privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! ஒரு நெடிய போராட்டம்!!

4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! ஒரு நெடிய போராட்டம்!!

-

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி மெட்ரிக் பள்ளியில் 4 வயது யுகேஜி சிறுமிக்கு ஆசிரியைகள் செய்த பாலியல் வன்கொடுமை!

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய போராட்டத்தில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனியார்மய கல்வியின்  தரங்கெட்டத் தனத்தைப் பாருங்கள்!

கல்வித்துறை,  காவல் துறை அதிகாரிகள் பள்ளி முதலாளிக்கு ஆதரவாக!

இதை அம்பலப்படுத்த தயங்கிய ஜனநாயகத்தின் நான்காவது தூண்!

_____________________________________________

வாச்சாத்தி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு 19 ஆண்டு நெடிய போராட்டத்திற்குப் பிறகே ஓரளவு நீதி கிடைத்திருக்கிறது. எளியோரை அதிகாரம் கொண்டோர் குதறுவதும், அதை எதிர்க்க இயலாமல் மக்கள் சகித்துக் கொண்டு வாழ்வதுமான சூழ்நிலையில் இத்தகைய குற்றம் இழைத்தோரை அதிகாரவர்க்கம், காவல்துறை, அரசு எத்தனை மெனக்கெட்டு பாதுகாக்கிறது என்பதற்கு வாச்சாத்தி ஒரு எடுத்துக்காட்டு.

இங்கே ஒரு நான்கு வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடுத்த நீண்ட போராட்டத்திற்கு பிறகே அதை முறைப்படி விசாரிக்க நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது. இதே கொடுமை அரசு பள்ளிகளில் நடந்திருந்தால் அவர்கள் நாம் தட்டிக்கேட்க முடியும். ஆனால் தனியார் பள்ளிகள் என்றால் குற்றவாளிகளைப் பாதுகாக்க தனியார் முதலாளியும், அவரது பணபலத்தினால் ஊடகங்களும், காவல்துறையும் உதவி செய்ய ஓடிவருகிறார்கள். பொறுப்பேற்றுக் கொள்ளுதல் என்பது தனியார் கல்வி முதலாளிகளிடம் இருக்க முடியாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.

ஒரு சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நீதி பெற வேண்டுமென்றால் இத்தனை இடர்ப்பாடுகளை நமது அரசமைப்பு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அநீதிகளை உடனுக்குடன் தட்டிக் கேட்பதற்கு பெற்றோரும், மக்களும் தயாராகும் போதும், இதன் ஊற்று மூலமான தனியார் கல்வி மயத்தை தட்டிக்கேட்கும் போதுமே இத்தகைய கொடுமைகளை நாம் எதிர்காலத்தில் நிறுத்தமுடியும்.

– வினவு

____________________________________________

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில்  யுகேஜி படிக்கும் 4 வயது சிறுமியிடம் பிரின்சிபால் லசி போஸ்கோ மற்றும் ஆசிரியர் போஸ்யா பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு மற்ற இரு வகுப்பு ஆசிரியர்கள் உதவி செய்துள்ளனர். வெளியில் சொன்னால் பாம்பு உள்ள இருட்டறையில் (Dark Snake Room) அடைத்து விடுவோம் என மிரட்டி வைத்துள்ளனர். அதனால் குழந்தை சொல்ல அஞ்சி ஒரு நாள் பயந்து பயந்து தாயிடம் சொல்லியது. அதிர்ச்சியுற்ற பெற்றோர் குழந்தையிடம் ஆசிரியைகள் என்னென்ன பாலியல் வன்கொடுமை செய்தனர் என்பதை வாக்கு மூலமாக சிடியில் பதிவு செய்து காவல் நிலையத்தில் கொடுத்தனர்.

அது முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்பட்டன….

 

   

பிரின்சிபல் போஸ்கோ - ஆசிரியை போசியா
பிரின்சிபல் போஸ்கோ - ஆசிரியை போசியா

ந்த செய்தி எந்த பத்திரிக்கையிலும் அன்று வரவில்லை. ஏ.கே.டி பள்ளியில் சுமார் 20,000 மாணவர்கள் படிக்கிறார்கள். சிபிஎஸ்சி, ஸ்டேட் போர்டு, மெட்ரிக் ஆகிய பள்ளிகள் ஒரே வளாகத்தில் உள்ளது. கூடவே பொறியியல் கல்லுரி,  பி.எட், டி.டிஎட்  மற்றும் அனைத்து கல்விக்கான உதிரி பாகங்களும் ஒரே இடத்தில் உள்ளடக்கிய பெரிய நிறுவனம். ஏ.கே.டி  பள்ளியின் முதலாளி மகேந்திரனுக்கு மாவட்டம் கடந்து பல பேருந்துகள் ஓடுகிறது. லாட்ஜ், நஞ்சை, புஞ்சை நிலங்கள் என மிக பெரும் அதிபதி.

சிறுமி தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை சொல்ல சொல்ல தந்தை வீடியோவில் பதிவு செய்தாலும் உறவினர்களால் பொறுக்க முடியாமல் பெண்கள் பலர் அன்று இரவே ஆசிரியைகள் வீட்டுக்கும் சென்று செருப்பால் நாலு சாத்து சாத்தினர்.மப்டி போலீசு வந்தது, “இப்ப என்ன செய்யனும்னு நினைக்கிறீங்க? ” என்று தடுத்தனர். “அவளுங்கள இங்கேயே கொளுத்தனும்”, என்று பெண்கள் சொன்னார்கள். “போலீசுகிட்டேயே இப்படி பேசுரீங்களா” என்று காவலர்கள் கதைத்து சென்று விட்டனர்.

விடிந்ததும் கள்ளகுறிச்சி முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சிறுமி வீட்டு வாசலில் பள்ளி முதலாளி மகேந்திரனுடன் காத்திருந்தனர்.வழக்கறிஞர்கள் சிலர், “இந்த வழக்கு கோர்ட்டுக்கு போனால் நிற்காது, ஒரு ஆண் பெண்ணை ரேப் பண்ணினால்தான் தண்டனை. பெண் ஆசிரியைகள் அதுவும் குழந்தையிடம் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது எடுபடாது.நீதிமன்றத்தில் கண்டபடி குறுக்கு விசாரணை செய்வார்கள். அதனால் நாலு சாத்து சாத்திவிட்டு இதோடு விட்ட விடுங்க”,என பலர் பல விதமாக ஆலோசனை சொன்னார்கள்.

பள்ளி முதலாளி மகேந்திரனும், “நான்கு டீச்சரையும் நான் ஏற்பாடு செய்றேன். இங்க அடிக்கீறிங்களா? எங்க வீட்ல வச்சிக்கலாமா?” என்றார். பெற்றோர்கள், “வேண்டாம் எங்க வீட்லேயே வச்சிக்கலாம்” என்று சொன்ன பிறகுதான் ஊர் பெரிய மனிதர்கள் கலைந்து சென்றனர். மேலும் இதை பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு கொள்ளலாம் என்ற பெரிய மனிதர்களிடம் மறுத்த பெற்றோர்கள் அவர்களை அனுப்பிவிட்டு தாமதிக்காமல் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். செல் பேசியை அனைத்து விட்டனர்.

ஆனாலும் பெரிய மனிதர்கள் நேரிலே வந்து நான்கு டீச்சரும் ரெடியா இருக்காங்க வாங்க என்ற விடுத்த அழைப்பை உதாசினப்படுத்தி போலீசில் புகார் கொடுத்தனர். ஆய்வாளர் விவேகானந்தன் ’’நீங்க புகாரை தாமதமாக கொடுக்கீறிங்க குற்றவாளிகள் தலைமறைவாகிட்டாங்க” என்றார்.

இச்சூழலில் மனித உரிமை பாதுகாப்பு மையம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தலையிட்டு பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரையும், ஏ.கே.டி  பள்ளியின் மற்ற பெற்றோர்களையும் நேரில் சந்தித்து காவல் துறை, பள்ளி நிர்வாகம், குற்றவாளிகள் குறித்து விசாரித்தோம். அச்சத்தால் சில எதிர்ப்பு குரல்கள் அடங்கியிருந்தன. இன்று பக்கம் பக்கமாக எழுதும் பத்திரிக்கைகள் அன்று மௌனம் சாதித்தன. இவர்கள் விசாரித்தால் வழக்கு உருப்படாது என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுகினோம். பெற்றோர்களின் பொது மக்களின் அச்சத்தை போக்க ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தோம்.

சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை மூடிமறைப்பதற்கு பலரிடம் ரூபாய் கட்டுகள் அளிக்கப்பட்டன. பத்திரிக்கையாளர்களும் கவனிக்கப்பட்டனர். ஆனாலும் விஷயம் பெற்றோர்கள் மத்தியில் புகைந்து சாலை மறியலாக கொழுந்து விட்டு எரிந்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நான்கு முனை சந்திப்பில் போக்கு வரத்து நிலை குலைந்தது. ஏ.கே.டி  பள்ளி பெற்றோர்கள் ஆவேசத்துடன் போலிஸிடம் வாதிட்டனர். இறுதியில் குற்றவாளி ஆசிரியர்களை கைது செய்கிறோம் என்ற உத்தரவாதத்திற்கு பிறகு கலைந்து சென்றனர். 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.

வேறு வழியில்லா சூழலில் ஏ.கே.டி பள்ளி முதலாளியிடம் உத்தரவு பெற்று கள்ளக்குறிச்சி காவல் துறை, பிரின்ஸ்பால் லேசி போஸ்கோவை மட்டும் கைது செய்தது. பிறகு பள்ளி முதலாளி நிலைமையை சீர் படுத்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் டி.ஆர்.ஓ  தலைமையில் நடந்தது. இதில் கல்வி துறை, காவல்துறை அதிகாரிகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பயப்படாமல் பள்ளிக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்யப்பட்டது. போலிஸ் பாதுகாப்பு அளிக்கும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

பள்ளி நிர்வாகம் தரப்பில் ”இது போன்ற சம்பவம் பள்ளியில் நடந்ததாக உறுதியாகவில்லை. கள்ளகுறிச்சி கல்வி வளர்ச்சியால் முன்னேற ஏ.கே.டி கல்வி நிறுவனம் பாடுபட்டு வருகிறது. இந்த நற்பெயரை கெடுக்க வெளியில் இருந்து வேலை பார்க்கிறார்கள்” என்று சொல்லப்பட்டது. ஏனைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை.

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கு விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், குற்றவாளி ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்காக கள்ளக்குறிச்சியில் 17.8.2011 ஆர்ப்பாட்டம் நடத்த போலிசிடம் அனுமதி கோரியது. ஆனால் ஆய்வாளர் விவேகானந்தன், “அதையெல்லாம் வழக்கை உங்கள் இஷ்டத்துக்கு சிபிசிஐடிக்கு மாற்ற முடியாது ஆர்ப்பாட்டதுக்கு அனுமதியெல்லாம் கிடையாது” என்று மறுத்ததுடன் மனித உரிமைப் பாதுகாப்பு மைய உறுப்பினர் சங்கராபுரம் ராமலிங்கம் அவர்கள் ஆர்ப்பாட்ட அனுமதி கேட்டு கொடுத்த மனுவில் கையெழுத்து போட சொன்னார்.

“அனுமதி மறுப்பை எழுத்து பூர்வமாக கொடுங்கள்”, என கேட்டு வாங்கினார் இராமலிங்கம். மீண்டும் வேறு தேதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி DSP, SP யிடம் பதிவு தபாலில் மனு கொடுத்தோம். கிடைத்த 10 நிமிடத்தில் அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தது காவல் துறை. “அனுமதி மறுக்கும் கடிதத்தில் ஏற்கனவே 14.8.2011 ஆர்ப்பாட்டதிற்கு அனுமதி கோரிய மனுவை பரிசிலித்து அன்று மறுக்கப்பட்டது. மேற்படி வழக்கில் ஒருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆய்வாளர் விவேகானந்தன் பள்ளி முதலாளிக்குச் சேவை ஆற்றினார்.
4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ! ஒரு நெடிய போராட்டம் !!
போலிசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். கள்ளக்குறிச்சி நகரத்திலும் ஏ.கே.டி பள்ளியில் படிக்கும் பல்வேறு கிராமங்களிலும்,

தமிழக அரசே!

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி யு.கே.ஜி.மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்!

வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐடிக்கு மாற்று!

 பெற்றோர்களே! மாணவர்களே! அனைவருக்கும் இலவச கல்வி உரிமையை அமுல்படுத்த போராடுவோம்!

என சுவரொட்டி ஒட்டினோம்.

பள்ளி முதலாளி மகேந்திரன் ஆள்வைத்து போஸ்டரை கிழித்தார். தலைமையாசிரியர் 20 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து பிறகு பிணையில் வெளியில் வந்தார். போடப்பட்ட வழக்கு பிரிவுகள்

     342 – சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்

                            323 – சிறுகாயம் ஏற்படுதல்,     506 (i) – குற்றமுறு மிரட்டல்

                            377 – இயற்கைக்கு மாறான பாலியல் நடவடிக்கை

இதற்கிடையில் மற்றொரு ஆசிரியர் போசியாவும் முன் ஜாமின் பெற்று விட்டார். உயர்நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 இந்த வழக்கு பொருந்தாது என்பதால் முன்ஜாமின் வழங்கியது.

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி போலீசுக்கு எதிராக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தால் போடப்பட்ட வழக்கு விசாரணை 19.8.2011 நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு வந்தது. பள்ளி நிர்வாகத்தினை இந்த வழக்கில் இணைக்க வேண்டும் எனறு நீதிபதி நிபந்தனை விதித்தார். நாம் அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 19(1) படி கருத்துரிமையை நடைமுறைபடுத்த போடப்பட்ட வழக்கில் பள்ளி நிர்வாகத்தை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினோம். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கை சி.பி.சி.ஐடிக்கு மாற்ற கோரியும், தனியார் பள்ளி மாணவர்களின் நலன், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பவைகள் பொதுநல வழக்கின் சாரமாக இருப்பதால் வழக்கு தலைமை நீதிபதி அமர்விற்கு மாற்றப்பட்டு 26.9.2011 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அன்றே அவசரமாக போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  30-8-2011-ம் தேதிக்கு பிறகு ஏதாவது ஒரு விடுமுறை தினத்தில் மனுதாரர் ராமலிங்கத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தருகிறோம் என்று கூறினர்.

முதல் தகவல் அறிக்கையை பாதி மட்டுமே படித்து விட்டு தலைமை நீதிபதி ’’என்னால் முழுமையாக படிக்கமுடியவில்லை’’ என்று ஆதங்கப்பட்டார். காவல் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் குற்றவாளிகளின் பெயர்கள் கூட குறிப்பிடப்படவில்லையென்றும், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள  நபர்களைக் கைது செய்யாமல் இருப்பதுமான போலீஸின் செயல் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார். எனவே இத்தகைய காட்டுமிராண்டி தனத்தில் ஈடுபட்ட அனைவரையும் 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதோடு அது சம்பந்தப்பட்ட அறிக்கையை உள்துறை செயலாளரும், டி.ஜி.பியும் எங்கள் முன்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பியும் கள்ளக்குறிச்சி ஆய்வாளரும் அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.

மறுநாள் 27.9.2011 அன்று வழக்கு விசாரணையின் போது எஸ்.பியும், கள்ளக்குறிச்சி ஆய்வாளரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியை செப்டம்பர் 8-ம் தேதி முன் ஜாமின் பெற்றுவிட்டார். பள்ளி முதல்வர் ஆகஸ்ட்டு 30-ம் தேதி ஜாமின் பெற்றுவிட்டார். எனவே அவர்களை கைது செய்ய முடியாது என்று போலீசு தரப்பில் கூறப்பட்டது. நாம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தான மருத்துவ பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தோம்.

அவ்வறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும்  ஆய்வாளர் விவேகானந்தன் அப்போலோ டாக்டரை மிரட்டி விவரங்களை கேட்டுள்ளார். அப்போலோ டாக்டர் சியமளாதேவி பெற்றோர்களுடைய அனுமதியில்லாமல் குழந்தையைப்பற்றி மருத்துவ விவரங்களை அளிக்க முடியாது என்று மறுத்துள்ளார். நீங்கள் கோர்ட்டுக்கு வரவேண்டும் என்று மிரட்டியதையும் மருத்துவ அறிக்கையிலேயே பதிவு செய்திருந்தார் மருத்துவர். அதை சுட்டிக்காட்டி வழக்கு விசாரணையை சி.பி.சிஐடிக்கு மாற்றி டி.எஸ்.பி பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி மூலம் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரினோம்.

தலைமை நீதியரசர் ஆய்வாளரை பார்த்து இது ஒரு சீரியஸ்சான குற்றசாட்டு என்பதை பதிவு செய்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எந்த விதமான மனுவும் போடாமல்  ஏ.கே.டி பள்ளி மிகவும் புகழ் வாய்ந்தது. 20,000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்று பேச முற்பட்டார். நாமும் அந்த மாணவர்களது பாதுகாப்பு குறித்துதான் கவலை அளிக்கிறது என்று சொன்னோம்.

தீர்ப்பை ஒத்தி வைத்து வழக்கு விசாரணை முடிந்த நிலையில் அரசுக்கு எதிராக நீதிபதிகள் அழுத்தமான உத்தரவு ஏதேனும் பிறப்பித்து விடுவார்களோ என்ற நிலையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர்  தலைமை நீதிபதியிடம் முறையிட்டு நாங்கள் டி.எஸ்.பியை  வைத்து விசாரிக்கிறோம் என்றார். அதற்கு நீதிபதிகள் சி.பி.சிஐடிக்கு மாற்றினால் என்ன என்று கேட்டனர். தமிழக அரசு ஒத்துக்கொண்ட நிலையில் வழக்கு சி.பி.சிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நாம் கோரியபடி வழக்கை நீதிமன்றத்தில் நிலுவையில் வைத்து விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைத்ததுடன், சி.பி.சிஐடி விசாரணையின் இறுதி அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆய்வாளர் விவேகானந்தன் அப்போலோ மருத்துவரிடம் நடந்து கொண்ட சம்பவத்திற்கு எங்கள் வேதனையையும் அதிருப்தியையும் பதிவு செய்கிறோம் என்றும், யார் தனது செல்வாக்கை பயன்படுத்த முயன்றாலும் அந்த நிர்பந்தத்திற்கு செவிசாய்க்காமல்   இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்குப் பிறகு 28.9.2011 அன்று ஐஜி, சைலேந்திர பாபு மற்றும் டிஐஜி, எஸ்பி, டி.எஸ்.பி சகிதம் பாதிக்கப்பட்ட பெற்றோரை சந்தித்து விசாரித்தனர். பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு. “இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென்றும், ஆய்வாளர்  விவேகானந்தன் மாணவி இறந்ததாக  பரவிய வதந்தி பற்றி தகவலை அறிந்து கொள்ளவே அப்பல்லோ டாக்டரை பார்த்தார்” எனவும் தலைமை நீதிபதி வேதனைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்.

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு பெற்றோர்களை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் சந்தித்தோம்.’’எங்கள் குழந்தை இந்த ஆண்டு அவர் அம்மாவிடம் வீட்டிலேயே படிக்கிறது. நாங்களும் பள்ளி நிர்வாகத்திடம் விலை போய்விட்டோம் என பலர் சந்தேகப்பட்டனர். உங்களுடைய முயற்சியால் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. இப்படி ஒரு மாற்றம் வரும் என்று நம்பவில்லை” என்று உருக்கமாக பேசினார் குழந்தையின் தந்தை.

போஸ்யா மிஸ் எனக்கு எப்படி ஊசி போட்டார்கள் என்பதை சிறுமி செய்து காட்டும் போதும் இரவில் துாங்கும் போது அம்மாவிடம் மிஸ் என்னை காரில் அழைத்து சென்றார்கள்,வீடியோ எடுத்தார்கள், விளையாட்டு பொம்மை கொடுத்தார்கள் என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் போது பெற்றோர்கள் படும் வேதனை என்பது குற்றவாளிகள் தண்டனை அடையும் போது மட்டுமே தீரும். பல பெற்றோர்கள் இதற்காகதான் வெளியல் சொல்லாமல் மனம் புழுங்கி சகித்து கொண்டு போகிறார்கள்.

சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா, தனியார் பள்ளி முதலாளிகள்? எதிர்த்து பேசும் ரவுடியை பூட்ஸ் காலால் மிதிக்கும் போலீசு போல பெற்றோர்கள் சங்கமாக திரண்டு பாலியல் தவறு செய்யும் ஆசிரியரையும் பாதுகாக்கும் பள்ளி முதலாளியையும் உடனுக்குடன் தண்டிக்க வேண்டும். அப்போது மட்டும்தான் இந்தக்குற்றவாளிகளை பாதுகாக்கும் பள்ளி முதலாளி, காவல்துறை அதிகாரிகள், ஒத்துப்போகும் பத்திரிகைகள் அனைவரையும் மீறி நாம் நீதி பெறமுடியும்.

இன்று நீதிமன்றம் இப்படி ஒரு உத்திரவு பிறப்பித்தற்கே இத்தனை நெடிய போராட்டத்தை மக்கள் அரங்கிலும், சட்ட அரங்கிலும் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு வேளை இதை செய்யத்தவறியிருந்தால் அந்த சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையும், அதைக் கண்டும் வேதனையோடு நாட்களை கடத்தும் பெற்றோரும் வாழ்நாள் முழுதும் துன்புற்றிருப்பார்கள்.

________________________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: