privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!

அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!

-

அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!
படம் – http://www.thehindu.com

ண்ணா ஹசாரேவுக்கு பெருகி வரும் ‘ஆதரவைப்’ பார்த்தால் பயமாக இருக்கிறது. பெயிட் நியூஸ் புகழ் டைம்ஸ் நௌ சேனலில் தொடங்கி என்.டி.டிவியின் தரகு வேலை புகழ் பர்க்கா தத், மாஃபியா உலகத் தொடர்பு மற்றும் கறுப்புப் பண புகழ் பாலிவுட் நடிகர்கள்,  கவர்ச்சிப் பத்திரிகை புகழ் ஷோபா டே, ஆயிரம் ஆ.ராசாக்களுக்கு இணையானவர் என்று தொடர் மின் அஞ்சல்களினால் புகழடைந்துள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், எடியூரப்பா புகழ் பாரதிய ஜனதா, வசூல்ராஜாவில் இளைஞர்களை போட்டுத் தாக்கிய சீனா தானா புகழ் ராக்கி சாவந்த், மற்றும் மலேசிய ஊழல் புகழ் டத்தோ சாமிவேலுவின் ஒரே இலக்கிய நண்பர் ஜெயமோகன் என்று நாட்டில் வாழும் உத்தமர்கள் எல்லாம் அண்ணா ஹசாரேவை ஆதரிக்கிறார்கள்.

ஊருக்கு உழைத்த உத்தமராம் அண்ணன் ஆட்டோ சங்கரை மட்டும் இந்தக் கேடு கெட்ட அரசு தூக்கில் போடாமல் இருந்திருந்தால் அவரும் கூட ஆதரித்திருப்பார். இன்னொரு உத்தமரான ஹர்ஷத் மேத்தா நெஞ்சு வெடித்துச் செத்துப் போனதால் அவருக்கும் வாய்ப்புக் கிடைக்காமலேயே வைகுண்டம் போனது ஒரு சோகம் தான். ஆக்கிரமிப்புப் புகழ் அமெரிக்காவே ஆதரித்திருப்பதால் அவ்விடத்தின் விசேடத் தயாரிப்பான பின்லேடனும் கூட ஆதரித்திருப்பார். துரதிருஷ்டவசமாக அன்னாரும் அல்லாவின் சொர்க்கத்தை அடைந்து விட நேர்ந்து விட்டதால் பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பைத் தவற விட்டுள்ளார்.

உச்ச கட்டமாக, கடந்த சில நாட்களாக கற்பழிப்புகளின் தலைநகரம் என்று போற்றப்படும் தில்லி மாநகரத்தில் எந்த கற்பழிப்புச் சம்பவங்களோ கொலை சம்பவங்களோ இடம் பெறவில்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தில்லி நகரத்தில் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் துவங்கிய பின் குற்றச்சம்பவங்கள் 35% அளவிற்குக் குறைந்துள்ளதாக போலீசு உயரதிகாரிகளே தெரிவித்ததாக அச்செய்திக் குறிப்பில் காணப்படுகிறது. ஏதோ நல்லது நடந்தால் சரி தான். ஆனால், இந்த ‘நல்லது’ இன்னும் கொஞ்சம் நாட்கள் தொடர வேண்டுமானால் மேற்படி காரியங்களில் ஈடுபடும் யோக்கியர்களை ராம்லீலா மைதானத்திலேயே இருக்கச் செய்வது அவசியம். அதற்கு அண்ணா இன்னும் கொஞ்சம் நாட்கள் உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டும். அதற்கு காங்கிரஸ் மனது வைக்க வேண்டும்.

இவ்வாறாக நாடும் நாட்டிலுள்ள நல்லவர்களும் அண்ணாவின் பின்னே திரண்டிருப்பதாகவும் மான ரோசமுள்ளவர்கள் அனைவரும் இதில் தமது பங்களிப்பைச் செலுத்தியே வேண்டும் என்று ஊடகங்கள் கொலைவெறியோடு கூத்தடித்துக் கொண்டிருந்த சூழலில் தான் நமது வினவு தளத்தின் சென்னைப் பகுதி செய்தியாளர்களுக்கு அப்படி ஒரு யோசனை தோன்றியது. பதிவுலக புகழ் குருஜி போன்ற அறிவு ஜீவிகளே மெய்யுலகில் அண்ணாவின் போராட்டத்திற்கு ஆதரவு அலைமோதுவதாக சத்தியமடிக்காத குறையாக தெரிவித்திருந்ததால், நாம் சென்னையில் அண்ணா ஹசாரேவுக்காக நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தைச் சென்று பார்த்து வந்தால் என்னவென்று யோசிக்க, 20ம் தேதி என்று அதற்கு நாங்கள் நாள் குறித்தோம். தமிழகத்தில் அண்ணாவுக்காக ஊழலை எதிர்த்து சண்டமாருதம் செய்யும் அந்த கனவான்கள் யாரென்று அறிந்து கொள்வதில் ஒரு த்ரில் இருந்தது.

________________________________________________________________

சென்னை அடையாறு பகுதியில் இருக்கும் எல்.பி ரோட்டையும் அதில் அண்ணாவின் தமிழக ஆதரவாளர்கள் குழுமியிருக்கும் கட்டிடத்தையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. நாங்கள் காலை பத்துமணிக்கே சென்று விட்டோம்.  முகப்பிலேயே “குழந்தைக்குத் தேவை தாய்ப்பால். மக்களுக்குத் தேவை ஜன்லோக்பால்” என்கிற அரசியல் முழக்கத்தை ப்ளக்ஸ் பேனரில் பிரம்மாண்டமாகக் கட்டி வைத்து பீதியூட்டியிருந்தனர். சாலையோரங்களில் பளபளப்பான ப்ளக்ஸ் பேனரில் ஆத்திரம் பொங்க முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அண்ணா ஹசாரே ‘இந்தியனே எழுந்து வா’ என்று மிரட்டிக் கொண்டிருந்தார்.

கட்டிடத்தின் முன்பக்கம், சாலையோரமாக ஐ.டி துறையில் பணிபுரியும் சில அண்ணா ஆர்வலர்கள் நின்று கொண்டு தேசியக் கொடியை தேசபக்தியுடன் ஆட்டிக் கொண்டிருந்தனர். சேப்பாக்கத்தில் இந்தியா பாக்கிஸ்தான் மேட்சைப் பார்க்க வரும் ரசிகர்களைப் போல முகத்திலும் மற்றும் வெளியே உடல் தெரிந்த பாகத்திலெல்லாம் தேசியக் கொடியை வரைந்து வைத்திருந்தனர். வருவோர் போவோரிடமெல்லாம் “சார் சார் கரப்ஷனுக்கு எகென்ஸ்ட்டா ஒரே ஒரு சைன் பண்ணிட்டுப் போங்க சார்” என்று அழைத்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர் “கரப்ஷன்.. டவுன் டவுன்” என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

சரியாக நாங்கள் நுழைந்த நேரமாகப் பார்த்து சாலையில் ட்ரைசைக்கிளில் காய்கறிகளை வைத்துக் கொண்டு சென்ற ஒரு வியாபாரியையும் கையெழுத்திட அழைத்தனர். சரியாகப் புரியாமல் குழம்பியவர், “இன்னாது இது” என்று விசாரித்தார். ‘சார் ஊழலை ஒழிக்க ஒரு கையெழுத்து…..” என்று ஒரு பெண் ஆர்வலர் இழுக்க, “அடப் போம்மே… வோட்டுப் போட்டே ஒழியல; கையெழுத்துப் போட்டா ஒழியப்போவுது” என்று விட்டு சைக்கிளை ஏறி மிதிக்க ஆரம்பித்தார். “இல்லிட்டரேட் மோரோன்” என்று அந்தப் பெண் ஆர்வலர் பக்கத்தில் நின்ற வட இந்திய ஆர்வலரிடம் முனகிக் கொண்டே முகத்தைச் சுளித்துக் கொண்டார்.

நாங்கள் கட்டிடத்தின் உள்ளே நுழைந்தோம். ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் தன்னார்வ இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பேஷன் பெரேடுக்கு வந்ததைப் போல் உடையணிந்து கொண்டு லேப்டாப்பும் ஐ.போனும் சகிதம் பரபரப்பாக குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களின் கழுத்திலும் இடையிலும் ஐ.டித் துறை ஊழியர்கள் அணிவது போல் புகைப்படத்துடன் கூடிய ஐ.டி கார்டுகள் தொங்கியது. அதில் ஒருவரை மடக்கி நிகழ்ச்சியைப் பற்றி விசாரித்தோம். “சார் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவா ஆறு நாளா இங்க உண்ணாவிரதம் இருந்திட்டு இருக்காங்க சார். லோக்கல் மீடியா கவரேஜ் கிடைக்கல சார். ஒன்லி நேஷனல் மீடியாஸ்” என்று விசனப்பட்டுக் கொண்டார். ஏற்பாடுகளைப் பற்றி கேட்டோம். “இங்கெ பண்ணிருக்க அரேன்ஞ்மென்ட்ஸ் எல்லாம் டொனேஷன் வந்ததிலேர்ந்து தான் பண்ணிருக்கோம். நீங்க உள்ளே போங்க அப்புறமா பேசுவோமே” என்று நகர்ந்தார்.

உள்ளே ஒரு பெரிய ஹால். அதில் ஒரு பக்கம் மேடை போல அமைத்திருந்தனர். அதில் சிலர் அமர்ந்திருந்தனர். அதில் இரண்டு காவியுடைச் சாமியார்களைக் காண முடிந்தது. மூன்று இருபத்தோரு இன்ச் எல்.சி.டி டீவிக்கள் பொருத்தியிருந்தனர். அதில் டைம்ஸ் நௌ செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. பக்கத்திலேயே கடந்த ஆறு நாட்களாக சோறு தண்ணீர் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கென்று தனியே கழிப்பறை அமைத்திருந்தனர்.

சில அய்யராத்து மாமிகள் தங்கள் குழந்தைகளுக்கு நேரு ட்ரெஸ் போட்டு கையில் கொடியோடு அழைத்து வந்திருந்தனர். அந்தக் குழந்தைகளை வரிசையாக மேடையில் நிற்க வைத்து போட்டோ பிடித்துக் கொண்டனர். இது இரண்டாம் சுதந்திரப் போராட்டமல்லவா? நாளைப் பின்னே ‘நானும் கச்சேரிக்குப் போனேன்’ என்று பொளந்து கட்ட இது போன்ற ஆவணங்கள் அவசியமாயிற்றே? இதில் யார் குழந்தையை முன்னே நிறுத்தி முழுமையாக கவர் செய்து கொள்வது என்பதில் சுதந்திரப் போராளிகளின் தாய்மார்களுக்கும் லேசாக முட்டிக் கொண்டது. நாகரீக மனிதர்களல்லவா அதனால் உண்டான உள்ளக்கடுப்பை நாசூக்கான மொழியில் ‘ஷிட்’ என்று வெளியேற்றிக் கொண்டார்கள்.

நாம் மேடையை நெருங்கினோம். ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஒருவர் காலாற நடக்க எண்ணி எங்களைக் கடந்து சென்றார். ஐந்து நாள் சாப்பிடாமல் படு உற்சாகமாக காணப்பட்ட அவரை அணுகி பேச்சுக் கொடுத்தோம். “சார்… மொத்தல்லே ‘ஜன்லோக்பால்’ அப்படின்னா ஒரு சமஸ்கிருத வார்த்தை. ஏற்கனவே இருக்கற லோக்பால் வேஸ்டு சார். இப்போ.. நாம ஒத்தர் மேல கம்பளெயின்ட் கொடுக்கறோம்னு வைங்க. ஒருவேள அது ருஜுவாகல்லேன்னா நம்பளயே பிடிச்சு உள்ள போட்ருவான் சார். ஆனா பாருங்க இந்த ஜன் லோக்பால்ல அப்படியெல்லாம் சிட்டிசன்சுக்கு ப்ராப்ளம் இல்லை” என்று துவங்கியவரை நாம் இடைவெட்டினோம் –

“சரிங்க.. இப்ப பாத்தீங்கன்னா, ஸ்பெக்ட்ரம் ஊழலையே எடுத்துக்கங்களேன். டாடா அம்பானியெல்லாம் தான் இதனாலே பலன் அடைஞ்சிருக்காங்க. அவங்க கிட்ட இருந்து இந்த ஊழலாலே ஏற்பட்ட நட்டத்தை எப்படி வசூலிப்பதுன்னு ஜன்லோக்பால் ஒன்னும் சொல்லலியே. அதுமட்டுமில்லாம, ரிலையன்ஸே அண்ணா ஹசாரேவை ப்ரமோட் பன்ற டைம்ஸ் நௌவுக்கு விளம்பரமும் கொடுக்கறாங்க. இதைப் பத்தி என்ன சொல்றீங்க” என்றோம்.

“அதாவது சார்.. ஜன்லோக்பால் வந்தா நாட்டுக்கு நல்லது சார். அப்படி இல்லாட்டா அண்ணா ஹசாரே இவ்வளவு தூரம் போராட மாட்டாரே? வயசானவரு  பாஸ் அவரு… புரிஞ்சுக்கங்க. ரிலையன்ஸைப் பொருத்தளவில இது அவங்களுக்கு பிஸினஸ் பாஸ். பொலிடீஷியன்ஸ் தான் இந்த மாதிரி டீலிங்ஸை பத்திரமா பாத்துக்கனும்.. ஏன்னா அதுக்குத் தானே அவங்களை எலக்ட் பண்ணிருக்கோம்? அப்படிச் செய்யாத போது ஜன்லோக்பால் அவங்களை தண்டிக்கும் பாஸ்”

“அது சரிங்க, ஆனா நீங்க சொல்றாப்ல பார்த்தா, ஆ. ராஜா வாங்கின லஞ்சத்தை மட்டும் ரெக்கவர் பண்ணித் தர்றது தான் ஜன்லோக்பாலோட வேலை. கூடவே அவருக்கு ஒரு அஞ்சு வருசமோ பத்து வருசமோ உள்ள வைப்பாங்க. ஆனா, அந்த ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடில வர்ற  மத்த அமௌன்டெல்லாம் பிஸினஸ் தானா?”

“ம்ம்ம்… அது வந்து.. எனக்கு சரியா சொல்லத் தெரியலை.. ஆனா, ஜன்லோக்பால் வந்தா பிரச்சினை தீர்ந்துடும் அவ்ளோதான். சரி நான் கொஞ்சம் பிஸி. நீங்க எங்க வாலண்டியர்ஸ் யார்ட்டயாவது பேசிப்பாருங்களேன்” என்றவாறே எஸ்கேப்பாகப் பார்த்தவரைத் தடுத்து,

“சரி.. ஒரே ஒரு கேள்வி. ஜன் லோக்பால் அமைப்பால் ஊழல் பணத்தை இரண்டே வருசத்தில் ரெக்கவர் செய்ய முடியும்னு சொல்றீங்களே, சாதாரணமா இந்த மாதிரி பணமெல்லாம் ஸ்விஸ் வங்கில தானே போட்டு வைக்கிறாங்க? அந்த நாட்டு சட்டப்படி நீங்க கேட்ட போதெல்லாம் பணத்தைத் திரும்பத் தரமாட்டானே அதுக்கு ஜன்லோக்பால் என்ன வழி சொல்லுது?” என்று கேட்டோம்.

“ம்ம்ம்… அது சார்… அதெல்லாம் எனக்குத் தெரியாது சார். நீங்க ஆர்க்கனைசர் கிட்ட கேளுங்களேன்” என்று விட்டு விறுவிறுவென நடையைக் கட்டினார். அவர் சுத்தமாகக் களைப்பே இல்லாமல் படு உற்சாகமாகவும் தெம்பாகவும் இருந்தார். ஐந்து நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருந்தும் கூட இப்படி ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் ‘உண்ணா’விரதம் பற்றி வியந்து கொண்டே முதலில் சந்தித்த போராட்ட அமைப்பாளரைத் தேடிப் பிடித்தோம்.

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதாக அறிமுகப்படுத்திக் கொண்டவரிடமிருந்தும் மேலே உள்ள கேள்விகளுக்கு அதே விதமான பதில் தான் வந்தது. நாட்டில் நிலவும் ஊழலுக்கான காரணம் என்னவென்று கேட்டோம்,

” பாஸ்… இந்த நாட்டை ஆள்றது  யார் தெரியுமா?”  என்று விட்டு எங்களை உற்றுப் பார்த்தவர் எங்களிடம் இருந்து எந்த மறுமொழியும் வராதது கண்டு திருப்தியுற்றவராகத் தொடர்ந்தார் ” ரோமன் கத்தோலிக் கும்பல் தான் சார் இந்த நாட்டையே ஆள்றாங்க. முதல்ல இந்த சோனியா காந்திய நாட்டை விட்டுத் துரத்தினாலே ஊழல் ஒழிஞ்சுடும் சார்… க்ரிஸ்டியன் மிஷனரிஸோட சதி தான் சார் இப்ப நம்ம நாட்ல இத்தன ஊழல் நடக்கறக்கே காரணம்” என்று சொல்லி விட்டு ஏதோ பெரிய சதியைக் கண்டுபிடித்து விட்டவர் போல் பெருமையாகப் பார்த்தார்.

“அப்ப கர்நாடகாவில் எடியூரப்பா செய்த ஊழலுக்கும் ரோமன் கத்தோலிக் தான் காரணமா?” என்று சிரிக்காமல் முகத்தை வைத்துக் கொண்டே கேட்டோம்.

“ஆங்.. அது வேற பாஸ். நீங்க மொத்தமா பார்க்கனும் பாஸ்.. இப்ப பாருங்களேன், படிச்ச நாம இப்படி கஷ்டப்படறோம்.. படிக்காத மக்களுக்கு எதுவுமே புரியலை பாத்தீங்களா… இங்க வந்திருக்கதில ஒத்தனாவது லோக்கல் ஆளு இருக்கானா சார்? இப்படி இருந்தா எப்படி சார் நாடு முன்னேறும்?” என்று நமது கேள்விக்கு பதில் அளிக்காமல் அடுத்த பிரச்சினைக்குள் தாவினார்.

” அப்படியா… ஆனா, ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு அடிப்படையாக அமைந்த சட்டங்களைப் போட்டதே பாரதிய ஜனதா ஆட்சியில தானே அதுக்கும் ரோமன் கத்தோலிக் தான் காரணமா?” என்று மீண்டும் அதே இடத்துக்கு வந்தோம்.

“சார்.. நீங்க கேட்டதையே கேட்கறீங்க.. முதல்ல ஒன்னு புரிஞ்சுக்கங்க. ஜன்லோக்பால் வந்தா பிரச்சினை தீரும். இப்ப அதை எதிர்க்கறது யாரு? காங்கிரஸ் தானே? சோனியா தானே? அப்ப இது ரோமன் கத்தோலிக் சதி தானே? ரிசர்வேஷன் கொண்டாந்ததிலேர்ந்து எல்லா பிரச்சினைக்கும் காங்கிரஸ் தானே காரணம்? பாருங்க சார்.. ஆ.ராசா மாதிரி ஒத்தரை மினிஸ்டர் ஆக்கினா ஊழல் நடக்கத்தானே செய்யும்? அமைச்சர் ஆக்கினது யாரு? சோனியா தானே? அதான் சொல்றோம்… பர்ஸ்ட்டு பேர்ப்பர்லாம் படிங்க சார். தோ.. நாங்க பாம்லெட்ஸ் கூட போட்ருக்கோம் படிச்சி பாருங்க” என்று பொங்கித் தள்ளியவரின் அரசியல் புரிதல் எமது தலைகளை 360 டிகிரிக்கு சுழற்றியடிக்கவே கேள்வியை மாற்றினோம்.

“சரிங்க லோக்கல் ஆளுங்க யாருமே பெரிசா வரலியே.. அதிகமா நார்த் இண்டியன் ஐ.டி வொர்க்கர்ஸா தெரியறாங்களே?” என்றோம்..

“ஏன்.. நான் கூட தமிழ் தான் சார்.. மொழியெல்லாம் பார்க்காதீங்க சார். இப்படிப் பாத்துப் பாத்து தான் தமிழ்காரன்னாலே நார்த்ல கேவலமா பாக்கறான். லோக்கல் சேனல்லெ பெரியளவில கவரேஜ் பண்ண மாட்றான்.. இதே சன் டி.வில ஒரு கவரேஜ் கிடச்சிருந்தா ஒரு பத்தாயிரம் பேராவது வந்திருப்பான்.. பட் அன்பார்சுனேட்லி கிடைக்கலே.. ஆனா இங்க வந்திருக்கவங்கெல்லாம் குவாலிட்டி பீபிள்.. தீஸ் பீபிள் கேன் மேக் சேஞ்சஸ்.. யு நோ? படிக்காதவன் வந்தா ஓக்கே.. வரலேன்னா அவனுக்கும் சேத்தே நாம தானே பார்த்துக்கனும்?” என்றார்..

“ஏன் டி.வி கவரேஜ் வேணும்? நேரா மக்களைப் பாத்து போராட்டத்துக்கு வரச் சொல்லி கூப்பிடலாமே?” என்று கேட்டோம்.

“நாங்க எல்லாமே வொர்க் பன்றவங்க. ஒன்லி சாட்டர்டே அன்ட் சன்டே லீவ். மோர் ஓவர், மத்த நாள்ல வேற பர்செனல் கமிட்மென்ட்ஸ் இருக்கும். சோ.. இதையே ஒரு வேலையா வச்சில்லாம் பண்ண முடியாதுங்க. நேரம் கிடைக்கும் போது பண்றோம். தட்ஸ் ஆல்.. சோ.. மக்கள் தான் டி.விலயோ நியூஸ்லயோ பாத்துட்டு வரணும்.. போய் சொல்லலாம் நேரம் கிடையாது. ஓக்கே?” என்றவாறே நகரப் பார்த்தவரிடம் அடுத்து ஒரு கேள்வியைப் போட்டோம்.

“ஜன்லோக்பால் மசோதாவையும் அண்ணா ஹசாரேவையும் ஆதரிக்கும் தேசியவாத காங்கிரஸில் இருந்து டைம்ஸ் நௌ சேனல், பர்க்கா தத், உள்ளிட்டு பலரின் மேலும் கூட முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளதே? பாரதிய ஜனதாவே பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட கட்சியாயிற்றே? இங்கும் கூட பல பாரதிய ஜனதா கட்சியினரையும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரையும் காண முடிகிறதே?”

“அதாவதுங்க… ஒரு நல்ல விஷயம் நடக்குது. அதுக்கு யார் சப்போர்ட் பண்ணா என்னா சார்? நல்லவனோ கெட்டவனோ ஒரு பொதுக்காரியம்னு வரும் போது சப்போர்ட் பண்ணா அதை ஏத்துக்கிடறது தானே புத்திசாலித்தனம்?” என்றார்.  எமக்கோ, ‘கோழி குருடா இருந்தா  என்ன.. கொழம்பு ருசியா இருக்கா பாரு’  என்கிற கவுண்டமணியின் வசனம் காதுகளுக்குள் ரீங்கரித்தது.

“அப்படின்னா… ஆ.ராசாவும் சுரேஷ் கல்மாடியும் கூட ஜன்லோக்பாலை ஆதரிச்சா அந்த ஆதரவை ஏத்துக்கிடுவீங்களா?” என்றோம்

“…” பதில் எதையும் அளிக்காமல் எங்களைக் கடந்து சென்று விட்டார் அவர்.

__________________________________________________________

பார்ப்பனர்கள், வட இந்தியர்கள், பார்ப்பனராக துடிக்கும் சில மாநிறத் தோல் வசதியான தமிழர்கள் என்ற கூட்டத்தில் கருப்புத் தமிழன் ஒருவர் கூட இல்லை. மொத்த கூட்டத்தில் சுண்டி இழுக்கும் வெள்ளை நிறம் கொண்டோர் சுமார் 80 சதவீதம் இருக்கும். அவ்வகையில் இங்கு சராசரி தமிழர்கள் யாரும் கண்ணில் தென்படவில்லை. நாங்கள் பேசிய அனைவருமே சமச்சீர் கல்வியை கடுமையாக எதிர்த்தார்கள். இட ஒதுக்கீட்டை இகழ்ச்சியுடன் எதிர்க்கும் மனநிலை பலருக்கும் இருந்தது. இதைத்தாண்டி, ஈழம், மூவர் தூக்கு, விலைவாசி உயர்வு என எந்த பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் அறிந்திருக்கவில்லை அல்லது கவலைப்படவில்லை. மேலும் ஜன் லோக்பாலின் என்றால் என்ன, அதன் விசேசம் என்ன என்று அநேகமாக யாருக்கும் தெரியவில்லை.

முகத்தில் தேசியக்கொடி பெயிண்ட் அடிக்க ரூ.20, பதிவுக் கட்டணம் ரூ.20, ஸ்டிக்கர் ரூ.10 என்று உள்ளே நுழைபவர்கள் கட்டாயமாக மொய் எழுதவேண்டும். இதைத்தாண்டி நன்கொடை தனி. நன்கொடைகூட பத்து இருபது எல்லாம் பர்சில் பதுங்கிக் கொண்டு நூற்றில் தொடங்கி விழுந்தவாறே இருந்தது. டைம்ஸ் நௌ நேரடி ஒளிபரப்பிற்காக அவ்வப்போது ஒருவர் இயக்குநர் போல ஷாட்டை ரெடி செய்தார். காமரா முன்னர் அழகானவர்களை நிற்க வைத்து, காமரா பின்னால் இருவரை முழக்கமிட வைத்து, காமரா மேன் காமராவை ஷேக் செய்து எடுப்பது மூலம் ஏதோ பெரிய கூட்டம் இருப்பதாக செட்டப் செய்து காண்பித்தார்கள். ரோமன் கத்தோலிக்க சதி என்ற இரகசியம் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தொடங்கி அக்ரஹார மாமிகள் வரை பேசும் பொருளாக இருந்தது. வட இந்தியர்களோடு கொஞ்சம் ஆந்திர ஐ.டி கும்பலும் இருந்தது.

இதற்கிடையே “பாரத் மாதா கீ ஜே” “வந்தே மாதரம்” என்கிற கூச்சல்கள் காதைக் கிழித்துக் கொண்டு கிளம்பவே அது வந்த திசையை நோக்கிச் சென்றோம். அங்கே அண்ணாவின் ஆதரவாளர்கள் சிலர் நகரை பைக்கில் வலம் வந்து கொண்டிருப்பதன் ஒரு அங்கமாக இந்நிகழ்வு நடக்கும் இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். முன்னே சில பைக்குள் கடந்து சென்றதைத் தொடர்ந்து சில கார்களும் அந்த பவனியில் தொடர்ந்து வந்தன.

அதிலொன்றின் பின் சீட்டில் டீ ஷர்ட்டும் ஷார்ட்சும் அணிந்து அமர்ந்திருந்த ஒரு இளைஞர் வலது கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டியிருந்தார். அதில் ஒரு தேசியக் கொடியைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தார் – இடது கையில் பாதி குடித்திருந்த நிலையில் ஒரு கிங் பிஷர் பாட்டில்! பீரும் தேசியக் கொடியும் செம காம்பினேஷன்! பதிலவுலக குருஜியின் மெய்யுலக அறிவை எண்ணியும் ஒரு ஆச்சரியம் அப்போது வராமலில்லை.

காரின் உள்ளே ஏர். ஆர். ரகுமான் உச்சஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தார் – “வண்ட்டேஏஏஏ ஏமாத்தரம்ம்ம்ம்ம்…”

_____________________________________________________________

– வினவு செய்தியாளர்கள்
______________________________________________________