privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்வால்வோ தொழிலாளர்களின் போராட்டம்: தொழிலாளர் வர்க்கம் கற்கவேண்டியது என்ன?

வால்வோ தொழிலாளர்களின் போராட்டம்: தொழிலாளர் வர்க்கம் கற்கவேண்டியது என்ன?

-

ஆகஸ்டு 2-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற வால்வோ தொழிலாளர்களின் போராட்டம் ஏன் என்பது குறித்து சி.ஜ.டி.யு தலைமையில் செயல்படும் வால்வோ பஸ்ஸஸ் தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தின் உள்ளடக்கம்:

பொதுமக்களின் வரிப்பணம் யாருடைய வளர்ச்சிக்கு….? பன்னாட்டுக் கம்பெனிகளின் உண்மை நிலை என்ன? “வால்வோ”- தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை நாம் ஏன் ஆதரிக்கவேண்டும்?

அன்பார்ந்த பொதுமக்களே!

இன்று எங்குப் பார்த்தாலும் கண்ணுக்கு கவர்ச்சிகரமான, சொகுசான வால்வோ பேருந்துகள் நகரெங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இவை நகரின் தோற்றத்தையே மாற்றியிருக்கின்றன. ‘நகர்ப்புற மேம்பாட்டு வளர்ச்சி திட்டம்’ என்ற பெயரில் நமது மத்திய-மாநில அரசுகள் பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம்(BMTC) மற்றும் கர்நாடக மாநில சாலைப்போக்குவரத்துக் கழகம் (KSRTC) ஆகிய இரு அரசுத்துறைப் போக்குவரத்துக் கழகங்களுடன் இணைந்து இந்த வால்வோப் பேருந்துகளை மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு வாங்குகின்றன.

இந்தப் பேருந்துகள் கண்ணைக் கவரும் வண்ணம், வடிவமைப்பு, இருக்கை வசதிகள் மற்றும் குளிர்சாதன வசதி என அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் வலம் வந்த போதிலும் இவற்றை உற்பத்தி செய்திடும் தொழிலாளர்களின் நிலைமையோ வெள்ளைக்காரன் ஆட்சிக்காலத்தில் நாம் அடிமைகளாய் அனுபவித்தக் கொடுமைகளை நினைவுப்படுத்துகின்றன.

இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் மொத்தமாக பணத்தை செலுத்தி வாங்குகின்றன. ஒரு நகரப் பேருந்தின் விலை ரூ 80 லட்சமும், தொலைதூரப் பயணப் பேருந்தின் விலை ரூ85 லட்சத்திலிருந்து ரூ1 கோடிக்கும் மேல் நிர்ணயிக்கப்படுகிறது ஆயினும் இத்தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலமையோ மிகவும் மோசமாக உள்ளது.

இந்த நவீன யுகத்தில் அநேக தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் உழைக்கும் எந்திரங்களாக, எந்திரத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு வருகிறார்கள். இதற்கு வால்வோ-வும் விதிவிலக்கல்ல.

இங்கு தொழிலாளர்கள் வியர்வை சிந்தி அழகான சொகுசுப் பேருந்துகளை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள் ஆனால், அதற்கு வால்வோ நிறுவனம் கொடுக்கும் பரிசோ இடைக்கால மற்றும் நிரந்திர வேலைநீக்கம்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகரத்துக்கு அருகாமையில் உள்ள ஒசக்கோட்டா வட்டத்தில் கவர்ச்சிகரமான சொகுசுப் பேருந்துகளை தயாரிக்கும் சுவீடன் நாட்டைச்சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான வால்வோ பஸ்ஸஸ் பிரைவேட் லிட் என்ற கனரக வாகன உற்பத்தி தொழிற்சாலை இயங்கிவருகிறது.

இந்த ஆலையில் தொழிலாளர்கள் தங்களை சங்கமாக திரட்டிக்கொண்டு போராடியப் போராட்டத்தின் விளைவாக நிரந்தரமாக்கப்பட்ட 400- நிரந்தரத்தொழிலாளர்கள், 450 -ஒப்பந்தத்தொழிலாளர்கள், 150-பயிற்ச்சியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 01-4-2010 முதல் நடைமுறைக்கு வரும்விதத்தில் 3- ஆண்டிற்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொழிற்சங்கத்துடன் செய்துக்கொண்டது இவ்வாலை நிர்வாகம். ஆனால் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிர்வாகம் கொஞ்சமும் மதிக்காமல் மீறியே வருகிறது. அங்கிகாரம் பெற்ற தொழிற்சங்கம் இருந்தும் நிர்வாகம் தொழிலாளர்களை நாள்தோறும் துன்புறுத்தி வருகிறது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனநாயக முறைப்படி பேச்சுவார்த்தை நடத்துவது கிடையாது. நிர்வாகம் தொழிலாளர்கள் மீது செலுத்துகின்ற சட்டவிரோத அடக்குமுறைகளில் சிலவற்றை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கிறோம்.

1.             3 வருடத்திற்கும் மேலாக பயிற்சி மற்றும் தகுதிக்கான் பருவம் முடிந்த போதிலும் கூட தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்படுவதில்லை.

2.             கடந்த 1 ஆண்டுகளாக தலைவர், பொதுச்செயலாளர்  மற்றும் ஒரு சங்க உறுப்பினர், ஒரு தொழிலாளர் என மொத்தம் 4- தொழிலாளர்களை பொய்க் காரணம் காட்டி தற்காலிக வேலைநீக்கம் செய்துள்ளனர்.

3.             1-1/2 –ஆண்டுகளாக இரண்டு சிப்டுகளில் வேலைசெய்து உற்பத்தியை பல மடங்கு உயர்த்தியும் கூட அந்த தொழிலாளர்களுக்கு பேருந்துப் போக்குவரத்து வசதியை நிர்வாகம் செய்து தரவில்லை.

4.             செயல்பட்டுக்கொண்டிருக்கும் சங்கத்தை முடமாக்கும் முயற்சியில், கருங்காலிகளை உருவாக்க தொழிலாளர்களிடம் நிர்வாக அதிகாரிகள் மூலம் ஆசைக்காட்டி தூதுவிடுகிறது ஆலை நிர்வாகம்.

5.             நிர்வாகம் தொழிலாளர்களின் மேல் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர்களை இரவிலும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மன உளச்சலை ஏற்படுத்திவருகிறது.

6.             காமராவினால் தொழிற்சாலையில் உள்ள எல்லாப் பகுதிகளையும் கண்காணிக்கும் ஆலை நிர்வாகம் தொழிலாளர்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் காண்பிக்க மறுக்கிறது.

மேற்கண்ட நிர்வாகத்தின் அடாவடிப் போக்குகளை எல்லாம் நிறுத்திவிட வலியுறுத்தி, தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து பல போராட்டங்களை கடந்த 1-1/2 ஆண்டுகளாக நடத்தியும் அதற்கான தீர்வு காணாத நிர்வாகம் தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரித்து முத்திரைக்குத்தி, இழிவுப்படுத்தி அவர்களை அமைதியாய் பணிசெய்யவிடாமல் மன உளச்சலுக்குள்ளாக்கி வருகிறது ஆலை நிர்வாகம்.

இந்தப் பரிதாபமான சூழலில் இந்த ஆலைக்கு நிலம் கொடுத்தவர்கள் நிலையோ மேலும் பரிதாபமானது. தயை கூர்ந்து கீழே படியுங்கள் !

மத்திய அரசாலும், Jn Nurm project என்ற பெயரில் மாநில அரசாலும் அரசு மற்றும் கழகத்தால் பெருமளவில் வாங்கப்படுவதால், வரி செலுத்துவோர் மற்றும் பொதுமக்களின் வரிப்பணம் மூலம் அரசு இவர்களுக்கு பெரும் சந்தையை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

ஆயினும் தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பொறுத்த வரையில் நிர்வாகத்தின் கருத்தை ஒத்த தனது அறிவார்ந்த வாதத்தை அரசு முன்வைக்கிறது. மேலும், தொழிலாளர் சட்டங்கள் மீறப்படுவது பற்றி எந்த நடவடிக்கையும் அது எடுக்கவில்லை. பொதுமக்கள் இதைப் புரிந்து கொள்கின்றனர். முன்னால் போக்குவரத்து மற்றும் உள்துறை அமைச்சர்களின் ஸ்வீடன் பயணத்திற்கு வால்வோ நிர்வாகமே பணம் வழங்கியது.

எனவே, பன்னாட்டு நிறுவனங்களின் சித்திரவதைக்கு எதிராகவும், அரசின் அலட்சியப்போக்குக்கு எதிராகவும் திரண்டெழுவோம் என்ற அடிப்படையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொழிற்சங்கம் இந்த பிரச்சனையை தீர்த்திட அரசு தலையிட வேண்டுகிறது. நாங்கள் மக்களை இதில் தலையிட்டு தொழிலாளர்கள் நல்ல வேலைச்சூழலில் பணியாற்ற ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.

வரி செலுத்துவோரின் பணம் நியாயமாய் பயண்படுத்தப்பட வேண்டும். தொழிலாளிகளின் மேல் சுரண்டலும் ஒடுக்குமுறையும் நிறுத்தப்பட வேண்டும்.

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!

_________________________________________________________________

இந்த விவாகாரத்தில் உயர்நீதி மன்ற தீர்ப்பிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பு

நீதிபதி சைலேந்திரகுமார், பகுதிவாழ் மக்களுக்கும் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குவது பற்றிய தகவல்களை நில எடுப்பு தாவா இந்த அமர்வின் முன் விசாரணைக்கு வந்த போது கேட்டுள்ளார். 12 நபர்கள் முறையான பணியிலும், 7-நபர்கள் ஒப்பந்த பணியிலும் அமர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பகுதி வாழ் மக்களுக்கு பணியாற்றுவதற்கான திறன்கள் இல்லாமையால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது. வெளியிலிருந்து வந்த நபர்கள் குளிர்சாதன அறையில் பணியாற்றிட, நிலம் கொடுத்தவர்களுக்கு துப்புரவுத் தொழிலாளி பணி வழங்கப்பட்டது பற்றி நீதிபதி சைலேந்திரகுமார், நாம் மீண்டும் ஆங்கிலேய ஆட்சிக்கு திரும்புகிறோமா? என அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் மலிவான சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைப்பதால் மேலை நாடுகள் இலாபநோக்குடன் இந்தியாவில் பணத்தை முதலீடு செய்வதாகவும், இதற்கு நேரடி அன்னிய முதலீடு என முத்திரை குத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவிக்கிறார்.

பணக்கார இந்தியர்கள் வெளி நாடுகளில் முதலீடு செய்ய தகுதியுடையவர்களாய் இருந்தும் அதற்கான வாய்ப்பு அங்கு அளிக்கப்படுவதில்லை. ஆனால் இந்தியாவில் முதலீடு செய்யவும், தொழிலாளர்களை சித்திரவதை செய்யவும் நாம் மேலைநாட்டினரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.

_________________________________________________________________

தங்களுடைய சங்க நிர்வாகிகள் நான்கு பேரை மீண்டும் பணிக்கமர்த்துவது என்ற கோரிக்கைககாக இந்தப் போராட்டம் துவங்கப்பட்டது. ஆலைவாயிலில் தர்ணா, உண்ணாவிரதம்,ஹொசகோட்டா நகரில்ஆர்ப்பாட்டம், சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் பொதுமக்களிடம் பிரச்சாரம் என்ற அளவில் இந்தப் போராட்டம 2-1/2 மாதங்கள் நடத்தப்பட்டது. இதன் இறுதியில் 4-பேரை வேலையில் மீண்டும் சேர்க்க நிர்வாகம் அடாவடித்தனமாக மறுத்துவிட்டது. குறிப்பாக இந்த 2-1/2 மாதங்களில் நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தியை போட்டுள்ளது. இதனால் நிர்வாகத்தின் உற்பத்தி இலக்கு சிறிய அளவில்கூட பாதிக்கவில்லை என்பதை வெளித்தோற்றத்திற்கு தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் என்று பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் என்பது, ஒரு போராட்டத்திற்குரிய குறைந்தப்பட்ச வரையறையைக் கூட நிறைவேற்றவில்லை. நிர்வாகம் தொழிலாளர்கள் கோரிக்கைக்கு பணிந்து வராமல் போனதற்கு இது மிக முக்கியமான காரணமாக உள்ளது.

இந்த நிலையில் சங்கத்தலைமை, வேலைநீக்கம் செய்யப்பட்ட சங்க நிர்வாகிகளை வேலைக்கமர்த்தும் கோரிக்கையை கைவிட்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் வாங்கிக் கொண்டது. நீதிமன்றத்தில் வழக்காடி நீதிமன்றத்தின் மூலம் மீண்டும் வேலைக்கமர்த்துவதுதான் தீர்வு என்றால், 2-1/2 மாத வேலை நிறுத்தமே வீண் வேலை என்ற கருத்து விதைக்கப்பட்டுள்ளது.இதனால்  பன்னாட்டுக் கம்பெனி நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்கள் மீது அவநம்பிக்கை தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் நடைபெறும் காலங்களில், இந்தப் போராட்டத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு தோழர்கள் போராட்டத்தை வளர்த்தெடுக்கவேண்டிய அவசியத்தை உணர்த்திப் பேசினர். குறிப்பாக, மாருதி தொழிலாளர் போராட்ட அனுபவங்களையும், ஓசூர்-கமாஸ் வெக்ட்ரா போராட்ட அனுபவங்களையும் விளக்கினர். ஒரு ஆலையில் மட்டுமோ அல்லது அந்த ஆலையின் கிளைத் தொழிலாளர்களைச் சேர்த்துக் கொண்டோ மட்டும் போராடினால் போதாது ; அந்த வட்டாரம் முழுவதுமான தொழிலாளர் வர்க்கத்தை ஓரணியில் திரட்டி உறுதியுடன் போராடினால் மட்டுமே இன்றைய உலகமயச் சூழலில் முதலாளித்துவ அடக்குமுறைகளை முறியடிக்கமுடியும் என்பது விளக்கப்பட்டது. இது மாருதி தொழிலாளர்கள் வெற்றிபெற்றதற்கு அடிப்படையாக இருந்ததையும் எடுத்துச் சொல்லி உணர்த்தப்பட்டது.

அந்தவகையில் ஆலையை நிர்பந்திக்கும் வண்ணம் தேசிய நெடுஞ்சாலை மறியல், அருகில் உள்ள கிராம மக்களை இணைத்துக் கொண்டு போராட்டம், பெங்களூர் நகரில் உள்ள பிற தொழிற்சாலைகளில் உள்ள தோழிலாளர்களை ஒன்றிணைத்து போராட்டம். என்று போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும். அதன் மூலம் தங்களது உரிமைகளை வென்றிடவேண்டும் என்று அவர்களுக்கு உணர்த்தப்பட்டது. குறைந்தப்பட்சம் சி.ஜ.டி.யு தனது தலைமையில் செயல்படும் பெங்களூர் நகர ஆலைத் தொழிலாளர்கள் எல்லோரையும் இணைத்தாவது போராடவேண்டும் என பேசப்பட்டது.

ஆனால், இவ்வாலைக்கு தலைமை தாங்கும் சி.ஜ.டி.யு தலைமையோ, தொழிலாளர்கள் மூலம் முன்வைக்கப்பட்ட இந்தப் போராட்ட வடிவத்தை நிராகரித்தது. காந்தியின் வழியில்தான் போராடுவோம் என்று கூறியது. புதிய போராட்ட முறைகளை முன்வைக்கும் தொழிலாளர்களிடம், யாரோ சொல்வதைக் கேட்டு சங்கத்தை உடைத்துவிடாதீர்கள் என்று பீதியூட்டியது. இரண்டு மாத காலமாகியும் கோரிக்கை வெற்றியடையவில்லையே என்ற தொழிலாளர்களின் நியாயமான கோபம் அடுத்தக் கட்ட உயர்ந்த வடிவத்திற்குப் போராட்டத்தை வளர்த்தெடுக்க கோருவதையும், தயங்கினால் தங்கள் கைமீறிப் போய்விடும் என்றஞ்சியே சி.ஜ.டி.யு தலைமை வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுவிட்டது. நீதிமன்றத்தின் மூலம் என்று பேசி தனது துரோகத்தை நிலைநாட்டியுள்ளது.

பெங்களூர் நகரில் பன்னாட்டுக் கம்பெனிகள் குவிந்திருப்பதும் அவற்றில் உள்ள தொழிலாளர்கள் தங்களையும் மீறி உரிமைகளுக்காக போராடுவதும் தொடர்ந்து நடந்துவருகின்ற ஒரு பிரச்சனையாக உள்ளது. இவற்றில் ஒரு சில மட்டுமே மீடியாக்களில் வெளிவருகின்றன. பலவும் மூடி மறைக்கவும் அமுக்கவும் படுகின்றன.

இதற்கு முன்பு 2006 ஜனவரியில் சங்க நிர்வாகிகள் மூன்று பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி டொயாட்டோ கிர்லாஸ்கர் தொழிலாளர்கள் 1550-க்கும் மேற்பட்டவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பல சுற்று தொழிலாளர் அதிகாரிகள் முன்பு பேச்சுவார்த்தை நடத்தி ஏற்காத சூழலில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, டொயோட்டோ நிர்வாகம் ஆலைமூடல் அறிவித்தது. இந்நிலையில் மாநில அரசு தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என்று அறிவித்து தடைசெய்வதாக தெரிவித்தது.

இதனை எதிர்த்து சி.ஜ.டி.யு தலைமை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. கர்நாடக உயர்நீதி மன்றமோ தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையின் ஒளியில் அவசர சேவைகள் சட்டம் (essencial services act) கொண்டுவந்துள்ளது என்று கூறி அவசரப் பொருட்கள் சட்டத்தின்கீழ் வேலைநிறுத்தப் போராட்டம் தடை செய்யப்பட்டதை ஆதரித்து தீர்ப்பு வழங்கியது. இதன் பின்னர் சி.ஜ.டி.யு தலைமையோ போராட்டத்தை கைவிட்டது. நீதிமன்றத்தின் மூலம் மூவரை பணியில் அமர்த்துவது என்று கூறி தொழிலாளர்களின் வர்க்க உணர்வை காயடிக்கும் பணியில் இறங்கியது.

பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டுவருகிறது. அதில் பெங்களூர் போன்ற பெரு நகரங்கள் அவற்றின் முதன்மை இலக்காக உள்ளன. நாளும் பெருகிவரும் பன்னாட்டுக் கம்பெனிகள் தொழிலாளர் உரிமைகள், சட்டங்கள் எவற்றையும் மதிப்பதில்லை. மிகக் கொடியமுறையில் அவர்களை துன்புறுத்தி வருகின்றன.

நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள இயலாமல், தொடர்ந்து தனிப்பட்ட முறையில் எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள் வெற்றி பெறமுடியாமலும், தொடர்ந்து அடக்குமுறைகளை சகித்துக் கொள்ள இயலாமலும் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். இது பெங்களூரில் அண்மைக்காலத்தில் அதிகரித்து வந்துள்ளது. மற்றொருபுறம் சங்கமாகத் திரண்டு நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுபவர்கள் சி.ஜ.டி.யு போன்ற துரோகத் தலைமைகளாலும் சட்டவாதம் பேசுகின்ற தலைமைகளாலும் வழிநடத்தப்படுகின்றனர்.

வர்க்க ஒற்றுமையுடன் பல மொழி பேசுகின்ற தொழிலாளர்கள், தங்களது ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து உறுதியுடன் நின்றாலும் மேற்கண்ட போக்கினால் பெற்றி பெற இயலவில்லை. குறிப்பாக பெங்களூருவில் பன்னாட்டுக் கம்பெனிகளில் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்கள் தோடர்ந்து தோல்வியை சந்திப்பது என்பது தொழிலாளர்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைப்பதுடன் எதிர்காலத்தில், இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடாமல் ஒதுங்கும் மனப்போக்கை விதைக்கும். இந்த நிலைமையிலிருந்து  தொழிலாளர்கள் தங்களை ஒரு மாற்று சங்கமாக, புரட்சிகர தொழிற்சங்கத்தில் தங்களைத் திரட்டிக்கொண்டு போராடவேண்டியது அவசர அவசியப் பணியாக தொழிலாளர்கள் முன்நிற்கிறது.

______________________________________________________

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்