privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவாக்களிக்க பணம் வாங்குவது குற்றமா?

வாக்களிக்க பணம் வாங்குவது குற்றமா?

-

ண்ணா ஹசாரே அன்கோவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் மெழுகுவர்த்தியோடு கலந்து கொண்ட நமது அன்பிற்குரிய நடுத்தர வர்க்கம், அதற்கு அடுத்தபடியாக கொஞ்சம் வெறியோடு ஒரு ரஜினி ரசிகனைப் போல ஆதரிப்பது தேர்தல் கமிஷனை! தமிழகத்தில் பறக்கும் படைகளால் பிடிபட்ட கோடிக்கணக்கான பணம், திருச்சி ஆம்னி பேருந்தில் ஐந்து கோடியை பிடித்த வீராங்கனை அதிகாரி, அஞ்சா நெஞ்சன் அழகிரியை தண்ணி குடிக்க வைத்த மதி நுட்பம்….என்று இந்த போற்றுதல்கள் ஊடகமெங்கும் விரவிக் கிடக்கின்றன. முக்கியமாக பெரிசு கருணாநிதியே தேர்தல் கமிஷன் குறித்து எல்லா இடங்களிலும் புலம்பித் தள்ளுவதை நடுநிலையாளர்கள் மாபெரும் வெற்றியாக கருதுகின்றனர்.

ஆனால் இந்த செய்திகளுக்கு பின்னே உங்களையும் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களையும் அரசியலில் இருந்தே விலக்கும் பாசிச போக்கு கலந்திருக்கிறது என்பதை அறிவீர்களா?

அதிகார வர்க்கத்தின் ஒரு பிரிவும், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவும் ஜெயலலிதாவை ஆதரிப்பதன் விளைவாகவே தேர்தல் கமிஷன் இந்த நடவடிக்கைகளை எடுக்கிறது என்று சிலர் சொல்லக்கூடும். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் அதைத் தாண்டி தேர்தல் என்பதே மக்கள் கலந்து கொள்ளும் திருவிழா அல்ல, வெறுமனே வாக்களிப்பு மட்டும் நடக்கும் ஒரு சடங்கு போல மாற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில் தேர்தல் வரும்போது ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் விரிவான தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை நடத்துவது வழக்கம். அதன் அங்கமாக பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கும். இந்த தேர்தல் குறைவான  காலத்தில் நடக்கிறது என்றாலும் பல இடங்களில் தோழர்கள் விரிவான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பல இடங்களில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு போலீசு மறுத்திருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் உண்மையான இலட்சணம்.

பொதுக்கூட்டத்திற்கான விண்ணப்பத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்ற வார்த்தைகளைப் பார்த்தாலே போலீசு மருண்டு விடுகிறது. உடனே “இது குறித்து தேர்தல் கமிஷனிடம் அனுமதி வாங்க வேண்டும்” என்று சம்பந்தப்பட்ட போலீசு சொல்கிறது. நண்பர்களே, ஒரு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் கமிஷனிடம் எதற்கு அனுமதி வாங்க வேண்டும்? அந்த கமிஷன், தேர்தல் எப்படி சட்டப்படி நடத்த வேண்டும் என்பதைத்தானே செய்ய வேண்டும்? இந்த அரசு, அரசியல், அமைப்பு குறித்த ஒரு இயக்கத்தின் கொள்கையை, அதை பிரச்சாரம் செய்யும் உரிமையை அது எப்படி தீர்மானிக்க முடியும்?

சரி, தோழர்கள் அந்தந்த ஊர்களில் இருக்கும் தேர்தல் கமிஷன் பொறுப்பிலுள்ள அதிகாரிகளிடம் கேட்டால் என்ன பதில் கிடைக்கிறது? இதில் சட்டப்படி அவர்கள் பதிலளிக்க முடியாது என்பதால் ” இது குறித்து நீங்கள் போலீசிடமே அனுமதி வாங்குங்கள்” என்கிறார்கள். மீண்டும் போலீசு, மீண்டும் தேர்தல் கமிஷன்….இந்த ஆட்டம் இன்று வரை முடியவில்லை.

நாள் வேறு குறைவாக இருக்கிறதே இதற்கு வழக்கு போட்டு அனுமதி வாங்க முடியுமா என்று தோழர்கள் யோசனையோடு சென்னை உயர்நீதிமன்றம் போனார்கள். தலைமை நீதிபதி இக்பால் தலைமியிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து சரியாக சொல்வதாக இருந்தால் எந்த விசாரணையும் செய்யாமல் “தேர்தல் புறக்கணிப்பு என்பது ஜனநாயக விரோதம்” என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆக நாம் இந்த தேர்தலை புறக்கணிப்பது சட்ட விரோதம் என்று திமிருடம் தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர், மாட்சிமை தாங்கிய நீதிபதிகள். இனி இதை மறுத்து உச்சநீதிமன்றம் போய் வாதாடி அனுமதி வாங்குவதற்குள் தேர்தல் முடிவுகளே வந்து விடும். இதுதான் இந்த நாட்டில் நிலவும் ஜனநாயகம்.

மறுகாலனியாக்கம் மும்முரமாக நடைபெறும் இந்த இருபது ஆண்டுகளில் அரசு மட்டுமல்ல அதற்கு பொருத்தமாக தேர்தலும், கூடத்தான் பாசிசமயமாக  மாறியிருக்கிறது. முன்பிருந்த பொதுவான அரசியல் நடவடிக்கைகளெல்லாம் இன்று கிடையாது. முதலில் இரவு பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றார்கள். திராவிட இயக்க வரலாற்றில் விடிய விடிய நடக்கும் இந்த பிரச்சாரக் கூட்டங்கள்தான் பெருந்திரளான மக்கள் பங்கேற்கும் மாபெரும் அரசியல் நடவடிக்கையாக இருந்தது. அதற்கு ஆப்பு வைத்த கையோடு பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான முக்கியமான இடங்களை மறுத்தார்கள். ஆளா வராத ஓரிரு இடங்களை மட்டும் ஒதுக்கினார்கள். ஆர்ப்பாட்டங்கள், மறியல் எல்லாவற்றிற்கும் இதுதான் கதி. பின்னர் சுவரெழுத்து, சுவரொட்டிகள், பேனர்கள் எல்லாவற்றுக்கும் தடை விதித்தார்கள்.

இதனால் தற்போது சிறு கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் மக்களிடையே பிரச்சாரம் செய்ய முடியாது. அவர்கள் யாரென்றே மக்களுக்கு தெரியாது. பெரிய கட்சிகள் எல்லாம் ஆளுக்கொரு தொலைக்காட்சி வைத்திருப்பதால் பிரச்சினை இல்லை. அதே போல பணபலத்தால் ஊடகங்களில் விளம்பரம் செய்தும் ஈடு செய்கிறார்கள். இந்த நிலை தொடரும் பட்சத்தில் நமது தேர்தலும் அமெரிக்கா போல கார்ப்பரேட் நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும். அமெரிக்காவில் இரண்டு கட்சிகளைத் தவிர வேறு யாரும் வெற்றி பெறவே முடியாது என்ற சூழ்நிலை இங்கும் தோன்றும். அல்லது தோன்றிவிட்டது.

இது தவிர பெரிய கட்சிகள் கூட முன்னர் போல பெருந்திரளான மக்கள் நடவடிக்கைகளை வைத்து தேர்தலை அணுகுவதை இப்போது மாற்றிவிட்டார்கள். வேட்பாளர் மனுக்கொடுக்கும் போது கூட நான்கு பேர்தான் செல்ல வேண்டும், வாகன ஊர்வலத்தில் நான்குக்கு மேல் அனுமதியில்லை என்று ஏராளமான விதிகள் இப்போது அமலில் இருக்கின்றன. இவையெல்லாம் தேர்தலை சிறப்பாகவும், நடுநிலைமையோடும் நடத்துவதற்கு காரணமென்று பலர் அப்பாவித்தனமாய் நம்புகிறார்கள். அரசியலே சாக்கடை என்று கருதுவதற்கு பழக்கப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கம்தான் இதனை எந்தவித பரிசீலனையின்றி  போற்றுகிறது.

தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் எதுவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவில்லை, மறுக்கிறது. இந்த நடவடிக்கைகள் தேர்தல் மற்றும் பொதுவான அரசியல் நடவடிக்கைகளிலிருந்து மக்களை விலக்கி வைக்கிறது. அப்படி மக்கள் விலக விலக அரசு என்பது மேலும் பாசிசமயமாகுவதற்கு உதவியாக இருக்கும். ஆளும் வர்க்கம் தான் விரும்பும் எதனையும் மக்கள் எதிர்ப்பின்றி அல்லது அப்படி எதிர்ப்பு காட்டுவதற்கு வழியில்லாத நிலைமையினை உருவாக்கி சாதித்துக் கொள்ளும்.

கூர்ந்து கவனித்தீர்களென்றால் இந்த தேர்தல் கார்ப்பரேட் கட்சிகளின் நடவடிக்கைகளை மட்டும் ஊக்குவிப்பதை புரிந்து கொள்ளலாம். சோனியா, ராகுல், அத்வானி, ஜெயலலிதா போன்றோர் விமானத்தில், ஹெலிகாப்டரில் பறந்து வந்து பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 14 இலட்சம் மட்டும் செலவு செய்யலாம் என்று கண்காணிக்கும் தேர்தல் கமிஷன் இந்த பறக்கும் செலவுகளை மட்டும் வேட்பாளர்கள் கணக்கில் சேர்க்காதாம். தொண்டர்களுக்கு பிரியாணி போடுவதை தடுத்து நிறுத்தி மாபெரும் ஜனநாயக நடவடிக்கை எடுக்கும் கமிஷன் இந்த ஹெலிகாப்டரை மட்டும் பெருந்தன்மையுடன் அனுமதிக்கும் இரகசியம் என்ன?

அதே போல பெரிய கட்சிகள் ஆளுக்கொன்றோ இரண்டோ தொலைக்காட்சிகளை வைத்துக் கொண்டு செய்தி, விளம்பரம் என்ற முகாந்திரத்தில் பிரச்சாரம் செய்கின்றன. இதற்கான செலவை மதிப்பிட்டு தமிழகம் முழுவதும் போட்டியிடும் அந்த கட்சிகளது வேட்பாளர்களின் கணக்கில் சரசாரியாக கழிக்க வேண்டியதுதானே? செய்வார்களா?

ஒரு வேட்பாளர் 14 இலட்சத்திற்கு மேல் செலவழிக்க கூடாது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? முதலாளிகள், பணக்காரர்கள் போன்ற பணம் படைத்த பிரிவினர் தேர்தலில் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும். ஐந்து அல்லது பத்து இலட்சத்திற்கு மேல் மொத்த சொத்தும் இல்லாதவர்கள்தான் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று மாற்றலாமே? அப்படி செய்தால் இந்த செலவு பிரச்சினையே வராதில்லையா? ஆனால் நடப்பு தேர்தலில் 230க்கும் மேற்பட்ட கோடிசுவர வேட்பாளர்கள் பங்கேற்கிறார்கள். கையில் செலவழிக்க வழியற்று பணத்தை சேர்த்திருக்கும் வர்க்கம் தேர்தலில் நின்றால் செலவழிக்காமல் என்ன செய்வான்?

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்துவதற்காக அதிரடி ரெய்டுகளை செய்யும் கமிஷன் இந்த அக்கறையில் உண்மையாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருக்கும், அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கட்சிகள் எதுவும் எந்த முதலாளிகளிடமும் நன்கொடை வாங்க கூடாது என்று உத்தரவு போட்டிருக்கலாமே? டாடா, அம்பானி, பிர்லா, அம்பானி, பஜாஜ், மல்லையா, டி.வி.எஸ் என்று எல்லா முதலாளிகளிடமும் நன்கொடை வாங்கித்தான் காங், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் பிழைப்பை நடத்துகின்றன. இந்த சப்ளையை துண்டித்தால் அவர்கள் தேர்தலில் பணத்தை தண்ணியாக செலவழிக்க முடியாதில்லையா? ஏன் செய்யவில்லை?

ஆக ஒட்டுமொத்தமாக ஒன்று புரிகிறது. இந்த தேர்தலும், தேர்தல் கமிஷனும் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அவர்களது நலனுக்காக இருக்கும் பெரிய கட்சிகளைத்தான் எல்லா சலுகைகளோடும் அனுமதிக்கிறது.

தற்போது ஸ்ரீரங்கத்தில் வாக்களிக்க பணம் வாங்கினார்கள் என்று ஆறு பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏதோ இவர்களெல்லாம் மாபெரும் கிரிமினல்கள் போல அவர்களது பெயர்களையெல்லாம் பெற்றோர் பெயர்களோடு தினசரிகள் பிரசுரித்திருக்கின்றன. இவர்கள் மீது 171 இ எனும் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது நிரூபிக்கப்பட்டால் ஒரு ஆண்டு தண்டனை என்று எல்லா ஊடகங்களும் மக்களை பயமுறுத்துகின்றன. தேர்தலுக்கு வாக்களிப்பதையே அவமானமாக கருதும் மேட்டுக்குடியினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதி இந்த நடவடிக்கைகளை நெஞ்சார வரவேற்கிறார்கள். ஆனால் மக்களை மிரட்டுவதுதான் இந்த வழக்கின் அடிப்படை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வாக்களிக்க பணம் வாங்குவது தவறு என்றால் அதை மேடையிலேயே ஆதரித்து பேசுபவர்களையல்லவா கைது செய்திருக்க வேண்டும்? ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றோர் பல இடங்களில் பேசும் போது “தி.மு.க காரன் காசு கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளுங்கள், அது நம்ம காசு, வாக்கு மட்டும் எங்களுக்கு மறக்காமல் போடுங்கள்” என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ஊடகங்களில் பலரும் கூட இதை தெரிவித்திருக்கின்றனர். இப்படி ஆதாரப்பூர்வமாக காசு பெறுவதை ஆதரிக்கும் நபர்கள் மீது தேர்தல் கமிஷன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த எம்.பிக்கள் பணம் வாங்கிக் கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் பணம் வாங்கியதும், வாக்களித்ததும் உண்மையென்றாலும் இரண்டுக்குமுள்ள தொடர்பு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்று தள்ளுபடி செய்தது.

அதை வைத்துப் பார்க்கும்போது வாக்காளர்கள் பணம் வாங்குவதை மட்டும் எப்படி நிரூபிப்பார்கள்? அதாவது ஒருவர் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார். அதில் பணம் வாங்குவதை வேண்டுமானால் நிரூபிக்க முடியும், ஆனால் அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை எப்படி நிரூபிக்க முடியும்? ஏனெனில் வாக்களிப்பது என்பது இரகசியமானது, அப்படி இரகசியமாக வாக்களிப்பதுதான் வாக்களிப்பவரின் ஜனநாயக உரிமை என்று வேறு பெருமை பேசுகிறார்கள். மேலும் ஒருவர் பணம் வாங்கிக் கொண்டு அந்த கட்சிக்கு மாறாக வேறு கட்சிக்கு கூட வாக்களிக்க முடியும், அதையும் ஏன் என்று கேட்க முடியாதல்லவா? அல்லது வாக்களித்த ஒவ்வொருவரையும் எந்த கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்று பரிசோதித்து பார்க்க முடியுமா? ஆக இவர்களது நோக்கம் ஜனநாயகத்தை காப்பாற்றுவதா, இல்லை பாமர மக்களை மிரட்டுவதா?

பணம் வாங்கிக் கொண்டு மக்கள் வாக்களிப்பது அவர்களது சுயமரியாதையை இழப்பதாகும் என்று சுயமரியாதையில் கொடிகட்டிப் பறக்கும் நடுத்தர வர்க்கம் சலித்துக் கொள்கிறது. போகட்டும், பொறியியல் கல்லூரியில் மகனுக்கு சீட்டு வாங்க வேண்டுமென்று சில பல இலட்சங்களை வாரிக் கொடுப்பது மட்டும் சுயமரியாதையா? மகனை விடுங்கள் நாலைந்து வயது குழந்தைக்கு எல்.கே.ஜி சீட்டு வாங்குவதற்கு கூட சில பல ஆயிரங்களை எந்த எதிர்ப்புமின்றி வாரி இறைப்பது கூட சுயமரியாதைதானா? பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக சிலர் தெருவுக்கு வந்து போராடும்போது இவர்கள் அதில் சேர்ந்து குரலெழுப்புவதற்கு கூட பயப்படுகிறார்களே, இவர்களா ஏழை மக்களின் சுயமரியாதை குறித்து கவலைப்படுவது?

இன்னும் சிலர் வாக்களிப்பது புனிதமான ஜனநாயகக் கடமை என்பதால் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது அந்த புனிதத்தை கெடுக்கும் செயல் என்று கவலைப்படுகிறார்கள். ஆனானப்பட்ட வெங்கடாசலபதிக்கே ஸ்பெசல் தர்ஷன் என்று பத்தாயிரம் ரூபாய் கட்டணம் வைத்து அனுமதிக்கிறார்களே அதில் கெடாத புனிதமா? இல்லை நம்ம ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் கிண்டி கொடுக்கப்படும் யோக அல்வாவுக்காக பல ஆயிரங்களை கட்டணமாக வாங்குகிறார்களே, அது புனிதத்தை கெடுப்பதில்லையா? ஆக ஆன்மீக சரக்குகளே இப்படி விலை வைத்து விற்கப்படும்போது ஆப்ட்ரால் ஒரு வாக்கு அதுவும் எந்த பிரயோசனமும் இல்லாத சரக்கை விற்பதில் என்ன தவறு? இன்னும் கொஞ்சம் தேசபக்தி ரேஞ்சில் பார்த்தால் பாராளுமன்றத்திற்கே தெரியாமல் அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டாரே மன்மோகன் சிங் அது இந்தியாவின் இறையாண்மை புனிதத்தை ‘கற்பழிப்பே’ செய்திருக்கிறதே?

இவர்களின் கவலை எல்லாம் ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் இல்லை. ஏழை மக்களின் மீது விலை வாசி உயர்வு, வேலையின்மை முதலான பிரச்சினைகளை தள்ளிவிடுவது போல இந்த போலி ஜனநாயகத்தின் யோக்கியதைக்கு காரணம் அவர்களே என்ற மேட்டிமைத்த் திமிர்தான் இதில் வெளிப்படுகிறது.

நிலம் வைத்திருப்பவன் அதை விற்கிறான், பங்குகள் வைத்திருப்பவன் அதை விற்று இலாபம் பார்க்கிறான், அது போல விற்பதற்கு ஏதுமில்லாத ஏழைகள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்வதில் என்ன தவறு?

முதலில் இந்த பணம் பெறும் பிரச்சினையை கொஞ்சம் விரிவாக ஆய்ந்து பார்க்கலாம். எல்லா கட்சிகளும் தமது தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அள்ளி விடக் காரணம் என்ன? அவையெல்லாம் பலரது வாழ்வில் ஏக்கப் பொருளாய் மட்டும் இருப்பது மட்டுமல்ல, கல்வி, சுகாதாரம், வேலை முதலான அனைத்திலும் அவர்களது உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அவர்களது உரிமையை பறித்து கொண்டவர்கள் அப்படி பறித்த உரிமையின் விளைவாக கிடைத்த சுருட்டலில் இருந்து சிலவற்றை கிள்ளிக் கொடுக்கிறார்கள். தமது உரிமைகள் பறிக்கப்பட்டதை உணராத மக்கள் அல்லது அப்படி உணர்ந்தும் அதற்கு தீர்வு தேட முடியாத நிலையிலிருக்கும் மக்கள்தான் தமது வாக்குகளை அளிப்பதற்கு சிலநூறு ரூபாய்களை வாங்குகிறார்கள்.

ஆக அந்த மக்களது பறிக்கப்படும் உரிமைகள் குறித்து  கவலைப்படாத எவரும் அவர்கள் வாக்களிப்பதற்காக பணம் வாங்குவது குறித்து கேள்வி கேட்பதற்கு கூட தகுதியற்றவர்களே. ஆனால் அந்த உரிமைகளை போராடிப் பெற வேண்டும் என்று அவர்களிடம் வேலை செய்கின்ற எம்மைப் போன்ற புரட்சிகர சக்திகள் மட்டும்தான் அப்படி பணம் வாங்குவதை தவறு என்று மக்களிடம் பிரச்சாரம் செய்யும் தகுதி படைத்தவர்கள். ஆம். நாங்களும் வாக்களிப்பதற்கு பணம் வாங்குவதை மட்டுமல்ல வாக்களிப்பதையே எதிர்த்து பிரச்சாரம் செய்கிறோம். இது வேறு, அது வேறு.

அடுத்து சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா முதலானோர் கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் மக்கள் கூட ஆளுக்கு நூறோ அல்லது இருநூறு ரூபாய் கொடுத்துத்தான் திரட்டப்படுகின்றனர். அதற்கும் காரணம் ஏழ்மைதான். இல்லையென்றால் வேகாத வெயிலில் மேக்கப் போட்ட ஜெயலலிதாவின் எழுதி வைக்கப்பட்ட உரையை யார் கேட்கப்போகிறார்கள்? முடிந்தால் தேர்தல்  கமிஷன் இதை தடுத்து பார்க்கட்டுமே? கூட்டம் கூட்டுவதற்கு யாரும் பணம் கொடுக்க கூடாது, வாகனங்களை ஏற்பாடு செய்யக்கூடாது என்றெல்லாம் அவர்கள் செய்யமாட்டார்கள். ஏன்? கார்ப்பரேட் கட்சிகளின் அரசியல் ஷோக்களுக்கு இப்படித்தான் ஆள் பிடிக்கமுடியும், அப்படி கூட்டினால்தான் அவர்களது அரசியல் நடவடிக்கை வெளியுலகிற்கு தெரியுமென்பதால் அதை அனுமதிக்கிறார்கள்.

இதைத் தாண்டி இப்போது தேர்தல் கூட ஒரு திருவிழா என்ற தகுதியை இழந்து விட்டது. கட்சித் தொண்டர்களின் சுறுசுறுப்பான வேலைகளையும், தெருமுனைக்கூட்டம் துவங்கி பொதுக்கூட்டம் வரையிலும் திரளான மக்கள் பங்கேற்ப்பதையும் இப்போது பார்க்க முடியாது. இனிவரும் காலங்களில் தேர்தல் என்பது வாக்களிப்பது என்பதோடு மட்டும் முடிந்து விடும். மற்ற விசயங்கள் எல்லாம் தொலைக்காட்சிகளில் மட்டும்தான் என்ற நிலை தோன்றும். இதனால் ஏற்படும் இழப்பு என்ன?

இந்த போலி ஜனநாயக அரசியிலில் கூட மக்கள் இடம்பெற முடியாது என்ற நிலைமைதான் தோன்றும். அப்படி தோன்றும் பட்சத்தில் அரசு என்பது தனது பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பே இன்றி அல்லது எதிர்ப்பு காட்டுவதற்கு வழியின்றி நிறைவேற்றும்.

இன்று தேர்தல் கமிஷனை எதிர்த்து சண்டாமாருதம் செய்யும் கருணாநிதிக்கு கூட கவலை இதுவல்ல. தனது கட்சியினர் திருமங்கலம் ஸ்டைலில் வேலை செய்ய முடியவில்லையே, அ.தி.மு.கவிற்கு மட்டும் அதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறதே என்பதுதான் அவரது கவலை. மக்கள் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து நீக்கப்படுவது அவருக்கும் உடன்பாடனதுதான்.

சில அறிவாளிகள் 49ஓ குறித்து பிரச்சாரம் செய்கின்றனர். யாருக்கும் வாக்கு இல்லை என்பதை பதிவு செய்வதன் மூலம் தமது எதிர்ப்பை காட்டலாம் என்கின்றனர். வாக்களிப்பது மட்டும் இரகசியம் என்று இருக்கும்போது வாக்கில்லை என்பது மட்டும் வெளிப்படையாக தெரியும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள். இதனாலேயே யாரும் தைரியமாக இதை செய்யப் போவதில்லை. ஒரு வேளை நாளை வாக்களிக்கும் எந்திரத்திலேயே 49ஓ கொண்டுவந்தால் பெருந்திரளான மக்கள் அதில் வாக்களிப்பார்கள். ஆனால் அப்படி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதை ஆளும் வர்க்கம் விரும்பாது. ஆகவேதான் இந்த போலி ஜனநாயகத்தை வீழ்த்துவதற்கு இந்த தேர்தலையே நாம் புறக்கணிக்க வேண்டும் என்கிறோம்.

தேர்தல் கமிஷனது நடவடிக்கைகள் மூலம் தேர்தல் சரியாக நடக்கப் போகிறது என்றோ, அதன் மூலம் தி.மு.கவா, இல்லை அ.தி.மு.கவா யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்றுதான் நாம் கவலைப்படுகிறோம். அல்லது ஆர்வம் கொள்கிறோம். ஆனால் இந்த தேர்தல்மூலம் நாம் நமது அடிப்படை உரிமைகளை இழந்திருக்கிறோம் என்பதால் இதில் மக்கள் தோல்வியடைந்திருக்கின்றனர் என்பதுதான் முக்கியமானது, கோபத்திற்குரியது.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

விக்கி லீக்ஸ்

 

  1. தேர்தல் கமிஷன் – வாக்களிக்க பணம் வாங்குவதில் என்ன தவறு ?…

    அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பு மேளாவில் மெழுகுவர்த்தியோடு கலந்து கொண்ட நடுத்தர வர்க்கம், அதற்கு அடுத்தபடியாக ரஜினி ரசிகனைப் போல வெறியோடு ஆதரிப்பது தேர்தல் கமிஷனை!…

  2. எதை எடுத்தாலும் குற்றம் சொல்வதே உங்கள் பணியாக இருக்கிறது. இதனால் தான் உங்கள் இயக்கங்கள் பெருவாரியான மக்களிடத்தில் சென்று சேரவில்லை.நீங்கள் சொல்லும் தீர்வுதான் என்ன?அதற்க்கான செயல் திட்டம் என்ன என்று தயவு செய்து சொல்லுங்கள்.

    • குற்றம் செய்தவர்களை பற்றிய பதிவில் அவர்கள் மேல் குறை தான் வைக்க முடியும். அவர்களை பாராட்டவா முடியும்?

      பிரியாணி பொட்டலம் முதல் டீ வடை கணக்கு வரை கண்கானிக்கும் எலக்‌ஷ்ன் கமிஷன் ஏன் ஹெலிகாப்ட்டர் செலவை கண்கானிப்பதில்லை? ஏதோ குறையாக தெரியவில்லை.

      தீர்வு என்ன? செயல் திட்டம் என்ன என்று கேட்டுள்ளீர்கள்.
      நிச்சயம் உள்ளது. விரிவாக விவதங்கள் வழியே பார்க்க்லாம். நீங்கள் விவாதத்தை தொடர்ந்தால்…

    • ஜோஸ், நாங்கள் சொல்லும் தீர்வு குறித்து கூடிய விரைவில் கட்டுரையாக எழுதுகிறோம். உங்களுக்கு இயலுமாயின் நேரிலும் சந்தித்து உரையாடலாம். ஆனால் இந்த அரசியல் அமைப்பு சரியானதில்லை, அதை இனிமேலும் திருத்த முடியாது, மாறாக அதை அப்புறப்படுத்த வேண்டும் என்பதில் உங்களுக்கு உடன்பாடா? இல்லையென்றால் ஏன்?

    • இயக்கத்தோட செயல் திட்டம் என்னன்னு கேட்கப்படாது. எதிர்க்கிறது முடிவு பண்ணிட்டா எதிர்த்துட்டே இருக்க வேண்டியது தானே

  3. “ஒரு வேட்பாளர் 14 இலட்சத்திற்கு மேல் செலவழிக்க கூடாது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? முதலாளிகள், பணக்காரர்கள் போன்ற பணம் படைத்த பிரிவினர் தேர்தலில் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும். ஐந்து அல்லது பத்து இலட்சத்திற்கு மேல் மொத்த சொத்தும் இல்லாதவர்கள்தான் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று மாற்றலாமே? அப்படி செய்தால் இந்த செலவு பிரச்சினையே வராதில்லையா? ”

    -இத தஞ்சாவூர் கல்வெட்டுல பதிச்சுட்டு பக்கத்திலேயே உட்கொந்துக்கோ …உனக்கு பின்னாடி வர்ற சந்ததி அத படிச்சு தெளிவாகட்டும்

  4. கல்லுளிமங்கனைப் போல நடிக்கும் வர்க்கம்தான் நடுத்தரவர்க்கம். ஓட்டுக்குப் பணம் வாங்காததைப் போன்று வெளியில் வேஷம் போடும் இவர்கள் அனைவரும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கவே செய்கின்றனர்.

  5. //தலைமை நீதிபதி இக்பால் தலைமியிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து சரியாக சொல்வதாக இருந்தால் எந்த விசாரணையும் செய்யாமல் “தேர்தல் புறக்கணிப்பு என்பது ஜனநாயக விரோதம்” என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆக நாம் இந்த தேர்தலை புறக்கணிப்பது சட்ட விரோதம் என்று திமிருடம் தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர், மாட்சிமை தாங்கிய நீதிபதிகள். இனி இதை மறுத்து உச்சநீதிமன்றம் போய் வாதாடி அனுமதி வாங்குவதற்குள் தேர்தல் முடிவுகளே வந்து விடும். இதுதான் இந்த நாட்டில் நிலவும் ஜனநாயகம்.//

    கண்டிக்கத்தக்க நிகழ்வுதான்.

    உழைக்கும் மக்களின் புரட்சி நிகழ்ந்து, உண்மையான ஜனநாயகம் அமைந்த பிறகு, அந்த ஜனநாயகத்தைப் பிடிக்காத மாற்றுக் கருத்தினர், பிரச்சாரம் செய்வதற்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கும் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.

    தற்போதைய முறையின் குறைகளைச் சுட்டிக் காட்டும் நேரத்தில் நீங்கள் போராட்டத்தின் மூலம் ஏற்படுத்த முயலும் முறையில் இந்தக் குறைகள் எப்படி களையப்படும் என்று சொல்ல வேண்டும்.

    • சிவக்குமார், இது குறித்து பலமுறை கேட்டிருக்கிறீர்கள். அதற்கு பின்னூட்டத்திலேயே பதில் சொல்ல முடியுமா தெரியவில்லை, முடிந்தால் இது குறித்து தனிச்சிறப்பான கட்டுரை எழுதுகிறோம். நேரிலும் சந்தித்து பேசலாம்.

      இங்கே சுருக்கமா….. உண்மையான ஜனநாயகம் அல்லது புதிய ‘ஜனநாயகம் அமைந்த பிறகு அதை ஏற்றுக்கொள்கிற மக்கள், வர்க்கங்கள் அனைவருக்கும் எல்லா உரிமைகளும், கருத்து தெரிவிக்கும் உரிமை, பிரச்சாரம் செய்யும் உரிமை, போட்டியிடும் உரிமை அனைத்தும் இருக்கும். இருந்தே தீரவேண்டும். அப்போதுதான் அது புதிய ஜனநாயகம். இதை ஏதிர்க்கும் தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள், ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் இவர்களை பிரதிபலிக்கும் கட்சிகள் இவர்களை புதிய ஜனநாயக மக்கள் சார்பாக அரசு தடை செய்திருக்கும். அதாவது இவர்களது கட்சிகளுக்கு அந்த உரிமைகள் இருக்காது.

      அரசு என்பதே எங்கும் எப்போதும் ஒரு வர்க்கத்தின் ஒடுக்குமுறைக் கருவிதான். இன்று அது உழைக்கும் மக்களை ஒடுக்கும் வர்க்கங்களின் கருவியாக இருக்கிறது. புரட்சிக்கு பின் அது முதலாளித்துவ வர்க்கங்களை ஒடுக்குகின்ற உழைக்கும்மக்களின் அரசாக இருக்கும். எனவே எல்லா அரசுகளிலும் சில வர்க்கங்கள் அவர்களது கட்சிகள் தடை செய்யப்பட்டிருக்கும். அவை எந்தெந்த வர்க்கங்கள்என்பதை பொறுத்து அந்த அரசின் மக்கள் தன்மை தீர்மானிக்கப்படும்.

      • ஹி!! ஹி!!!! எதோ ஒரு வர்க்கம் ஒடுக்கப்பட்டிருக்குமாம். இன்று உழைக்கும் மக்கள் ஒடுக்க பட்டிருக்கிறார்கள்!!! இவர்களின் புதிய ஜன நாயகத்தில் முதலாளித்துவ வர்க்கங்கள் ஒடுக்கபடுவார்கலாம். அடிப்படையில் மனிதன் ஒரு பச்சோந்தி. அதுவும் தவிர தனக்கு அதிகாரம் கிடைத்து விட்டால் ஊருக்கு இரண்டு வெப்பாட்டி கேட்க்கும் வினோத ஜந்து. வடகொரியா, சீனா, பழைய வீணா போன ரஷ்ய, ஜெர்மனி, செகொச்லோவோக்கிய ஆகிய அனைத்து கம்முனிச நாடுகளிலும் அதன் தலைவர்களுக்கும் இந்த விதி பொருந்தியே வந்துள்ளது. அந்த வர்க்கத்தில் கருத்து தெரிவிக்கும், பிரச்சாரம் செய்யும் உரிமைகளெல்லாம் இல்லவே இல்லை. வீணாக பொய். ஊர் புளிய மரத்தின் அடியில் துண்டு விரித்து படுத்துக்கொண்டு, எச்சில் துப்பும் வினவின் கருத்து வீண் கருத்து. மக்களே இது காட்டு மிராண்டி கூட்டம்.

        • வீண் அதே தேஞ்ச ரிக்கார்ட். வித விதமான பொய்களுக்கு என்ன பதில் சொல்ல் முடியும்.. இந்த பொய்கள் இப்பொழுது திண்ணை மாமக்கள் மட்டும் தான் பேசி வருகிறார்கள்

        • சரி நாங்கள் காட்டுமிராண்டிகள் என்றால் நீங்கள் நாகரீரகமான தீர்வை முன்வையுங்கள். அது என்ன எங்கே அமல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறோம். கம்யூனிச நாடுகளாக இருந்த வரையில் ரசியாவிலும், சீனாவிலும அரசு பங்கேற்பில் பெரும்பான்மையான மக்கள் கலந்து கொண்டார்கள். இங்கே மக்களுக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இல்லை இது புனிதமான ஜனநாயகம் என்றால் அதற்கு நீங்கள்தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

      • தலையில் ஐஸ் கட்டி மூளைக்கு பதிலாக இருந்தால் கண்கள் அக்னி பார்வையாய் தான் இருக்கும். இப்போது உள்ளே அமைப்பில் என்ன குறைந்து போயிற்ரு!! வீணாக போகும் சீமான் ஒரு கூட்டத்தை கூட்டிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வோட் போடா வேண்டாம் என்று கூறி வரவில்லையா!!! ஜனநாயகத்தில் மக்களின் அனைத்து விதமான கருத்துக்களுக்கும் களம் அமைத்து கொடுப்பது இப்போது உள்ள அமைப்பு தான். நீங்கள் முயலும் கேடு கெட்ட புதிய ஜனநாயகத்தில் தனி குழுவின் ஆதிக்கம் மேலோங்கும். அங்கு ஐந்து ஆண்டுகள் ஆனாலும் மாற்று கிடயாது. உண்மையான திண்ணை மாமாக்கள் நீங்கள் தான். இந்த அமைப்பை நம்பி பிரசாரம் செய்யும் சீமான் கூட நீங்கள் தெரிவிப்பது போன்றே சர்வாதிகாரதிற்க்கான வழி முறையை சொல்ல வில்லை. சீமானின் கருத்துகளில் தவறு காண்கிறேனே ஒழிய வழிமுறைகளில் ஒத்த கருத்து காண்கிறேன். நீங்கள் என்ன தான் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தாலும் உலகம் கமுன்ச நாடுகளின் சர்வாதிகாரத்தை எலும்பு கூடுகளால் பதிவு செய்தே வைத்துள்ளது.

        • இதே சீமானை கொஞ்ச நாள் முன்னால் உள்ளே தள்ளவில்லையா? அப்பொழுது மாத்திரம் எங்கே போனது கருத்து சுதந்திரம்? இந்த அமைபில் என்ன குறை என்று கண் மூடிகொண்டிருப்பவரிடம் என்ன சொல்ல வேண்டும். வீகிலீக்ஸ் படிக்கவில்லையா, விதர்பாவில் தற்கொலைகள், லஞ்சம், ஊழல், சுவிஸ் பேங்கில் கோடிக்கணக்கான கருப்புபணம்,வால்ங்களை திருடுதல், தணியாருக்கு விற்பது, மக்களை அழிப்பது. சமுக சேவகர்களை கொல்வது. இதெல்லாம் எஙே நடந்தது? இந்தியாவில் தானே. இதயெல்லம் இந்த அமைபு ஜீரணித்து த்ள்ளிவிட்டு இப்பொழுது கூட உங்களி போன்றவர்கள் எனா நடந்த்து ஒன்ணுமே நடக்கலியே என் பேச வைக்கிறது. இப்படி மனிதாபிமானம் கிலோ என்ன விலை என்ற நிலை வந்தது

      • //புரட்சிக்கு பின் அது முதலாளித்துவ வர்க்கங்களை ஒடுக்குகின்ற உழைக்கும்மக்களின் அரசாக இருக்கும்.//

        அப்படீன்னு நீங்க சொன்னா அதுதான் உண்மையாகிவிடுமா ? ‘உழைக்கும் மக்களின் அரசு’ என்று சொல்லிக்கிட்டு, அதே உழைக்கும் மக்களை அடிமைகள் போல் நசுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய அதிகார வரக சர்வாதிகாரம் தான் உருவாகும். இதை தான் வரலாறு சொல்கிறது. சும்மா டைலாக் உடாதீங்க. நடந்தது என்னவென்று எங்களுக்கும் தெரியும்.

    • நண்பர் மா.சி. க்கான விளக்கத்தில் நிலபிரபுத்துவ, தரகு முதலாள்த்துவ கும்பலின் அரசியல் கட்சிகள் தடை செய்யப்படும் என்று வினவு குறிப்பிட்டுள்ளது. இதில் மேலதிகமாக ஏன் தடை செய்யப்படுகிறது என்பதற்கு மா.சி.யே எழுப்பிய ஒரு பழைய கேள்வியில் விடை உள்ளது. அவரது அந்தக் கேள்விக்கான ப்ழைய பதில் பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன். இதில் எதுவும் இந்த பதிவில் விவாதம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. அப்படியான எதிர்பார்ப்பில் யாரும் இருந்தால் மன்னிக்கவும்.

      @@@@@@@@@@@@@@
      மா. சி.யின் வாதங்கள் சிறிது குழப்பகரமாக இருக்கின்றன. எனக்கென்னவோ அவருக்கு அஹிம்சை என்ற வார்த்தையின் மீது இருக்கும் காதல் போல சர்வாதிகாரம் என்ற வார்த்தையின் மீது வெறுப்பு இருக்கிறதுஎன்று நினைக்கிறேன். இதை சும்மா மேம்போக்காக சொல்லவில்லை அவரது முரன்பாடான வாதங்களின் ஊடாக பார்த்தே அனுமானிக்கிறேன். மேலும், இதில் விவாதம் நிகழ்த்தி பதிவின் மையப்பொருளிலிருந்து விலகவும் அஞ்சுகிறேன்.

      //நம்முடைய அரசு முறையே தவறு என்று நான் நினைக்கவில்லை. இப்போதைய அரசியல் வியாதிகள், சமூக ஒழுங்கு முறைகள் சீரழிந்து இருப்பதால் இந்த அரசு முறை தவறான திசையில் செலுத்தப்பட்டு மக்கள் துன்பத்துக்கு ஆளாகிறார்கள் என்று நினைக்கிறேன்.

      இப்போதைய (நாடாளுமன்ற மக்களாட்சி, தனிமனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம்) முறை, குறைகள் நிரம்பியதாகி இருந்தாலும், இது வரை முயற்சித்த மற்ற எல்லா முறைகளை விடவும் இதுதான் சிறந்தது என்று உறுதியாக நம்புகிறேன்.

      எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக எதிர்த்து இந்த ஆட்சி முறையை தூக்கி எறிந்து விட்டு “தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரம்” வந்தால் இந்தப் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விடும் என்று நான் நினைக்கவில்லை.//

      இவை மா. சி. இன்று சொன்னவை. நேற்று என்ன சொன்னார் என்றால், முதலாளித்துவ முறையே தவறு என்று சொன்னார்.

      //இந்திய முதலாளித்துவ சுரண்டலை விட ஐரோப்பிய முதாளித்துவ சுரண்டல் தேவையில்லை என்று நாம் சமாதானப்பட்டுக் கொள்ளத் தேவையில்லை. முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்பது எனது கருத்து.//

      முதலாளித்துவத்தை இவர் வெறுப்பதன் அடிப்படையே அதன் சுரண்டல் முறைதான். இதுவரையான மனித குல வரலாற்றில் சுரண்டலின் அதி உச்ச வடிவம் என்பது முதலாளித்துவ வடிவம்தான். இதில் மா.சிக்கு கருத்து வேறுபாடு இருக்காது என்றே கருதுகிறேன். எனில், இத்தகைய சுரண்டல் அமைப்பை விரும்பாத மா.சி. இதற்கு மாற்றாக சுரண்டல் இல்லாத ஒன்றையே விரும்புவார். சுரண்டல் இல்லாத ஒன்று என்றால் அது முதலாளி தொழிலாளி வேறுபாடு இல்லாத அனைவரும் தொழிலாளியாய் இருக்கும் ஒரு சமூகமாகவே இருக்கும். மா. சி. யும் அதைத்தான் சொல்கிறார் என்றே கருதுகிறேன்.

      இங்கு ஒரு பிரச்சினை வருகிறது. புதிய அரசில் முதலாளியும் உள்ளே நுழைந்து அதிகாரத்தை பிடித்துவிடுவானே – சீனா போல என்று பயப்படுகிறார் மாசி.
      //அப்படி வந்து விட்டாலும், இப்போது இருக்கும் தரகு வியாபாரிகள் சட்டையை மாற்றிக் கொண்டு புதிய அதிகார அமைப்பில் நுழைந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். (சீனப் புரட்சிக்குப் பிறகு நடந்தவற்றைப் பற்றி ஓரளவு படித்திருக்கிறேன்)//

      இது நியாயமான பயமே. இதுதான் ரஸ்யா, சீனா சோசலிச சமூகங்களின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள விரும்புவது. சுற்றி எல்லா நாட்டிலும் முதலாளித்துவ சுரண்டல் இருக்கும் போது, முதலாளீத்துவ சுரண்டலை ஒழித்த ஒரு நாடு தனது தனித்துவ பொருளாதாரத்தை முதலாளித்துவத்திடமிருந்து பாதுகாக்க வேண்டுமெனில் உள்நாட்டில் முதலாளி அதிகாரத்துக்கு வராமல் தடுக்க வேண்டும் என்பதே மா.சி.யின் மேலேயுள்ள வரிகளிலிருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடிய விசயம் ஆகும். சரி, அப்படி முதலாளி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்றால் அவனது முதலாளித்துவ அரசியல் கோரிக்கைகள் சட்டரீதியாக ஒடுக்கப்பட்டால்தானே வரமுடியாமல் போகும்?

      ஆஹா, முதலாளித்துவ அரசியல் கோரிக்கை எதிரான ஒரு அரசியல் கோரிக்கையை அதிகாரத்தில் வலுப்படுத்தும் ஒரு அரசு அமைப்பு முதலாளித்துவ அரசியலைப் பொறுத்த வரையில் முதலாளீகளுக்கு எதிரிகளான பாட்டாளிகளின் அதாவது மக்களின் சர்வாதிகாரம்தானே? இது ஏன் மா.சிக்கு புரியவில்லை என்பது எனக்குப் புரியவில்லை.

      இதனால்தான் சொன்னேன் அவருக்கு சர்வாதிகாரம் என்ற வார்த்தையில்தான் பிரச்சினை, கருத்துநிலைப்பாட்டில் அல்ல என்று. என்ன மா.சி. சரியாகச் சொன்னேனா இல்லை குழப்பிவிட்டேனா?

      • நண்பர் மா சி சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிரானவர் என்றுதான் கருதுகிறேன். காந்திய வழியிலான தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஆதரிப்பவர் எனில் அதில் அறிவியலின் பங்களிப்பு மற்றும் முன்னேற்றம் பற்றிய கருத்துக்களுக்கு இடமில்லாமல் இருப்பது பற்றி அவருக்கு ஏதும் கருத்தில்லையா என அறிய விரும்புகிறேன்.

  6. இவ்வளவு பேசும் நீங்கள் உங்கள் ”புரட்சி இயக்கத்தை” கட்சியாக மாற்றி மக்களூக்கு நல்லது செய்ய வாருங்கள்…?இந்த ”நடுத்தர வர்க்கம்” என்று கூறுகிறீர்களே….அப்போது நீங்கள் யார்…????…..உங்கள் நிலை என்ன..?மக்களை திருத்துவதா?….அரசாங்கத்தை முறைப்படுத்துவதா?….இல்லை ”சுய விளம்பரமா”???

    • பாலாஜி,

      நாங்கள் ஏற்கனவே ஒரு கட்சியாகத்தான் செயல்படுகிறோம். மக்களின் அன்றாட வாழ்விலிருந்து மாபெரும் அரசியல் பிரச்சினை வரை உண்மையான தீர்வுக்கு போராடுகிறோம். அது குறித்து வினவில் “நாங்கள்” என்ற கேட்டகிரியில் தேடினால் நிறைய செய்திகள் இருக்கும்.

      நடுத்தர வர்க்கத்தை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை. அவர்களும் எங்களது மக்கள் பிரிவில் வருபவர்கள்தான், நட்பு சக்திதான். வாழ்வில் தொழிலாளியைப்போன்றும், சிந்தனையில் முதலாளியைப் போன்றும் கனவில் வாழும் நடுத்தரவர்க்கத்தை ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் தவறாக வழிநடத்துகின்றன. அதை மீட்டெடுக்கத்தான் அவர்களை விமரிசனம் செய்கிறோம். எங்கள் தோழர்கள் பலரும் நடுத்தர வர்க்கப்பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் சிந்தனையில் உழைக்கும் மக்களின் தன்மையை அடைய பயிற்சி எடுக்கிறார்கள்.

      நாங்கள் இந்த தேர்தலின் மூலம் மாற்றம் வரும் என்பது பொய் என்கிறோம். அதற்கு மாற்றாக ஒரு புரட்சி, மக்கள் பங்கேற்கும் புரட்சியின் மூலமே புதிய அரசமைப்பை ஏற்படுத்துவது சரியாக இருக்கும் என்கிறோம். இதைத்தான் மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறோம். நீங்களும் இது குறித்து விரிவாக அறிந்து கொண்டு உங்களால் முடிந்த அளவு இந்த பணியில் பங்கேற்கலாம்.

      • நன்றி……நல்லது நடக்குமெனில் நானும் இதில் பங்கு கொள்கிறேன்….

      • (ஷேர் மார்க்கெட்டில் கொஞ்சம் பணம் பண்ற வேலை இருந்ததால சார் சில நாளா மிஸ்ஸிங், வினவே வந்ததிட்டதனால நானும் இதோ வந்திட்டேன்)

        ஆங், ஏன்னா சொன்னீங்க ? தேர்தல் மூலம் வரும் மாற்றம் பொய்யா – உங்க புரட்சி மூலம் வரும் மாற்றம் மட்டும் மெய்யா ? முதலில் யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் அதைச் சொல்லுங்கள் !! உங்கள் மொத்த சித்தாந்தமே ஒரு அடக்குமுறை நோக்கு கொண்டது. ஜனநாயகத்தில் குறைந்தபட்சம் அஞ்சு வருடத்திற்கு ஒரு முறையாவது உதவாக்கரைகளை தூக்கியடிக்கும் வாய்ப்பு உண்டு (உதா:1996), உங்கள் அடக்குமுறை அரசு வந்தால், ஒரே கட்சிதான், அவன் போடும் ஆட்டம் மட்டும் தான், கேட்பார் கிடையாது,

        மக்களே – கம்யுநிஸ்டுகளைப் பற்றி தெரிய வேண்டுமா ? Gulag Archipelago என்று தேடிப் பாருங்கள். கருத்துச் சுதந்திரத்திற்கு பாடுபட்டு சைபீரியாவில் மடிந்து போன பல்லாயிரக்கணக்கான உயிர்களின் அவலக்கதை தெரிய வரும்.

        ஆமாம் வினவு – நேற்று சீனாவில் WeiWei என்ற கலைஞரைப் பிடித்து ஜெயிலில் போட்டர்களாமே? சும்மா சொல்லுங்க, ஏன் ரொம்ப கமுக்கமா இருக்கீங்க ? வாயில எதாவது சைனீஸ் கொழுக்கட்டையா ?

        நடுத்தர வர்க்கம் என்கிறீர்களே, அதையாவது கொஞ்சம் விளக்குங்களேன்? எவ்வளவு சம்பாதித்தால் (அல்லது சொத்து இருந்தால்) நடுத்தர வர்க்கம் ?

        • வீண் அதே தேஞ்ச ரிக்கார்ட். வித விதமான பொய்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்.. இந்த பொய்கள் இப்பொழுது திண்ணை மாமக்கள் மட்டும் தான் பேசி வருகிறார்கள்.

          சீனா போலி கம்யுனிஸ்ட் என்று சொல்லியாகிவிட்டது மீண்டும் சீனா தானா என்று வந்தால் ம்ச்..

        • இந்த உலகில் கோடிக்கணக்கான மக்களை கொன்றொழித்த்து முதலாளித்துவம்தான், கம்யூனிசமல்ல. சென்ற ஆண்டு அமைதிக்கான நோபல்பரிசு ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரித்த ஒரு சீனருக்குதான் கிடைத்த்து. அது ஏன் என்று கருதுகிறீர்கள்? இந்தியாவில் காஷமீரிலும், தண்டகாரண்யாவிலும், வடகிழக்கிலும், அன்றாடம் கொல்லப்படும் மக்களை அறிவீர்களா? கம்யூனிச வெறுப்பு உங்களிடம் இருப்பது பிரச்சினை அல்ல. ஆனால் இன்று நடக்கும் இந்த மனிதவிரோதங்களையெல்லாம் ஒன்றுமில்லை என்று தள்ளுபடி செய்கிறீர்கள் அல்லவா அதுதான் சகிக்க முடியவில்லை.

        • உண்மை இது தான் –

          சிந்திக்கும் மக்கள் உங்களை வெறுத்து ஒதுக்கி விட்டார்கள்.

          சிந்திக்காத மக்கள் இலவசங்கள் பின்னால் ஓடுகிறார்கள்,

          இருவர் மனத்திலும் இனிமேல் உங்களுக்கு இடமில்லை !!

          ‘சீ சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று தேர்தலை புறக்கணிக்கிறீர்கள். கேள்வி கேட்டால் கோபமும் அவமானமும் பிடுங்குகிறது.

          • மீண்டும் உபநிடதம் போல பூடகமாக பேசுகிறீர்கள், புரியவில்லையே? நீங்கள் சிந்திக்கும் மக்களிலா இல்லை சிந்திக்காத மக்களா எந்த வகையில் வருகிறீர்கள் என்று சொன்னால் உதவியாக இருக்கும். செல்லுமிடமெல்லாம் மக்கள் எங்களை வரவேற்கவே செய்கிறார்கள் அது இணையமாகவோ, இல்லை குடியிருப்பாகவோ எதுவாகயிருந்தாலும்.

            உங்களுக்கு எங்கள் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. தெரிந்தால் நொடியில் அதற்கு சிகிச்சை அளித்து மகிழ்ச்சியை வரவழைக்கலாம், கொஞ்சம் ஒத்துழையுங்கள்.

        • அது என்னங்க தடபுட சத்தம், ஒண்ணும் புரிலீங்களே…

          நான் ரொம்ப சிம்பிளா தி.ராஜேந்தர் மாதிரி சொல்றேங்க – ஒங்க மார்க்கெட் அவுட்டு- அதுல நோ டவுட்டு !!

          மார்க்கெட் இருக்கு, மக்கள் ஆதரவு இருக்குன்னு சொன்னா ஒண்ணு தேர்தல்ல நில்லுங்க. இல்ல நிஜமாவே எப்ப புரட்சி வரும்னு சொல்லி வச்சு நடத்தி காமிங்க.

          சும்மா கோஷம் போட்டு, உண்டி குலுக்கி ஊர ஏமாத்தி சாப்ட்ட காலம்லாம் போயாச்சு.

        • தண்டகாரணியம்!!!! ஆமாம் இந்த தேசத்து வளங்கள் என்ன என்று தெரியாமலேயே ஒரு குழு வாழ்ந்து கொண்டிருக்கும் இடங்களில் வளங்களை தேசத்திற்காக அகழ்வது மிகவும் பெரிய குற்றமா என்ன. இழப்பீடு எவ்வளவு அதன் கணக்கீடு எவ்வாறு என்பதில் வேண்டுமானால் மாற்று கருத்துக்கள் இருக்கலாமே ஒழிய வளங்கள் கண்டறிய பட்ட பின் அதை தேசத்தின் ஒட்டு மொத்த பயன் பாட்டிற்கு தர மாட்டோம் என்று “கோலிசோடா”வை சைக்கிளில் கொண்டு சென்ற அந்த காலத்து வியாபாரியை வைத்து கவிதை எழுதி ரசிப்பது மிக பெரிய முட்டாள் தனம்.

      • //தண்டகாரணியம்!!!! ஆமாம் இந்த தேசத்து வளங்கள் என்ன என்று தெரியாமலேயே ஒரு குழு வாழ்ந்து கொண்டிருக்கும் இடங்களில் வளங்களை தேசத்திற்காக அகழ்வது மிகவும் பெரிய குற்றமா என்ன. இழப்பீடு எவ்வளவு அதன் கணக்கீடு எவ்வாறு என்பதில் வேண்டுமானால் மாற்று கருத்துக்கள் இருக்கலாமே ஒழிய வளங்கள் கண்டறிய பட்ட பின் அதை தேசத்தின் ஒட்டு மொத்த பயன் பாட்டிற்கு தர மாட்டோம் என்று “கோலிசோடா”வை சைக்கிளில் கொண்டு சென்ற அந்த காலத்து வியாபாரியை வைத்து கவிதை எழுதி ரசிப்பது மிக பெரிய முட்டாள் தனம்.//

        மேற்படி நண்பரின் தேசம் சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போல தெரிகிறது. தண்டகாரன்யாவில் கண்டறியப்பட்டுள்ளா வளங்கள் மேற்படி நாடுகளுக்குத்தான் கொள்ளையிடப்படவுள்ளது.

    • பாலாஜி,

      இந்த ஓட்டு கட்சி அமைப்பு முறையே தவறு என்கிறோம். இந்த அமைப்பே ஒரு நல்லவனியும் ஊழல்வாதியாக செய்துவிடும், குறிப்பாக மக்க்ளை பங்கேற்கவிடாமல் செய்கிறது, இருக்கும் ஓட்டு பொறுக்கி கும்பலுடன் நாங்கள் வேறு புதிதாக இனைய வேண்டுமா?

      மக்களை திருத்துவது, மேல் உலக ரட்சகன் போல் மக்களௌக்கு நல்ல து செய்வதெல்லாம் அப்படியான அவதாரங்கள் எல்லாம் கதைகளில் மட்டும் தான் சுவரிசியம், உண்மையாக மக்கள் போராட வேண்டும்.

      அப்படி மக்கள் தங்களுக்கான உரிமைகளை போராடி பெற செய்யும் எங்கள் அமைப்புகள் இயங்குகின்றன.

      ஆம், அடுத்து இப்பொழுதுள்ள அரசாங்கம் மக்க்ளை சுரண்டி முத்லாளிகள் மட்டும் வாழ வழிவகை செய்கிறது. அதற்க்கு மாற்றாக
      உழைக்கும் மக்கள தலமையில் அமைப்பை மாற்றுவது. அதை தான் நாங்கள் முன் மொழிகிறோம். சுய விளம்பரம் என்பது எங்கள் நோக்கமில்லை என்பது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்…
      மேலும் தொடர்பு கொள்ளுங்கள் எழுதியே அனைத்தையும் விளக்க முடியுமா தெரியவில்லை..

  7. ஐயா..இங்கே கருத்து போடுவதற்கு விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா????????????

    • முடிந்தவரை தமிழில், அநாகரிக சொற்களை தவிர்த்து தாராளமாக யாரும் மறுமொழி எழுதலாம்.

  8. //வாக்களிப்பது மட்டும் இரகசியம் என்று இருக்கும்போது வாக்கில்லை என்பது மட்டும் வெளிப்படையாக தெரியும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள். இதனாலேயே யாரும் தைரியமாக இதை செய்யப் போவதில்லை. ஒரு வேளை நாளை வாக்களிக்கும் எந்திரத்திலேயே 49ஓ கொண்டுவந்தால் பெருந்திரளான மக்கள் அதில் வாக்களிப்பார்கள். ஆனால் அப்படி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதை ஆளும் வர்க்கம் விரும்பாது. ஆகவேதான் இந்த போலி ஜனநாயகத்தை வீழ்த்துவதற்கு இந்த தேர்தலையே நாம் புறக்கணிக்க வேண்டும் என்கிறோம்.//

    உடன்படுகிறேன், அதேசமயம்:
    ****”யாரும் தைரியமாக இதை செய்யப் போவதில்லை. ஒரு வேளை நாளை வாக்களிக்கும் எந்திரத்திலேயே 49ஓ கொண்டுவந்தால் பெருந்திரளான மக்கள் அதில் வாக்களிப்பார்கள்”*****
    __________________________________________________________
    இதற்கு மாற்றாக ஏன் தோழர்கள், மக்களை திரட்டி கூட்டமாக சென்று யாருக்கும் வாக்கு இல்லை (49 – O)என்பதை பதிவு செய்யகூடாது? அதுவே இந்த போலி ஜனநாயகத்திற்கான சரியான பதிலடியாக இருக்கும்.

    அவ்வாறாக இல்லாமல் வீட்டிலிருந்தே புறக்கணித்தால், ஓட்டுபோட விரும்பாத பணக்கார கோமானுக்கும், முதலாளிகளுக்கும் நமக்கும் வித்தியாசம் இன்றி போய்விடாதா?
    ___________________________________________________________

    • மணி,
      49 0 போலி ஜன்நாயகத்தின் எதிர்க்கும் தற்கால ஆயுத்ம் தான், பின் நாம் அமைதியாகிவிட்டால்?

      போலி ஜனநாயகத்தி எதிர்த்து புதிய ஜனநாயகம் உருவாக வேண்டும் அல்லவா.

      அதை முழுவதுமாக புறகணிப்பதே சமரசமற்ற திர்வுக்கான போராட்டமாக இருக்கும். ஆம தேர்தல் புறகணிப்பு நமக்கு செயல் அல்ல போராட்டம். இந்த போலி ஜனநாயகத்திற்குள் வலைய வர நினைப்பவர்கள் தான் 49ஓ

    • மணி,

      49ஓ என்பது குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளர்களை ஏற்கவில்லை, இந்த தேர்தல் அரசியல் அமைப்பு முறையை ஏற்கிறேன் என்று பொருள். நாங்கள் இந்த தேர்தல் அரசியல அமைப்பை போலி ஜனநாயகம் என்கிறோம். எனவே இந்த அமைப்பு முறையை புறக்கணிக்க வேண்டும் என்பதால் 49ஓ வை பயன்படுத்துவது சரியாக இருக்காது. ஆனால் அந்த அளவு கூட மற்றவர்கள் செய்வதை ஆட்சேபிக்கவில்லை. மேலும் இந்த தேர்தல் புறக்கணிப்பு முறையை நாங்கள் வீட்டிலிருந்து செய்யவில்லை. தமிழகம் முழுவதும் மக்களிடம் செய்கிறோம். இந்த முறை பல இடங்களில் பொதுக்கூட்டத்திற்கே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. வரும் காலத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்பதையே சட்ட விரோதம் என்று மாற்றும் நிலையும் வரலாம்.

      ஆயினும் எந்த தடை வந்தாலும் இந்த போராட்டத்தை தொடர்ந்து செய்வோம். மேலும் தேர்தல் காலத்தில் மட்டுமல்ல மற்ற நேரங்களிலும் மக்கள் பிரச்சினையை இந்த அமைப்பு தீர்ப்பதற்கு வக்கற்றாதவும், எதிராகவும் இருப்பதையும் வைத்து இயக்கங்கள் நடத்துகிறோம்.அதில் தேர்தல் புறக்கணிப்பு என்பதும் ஒருபணி

      • //இந்த முறை பல இடங்களில் பொதுக்கூட்டத்திற்கே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. வரும் காலத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்பதையே சட்ட விரோதம் என்று மாற்றும் நிலையும் வரலாம்.//

        இது மட்டுமா? நாத்திகனாக இருப்பது சட்டவிரோதமாகிவிட்டது இந்த ஜனநாயக நாட்டில். யுஐடிக்கு விவரம் சேர்க்க வந்தார்கள் வீட்டுக்கு. மதம் என்ற பிரிவில் நாத்திகன் என்று எழுதுங்கள் என்று சொன்னால், உன்னோட விவரத்தையே கணக்கெடுக்க மாட்டேன் என்று சொல்லிப் போய்விட்டார்க்ள். இதன் பொருள் இந்த நாட்டுக் குடிமகனாக நான் அங்கீகரிக்கப்பட முடியாது என்பதுதானே?

        • சும்மா அடிச்சு விடுங்க. UID விண்ணப்ப படிவத்தில் மதம் பற்றியோ, ஜாதியைப் பற்றியோ எந்த விவரமும் கொடுக்க வேண்டாம். எந்த ஆபீஸர் உங்க கிட்ட வந்து உங்க மதம் என்ன என்று கேட்டார்?

          http://www.iaadhaar.com/forms/enrollment.pdf

          UID (ஆதார்) கார்ட் வழங்குவதே ஜனநாயக விரோதம் என்பதுதானே வினவின் கருத்து. இந்திய பிரஜை அனைவருக்கும் UID கார்ட் வாங்க உரிமை உண்டு. ஆனால் UID கார்ட் வாங்காவிட்டால் அவர் இந்திய பிரஜை இல்லை என்று ஆகிவிடாது.

        • மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள மூன்று படிவங்களில் ஹவுஸ்ஹோல்ட் ஷெட்யூல் படிவத்தில் “மதம்” என்ற பிரிவில் 1. ஹிந்து, 2. இஸ்லாம், 3. கிருஸ்தவம், 4. சீக்கியம், 5. பௌத்தம், 6. சமணம் ஆகிய ஆறு மதங்கள் தவிர “மற்றவை” என்றும் குறிக்க வழி இருக்கிறது. நீங்கள் என்ன மதம் என்று சொல்லுகிறீர்களோ அதை அப்படியே எழுதிக்கொள்ள வேண்டும் என்று கணக்கெடுப்பவர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்

          6.49 You have to record the religion of each member of the household as returned by the
          respondent in reply to this question. Six religions together with their code numbers are listed
          below this question. While recording the response under this question, you have to write the name of religion in the place provided for and also enter its code number in the box appearing at the left hand side (See Fig. 6.46). The codes for religions are only to facilitate data entry and has nothing to do with the number of persons professing that religion or its importance etc.

          6.50 While making entry for any religion other than Hindu, Muslim, Christian, Sikh, Buddhist and Jain, fully record the actual religion as returned for the person under this question. In such a case no entry needs to be made in the box meant for recording Code number. If the person says that she/he has no religion, record ‘no religion’. In this situation too, the box provided at the left of this column would be left blank for use in the office at a later stage. You should not enter into any argument with the household for recording entry under this question.
          (See Fig. 6.47). You are bound to record faithfully whatever religion is returned by the respondent for herself/himself and for other members in the household.

          • ராம்காமேஸ்வரன்,

            சட்டத்தில் இருப்பதோ, அல்லது விதிமுறைகளில் இருப்பதோ இந்தியாவில் அப்படியே பின்பற்றப்படுவதாக நீங்கள் நம்புவது வேடிக்கையாக இருக்கிறது. சான்றாக பள்ளிகளில் சாதியற்றோர் என்று வருபவர்களை அப்படியே சேர்க்க வேண்டும் என்று ஒரு அரசு உத்தரவு இருக்கிறது. ஆனால் இது பல அரசு அதிகாரிகளுக்கே தெரியாது. பள்ளிகளில் சாதியற்றோர் என்று சேர்ப்பதற்கு எங்கள் தோழர்கள் படாதபாடு படுகிறார்கள். அப்படி சொன்னாலே எல்லா பள்ளிகளும் அது சட்டவிரோதம் என்று மறுத்துவிடுகின்றன. பின்னர் அரசு உத்தரவு நகலை எடுத்துக் கொண்டு போய் பல சுற்று விவாதங்களுக்கு பிறகே அப்படி சேர்க்கிறார்கள்.

            இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் வந்து உங்களது குழந்தைகளை அப்படி சேர்த்து பார்க்க வேண்டும். அப்போதுதான் இப்படி சுலபமாக லிங்க் போடும் அபத்தத்தை நீங்களே கேலி செய்வீர்கள். இந்த தேர்தலில் கூட தேர்தல் புறக்கணிப்பு ஜனநாயக விரோதம் என்று தீர்ப்பளித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். உடனே ராம் காமேஸ்வரன் இது பச்சைப்பொய் அரசியல் சட்டத்தில் பேச்சுரிமைக்கு சரத்து இருக்கிறது என்று லிங்க் போடுவார்.

            கொஞ்சம் கவுரவம் பாக்காம இங்க வந்து கொஞ்சநாள் நாங்க சொல்ற மாதிரி வாழ்ந்து பாருங்கள் ராம், இணையம் புரியவைக்காத பல விசயங்களை புரிந்து கொள்வீர்கள்.

        • அஜ்மல் கஸஃபை கூட மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்த்த ஃபாசிஸ, பார்ப்பணிய, ஆதிக்கசாதி, மேல்சாதி இந்திய அரசு, அசுரன் அவர்கள் “நாத்திகர்” என்ற ஒரே காரணத்திற்காக வேண்டுமென்றே சதி செய்து சேர்க்காமல் விட்டதைக் கண்டித்து ம.க.இ.க வினர் நாடு தழுவிய உண்ணும் விரதத்தை மேற்கொள்ளுவார்கள்.

          http://articles.timesofindia.indiatimes.com/2011-02-25/mumbai/28633795_1_arthur-road-jail-enumerators-census-staff

        • பக்கத்திலேயே தனது ஆதர்ஷ புருஷன் நரேந்திர மோடியின் குஜராத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று குற்றம் சாட்டியுள்ள சமூக அர்வலர் மல்லிகா சாராபாயை எதிர்த்து ராம் காமேஷ்வரன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்

          http://indiatoday.intoday.in/site/story/mallika-sarabhai-slams-anna-hazare-for-praising-gujarat-cm/1/134982.html

      • மதிப்பிற்குரிய வினவு,

        //சட்டத்தில் இருப்பதோ, அல்லது விதிமுறைகளில் இருப்பதோ இந்தியாவில் அப்படியே பின்பற்றப்படுவதாக நீங்கள் நம்புவது வேடிக்கையாக இருக்கிறது//

        49-O கூட சட்ட விதிகளில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. ஆனால் அதைப் பற்றிய பிரஞ்னையும், பயன் படுத்த வேண்டும் என்ற ஆர்வமும், இப்பொழுது சில வருடங்களாக ஞாநி போனறவர்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருவதால் பிரபலமடைந்து வருகிறது (at least நடுத்தர வர்கத்தினரிடம்). அசுரன் மாதிரி விஷயஞானமுள்ளவர்களிடம் சென்சஸ் அதிகாரிகள் மதம் பற்றிய கேள்விக்கு “நாத்திகர்” என்பதை குறித்துக்கொள்ள மறுத்துவிட்டதாக சொல்வதை நம்ப நான் இந்தியாவில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. (நானும் 28 வருஷம் இந்தியாவில் குப்பை கொட்டியவந்தான்)

        • மன்னிக்கவும் ராம், நீங்கள் இந்தியாவில் வாழ்ந்த்தினாலேயே இந்தியாவைப்பற்றி அறிந்து கொண்டீர்கள் என்பதை ஏற்க இயலவில்லை. சான்றாக நீங்கள் சொல்லியிருக்கும் 49 ஓ பற்றிய விழிப்புணர்வு வந்த இக்காலத்தில்தான் தேர்தல் அரசியலில் மக்களின் பங்கேற்பு என்பது தேவையில்லை என்ற நிலைமை வளர்ந்து விட்டது. அதைத்தான் இந்த கட்டுரை கூறுகிறது. அரசியல், தேர்தல் எல்லாம் கார்ப்பரேட் கட்சிகளுக்கு மட்டும்தான் என்று ஆகிவிட்டது. தேர்தல் கமிஷன் கெடுபிடிகளெல்லாம் அதை நோக்கித்தான் இருக்கின்றன. ஆகவே உண்மையான இந்தியாவைப்பற்றி அறிந்து கொள்ள நீங்கள் எங்களுடன் வாழ வேண்டுமென்ற கோரிக்கையை மீண்டும் வைக்கிறேன்.

    • 49O அடிப்படை ஜனநாயக முறை தேர்தலுக்கு விரோதமானதாக உள்ளது. ஏனேனில் யார் 49O போட்டார் என்பது ரகசியமாக வைக்கப்படுவதில்லை. ஜனநாயகத் தேர்தலின் உயிர்நாடியே ரகசியத் தன்மைதான் ஆனால் அதனை மீறி 49O போட்டவரை காட்டிக் கொடுக்கிறது இந்தியத் தேர்தல்.

    • //communisam என்பதற்கு ஒரு வார்த்தையில் அர்த்தம் சொல்லுங்கள்//

      மனிதாபிமானம் – மனிதத்தின் சாரம் கம்யூனிசம்

      • மாவோவும், ஸ்டாலினும் பண்ணிய படுகொலைகள் லட்சக்கணக்கில் இருக்கும். அவங்க தோழர்கள் தான் மனிதாபிமானத்தை பத்தி பேசுறாங்க.

        • ஸ்டாலினால் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிக்கையாளர் ’அன்னா லூயி’ அவர்கள் எழுதிய ’Stalin era’ என்ற நூல் கிடைத்தால் படிக்கவும். குருஷேவினால் கூறப்பட்ட பொய்களை இன்றளவும் சுமந்து திரியும் உம்மைப் போன்றோருக்கு ஸ்டாலின் காலக்கட்டத்திலேயே வாழ்ந்த ஒருவரால் எழுதப்பட்ட அந்நூல் சிறந்த பதிலாக இருக்கும்.

  9. //ஒரு வேளை நாளை வாக்களிக்கும் எந்திரத்திலேயே 49ஓ கொண்டுவந்தால் பெருந்திரளான மக்கள் அதில் வாக்களிப்பார்கள். ஆனால் அப்படி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதை ஆளும் வர்க்கம் விரும்பாது.//

    மிகவும் அற்புதமான கருத்துக்கள். ஒவ்வொரு வாக்கியங்களும் சாட்டையடிதான் போங்கள்.

    இந்த 49 ஓவுக்காக பொத்தானை ஒவ்வொரு இயந்திரத்திலும் வைக்க வேண்டும். 49ஓவுக்கு பதிவாகும் வாக்குகள் 20 சதவீதம் இருந்தால். தேர்தலை ரத்து செய்து விட்டு. மறு தேர்தல் நடத்த வேண்டும். அதுவும் தற்போது போட்டியிட்ட வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடாதபடி தகுதிஇழப்பு செய்ய வேண்டும். அப்படி ஒரு சட்டத் திருத்தம் செய்தால் இந்திய ஜனநாகயம் செழித்தோங்குவதை நாம் கண்ணால் காணலாம். ஆனால் நீங்கள் சொல்வது போல் சொந்த செலவில் சூனியம் வைக்க யார் முன் வருவார்.

  10. What a stupid ! I am.
    I saw the news and photo that Jaya came by helicopter for election works but I never thought as you said….
    your views are different , but no choice , it is correct.. even though it is bitter .. the perspective is right . yes after reading the article only I came to the conclusion how stupid my thought was…
    regards
    RV

  11. வினவு நீங்கள் தேர்தலைப்புறக்கணித்தாலும் மக்கள் வாக்களித்து ஒரு அரசை தேர்ந்தெடுக்கதானே போகிறார்கள்.அப்போ உங்களுடைய தேர்தல் புறக்கணிப்பு என்பது தோல்வி தானே. சரி உங்களை விருப்பப்படியே பெரும்பான்மையான மக்கள் தேர்தலைப்புறக்கணித்து விட்டு தன்னுடைய வேலைகளிலே கவணத்தை செலுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வொம்.அவர்களுக்கு நீங்கள் என்ன பதிலை தரப்பேகிறீர்கள்.ஏற்கனவே இந்தியாவில் பாதிக்குமேல் தேர்தலில் வாக்களிப்பது கிடையாது. அரசு காண்பிக்கும் ஓட்டு சதவீதம் எல்லாமே பொய் சதவிதம் தான்.அப்படி இருக்கையில் இராணுவ ஆட்சிதானே வரும்.அறிவினால் மக்களின் மனங்களை வென்று புரட்சி செய்யபோகிறீர்களா? அப்படி முடியும் என்றால் சாதியை என்றே ஒழித்து இருக்களாமே!

    • தமிழன்,

      முதலில் இந்த ஜனநாயகம் போலியானது, மக்களுக்கு எதிரானது என்றால் அதற்கு மாற்று நாம்தான் உருவாக்க வேண்டும். தேர்தலை புறக்கணிப்பை இன்று மக்கள் ஏற்காமல் இருக்கலாம். ஆனால் இந்த அமைப்பை சரியல்ல என்பதை அவர்கள் ஏற்கத்தானே செய்கிறார்கள்? ஆக நம் பணி ஒரு தேர்தலில் முடிந்துவிடும் ஒன்றல்ல. தேர்தல் புறக்கணிப்பு வெற்றிகரமாக நடக்கும்போது நாம் மாற்று மக்கள் அதிகாரத்தையும் கூடவே கட்டியமைக்க வேண்டும். அதன் வளர்ச்சியில் புதிய அரசும் அமைப்பும் உருவாக்கப்படும். இதை ஒரு தேர்தல் வெற்றி போல எளிமைப்படுத்தி பார்க்க இயலாது. கல்வி, நீதி, நிர்வாகம், சுகராதரம் முதலான பல துறைகளில் இந்த அமைப்புக்கெதிராக போர்க்குணத்துடன் நாம் போராடும் போது கூட துறை சார்ந்த மாற்றுகளை உருவாக்க முடியும். இறுதியில் ஒட்டு மொத்தமாக இந்த அரசியல் அமைப்பு காலாவதியாகியே தீரும். அதுதான் மக்கள் புரட்சி

  12. ஒரு சிலர் எது நடந்தாலும் எதிர்பவர்களாக இருப்பார்கள்.

    அது போல் தான் வினவும். நீங்க என்ன தான் சொல்லவரிங்க….

    தேர்தல் கமிஷன் செய்றது தப்புன்னா?, சரி என்னதான் செய்யனும் சொல்லுங்க.. விரிவா பதிவேழுதனும், நேர பேசலாம். இப்படி சொல்லமா, comment ல் முதல பதில் சொல்லுங்க…

    தேர்தலை புறக்கணிச்சுட்டா என்ன நடக்கும்? எல்லாரும் புறக்கணிச்சுட முடியும?. கட்சிகராங்க. பொது மக்கள் எல்லாம் எப்படி புறக்கணிப்பாங்க சொல்லுங்க. சரி புறக்கணிக்கிறார்கள் வைங்க. எவன் தேர்தல்ல நிக்குரானொ அவனே ஒட்டு போட்டுப்பான், அவன் சொந்த காரங்க ஒட்டு போடுவாங்க. அப்படி பார்த்த எந்த வேட்பாளருக்கு அதிக வாரிசு இருக்கோ அவன் ஜெயிக்கப்போறான்.

    என்ன தான் சொல்லவரிங்க நீங்க… சும்மா எத பார்த்தாலும் எதிர்த்து கிட்டே இருக்கிங்க தவிர உருபடியா எதுவும் இல்லை.

    நடுதர வார்க்கம் என்ன செய்யனும் சொல்லுங்க. உங்கள மாதிரி ஒன்னுத்துக்கும் உதவாம பேசிகிட்டே இருக்கனுமா?….

    தேர்தலை புறக்கணிச்சுட்டு என்னய்யா செய்ய சொல்ரிங்க

    • தேர்தலை புறக்கணித்தால் மட்டும் போதாது இந்த போலி ஜனநாயக அரசை தூக்கி எறிய வேண்டும். அதற்கு புதிய ஜனநாயக புரட்சி வேண்டும். புதிய ஜனநாயக புரட்சில் ஓட்டுப் போட்டு தேர்தெடுக்கபடும் பிரதிநிதிகள் தவறு செய்தால் திருப்பி அழைக்கப்படும் உரிமை இருக்கும். அதிகாரிகள் திட்டங்களை செயல்படுத்தாமல் இருந்தாலோ ஊழல் செய்தாலோ கண்டிக்கப்படுவர் திரும்பவும் தவறு செய்தால் பணியை விட்டு தூக்கபடுவர்

    • //தேர்தல் கமிஷன் செய்றது தப்புன்னா?, சரி என்னதான் செய்யனும் சொல்லுங்க.. விரிவா பதிவேழுதனும், நேர பேசலாம். இப்படி சொல்லமா, comment ல் முதல பதில் சொல்லுங்க…//

      வோட்டு போடுறதுக்கு நேரா போயி கியூவில நிக்கிறீங்களா, இல்ல அந்த ‘ஜனநாயகக் கடமைய’ இருந்த இடத்திலேயே ஆன்லைன்ல செய்றீங்களா? நம்மள மாதிரி நடுத்தர வர்க்கம் போடுற சீனுக்கு அளவே இல்ல பாஸ்.

    • சரண்,

      கோடிக்கணக்கான மக்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும், அரசு, தேர்தல், ஜனநாயகம் குறித்த விசய்ங்களை ஒரு இண்ஸ்டன்ட் பாப்கார்ன் போல சட்டென்று புரியவைத்துவிட முடியாது. என்ன இருந்தாலும் உடனடி லாட்டரி போல சமூக விடுதலையை அணுகவும் முடியாது. இந்த கட்டுரையில் அரசும் அதன் அங்கமான தேர்தல் கமிழஷனும் பாசிச மயமாகி வருவதையும், இந்த போலி ஜனநாயகத்தில் மக்கள் பங்கேற்பு என்பதை அதிவேகமாக தடை செய்யப்படுவதையும் விளக்கியிருக்கிறோம். இது குறித்து உங்கள் கருத்து என்ன? இதை ஏற்கும் பட்சத்தில் நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன? நாங்கள் இணையத்தில் மட்டுல்ல மக்கள் களத்திலும் தீவிரமாக வேலை செய்கிறோம். எனினும் இணையத்தில் விரைவாக சம்பாதிப்பது எப்படி, பங்கு சந்தையில் உடனடியாக பணம் அள்ளுவது எப்படி என்பது போல உடனடியாக சமூக விடுதலை என்று ஒன்று கிடையாது.

  13. என்ன வினவு பதிலே வரவில்லை. நான் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். தேர்தல் புறக்கணிப்பு என்பது எதற்கு? இதற்குள் சமுதாயப்பிரசனைகளை வேகப்படுத்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு என்பதுதானே உள்குத்து.

    • //நெல்லை மணி
      தேர்தலை புறக்கணித்தால் மட்டும் போதாது இந்த போலி ஜனநாயக அரசை தூக்கி எறிய வேண்டும். அதற்கு புதிய ஜனநாயக புரட்சி வேண்டும். புதிய ஜனநாயக புரட்சில் ஓட்டுப் போட்டு தேர்தெடுக்கபடும் பிரதிநிதிகள் தவறு செய்தால் திருப்பி அழைக்கப்படும் உரிமை இருக்கும். அதிகாரிகள் திட்டங்களை செயல்படுத்தாமல் இருந்தாலோ ஊழல் செய்தாலோ கண்டிக்கப்படுவர் திரும்பவும் தவறு செய்தால் பணியை விட்டு தூக்கபடுவர்

      ///

      • அய்யா அக்னி//

        நான் புதிய ஜனநாயக புரட்சியைப்பற்றியும் அதில் இருக்கும் சட்டமுறைகளைப்பற்றியும் பேசவில்லை.ஓட்டு போடாதே புறக்கணியுங்கள் என்று சொன்னீர்களே,அதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.ஓட்டு போடுவார்கள்.அதனால் இந்த பிரசாரம் தோல்வி தானே என்பது என் கேள்வி?

        • தமிழன்,

          இப்பொழுது நாம் எடுத்திருக்கும் தேர்தல் புறகணிப்பு போராட்டம், இன்று உடனே வெற்றி பெறாது. சொன்னவுடனே தமிழ்நாடே தேர்தல் புறகணிக்கும் என்ற கற்பனையில் நாங்கள் இல்லை. ஓவ்வொரு பிரச்சணையிலும் நிரந்திர தீர்வை நோக்கிய போராட்டதை தான் செய்ய வேண்டும்.அதையே செய்கிறோம் உடனடி வெற்றிகளை எதிர்பார்து அல்ல.

          தேர்தல் புறகணிப்பிற்கு பின் உட்காருவது அல்ல திட்டம், அதை தொடர்ந்து போராடியே ஆக வேண்டும். மக்கள் மனங்களை மாற்றும் வசிய வித்தைகள் செய்வது அல்ல நம் போராட்டம், மாறாக அவர்களுக்கு சமுக விஞ்ஞானத்தையும், சமுக மாற்றதிற்கான போரட்டதின் அவசியத்தையும் சொல்லி போராட வைப்பது தான் நம் அரசியல்.

          தற்கால சூழ்நிலையில் நீங்கள் ஓட்டு போட்டாலும் கூட ரிஸல்ட் முதலாளிகளுக்கு சாதகமாக வரும். ஓட்டு போடவில்லை என்றாலும் முதலாளிகளுக்கு சாதகமாக தான் வரும்.சும்ம இருந்து விட சொல்லுகிறீர்களா?

          மீண்டும் இதற்கான செயல் திட்டம் எழுதியே சொல்ல முடியுமா? தொடர்பு கொண்டால் விள‌க்குவது எளிது. இல்லை என்றால் மேலும் உங்கள் கருத்துகள் கேள்விகள் மூலமே விவாதிக்கலாம். நீங்கள் முடிவு செய்யுங்கள்.

          தயவு செய்து இந்த கட்டுரைக்கான பின்னூட்டங்கல் அனைத்தையும் ஒரு முறை படித்துவிடுமாறு கேட்டுகொள்கிறேன்

        • தமிழன்,

          நீங்கள் ஒரு இயக்கம் செயல்படுத்தும் பல்வேறு இயக்கங்களில் ஒன்றை மட்டும் தனியே பிய்த்து எடுத்து அதற்கு மட்டும் தனியே விளக்கம் கேட்டுப் புரிந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது.
          நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்வதை மக்களிடையே நாம் கொண்டு முன்னெடுத்துச் செல்லும் பிற இயக்கங்களோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.

          நாங்கள் நடப்பிலிருக்கும் ஜனநாயகம் உண்மையான ஜனநாயகம் இல்லையென்கிறோம். நடப்பிலிருக்கும் சமூக அமைப்பில் மக்களுக்கான அதிகாரம் இல்லையென்கிறோம். மக்களுக்கே
          அதிகாரம் வழங்கும் வகையிலான ஒரு ஜனநாயகப் புரட்சி தேவையென்கிறோம். அதைப் புதிய ஜனநாயகம் என்கிறோம். நடப்பிலிருக்கும் அரசியல் அமைப்பு முறையென்பது மக்களின்
          பங்கேற்பைக் கோருவதில்லை. அது மக்களைத் தன் நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கிறது. உண்மையான ஜனநாயகத்தில் மக்களின் பங்கேற்பே பிரதானமாய் இருக்கும்.
          இப்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தலில் கூட மக்கள் பங்கேற்பு என்பது எந்தளவுக்குக் குறைந்துள்ளது என்பதை நீங்களே உங்கள் அனுபவத்தில் காண்கிறீர்கள். ஒரு கார்பொரேட்
          கம்பெனியை நடத்துவது போலத் தான் ஓட்டுக் கட்சிகளே தங்கள் அமைப்பை நடத்திச் செல்கிறார்கள் – தொண்டர்களின் பங்களிப்பும் பங்கேற்பும் சமீபமாக அறவே குறைந்து
          வருவதை நீங்கள் கண்டதில்லையா? கொடி பிடிக்க, கோஷம் போட, ஊர்வலம் / மாநாடு நடத்த என்று தங்கள் அனைத்து செயல்பாடுகளுக்கும் காசு கொடுத்துத் திரட்டப் படும்
          கூட்டத்தைத் தான் அவர்களே நம்பியிருக்கிறார்கள்.

          அது பக்கம் இருக்கட்டும். ஒரு சமூக மாற்றத்தை இலக்காக வைத்துச் செயல்படும் ஒரு இயக்கம், அந்தச் சமூக மாற்றத்தை சாதிப்பதற்குத் தடையாக இருக்கும் ஒரு செயல்பாட்டை
          அங்கீகரிக்க முடியாது. தேர்தல் என்பது மக்களிடையே நடப்பிலிருக்கும் அரசியல் முறையின் மேலான ஒரு மாயையை ஏற்படுத்துகிறது. அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை
          ஆட்சியாளர்களை ‘தண்டிப்பதற்கு’ இது ஒரு வாய்ப்பைத் தருவதாக நினைக்கிறார்கள். ஆனால், கருணாநிதியோ ஜெயலலிதாவோ தேர்தல்களில் தோற்பதால் மக்கள் நினைத்துக்
          கொள்வது போல் அவர்களே அதை ஒரு தண்டனையாக நினைத்துக் கொள்வதில்லை. சொல்லப்போனால், கருணாநிதியின் ஜென்ம விரோதி போலச் சித்தரிக்கப் படும் ஜெயா- சசி
          கும்பலின் சாராயக் கம்பெனிகளில் இருந்து தான் டாஸ்மாக்கிற்கு சாராய சப்ளையே நடந்து கொண்டிருக்கிறது. ஜெயாவின் ஆட்சிக்காலத்தில் கருணாவின் எந்தத் தொழில்களும்
          எந்தவிதமான பாதிப்புக்கும் உள்ளானதில்லை. எதார்த்தத்தில் இவர்கள் இருவரிடையே முரண்பாடுகள் ஏதும் இல்லையென்பது தான் உண்மை.

          ஆனால், மக்கள் அவ்வாறு நினைக்கிறார்கள். நீங்களும் அவ்வாறே நினைத்துக் கொண்டிருந்திருப்பீர்கள். ஆக, ஒரு மாற்று தேவை என்பதை முன்னிருத்திச் செயல்பட முதல் முக்கியத்
          தேவை நடப்பிலிருக்கும் தவறை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதில் இல்லை. புரட்சியும் சமூக மாற்றமும் வரும் போது வரட்டும் அதுவரை நாமும் போலி ஜனநாயகத் தேர்தல் மலக்
          குட்டையில் முங்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கலாம் என்று நினைப்பது எதார்த்தத்தில் சாத்தியமில்லை. அப்படிச் சொல்லும் இரண்டு போலி கம்யூனிஸ்டுகள் நடைமுறையில்
          எவ்வாறு ஒரு ஆளும் வர்க்கக் கட்சியாகச் சீரழிந்து போயிருக்கிறார்கள் என்று பார்த்திருக்கிறோம் – மட்டுமல்லாமல் நடப்பில் உள்ள் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று
          வந்தால் முதலில் வாரிச் சுருட்டிக் கொண்டு வருவதே இவர்கள் தான்.

          எமது தேர்தல் புறக்கணிப்பு இயக்கங்கள் நடைமுறையில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்திருக்கிறது என்பதை வெறுமனே பௌதீகமான எண்ணிக்கை அளவுகளைக் கொண்டு மட்டும்
          தீர்மானிக்க நினைப்பது சரியல்ல – வரலாற்றில் பெரும் புரட்சிகளைச் சாதித்தவர்களின் துவக்கம் சிறிய எண்ணிக்கையில் தான் இருந்தது என்பதை நீங்கள் உணர வேண்டும்.
          பெரும்காடுகளை எரித்துத் தீர்த்தது சிறிய தீப்பொறிகள் தான். நீங்கள் நீரைக் கொதிக்க வைக்க வேண்டுமென்றால் நூறு டிகிரி வெப்பத்தில் கொதிக்க வைக்க முடியும் – அதற்காக
          நீங்கள் நேரடியாக நூறாவது டிகிரிக்கு சென்று விட முயற்சிப்பீர்களா என்ன? முதலில் பூஜ்ஜியத்திலிருந்து தானே ஆரம்பிப்பீர்கள்? ஆம், பெரும்பாலான மக்கள் தேர்தலில் வாக்களிக்கத் தான் போகிறார்கள். ஆனாலும் நாங்கள் முன்பை விட வளர்ந்திருக்கிறோம் – நிறைய மக்களைச் சந்திக்கிறோம் – இன்னமும் நிறைய பேரைச் சந்திக்க வேண்டும் – உங்களைப்
          போன்ற சமூக ஆர்வம் கொண்டவர்கள் அதற்கு முன்வர வேண்டும்.

  14. //49ஓ என்பது குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளர்களை ஏற்கவில்லை, இந்த தேர்தல் அரசியல் அமைப்பு முறையை ஏற்கிறேன் என்று பொருள். நாங்கள் இந்த தேர்தல் அரசியல அமைப்பை போலி ஜனநாயகம் என்கிறோம். எனவே இந்த அமைப்பு முறையை புறக்கணிக்க வேண்டும் என்பதால் 49ஓ வை பயன்படுத்துவது சரியாக இருக்காது. ஆனால் அந்த அளவு கூட மற்றவர்கள் செய்வதை ஆட்சேபிக்கவில்லை. மேலும் இந்த தேர்தல் புறக்கணிப்பு முறையை நாங்கள் வீட்டிலிருந்து செய்யவில்லை. தமிழகம் முழுவதும் மக்களிடம் செய்கிறோம்//

    Thanks to Vinavu for explaining this cearly, I do know that you are not doing this from your home (as other self centered High class people, managers & charman’s of big companies etc) I appriciate that and thats the reason why I am here everyday to read. 🙂

    Who ever gave me the info on 49 O did not give this point:
    “இந்த தேர்தல் அரசியல் அமைப்பு முறையை ஏற்கிறேன் என்று பொருள்” that is new to me.

    I am also hearing from some of my friends that : During the last parliment election whoever opted for 49 O, those signatures were erased in the ledger once they were gone and their votes were voted for “congress”. do you have any data on this?

    However I am in the ordinary and “unfortunate suituation” of opting for 49 O to diffrentiate me from the “creamy layer” which never wants to vote, (however some of them vote to prevent the media critics). The croud which raised (or now living) in AC rooms, never stood on queues for any reation like ration queue, second class train etc, they never vote. I’m afraid if i dont vote, I’m one among them :(.

    • மணி,
      உங்கள் எண்ணம் சரி தான் வெறும் ஓட்டு போடாமல் இருப்பது மட்டும் மாற்றதிற்கான தீர்வல்ல. நாலை முதலாளிகள் ஓட்டு போடாமல் ஏசி அறையில் இருப்பதும் நாம் செய்யும் தேர்தல் புறகணிப்பிற்க்கு சமமாகாது.

      இந்த அமைப்பை எப்படி உழைக்கும் மக்களுக்கு நல்லது செய்யும் அமைப்பாக மாற்றுவது, அதே நேரம் அதற்க்காக போராடுவதும், அத்னுல் ஒரு பணியாக தேர்தல் புறகணிப்பு செய்வதும் தான் சரியானது.

      தேவை போராடுவது.

  15. //ஆனால் அந்த உரிமைகளை போராடிப் பெற வேண்டும் என்று அவர்களிடம் வேலை செய்கின்ற எம்மைப் போன்ற புரட்சிகர சக்திகள் மட்டும்தான் அப்படி பணம் வாங்குவதை தவறு என்று மக்களிடம் பிரச்சாரம் செய்யும் தகுதி படைத்தவர்கள்.//

    this creates more laughter…

    உங்கள் புரட்சியை பற்றி சொல்லுங்களேன். மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். இணையத்தில் pesuvathu மட்டும் தான் உங்கள் புரட்சியா?
    நீங்கள் சொல்லி மக்கள் தேர்தலை புறக்கணிக்க மாட்டார்கள் enru உங்களுக்கே நிறைய நம்பிக்கை இருக்கும். பிறகு ஏன் இந்த மாதிரி கட்டுரை.

    உங்கள் கட்டுரைகளில் குற்றம் மட்டுமே சொல்லுகிறீர்கள். கடைசியாய் ஒரு வரியில் இதை மாற்றுவோம் என்று சொல்கிறீர்கள். உங்களின் மீது மக்களுக்கு/மற்றவர்களுக்கு நம்பிக்கை வர சிறிய அளவிலாவது ஒன்றை செயல்படுத்த வேண்டும். இது வரைக்கும் நீங்கள் எதையாவது செயல்படுத்தி அதை நான் அறிந்திருக்கா விட்டால் மன்னித்து theriya paduthavum.

    • மிருகம்,

      நீங்கள் தளத்தையும் சரி, இந்த கட்டுரைக்கான பின்னூட்டங்களையும் படிக்கவில்லையா? படியுங்கள்.

      மீண்டும் மீண்டும் கூறிக்கொன்டிருக்கிறோம் மக்கள் திரள் போராட்டம் செய்ய வேண்டும் என்று, திரும்பவும் வந்து ‘இணையத்தில் மட்டும்’ பேசுகிறோம் என்கிறீர்கள்.

      போராட்டங்களை பற்றி தெரிந்துக்கொள்ள‌
      //வினவில் “நாங்கள்” என்ற கேட்டகிரியில் தேடினால் நிறைய செய்திகள் இருக்கும்.//

      அதே மாதிரி கொஞ்சம் யோசியுங்கள் ஒரு சமுக மாற்றதிற்கான கருத்துக்கள், செயல்திட்டங்கள் அனைத்தையும் எழுதியே சொல்ல முடியுமா? உணமையாக இணையத்தில் அப்படி எழுத தொடங்கினால் நாங்கள், நீங்கள் சொல்வது போலவே இணைய புழுக்கள் ஆகிவிடுவோம்.

      நேரம் கிடைத்தால் தொடர்பு கொள்ளுங்கள், விமர்சியுங்கள், விவாதிக்கலாம்.

    • மக்கள் கலை இலக்கியம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
      தேடிப் பார்க்கவும், ‘நேரம் இருந்தால்’…

    • மிருகம்,

      கருத்து ரீதியாக எது சரி, தவறு என்பதை விளக்குகிறோம். அந்த தவறை மாற்றுவதற்காக உண்மையான நடைமுறையிலும் இருக்கிறோம். அதாவது மக்கள் மத்தியில் வேலை செய்கிறோம். இந்த சமூக அமைப்பு, அரசு, அதிகார வர்க்கம் இவற்றுக்கு மாறாக பல விசயங்களை சாதித்திருக்கிறோம். விருத்தாசலத்தில் பள்ளி கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிரான எமது போராட்டம் காரணமாக அரசு அடிபணிந்த்து. பல கிராமங்களில் தீண்டாமை கொடுமையை அகற்றியிருக்கிறோம். பல தொழிற்சாலைகளில் முதலாளிகளை வெற்றி கொண்டு தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டியிருக்கிறோம். பல கல்லூரிகள் விட்டேத்தி எனக்கருதப்படும் மாணவர்களை நாட்டுநலனுக்காக அணிதிரட்டி போராட வைத்திருக்கிறோம். சிதம்பரம் கோவிலில் தமிழை மறுத்து வந்த பார்ப்பனிய ஆதிக்கத்தை வென்று காட்டியிருக்கிறோம். தமிழகம் முழுவதும் எமது தோழர்களிடையே சாதி மறுப்பு திருமணத்தை பரவலாக நடத்தி வருகிறோம். இன்னும் எண்ணிறந்த போராட்டங்கள்…. இந்த போராட்டங்களின் பின்னே கைது , சிறை, ஏன் ஆயுள் தண்டனை வரை எமது தோழர்கள் அனுபவித்து வருகிறார்கள். அந்த வகையில் தேர்தல் புறக்கணிப்பு என்பதையும் அரசு அடக்குமுறைக்கு எதிராக போராடி செய்து வருகிறோம். இன்னும் விரிவாக அறிந்து கொள்ள நேரில் வாருங்கள், பேசலாம்.

      • வினவு, சொல்லுவதற்கு மன்னிக்கணும், சமீபத்தில் சிதம்பரம் சென்றிருந்தேன், கோயிலில் ஆறுமுக சாமியை பார்க்கலாம் என்று தேடினேன், பாவம் அவர் வெளியில் யாசகம் செய்து கொண்டுருந்தார்

        • ஜோஸ் அவர் என்ன பண்ணையாரா? சாமியாரய்யா … யாசகம் பெற்றுத்தான் பல பத்தாண்டுகளாக அவர் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்… நீங்க என்ன எதிர்பார்தீங்கன்னு புரியலயே..

  16. உண்மையில் தேர்தல் கமிசனும்… காப்ரேட் கட்சிகள் கூட்டணியில் இருப்பதாக பார்க்க முடிகிறது…

    இதுவரை தேர்தல் செலவாக இருந்தது… சுவரொட்டி, பேனர், சுவர் விளம்பரங்கள்… இதனை தேர்தல் கமிசம் தடை செய்தது ஏன் என கேட்டால்… தமிழ் நாடு சட்ட மன்றத்தில் இயற்றபட்ட சட்டத்தின் அடிப்படையில் என்கிறார்கள்… கேரளாவிலோ… மே.வங்கத்திலோ இந்த சட்டம் கிடையாதாம்… ஆனால் பிப் 24இல் பு.த. மம்மியில் பர்த் டே, மார் 1இல் தளபதி பிறந்த நாள், டிச 9இல் சொக்க தங்கம் சோனியாஜி பர்த் டே, ஜூன் 3இல் கலைஞர் பிறந்த நாள், ஆக 25இல் பு.க. விஸ்கிகாந்த் அவதார திருநாள், ஜூன் 19இல் ராகுல்ஜி பர்த் டே… இது போன்ற நாட்களில் பேனர்களுக்கும், போஸ்டர்களுக்கும் குறைவிருக்காது… அப்போதெல்லாம் சட்டம் துயில் இருக்கிறது போலும்… இப்போது தேர்தல் கமிசனின் நடவடிக்களை சுய சொரிதல் போல் மகிழும்… பார்ப்பன… நவீன பார்ப்பன அம்பிகள் கண் இருந்தும் குருடர்களாக இருப்பார்களோ?

    கடந்த சில ஆண்டுகளில் கட்சிகளுக்கு செலவு என்றால் மக்களுக்கு நேரடியாக கொடுக்க வேண்டிய பணம்தான்… அதையும் தேர்தல் கமிசன் கட்சிகளுக்கு மிச்சம் செய்து கொடுத்துள்ளது…

    1991இல் நான் படித்த செய்திபடி சுமார் 1000 கோடி அளவு கருப்பு பணம் தேர்தல் மூலம் வெளிவருவதாக இருந்தது… இந்த தேர்தல் கமிசனின் ஓவர் ஆக்டிக் மூலம் கருப்பு பணம் பாதுகாக்கபடுகிறது…

    தேர்தல் நேரங்களில் சம்பாதித்த உழைக்கும் ஓவியர்கள்… சுவரொட்டி ஒட்டுபவர்கள் போன்றவர்களுக்கு ஆப்பு…

    முன்னெல்லாம் இந்த பகுதியில் போட்டியிடுபவர் யார்… யார் என விளம்பரம் மூலம் தெரியும்…

    இப்போது அண்ணா நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது… ஆனால் அண்ணா நகரை சேர்ந்த 3வது மெயின் ரோடு… முதல் 19வது மெயின் ரோடு வரை… சாந்தி காலனி போன்ற முக்கிய பகுதிகள் வில்லிவாக்கம் தொகுதியில் உள்ளது… மேலும் அரும்பாக்கம் முதல் கோடம்பாக்கம் வரை அண்ணா நகர் தொகுதி… வெளியூரில் இருந்து பிரச்சாரம் செய்ய வருபவர்களுக்கு இதெல்லாம் பிரச்சனை… முதலில் இது போன்ற அவர்களின் வேலைகளை சரியாக செய்ய முடியாத தேர்தல் கமிசன்… மக்கள் மூத்திரம் போவதை எல்லாம் வெப் கேமரா மூலம் பதிவு செய்து கொண்டுள்ளது…

  17. ‘நாங்கள்’ என்று வகைப்படுத்தப்பட்ட இடுகைகளை காண்பது இப்போது எளிதாக இல்லை. அப்படி ஒரு tag -ஐ காணவே இல்லை. தளத்தின் மேல் வலப்புறத்தில் ‘பக்கங்கள்’ என்ற தலைப்பின் கீழ் ‘நாங்கள்’ என்ற லிங்கையும் போடலாம்.

    நான்கில் ஒரு பின்னூட்டத்தில் ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள் ‘ என்ற கேள்வி வருகிறது. எனவே அதை முகப்பிலேயே போட முடியுமா என்று பார்க்கவும்.

  18. இந்த ஜனநாயகத்தை காப்பாற்ற குரல் கொடுக்கும் நபர்கள் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு தமிழனுக்கு எதிரா செயல்படும் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் என்ன பன்றது? ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரா எந்த ஓட்டுகட்சி குரல் கொடுத்துச்சி(அறிக்கை விடுரது அல்ல). இங்க தமிழ்நாட்டுல காவிரி,முல்லை பெரியாறு, பாலாறு, ஓகேனகல் இப்படி தமிழனோட எந்த பிரச்சனையாவது இந்த ஓட்டுபொருக்கிங்களால தீர்க்க முடிந்ததா? அமெரிக்க தேர்தல்ல வேணா நாம ஓட்டுபோடலாம்(ஏன்னா அவங்க தானே ந்ம்மை ஆள்வது).

  19. வீண் அதே தேஞ்ச ரிக்கார்ட். வித விதமான பொய்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்.. இந்த பொய்கள் இப்பொழுது திண்ணை மாமக்கள் மட்டும் தான் பேசி வருகிறார்கள்

    • தமிழ்வலது சாரி தனது கொள்கைகளை இலைமறைவு காய்மறைவில்லாமல் முழுவதும் தெரிவித்தாரென்றால் தனியாக க்ச்சேரியை வைத்துக் கொள்ளலாம். அவரால் அது சாத்தியமில்லை என்றால் நீங்களே அதை செய்யலாம். உங்கள் கொள்கைதான் என்ன?

      • நம்ம கொள்கையெல்லாம் ரொம்ப சிம்பிள் – உங்களுக்கு நல்லாவே தெரியுமே !

        ௧) குடியரசு முறை – தேர்தல் மூலம் அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

        ௨) முதலாளித்துவ பொருளாதாரம் – பணம் சம்பாதிப்பதும் உழைப்பும் முன்னேற்றமும் தனி மனித உரிமைகள். நான் நேர்மையாக உள்ளவரை என் விஷயத்தில் தலையிட எவருக்கும் உரிமையில்லை.

  20. வினவு,
    உங்களின் புரச்சிக்கு பின்னான புதிய ஜனநாயகத்தில், காசுமீர், வட கிழக்கு மாநிலங்களின் கதி என்ன? இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கு இடமுண்டா? இல்லை ‘வர்க்கம்’ மட்டும் தானா?

    • நோக்கன்
      முதலில் புரட்சியை ‘எங்கள்’ சொத்து போல வருணிப்பது சரியல்ல. அதற்கு சொந்தக்காரர்கள் மக்க்ள்தான். அவர்கள் பங்கேற்பின்றி அது சாத்தியமல்ல. புரட்சி என்பது சில ஹீரோக்கள் செய்துவிடும் விசயமல்ல. அது சினிமாவில் மட்டுமே சாத்தியம். அடுத்து இந்தியாவில் உள்ள அத்தனை தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. இது வர்க்க நோக்கில்தான் வருகிறது. இனவாத நோக்கிலிருந்து அல்ல.

      • //முதலில் புரட்சியை ‘எங்கள்’ சொத்து போல வருணிப்பது சரியல்ல.// சரி, சாரி.
        “உங்களின் புரச்சிக்கு” என்பது “நீங்கள் சொல்லும் புரச்சிக்கு” என்பதாக வந்திருக்க வேண்டும்.

        //இது வர்க்க நோக்கில்தான் வருகிறது. இனவாத நோக்கிலிருந்து அல்ல.//
        புரியல. விளக்கவும்.

        • நோக்கன்,
          //இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கு இடமுண்டா? இல்லை ‘வர்க்கம்’ மட்டும் தானா? //

          இதில் நீங்கள் குறிப்பிடும் வர்க்கம் என்பது என்ன பொருளில் வருகிறது என்று விள்க்குவீர்களா? அப்போதுதான் உங்களது சந்தேகத்திற்கு விடையளிக்க உதவியாக இருக்கும்.

    • அதாவதுங்க – இந்தியாவை துண்டுபோட்டு கைமா செஞ்சா இவங்களுக்கு கமிஷன், கூட சேர்ந்தா உங்களுக்கு பர்சன்ட் உண்டு, அதாங்க வர்க்கப் போர் !

      ஆனா இந்த சுய நிர்ணயமெல்லாம் இந்தியாவுக்குள்ள தான். சீனாவுல திபெத், உய்குர் இன மக்களுக்கேல்லாம் இந்த உரிமை கிடையாது.

      ஆசாம் மாநிலம் மத்த ஊர் பழங்குடிகளை போட்டு தள்ளினா, அது பரவால்ல. நோ கமெண்ட்ஸ் !! அதே மாதிரி காஷ்மீர் பண்டிட்டுக்கு எல்லாம் சுய நிர்ணயம் கிடையாது, வாய மூடிட்டுருந்தா உசுருக்கு உத்திரவாதம்.

      இதுக்கு பேரூ தாங்க வர்க்கப் போர். ‘வர்க்கம்’னா எப்டி வேணுமானா சொல்லிக்கலாங்க. மதம், இனம், மொழி சாதி, சம்பளம், சொத்து – நேரதுக்கு ஏத்தாப்புல ஏவாரம் செஞ்சி காசு பாக்கலாங்க.

  21. தேர்தல் புறககணிப்பு பொது கூட்டத்துக்குதான் அனுமதியில்லை என்றால் நோட்டீஸ் கொடுத்தவர்களை
    கைது பண்ணி சிறையில் அடைத்துவிட்டது. ஜனநாயக தேர்தல் நடத்தும் போலீசு. வாழ்க ஜனநாயகம் வளர்க
    ஜனநாயகத்தின் துாண்கள்

    • என்னை விடுங்க, இன்னிக்கு நாட்டில் உங்களுக்கும் உங்கள் கொள்கைகளுக்கும் அந்தஸ்து என்ன ?

      இந்நாடு மட்டுமல்ல – உலகம் முழுவதிலும் உங்கள் பேச்சு அடிபட்டுவிட்டது. ஏன் இந்த நிலை என்று யோசிப்பீர்களா ?

  22. \\பணம் வாங்கிக் கொண்டு மக்கள் வாக்களிப்பது அவர்களது சுயமரியாதையை இழப்பதாகும் என்று சுயமரியாதையில் கொடிகட்டிப் பறக்கும் நடுத்தர வர்க்கம் சலித்துக் கொள்கிறது.//

    சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் ஏழைகளிடமும் கையூட்டு வாங்கும்போது எங்கே போகிறது இந்த யோக்கியர்களின் தன்மரியாதை.

    ஏதேனும் மக்கள் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காத்திருக்க நேரிடும் சமயங்களில் ”இவனுங்கள அடிச்சு தொரத்தனும் சார்”என்று அருகில் இருப்பவரின் நெஞ்சில் நஞ்சு கலக்கும் இவர்கள்தான் ரிலையன்சு காய்கறி அங்காடியில் மாலை நேர கழிவு விற்பனைக்காக எச்சிலைக்கு காத்திருக்கும் சொறி நாயை போல ஓரிரு பத்து ரூபாய்களை மிச்சப் படுத்த சலிக்காமல் காத்திருக்கிறார்கள்.அப்போது எங்கே போகிறது மான உணர்ச்சி.

    குளிரூட்டப்பட்ட அங்காடிகளில் என்ன விலை போட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிட்டு கடைசியில் ”நியு இயர் கிப்ட் ஒண்ணுமில்லைங்களா” ”காம்ப்ளிமென்ட் என்ன சார் கொடுக்கறீங்க”என்று காது வரை பல்லை காட்டும்போது எங்கே போகிறது இவர்களின் தன்மரியாதை.

    அவ்வளவு ஏன்.வேகாத வெயிலில் காய்கறி கூடையை தன் வீட்டு வாசலுக்கே தலையில் சுமந்து கொண்டுவந்து விற்பனை செய்யும் வயதான மூதாட்டியிடமும் ”கொசுறு” கேட்டு வாங்கித் தின்னும் இந்த யோக்கியர்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்களை குறை கூற என்ன யோக்கியதை இருக்கிறது.

    • அதாவது இந்திய ஜன(பண)நாயகம் புற்றுநோய் முத்தி படுத்த படுக்கையாகி விட்டது, அதனால் அன்னா ஹசாரே, தேர்தல் கமிஷன் மாதிரியான டாக்டர்கள் செய்யும் சிகிச்சையெல்லாம் சரி வராது என்கிறீர்கள். ஸ்டாலின் மாதிரி அதிரடி வைத்தியரொருவரை ம.க.இ.க எப்படியாவது இம்போர்ட் பண்ணிவிடுவார்கள், அதுவரை வெயிட் பண்ணுங்கள் என்று சொல்கிறீர்கள்.

  23. வினவிடம் ஒரு சந்தேகம்:
    விஞ்சான கம்யூனிசத்தின் மூலவர்களான மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்துவத்தில் இருந்து சோஷியலிசத்திற்கு மாறும் சமூக மாற்றம் என்பது புரட்சியின் வழியாகவே நடைபெறும் என்று இயக்கவிதிகளின் அடிப்படையில் நிறுவினார்கள. ஆனால், சோஷியலிசத்தில் இருந்து கம்யூனிசத்திற்கு மாறும் போது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை குறிப்பிட்டார்கள். இது எந்த அடிப்படையில் என்று கூற முடியுமா?, பாரீஸ் கம்யூனின் வீழ்ச்சியை பார்த்த பிறகுதான் மார்க்ஸ், சோஷியலிசத்தில் இருந்து கம்யூனிசத்திற்கு மாறும் போது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முன் வைத்தார் அல்லவா, எனவே, இது இயக்கவிதியின் அடிப்படையில் அல்லாமல், நடைமுறையில் இருந்து வருவதால் இதை (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்) விஞ்சான பூர்வமானது என்று ஏற்க முடியுமா? அல்லது இதில் மறுபரிசீலனை உண்டா?

    • விழிவேந்தன், வர்க்கங்கள் இருக்கும் வரை அரசு இருக்கும். எனவே முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறுவதோடு, சோசலிசத்திலிருந்து வர்க்கமற்ற கம்யூனிச அமைப்பு அடையப்படும் வரை பாட்டாளி வர்க்க சர்வாதிகரா அரசு இருக்கும். வர்க்கங்களற்ற கம்யூனிச அமைப்பு வரும் போது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு தேவை இருக்காது. அப்போது அரசின் தன்மையே மாறுபடும். எனவே இது ஆசான்கள் சொன்னபடியும், இயக்கவியல் அடிப்படையிலும் சரியானதே. முதலாளித்துவத்தை வீழ்த்துவதறத்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம் என்பதை மார்க்ஸ் கூறியிருந்தாலும் பின்னர் லெனின்தான் அதை இன்னும் அழுத்தமாக விளக்கினார். ஏனெனில் லெனின் காலத்தில் முதலாளித்துவத்த்தை வீழ்த்தும் வரலாற்றுப்பணியில் பாட்டாளி வர்க்கம் நின்று கொண்டிருந்தது. ஆகவே இதை வெறும் நடைமுறையிலிருந்து மட்டும் விதித்தாக கொள்ள முடியாது. அல்லது நடைமுறையின் பிரச்சினையை இயக்கவியல் அடிப்படையில் தீர்க்கும்போது அது புதிய பரிமாணத்தை ஆழத்தை அடைகிறது. அதனால்தான் மாக்சியம் என்றும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்க முடியாது.

      • //சோசலிசத்திலிருந்து வர்க்கமற்ற கம்யூனிச அமைப்பு அடையப்படும் வரை பாட்டாளி வர்க்க சர்வாதிகரா அரசு இருக்கும்.//

        அது சர்வாதிகாரமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?, மீண்டும் எழ முயற்சிக்கும் முதலாளித்துவத்தை வீழ்த்த அந்த சர்வாதிகாரம் வேண்டும் என்றுதான் நானும் எண்ணியிருந்தேன், ஆனால் அது ஏன் ஒரு உண்மையான ஜனனாயகமாக இருக்க கூடாது, முதலாளித்துவம் தெரிந்தோ தெரியாமலோ நமக்கு அளித்த கொடை (கருத்தியல் ரீதியிலான) ஜனனாயகம், அதைதானே நான் நடைமுறைப்படுத்தி வள்ர்த்தெடுக்க வேண்டும். குருசேவை நம்பியா சோவியத் யூனியன் இருந்தது, ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகமிட்டி என்ன செய்து கொண்டிருந்தது, அதுவும் தவறிழைத்தது என்றால், ரசிய மக்களே சோஷியலிசத்தை ஒதுக்கிவிட்டார்களா?,
        சோஷியலிசம் என்பது மக்கள் திரளமைப்பின் உயிர் மிக்க படைப்பு – லெனின்.

        • /////அது சர்வாதிகாரமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?, மீண்டும் எழ முயற்சிக்கும் முதலாளித்துவத்தை வீழ்த்த அந்த சர்வாதிகாரம் வேண்டும் என்றுதான் நானும் எண்ணியிருந்தேன், ஆனால் அது ஏன் ஒரு உண்மையான ஜனனாயகமாக இருக்க கூடாது////

          விழிவேந்தன்,
          ஜனநாயகம் என்பதே ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரம் தான். அதாவது ஜனநாயகத்தின் இன்னொரு பக்கம் சர்வாதிகாரமாகும். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது பெரும்பாண்மை மக்கள் மீதான சிறுபாண்மை முதலாளிகளின் சர்வாதிகாரம்- பாட்டாளி வர்க்க ஜனநாயகம் என்பது சிறுபாண்மை முதலாளி வர்க்கத்தின் மீதான பெரும்பாண்மை மக்களின் சர்வாதிகாரமாகும். எனவே பெரும்பாண்மை மக்களுக்கான ஜனநாயகம் தான் உண்மையான ஜனநாயகமாகும்.

          ///////குருசேவை நம்பியா சோவியத் யூனியன் இருந்தது, ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகமிட்டி என்ன செய்து கொண்டிருந்தது, அதுவும் தவறிழைத்தது என்றால், ரசிய மக்களே சோஷியலிசத்தை ஒதுக்கிவிட்டார்களா ?//////

          ஒரு சில நபர்கள் புரட்சியை கட்டிக்காத்து வழிநடத்த முடியாது. புரட்சியை பின்னடைவுக்குள்ளாகாமல் முன்னெடுத்துச்செல்வது மக்கள் கையில் தான் இருக்கிறது. மக்கள் புரட்சியையே விரும்புகிறார்கள். அதைத்தான் எகிப்திலும், துனீஷியாவிலும் மற்றும் உலகமெங்கும் முதலாளித்துவத்திற்கெதிராக நடக்கும் எழுச்சியில் காண்கிறோம்.

        • விழிவேந்தன்,

          இங்கே “உண்மை” கூறியிருப்பது குறித்து தங்கள் கருத்து என்ன? இந்த உலகில் பொதுவான ஜனநாயகம் என்று ஒன்று கிடையாது. அப்படி இருக்கவும் முடியாது. அது எங்கேயும், எப்போதும் ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பினர் மீது செலுத்தும் சர்வாதிகராம்தான். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மட்டும்தான் பெரும்பான்மை மக்கள் பங்கேற்கிற மக்கள் ஜனநாயகமாக இருக்கிறது. அப்படி மக்கள் பங்கேற்பு இல்லையெனில் பாட்டாளி வர்க்க சர்வாதிகராமும் தோல்வியுறும். இது குறித்து விரிவாக விளக்க வேண்டியிருக்கிறது. பின்னூட்டத்தில் சிரமம் என்பதை புரிந்து கொள்வீர்கள். முடிந்தால் நேரில் வர இயலுமா பாருங்கள், உரையாடலாம். நன்றி

      • //வர்க்கங்களற்ற கம்யூனிச அமைப்பு வரும் போது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு தேவை இருக்காது. அப்போது அரசின் தன்மையே மாறுபடும்//

        அடப்பாவிகளா ! இன்னும் இத நம்பிக்கிட்டு இருக்கீங்களா ? பாட்டாளி வரக் சர்வாதிகரம் என்ற பெயரில் என்ன நடந்தது என்று இன்னுமா தெளியல ? அதிலிருந்து தூய கம்யூனிசத நோக்கிய நகரவெல்லாம் முடியவே முடியாது.

  24. வாக்காளர்களே கவனியுங்கள்: 1 ஓட்டுக்கு ரூ.200 வாங்கினால் ஒரு நாளுக்கு 11 பைசாதான் லாபம்; திருச்சியில் விநியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு

    http://www.viyapu.com/news/?p=33369

  25. தனி மனிதன், கட்சி, அரசு இவற்றில் எதுவுமே வர்க்க சார்பு இல்லாமல் இருக்க முடியாது என்பதை நாமறிவோம். ஆனால் முதலாளித்துவமேயானாலும் அதுதான் நமக்கு (பெயரளவு) ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தியது, தனியுடைமைக்கு பங்கம் என்றால் அது தன் கோர முகத்தை காட்ட தயங்காது. அதன் எல்லை என்பது இந்த அளவிற்குதான் என்பதையும் நாமறிவோம், அதே போல், ஒரு சோஷியலிச சமூகத்தில் பொதுவுடைமைக்கு பங்கம் வராமல், அதன் எல்லை வரை ஜனநாயகத்தை அனுமதிக்கலாமே என்பதே என் கேள்வி?

    • விழிவேந்தன்,
      பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் ஜனநாயகத்தின் பொருளையே நீங்களும் கொண்டிருக்கிறீர்கள். ஜனநாயகம் என்பதே சர்வாதிகராம்தான். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சரியான பொருளில் அழைப்பதென்றால் அது முதலாளித்துவத்தின் சர்வாதிகாரம். அதே போன்று பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை நீங்கள் பாட்டாளிகளது ஜனநாயகம் என்றும் புரிந்து கொள்ளலாம். முதலாளித்துவம் அறிமுகப்படுத்தியது பெயரளவு ஜனநாயகம் என்பதை விட அது தனிச்சொத்துரிமையைப் காப்பாற்றும் அதிகாரத்தை கொண்ட ஜனநாயகம் என்பதே சரியானது. முதலாளித்துவ அரசாங்கத்தை விட பாட்டாளி வர்க்க சர்வாதிகராத்தில்தான் விரிந்த ஜனநாயக உரிமை மக்களுக்கு இருக்கிறது. உங்கள் பார்வை படி அதில் முதலாளித்துவ ஜனநாயகத்தை அனுமதிக்க வேண்டுமென்பது மக்களுக்கு ஜனநாயகத்தை மறுப்பதாகும்.

      உங்களுக்கு அடிப்படை மார்க்சியத்தில் நிறைய குழப்பம் இருக்கிறது. அதனால்தான் எதிரெதிர் பொருள் கொண்டவற்றை ஒரே மாதிரி பய்ன்படுத்துகிறீர்கள். மார்க்சியத்தை சில நூல்கள் வாயிலாக மட்டும் கற்றுக் கொள்ள முடியாது. அது புரட்சியை நோக்கமாகக் கொண்ட கம்யூனிச இயக்கம் எனும் பள்ளியில்தான் பயில முடியும். நன்றி

      • ///ஜனநாயகம் என்பதே சர்வாதிகராம்தான். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சரியான பொருளில் அழைப்பதென்றால் அது முதலாளித்துவத்தின் சர்வாதிகாரம். அதே போன்று பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை நீங்கள் பாட்டாளிகளது ஜனநாயகம் என்றும் புரிந்து கொள்ளலாம். ///

        சத்தியமா புரியல. யாருக்காவது புரிந்தா விளக்குங்களேன்.

        ///முதலாளித்துவ அரசாங்கத்தை விட பாட்டாளி வர்க்க சர்வாதிகராத்தில்தான் விரிந்த ஜனநாயக உரிமை மக்களுக்கு இருக்கிறது.///

        இந்த ம்க்கள் என்கிறீர்களே, அவுக யாருங்க ? பொலிபீரோவா ?

        • ///ஜனநாயகம் என்பதே சர்வாதிகராம்தான். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சரியான பொருளில் அழைப்பதென்றால் அது முதலாளித்துவத்தின் சர்வாதிகாரம். அதே போன்று பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை நீங்கள் பாட்டாளிகளது ஜனநாயகம் என்றும் புரிந்து கொள்ளலாம். ///

          சத்தியமா புரியல. யாருக்காவது புரிந்தா விளக்குங்களேன்.///

          இதுல உங்களுக்கு என்ன புரியல, நடுநிலையாளன், எல்லா மக்களுக்குமான கட்சி, அனைத்து மக்களுக்குமான அரசு என்று ஒன்று இருக்கவே முடியாது என்பதுதான் உண்மை, முதலாளித்துவ சமூகத்தில் முதலாளித்துவ சர்வாதிகாரம் இருக்கும் (முதலாளித்துவம் அதை ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்கிறது), சோஷியலிசத்தில் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக இருக்கும், வர்க்கங்களற்ற சமூகத்தில் அரசின் தேவையே இருக்காது, எங்கெல்சின் வார்த்தைகளில் சொல்வதென்றால் “வர்க்கங்களற்ற சமூகத்தில் அரசு தானாகவே உதிர்ந்து விழுந்துவிடும்”. (இந்த கட்டூரையின் துவக்கதில் தேர்தலில் இருந்து வெகுஜன மக்களை விலக்கி விட்டு இந்த அரசு பாசிசத்திற்கு வழி ஏற்படுத்துகிறது என்பதே உண்மை, ஏனெனில், மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்பதிற்கு எதிராக மக்களை அரசியலில் இருந்து முற்றிலும் அகற்ற நினைப்பது பாஸிசத்தின் முதல் படி).

  26. @kumbideren samy. dandakaranya people do not know abt the wealth and they are selfish? are you nuts? . those people value their birthplace more than that wealth. BTW, evn if the wealth is used people of india have no benefits, only vedanta will grow. real selfish people are the urban educated people who follow america blindly.

    • சதிஷ் அவர்களை விடுங்கள் முதலாளிகளின் அடிவருடிகள், அடுத்த முதலாளித்துவத்தை தற்காத்துக்கொள்ள பாஸிஸ்டுகள் ஆகுவது இயல்பு தான்..

Leave a Reply to அசுரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க