privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்வி"இலவசக் கல்வி நமது உரிமை" HRPC மாநாடு - ரிபோர்ட்!

“இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – ரிபோர்ட்!

-

சமச்சீர் கல்வி இரத்து செய்யப்பட்டிருக்கும் இந்நேரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக பெற்றோர்களை அணிதிரட்டி விருத்தாசலத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் போராடுகிறது. இந்த போராட்டம் தற்போது கடலூர் மாவட்டம், கோவை என்று பரவி வருகிறது. இதை ஒட்டி விருத்தாசலத்தில் பெற்றோர்களை அணிதிரட்டி நடத்தப்பட்ட மாநாட்டில், அரசியல் சட்டப்படி கல்வி என்பது எப்படி நமது உரிமையாக உள்ளது, சமச்சீர் கல்வியின் அவசியம், தாய்மொழிக் கல்வியின் தேவை, தனியார் பள்ளிகள் நூதனக் கொள்ளை, பகிரங்க கொள்ளை, அரசின் பாராமுகம் என அனைத்து அம்சங்களும் விளக்கப் பட்டிருக்கிறது. சாரமாக தனியார் கல்வியின் அபாயத்தை நாம் புரிந்து கொள்ளலாம். வினவு செய்தியாளர்கள் நேரில் சென்று எழுதியிருக்கும் இந்த முக்கியமான கட்டுரையை படியுங்கள், பரப்புங்கள்! நன்றி

இலவசக் கல்வி நமது உரிமை

விருத்தாசலம் நகரில் இலவச கல்வி உரிமை மாநாடு கடந்த மே மாதம் செவ்வாய் (24-05-2011) அன்று நடைபெற்றது.  மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் செயலாளர் திரு .செந்தாமரைக்கந்தன் வரவேற்புரை வழங்கி கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் திரு வை வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார். அவரது பேச்சிலிருந்து:

மக்கான கல்வி உரிமை நாம் கேட்கின்றோம். எட்டாவது வரை இலவசக்கல்வி என்று கல்வி உரிமைக்கான சட்டதிருத்தம் செய்யப்பட்டது. அப்பொழுது எட்டாவது வரை கல்வியை இலவசமாகக்கொடுக்க வேண்டுமென்று மாநில அரசுகளுக்கெல்லாம் மத்திய அரசு அறிக்கை அனுப்பியது.ஆனால் இங்கே என்ன நடந்தது?  அரசுப்பள்ளிகளில் மட்டும் இலவசக்கல்வி – தரமற்றக் கல்வி, தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணம் கொடுத்துதான் கல்வி என்ற நிலைமைதான் இன்னும் இருந்து வருகிறது. இலவசக்கல்வி இன்னும் வழங்கப்படவில்லை.”

“ஆனால், ஏழைகளுக்குப் பிச்சை போடுவதுபோல், ஒவ்வொரு பள்ளியிலும் 25%ஒதுக்கிவிட்டு அதில் ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்காக அவர்கள் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி, ஒன்றாம் வகுப்பு வரை  ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பிக்க வேண்டும். அந்தக்கட்டணத்தை அரசு செலுத்துவிடும் என்று ஒரு ஒப்பந்தம் வந்துள்ளது, நாம் இப்போது என்ன கேட்கிறோம் என்றால்இலவசக்கல்வி என்பது நமது உரிமை.அதாவது பன்னிரெண்டாவது வரை இலசவசக்கல்வியை அரசு கொடுக்க வேண்டும்.  ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி எல்லா பள்ளிகளிலும் இலவசக்கல்வியை வழங்கவேண்டும். அதாவது, மற்ற இலவசங்களை வழங்குகின்ற அரசு ஏன் இலவசக்கல்வியை தரக்கூடாது? என்று கேட்பது நமது உரிமை. அதைத்தான் நாம் நமது மாநாட்டிலே இப்போது வலியுறுத்திக் கூறுகிறோம்.”

“அடுத்ததாக, இந்த கல்வி கட்டணத்துகாக கோவிந்தராஜன் கமிட்டி அறிவிப்பு வந்தது. அதை தனியார் பள்ளிகள் செயல்படுத்தாமல்  அளவுக்கு மீறி பணம் வாங்கினார்கள். ஒன்றுக்கு மூன்று  பங்கு பணம் வாங்கினார்கள். அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. பெற்றோர் சேர்ந்து போராட்டம் செய்தபிறகுதான் இந்தக்கட்ட்டணக் கொள்ளையை ஓரளவுக்கு தடுத்து நிறுத்த முடிந்தது, அதன்பிறகு, பெற்றோர்கள் ஒன்றுகூடி மனித உரிமை பாதுகாப்ப்பு மையத்தின் மூலம் கட்டணக்கொள்ளையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கட்டணங்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கி அதை பெற்றோர் பார்க்குமளவுக்கு ஆர்வம், ஈடுபாடு  ஏற்படுத்தினார்கள்.”

” அதன்பிறகு பெற்றோர்கள் தனித்தனியாக கூடுதல் கட்டணம் வாங்குகிறீர்களே என்று நிர்வாகத்தினரிடம் கேட்க ஆரம்பித்தார்கள். தனித்தனியாக கேட்க ஆரம்பித்தபின் நிர்வாகத்தினரிடம் ஏளனத்தையும் அலட்சியத்தையும் சந்திக்க நேரிட்டது. அதன்பின் பெற்றோர்கள் ஒன்றுகூடி சங்கமாக ஆரம்பிக்க வேண்டும் என்று வந்தார்கள். அதன்பிறகு, பல போராட்டங்கள் நடைபெற்றன. ஒரு முற்றுகை போராட்டம் கூட மார்ச் மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடத்தப்பட்டது.”

“அப்பொழுது அந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் வந்து சில உறுதிமொழிகளை தந்தார்கள். அதாவது கூடுதல் கட்டணம் நீங்கள் கொடுக்க வேண்டாம்.  அரசு அறிவித்துள்ள கட்டணத்தை மட்டும்தான் செலுத்த வேண்டும், என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். மாணவர்களை துன்புறுத்தக்கூடாது என்றும் அறிவித்தார்கள்.  பள்ளி தகவல் பலகையில் இந்த அறிவிப்பை விளம்பரப்படுத்த உத்தரவிடுகிறேன் என்று உத்தரவு வழங்கினார்கள்.”

“ஒரு சில பள்ளிகள் மட்டும் ஓரிரு நாட்கள் வைத்துவிட்டு எடுத்துவிட்டார்கள். அதன்பிறகு பெற்றோர் சங்கம் அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக என்னையும் நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்தார்கள். பெற்றோர் சங்கம்  மனித உரிமை பாதுகாப்பு மையத்துடன் இணைந்து அந்த கூடுதல் கட்டணம், கட்டணக் கொள்ளையை எப்படி தடுப்பது என்று சிந்தித்து செயல்பட்டு வருகின்றோம்.  சில பல போராட்டங்களை நடத்தினோம். இருந்தும் கூடுதல் கட்டணம் வாங்குவதை அவர்கள் நிறுத்தவில்லை.”

“கட்டணக்கொள்ளையை வைத்து வியாபாரம் செய்ய  ஆரம்பித்தார்கள். மாணவர்கள் கூப்பிட்டு மிரட்டுவது, பெற்றோரிடம் பணம் வாங்கிவரச் சொல்வது, அவர்களை வெளியில் நிற்க வைப்பது போன்ற தொல்லைகளை எல்லாம் கொடுத்தார்கள். இருந்தும் நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினோம். இதற்கும் பிறகும் கூட அவர்கள் திருந்தவில்லை.  தற்போது பள்ளி திறக்காத நிலையிலும் நீதியரசர் ரவிராஜ பாண்டியன் அறிக்கை வெளிவராத நிலையிலே அதிகமாக கட்ட வேண்டுமென்று சொல்லி வருகிறார்கள். பெற்றோருக்கும் நோட்டிசு அனுப்புகிறார்கள்.”

“இதற்கெல்லாம் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், பல பெற்றோர் மனத் திடம் இல்லாமல், நமது குழந்தைகளை ஏதாவது செய்துவிடுவார்களோ இந்த பள்ளிகள் என்று பயப்பட்டு செலுத்திவிடுகிறார்கள். அந்த உணர்வை போக்கும் வகையிலே நாங்கள் போராடுகிறோம். இருந்தாலும் சரி செய்ய முடியவில்லை.  நீங்களெல்லாம் செய்தித்தாளில் பார்த்திருப்பீர்கள். கோயமுத்தூரில் சங்கீதா என்ற பெண் யூகேஜி படிக்கும் தனது மகனுக்கு தனியார் பள்ளி கேட்டகட்டணம் கட்டி படிக்க வைக்கமுடியவில்லை என்று மனமொடிந்து தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மரண வாக்குமூலத்தில் கூடுதல் பணம் கேட்டார்கள், என்னால் கட்டமுடியவில்லை அதனால் உயிரை மாய்த்துக்கொண்டேன் என்று கூறியிருக்கிறார். பெற்றோர்களை பொறுத்தவரை நீங்கள் உறுதியாக இருந்தால் நாம் நமக்குரிய உரிமைகளை பெற முடியும். ”

“அந்த அளவிலே, இலவசக்கல்வி என்பது நமது நீண்டகால கோரிக்கை அதற்கு இப்போதிருந்தே அடித்தளம் அமைத்து போராட வேண்டிய சூழ்நிலை. அதற்குள்ளே, தனியார் பள்ளிகளெல்லாம் கொள்ளைக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். அதை முறியடிக்க பெற்றோர்கள் ஒன்று கூடவேண்டும். கூடுதல் கட்டணம் கட்டமாட்டோமென்று உறுதியாகக்கூற வெண்டும். சென்ற ஆண்டு கூடுதல் கட்டண்ம் வசூலித்த பள்ளிகளுக்கெல்லாம் அதைக் கழித்துக் கொண்டு  இந்த ஆண்டு அறிவிப்பு வந்த பிறகு வசூலிக்க வேண்டுமென்று உத்தரவு வழங்கியிருக்கிறது மெட்ரிகுலேசன் ஆய்வாளர்கள் சங்கம்.”

“அதேபோல், இந்த பெற்றோர் சங்கத்தை வளர்க்க வேண்டுமென்று கடந்த ஒரு மாதகாலமாக ஒவ்வொரு பெற்றோர் வீட்டிற்கும் தெருத்தெருவாக சென்றும் நிலைமையை எடுத்துக்கூறி பயப்படவேண்டாம் அச்சப்படவேண்டாம் என்று கூறி உறுப்பினராக சேர்த்து வருகிறோம். ஏறக்குறைய ஆயிரம் பெற்றோர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் அந்தப்பணி தொடரும். போராட ஆரம்பித்தால்தான், உரிமைகளை கேட்க ஆரம்பித்தால்தான் பள்ளிகள் நிர்வாகம் கட்டுப்படும். எவ்வளவு கேட்டாலும் கட்டிவிடலாம், குழந்தைகள் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்தால் உரிமைகளைப் பெற முடியாது. நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கவேண்டும். அதற்கு அரசாங்கம்தான் பொறுப்பு. நாம் பள்ளிகளிடம் போராடவில்லை. அரசு தரமான கல்வியைக் கொடு, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி கல்வியைக் கொடுக்க வேண்டுமென்று நாம் கேட்கின்றோம். தனியார் கட்டணக் கொள்ளைக்கெதிராக அரசிடம் தான் நாம் போராடுகிறோம்.”

“அரசு கூடுதல் கட்டணத்தை தடுத்து நிறுத்தவேண்டும். சரியான நடவடிக்கை எடுத்தால்தான் தனியார் பள்ளிகள் அடங்கி ஒழுங்காக அரசுக் கட்டணத்தை வாங்குவார்கள். நாங்கள் பெற்றோர்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் எங்களோடு ஒன்றுபடுங்கள். போராடுங்கள். உங்கள் குழந்தைகளை பள்ளியில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அதற்கெல்லாம் கட்டாயக்கல்வி சட்டத்திலே உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. வாருங்கள், ஒன்று சேர்ந்து போராடுவோம். தனியார் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம் என்றுக்கேட்டுக்கொள்கிறேன். “

________________________________________________________

அடுத்து கருத்துரை வழங்க வந்தார் சமச்சீர் கல்வி கமிட்டி உறுப்பினரான கல்வியாளர் திரு..சீ.ராஜகோபாலன் அவர்கள்.

கோவையைச் சேர்ந்த சங்கீதா, தன் குழந்தைக்கு கல்வி கொடுக்க முடியவில்லையே என்ற  ஏக்கத்திலே தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்,  இப்படி நமக்குத் தெரியாமல் இன்னும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிசம் மௌனமாக இருந்துவிட்டு பின்னர் பேசலாம் என்றார். அஞ்சலி செலுத்தப்பட்டபின் தன் கருத்துரையை தொடங்கினார். அவர் பேச்சிலிருந்து,

”1964-ஆம் ஆண்டு இலவசக் கல்வி, அனைவருக்கும் கல்வி தொடங்கப்பட்ட முதல் மாநிலம் தமிழ்நாடு. ஆனால்  1978-ல் கட்டணக் கல்வியைக் கொண்டுவந்தார்கள். அப்போழுது ஒரு கட்டுரை நான் எழுதியிருந்தேன். அதை அரைப்பக்கமாக  வெளியிட்டிருந்தார்கள். நான் அதிலே எடுத்துச் சொன்னேன்.  நீங்கள் கட்டணக் கல்வியை அனுமதித்துவிட்ட காரணத்தாலே  இலவசக் கல்வி மறைந்து விடும். அதுமட்டுமல்ல, தமிழ் தமிழ்நாட்டைவிட்டு ஓடிவிடும்.  தமிழை முதன்மையாக எடுத்துப்படிப்பது கூட நின்றுவிடும் என்று எழுதியிருந்தேன்.”

“இன்றைக்கு ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மாவட்ட கழக பள்ளிகளிலோ அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ இலவசக்கல்வி கற்றவர்களாகத்தான் இருப்பார்கள். இன்று அவர்களின் பிள்ளைகளின் அனைவரும் ஆங்கில வழிக் கல்விக்கு கட்டணக் கல்விக்கு வரத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்தான் நீங்கள் அனைவரும். இப்பொழுது அரசு அதிகாரிகளெல்லாம் மிகக் கெட்டிக்காரர்கள். எப்போதுமே திசை திருப்புவதிலேயே மகாக் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.”

“அந்த வகையிலேதான் இப்பொழுது என்ன செய்தார்களென்றால் சமச்சீர் கல்வி, அடுத்தது கட்டண நிர்ணயம் என்று சொன்னார்கள். இந்த இரண்டுமே திசை திருப்பும் முயற்சியே என்பதை நாம் கண்டு கொள்ளாமல் இருக்கின்றோம். நாம் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறோம்? இலவசக் கல்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.ஆனால், இலவசக் கல்வி வேண்டாம்,அதற்கு பதிலாக சமச்சீர் கல்வி என்று நமது கோரிக்கையையே மாற்றி விட்டார்கள். இன்றைக்கு இலவசக் கல்வி பற்றி பேசவேயில்லை. இலவசக் கல்வி நமது உரிமை. இலவசக் கல்விக்கு பதில்  குறைந்த கட்டணம் கொடுத்தால் போதும் என்று நாம் அவல நிலைக்கு வந்திருக்கிறோமென்றால் இதை மாற்றிய அரசை என்னவென்று சொல்வது? நமது கோரிக்கையே அர்த்தமில்லாமல் எங்கேயோ திருக்கப்பட்டுவிட்டது.அரசு பள்ளிகளால் ஏன் தரமான கல்வியைத் தரமுடியவில்லை? ”

அதைத்தொடர்ந்து அவர் அரசு எவ்வாறு திட்டமிட்டு அரசுப் பள்ளிகளை ஒழித்து விட்டு தனியார் பள்ளிகளை ஊக்குவித்தது  என்றும்,தனியார் பள்ளிகளின் கல்வித்தரம் பற்றியும் சமச்சீர்கல்வி பற்றியும்  விரிவாகப் பேசினார். இலவசக் கல்வியே நமது முடிவான கோரிக்கை, அதுவரை கட்டணக் கல்வி என்பது தற்காலிகமானது என்றும் அவர் பேச்சு தெளிவுப்படுத்தியது.  (அவரது கருத்துரையை தனி இடுகையாக வெளியிடுகிறோம்.)

_________________________________________________________________

டுத்து பேசிய  ராமனாதன், முன்னாள் எம்பி அவர்கள் பேச்சிலிருந்து,

“அந்த காலத்தில் எம்எல்ஏ  மகனும் சரி அவரின் வாகன ஓட்டியின் மகனும் சரி ஒரே பள்ளியில் ஒரே பாடத்தை தான் படித்தனர். அரசு, அரசு பள்ளிகளை மேம்படுத்த நிறைய முயற்ச்சிகள் எடுக்கும், நிறைய நிதி ஒதுக்கும்.அப்பொழுதெல்லாம் இவ்வளவு தனியார் பள்ளிகள் இல்லை. அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.”

அவரைத்தொடர்ந்து பேசிய ம.உ.பா.மை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜூ “தனியார்மயக் கொள்ளைதான் – அரசாங்கத்தின் கொள்கை” என்ற தலைப்பில் பேசினார். அவரது பேச்சிலிருந்து,

ருணாநிதி ஆட்சியானாலும் சரி, ஜெயலலிதா ஆட்சியானாலும் சரி, எனக்கு இவ்ளோதான் கட்டணம். பில்லு போட்டு இவ்வளவு கட்டணம்,பில்லு போடாமல் இவ்ளோ கட்டணம,  கட்டவில்லையா, டிசியை வாங்கிட்டு போய்டு, மாணவர்களை நிற்க வைப்பது என்று பல அராஜகங்கள். விருத்தாசலம் மாவட்டத்தில் மட்டும் 30 தனியார் பள்ளிகள் உள்ளது. தினந்தோறும் இந்தப் பிரச்சினை இருந்துகிட்டே இருக்கு. தமிழக அரசு சட்டம் போட்டு நீதியரசரை நியமிச்சு கட்டணம் போட்டும் தனியார் பள்ளி முதலாளிகள் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறார்கள். சுப்ரீம் கோர்ட்  அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. தோத்துப்போய் விட்ட்டார்கள்.”

“அப்படியும் அவர்கள், அரசு சொல்வதைக் கேட்ட மாட்டோம் என்கிறார்களென்றால் அப்படியும் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்றால் என்னவென்று சொல்லுவது. தனியார் முதலாளிகளின் கொள்கைதான் அரசின் கொள்கைகள். கல்வி உரிமை என்பது அடிப்படை உரிமையாக, வாழும் உரிமையாக அரசியல் சாசன ஷரத்து இருபத்தியொன்று ஏழு  கூறுகிறது. 16 வயது வரை கல்வி பெறும் உரிமை உள்ளது.  கருத்துரிமை, பேச்சுரிமை, தொழிற்சங்க உரிமை என்று எப்படி சொல்லுவோமோ அது போல கல்வி உரிமையை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு போடலாம்.  இந்த சட்டம் என்னுடைய உரிமையை மீட்டுத் தரவில்லையென்றால் இந்த நீதிமன்றம் என்னுடைய உரிமையை நிலைநாட்டவில்லையென்றால் நாமேதான் களத்தில் இறங்கி போராடவேண்டும்.”

அதோடு, கல்வி சொல்லிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால் அரசு என்ன சொல்கிறது,  தனியார் கல்வி முதலாளிகளுக்கு கட்டுபாடியாகவில்லை என்று கட்டணம் நிர்ணயிக்கிறது. உலகில் 135 நாடுகளில் தாய்மொழிக்கல்விதான். அய்யா ராசகோபாலன் சொன்னது போல இன்றைய பல அறிஞர்கள் தாய்மொழியில் கல்வி கற்றவ்ர்கள்தான்.நமது தண்ணீரை ஒரு லிட்டருக்கு 12 காசு கொடுத்து வாங்கி விட்டு அதை  கொகோகோலா 18 ரூபாய்க்கு நம்மிடம் விற்கிறான். நம்முடைய இயற்கை வளம், இரும்புத்தாது தனியார் முதலாளிகளுக்கு 27 ரூபாய்க்கு விற்கிறான்.  நம்முடைய காடுகள், மலைகள், பாக்சைட் தாது அனைத்தையும் தனியார் முதலாளிகளிடம் தாரை வார்த்துவிட்டான். இந்த வளங்கள் ஒருநாள் வற்றிவிடும். எண்ணெய் வளத்தை எடுத்தால் தீர்ந்துவிடும், கோலார் தங்கவயலில் தங்கம் தீர்ந்துபோகிறது.”

“ஆனால், இந்த கல்வி எனும் சுரங்கம் வற்றாது. 120 கோடி இந்திய மக்கள் தொகையில் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பார்கள். எல்கேஜி போய் ப்ரிகேஜு அதற்கு 20000 ரூபாய். பிரிகேஜியில் என்ன செய்யும்? குழந்தை சாப்பிடும், தூங்கும், வீட்டுக்கு வந்துவிடும்?அதற்கு எதுக்கு இருபதாயிரம் ரூபாய்? மருத்துவக்கல்லூரிக்கு ஒரு மாணவனுக்கு எட்டாயிரம் பீஸ். எல்கேஜிக்கு 20000 ரூபாய்? இலவச டீவி தருகிறேன், வாசிங் மெஷின் தருகிறேன், லேப்டாப் தருகிறேன் என்று சொல்கிறவர்கள் ஏன் இலவசக் கல்வியை தருவதில்லை? எதிர்க்கட்சிகளும் ஏன் கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள்? ஒரு எல்கேஜி சீட்ட்டுக்கு அநியாயக் கொள்ளையாக இருபதாயிரம் ரூபாய் வாங்குகிறார்களே? பெற்றோர்களும் எப்படியாவது படித்து தம்பிள்ளைகள் மேலே வந்துவிடவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.”

ஒரு கடையில் கிரைண்டர் வாங்குகிறோம் மிக்சி வாங்குகிறோம். ஒரு கடையில் மூவாயிரம் சொல்கிறான். ஒரு கடையில் இரண்டாயிரத்து எண்ணூறு என்கிறான். உடனே அவனிடம் இரண்டாயிரத்து எண்ணூறு ரூபாய் கிரைண்டரை மூவாயிரம் என்கிறாயே என்று சண்டை போடுகிறோம். நுகர்வோர் கோர்ட்டுக்குப் போவோம் என்கிறோம். நான் பெரிய அதிகாரி என்கிறோம். ஆனால், இங்கிருக்கும் நந்தினி ஸ்கூலில் கோவிந்தராஜன் கமிட்டியில் போட்ட கட்டணத்தை தாண்டி அதிகமாக கேட்கிறார்கள்,  யூனிபார்முக்குத் தனியாக வாங்குகிறார்களே, எத்தனைப் பெற்றோர்கள் கட்டணத்துக்கு கூடுதலாக வாங்குகிறார்கள் என்று கேட்கிறார்கள்? ஏன் கேட்காமலிருக்கிறார்கள்?”

“நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். ஒன்றும் ஒளிவு மறைவு கிடையாது. பயம், தயக்கம், அறியாமை. அதைப் போக்குவதற்கு பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம்., பல சுவரொட்டிகள், பல முழக்கங்கள். நமக்கு அரசியலமைப்பு சட்டத்தில் கல்வி உரிமை இருக்கிறது. அனைத்து மக்களும் வீதியில் இறங்கி கேட்க வேண்டும். கட்டணத்தை குறைக்குமாறு 15  ஊரில் போராட்டம் செய்தால் அடுத்த ஊரில் கட்டணக் கொள்ளையை எதிர்த்து கேட்பார்கள்.  இவையெல்லாம் பின்னிப் பிணைந்தது. ஒன்றோடொன்று தொடர்புடையது. ஒரு பள்ளியை முற்றுகையிட்டு கூடுதல் கட்டணம் வாங்குவதை தடுத்தி நிறுத்தினால் இதைப்பார்த்து மற்ற பள்ளிகளிலும் மக்கள் போராடுவார்கள். நாங்கள் போராடி வெற்று பெற்று ஆய்வாளர்  பேச்சுவார்த்தையில் கோவிந்தராஜன் கமிட்டி கட்டணத்தை நோட்டீஸ் போர்ட்டில் போட உத்தரவிட்டார்.”

“கூடுதலாக கட்டாவிட்டால் உங்கள் பிள்ளைகளை பெயிலாக்க முடியாது. தேர்வை நிறுத்தி வைக்க முடியாது. கோயமுத்தூரில் 15ஆயிரம் கட்டணத்தை கட்ட முடியாமல் தீக்குளித்து  தற்கொலை செய்துக்கொண்டதாக ஒரு தாய் மரண வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். கோயமுத்தூரிலுள்ள மனித உரிமை பாதுகாப்பு மையம், அந்த பள்ளியின் உரிமத்தை ரத்து செய்யவும், தற்கொலைக்கு  தூண்டியதாக அந்த பள்ளி முதலாளி மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும். தனியார் முதலாளிகளுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும்.”

மேலும் வழக்குரைஞர் ராஜூ பேசும் போது வீடுவீடாகச் சென்று பெற்றோரைச் சந்தித்து பெற்றோர் சங்கத்தில் சேர்த்ததை பற்றியும் பேசினார். சிலரிடம்  இரண்டரை மணிநேரம் கூட பேசி ஆரம்பத்தில் 15 உறுப்பினர்களோடு ஆரம்பித்த சங்கம் இன்று ஆயிரம் பெற்றோர்களை கொண்டதாக வளர்ந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

_________________________________________________

அவரைத்தொடர்ந்து வழக்குரைஞர் மீனாட்சி பேசினார். விருத்தாசலம் பகுதியில் இன்று எழுந்த தீப்பொறி நாடு முழுக்க பரவட்டும் என்ற வாழ்த்தோடு தனது உரையைத் தொடங்கினார்.

நமது அரசியலமைப்புப் பிரிவுகளின் படி கல்வி எப்படி நமது வாழ்வுரிமைகளின் கீழ் வருகிறது என்பதை தெளிவாக விளக்கினார். அவரது உரையிலிருந்து,

“ தமிழ்நாட்டின் அனைத்துப் பெற்றோரின் மனசிலும்  ஆழமாக பதிந்திருந்திருக்கும் பெயர் எதுவென்றால் ரவிராஜபாண்டியன். ஏனெனில், அவர்தான் நமது குழந்தைகளில் படிப்புக்கு பள்ளிக்கட்டணத்தை நியமிக்கப் போகிறவர். நமது ஆதங்கத்துக்கும், வெற்றிக்கும் ஒரே காரணமாக இருக்கப்போகிறவர் இப்போது அவர்தான். அனைவருக்கும் இலவசக் கல்வி சாத்தியமா? நமது ஊரில் எங்கும் சாத்தியமாக இல்லை. இந்தியாவைத் தவிர மக்கள் தொகை அதிகமாக கொண்டநாடுகளில் கூட கல்வி இலவசம். முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் கூட கல்வி இலவச உரிமை.”

1947- இல் இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுப்பினர். 1947-ல் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வருகிறது. அந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் ஷரத்து 26 என்ன சொல்கிறதென்றால், இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது உரிமையாகும். அதுவும் குறிப்பாக குறைந்த பட்சம் 6 முதல் 14 வயது அடிப்படை கல்வி உரிமையாக்கபட வேண்டும். அது கட்டாயமாகக் கொடுக்கப்படவேண்டும், அன்று  இந்தியா இட்ட கையெழுத்தில் நம் அனைவருக்கும் கல்வி என்பது இலவச உரிமையாக்கப்பட்டுள்ளது.”

“நமது அரசியலமைப்புச் சட்டம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமான பிரிவுகள், பகுதி 3 மற்றும் பகுதி 4.  பகுதி 3 நமது அடிப்படை உரிமைகளை தருகிறது. அடிப்படை உரிமைகள். பகுதி நான்கில் வழிகாட்டும் நெறிமுறைகள் உள்ளது. இன்று நமக்கெல்லாம் கல்வி இலவச உரிமையாக இருக்கிறதென்றால் அதற்கு ஒரு பெண் காரணம். அவருடைய பெயர் மோனிக் ஜெயின்.  அவர் கர்நாடகத்தின் மருத்துவக் கல்லூரியின் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேருகிறார். அவரை 60000 ருபாய் கட்டச்சொல்கிறார்கள். அரசாங்கத்திலோ ஏழாயிரம் ரூபாய். ஆனால், மேனேஜ்மெண்ட்டில் 60000 ரூபாய்.  ”கல்வி எனது அடிப்படை உரிமை, ஷரத்து 21 எனக்கு அந்த வாக்குறுதியைத் தருகிறது.” அவர் கோர்ட்டுக்கு செல்கிறார். அதில் நான் சுயமரியாதையுடன் வாழ்வதற்குரிய உரிமை அடங்கியிருக்கிறது.  அந்த ஷரத்துக்குள் எனது கல்வியுரிமை அடங்கியிருக்கிறது என்று வழக்குத் தொடுத்தார்.”

“வழக்கு அவருக்குச் சாதகமாக முடிகிறது. ஆனால், அதற்குள் அவர் படிக்கவேண்டிய காலம் முடிகிறது. படிக்கமுடியவில்லை. ஆனாலும் கூட ஒரு பெண் எழுப்பிய ஒரு குரல் நமக்கு அடிப்படை உரிமையை வழங்கியிருக்கிறது என்று சொன்னால் நாம் எல்லோரும் எழுப்பும் இந்த குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும்.”

“1973- இல் தனியார் கல்வி முதலாளிகள் ஐந்து பேர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுகிறார்கள். ஷரத்து 19 1 டி என்ற ஒரு பிரிவு இருக்கிறது. அது எனக்கு வியாபாரம் செய்யும் உரிமையை தருகிறது, அதனால் கல்விக்கு பணத்தைப் பெற்றுக் கொள்வோம். அதைத் தடுக்கலாமா என்று கேட்கிறார்கள். அதில் தனியார் கல்வி முதலாளிகளின் கோரிக்கை என்னவென்றால் “ நீங்கள் அனைவருக்கும் இலவசக் கல்வியை தரச் சொல்கிறீர்கள். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதைப் பொறுத்துத் தீர்ப்பு வழங்கவேண்டும்” என்பதுதான். அப்போது ஷரத்து 45ஐ உச்சநீதிமன்றம் கவனிக்கிறது. இந்த ஷரத்துப்படி 6 வயதிலிருந்து 16 வயது வரை கல்வி இலவசமாக அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.  ஆக, முழுக்க முழுக்க கல்வி என்பது  நம்முடைய உரிமையில் கைவைக்க நீதிமன்றத்துக்கும் கிடையாது.”

” உலக வங்கியால்  நாடாளுமன்றங்களும்  கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது அதனுடைய தாக்கம் அரசுத்துறைகளிலும் நீதிமன்றங்களிலும் அதிகமாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே, தனியார் கல்வி நிறுவனங்களும் காசு பார்க்கட்டும் என்று சொல்கிறது. அதுதான் தனியார் கல்வி நிறுவனங்கள் 25 சதவீதம் இலவசமாக கல்வியைக் கொடுத்தால் போதும், மீதி 75 சதவீதத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்றும் சொல்கிறது. தமிழ்நாட்டில் நான்கு வகையான பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள், நான்கு வகையான மார்க் என்று இருக்கிறது. இவையனைத்தையும் ஒன்றாக்கி பரிசீலித்து ஒரு பாடத்திட்டமாக்கி இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, அதை தடுத்தி நிறுத்தியிருப்பதை நாம் எதிர்த்து போராட வேண்டும்.தடுத்து நிறுத்த வேண்டும். ”.

_____________________________________________________

டுத்துப் பேசியவர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில அமைப்பாளர் கணேசன் அவர்கள். பெற்றோர்கள் ஒன்று திரண்டு போரடவேண்டிய அவசியத்தை மிகவும் அருமையாக உணர்த்தினார். அவர் பேசியதிலிருந்து,

“இன்று அனைத்து பெற்றோர்களையும் பயமுறுத்திக் கொண்டிருப்பது என்னவென்றால் பள்ளியின் கட்டணம்தான்.ஒரு இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தனியார் பள்ளிகளைத் தேடிசெல்ல வேண்டியிருக்கும். இப்போது, புற்றீசல் போல பல்கிப் பெருகிக் கிடக்கின்றன்.  இந்த விருத்தாசலத்தின் சந்து பொந்துகளில் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. வாடகைக்குக் கூட இடங்களை எடுத்து பள்ளிகளை நடத்துக்கிறார்கள். பள்ளிகளுக்கென்று வரையறைகள் இருக்கின்றன. அதன் அடிப்படை வசதிகளைக்க்கூட கணக்கிலெடுக்காமல் இன்று பள்ளிகள் புற்றீசல் போல முளைத்துவிட்டன.”

“நான் கஞ்சி குடித்தாவது பத்து பாத்திரம் நடத்தியாவது என் பிள்ளையை படிக்க வைப்பேன். என்னைப்போல் என் குழந்தை கஷ்டப்படக்கூடாது என்று நினைத்துதான் அனேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்க்கின்றன்ர். இது நியாயமான கோரிக்கைதான். ஆனால் என்ன நடந்ததென்றால், இந்த நியாயமான கோரிக்கை நம் உரிமையாகிய இலவசக் கல்வியை தனியார் பள்ளிகளின் சட்டையைப் பிடித்து ”என்பிள்ளைக்கு கல்வி கொடுறா  நாயே ” என்றுஉரிமையோடு கேட்பதற்கு பதிலாக அவர்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.”

” ஒரு விஷயத்தைச் சொன்னால் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு குழந்தையை எல்கேஜியில் சேர்க்க பொதுவாக எவ்வளவு செலவாகும்? கிராமப்புறங்களாக இருந்தால் மூன்றாயிரம். ஓரளவு வசதியாக இருந்தால் ஆறாயிரம். ஆனால், ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு லட்சம்  செலவு ஆகிறது. வேலம்மாள் இண்டர்நேசனல் ஸ்கூல், சென்னை பப்ளிக் ஸ்கூல், எஸ்பிஓஏ இன்னும் நிறைய இருக்கிறது அங்கெல்லாம் இந்த நிலைமைதான். இந்த நாமக்கல், தருமபுரி மாவட்டங்கள் எல்லாம் வறண்ட மாவட்டங்கள். ஆனால், அங்கே போனால் ஒரே கார்களாகத்தான் நின்றுகொண்டிருக்கும், ஏனெனில் அங்கிருக்கும் பள்ளிகளில்தான் எல்லா ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகளெல்லாம் படிக்கிறார்கள்.”

“அங்கெல்லாம் பிள்ளைகளைத் தயாரித்து அனுப்புகிறார்கள். படிக்க வைத்து அனுப்புவதில்லை. அங்கு எதைக்கேட்டாலும் விலையேறிப் போய்த்தான் கிடக்கிறது.  இன்னொரு செய்தி, ஒரு பள்ளிக்கூடத்தில் 5000 பிள்ளைகள். அவர்கள் அந்த பிள்ளைகளின் பெற்றோருக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்புகிறார்கள். ”என் பிள்ளை இந்த பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறது” என்று பெற்றோர் எழுதுவது போல. ”கோவிந்தராசன் கமிட்டி ஐந்தாயிரம் ரூபாய் நிர்ணயித்துள்ளது, இந்த பள்ளிக்கூடத்தை ஐந்தாயிரம் கொடுத்து நடத்தமுடியாது. என் பிள்ளைக்கு நல்ல கல்வி கிடைக்காது. அதனால் தயவு செய்து கோவிந்தராஜன் கமிட்டி என் பிள்ளைக்கு பீசை கொஞ்சம் உயர்த்திக்கொடுக்கவும் “ என்று பிள்ளைகள் மூலம் ஃபார்ம் கொடுத்து அனுப்புகிறார்கள்.”

“எவ்வளவு நூதனமாகச் சிந்திக்கிறார்கள், பாருங்கள்,  நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா இப்படி? இந்த அயோக்கியப் பயலை நடுத்தெருவில் தூக்கிபோட்டு மிதிக்க நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா?  எதுவும் முடியாமல் பெற்றோர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனைக் கமிட்டிப் போட்டாலும் எதுவும் தீரவில்லை. இதற்கெல்லாம் யார் காரணம்? தனியார் கல்வியை அனுமதித்தவர்கள்தானே! இதனால் எத்தனைப்பேர் பாதிக்கப்பட்டிருக்கிறோம்? அனைவரும் ஒன்றாகத் திரண்டு போராட வேண்டும். ”.

___________________________________________________

தற்குப் பின்னர். மாநாட்டில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1: இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை குறைத்துக் கொள்ளவும், மேலும் கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களை துன்புறுத்தும் பள்ளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 2: அனைத்து தனியார் பள்ளிகளும் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு எல்கெஜி, யூகேஜி முதல் இலவசமாக வழங்காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 3: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி  அடிப்படை உரிமையான 6 முதல் 16 வயது வரை அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வியை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்ற இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4: தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை மட்டுமே உத்திரவாதம் செய்ய நியமிக்கப்பட்ட நீதியரசர் ரவிராஜப்பாண்டியன் கமிட்டியை ரத்து செய்ய இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5: தமிழ்நாடு அரசு இவ்வாண்டு சேர்க்கைக்காக  கோவை பிரேஸ் பள்ளி நிர்வாகம் கூடுதல் கட்டணம் கேட்டு துன்புறுத்தியதால் தீக்குளித்து உயிரழந்த சங்கீதா மரணத்துக்கு காரணமான பள்ளி முதலாளியை கைது செய்து அப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டுமென ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது. மேலும் சங்கீதாவின் குடும்பத்துக்கு  உரிய இழப்பீடு வழங்கவும்,  யூகேஜி படிக்கும் அவரது மகனின் கல்வி கட்டணம் முழுவதையும்  தமிழக அரசே ஏற்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6: தமிழகத்தின் சமச்சீர் கல்வி கட்டணத்தை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக பாடத்திட்டத்தையே நிறுத்தி வைத்து முந்தைய பாடத்திட்டமே செல்லுமென சொல்லியிருப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. இந்த ஆண்டே சமச்சீர் கல்வித்திட்டத்தை அமுல்படுத்தவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7: சமூக சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மனிதாபிமானமும் உடைய தாய்மொழிக் கல்வியை ஆதரிக்கவும், ஆங்கில வழிக் கல்வியையும் தனியார்மய பள்ளிகளையும் புறக்கணிக்க வேண்டுமென பெற்றோர்களை இம்மாநாடு ஒருமனதாகக்  கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 8: அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரமான கல்வியை  அரசு பொறுப்பில் இலவசமாக வழங்கத் தடையாக உள்ள தனியார் மயத்தை எதிர்த்து போராட பெற்றோர்களையும் மாணவர்களையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இதைத் தொடர்ந்து, ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு பெற்றோர்களுக்கிடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் பெற்றோர்கள் ஏன் அரசுப்பள்ளிகளை புறக்கணித்து தனியார் பள்ளிகளை

நாடுகிறார்களென்றும், தனியார் பள்ளிகளின் அராஜகத்தைப்பற்றியும்,  பெற்றோர் சங்கத்தில் சேர்ந்தபின்னர் மனித உரிமை பாதுகாப்பு மையத்துடன் இணைந்து நடத்திய போராட்டங்கள் மற்றும் முற்றுகையின் பலன்களை பற்றியும் தகவல்கள் தெரிவித்தனர். இறுதியில் பெற்றோர்கள் அனைவரும் தாம் ஒன்றாக இணைந்து போராடுவதில்தான் தமது பிள்ளைகளின்  கல்விக்கான தீர்வு இருக்கிறது என்பதையும் உணர்ந்துக்கொண்டதாக அந்த கலந்துரையாடல் இருந்தது.  இறுதியில் பெற்றோர் சங்கத்தின் பொருளாளர் க.வீரகாந்தி நன்றியுரை வழங்க கூட்டம் முடிவடைந்தது. தனியார் மய பள்ளிகளுக்கெதிராக விருத்தாசலத்தில் எழுந்த இந்த தீப்பொறி நாடெங்கும் பரவட்டும்.

_________________________________________________________________

– வினவு செய்தியாளர்கள், விருத்தாசலத்திலிருந்து..

____________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. //போராட ஆரம்பித்தால்தான், உரிமைகளை கேட்க ஆரம்பித்தால்தான் பள்ளிகள் நிர்வாகம் கட்டுப்படும். எவ்வளவு கேட்டாலும் கட்டிவிடலாம், குழந்தைகள் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்தால் உரிமைகளைப் பெற முடியாது.//- முற்றிலும் உண்மை.

  2. //அரசுப்பள்ளிகளில் மட்டும் இலவசக்கல்வி – தரமற்றக் கல்வி, தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணம் கொடுத்துதான் கல்வி என்ற நிலைமைதான் இன்னும் இருந்து வருகிறது///

    இந்த நிலை எப்படி உருவானது என்பதை ஆராயாமல், விவாதிக்காமல் உருப்படியான தீர்வு எதையும் யாரும் எட்டபோவதில்லை. அரசு பள்ளிகளில் கல்வி தரம் ஏன் தாழ்ந்தது ? கல்வி தகுதி, நல்ல சம்பளம், சலுகைகள், நிரந்தர வேலை அனைத்தும் கொண்ட ஆசிரியர்கள் தான் அரசு பள்ளிகளில். ஆனாலும் தரம் குறைவு. முக்கியமாக ஆரம்ப பள்ளிகள் தான் மிக மோசம். அய்ந்தாவது முடித்த பள்ளி மாணவர்களில் பெரும்பாலோனோர் ஒழுங்க எழுத, கணக்கு போட தெரியாத அவல நிலை. மாற்றாக தனியார் ஆரம்ப பள்ளிகளில் நிலைமை பரவாயில்லை. ஏன் அரசு பள்ளிகள் இந்நிலை ?

    காரணம் : நிரந்தர வேலை என்னும் ஜாப் செக்க்யுரிட்டி அளிக்கும் பொறுபற்ற தனம். யாரும் தட்டிக்கேட்க முடியாது. சங்கம் உண்டு. இவர்களின் ஒழுங்கீனத்தை திருத்த முயன்றால், இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள்.

    இந்தியாவில் பெரும்பான்மை ஏழை மற்றும் கிராமபுற மாணவர்கள் அரசு ஆரம்ப பள்ளிகளில் தான் கல்வி கற்கின்றனர். இன்னும் பல ஆயிரம் கோடி வரிபணத்தை கொட்டினாலும், ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் தரம் மற்றும் work ethics அய் உயர்த்தாமல் ஒரு மாற்றத்தையும் உருவாகவே முடியாது. இதுதான் அடிப்படை பிரச்சனை. இதை பற்றி இங்கு யாரும் பேசுவதில்லை. தனியார் பள்ளிகளின் கட்டினம், மற்றும் பல இதர விசியங்களை பற்றி ‘மட்டும்’ தான் தொடர் முழக்கம். பிரயசனமே இல்லை.

    தனியார் பள்ளிகளை தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பிடலாம். இரண்டும் அடிப்படை சேவைகளை விற்க்கின்றன. தனியார் மருத்துவமனைகளை இதே போல் கட்டுபடுத்த முயன்றால், அவை உருவாகுவது நிற்க்கும். அதே தான் தனியார் பள்ளிகளுக்கும்.

    அமெரிக்காவில் பெரும்பாலான மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் இன்றும் படிக்கிறார்கள். தரம் நன்றாகவே உள்ளது. ஆசிரியர்கள் ஒழுங்க பாடம் நடத்தறாங்க. எப்படி இது சாத்தியமானது ? ஏன் இந்தியாவில் இது முடியல ? விவாதிக்கலாமே இதை பற்றி..

    அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை, அவர்களின் செயல்திறனோடு லிங்கு செய்து சில
    experiments செய்யப்பட்டது. அந்த ஆய்வுகள் பற்றி ஒரு முக்கிய பதிவு :

    http://www.accountabilityindia.in/accountabilityblog/2235-case-incentive-payments-teachers-government-schools

    There has been a long debate about paying the government teachers (and public sector employees, in general) as per their performance. It has been argued that problems like high absenteeism, lack of teaching when in school, and abysmal quality of teaching might be alleviated if the teacher salary is made conditional on outcomes reflecting their performance. Given the unionization among the government teachers, wider implications for payment policies in public sector, and some legitimate concerns, this policy has been opposed vociferously. Rigorous empirical evidence on this controversial question has started coming in only recently. This post summarizes results from some of the recent research papers analyzing the impact of making the teacher salary conditional on certain observable outcomes….

    • அதியமான், உங்கள் வாதமே சல்லடை போல இருந்தாலும் இரண்டு ஓட்டைகளை மட்டும் சுட்டுகிறேன்.

      1) நீங்கள் சொல்லும் அக்கவுண்டபிளிடி அல்வாவெல்லாம் ஏன் ஐஐஎம், ஐஐடி, எயிம்ஸ் போன்ற அரசு கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தவில்லை. அங்கேயும் நீங்கள் சொல்லும் கல்வி தகுதி, நல்ல சம்பளம், சலுகைகள், நிரந்தர வேலை அனைத்தும் கொண்ட ஆசிரியர்கள் தானே இருக்கிறார்கள். பலப்பல தினியார் நிறுவனங்களை விடவும் இதற்குத்தானே மவுசு அதிகமாக உள்ளது.

      2) கிராமப்புற ஆரம்பக்கல்வி பற்றி உங்கள் ஆராய்ச்சி முற்றிலுமே தவறு, ஒராசிரியர் பள்ளி, கரும்பலகை இல்லா பள்ளி, கூரைஇல்லா பள்ளி சுற்றுச்சுவர் இல்லா பள்ளி, கக்கூஸ் இல்லா பள்ளி, வாத்தியாரே இல்லா பள்ளி, மாணவர்களே இல்லா பள்ளி என்ற அவலத்தில்தான் இந்திய கிராமங்களின் ஆரம்பக் கல்வியின் நிலை உள்ளது.இத்தோடு சாதி, வறுமை, பெண்ண்டிமைத்தனம் போன்ற கூடுதல் காரணங்கள் வேறு… சென்னை அரசு விடுதியின் நிலையை பற்றிய பதிவை பாருங்கள் https://www.vinavu.com/2011/02/16/casteist-hostels/
      சென்னை கல்லூரிக்கே இப்படி ஒரு நிலைமைன்னா கிராமப்புற விடுதிகள் பத்தி கேட்கவும் வேணுமா…எனவே தயவு செய்து வெற்றிலையில் மை தடவி பார்க்காமல் நேரில் சென்று ஆய்வு செய்யவும்.

      மற்றபடி ஆசிரியர்கள் தவறு செய்யவில்லை என்று நான் இங்கே சொல்லவில்லை ஆனால் அது ஒரு பொறுட்படுத்த வேண்டிய அளவுக்கான காரணம் இல்லை என்றும், தனியார்மயவாதிகளின் கோயபல்சு வேலை என்றும்தான் சொல்கிறேன். தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களை சுரண்டுவது தனிக்கதை அதை அப்புறம் பேசலாம்…

      லிங்கு கொடுக்கலேன்னா உங்களுக்கு பிடிக்காதேன்னு இதை தற்றேன், இது கம்யூனிஸ்டு லிங்க் இல்லேங்க பக்கா முதலாளியான அசீன் பிரேம்ஜியோடது. விவரங்களில்-கண்ணோட்டத்தில் போதாமை-மாறுபாடு இருந்தாலும், ஒரு கிராமப்புற கல்வியின் நிலையை தீர்மாணிக்கும் சமூக காரணிகளை கூடுமான வரை தொகுத்து இருக்கு

      http://www.azimpremjifoundation.org/pdf/TheSocialContextofElementaryEductaioninRuralIndia.pdf

      இது இன்னொன்னு, உங்களுக்கு புடிச்சி விக்கிபீடியாலேருந்து

      http://en.wikipedia.org/wiki/Education_in_India

      A study of 188 government-run primary schools found that 59% of the schools had no drinking water and 89% had no toilets.[75] 2003–04 data by National Institute of Educational Planning and Administration revealed that only 3.5% of primary schools in Bihar and Chhattisgarh had toilets for girls. In Madhya Pradesh, Maharashtra, Andhra Pradesh, Gujarat, Rajasthan and Himachal Pradesh, rates were 12–16%.[76]

      இதை ஒங்க வருசத்துக்கு 2 லட்சம் பீசு வாங்கும் இன்டர்நேசனல் ஜாப் ரெஸ்பான்சிபிளிடி அக்கவுண்டபிளடி அண்டு அப்பாடக்கர் பள்ளிகளோடு ஒப்பிடுவது எப்படி இருக்குன்னா…..

      • //தனியார்மயவாதிகளின் கோயபல்சு வேலை என்றும்தான் சொல்கிறேன். //

        அய்யன்மீர்,

        நான் இந்த துறையில் கண்மூடித்தனமாக தனியார் மயத்தை முன்மொழியவில்லை. கல்வி, சுகாதாரம் இவைகளில் அரசு தான் முக்கிய பங்காற்றவேண்டும். அதை உருப்படியாக, நேர்மையக செய்ய வேண்டும் என்று தான் சொல்கிறோம். தனியார்களும் இருக்கட்டும். ஆனால் அவர்களை ஃப்ரீயா உட வேண்டும். அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் பெருக வேண்டும். அவற்றின் தரம் மிக மிக உயர வேண்டும். வரி பணம் மேலும் இதற்க்கு தான் செலவு செய்ய வேண்டும். (வெட்டி இலவசங்களுக்கும், ராணுவததிற்க்கும், நிர்வாக செலவுகளுக்கும் அல்ல).

        ஆனால் இத்தனை லச்சம் கோடிகள் கொட்டியும், பலன் சரியில்லை. காரணம் இத்து போன சோசியலிச கால சட்டதிட்டங்கள். நிரந்தர வேலை மற்றும் lack of accountability. மற்றும் ஊழல், ஊழல். எல்லா ‘முதலாளித்துவ’ நாடுகளிலும் இதே போல் இல்லை. அமெரிக்கா, மே.அய்ரோபா நாடுகளில் அரசு அளிக்கும் கல்வி சேவை எப்படி நன்றாக உள்ளது என்று ஒப்பிடலாம் என்று சொன்னேன். அதை பற்றி விவாதிக்கலாமே.

        cost / benefit analysis செய்யலாம். ஏன் அரசு ஊழியர்களின் சேவை தரம் மற்றும் பொறுப்பு இத்தனை மோசமாக உள்ளது என்பதற்க்கான அடிப்படை காரணி பற்றி பேசலாம்.

        அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் நல்ல தரத்துடன் இயங்கினார் they will and should give a best competition to private schools and hospitals. தனியார்களின் தம் தரத்தை உயர்த்தி, கட்டிணங்களை குறைக்க முயலும் சூழல் உருவாகும்.

        • இப்பத்தான் செருப்பு ஏற்றார் போல் காலை வெட்டுவதுன்னு சொன்னேன் அதுக்குள்ள அதை நிரூபிச்சிட்டீங்க…

          @@@ இத்து போன சோசியலிச கால சட்டதிட்டங்கள்.BLAH BLAH BLAH…YAAAAWWWWNNNNN @@@

          இதை சொல்ல வருவதற்காக எதுக்காக ஆசிரியர்களை போட்டு காய்ச்சனும். நேரவே சொல்லியிருக்கலாம்.. போகட்டும் தனியாருக்கும் அக்கவுண்டபிளிடிக்கும் ஸ்னானப்பிராப்தி கூட கிடையாது. இந்த விசயத்தெல்லாம் திரேதாயுகத்திலிருந்து அசுரன் உங்ககிட்ட சொல்லிவிட்டதனால புதுசா நான் சொல்ல ஒன்னும் இல்லை.

          மற்றபடி இன்பிராஸ்டரக்சரை டெவலப் பண்ணாம நீங்க ஆண்டிபட்டியையும் அமெரிக்காவையும் ஒப்பிட முடியாது. அமெரிக்கன் பப்ளிக் ஸ்கூல்சோட இந்திய தனியார் பள்ளிகளை கூட நீங்கள் ஒப்பிட முடியாது. எதுக்கு அந்த வெட்டி வேலை?

          அரசின் கொள்கையே தனியார்மயமாக இருக்கும் போது அது எப்படி தனியாருடன் போட்டி போட முடியும் என்ற சீக்ரெட்டை நீங்களே சொல்லிக்கொடுங்களேன்.

  3. //மற்றபடி ஆசிரியர்கள் தவறு செய்யவில்லை என்று நான் இங்கே சொல்லவில்லை ஆனால் அது ஒரு பொறுட்படுத்த வேண்டிய அளவுக்கான காரணம் இல்லை என்றும், தனியார்மயவாதிகளின் கோயபல்சு வேலை என்றும்தான் சொல்கிறேன்.///

    இப்படி பேசுவீக என்று தெரியும். சரி, அப்ப இப்ப இருக்கும் நிலையே தொடரட்டும். நான் அளித்த சுட்டியில் உள்ள விவரங்களை வேண்டியவக படித்துக்குவாக.

    அரசு ஆரம்ப பள்ளிகளின் infrastructureகளில் பல ஓட்டைகள், சீர்கேடுகள் உள்ளன என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதெல்லாம் சரி செய்து, பக்காவாக மாற்றினால், கல்வி தரம் உயர்ந்துவிடுமா என்ன ? நல்ல வசதிகள் கொண்ட அரசு ஆரம்ப பள்ளிகளும் உண்டு. அவற்றில் பயில்பவர்களின் தரம், வசதிகள் குறைவாக உள்ள பள்ளிகளைவிட அதிகம் என்று நிருபிக்கப்பட வில்லை. எனெனில் ஆசியரின் தரம் தான் மிக மிக முக்கியம்.

    அய்.அய்.டி, அய்.அய்.எம் இல் ஆசிரியர்கள் ஒ.பி அடிக்கவே முடியாத. continuous and rigorous appraisal உண்டு. ஆய்வு பேப்பர்கள் தொடர்ந்து எழுதி சமர்பித்து கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியராக அங்கு சேர்வது மிக கடினம். எனது பார்பன நண்பர் சொன்னது. பார்பனர் எனபதற்காக மட்டும் வேலை கிடைக்காது.

    ஆசிம் பெரேம்ஜி உருவாக்கும் அருமையான நிறுவனம் பற்றி படித்திருக்கிறேன்.

    சரி, இவை எல்லாம் நான் பேசிய மைய விசியத்திற்க்கு அப்பாற்பட்டவை.
    மீண்டும் சொல்கிறேன் : இதை சரி செய்யாமல் எத்தனை கோடிகள் செலவு செய்தாலும், பேசினாலும், முழங்கினாலும் ஒன்னும் பிரயசனமில்லை. status quo will continue and poor students will not get a better education. that is all.

    • அதாவது நான் என்ன சொல்றேன்னா காலுக்கு ஏத்த மாதிரிதான் செருப்பு வாங்க முடியும்னு, நீங்க என்ன சொல்றீங்க, செருப்புக்கு ஏத்த மாதிரிதான் காலை வெட்டனும்னு.. இது அறிவியல்பூர்வமானது அல்ல…

      @@@அய்.அய்.டி, அய்.அய்.எம் இல் ஆசிரியர்கள் ஒ.பி அடிக்கவே முடியாத. continuous and rigorous appraisal உண்டு.@@@

      இது மட்டுமா உண்டு, மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட உலகத்தரமான இன்பிராஸ்ட்டிரக்சரும் உண்டு. கூரை இல்லாத பள்ளியில் ஆசிரியிருக்கு அப்ரெய்சல் செய்வீங்களா? உங்களுக்கே இதை சொல்ல சிப்பு சிப்பா வரல… அமெரிக்காவுல ஆய்வு செய்வதெல்லாம் இருக்கட்டும் ஆண்டிப்பட்டி ஆரம்ப்பள்ளியும் அமெரிக்க ஆரம்ப பள்ளியும் ஒரே தரத்தில இருக்கா. அப்படிப்பட்ட தரத்தில் அதை மாற்றிவிட்டு அப்புறம் கம்பேர் பண்ணுங்க, அப்ரெய்சல் பண்ணுங்க அதுதான் பகுத்தறிவு. இல்லேன்னா மைக்கேல் போல்டு கூட 100 மீட்டர் டேஷில் ஒரு காலிழந்தவனை ரேஸ் ஓட விடுவது போல்தான்.

      @@@ அரசு ஆரம்ப பள்ளிகளின் infrastructureகளில் பல ஓட்டைகள், சீர்கேடுகள் உள்ளன என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதெல்லாம் சரி செய்து, பக்காவாக மாற்றினால், கல்வி தரம் உயர்ந்துவிடுமா என்ன? @@@

      இல்லை இப்படி செய்வதுதான் தரமான ஆசிரியர்களையும் மாணவர்களை உருவாக்குவதில் முதல்படி என்கிறேன். இதை செய்யாமல் அதை கோரவே முடியாது என்கிறேன்

  4. //இல்லை இப்படி செய்வதுதான் தரமான ஆசிரியர்களையும் மாணவர்களை உருவாக்குவதில் முதல்படி என்கிறேன். இதை செய்யாமல் அதை கோரவே முடியாது என்கிறேன்
    //

    இரண்டையும் ஒரு சேர செய்ய வேண்டும். என்ன தடை ? மேலும் கூரைகள் மற்றும் வசதிகள் நன்றாக உள்ள அரசு பள்ளிகளின் தரம் ஏன் பெரிய அளவில் இதர பள்ளிகளை விட இல்லை என்று கேள்விக்கு பதில் சொல்லவில்லை. 50 சத பள்ளிகள் இவை..

    இதை பற்றி ’இடதுசாரியான’ எழுத்தாளர் ஞாநி எழுதியது :

    அசல் பிரச்னை பாடப் புத்தகமோ பாடத் திட்டமோ அல்ல. பயிற்றும் முறையும் தேர்வு முறையும்தான் அசல் பிரச்னைகள். மெட்ரிக், ஸ்டேட் போர்ட் தேர்வு முறைகள் மாணவரின் மனப்பாட சக்தியை மட்டுமே சோதிக்கின்றன. கீவேர்ட்ஸ், கீ டெர்ம்ஸ் அடிப்படையில் மட்டுமே மதிப்பெண்கள் தரப்படுகின்றன. சி.பி.எஸ்.ஈ. தேர்வு முறை, சிந்தித்து சுயமாக எழுதுவதை சோதிப்பதாக இருக்கிறது.

    கூடவே மாற்றப்பட வேண்டியது பயிற்று முறை. அரசு ஆசிரியரின் சம்பளம் தனியார் ஆசிரியரைவிட பல மடங்கு அதிகமானது எனினும் எந்த தனியார் பள்ளியிலும் குறைந்த பட்சப் பயிற்றுதல் தரம் என்பது அரசுப் பள்ளியின் சராசரித் தரத்தை விட மேலாகவே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்கள் விதிவிலக்கு. தனியார் பள்ளிகளில் தரம் குறைந்த ஆசிரியர்கள் விதிவிலக்கு.

    3. ஆண்டுதோறும் ஆசிரியர்களின் பணிப் பங்களிப்பு மதிப்பிடப்பட்டு அதன் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.//

    • ஞானி எப்படி அறைகுறை இடது சாரியோ அது போலவே அவரது கருத்தும் உள்ளது. கல்வியை பாதிக்கும் சமூக காரணிகளை பற்றிய அலசல் இல்லாமல், இப்படி மனப்பாட ஆண்டிகளை உருவாக்கும் கல்விமுறை நிலைத்திருக்கும் காரணங்களுக்குள் போகாமல், மதிப்பெண் கொண்டு மாணவனை மதிப்பிடும் முறையின் காரணங்களை பரிசீலிக்காமல் மேப்போக்காக அருள்வாக்கு சொல்வது சரியான காமெடி.

      ஒரு வேளை ஞானி சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் சிபிஎஸ்இக்கு நெருக்கமாக பாடத்தட்டத்தை கொண்டு செல்ல முயற்சி செய்த சமர்சீர் கல்வியை ஏன் தனியார் பள்ளிகள் கட்டோடு எதிர்தார்கள் என்பதையும். நீங்கள்தானே சொல்லவேண்டும்

      ஞானி சொல்வதை நீங்கள் ஏற்றால் இந்த மனப்பாட கல்வி முறையை அதாவது மாணவனை நங்கு மனப்பாடம் செய்ய வைத்து மார்க் வாங்க வைப்பதே ஆசிரியரின் பணி என்றால் அதை எப்படி ஆசிரியரின் பணிப் பங்களிப்பில் அப்ரைசல் செய்ய முடியும்? அது ஒரு மாணவனின் மணப்பாடம் செய்யும் திரணை பொறுத்தல்லவா இருக்கிறது, ஆசிரியர் அதற்கு என்ன செய்ய முடியும்? தினமும் வல்லாரைக்கீரை சமைத்து எடுத்து வருகிறாரா? வேளா வேளைக்கு மெமரி பிளஸ் மாத்திரை கொடுக்கிறாரா என்றா பார்ப்பீர்கள்? ரொம்ப வித்தியாசமான ஐடியாவா இருக்கே …

      செருப்பில் வேண்டுமானால் ரப்பர் செருப்பு, லெதர் செருப்பு என்று இருக்கலாம் ஆனால் கல்வியில் இருக்க முடியுமா? ஒன்னு மெட்ரிக், இல்ல ஸ்டேட் போர்ட் இல்ல சென்ட்ரல் போர்ட் ஆனால் மெட்ரிக் சொல்லிக்கொடுக்கும் தனியார் பள்ளியிலேயே ஏன் சில பள்ளிகளில் எல்கேஜிக்கு ஒரு லட்சமும், சில பள்ளிகளில் அதே எல்கேஜிக்கு 40 ஆயிரமும் வாங்குகிறார்கள். எனக்கென்னவோ இது செலவு செய்யும் காசுக்கு ஏத்த தோசை போலத்தான் உள்ளது ஆனால் என் பார்வையை விடுங்கள், நீங்களே சொல்லுங்கள் இதில் எது உசந்தது. எதில் நீங்கள் சொல்லும் அப்ரைசல் சிஸ்டம் பக்காவாக இருக்கும்? எதில் தரமான ஆசிரியர் கிடைப்பார்கள்?
      முக்கியமாக ஏன் தனியாருக்குள்ளேயே இப்படிப்பட்ட கட்டண வேறுபாடு? எல்லாம் ஒரே செருப்புதானே இல்லை இல்லை கல்விதானே

    • @@மேலும் கூரைகள் மற்றும் வசதிகள் நன்றாக உள்ள அரசு பள்ளிகளின் தரம் ஏன் பெரிய அளவில் இதர பள்ளிகளை விட இல்லை @@

      இதை புரிந்து கொள்ளத்தான் ஆரம்பக் கல்வியை பாதிக்கும் சமூக காரணிகளை பற்றிய ஒரு முதலாளித்துவ ஆய்வை கொடுத்தேன். அதைப் படிக்கலாமே.

      http://www.azimpremjifoundation.org/pdf/TheSocialContextofElementaryEductaioninRuralIndia.pdf

      சிஸ்டம் பக்காவான அமெரிக்காவிலும் கூட்த்தான் ஏகப்பட்டபேர் ஹைஸ்கூல் படிக்கமுடியாமல் விலகுகிறார்கள். இது பற்றிய ஆய்வை படித்துப்பாருங்கள். அங்கே வாத்தியாரின் தரத்தையா வைத்து மதிப்பிடுகிறார்கள். இல்லை. அமெரிக்காவில் தெளிவாக இருப்பவன்-இல்லாதவன் என்று தீர்மானிக்க முடிகிறது. கூடுதலாக அரசு கல்விக்கான செலவுகளை குறைத்ததும் முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது

      முதலாளித்துவ சுட்டி

      http://www.all4ed.org/files/GraduationRates_FactSheet.pdf

      டிராட்ஸ்கிய சுட்டி

      http://www.wsws.org/articles/2008/apr2008/scho-a03.shtml

      • கேள்விக்குறி,

        நான் எழுப்பிய அடிப்படை பிரச்சனை பற்றி நேரடியா பதில் சொல்ல முடியாமா சும்மா டபாய்க்காதீக. அமெரிக்காவில் உள்ள விதிவிலக்குகள் பற்றி மட்டும் பேசினால் எப்படி ? அங்கு பெரும்பான்மை மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள். இங்கு இல்லை. ஏன் ? அங்கும் சீர்திருத வேண்டிய விசியம் நிறைய உள்ளன. அது வேறு விசியம்.

        1990களுக்கு பின், புதிதாய் உருவான செல்வ செழிப்பில், பல பகுதிகளில் நல்லுள்ளம் கொண்ட மனிதர்கள் தம் பகுதியுள்ள பஞ்சாயத் மற்றும் நகராட்சி பள்ளிகளுக்கு பெரும் கொடை அளித்து, புதிய கட்டிடங்கள் மற்றும் இதர வசதிகளை செய்து கொடுக்கிறார்கள். அரசும், வரி வசூல் அதிகம் பெற்று, பல புதிய கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் மிக அதிகம் செய்து தந்துகொண்டிருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்பு இருந்ததவை விட இன்று பல நூறு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் பரவாயில்லை. ஆனாலும் ஆசிரியர்களின் தரம் குறைவுதான். கரூரை சுற்று பல பள்ளிகளில் இன்று கட்டுமான வசதிகள் மிக அதிகரித்திருக்கின்றன. ஆனால் பெற்றோர் தனியார் பள்ளிகளை தான் மிக அதிகம் நாடுகின்றனர். ஏன் ? ஆசிரியர்களின் வேலை திறனை எப்படி உயர்த்துவது ? இதை பற்றி பேசாமால் சும்மா ஓட்டாதீங்க.

        • அதியமான்,

          நேரடியா , மேல, கீழே சைடு மற்றும் 360 டிகிரியிலிருந்தும் உங்களுக்கு பதில் சொல்லியாச்சு ஆனாலும் என் கேள்விக்கு என்ன பதில்னு சும்மா சீன் போடாதீங்க, ரீல் அந்து போய் ரொம்ப நேரம் ஆச்சு. அசுரன் உங்களைப்பத்தி பலமுறை இதையேத்தான் சொல்றார் ஆனாலும் நீங்க இந்த போக்கை மாத்திக்கிற மாதிரி தெரியல..

          நீங்கள் துவக்கத்திலிருந்து சொல்லிவருவது ஒரே விசயம்தான்

          1) ஆசிரியர் சரியில்லை – அதுக்கு காரணம் அவர்களுக்கு அக்கவுண்டபிளிடி இல்லை – அதற்கு காரணம் பழைய சோசலிச அரசு முறை. தனியாரில் இருப்பது போல அப்ரைசல் செய்து அக்கவுண்டபிளிடியை ஏற்றி அதன் அடிப்படையில் சம்பளம் கொடுத்தால் ஆரம்பக் கல்வி தரமாகி விடும் என்பது. இதற்கு உதாரணமாக அமெரிக்காவில் அப்படி உள்ளது அதனால்தான் அங்கே அரசே கல்வி வழங்கிய போதும் பிரச்சனை இல்லை என்கிறீர்கள்.

          இது முழுப் பொய் என்றும். ஆசிரியர்களிடம் குறை உள்ளது என்றாலும் ஆரம்பக் கல்வியின் பால் அரசு கொண்டுள்ள பாராமுகமும் இன்னும் பல சமூக காரணிகளும் இதற்கு உண்டு என்றுதான் நான் எழுதுகிறேன்.

          அதற்கு உதாரணமாக ஆரம்பக்கல்வியை பாதிக்கும் சமூக காரணிகளை பட்டியல் போட்டிருக்கும் ஒரு முதலாளித்து ஆராய்ச்சியின் சுட்டியை உங்களுக்கு அளித்தேன்

          http://www.azimpremjifoundation.org/pdf/TheSocialContextofElementaryEductaioninRuralIndia.pdf

          இந்திய அரசின் பாராமுகத்தை விளக்கும் விக்கிபீடியாவின் சுட்டியையும் அளித்து இந்த வரிகளையும் குறிப்பிட்டிருந்தேன்

          http://en.wikipedia.org/wiki/Education_in_India

          A study of 188 government-run primary schools found that 59% of the schools had no drinking water and 89% had no toilets.[75] 2003–04 data by National Institute of Educational Planning and Administration revealed that only 3.5% of primary schools in Bihar and Chhattisgarh had toilets for girls. In Madhya Pradesh, Maharashtra, Andhra Pradesh, Gujarat, Rajasthan and Himachal Pradesh, rates were 12–16%.[76]

          இதுதான் பெரும்பான்மை இந்திய நிலைமை என்பதுதான் கசப்பான உண்மை

          ஆனால் இதை நீங்கள் ஏற்கவில்லை நல்ல கட்டமைப்பு வசதிகள் இருக்கும் அரசுப்பள்ளிகல் பல உள்ளன அங்கு ஏன் நல்ல ஆசிரியர் இல்லை என்று கேட்டு அதற்கு காரணம் அமெரிக்காவில் எல்லாம் இருப்பதை போல இங்கே அக்கவுண்டபிளிடி அப்ரைசல் இல்லை என்றீர்கள்.

          இது முழுவதும் தவறு அமெரிக்க அரசுப்பள்ளிகளுடன் நமது பணக்கார தனியார் பள்ளிகளைக்கூட நீங்கள் ஒப்பிட முடியாது என்கிறேன் நான். மேலும் சிறுபான்மையான விகிதத்தில் நல்ல வசதிகளுடன் அரசு ஆரம்ப பள்ளிகள் இருந்தாலும் ஆரம்ப கல்வியை பாதிக்கும் சமூக காரணிகளை போல இந்த தனிநபர்கள் அதை பாதிப்பதில்லை என்றும் எழுதியிருந்தேன்.

          மேலும் நீங்கள் உங்கள் கருத்துக்கு இசைவான ஞானியின் கருத்தையும் முன்வைத்தீர்கள்
          அதன் மேலும் நான் கேள்வியெழுப்பியிருந்தேன்

          அவை

          1) ஒரு வேளை ஞானி சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் சிபிஎஸ்இக்கு நெருக்கமாக பாடத்தட்டத்தை கொண்டு செல்ல முயற்சி செய்த சமர்சீர் கல்வியை ஏன் தனியார் பள்ளிகள் கட்டோடு எதிர்தார்கள் என்பதையும். நீங்கள்தானே சொல்லவேண்டும்

          அடுத்து நீங்கள் குறிப்பிடும் அப்ரைசல் சிஸ்டமே ஒரு மாபெரும் மோசடி என்பதை விளக்கி, உங்களுக்கு கேள்வியும் எழுப்பியிருந்தேன்

          2) ஞானி சொல்வதை நீங்கள் ஏற்றால் இந்த மனப்பாட கல்வி முறையை அதாவது மாணவனை நங்கு மனப்பாடம் செய்ய வைத்து மார்க் வாங்க வைப்பதே ஆசிரியரின் பணி என்றால் அதை எப்படி ஆசிரியரின் பணிப் பங்களிப்பில் அப்ரைசல் செய்ய முடியும்? அது ஒரு மாணவனின் மணப்பாடம் செய்யும் திரணை பொறுத்தல்லவா இருக்கிறது, ஆசிரியர் அதற்கு என்ன செய்ய முடியும்? தினமும் வல்லாரைக்கீரை சமைத்து எடுத்து வருகிறாரா? வேளா வேளைக்கு மெமரி பிளஸ் மாத்திரை கொடுக்கிறாரா என்றா பார்ப்பீர்கள்?

          அடுத்ததாக தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிப்பங்களிப்பு, அப்ரைசல் எல்லாம் இருப்பது சரி, ஆனால் ஏன் அத்தனியார் பள்ளிகளில் இடையிலேயே பெருமளவு கட்டண வித்தியாசம் உள்ளது? அதற்கு எது அடிப்படை கீழ் காணும் கேள்வியில் கேட்டிருந்தேன்

          3) மெட்ரிக் சொல்லிக்கொடுக்கும் தனியார் பள்ளியிலேயே ஏன் சில பள்ளிகளில் எல்கேஜிக்கு ஒரு லட்சமும், சில பள்ளிகளில் அதே எல்கேஜிக்கு 40 ஆயிரமும் வாங்குகிறார்கள். எனக்கென்னவோ இது செலவு செய்யும் காசுக்கு ஏத்த தோசை போலத்தான் உள்ளது ஆனால் என் பார்வையை விடுங்கள், நீங்களே சொல்லுங்கள் இதில் எது உசந்தது. எதில் நீங்கள் சொல்லும் அப்ரைசல் சிஸ்டம் பக்காவாக இருக்கும்? எதில் தரமான ஆசிரியர் கிடைப்பார்கள்? முக்கியமாக ஏன் தனியாருக்குள்ளேயே இப்படிப்பட்ட கட்டண வேறுபாடு?

          அடுத்ததாக நீங்கள் எடுத்தியம்புகிற அக்கவுன்டபிளிடி, அப்ரைசல் எல்லாம் பக்காவாக உள்ள அமெரிக்க அரசால் பெரும் பிரச்சனையாக பார்க்கப்படும் மாணவர்கள் பள்ளியிலிருந்து விலகுவது என்பது எதனால் நடக்கிறது என்பதை பற்றிய ஆய்வில் அதில் ஆசிரியர்களை ஒரு காரணமாக சொல்லாமல் சமூக காரணிகளைத்தான் முதன்மையானதாக முதலாளித்துவ அறிஞர்கள் கருதுகிறார்கள் என்ற சுட்டியையும் அளித்தேன்

          http://www.all4ed.org/files/GraduationRates_FactSheet.pdf

          ஆனால் அது விதிவிலக்கு என்று நீங்கள் ஒரேயடிகாக சொல்வது அளிக்கும் சுட்டிகளை திறந்து கூட பார்ப்பதில்லை என்பதையே காட்டுகிறது. மேற்கொண்ட சுட்டியின் முதல் வரியை இப்படி துவங்குகிறது

          Over a million of the students who enter ninth grade each fall fail to graduate with their peers four years later. In fact, about seven thousand students drop out every school day……… ஒரு நாளைக்கு 7000 என்பது விதிவிலக்கா?

          இது மட்டுமன்றி வேறு சில கேள்விகள் கூட மேலே கேட்டிருக்கிறேன் ஆனால் எல்லா வகையிலும் உங்கள் வாதம் பதிலளிக்கப்பட்ட / முறியடிக்கப்பட்ட போதும் நீங்கள் கொஞ்சம் கூட நான் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல், திரும்பத்திரும்ப தேய்ந்த ரெக்கார்டு போல சொன்னதையே சொல்கிறீர்கள். இது விவாத நேர்மையே அல்ல.

          மீண்டும் சொல்கிறேன், உங்கள் கருத்துக்கேற்ப உண்மைகளை சிதைக்காதீர்கள். அது செருப்புக்கேற்றார் போல் காலை வெட்டுவது போலுள்ளது

          • @@@பெற்றோர் தனியார் பள்ளிகளை தான் மிக அதிகம் நாடுகின்றனர். ஏன் ? ஆசிரியர்களின் வேலை திறனை எப்படி உயர்த்துவது ?@@@

            நீங்கள் எழுப்பியுள்ள இந்த புதிய கேள்விகளை விவாதிக்க ஆசைதான், ஆனால் மேலே என் கேளவிகளுக்கு நீங்கள் பதிலளிக்க முயற்சிக்காதவரை இதனுள் நான் இறங்கப்போவதில்லை

            • மனிதர்களை ஒழுங்கா முழு திறமையையும், உழைப்பையும் வெளிப்படுத்தி தம் ‘வேலையை’ செய்ய ஊக்குவிக்கு, உந்து செய்யும் முறை பற்றி தான் அடிப்படை முரண்பாடே. முதலாளித்துவ சந்தை முறையில் : incentive system தான். அதாவது யாருக்கும் நிரந்தர வேலை கிடையாது. ஒப்பந்த அடிப்படையில், வேலை திறன் அடிப்படையில் தான் சம்பளம் மற்றும் சலுகைகள். இதன் மூலமே ஒரு மனிதன் தம் முழு திறமை மற்றும் உழைப்பையும் தான் செய்யும் வேலையில் செழுத்துவான் என்ற கோணம்.

              சோசியலிச அல்லது இடதுசாரி முறையில் இதற்ற்கு மாற்றானது. ஜாப் செக்க்யுரிட்டி தான் அடிப்படை. எப்படி வேலை செய்தாலும் அனைவருக்கும் (ஒரே வேலையை செய்ப்வர்களுக்கு) ஒரே சம்பளம் மற்றும் சலுகைகள். வேலை திறன் எப்படி இருந்தாலும் பதவி உயர்வு மற்றும் சம்பள் உயர்வில் எல்லாருக்கும் ‘சமத்துவம்’ தான்.

              இரண்டு முறையில் எது உருப்படியான பலன்களை தருகிறது என்பதை அனுபவம் மற்றும் வரலாறு சொல்கிறது. இரண்டாவது முறையில் நேர்மையா, ஒழுங்கா வேலை செய்ய முயல்பவர்கள் சில காலங்களில் விரக்தி அடைவர். தம்முடன் பணி புரிவர்களில் பலரும் ஓபி அடித்தாலும், எல்லோருக்கும் ஒரே பலன் என்றால் மனம் சோர்வடையும். ஊழல் வேறு மிக அதிகமா சாத்தியம்.

              வெறும் தியரி பேசுபவர்கள் ஒரு பத்து பேர்களை வேலைக்கு வைத்து ஒரு சிறு நிறுவனம் அல்லது வியாபரம் செய்து பார்க்கவும். அல்லது அரசு நிறுவனம் / கூட்டுறவு நிறுவனம் எதிலாவது வேலை செய்து பார்க்கவும். அப்ப தான் புரியும்.

              ஏன் சில துறைகள் மட்டும் வேலை செய்பவர்கள் ஓபி அடிக்கின்றனர், ஏன் அதே துறையில் வேறு சில நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ஒழுங்கா நேர்மையா வேலை செய்கின்றனர், வாடிகையாளர்களுக்கு தரமான சேவைகளை, மரியாதையுடன் அளிக்கின்றனர் என்று அனுபவித்து பார்த்தால் தான் புரியும்.

          • //இது முழுப் பொய் என்றும். ஆசிரியர்களிடம் குறை உள்ளது என்றாலும் ஆரம்பக் கல்வியின் பால் அரசு கொண்டுள்ள பாராமுகமும் இன்னும் பல சமூக காரணிகளும் இதற்கு உண்டு என்றுதான் நான் எழுதுகிறேன்.////

            நான் தமிழக அரசு பள்ளிகளை பற்றி பேசினேன். வட இந்தியாவை விட தமிழக அரசு பள்ளிகளின் கட்டுமான வசதிகள் பரவாயில்லை. கட்டுமான வசதிகள் போதுமானதாக உள்ள பள்ளிகளின் தரம் பெரிய அளவில் நன்றாக இருப்பதாக தெரியவில்லை. ஏன் ? இதற்க்கு முதலில் பதில் சொல்க.

            அரசு பள்ளி ஆசிரியர்கள் நல்ல சம்பளம் வாங்கியும், பல நாட்கள் ஒழுங்கா பள்ளிக்கு வருவதில்லை. லாஸ் ஆஃப் பே யில் இஸ்டதுக்கு விடுப்பு எடுக்கலாம். சொந்த வேலைய பார்துக்கலாம் (வட இந்தியாவில் லஞ்சம் கொடுத்து சஸ்பெண்ட ஆகி, ஒரு வருடம் சொந்த வேலைகளை பார்த்து, பிறகு சஸ்பென்ஸனை ரத்து செய்து, முழு சம்பளத்தையும் திரும்ப பெறும் ஒரு ‘முறை’ உள்ளது.)
            பல ஆசிரியர்கள் பல ‘உப தொழில்களை’ செய்கிறார்கள். கந்து வட்டிக்கு விடுகிறார்கள். டூசன் செண்ட்டர்கள் நடத்துகிறார்கள். பிணாமி பெயர்க்ளில் தனியார் பள்ளிகள் நடத்துகிறார்கள். அரசு பள்ளிகளில் ஒழுங்க கற்பிப்பதை தவிர மற்ற அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள். அவர்களை யாரும் தட்டி கேட்க முடியாது. ஏன் ? வேலை போகவே போகாது ? சங்கம் மற்றும் போராட்டங்கள். வேலை வாங்குவதில் இருந்து லஞ்சம். ட்ரான்ஸ்ஃபரில் லஞ்சம்.

            கட்டுமானம் மட்டும் இருந்தால், சரியாகிவிடும் ; ஆசிரியர்களின் ஒழுக்கம் மற்றும் அடிப்படை நேர்மை பெரிய பிரச்சனை இல்லை என்பதே உங்க நிலை. அல்ல, அடிப்படை நேர்மை மற்றும் ஒழுக்கம் தான் மிக மிக முக்கியம். அது இல்லாமல் சூப்பர் கட்டுமானம் அளித்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லை என்பதே எம் நிலை.
            அரசு ஆசிரியர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த என்ன வழி ?

            மனப்பாடம் செய்யாத முறையை தான் ஞாநியும், பலரும் (நானும்) முன் மொழிகிறோம். அது வேறு விசியம்.

            புதிய சட்ட திருத்தங்கள் எத்தனை கொண்டு வந்தாலும், சேர்த்தாலும், இந்த அடிபபடை அறம் இல்லாமல் ஒரு பிரயோசனமும் இல்லை.

          • //ஆனால் எல்லா வகையிலும் உங்கள் வாதம் பதிலளிக்கப்பட்ட / முறியடிக்கப்பட்ட போதும் நீங்கள் கொஞ்சம் கூட நான் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல், திரும்பத்திரும்ப தேய்ந்த ரெக்கார்டு போல சொன்னதையே சொல்கிறீர்கள். இது விவாத நேர்மையே அல்ல. ///

            நான் பேச வேண்டிய டைலாக் இது. அமெரிகாவிலும் நிறைய சீர்திருத வேண்டிய விசியங்கள் உள்ளன என்றும் சொல்லியிருந்தேன். அங்கு தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தான் அதிகம் மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு ஒரு காலத்தில் அப்படி தான் இருந்தது. ஆனால் கடந்த 30 வருடங்களாக மாறிக்கொண்டிருக்கிறது. ஏன் ?

            சரி, விதண்டாவாதம் செய்வது யார் என்று வாசகர்கள் முடிவு செய்து கொள்ள்ட்டும். அரசு ஆசிரியர்களி ‘உரிமைகளை’ பற்றி மட்டும் இடதுசாரிகள் துணை கொண்டு போராடட்டம் தொடரட்டும். அவர்களின் ‘கடமை’ பற்றி யாரும் பேச வேண்டாம். இருக்கும் நிலையே தொடரட்டும். சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய சிலபஸ் மட்டும் அனைத்து பள்ளிகளுக்கும் வரட்டும். அரசு பள்ளிகளுக்கு புதிய சிலபஸ் கிடைக்கும். அவ்வளவுதான். ஆனால் அங்கு தரம் உயரப்போவதில்லை. இங்கு தொடர்ந்து ‘பேசுவோம்’, ‘பேசிக்கொண்டே’ இருப்போம். என்ன இருந்தாலும் அரசு ஊழியர்கள் என்பவர்கள் தொழிலாள வர்க தோழர்கள் ஆச்சே. அவர்கள் நலன் தான் முக்கியம். படிக்கும் ஏழை மாண்வர்களின் நலன் முக்கியமல்ல. இதெற்கெல்லாம் மூலக் காரணம் தாரளமயமாக்கல் மட்டும் தான் என்று தொடர்ந்து பேசுங்க. பேசிக்கிட்டே இருங்க. அங்கு கந்து வட்டிக்கு விடும் அரசு ஆசிரியர்களும் தொடர்ந்து தம் ‘தொழிலை’ செய்து சுகமாக வாழட்டும்.

            • எங்கே என் கேள்விகளுக்கு பதில் எழுதியிருப்பீர்களோ என்று நினைத்தேன் ஆனால் மூன்று பின்னூட்டங்களிலும் மீண்டும் அதே சோசலிச எதிரப்பு அழுகாச்சி புராணம்…

              மறுபடியும் முயற்சிக்கிறேன்….

              உங்களை பொறுத்தவரையிலும் சோசலில கொள்கைகளால் விளைந்த மெத்தனத்தால்தான் அரசு ஆசிரியர்கள் கவலையில்லாமல் வேலை செய்கிறார்கள் என்கிறீர்கள். வாத்தியார் ஒழுங்காக வேலை பார்த்தால் ஆரம்ப கல்வி உயர்ந்துவிடும் என்கிறீர்கள்.

              ஒருவர் தன் பணியைப்பற்றி கவலைப்படும் போதுதான் சிறந்த கல்வியை போதிக்கமுடியும் என்கிறீர்கள். இது ஒரு ஓட்டையான வாதம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் சொல்லும் சோசலிச மெத்தனம் ஏன் ஐஐடி ஐஐஎம் எய்ம்ஸ் போன்ற இடத்தில் நடைபெறுவதில்லை, அதுவும் அரசு ஆசிரியர்கள்தான், மிக அதிகமாக சம்பளம் வாங்குபவர்கள்தான். நீங்கள் குறிப்பிடும் சோசலிச பொருளாதார காலகட்டங்களில் உருவாக்கப்பட்டு இன்று பிரம்மாண்டமாக வளர்ந்தவைதான். ஆரம்பகல்விநிலையங்கள் அழிந்துவரும் காலகட்டங்களில் அகில உலகில் புகழ்பெற்று பகட்டாக இருப்பவைதான். ஏன் இப்படி முரண்பாடு?

              அதற்கு காரணமாக நீங்கள் சொல்வது அங்கே தொடர்ந்து ஆய்வுக்கட்டுரை எழுதி தன் தரத்தை நிரூபித்து தன்னனை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆனால் உண்மையோ அதற்கு நேர்மாறானது. அந்த உயர்கல்வி நிறுவனங்கள் நேரடியாக தனியாருக்கு சேவை செய்ய சிறந்த ஆட்களை தயார் செய்பவை அதன் காரணமாக மக்கள் வரிப்பணத்தை கொட்டி சிறந்த (அடிமைகளை) மாணவர்களை அரசு பயபக்தியோடு உருவாக்குகிறது. அதனால் அங்கே அதி சிறந்த ஆசிரியர்களை பேணுகிறது.

              ஆனால் ஆரம்ப கல்வியை பொறுத்தவரை அது தனியார்வசம் போவதையே அரசு கொள்கையாக கொண்டிருப்பதால் அதை தனது ஐஐஎம் போல போற்றிப் பாதுகாக்க அரசு விரும்பவதில்லை, அதன் விளைவுதான் கட்டமைப்பு பாழ்படுதலும் ஆசிரியர் தரம் கெடுதலும். ஒரே அரசு ஆணையால் பொதுத்துறையை தனியார் வசம் ஒப்படைக்கும் இந்த அரசால் அதே ஆணையைக்கொண்டு ஆசிரியர்களை ஒழுங்கு படுத்தி கட்டுமானத்தை மேம்படுத்த முடியாதா? முடியும் ஆனால் செய்ய மாட்டார்கள்.. ஏனெனில் அரசு கல்வியின் அழிவைத்தான் புதிய பொருளாதாரக் கொள்கை கோறுகிறது.

              ஆக தனியார்மய கொள்கையை உடைய இந்திய அரசு, அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி வழங்கவேண்டிய தனது பொறுப்பிலிருந்து விலகி, கல்வியை திட்டமிட்டு அழித்து தனியார் வசம் ஒப்படைக்கும் போது, அப்பள்ளிகளில் உலகின் மிகச்சிறந்த ஆசிரியர்கள் வேலை பார்த்தாலும் எந்த மாற்றமும் வந்துவிடாது. இது தனிநபரின் அறம் சார்ந்த விசயம் அல்ல அரசியல்-சமூக-பொருளாதாரம் சார்ந்த விசயம்.

              இப்போதாவது புரிகிறதா?

              இந்த அமைப்பு முறை என்ற எஞ்சினே பழுதடைந்து உள்ளது, அதை தூக்கியெறிந்து வேறு மாற்ற வேண்டும் என்பது என்வாதம். வேண்டாம் புதிய டயர்கள் மாற்றினால் வண்டி ஓடும் என்கிறீர்கள்…. சத்தியமாக ஓடாது!

              சமச்சீர் கல்வி என்பதும் கூட ஒரு சீர்திருத்தமே, ஆனாலும் அது தனியாரிடம் இருந்து கல்வி எனும் ‘தொழிலை’ பிடுங்கும் ஒரு முயற்சியின் தொடக்கம்.
              அனைவருக்கும் சமமான இலவசக் கல்வி என்பதுதான் இந்த கல்வி அமைப்பை மாற்றவல்லது. அப்படி மாறி வரும் போது மட்டுமே ஒரு ஆரம்பப்பள்ளியின் கட்டுமானம் முதல் ஆசிரியர்கள் தரம் வரை அனைத்தும் உயரும்.

              ஆனால் இதுவும் கூட ஒரு பகுதிதான். இதன் கூடவே கல்வியை பாதிக்கும் சமூக காரணிகளான சாதி, மதம், பெண்ண்டிமைத்தனம், வறுமை உள்ளிட்ட பல அம்சங்களுக்கும் தீர்வு கண்டாக வேண்டும். கல்விக்கு என்று தனியாக அல்ல ஏனைய சமூக பிரச்சனைகளுக்கும் அதுதான் தீர்வு. அத்தீர்வை இந்நாட்டின் முதலாளித்துவ போலி ஜனநாயகத்துக்கு மாற்றாக மக்களுக்கான புதிய ஜனநாயகம் படைக்கும் போது மட்டுமே நாம் அடைவோம்.

              எனவே கல்வியின் தரம் உயர பாடுபடவேண்டும் என்று நீங்கள் கருதினால் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியில் உடனே இணையுங்கள். மேலும் விவரங்கள் வினவு அலைபேசி எண்ணை தட்டினால் கிடைக்கும். ஊதியம், பணிப்பாதுகாப்பு இதுபற்றியெல்லாம் கவலைப்படாத சமூக கடமையை செய்யலாம் வாருங்கள்

              • //ஆனால் ஆரம்ப கல்வியை பொறுத்தவரை அது தனியார்வசம் போவதையே அரசு கொள்கையாக கொண்டிருப்பதால் அதை தனது ஐஐஎம் போல போற்றிப் பாதுகாக்க அரசு விரும்பவதில்லை, அதன் விளைவுதான் கட்டமைப்பு பாழ்படுதலும் ஆசிரியர் தரம் கெடுதலும். ///

                இல்லை. மிக தவறான அனுமானம்.

                முதல்ல சில விசியங்கள் :

                1.எனது வாத நேர்மை பற்றி கேள்வி எழுப்புகிறீக ; விக்கிபீடியா ஆதரம் இப்ப காட்டும் நீங்க, நான் அதே விக்கியில் இருந்து அளித்த போது எள்ளி நகையாடியவர். இப்ப நீங்க அதையே செய்வது எத்தனை அயோக்கியத்தனம். நேர்மை பற்றி நீர் பேசுகிறீர் !!

                2. நான் முதன் முதலில் அளித்த ஆய்வறிக்கை சுட்டி :

                http://www.accountabilityindia.in/accountabilityblog/2235-case-incentive-payments-teachers-government-schools

                There has been a long debate about paying the government teachers (and public sector employees, in general) as per their performance. It has been argued that problems like high absenteeism, lack of teaching when in school, and abysmal quality of teaching might be alleviated if the teacher salary is made conditional on outcomes reflecting their performance. Given the unionization among the government teachers, wider implications for payment policies in public sector, and some legitimate concerns, this policy has been opposed vociferously. Rigorous empirical evidence on this controversial question has started coming in only recently. This post summarizes results from some of the recent research papers analyzing the impact of making the teacher salary conditional on certain observable outcomes….

                இதை படிச்சு கூட பார்க்காத நீர் அளிக்கு சுட்டிகளை மட்டும் நான் படிக்கனும் ?

                இறுதியாக : யாரும் திட்டமிட்டு அரசு ஆரம்ப பள்ளிகளின் தரத்தை, கட்டுமானங்களை பாழ் செய்யவில்லை. சதி திட்டம் என்றெல்லாம் சந்தேகப்படுவது உமது வழக்கமான paronia mentality.

                என்ன செய்தாலும், செயாவிட்டாலும் வேலை போகாது என்று சட்டம் இருந்தால் மனுசன் வேலை ஒழுங்கா செய்ய மாடான் அய்யா. இது மிக எளிமையான உளவியல். மேலே சுட்டியில் உள்ளபடி சில இடங்களில் மாற்று முறைகளை முயன்று நல்ல பலன் கண்டிருக்கிறார்கள்.

                30 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தமிழக்த்தில் பள்ளிகளுக்கு அரசு செலவிடும் தொகை (after adjusting for inflation and rupee value) மிக மிக உயர்ந்துள்ளது. ஆனால் தரம் தாழ்ந்து விட்டது. ஏன் ?

                நீங்க செம்புரட்சி செய்து, அதிகாரத்தை கைபற்றிய பின்னாலும் இதே ஆசிரியர்களை வைத்துதான் வேலை வாங்கப்போகிறீர்கள். அன்று எப்படி இவர்களை ‘திருத்தப்’ போகிறீர்களாம் ?

                carrot and stick policy பற்றி சொன்னாலும் புரிந்துக்க மாட்டீர். அதாவது நன்றாக, சிறப்பாக வேலை செய்தால் நல்ல சம்பள உயர்வு மற்றும் ப்ரோமோசன். மாற்றாக ஓபி அடித்தால், ஒழுங்கா வேலை செய்யாமல் மட்டம் போட்டால், ஊழல் செய்தால், வேலை போகும் அபாயம் அல்லது டீ ப்ரோமசன் : இது தான் தனியார் பள்ளிகளில் உள்ள நிலை. விளைவு நன்றாகதான் உள்ளது. (சம்மளம் கம்மி என்பது வேறு விசியம்).

                நல்ல சம்பளமும் ஒரு சில ‘பணக்கார’ தனியார் பள்ளிகளில் தருகிறார்கள். அதே அளவு சம்பளம் உள்ள அரசு பள்ளி வேலைகளையே ஆசிரியர்கள் விரும்புகிறார்கள். எனெனில் அரசு பள்ளியில் வேலை கிடைத்தால் ‘வேலை’ செய்ய வேண்டாம்.

                சில கிராம அரசு பள்ளிகளில், பல ஆசிரியர்கள் பள்ளிகே வராமல் பிணாமியாக தமக்கு பதில் ‘ஆசிரியரை’ நியமித்து பாடம் நடத்துகிறார்கள். அதாவது சப் காண்ட்ராக்ட் போல. விசாரித்து பார்க்கவும். மேலும்…

              • ///நீங்கள் சொல்லும் சோசலிச மெத்தனம் ஏன் ஐஐடி ஐஐஎம் எய்ம்ஸ் போன்ற இடத்தில் நடைபெறுவதில்லை, அதுவும் அரசு ஆசிரியர்கள்தான், மிக அதிகமாக சம்பளம் வாங்குபவர்கள்தான். நீங்கள் குறிப்பிடும் சோசலிச பொருளாதார காலகட்டங்களில் உருவாக்கப்பட்டு இன்று பிரம்மாண்டமாக வளர்ந்தவைதான். //

                சென்னை அய்.அய்.டிக்கும், அதற்க்கு எதிரே உள்ள அண்ணா பலகலை கழகத்திற்க்கும் அடிக்கிடி செல்லும் வாய்ப்பு எமக்கு உண்டு. அய்.அய்.டியின் நிலையும், மாநில அரசின் கீழ் உள்ள கிண்டி அண்ணா பல்கலைகழகத்தின் நிலைக்கும் பெருத்து வேறுபாடு உண்டு. இரண்டும் மிக அருமையான கட்டுமானம் கொண்டவை தான். ஆனால் அண்ணா பல்கலைகழகம் கெட்டு சீரழிந்து விட்டது. ஊழலுக்கு அளவே இல்லை. துணை வேந்தராக எட்டு கோடிக்கு மேல் லஞ்சம் அளிக்கும் மாஃபியா கும்பல் வேலை. கவர்னர் முதல் முதல்வர் வரை பல கோடிகள் சுருட்டுகிறார்கள். வருடம் இந்த நிறுவனத்திற்க்கு பட்ஜெட் மற்றும் இதர வழிகளில் இருந்து ஒதுக்க்பபடும் பல பல கோடிகளில் பெரும் பகுதி சுருட்ட்டப்படுகிறது. ஊழல் அளவை சொன்னால் நம்ப முடியாது.
                பெரும்பாலும் வகுப்புகள் நடப்பதில்லை. மாணவர்கள் சொந்தமாக படித்து கொள்கிறார்கள். ஆசிரியர்கள் பலரும் வகுப்பு எடுக்காமல் அட்மின் வேலை மற்றும் ‘இதர’ வேலைகளை செய்கிறார்கள். ஆய்வு கட்டுரைகள் தரம் படு மோசம். உலக தரமே இல்லை. பி.ஹெச் டியில் பெரும் ஊழல். மேலும் சொல்ல முடியும்.

                அய்.அய்.டியின் நேர் எதிர் நிலை. ஒரு சில சில்லரை குற்றச்சாட்டுகள் தான். ஆனால் பெரும் அளவில் ஒழுஙகான செயல் பாடுகள். ஆய்வுக்கட்டுரைகள் தரம் உலக தரம். பேப்ரஸ் சமர்பிக்காமல் ஓபி அடிக்க முடியாது. சோசியலிச பாணி இது அல்ல. அண்ணா பல்கலைகழம் தான் அப்படி சொல்ல முடியும்.

                ஓபி அடித்து, ஊழல் செய்யும் கும்பல் உங்கள போன்ற மார்க்சியர்களை கேடையமா பயன் படுத்தி தப்பித்துக் கொள்கிறார்கள். போலிகளான இவர்களை ஏன் தொடர்ந்து பாதுகாக முயல்கிறீர்கள் ? தனியார் மயமாக்க யாரும் சொல்ல வில்லை. வாங்கும் சம்பளத்திற்க்கு மனசாட்சிக்கு விரோதமில்லாமல், ஒழுங்கா நேர்மையா வேலை செய்யத்தான் கேட்கிறோம். அவ்வளவுதான்.

                • ‘சோசியலிசம்’ என்ற சொல்லை நாம் பல அர்த்ததில் பயன்படுத்துகிறோம். அரசு கல்வி மற்றும் பொது சுகாதாரத் துறையில் ஈடுபடவே கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் பல இதர துறைகளில் பிசினஸ் செய்வதை தான் எதிர்க்கிறோம். (அதாவது இரும்பு, உற்பத்தி போன்ற பல துறைகளில்).

                  பிரான்ஸ் நாட்டில் சோசியலிச பாணி என்று உண்டு. அங்கு கல்வி அரசு தான் வழங்குகிறது. மிக நல்ல தரத்தில். (நம் பாண்டிச்சேரியில் கூட ஃபெர்ன்ச் குடியுரிமை பெற்ற மக்களுக்கும் அதே தரத்தில் உண்டு). ஏழைகளுக்கு இலவசம். மற்றவர்களுக்கு அவர்களின் வசதிக்கேற்ற கட்டணம். ஆனால் ஒரே பள்ளிகள் தான் எல்லா ‘வர்கத்தினருக்கும்’ ; அங்கு ஆசிரியர்களுக்கு இந்திய அரசு பள்ளி ஆசிரியகள் போல் ஜாப் செக்யூரிட்டி முற்றாக இல்லை. வேலை ஒழுங்கா செய்யாமல் ஓ.பி அடித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். ஆகவே ஒழுங்கா வேலை செய்றாக. இதுவும் ‘சோசியலிச’ பாணிக்குள் தான் உள்ளது.

                  மொத்தில் மனிதரை எப்படி ஒழுங்கா வேலை செய்ய வைப்பது என்பதில் தான் விவாதம். How to motivate men to work sincerely ?

                • என்னடா இது மூணு நாள் முன்னால சுட்ட வடையை ஊசிப்போனப்பிறகும் அதியமான் மாஸ்டர் சர்வ் பண்ணுறாறேன்னு யாரும் தப்பா நினைக்காதீங்க, இந்த வடை அவர் பலப்பல வருடங்களுக்கு மின்னால சுட்டது, இன்பாக்ட் பாட்டி வடை சுட்ட கதையில் வந்த வடைக்கு பிறகு சுடப்பட்ட அரதப்பழைய வடை இது, அதாவது கெட்டது என்ன நடந்தாலும் அது சோசலிசம், நல்லது நடந்தால் அது ‘அ’சோசலிசம்..

                  இங்கே அதியமான் இதுவரை சொன்னது என்ன? அரசு ஆசிரியர்கள் அரசின் சோசலிச பாணி கொள்கையினால் பொறுப்பற்று வீணாக போய்விட்டார்கள், அதனால்தான் கல்வி பாழடைந்துவிட்டது, அமெரிக்க பாணியிலும் தனியாரிலும் செய்வதுபோல அக்கவுண்டபிளிடி அப்ரைசல் என்று அவர்களுக்கு ‘ஆப்பு’ரைசல் வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.

                  இதை பல கோணங்களிலிருந்து மறுத்து, ஆசிரியர்கள் மீது தவறு உண்டு ஆனால் இது தனிநபர் அறம் சார்ந்த பிரச்சனை அல்ல, மாறாக அரசின் தனியார்மய கொள்கையினால் விளைந்த நிலை என்று விளக்கினேன், மேலும் கல்வியை பாதிக்கக்கூடிய சமூக காரணிகளும் இதில் முக்கிய அங்கம் என்றும் விளக்கி அவர் விரும்பும் முதலாளித்துவ ஆய்வு சுட்டிகளையே அளித்திருந்தேன்.

                  நடைமுறை உதாரணமாக ஐஐஎம் போன்ற அரசு கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்தில் இருப்பதை குறிப்பிட்டேன்.. ஆனால் அதியமான் அதை எப்படி எதிர்கொள்கிறார் பாருங்கள், அதாவது பாழடைந்த அண்ணா பல்கலைக்கழகம் தான் சோசலிச பாணியாம் ஆனால் ஐஐஎம் சோசலிச பாணி இல்லையாம் ஏனென்றால் அது பாழடையவில்லையாம். தன்னுடைய வாதங்களிலேயே இவர் முரண்படுகிறார் .

                  அரசு தனியாரையை விரும்புகிறது எனவே திட்டமிட்டு தனது சமூக கடமைகிலிருந்து விலகுகிறது என்று சொன்னால் அது மனப்பிராந்தி-அதீத பீதி என்கிறார், ஆனால் தான் ஆய்வு செய்யும் போது மட்டும் சோசலிசம் மீதான அவதூறுகளை தாண்டி எங்கும் போக மறுக்கிறார். இவர் அரசு ஒன்றும் அப்படி இல்லை என்று சொன்ன நேற்று காலையில் தான் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஹெட்லைனே கவர்மென்ட் தனியாருக்கு அதீத சலுகை அளிக்கிறது என்று மத்திய தணிக்கை துறை தெரிவித்திருக்கிறது என்பதுதான். மேலும் லிட்டருக்கு 10 காசு என ஆத்துதண்ணியை தனியாருக்கு இந்த அரசு விற்பதும் அதை அவர்கள் 15 ரூபாய்க்கு விற்றுவருவதும் நாடறிந்த செய்திதானே, இது போன்ற எத்தனையோ உதாரணங்களை பல வருடங்களாக அதியமானுக்கு பல தோழர்கள் எழுதிவிட்டனர் ஆனாலும் அந்த வடையை அவர் விடுவதாக இல்லை. ஒரு வேளை வடை நழுவிவிடுமோ என்ற அச்சத்திலேயே மேலே நான் எழுப்பிய கேள்விகளையும் பதில் சொல்லாமல் தவிரத்து வருகிறார்

                  சோசலிச அணுகுமுறையால் அண்ணா பல்கலைக்கழகம் ஊழல் மலிந்து போய்விட்டது என்கிறார், ஆனால் அது சீறழிந்த காலத்திற்கும் வெளியே தனியார் பல்கலைக்கழகங்கள் முளைத்து அசுர வளர்ச்சி பெற்றதற்க்கும் உள்ள தொடர்பை காண மறுக்கிறார். அரசு தான் அளித்து வந்தக் கல்வியை தனியாருக்கு ஒப்படைக்கும் போதெல்லாம் அதன் கல்வித் தரம் அழியத்துவங்குகிறது என்று பரங்கிமலை போல் கண்முன்னால் உள்ள உண்மையை காண மறுத்து அரசிடம் இல்லாத சோசலிச சார்பை குற்றவாளியாக்குகிறார் அதும் இன்று தனியார் கல்லூரிகளின் ஊழலும் கொள்ளையும் சிரிப்பாய் சிரிக்கையில் இதை சொல்வது அபத்தமாக இல்லையா?( இது தொடர்பாக படிக்க https://www.vinavu.com/2009/06/19/self-financing-robbery/ )
                  விட்டால் ஜேபியார் முதல் ஜெயலலிதா வரை யார் ஊழல் செய்தாலும் அவர்கள் சோசியலிஸ்டுகள் என்று சொலிவிடுவார் போல…

                  நடப்பு நிகழ்வுகளையெல்லாம் சொந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து பரிசீலிக்கும் போது இப்படித்தான் அரைவேட்காட்டுத் தனமான முடிவுக்கு வரமுடியும். ஆனால் தன்னை ஒரு லிபரல் ஜனநாயகவாதி என்று கருதிக்கொள்ளும் அதியமான் இப்படி அறிவியலற்ற முறையில் சிந்தித்து மேலோட்டமான ஒரு எளிய தீர்வை முன்வைக்க முடியமா என்று உங்களுக்கு கேள்வி எழலாம். ஒரு லிபரல் ஜனநாயகவாதி இப்படி சிந்திக்க முடியுமா என்பது எனக்கு தெரியாது ஆனால் அதியமான் இப்படித்தான் சிந்திக்க முடியும்.

                  பார்க்கும் எழுத்தாளர்கள் முதல் புரட்சியாளர்கள் வரை பிறந்த தேதி நேரமெல்லாம் கேட்டு அவர் இப்போது இருக்கும் நிலைமைக்கு காரணம் நாளும் கோளும் என ஜோதிட ஆராய்ச்சி செய்யும் அதியமானிடமிருந்து வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்?

                  ””ஆன்மா, மறுபிறவி, ஆவிகள் பற்றி முதலில் நான் கிண்டல் தான் செய்து கொண்டிருந்தேன். அனுபவங்கள் அதை மாற்றின”’ https://www.vinavu.com/2011/06/09/child-raped/#comment-43665 என்று பின்னூட்டத்தில் எழுதி தான் பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று பிரகடனப்படுத்திய ஒரு நபரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

                  இப்படி ஜாதகம், ஜோசியம், பில்லி, சூனியம், ஏவல் போன்ற மூட நம்பிக்கைகளை கொண்டிருப்பதை மெடல் போல குத்திக்கொண்டுள்ளவரிடத்தில் இது போன்ற மேலோட்டமான அறிவியலற்ற அணுகுமுறை தென்படுவதில் ஆச்சரியமில்லைதானே

                  எனவே அதியமானிடத்தில் கல்வி எப்போது சீறாகும் என்பதை வெத்தலையில் மைதடவி பாத்தால் ”அது பிளாக் அண்டு ஒயிட்டாக தெரியுமா இல்லை கலரில் தெரியுமா” என்று வேண்டுமானால் விவாதிக்கலாம், சமூக அரசியல் பொருளாராத பிரச்சனைகளை விவாதிக்கலாமா? முடியாது என்பது என் கருத்து. அதையே மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்கிறேன்.

                  வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்
                  வணக்கம்

                  • //நடப்பு நிகழ்வுகளையெல்லாம் சொந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து பரிசீலிக்கும் போது இப்படித்தான் அரைவேட்காட்டுத் தனமான முடிவுக்கு வரமுடியும். ஆனால் தன்னை ஒரு லிபரல் ஜனநாயகவாதி என்று கருதிக்கொள்ளும் அதியமான் இப்படி அறிவியலற்ற முறையில் சிந்தித்து மேலோட்டமான ஒரு எளிய தீர்வை முன்வைக்க முடியமா என்று உங்களுக்கு கேள்வி எழலாம். ஒரு லிபரல் ஜனநாயகவாதி இப்படி சிந்திக்க முடியுமா என்பது எனக்கு தெரியாது ஆனால் அதியமான் இப்படித்தான் சிந்திக்க முடியும்.///

                    இதை பிதற்றல் என்று தான் சொலால முடியும். கேள்வி குறி : வாசகர்களுக்கும் பகுத்தறிவு உண்டு. நான் எழுதியவற்றை சரியா புரிந்து கொள்ளும் வாசகர்கள் பலரும் இங்கு அமைதியாக படித்து கொண்டிருக்கிறார்கள்.

                    ஜோதிட ஆராய்ச்சி என் சொந்த விசியம். அது மூட நம்பிக்கை என்று பலர் கருதலாம். அது அவர்கள் உரிமை. அவ்வளவுதான். அதை ஏன் இங்கு இழுப்பானேன். நான் எழுதியவற்றை முறையாக மறுக்க முடியாவர் நீர், தனி மனித தாக்குதலுக்கு இறங்குவது வழமையானதுதான்.

                    நான் இங்கு பின்னூட்டம் இட்டு தெளிவு படுத்த நினைப்பது உமக்காக அல்ல. வாசர்களுக்குகாக தான்.

                    அரசு ஊழையர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறம் பற்றி நீர் சொல்வது தான் சரி என்று எல்லோரும் ஏற்றக்கவில்லை. சும்மா உளர வேண்டாம்.

              • ///அனைவருக்கும் சமமான இலவசக் கல்வி என்பதுதான் இந்த கல்வி அமைப்பை மாற்றவல்லது. அப்படி மாறி வரும் போது மட்டுமே ஒரு ஆரம்பப்பள்ளியின் கட்டுமானம் முதல் ஆசிரியர்கள் தரம் வரை அனைத்தும் உயரும்.///

                இல்லை. இது உங்க வாதம். ஏற்கெனவே அளிக்கப்படும் இலவச கல்வியை ஒழுங்க செயல்படுத்து முடியாத அமைப்பு. காரணம் அரசு ஊழியர்களின் அடிப்படை நேர்மை மற்றும் ஒழுக்கம். கட்டுமானம் இரண்டாம் பட்சம் தான்.
                கட்டுமானத்தை ஓவர் நைட் உயர்த்த முடியாது. ஆனால் ’நிரந்தர வேலை கிடையாது, பஞ்சாயத்துகளின் நேரடி கட்டுபாட்டில் தான் பஞ்சாயத்து பள்ளிகள் இனி இயங்கும்’ என்ற எளிய சட்ட திருத்தம் உடனே கொண்டு வந்து சீரழிவை தீர்க்க வாய்ப்பு உண்டு. கட்டுமானத்தை மேம்படுத மேலும் நிதியும், கால அவகாசமும் தேவை.

                //ஆனால் இதுவும் கூட ஒரு பகுதிதான். இதன் கூடவே கல்வியை பாதிக்கும் சமூக காரணிகளான சாதி, மதம், பெண்ண்டிமைத்தனம், வறுமை உள்ளிட்ட பல அம்சங்களுக்கும் தீர்வு கண்டாக வேண்டும்.///

                ஒத்துக்கிறேன். அதற்கான வழிமுறைகளில் தான் மாற்று கருத்து.

                ///கல்விக்கு என்று தனியாக அல்ல ஏனைய சமூக பிரச்சனைகளுக்கும் அதுதான் தீர்வு. அத்தீர்வை இந்நாட்டின் முதலாளித்துவ போலி ஜனநாயகத்துக்கு மாற்றாக மக்களுக்கான புதிய ஜனநாயகம் படைக்கும் போது மட்டுமே நாம் அடைவோம்.///

                இல்லை. தலைவலி போய் திருகு வலி வந்து விடும் என்பதை தான் வரலாறு கூறுகிறது. நேதர்லாந் மற்றும் பல முன்னேறிய நாடுகள் அளவிற்க்கு நாம் உயர்ந்தாலே போதும். அதற்க்கு லிபரல் ஜனனாயக பாணி சந்தை பொருளாதாரம் தான் ஒரே வழி என்பதே எம் வாதம். நீங்க முன் மொழியற முறைகள் மற்றும் இதர ஜனனாயக பாணி சோசியலிச முறை மற்றும் பல இதர முறைகள் எல்லாம் ஏற்கெனவே பரிச்சை செய்து பார்த்து தேராது என்று தெரிந்து கொண்டோம்..

  5. //அதாவது நான் என்ன சொல்றேன்னா காலுக்கு ஏத்த மாதிரிதான் செருப்பு வாங்க முடியும்னு, நீங்க என்ன சொல்றீங்க, செருப்புக்கு ஏத்த மாதிரிதான் காலை வெட்டனும்னு.. இது அறிவியல்பூர்வமானது அல்ல…///

    அப்படின்னு நீங்களே சொல்லிக்க வேண்டாமே. நான் பேச வேண்டிய டைலாக் இது !!
    வாசகர்கள் முடிவு செய்துக் கொள்ளட்டுமே.

    • I am Afraid some of the points about private schools are not discussed,

      1.The Filtration Process on the IQ of children, with entrance test etc.
      2.The basic criteria of having their parents graduated.

      These are the very key factors for the success of the private schools.
      And off-course the syllabus, Feeding them in advance with the next year syllabus etc.

      Also there is a shortcut for the rich parents for their Dull kids, you Pay money in lac’s, you get excellent coaching to make your kid bright.

      Basically, kids till the teen age, have good grasping power and if you utilize them well you can make them bright (exceptions for some challenged kids), however what do you feed them depends on the syllabus and the effort by money.

      Thoughts?

  6. @@@தாய்மொழிக் கல்வியின் தேவை@@@

    இதைப்பற்றி கட்டுரையில் ஒன்றுமே இல்லையே, இரண்டாம் பாகம் உண்டா?

  7. நான் ஒரு ஆதி திராவிடர் நல துறை பள்ளியில் படித்த மாணவன். 3ம் வகுப்பே நிறைவு செய்யாத எனது தந்தை தினமும் வீட்டுபாடம் எழுதவைத்து அனுப்பினார். அதை பார்த்து ஊக்கமூட்ட மனமில்லாத பள்ளி அசிரியர்.

    1ம்(தமிழ் மட்டும்) வகுப்புபிலும், 2ம் (தமிழ் & கணக்கு) வகுப்புபிலும் 1 ஆசிரியர் மட்டும். 3ம் (தமிழ், ஆங்கிலம், கணாக்கு, அறிவியல் & சமூகவியல்) 5 ஆசிரியர். இதுவரை சரியாக நடந்து வந்த பள்ளியில் 4ம் வகுப்புக்கு வத்த ஆண்டில் 1 வகுப்புக்கு 1 ஆசிரியர் என்று வந்துவிட்டது.

    சொந்த நடையில் எழுதுக என்று வினாதாள் தலைப்பில் கொடுத்துவிட்டு மதிப்பெண் கேட்கும் போது கோணார் தமிழுரையில் உள்ளதை போல் இல்லை என்றால் மணவனுக்கு எப்படி சிந்தனை வளரும்.

    இது ஒரு பிண்ணூட்டம் என்பதால் இதை ஒரு ஆதாரமாக காட்டி, இதுபோன்ற குறைகள் கலைந்தால் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளைவிட சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.

  8. கல்விக் கொள்ளையிலிருந்து மீள ஒரே வழி கல்விக்கூடங்களை அரசு மட்டுமே நடத்துவது. அரசுக் கல்விக்கூடங்கள் சரியில்லை என்றால் சரிசெய்வதற்காகப் போராடுவது. இதைத் தவிர வேறு எதுவும் தீர்வாகாது.

    • சவுக்கு,
      புதிய சிந்தனையை தந்தீர்கள் நன்றி ! கிட்டத்தட்ட 1990 வது வருடம் வரை அரசு பள்ளியில் வேலை செய்பவர்கள் தங்களது பிள்ளைகளை ,அவர்கள் இருக்கும் பள்ளியிலோ அல்லது வேறு அரசுப்பள்ளியிலோதான் சேர்த்து படிக்கவைத்தார்கள் ஆனால் இன்று அப்படியல்ல அரசுப்பள்ளிஎன்றாலே தரம் தாழ்ந்தது என்ற நினைப்பு அதில் பணியாற்றுகின்ற பெரும்பாலானவர்கள் மத்தியில் வுள்ளது .அதனால்தான் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் வொவ்வொரு அரசுவூழியரும் தாம் பணியாற்றும் இடங்களை செம்மை படுத்தாமல் தமதுபிள்ளை எங்கோ படிக்கிறார்கள் ரேங்க் வாங்கி நமது போட்டோவை பேப்பரில் வரவைப்பார்கள் என்ற கனவில் இருக்கிறார்கள். சமசீர் கல்வி முதலில் வரக்கூடாது என்று வொவ்வொரு அரசுப்பள்ளி ஆசிரியர்களும்,அரசுவூழியர்களும் அக்கறையின்மையை வெளிப்படுத்தி செயல்படுகிறார்கள் இதை புரிந்துகொண்டுதான் தனியார்ப்பள்ளி கொள்ளையர்கள் நமது மாணவர்கள் நிரந்தர வருவாய் வுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ,அவர்களுக்கு அரியர்,சம்பளம்,அலவன்சு,ஏகப்பட்ட பேங்க் லோன் ,பலவழிகளில் லஞ்சப்பணம் (ஆசிரியர்களுக்கு அவ்வளவாக பொருந்தாது )என்ற எண்ணத்தோடும், வியாபாரம் படுத்துவிடும் என்ற சுயநலத்தோடு கல்விக்கட்டன விழயத்தில் மனிதாபிமானம் இன்றி நடக்கும் புதிய பண்பாட்டை, ஆட்சியாளர்கள்,அனைத்து அரசியல் வியாபாரிகள் கண்டுகொள்ளதது மாபெரும் வேதனை.வினவு ஆக்கபூவமாக மக்கள் மனதில் பதிய வைத்ததில் மகிழ்ச்சி.அதைப்போல,அரசு வூழியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் ப்ரொமொச்டன் கட்டு, இன்கிரிமென்ட் கட்டு,என்று அதிரடி நடவடிக்கை எடுத்தால் கண்டிப்பாக சமசீர் கல்வி தானாக நடமுறைக்குவரும் என்று என்ன தோன்றுகிறது.– மெய்தேடி .

  9. மாநாட்டு தீர்மானங்கள் வரவேற்கத்தக்கது.மாணவர் அமைப்பின் செயல்பாடுகள் சிறக்க வாழ்த்துக்கள்.இவன்.தமுமுக மாணவரணி.

Leave a Reply to HRPC மாநாடு: ஜூன் 3-2012 “இலவச கல்வியை அரசே வழங்க போராடுவோம்” அனைவரும் வருக!! « புரட்சிகர மாணவர்-இளைஞ பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க