார்? ஜீன்ஸ் பேண்டும், சே குவேரா டி ஷர்ட்டும் போட்டு திரியுறதெல்லாம் புரச்சிப் பெண்ணா? அப்படிப்பட்ட புரச்சிதான் நூத்துக்கணக்கில ஸ்பென்சர் பிளாசாலயும், சிட்டி சென்டர்லயும், ஸ்கை வாக்குலையும், மாயஜாலிலும் திரியுதே? அந்த டி சர்ட் புரச்சிக்கும் இந்தக் கவுஜைப் புர்ச்சிக்கும் என்ன வித்தியாசம்?

அயோத்தி கேஸ் முதல் குஜராத் கேஸ் வரை எதிலும் எந்த இந்து பாசிஸ்டும் தண்டிக்கப்படவில்லை. அதைக் கேக்க ஆளைக்காணோம். இல்லாத கேசுக்கு கண்டனக் கூட்டமாம். விற்காத படத்துக்கு புரடியூசரே காசு கொடுத்து பொதுநல வழக்கு போடச்சொல்லி படத்தை புரமோட் செய்யும் கதை மாதிரில்ல தெரியுது?

_________________________________________________

ஒரு விநோதமான பேச்சாளர் கலவை இந்தக் கூட்டத்தில் உரையாற்றப் போகிறது. த.மு.எ.க.ச (மார்க்சிஸ்டு கட்சியின் கலை இலக்கிய அமைப்பு) முந்திக் கொண்டு அறிக்கை விட்டிருக்கிறது.

இடது தீவிரவாதம் பேசும் ஒரு சிறு குழு இலக்கியவாதிகளை மிரட்டுவதாகவும், லீனாவையும் அப்படி மிரட்டியிருப்பதாகவும் கூறுகிறது அவர்களது கண்டன அறிக்கை. இராக் பற்றி கொச்சையாக எழுதிய ஒரு “படைப்பாளியிடம்” கவிதைக்கு பொருள் கேட்டோம். கவிதைக்கு அர்த்தம் கேட்பது குற்றம் போலும்! லீனாவைப் பற்றி எழுதியதோடு சரி. நேரிலெல்லாம் போகவில்லை. ஜெயலலிதா, லீனா மாதிரியான மாதர்குல மாணிக்கங்களை தனியாக சென்று சந்திக்கும் தைரியம் தீவிரவாதிகளான எங்களுக்கு கிடையாது. லீனாவின் சார்பில் லீனாவின் கவுஜைகளுக்கு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் விளக்கம் கூறிவிடுமானால் மகிழ்ச்சியே.

“உபரி என யோனி மயிரை விளித்தாய்..
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்..”

என்பன போன்ற கவித்துவம் வாய்ந்த வரிகளைத் தெரிவு செய்து விளக்கம் சொன்னால் கூடப்போதும்.

கலாச்சார போலீஸ் வேலைக்கு எதிராக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உறுதியாகப் போராடும் என்று தமிழ்ச்செல்வன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். நித்தியானந்தா என்ற பரிதாபத்துக்குரிய 32 வயது இளைஞனின் படுக்கையறை உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் தமிழ்ச்செல்வன் என்பது நமக்குத் தெரியும். அந்த பாக்கியம் வரதராசனுக்கும் கிடைக்கவில்லை, பால் சக்கரியாவுக்கும் கிடைக்கவில்லை.

சிங்குர், நந்திக்கிராமில் மக்கள் மீது ஏவப்பட்டது கலாச்சார போலீசு இல்லையே. அது சட்டம் ஒழுங்கு போலீசு. அந்தப் போலீசு மார்க்சிஸ்டுகளின் தோழன்.

கூட்டத்துக்கு ஆதவன் தீட்சண்யா வருகிறார். அவர் சிங்கள பாசிசத்தின் நண்பர். அதாவது, டக்ளஸ் தேவானந்தாவின் நண்பர். ஷோபா சக்திக்கும் நண்பர். இருந்தாலும் கலாச்சார போலீசை எதிர்க்கும் ஜனநாயகவாதி. எல்லாம் ஓ.கே தான். ஆனால் வரதராசனை கட்சிக்காரனுக கொன்னுட்டாங்கன்னு ஷோபா சக்தி எழுதியிருக்கிறார். ஆதவனுக்கு அதுவும் ஓ.கேயா இருக்கலாம். கட்சிக்கு ஓ.கேயான்னு தெரியவில்லை.

அப்புறம், சி.பி.ஐயின் தேவ. பேரின்பன் வருகிறார். பின் நவீனத்துவத்தின் கம்யூனிச எதிர்ப்பு முகமூடியைக் கிழித்து எழுதியவர். இந்த கவிதைக்கு அவரிடம்தான் பொருள் விளக்கம் கேட்கவேண்டும்.

காமெடி என்னவென்றால் பெண் கவிஞர்கள் பலரை இந்தப் பட்டியலில் காணவில்லை. அவர்கள் லீனாவை பெண்ணென்று ஒப்புக்கொள்ளவில்லையா அல்லது படைப்பாளியென்று ஒத்துக்கொள்ளவில்லையா தெரியவில்லை. இது தொடர்பான உண்மை அ.மார்க்சுக்குத்தான் தெரியும் என்கிறார்கள். எனவே அவர் அதை கூட்டத்தில் விளக்குவார் என்று நாம் நம்பலாம்.

சீமாட்டியின் உரிமை நிலைநாட்டு விழாவில் மொத்தம் 54 பேர் உரையாற்றுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பத்திரிகையில் கண்டுள்ள பெயர்களைப் பார்க்கும் போது கல்யாணப் பத்திரிகையில் போட்டிருக்கும் தாய்மாமன் லிஸ்ட்தான் ஞாபகத்துக்கு வருகிறது. இவுங்கள்லாம் தெரிஞ்சு வாராகளா, இல்ல இதெல்லாம் இந்த சீனுக்கு தேவையான “அட்மாஸ்பியர்”னு முடிவு பண்ணி லிஸ்டை அச்சடிச்சுட்டாங்களா தெரியல. ஆளுக்கு 10 நிமிடம் என்று வைத்தாலும் 540 நிமிடம். அதாவது பத்து மணி நேரம். மாலை 6 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

இருந்தாலும், நாங்கள் எல்லோர் பெயரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. நாலைந்து பேரைத்தான் இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறோம். “ஏண்டா என்னா ஏதுன்னு மேட்டரே தெரியாம எதுன்னாலும் பத்துப்பேர் கூட்டமா வாரீங்களே, உங்களுக்ககெல்லாம் வேற வேலயே கிடையாதா?” ன்னு வடிவேலு கேக்குற மாதிரி நாம கேக்க முடியாதில்லையா?

_______________________________________

தொழிலாளியை அடிப்பது படைப்பாளியின் உரிமை. 1700 ரூபாய் அபராதம் கட்டினால் போதுமென்பது ஷோபாசக்தி-லீனாவின் வாதம். அப்படி என்றால் அந்தப் படைப்பாளியை தொழிலாளி திருப்பி அடிக்க விரும்பினால், எவ்வளவு அபராதம் கட்டவேண்டியிருக்கும் என்பதற்கு அறிவாளிகள் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எப்படிப் பார்த்தாலும் தொழிலாளிகளின் உரிமையை விட படைப்பாளிகளின் உரிமை கொஞ்சம் மேம்பட்டதாகத்தான் இருக்க முடியும். எனவே, தமது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள விரும்பும் பெப்சி (தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்களின் சம்மேளனம்) தொழிலாளர்கள் 1700 ரூபாய்க்கு மேல் ஆயிரம், இரண்டாயிரம் கூடுதலாக எடுத்து வரவும்.

அடுத்தது கேள்வி பெண் படைப்பாளிகள் படைப்புரிமை பற்றியது. லீனாவின் கவிதையை வாசித்து, வாசிப்பு அனுபவத்தையும் கவிதை வெளிப்படுத்தும் உணர்வையும் செல்மா பிரியதர்சன் போன்ற கவிஞர்கள் நிச்சயமாக விளக்குவார்கள். கம்யூனிஸ்டுகளுக்கும், ஜிகாதிகளுக்கும், இந்து பாசிஸ்டுகளுக்கும் வேறுபாடு இல்லை என்பதை பெண்ணியப் பார்வையில் லீனாவும் கட்டுடைத்துக் காட்டுவார். கவிதை அறிவோ, ரசனையோ இல்லாத சராசரி உழைக்கும் பெண்கள் இவற்றைக் கேட்டு புதிய தரிசனங்களைப் பெறலாம்.

இறுதியாக, லீனாவின் கவிதையை தமது கொள்கையின் மீதும், தங்கள் மீதுமான தனிப்பட்ட தாக்குதலாகப் புரிந்து கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு: உபரி மதிப்புக்கும் யோனி மயிருக்கும், உற்பத்தி உறவுக்கும் தொப்புளுக்கும், அந்தரத்தில் தெறிக்கும் விந்துவுக்கும் கார்ல் மார்க்ஸின் பிரகடனத்துக்கும் உள்ள கவித்துவப் பிணைப்பு பற்றி “கம்யூனிசப் பாரம்பரியத்தில் பிறந்த” சீமாட்டி வகுப்பெடுப்பார்.

ஆமாம். தான் கம்யூனிச குடும்ப பாரம்பரியத்தில் வந்தவர் என்றுதான் லீனா சொல்லிக் கொள்கிறார். தேவர் மகன் தேவர், கவுண்டர் மகன் கவுண்டர் மாதிரி கம்யூனிஸ்டின் மகனோ, பேத்தியோ கம்யூனிஸ்டு என்று அம்மையார் நினைத்துக் கொண்டிருக்கிறார். போலி கம்யூனிஸ்டுகளும் அதை அங்கீகரித்து சீமாட்டியை தோழர் என்று அரவணைக்கிறார்கள்.

குரங்கையும் மனிதனையும் பிரிப்பது அறிவு. அந்த அறிவிலிருந்துதான் மனிதனின் படைப்புத்திறன் பிறக்கிறது என்று நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதற்காக விலங்குகளுக்குப் படைப்புத் திறனே கிடையாது என்று நாம் சொல்லி விட முடியுமா? இயற்கை அளித்திருக்கும் அந்தப் படைப்புக் உறுப்புக்களின் மீதே மையம் கொண்டிருக்கும் சிந்தனையை ‘படைப்பூக்கம்’ என்று அழைப்பது தகுமாயின்,

“கவிதை என்பதற்கு வேறு ஏதாவது பெயர் வை” என்று கோருகிறோம்.

__________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்