privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கு! HRPC வழக்கு!!

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கு! HRPC வழக்கு!!

-

  • இந்திய அரசே, தமிழக மீனவர்களுக்குத் துப்பாக்கி வழங்கு !

  • கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை உறுதி செய் !

மதுரை உயர்நீதிமன்றத்தில்  மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கு!

சட்டம் யாருக்கு, எந்த வர்க்க நலனுக்கு சாதகமாக இருக்கிறது என்பது மீண்டும் அம்பலமாகியிருக்கிறது.

உலகிலுள்ள எந்த நாடும் கடல் எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை. பாகிஸ்தான் கூட எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதே வழக்கமாக இருந்திருக்கிறது. காரணம், சர்வதேசகடல் சட்டம் சரத்து 73, மீனவர்களை கடலில் சுடுவதை தடைசெய்திருக்கிறது. இச்சட்டத்தில் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கையொப்பம் இட்டுள்ளன. இதில், இந்தியாவும், இலங்கையும் கூட அடக்கம்.

ஆனால், இச்சட்டத்தை இலங்கை அரசு இதுவரை மதித்து நடந்ததில்லை. இந்திய அரசும் இதை தட்டிக் கேட்டதில்லை. பதிலாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை குருவிகள் போல சுட்டுத் தள்ளுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. இதுவரை 500 க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் இப்படி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மீது 600க்கும் மேலான முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டு விசாரணையின்றி கடலோர மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் கொலை, கொலை முயற்சி  மற்றும் ஆயுத சட்டப்படியான கடுமையான குற்றங்கள். இக்குற்றவாளிகளை இந்திய நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த இந்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 12.01.2011 மற்றும் 22.01.2011 ஆகிய தேதிகளில் வீரபாண்டியன், ஜெயக்குமார் ஆகிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொடூரமாக சுடப்பட்டு, கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளனர். இது சர்வதேச கடல்சட்டங்களை மீறிய செயலாகும்.  2008ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி வெளியிடப்பட்ட இந்திய – இலங்கை கூட்டறிக்கைப்படி இந்திய மீன் பிடி படகுகளை சுடக்கூடாதென ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசு இதையும் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்திய அரசியல் சட்டம் சரத்து 19 (1) ( g) ன் படி மீன்பிடி உரிமை, தமிழக மீனவர்களின் அடிப்படை உரிமையாகும். அதே போல்  இந்திய அரசியல் சட்டம் சரத்து 21ன்படி மீனவர்களூக்கு வாழ்வுரிமையும் அடிப்படை உரிமையாகும். தனது குடிமக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசியல் சட்டப்படி அரசின் கடமையாகும். இப்படி தனது குடிமக்களின் அடிப்படை உரிமைகளான தொழில் உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய இந்திய அரசு அக்கடமையிலிருந்து தவறியிருக்கிறது.

அத்துடன் இலங்கையில் தனது மேலாண்மையை நிலைநாட்டுவதற்க்காக தனது சொந்த நாட்டு மக்களின் நலன்களைப் பலியிட்டு வெறுமனே ராஜதந்திர நாடகங்களை நடத்தி  வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் பணக்கார மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்ட போதும், மும்பையில் தாஜ் ஓட்டல் தாக்கப் பட்டபோதும், சிலிர்த்து எழுந்தது. தேசபக்தி நாடகமாடி மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பியது. குஜராத் தொழிலதிபர்களின் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சோமாலியா கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ஒரு உயிர் கூட சேதமடையாத நிலையில் இந்திய கடற்படையை விரைந்து அனுப்பி நடவடிக்கை எடுத்தது.

இப்படி ஆளும் வர்க்க நலனுக்காக மட்டுமே செயல்படும் இந்திய அரசு, தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. இதனால் தமிழக மீனவர்கள் இந்திய அரசு தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஆகவே மீனவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி லைசென்சும், இலவசமாகத் துப்பாக்கியும் இந்திய அரசு வழங்க வேண்டும். இத் தற்காப்புரிமை இந்திய தண்டணைச் சட்டம் பிரிவுகள் 96 – 100; வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 3 ஆகியவற்றின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படை செய்துள்ள குற்றங்கள், அது தொடர்பான வழக்குகள், வழக்குகள் மீதான இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து ஒரு நீதிபதியை நியமித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ் நாடு அமைப்பின் மதுரைக் கிளை துணைச் செயலரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சே.வாஞ்சி நாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அதேபோல் மற்றொரு வழக்கில் ராமேசுவரம் மன்னார் வளைகுடாப் பகுதியானது, பல்வேறு அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் நிரம்பிய பகுதி என்பதால் இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சீசன் நேரங்களில் மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடிப்பார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது.

இந்திய – இலங்கை ஒப்பந்தங்கள் 1974, 1976 ன் படி கச்சத் தீவுப்பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்பந்தங்களின்படி  நேரடியாக கச்சத்தீவை இந்தியா, இலங்கைக்கு அளித்தால் அரசியல் சட்ட திருத்தம் தேவைப்படும் என்பதால் சூழ்ச்சியாக கடல் எல்லையை வரையறுப்பது என்ற அடிப்படையில், கச்சத்தீவிலிருந்து இந்திய கடல் எல்லையை வரையறுக்காமல் திட்டமிட்டே, கச்சத்தீவு இலங்கை கடற்பகுதியில் வருமாறு மாற்றி வரையறுக்கப்பட்டு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. எனவே கச்சத்தீவை மையப்படுத்தி தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவின் கடல் எல்லையை இந்திய அரசு புதிதாக வரையறுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மேற்படி வழக்குகள் 15.02.2011 ல் நீதிபதிகள் பால்வசந்தகுமார், சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து கச்சத் தீவு மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது..

இந்த வழக்கு தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிக முக்கியமான வழக்காகும். இதில் எழுப்பட்டுள்ள கேள்விகளுக்கு உயர்நீதிமன்றம் என்ன விடை தரும், வழக்கை தள்ளுபடி செய்யுமா என்றெல்லாம் வாசகருக்கு கேள்வி எழலாம்.

எனினும் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசின் கீழ் வாழும் இந்த மீனவர்கள் தங்களது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தும் உரிமையை கோருவது சட்டப்படியும், அரசியல்ரீதியாகவும் சரியானதே. நீதிமன்றம் இதற்கு முகங்கொடுக்காமல் போனால் நாம் மக்கள் மன்றத்தில் இந்த கோரிக்கையை வைத்து போராடுவதே சரியாக இருக்கும்.

_________________________________________________________

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்