privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!

மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!

-

“நினைவின் குட்டை, கனவு நதி” என்ற சுந்தர ராமசாமி, ஜெயமோகன், காலச்சுவடுகளது அற்பவாத இலக்கியத்தை விமரிசிக்கும் புதிய கலாச்சாரம் வெளியீடாக வந்த நூலின் ஆரம்பத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது. அதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மார்க்சிய லெனினிய இயக்கத்தைச் சேர்ந்த தோழர் கேரளா வழியாக தமிழ்நாட்டின் முதுபெரும் முற்போக்கு எழுத்தாளராக சுந்தர ராமசாமியை வந்தடைந்து அவர் மூலமாக தமிழகத்தில் கலை இலக்கிய பண்பாட்டு முயற்சியில் கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்தார்கள், இல்லையில்லை என்ன செய்யவில்லை  என்பதை விபரீதமாக கண்டறிகிறார். பின்னர் தற்செயலாக ம.க.இ.க தோழர்களை சந்தித்து உண்மையை சுய விமரிசனத்துடன் அறிகிறார்.

இப்படி தமிழகத்தை பற்றி பிற மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகைகள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள் அறிய வேண்டுமென்றால் அது எப்படி நடக்குமென்று நினைக்கிறீர்கள்? இந்தியா டுடே, டைம்ஸ் நௌ, சிஎன்என் – ஐபிஎன் போன்ற தேசிய ஊடகங்களெல்லாம் தமிழகத்தின் பிரதிநிதிகளாக துக்ளக் சோ, சுப்ரமணிய சுவாமி, சிவசங்கரி, வாஸந்தி, மணிரத்தினம், சுகாசினி போன்ற பார்ப்பனக் குலக் கொழுந்துகளை நியமித்திருக்கின்றார்கள். இவர்களின் மூலமாகத்தான் நமது பிரச்சினைகள் பலவும் இந்திய ‘மக்களை’ சென்றடைய வேண்டுமென்றால் நமக்கு யாரும் ஆதரவு தரத் தேவையில்லை என்று வங்களா விரிகுடாவில் ஒட்டு மொத்தமாக குதித்து தற்கொலையே செய்து கொள்ளலாம்.

இதற்கு அடுத்தபடியாக கொஞ்சம் இடதுசாரிகள், அறிவாளிகள் என்றால் ஹிந்து ராம், சி.பி.எம் பார்ப்பனர்கள், ரவிக்குமார் போன்ற கருப்பு பார்ப்பனர்களை தொடர்பு கொள்வார்கள். இவர்கள் தத்தமது அரசியல் பிழைப்புவாதங்களுக்காக முழு தமிழகத்தை நாடி பிடித்தது போல காட்டிக் கொள்வார்கள். முற்போக்கு என்ற பெயரில் நாசுக்காக ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். சாரு நிவேதிதா போன்றோரெல்லாம் பேஜ் 3 பாணி கேளிக்கையின் ஊடாக காமடி கலகக்காரர்களாக முன்னிறுத்தப்படுகிறார்கள். பத்திரிகையாளர் ஞாநி இந்த அமைப்பினை ஏற்றுக் கொண்டு வழுவாமல் செயல்படும் அறிஞர் என்பதால் கொஞ்ச நஞ்சம் வாய்ப்பளிப்பார்கள். அவரும் நடுத்தர வர்க்கத்தின் மனம் நோகாமல் வேகாமல் சில பல ‘முற்போக்கு’ கருத்துக்களை உதிர்ப்பார்.

ஆக இந்திய அளவில் ஊடகங்களை வைத்து தமிழகத்தை அறிய நினைப்போருக்கெல்லாம் உண்மையில் தமிழகத்தின் பிரச்சினை என்னவென்றே தெரியாது. அந்த வகையில் பெரும்பான்மை தமிழக மக்களின் நலன், கருத்துக்கள் எதுவும் இந்திய ஊடகங்களில் வரவே வராது. இதனால் மற்ற மாநில ஏன் ஒட்டு மொத்த இந்திய  மக்களின் பிரச்சினைகளெல்லாம் இந்த ஊடகங்களில் சரியாக வருவதாக பொருளில்லை. அது தனிக்கதை.

இப்படித்தான் காஷ்மீர், நர்மதா அணை, மாவோயிஸ்டுகள் போராட்டம் முதலான பிரச்சினைகளில் இந்திய அரசையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும், இந்துத்வா வெறியர்களையும் பகிரங்கமாகக் கண்டித்து போராடும் அருந்ததி ராய் தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளை அறிந்து கொள்ள ரவிக்குமார், காலச்சுவடு போன்றோர் மூலம் மட்டும் போதும் என்று நம்பியிருப்பார் போலும். இது அருந்ததி ராயின் பிரச்சினை என்பதை விட இந்த அமைப்பு முறை இப்படித்தான் தகவல் வலைப்பின்னலை உருவாக்கியிருக்கிறது என்றும் சொல்லலாம்.

மேலும் காலச்சுவடு போன்ற கம்யூனிச எதிர்ப்பு இலக்கியவாத நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்திய நலனுக்காக மக்களை காவு கொடுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கைகளில்தான்  இத்தகைய அறிவுத்துறை வலைப்பின்னல் இருக்கிறது. இதில் அருந்ததி ராய் மட்டுமல்ல, சில மாக்சிய லெனினிய குழுக்களும் கூட பலியாகியிருக்கிறார்கள். அதைத்தான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டோம்.

அருந்ததி ராய் - மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!
அருந்ததி ராய்

அந்த வகையில் காலச்சுவடு நடத்திய நூலறிமுகக் கூட்டத்திற்கு அருந்ததி ராய் வந்து கலந்து கொண்டார். இலக்கியத்தை படித்து உண்டு களித்திருப்போர் பாவனையில் உள்ள சுமார் 150 நபர்கள் அதில் கலந்து கொண்டார்கள். அதில் அருந்ததி ராய் மொத்தம் பேசியது அதிக பட்சம் இருபது நிமிடம் கூட இல்லை. இப்படி ஒரு பிராண்டு வேல்யூக்காக மட்டும் தன்னைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது அருந்ததி ராய்க்கு தெரிந்திருக்கவில்லை.

காலச்சுவடு வெளியிட்ட நூலில் அருந்ததி ராயின் உடைந்த குடியரசு என்ற நூல் இருக்கிறது. அதை வைத்து அந்த பதிப்பகம் முற்போக்கானதென்று அவர் அப்பாவி போல நினைத்திருந்தால் அது பரிதாபத்திற்குரியது. உண்மையில் அவர் அரசியலுக்கு பொருத்தமாக ஆயிரக்கணக்கான தோழர்களும், மக்களும் இருக்கையில் அவர்களது மேடையில் ஏறாமல் ஒரு ரோட்டரி கிளப் கனவான்களது கூட்டத்தில் சிக்கிக் கொண்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

இனி, அருந்ததி ராய் இந்தக் காலச்சுவடு கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று மே 17 இயக்க நண்பர்கள் இணையத்தில் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். அதில் காலச்சுவடு என்ற இசுலாமிய எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு, தமிழின எதிர்ப்பு கூட்டத்தில் ராய் கலந்து கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தனர். பாபர் மசூதியை இடித்தது நியாயம் என்று பேசுபவர்களுக்கும் கண்டிப்பாக இடமளிக்க வேண்டுமென்றும், குஜராத் இனக் கலவரத்தின் போது இந்து மதவெறி என்று கூடக் கூறாமல் கனிமொழியை வைத்து காசு வசூலித்து கூட்டம் நடத்திய கனவான்களது ஆழ்மனதை மட்டுமல்ல மேல் மனதை நோண்டினாலே இவர்களது முற்போக்கு அரசியலுக்கு எதிரான அரசியலை அறிந்து கொள்ள முடியும். காஞ்சி கிரிமினல் ஜெயேந்திரன் அம்பலப்பட்ட போதும் இழுத்து மூட வேண்டிய காஞ்சி மடத்தை சீர்திருத்தி காப்பாற்ற எண்ணிய பூணூலிஸ்டுகள்தான் இந்த காலச்சுவடு அம்பிகள். அப்போது கருப்பு பார்ப்பனர் ரவிக்குமாரும் அவர்களுடன் இருந்தார்.

இது போக காலச்சுவடின் கம்யூனிச எதிர்ப்பு, தமிழன எதிர்ப்பும் உலகறிந்த உண்மைகளே. இத்தகைய கூட்டத்தில் ராய் கலந்து கொள்ளக்கூடாது என்று மே 17 கோரியதில் என்ன தவறு? அடுத்து ராய் கலந்து கொண்ட காலச்சுவடு கூட்டத்தில் மே 17 இயக்க நண்பர்கள் மேற்கொண்ட கோரிக்கையை பேனரில் பிடித்தவாறு முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள். இதை காலச்சுவடு கண்ணன் ஏற்கனவே போலிசில் சொல்லியிருப்பார் போலும், அதன்படி போலீசார் அவர்களை உடன் அப்புறப்படுத்தினர்.

அருந்ததி ராயின் கவனத்திற்கு இந்தக் கோரிக்கைகளை நியாயமான முறையில்கொண்டு சென்றதைத் தாண்டி இந்த எதிர்ப்புக்கு வேறு என்ன நோக்கமிருக்க முடியும்?

ஆனால் இந்த எதிர்ப்பை காலச்சுவடு அறிவாளிகள் அருந்ததிராயிடம் வேறு மாதிரி திசை திருப்பியிருக்கிறார்கள். அதன்படி அருந்ததிராய் இதை எப்படிப் பார்க்கிறார்?

காலச்சுவடு வெளியிட்ட நூல்களில் இலங்கையில் ஐ.நா செய்தித் தொடர்பாளராக இருந்த கோர்டன் வெய்ஸ் என்பவர் எழுதிய தி கேஜ் என்ற நூலும் உண்டு. இதில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை குறிப்பிட்டிருப்பதோடு விடுதலைப்புலிகளின் மீதான விமரிசனங்களும் கராறாக வருகிறதாம். இதற்காகத்தான் மே 17 இயக்கம் ராயை கலந்து கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக அருந்ததி கருதுகிறார். அல்லது கருத வைக்கப்பட்டிருக்கிறார்.

புலிகளை ஆதரிக்கும் மே 17 இயக்கம் அதற்காகத்தான் இந்த எதிர்ப்பை தெரிவித்தது என்றாலும் கூடவே காலச்சுவடு நிறுவனத்தின் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு, தலித் எதிர்ப்பு, காஷ்மீர் எதிர்ப்பு, இசுலாமிய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு போன்றவற்றை பட்டியலிட்டு பயன்படுத்திக் கொண்டதாக ராய் கருதுகிறார். மற்றபடி காலச்சுவடு அப்படிப்பட்ட நிறுவனம் அல்ல என்பதற்கு சேரனின் கவிதைகள், தலித்தும் தண்ணீரும் என்ற நூல், பஷ்ரத் பீர் எழுதிய காஷ்மீர் நினைவுகள் என்ற நூல், ராய் எழுதிய உடைந்த குடியரசு போன்ற நூல்களெல்லாம் இல்லையா என்று ராய் கேட்கிறார்.

இவையெல்லாம் காலச்சுவடு வெளியிட்டதற்கு காரணம் விற்பனை நோக்கம் தவிர வேறு இல்லை. இந்த நூல்களெல்லாம் படிக்க வேண்டிய நூல்கள்தான், அதை வினவிலும் கூட வெளியிட்டிருக்கிறோம். ஆனால் ஒரு பதிப்பகம் அதன் முழுமையான அரசியல் பார்வை, நடத்தையில்தானே என்ன அரசியல் சார்பு கொண்டிருக்கிறது என்று பார்க்கப்படவேண்டும் ராய் அவர்களே? நாளைக்கே பாபர் மசூதி இடிப்பின் இனிய நினைவுகள் என்று அரவிந்தன் நீலகண்டன் எழுதி, குஜாரத்தில் இசுலாமியர்களை கொன்றொழித்த இனிய நினைவுகள் என்று ஜடாயு எழுதி அவற்றினை காலச்சுவடு வெளியிடாது என்று யாராவது உறுதி மொழி அளிக்க முடியுமா?

காலச்சுவடு-கண்ணன் - மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!
காலச்சுவடு-கண்ணன்

மே 17 புலிகளை மிகத்தீவிரமாக ஆதரிக்கும் ஒரு இயக்கம்தான். அதைத் தாண்டி மற்ற பிரச்சினைகளிலும் அவர்கள் கருத்தே கொண்டிருக்க கூடாது என்று எப்படி கூறமுடியும்? எனில் மே 17  தலித்துக்களுக்கு ஆதரவாக, தமிழின உரிமைகளுக்கு ஆதரவாக, இசுலாமியர்களுக்கு ஆதரவாக, காஷ்மீருக்கு ஆதரவாக பேசியிருந்தாலும் அவர்களை புலி ஆதரவு என்று மட்டும் பார்க்கும் நீங்கள் பல கோணத்தில் தோற்றமளிக்கும் காலச்சுவடையும் அப்படி சாரத்தில் இந்துத்தவா ஆதரவு என்று ஏன் பார்க்கவில்லை?

ஐ.நா சபை அறிவாளி இலங்கை அரசையும், புலிகளையும் விமரிசனம் செய்வது இருக்கட்டும். முதலில் அவர் தனது சர்வதேச நிறுவனம் அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்து ஈராக்கிலும், ஆப்கானிலும் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்தது குறித்து சுயவிமரிசனம் செய்து கொண்டாரா? அந்த விமரிசனம் முள்ளி வாய்க்கால் படுகொலையின் போது வெறுமனே வேடிக்கை பார்த்ததற்கும் பொருந்துமே? இன்று வரை இலங்கை அரசை போர்க்குற்றவாளிகள் என்று ஏன் தண்டிக்க முடியவில்லை? அந்த வகையில் இந்த குற்றத்தில் அவர்களே சொல்வது போல இலங்கை அரசு, புலிகள் தவிர ஐ.நா, இந்தியா, அமெரிக்காவும் உள்ளன என்றும் சொல்லலாமே?

மேலும் இதில் எதிலும் புலிகள் தீர்மானிக்கும் இடத்தில் இல்லையே? இந்த போரை நிறுத்த வேண்டியிருந்தால் அது இலங்கை அரசு, இந்தியா, ஐ.நா மூலமாகத்தானே நடந்திருக்க வேண்டும்? அது நடக்கவில்லை எனும் போது இந்த போரை நடத்தியது இலங்கை அரசா இல்லை புலிகளா?

நாங்களும் விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்ப்பவர்கள்தான். அவர்களது பாசிச நடவடிக்கைகளையும், இந்திய அரசின் தயவில் விடுதலையை பெறலாம், அமெரிக்காவை லாபியிங் செய்து ஈழத்தின் நலனை பெற்று விடலாம் என்று சந்தர்ப்பவாதமாய் செயல்பட்ட போதும் பலமுறை அம்பலப்படுத்தியிருக்கிறோம். ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணம் என்று இலங்கை அரசையும், புலிகளையும் சமப்படுத்தி பார்ப்பது தவறு என்பதையும் பல முறை விளக்கியிருக்கிறோம். ஏனெனில் இது இந்தியாவின் ஆசியோடு இலங்கை அரசு மட்டும் தொடுத்த போர். அதில் புலிகள் தவறு செய்தார்கள் என்று இரண்டையும் சமப்படுத்தி பார்ப்பது பாரிய பிழை.

அடுத்து புலிகள் எல்லா இடங்களிலும் பயங்கரவாத இயக்கமென்று தடை செய்யப்பட்ட பிறகு இந்தப் போரில் அவர்களை ஏன் குற்றம் சொல்கிறீர்கள? ஒரு வேளை உங்கள் வாதப்படியே புலிகள் அவர்களது தவறுகளுக்காக முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகு இலங்கை அரசு மட்டும் எந்த தண்டனையும் இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்? இதிலிருந்தே புலிகளையும், இலங்கை அரசையும் சமமாக பார்ப்பது தவறு என்பதை உணரலாமே?

இறுதியாக ராய் கூறுவது என்னவென்றால் விமரிசனங்களை கொல்வது, விவாதங்களை மறுப்பது, கருத்துரிமையை தடை செய்வது, எல்லாம் மொத்தத்தில் அரசியலையே அழிப்பது என்பதாகும். இதுதான் புலிகளின் தோல்விக்கு காரணம் என்கிறார் ராய். சரி இதை ஒத்துக் கொள்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் இதே விசயங்களை இன்று இலங்கை அரசு அட்சரம் மாறாமல் இராணுவ பலத்தோடு செய்து வருகிறதே அதற்கு என்ன காரணம் ராய் அவர்களே?

ஒருவேளை இலங்கை சிங்கள இனவெறி அரசை இப்படி அடக்குமுறை அரசாக மாற்றியது புலிகளின் வன்முறைதான் என்று கூட காலச்சுவடு அறிவாளிகள் ராயிடம் எடுத்துக் கூறலாம். எனில் இந்த சூட்சுமத்தை நாம் சும்மா கிடந்த அமெரிக்கவை ஆக்கிரமிப்பு செய்யுமாறு தூண்டியது ஈராக் மற்றும் ஆப்கான் மக்களது தவறுதான் என்று கூடக் கூறலாமே? இதையே காஷ்மீருக்கு பொருத்தினால் இந்தியா இராணுவத்தின் பாவச்செயல்களையும் மன்னிக்கலாமே? மன்னிப்பாரா அருந்ததி ராய்?

ஞாநி - மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!
ஞாநி

மே 17 நண்பர்கள் முழுமையாக எல்லாப் பிரச்சினைகளையும் அறிந்தவர்கள் அல்லர். முள்ளி வாய்க்கால் அழிவுப் போருக்கு இந்தியாதான் பிரதானமான காரணம் என்பதைக் கூட அவர்கள் முழுமையான அரசியல் பொருளில் புரிந்து கொண்டிருக்கவில்லை. சில வேளை இந்திய அரசு மெச்சும் விதமாக சீனா, பாக்கிஸ்தான்தான் இலங்கை அரசின் அழிவுப்போருக்கு காரணமென்று கூட சொல்லியிருக்கிறார்கள். புலிகளின் தவறுகளையும் அவர்கள் சுய விமரிசனமாக பார்த்திருக்கவில்லை. இது போக ஜெயலலிதாவை ஈழத்தாயாக மற்ற தமிழார்வலர்களைப் போல இவர்களும் பாராட்டியிருக்கிறார்கள். இருப்பினும் இந்த தவறுகள் காலச்சுவடை சரி என்று ஆக்கிவிடாது. அதே போல காலச்சுவடு கூட்டத்தை அருந்ததி ராய் புறக்கணிக்க வேண்டுமென்று மே 17 இயக்கம் கூறியதையும் தவறு என்று சொல்ல முடியாது.

மேலும் தமிழகத்தை பொறுத்த வரை புலி ஆதரவு என்பது இந்திய அரசுக்கெதிரான, பிரிவினை வாத, பயங்கரவாத கோரிக்கையாகத்தான் சித்தரிக்கப்படுகிறது. புலி என்று மட்டுமல்ல ஈழ ஆதரவு என்றாலே இப்படித்தான் திரிக்கப்படுகிறது. அதற்காகத்தான் கடந்த இருபது வருடங்களாக பலரும் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். புலி ஆதரவை வைத்து தமிழகத்தில் உள்ள இன ஆர்வலர்களை இல்லாமல் ஆக்குவது என்ற செயல் பல ஆண்டுகளாக இங்கு அமலில் இருப்பதை ராய் அறிந்திருக்க வில்லை. அத்தகைய அரச பயங்கரவாத கொடுமையின் ஒரு துளியைக் கூட அருந்தியிருக்காத காலச்சுவடுதான் மாபெரும் கருத்துரிமை இயக்கமென்று அருந்ததி ராய் கருதியிருப்பது விமர்சனத்திற்க்குரியது.

அடுத்து ஈழப்பிரச்சினை தொடர்பாக காலச்சுவடுக்கென்று ஒரு அரசியல் நிலைப்பாடு என்பது அதன் வணிக நலன்களோடு தொடர்புடைய ஒன்று. புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் தனது சந்தையை கொண்டிருக்கும் காலச்சுவடு அதற்காக மட்டுமே ஈழம் குறித்து பேசுகிறது. அதுவும் இந்திய ஆட்சியாளர்கள் மனம் கோணமல் பேச வேண்டும் என்பதைத் தாண்டி வெறு எதுவுமில்லை. இலக்கியவாதத்தில் ஆர்வம் கொண்ட ஈழத்தமிழர்கள் பலர் அரசியலற்ற முறையில் ஈழத்தை பேசுவார்கள் அல்லது பேசாமல் இருப்பார்கள். காலச்சுவடின் தகுதியும் அதுவே.

இதில் சில இணைய அறிவாளிகள் அருந்ததி ராய் ஈழத்தை குறித்து பேசவில்லை என்று குறை கூறுகிறார்கள். ஆனால் சென்ற ஆண்டு இலண்டன் கூட்டம் ஒன்றில் அருந்ததி ராய் இதைப் பற்றி பேசியிருக்கிறார். ஈழ ஆர்வலர் கூட்டம் ஒன்றிலும் பேசியிருக்கிறார். ஆனால் அருந்ததி ராயின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற ஈழத்தமிழ் தலைகள் மொத்தம் நான்கைந்து இருந்தால் அதிகம் என்று லண்டன் இனியொரு நண்பர்கள் கூறினார்கள். இப்படி தன்னைத்தவிர வேறு எதனையும் பார்க்கமாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஈழ தமிழ் மக்களின் தரம் இப்படி இருக்கையில் அருந்ததி ராயை குற்றம் கூறி என்ன பயன்?

அடுத்து ஈழம் குறித்து ராய் அதிகம் பேசவில்லை என்றால் அது குறித்து நாம் அவரிடம் தொடர்பு கொண்டு பேச வேண்டுமென்று கோருவதுதான் சரியாக இருக்குமே அன்றி அவர் பேசும் மற்ற முக்கிய பிரச்சினைகளை ஒன்றுமில்லை என ரத்து செய்வது அகங்காரம் கலந்த அறிவீனம்.

_________________________________

மலையாள-மனோரமா -மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!
மூடப்பட்டுள்ள மலையாள மனோரமா அரங்கு

அடுத்து மே 17 நண்பர்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் மலையாள மனோரமா பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக போராடியது குறித்து சில கருத்துரிமை காவலர்கள் தெரிவித்திருக்கும் பித்தலாட்டத்தை பார்ப்போம்.

நிலநடுக்கம் வந்தால் முல்லைப் பெரியாறு அணை இடிந்து விடும் என்றொரு புரளியை 1970ஆம் ஆண்டுகளில் கிளப்பி விட்ட மலையாள மனோரமா பத்திரிகை இன்றும் மலையாள இனவெறியை பற்ற வைப்பதோடு, முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் வண்ணம் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருவதால் அவர்களை சென்னை புத்தகக் கண்காட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்று மே 17 இயக்கம் ஜனநாயக முறையில் போராடியிருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது?

மலையாள மனோரமா என்பது கேரளத்தின் தினமலர். தினமலர் தமிழ் பத்திரிகை என்பதாலேயே அதை இங்கு அரசியல் ஆர்வலர்கள் யாரும் மதிக்க வில்லை என்பதோடு  புறக்கணிக்க வேண்டுமென்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள் ( இத்தகைய விஷக்கிருமி தினமலர்தான், அருந்ததி ராய் போற்றும் காலச்சுவடு நிறுவனத்தின் நிரந்தரப் புலவர்). இது மலையாள மனோரமாவுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றுதான். இரு மாநில மக்களிடையே பகைமையை உருவாக்கி மோதவிடும் வேலையை கேரள ஒட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும், மலையாள வணிக பத்திரிகையுலகும்தான் செய்து வருகின்றன. இவர்களை குறிவைத்து எதிர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இதில் கருத்துரிமைக்கு என்ன பங்கம் இருக்க முடியும்?

அந்த எதிர்ப்பில் மே 17 நண்பர்கள் பிடித்திருந்த பதாகையும், முழக்கங்களும் இதைத்தாண்டி வேறு எதனையும் சொல்லவில்லை. ஆனாலும் இதை ஏதோ காட்டுமிராண்டி நடவடிக்கை போல ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைகள் சித்தரித்திருக்கின்றன. கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரி இதை ரகளை, கலாட்டா என்று எழுதி விட்டு இவர்களை கைது செய்து அப்புறப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு விட்டு பின்னர் எதிர்ப்பு வந்ததும் இந்த வார்த்தைகளை மட்டும் அடித்து விட்டு கருத்தில் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார்.

கேரள சி.பி.எம்மை கண்டிக்க துப்பில்லாத தமிழக சி.பி.எம்மின் பாரதி புத்தகலாயமும் இந்த எதிர்ப்பை கண்டித்திருக்கிறது. மலையாள தோழர்கள் அவதூறு செய்யும் உரிமையை ஆதரிக்கும் தமிழகத் தோழர்கள் மலையாள மனோரமா பத்திரிகை அவதூறு செய்யும் உரிமையையும் ஆதரிப்பதில் வியப்பில்லை. காலச்சுவடு பதிப்பகம் மற்ற மாநிலங்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்கிறதென்றும், நாளைக்கே அதை தமிழ்ப் பதிப்பகமென்று தடை செய்தால் என்ன செய்வதென்று காலச்சுவடு கண்ணனும் தனது வணிக நலன்சார்ந்து மே 17 இயக்கத்தினை கண்டித்திருக்கிறார்.

இது போக தமது பாசிச நடவடிக்கைகளை செயல்படுத்துவோம் என்று பேசும் சங்க பரிவாரங்களின் கருத்துரிமைக்கும் இந்த நாட்டில் இடம் வேண்டும் என்ற கொள்கையை கடைபிடிக்கும் பத்திரிகையாளர் ஞாநியும் இதை கண்டித்திருக்கிறார். கருத்துரிமை என்பதை வர்க்கம் கடந்த தூய கருத்தியலாக மட்டும் பார்ப்பதால் ஞாநி அப்படித்தான் சொல்வார் என்பதால் பிரச்சினை இல்லை.

வெறுமனே எதிர்ப்பு மட்டும் காண்பித்தால் பிரச்சினை இல்லை என்று கூறும் பத்ரி மலையாள மனோரமாவின் ஸ்டாலை மூட வேண்டும் என்று கூறுவது பாசிச நடவடிக்கை என்கிறார்.  மேலும் மலையாள நூல்களை தமிழில் கொண்டு வருவதையும் எதிர்ப்பீர்களா என்று அவதூறும் செய்கிறார். மே 17 இந்த எதிர்ப்பில் குறிப்பான முழக்கத்தை அளித்திருப்பதைத் தாண்டி அதற்கு மேல் அதை திசை திருப்புவது பத்ரியின் மோசடியான நடவடிக்கை.

இதைத் தனித்தனியாக பார்ப்பது நீண்டு விடும் என்பதால் இந்தக் கருத்துரிமையின் அரசியலை மட்டும் குறிப்பாக பார்த்து விடுவோம்.

எல்லாக் கருத்துக்களும் தமது கருத்துக்களை அமல்படுத்தும் ஒன்றிற்காக மட்டும் கருத்தாக தோன்றுகின்றன. பின்னர் அதை மக்களிடம் ஆதரவு தேடி பேசுகின்றன. அதிகாரம் வந்த பிறகு தனது உரிமையை அதாவது அந்த கருத்திற்கு எதிரான மற்றவற்றை தடை செய்து நிறுவுகின்றன. இது எல்லா இயக்கங்களுக்கும், அரசியல்களுக்கும் பொருந்தும். இதைத்தாண்டி தூய கருத்தியல் உரிமை என்று எதுவும் இல்லை.

ஆக ஒரு கருத்தை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது அது அமலுக்கு வருவதோடும் சேர்ந்தே இருக்கின்ற ஒன்று என்பது இந்த போலி கருத்துரிமை காவலர்களுக்கு தெரியாத ஒன்று. ஏனெனில் இவர்கள் நிலவும் மக்கள் விரோத கருத்து அதிகாரத்தின் தயவில் வாழ்பவர்கள். அதை ஏற்றுக் கொண்டேதான் பொதுவில் கருத்துரிமை வேண்டும் என்று பேசுகிறார்கள். ஆனால் அந்தந்த ஆளும் வர்க்கம் அவர்களுக்கு பிரச்சினை இல்லாத பட்சத்தில் அனுமதிக்கும் அளவைத் தாண்டி உலகில் எங்கும் கருத்துரிமை என்று ஒன்று இல்லவே இல்லை.

அப்துல் கலாமை அரசவைக் கோமாளி என்று சுவரில் எழுதியதற்காகவும், தாமிரபரணி ஆற்றை உறிஞ்ச வரும் கோகோ கோலா என்று பிரச்சாரம் செய்ததற்காக கூட எங்கள் தோழர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். இவையே இப்படி எனில் இன்னும் நேரடியாக அரசு எதிர்ப்பு இயக்கங்களுக்கு என்ன கதி என்பதையும் அதற்காக பல தோழர்கள் தடா, பொடாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையும் பார்த்திருக்கிறோம்.

பத்ரி-சேஷாத்ரி
பத்ரி சேஷாத்ரி

அது போல தமிழகத்தில் ஈழ உரிமை என்று பேசியதற்காக பல இயக்கத்தினரும், தலைவர்களும் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது காஷ்மீரிலும், வட கிழக்கிலும், பினாயக் சென்னை ஆண்டுக்கணக்கில் சிறை வைத்த சட்டீஸ்கரிலும் இன்னும் அதிகம். இவையெல்லாம் கருத்துரிமை என்பதின் இந்திய இலட்சணத்தை பறைசாற்றும் சான்றுகள்.

இந்தியாவில் ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு. சான்றாக காஷ்மீர் மக்களது விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி மணிரத்தினம் எடுத்திருக்கும் ரோஜா படத்திற்கு ஆளும் வர்க்கங்கள் அளித்த இமாலாய வரவேற்பை பாருங்கள், இன்றும் கூட குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் அரசு தொலைக்காட்சிகள் இந்தப் படத்தை திரையிடுகின்றன. ஆனால் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் யாசின் மாலிக் பேசினால் மட்டும் சிறையில் அடைத்து விடுவார்கள். அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை அனுப்பி ரகளை செய்வார்கள்.

அண்ணா ஹசாரேவுக்காக மீடியாக்களும், அரசு அமைப்புகளும் எப்படி சேவகம் புரிந்தன என்பதறிவோம். ஆனால் புரட்சிகர ஜனநாயக அமைப்புகள் சிறு போராட்டம் அறிவித்தாலும் அரசு அமைப்புகள் கடித்து குதறுகின்றன.

இனி கருத்துரிமை காவலர்களின் சட்டவாத முறைப்படியே ஒன்றை விளங்க வைப்போம். முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறதென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று  கூறியிருக்கிறது. இதை மறுத்து மலையாள மனோரமாக கூறி வருகிறது. இந்தப் பிரச்சினையில் ஆளாளுக்கு கருத்து தெரிவித்தாலும் நீதிமன்றம் கூறினால் கடைபிடிப்போம் என்று பல கட்சிகளும் கூறுகின்றனர். அதாவது நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பு தங்களது கருத்துரிமையை வலியுறுத்த மாட்டோம் என்றுதான் இதற்கு பொருள்.

ஆனால் இதை மலையாள மனோரமா மதிக்கவில்லை. ஆக நீதிமன்ற உத்திரவை மதிக்காத மலையாள மனோரமாவை கருத்துரிமையின் பேரில் ஏன் மதிக்க வேண்டும்? கருத்துரிமையை மிதித்திருப்பவன் அவன்தானே? உடனே நமது கருத்துரிமை காவலர்கள் என்ன சொல்வார்கள்? வேண்டுமென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுங்கள் என்று  கூறுவார்கள். ஏதோ வக்கீல் வண்டு முருகனை வைத்து சினிமா கோர்ட்டில் வாதாடி நீதி கிடைத்து விடுவது போல அவர்களுக்கு ஒரு நினைப்பு.

இங்கே மலையாள மனோராமாவோடு பிரச்சினை முடிந்து விடவில்லை. உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் கூட நீதியின் பாலோ, நீதிமன்ற உத்திரவை அமல்படுத்தும் வண்ணமோ செயல்படவில்லை. எனில் இவர்களுக்கு எதிராக எங்கே யாரிடம் கருத்து தெரிவிப்பது? நமது கருத்துரிமை காவலர்கள் அணி சேர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்யலாம் என்றால் ஒத்துக் கொள்வார்களா?

தீண்டாமை வேண்டும், உடன் கட்டை ஏறுதல் வேண்டும், தலித்துகளுக்கு தனிக்குடியிருப்பு வேண்டும் என்று இந்துத்தவவாதிகள் கருத்து தெரிவிக்கும் உரிமையை கருத்துரிமை என்று ஆதரிக்க முடியுமா? ஒரு பெண்ணை சுலபமாக வண்புணர்ச்சி செய்வது எப்படி என்பதை கருத்துரிமை என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் புத்தகமாக போடுமா? கேட்டால் இதெல்லாம் கூடாது என்பார்கள்.

எனில் ஒரு கருத்தில் சரி அல்லது தவறென்று இரண்டுதான் இருக்க முடியுமே அன்றி அந்த சரிக்கும் தவறுக்கும் தாண்டிய கருத்துரிமை என்ற ஒன்று அந்தரத்தில் தொங்க முடியாது. அந்த வகையில் மலையாள மனோரமாக பல ஆண்டுகளாக இந்த புரளியைக் கிளப்பி இருமாநில மக்களிடம் முரண்பாட்டை வளர்த்து வந்திருக்கிறது. இதை கருத்துரிமை என்ற பெயரில் அனுமதிப்பதா, இல்லை எதிர்ப்பதா? ஒரு கருத்தை மக்கள் நலன் நோக்கிலோ இல்லை பொதுவான நீதியின் பால் மதிப்பிட்டோ சரி என்றோ தவறு என்றோ முடிவு செய்கிறோம். முடிவு செய்வதை நாம் அமல்படுத்தும் போது அந்தக் கருத்தை அழிக்கும் மற்ற கருத்துக்களை நாம் மறுக்க வேண்டியிருக்கிறது. ஒரு கருத்தை ஆதரிப்போர் எவரும் மறைமுகமாக அந்தக் கருத்தின் எதிர் கருத்துக்களை மறுக்கத்தான் முடியும். இதைத்தாண்டி கருத்துரிமை என்பது தூய ஒழுக்க வியலாக இருக்க முடியாது. மலையாள மனோரமா பத்திரிகையை இருமாநில மக்கள் நலனுக்காகவே நாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது. இந்த எதிர்ப்பு என்பது வாய்ப்புகள் இருக்குமிடத்தில் செயலுக்கு அதாவது மலையாள மனோரமாவை முடக்குவது என்று காட்டுவதில் எந்தத் தவறுமில்லை.

எது சரி என்பதை சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கட்டும்.

பத்ரி-கண்ணன்-சிபிஎம்-தினமலர்-கார்டூன்

இதற்கு மேல் மே 17 இயக்கத்தை குறை கூறுபவர்கள் இந்த நாட்டில் சரியான கருத்துரிமை உள்ளது, இல்லையென்றால் அதற்காக போராட வேண்டும் என்று பிலிம் காட்டினாலும் உண்மையில் பினாயக் சென் போல உள்ளே போவதற்கு தயாரில்லாத காரியவாதிகள். அதைத் தாண்டி இவர்களிடம் கருத்தோ- உரிமையோ எதுவுமில்லை.

இறுதியாக இவர்களது பித்தலாட்டத்தின் முத்தாய்ப்பாக தினமணி ஆசிரியர் வைத்தி மாமாவின் குத்தாட்டத்தைப் பார்க்கலாம். நேற்றைய தினமணி தலையங்கத்தில் மாட்டுக்கறி மாமி என்று நக்கீரன் எழுதியதை ஏதோ மாபெரும் பத்திரிகை தர்ம மீறல் என்று சுதந்திரப் போராட்டம், அரசியல் சட்ட சாசனம் என்று எங்கெங்கோ சுற்றி வரும் மாமா இறுதியில் நக்கீரன் பத்திரிகையை தனிமைப்படுத்தி அகற்றி  நிறுத்த வேண்டும் என்று சாமியாடாத குறையாக சாபம் கொடுக்கிறார். அதாவது பத்திரிகை தர்மத்தை கேடாக பயன்படுத்தினால் அந்த பத்திரிகையை மூட வைப்பதுதான் பத்திரிகை தர்மமாம்.

இதே கட்டுரையின் இறுதியில்  சென்னை புத்தகக் காண்காட்சியில் மலையாள மனோரமா அரங்கத்தை மூட வேண்டுமென்று ஒரு கும்பல் ஆர்ப்பாட்டம் செய்வதும் அதனால் அந்த அரங்கம் மூடப்படுவதும் என்ன விதத்தில் நியாயம் என்று கேட்கிறார். அதுவும் இதுமாதிரி வன்முறைக் கும்பல்கள் சட்டம் ஒழுங்கை கையிலெடுத்துக் கொள்வதை அனுமதிப்பது கண்டனத்திற்குரியது என்று வசைபாடுகிறார்.

மருமகள் உடைத்தால் பொன்குடம் மாமியார் உடைத்தால் மண்குடம் என்ற பழமொழியின் தகுதியிலேயே இன்னும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த அறிவாளிகள்தான் கருத்துரிமை குறித்து நமக்கு பாடம் எடுக்கிறார்கள். கேட்க மறுத்தால் கம்பை எடுக்கிறார்கள். அந்தப்படிக்கு இனி நமக்கு கருத்துரிமை தேவையில்லை. கம்புரிமைதான் வேண்டும்.

  1. மே 17 இயக்கம் ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று என்றும் சொல்லியதில்லை. இலங்கையின் எதிரான சட்டமன்ற தீர்மானங்களை மட்டுமே ஆதரித்து இருக்கிறோம். அதுவும் அதில் தமிழக சட்டமன்றத்திற்கு தான் ஆதரவு தெரிவித்திருக்கிறோமே ஒழிய என்றும் தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை..

  2. https://www.vinavu.com/2012/01/11/jiten-marandi/ கருத்துரிமைக்கு கல்லறை என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளீர்கள். இப்போதோ கருத்துரிமை என்று ஒன்று இருக்கமுடியாது என்று சொல்கிறீர்கள்…. சற்று குழப்பமாகவே உள்ளது

    • இந்தியாவுல கருத்துரிமை உண்டுன்னு ஆளும் வர்க்கம்தான் சொல்லுது, அந்த உரிமை இல்லைங்கிறதத்தான் இந்த இரண்டு கட்டுரைங்களும் இரண்டு கோணத்துல சொல்லுது.

  3. கட்டுரை சிறப்பாக இருக்கிறது. கருத்தியல் குறித்தும் அதில் உள்ள மோசடி குறித்தும் சிறப்பாக விவாதித்திருக்கிறீர்கள்.

  4. மே 17 இயக்கம் செல்வி செயலலிதாவை ஈழத்தாய் என்று ஏற்றுக்கொண்டதாக ஒரு போதும் அறிவிக்கவில்லை. தமிழீழத்தைப் பெற்றுத்தராமல் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்? மேலும் செல்வி செயலலிதா அவர்கள் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுவதாக நம்புகிறது

    • ஹரிஹரன்-மாணிக்கம்,

      மே17, ஜெவை ஈழத்தாய் என்று சொல்லவில்லை என்கிறீர்கள்… சீமான் குறித்த உங்கள் அணுகுமுறை என்ன? ஈழத்தாயே போற்றி போற்றி என்பவர் உங்கள் நிகழ்ச்சிகளில் முக்கிய விருந்தினர்களாக இருக்கின்றாறே.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு – அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்த அவர் வழியில்தானே உங்கள் பிரச்சாரமும் அமைந்தது…

      • மன்னிக்கவும் இலக்கை அடைய அவர் வழியில் அவர் பயணிக்கிறார். மே17 அதன் வழியில் பயணிக்கிறது. இலக்கிற்கு இடையுறாக இருப்பவர்களை எதிர்க்கிறது. காலச்சுவடு போன்ற வேடதாரிகளின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது. செல்வி செயலலிதாவை சீமான் அவர்கள் ஆதரிப்பதை எதிர்ப்பது தான் தமிழ் மக்களுக்கு ஆற்றும் தொண்டாக மே17 நினைக்கவிலலை. சீமான் செயலலிதாவை ஆதரிப்பதன் மூலம் தமிழக மக்களுக்கு சில நன்மை ஏற்படலாம் என்பது அவரின் கருத்து. இதில் சீமானின் நோக்கத்தைத் தான் ஆராய வேண்டும் அவரின் செயல்பாடுகளை அல்ல. மேலும் மே17 நிகழ்ச்சியில் யாரையும் முன்னிலைப்படுத்துவது கிடையாது. மக்களோடு மக்களாக கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

        • //. இதில் சீமானின் நோக்கத்தைத் தான் ஆராய வேண்டும் அவரின் செயல்பாடுகளை அல்ல.//

          அப்படியாயின் அருந்ததி ராயின் நோக்கத்தைத் தானே நீங்கள் ஆராய வேண்டும். காலச்சுவடு புத்தக விழாவுக்கு வந்த அவரது செயல்பாடை ஏன் எதிர்க்க வேண்டும்? நோக்கம் , செயல் இரண்டும் கேள்விக்குள்ளாக்கப் படவேண்டும் என்பதால் தானே அருந்ததி ராயின் செயல் எதிர்ப்புக்குள்ளானது?

  5. பத்ரி, சென்ற வருடமோ அதற்கு முந்தைய வருடமோ, தீவிரவாத இயக்கங்கள் பற்றிய புத்தகங்களுக்கு போலீஸ் வெறும் வாய்மொழி உத்தரவு மூலம் தடை விதித்தது. அதை எழுத்து பூர்வமாகக் கேட்காமல், நீதி மன்றமும் செல்லாமல், பிரபாகரன், எல்டிடிஈ, உல்ஃபா, அல் காயிதா- பயங்கரத்தின் முகவரி போன்ற புத்தகங்கள் கண்காட்சியில் கிடைக்காது என்று அறிவித்துவிட்டீர்கள். (ஆதாரம் -பா.ராகவனின் பதிவு.)

    அந்தத் தடை மட்டும் ஃபாஸிசம் இல்லையா? அதை ஏன் நீங்கள் எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை?

    சரவணன்

  6. //நமக்கு கருத்துரிமை தேவையில்லை. கம்புரிமைதான் வேண்டும்.//

    சரியான தீர்வு வினவு.

  7. மிக ஆழமான கட்டுரை..வினவை தொடர்ந்து கவனித்து வருகிறேன்..நேர்த்தியாக இருக்கிறது..

  8. //ஒரு பெண்ணை சுலபமாக வண்புணர்ச்சி செய்வது எப்படி என்பதை கருத்துரிமை என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் புத்தகமாக போடுமா? //- கண்டிப்பாக போடும்.

    கிழக்கு பதிப்பாளர் மொழிபெயர்ப்பாளர் பத்ரி சேஷாத்ரி ‘பண்புடன்’ இணைய இதழில் எழுதிய கட்டுரையிலிருந்து சில வரிகள்:

    “நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத்தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. தமிழின் இலக்கிய வானில் சில பதிப்பாளர்கள் அற்புதமான பணியாற்றி, சிறந்த இலக்கியத்தை வெளியே கொண்டுவர உதவுகிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்லன். புத்தகம் உருவாக்கி விற்பது எனக்கு ஒரு தொழில் மட்டுமே. நான் ஒரு வணிகன். எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால். நன்றாக விற்பனை ஆகாது என்றால் அவற்றைப் பதிப்பிக்க நான் விரும்புவதில்லை. சில புத்தகங்களை என் சொந்த ஆசைக்காகப் பதிப்பிப்பதும் உண்டு. கமெர்ஷியலாகப் பார்க்கும்போது அவை தவறான முடிவுகள் என்று நன்கு தெரிகிறது. வரும் காலங்களில் இந்தத் தவறைக் குறைத்துக்கொள்வேன். எங்கள் புத்தகங்களை மட்டும் விற்பனை செய்வதற்காக என்று நான் உருவாக்கியுள்ள கட்டுமானத்தை இப்போது அனைவருடைய புத்தகங்களையும் விற்பனை செய்ய என்று பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன்…….

    வரும் ஆண்டு என் வேலை, நான் பதிப்பிக்கும் சில எழுத்தாளர்களை இப்படிப்பட்ட பிராண்டுகளாக ஆக்குவதற்கு எந்தவகையில் பங்களிக்கலாம் என்று முயற்சி செய்வதே. அப்போதுதான் தமிழில் 25,000 அல்லது 50,000 என்று புத்தகங்களை விற்கவைக்க முடியும். நானும் பணம் பண்ணமுடியும்.”

  9. //“நினைவின் குட்டை, கனவு நதி” என்ற சுந்தர ராமசாமி, ஜெயமோகன், காலச்சுவடுகளது அற்பவாத இலக்கியத்தை விமரிசிக்கும் புதிய கலாச்சாரம் வெளியீடாக வந்த நூலின் ஆரம்பத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது. ///

    ஜெயமோகன் எழுதிய ஆக்கங்களில் மிக சிறந்தாக நான் கருதுவது ‘நினைவின் நதியில்’ என்ற சுரா பற்றிய நினைவலைகளை தான். மிக மிக sensitive ஆன, அழகிய சித்திரம் அது. இதை இப்படி கொச்சையாக பேசுவது தான் உண்மையான மேட்டிமை திமிர். இன்னும் 100 ஆண்டுகள் கழித்து எவை மேட்டிமை திமிர் எவை அழியாமால இருக்கும் என்று தெரியும்.

    வினவு குழுவினரிடம் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் கருத்து சுதந்திரம் எப்படி இருக்கும் என்று எங்களுக்கும் தெரியும். இப்பவே இப்படி எல்லாம் இஸ்டத்து, மேலோட்டமாக, ஏசுகிறவர்கள், அதிகாரத்தை கைபற்றினால், ஜெயமோகன் முதல் பலர் படைப்பாளிகளை நசுக்குவார்கள் என்பது திண்ணம்.

    வினவு தளத்தை படிப்பது, பின்னூட்டம் இடுவது தான் பெரும் தவறு.

    • அதியமான் அண்ணாச்சி,

      அப்போ… நீங்கள் பத்ரி ஐயங்கார், ஞாநி சங்கரன் ஐயர், ராம் ஐயங்கார், கண்ணன் ஐயர் பக்கம் நின்று… அவர்களின் பாசிச நியாயத்தை பேசிகிறீர்களே? சூப்பர் அண்ணாத்தே…

      வினவுக்கு ஆட்சி அதிகாரம் இருப்பது இருக்கட்டும்… இப்போ இருக்கும் ஆட்சி அதிகாரத்தை பற்றி சொல்லி விட்டு… வினவிடம் ஆட்சி வந்தால் இப்படி இருப்பார்கள் எனும் உங்கள் கற்பனையை சொன்னால் நன்றாக இருக்குமே?

      வினவில் பின்னோட்டம் இடுவது தவறு என சொல்லி கொண்டே தெரிந்தே தப்பு தப்பாக காலசுவடு, மலையாள மனோரமாவின் அயோக்கியதனங்களை ஆதரிப்பது ஏனோ? பதில் சொன்னாலும் மகிழ்ச்சி… சொல்லாமல் என்னை போலி… கீலி என திட்டினால்… அண்ணன் அதியமானிடம் அர்ச்சனை கிடைத்தது என்று மகிழ்ச்சியே கொள்ள முடியும்… வேற வழி?

      • //ஞாநி சங்கரன் ஐயர்,//

        அவர் நடத்தும் கேணி சந்திப்புக்கு ஏன் நீர் வந்தீர் ? அவரிடம் நேரில் இதை சொல்லவும்.
        உன்னை போன்றவர்களிடம் பேசுவது வீண் வேலை. மிக மோசமான பார்பனியவாதி தான் நீர்.

        • அதியமான். ப்ளீஸ் கூல். ஒரு ஜனநாயகவாதி இன்னொருத்தர கூட்டத்துக்கு வரக்கூடாதுன்னு சொல்லலாமா ? அதிகாரம் இல்லாமலயே கருத்து சொல்ல விட மாட்டேங்குறீங்க• நீங்க கவுன்சிலராகி, எம்எல்ஏ ஆகி பிரதமராகி .. அப்பப்பா முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்த விட கேணி நாற்றம் தாங்கலயே

        • என்ன இது… பார்ப்பனீய எதிர்ப்பாளர்கள் கேணி கூட்டத்திற்கு வர கூடாது என ஞாநி சொன்னதாக தெரியவில்லை… நான் அங்கு வந்ததே கேள்வி கேட்டு சந்தேகத்தை தீர்த்து கொள்ள மட்டுமே…

          இன்னக்கை எனக்கு நல்லா தூக்கம் வரும்… அதியமான் அண்ணாத்தே… அர்ச்சனை செய்து விட்டார்…

          • தமிழ் குரல் என்னும் போலிக்கு :

            ///அவர்களின் பாசிச நியாயத்தை பேசிகிறீர்களே? ///

            ஞாநியை ஒரு பாசிஸ்ட், பார்ப்பனர் என்றல்லாம் கருதுபவர், நேரில் அவருடன் பேசும் போது இதை சொல்லாமல், இணையத்தில் மட்டும் எழுதுவது பெரிய போலித்தனம். ஒரு கருத்தை வைத்தாலே, ஒரு நிலைபாட்டை எடுத்தாலே அவரை பார்பான், ஃபாசிஸ்ட் என்றெல்லாம் கீழ்தரமாக பேசுவது தான் பார்பானியம். அடுத்த முறை கேணி கூட்டத்தில் சந்திக்கும் போது அவரிடம் இதை பற்றி ‘விவாதிக்கலாம்’. உன்னை போன்ற ஒரு கீழ்தரமான pervertஅய் நான் பார்த்ததில்லை.

            மணி : உமது உளாரல்கள் தான் பல நேரங்களில் நாறுகின்றன. பொதுவாக உமக்கு பதில் சொல்வதை தவிர்த்துவிடுகிறேன். கேணி சந்திப்பு பற்றி உமக்கு என்ன வெங்காயம் தெரியும் ?

            • ப்ளீஸ் கூல் பாஸ். நான் கேள்வியே கேக்கலியே.. அப்புறம் ஏன் பதில் சொல்லணும். உங்கள கூல் பண்ணதான் டிரை பண்றேன்.

            • அதியமான் அண்ணாத்தே…

              ஞாநி நடத்துவது இலக்கிய கூட்டங்களே… அந்த கூட்டதில் விருந்தினராக வருபவர்களே அவர்களை பற்றி பேசி கேள்வி பதில் இருக்கும் என்பது தெரிந்ததே… அந்த ஞாநி பார்ப்பனரா… என்பதை பற்றியது அல்ல… ஒரிரு கூட்டங்களுக்கு மட்டுமே நான் வந்துள்ளேன்… அதிலும் கூட ஒரு கூட்டத்தில் விபசாரம் செய்த பார்ப்பன சங்கராசாரியை… பார்ப்பன இந்து அமைப்புகள் கையாண்ட விதத்தையும்… அதே போல் விபசாரம் செய்த நித்யானந்தாவை… பார்ப்பன இந்து அமைப்புகள் கையாண்ட விதத்தையும் அம்பலபடுத்தினேன்… கூடுதலாக பார்ப்பன சங்கராச்சாரிகள் ஆண் விபசாரிகள் மட்டும் அல்ல… கொலைகாரர்கள் எனவும் அந்த கூட்டத்தில் பதிவு செய்தேன்…

              அதே கூட்டதில் ஒரு அமைப்பின் பெயரில் ஏன் முற்போக்கு இருக்கிறது என கேனதனமாக கேள்வி கேட்ட போது… மென்மையாக விருந்தினர் பதில் சொன்னவுடன்… காரணம் சமூகத்தில் பிற்போக்குதனமாகவர்கள் இருக்கிறார்கள் என உங்களுக்கு பக்கத்தில் இருந்தே பதில் சொன்னேன்… பக்கத்தில் இருந்தவனை எல்லாம் போலி எனும் செலக்டிவ் அம்னிசியா பிரச்சனை இருக்கிறதா உங்களுக்கு… பாவம் அண்ணாத்தே நீங்கள்…

              ஞாநிக்கும் எனக்கும் சொந்த பிரச்சனையா? மனிதாபிமானம் எல்லாம் நன்றாக பேசும் ஞாநி… நூலிழையில் சிங்கள பேரினவாதத்திற்கும்… இந்தியா பாசிசத்திற்கு வால் பிடிக்கிறாரே என்பதே பிரச்சனை… அதே நூலில் இந்து ராம், மாலன் இருக்கிறார்கள் என்பதே உண்மை…

              இந்த முறை புத்தக கண்காட்சியில் ஞாநியை பார்த்தால் உங்கள் வேண்டுகோள்படி அவர் இந்து ராம், மாமா வைத்தி பக்கம் நின்று அக்கிரமமாக பேசிவதை நேரில் சொல்லி விட்டு வருகிறேன்… ஞாநி உங்களை போன்ற முதலாளிதுவ ரசிகர் மன்ற பாசிஸ்டு அல்ல என்பதால் அடிப்பேன்… உதைப்பேன் என சொல்ல மாட்டார்….

              ஞாநி பிறப்பால் பார்ப்பனர் என்பதா எனக்கு பிரச்சனை… நிச்சயமாக இல்லை… அவர் காலசுவடியின் பொறுக்கிதனத்தை… இந்து ராமின் அயோக்கியதனத்தை… மலையாள மனோரமாவின் மோசடியை… மாமா வைத்தியின் பார்ப்பன சைகோதனத்தை… பத்ரியின் பார்ப்பனீய பாசத்தை ஆதரித்து நிற்கிறாரே என்பதே பிரச்சனை…

              உங்களுக்கு பிரச்சனை என்ன? உங்களுக்கு பிடிக்காத நான் கருத்தே சொல்ல கூடாது என்பதுதானே பிரச்சனை… முடிந்த அளவுக்கு அர்ச்சனை செய்து விட்டு போகலாம்… உங்களுக்கு அவதூறுகளே வேலை என ஆன பிறகு…

              • //அவர் காலசுவடியின் பொறுக்கிதனத்தை… இந்து ராமின் அயோக்கியதனத்தை… மலையாள மனோரமாவின் மோசடியை… மாமா வைத்தியின் பார்ப்பன சைகோதனத்தை… பத்ரியின் பார்ப்பனீய பாசத்தை ஆதரித்து நிற்கிறாரே என்பதே பிரச்சனை…//

                அவரை முழுமையாக படிக்காத, அறியாது லூசுங்க தான் இப்படி எல்லாம் உளரும்.

              • //உங்களுக்கு பிடிக்காத நான் கருத்தே சொல்ல கூடாது என்பதுதானே பிரச்சனை… ///

                மறுபடியும் லுசுத்தமான உளரல். கருத்து சொல்வது வேறு, தனி மனித தூசனை, முத்திரை குத்துதல் வேறு. ஞாநி பார்பானியவாதி, ஃபாசிஸ்ட் என்று நீர் சொன்னதை….

          • //பார்ப்பனீய எதிர்ப்பாளர்கள் கேணி கூட்டத்திற்கு வர கூடாது என ஞாநி சொன்னதாக தெரியவில்லை… //

            சொல்லவில்லை. சொல்லமாட்டார் தான். ஆனால் அவரை ஒரு பார்பானவாதி, ஃபாசிஸ்டு என்று கருதுபவர் கேணி கூட்டத்தில் இடை வெளிப்படையாக கேட்டிருக்கலாமே. அங்கு தான் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாமே. இத்தனை காலங்களாக அப்படி செய்யாமல், இங்கு மட்டும் இஸ்டுத்து சாடுவது அயோக்கியத்தனம்.

    • //மேலோட்டமாக, ஏசுகிறவர்கள்,//

      அதுதான் சங்கதி. உங்க கிட்ட ஆடிசி இருக்குற தெம்புலதானே ஸ்டாலின் மீதும் மாவோ மீதும் அவதூறு கூறுகிறீர்கல்.

    • அதியமான்,

      \\ஜெயமோகன் எழுதிய ஆக்கங்களில் மிக சிறந்தாக நான் கருதுவது ‘நினைவின் நதியில்’ என்ற சுரா பற்றிய நினைவலைகளை தான்.// நீங்க எதுவுமே படிக்காத மாக்கான் என்பது இப்போது தான் தெரிகிறது. ஜெயமோகன் சும்மா போகிற போக்கில் எழுதியதே நீங்க மெச்சும் புத்தகம். அதன் சிறப்பு அதன் readability மட்டுமே. ஜெயமோகனின் சிறுகதைகளை வைத்து ஒரு கருத்தை சொல்லியிருந்தாலாவது உம்மை மதிக்கலாம்.

      • // நீங்க எதுவுமே படிக்காத மாக்கான் என்பது இப்போது தான் தெரிகிறது. //

        ஆமாம், இவரு எல்லாம் படித்தவர் பாருங்க.

        மிக அழகான, நுண்மையான சித்திரம் அது. உம்மை போன்ற, இந்த கட்டுரையை எழுதியவரை போன்ற, காட்டானகளுக்கு / காட்டுமிராண்டிகளுக்கு இதெல்லாம் புரியாது. உங்களுக்கு அது போகிற போக்கில் எழுதியதாகவே தெரியும்.

        //ஒரு கருத்தை சொல்லியிருந்தாலாவது உம்மை மதிக்கலாம்.//
        உம் மதிப்பை கொண்டு போய் ஓடையில் போடவும். அதெல்லாம் எமக்கு தேவையில்லை.

  10. மாணிக்கம், கரிகரன்…

    சூனா சாமி, தமிழ் நாடு சட்ட மன்ற தீர்மானத்தை இழிவுபடுத்தியதாகவும், ஜெயலலிதாவை இழிவுபடுத்தியதாகவும் மே 17 இயக்கத்திடம் இருந்து ஒரு சுவரொட்டி வந்திருந்தது… இதன் மூலம்… ஜெயலலிதாவும், சட்ட மன்றமும் புனிதமானவைகள் என்பதை போலவும், அதனை சூனா சாமி இழிவுபடுத்தியதாகவும்… மக்களுக்கு அறிவிக்கபட்டது… உண்மையில் திரளான மக்கள் போராட்டங்கள்… காரணமாகவே அதில் மே 17 இயக்கத்தின் பங்களிப்பும் இருந்தது… மக்களின் போராட்டங்களை ஊற போடவே… ஜெவால் சட்டமன்றத்தில் தீர்மானம் போடபட்டது என்பதே உண்மை… எனக்கு தெரிந்து நமது கடமை… மக்களிடம் சென்று… நியாத்தை சொல்ல வேண்டியது… உண்மையில் ஜெவும்… சூனா சாமி வேறு அல்ல… இருவரும் ஒருவரே… என்பதை எடுத்து அம்பலபடுத்துவதை எடுத்து செல்லாமல்… போலியான ஜெவின் தீர்மானத்திற்கு வால் பிடித்தீர்கள் என்பதை தவிர போர் குற்ற தீர்மானத்தை மே 17 ஆதரிக்க வில்லை என்ற உண்மையையும் காட்ட விரும்புகிறேன்…

    பத்ரி ஐயங்கார், ஞாநி சங்கரன் ஐயர், ராம் ஐயங்கார், மாமா வைத்தி ஐயர், கண்ணன் ஐயர் (கண்ணன் ஐயரின் அத்திம் பேர் அந்துமணி ரமேஷ் ஐயர்) என மொத்த கூட்டமும் மே 17 இயக்கத்தை அவதூறுகள் மூலம் அயோக்கியதனமாக பொய் பரப்பி வரும் இப்போதைய சூழலில் உங்களுக்கு ஆதரவாக நிலை எடுக்க முடியாத விடுதலை புலிகள் அமைப்பை வைத்து அரசியல் செய்த ஐயாக்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என பூத கண்ணாடி மூலம் தேடி கொண்டு இருக்கிறேன்… அந்த ஐய்யாக்கள் எல்லாம் ஐயர், ஐயங்கார்வாள்களை பகைத்து கொள்ள மாட்டார்களே?

    கோவா பன்னாட்டு திரைபட விழாவில் மலையாள கூட்டம் கூட்டம் சேர்ந்து ஆர்பாட்டம் செய்தால் குற்றமில்லை… சென்னையில் மே 17 இயக்கம் குரல் ஓசை எழுப்பினால் குற்றமாம்…

    எப்போதும் மக்கள் எதிரிகளுடன்… ஐயர்/ஐயங்கார் மாமாக்கள் உறவோடு இருப்பார்கள்… அந்த மாமாக்களை தமிழ் நாட்டு ஐய்யாக்கள் கண்டு கொள்ளமாட்டார்களே?

    இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால்… பத்ரி, மாலன் போன்ற மக்கள் விரோதிகளுக்கு சேவை செய்வதாக தமிழ் எழுதும் சில… பலர் அடியாள் வேலை செய்து கொண்டுள்ளனர்… இவர்கள் செய்யும் அடியாள் வேலைக்கு எந்த கூலியும் கிடைக்க போவதில்லை என்பது அவர்களுக்கும் தெரியும்…

    கடந்த ஆண்டு சனவர் 26 ஆம் தேதி அன்று மெரினாவில் தமிழக மீனவர் படுகொலைக்கு எதிராக நடந்த ட்விட்டர் குழும கூட்டதில் கூட… பத்ரி பஞ்சாயத்து தலைவர் ஆக்கபட்டு… அந்த தலைவர் பிரச்சனையை சுஷ்மா சுவராஜிடம் எடுத்து சென்று தீர்க்க போவதாக சொன்ன போது… இப்போது பத்ரிக்கு சேவை செய்வது போலவே… அப்போதும் சிலர் வேலை செய்தனர்… உண்மையில் 1998-2003 பாஜக ஆட்சியில்தான் அதிகமான தமிழக மீனவர்கள் சிங்கள படையால் கொலை செய்யபட்டனர் என்ற உண்மையை மறைத்து மோசடிக்கு கிளம்பியவர்கள்… இன்று மே 17 ரகளை செய்ததாக சொல்கின்றனர்…

    மூவர் தூக்கு பிரச்சனையில் மரண தண்டனை முழுதாக ஒழிக்க வேண்டும் என சொன்ன போது இந்து ராம், ஞாநி, காலசுவடு போன்றவர்கள் இன்று உங்களை ஒழிக்க வேண்டும் என்பதன் காரணம் என்ன? அரசியல் அற்ற முறையில் பேசினால் ஆதரிப்போர்… அரசியல் நியாயத்தை பேசினால் நஞ்சை கக்குவது ஏனோ? நாம் உண்மையையும், அரசியல் நியாத்தையும் ஆயுதமாக கொண்டே வேலை செய்ய வேண்டும்… அப்போது எந்த பாசிஸ்டுகளும், ஜெவிடம் எச்சில் பொறுக்கும் சாதி சங்க, சேனா கூட்டம் எல்லாம் உங்கள் பக்கம் வருவார்களா? என முடிந்தால் சோதனை செய்து பார்க்கலாமே?

  11. வினவு தோழர்களுக்கு
    வணக்கம்.
    மிகச் சரியான நேரத்தில் ஆழகான கட்டுரையை வெளிப்படுத்தி இப்போராட்டம் சார்ந்த விவாதத்தை மிகச் சரியான திசையில் வழி நடத்தி இருக்கிறீர்கள். அரசியல் விவாதத்தை முன்வைக்க வேண்டிய கடமையை நீங்கள் முன்னின்று நேர்மையாக நடத்தியதும் பாராட்டப்பட வேண்டியது. மிக்க நன்றி தோழர்களே.
    மே பதினேழு இயக்கத்தினைப் பற்றிய சில குறிப்புகளில் தகவல் பிழை இருப்பதைக் கண்டேன். அதை தங்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்கிற முறையில் இப்பதிலை தங்களிடத்தில்பதிவு செய்ய விரும்புகின்றேன்.
    ///மே 17 நண்பர்கள் முழுமையாக எல்லாப் பிரச்சினைகளையும் அறிந்தவர்கள் அல்லர். முள்ளி வாய்க்கால் அழிவுப் போருக்கு இந்தியாதான் பிரதானமான காரணம் என்பதைக் கூட அவர்கள் முழுமையான அரசியல் பொருளில் புரிந்து கொண்டிருக்கவில்லை. சில வேளை இந்திய அரசு மெச்சும் விதமாக சீனா, பாக்கிஸ்தான்தான் இலங்கை அரசின் அழிவுப்போருக்கு காரணமென்று கூட சொல்லியிருக்கிறார்கள். //
    மே பதினேழு செயல்படும் தளத்தில் முழுமையான தரவுகளை அறிந்து செயல்பட முயன்று இருக்கிறோம். அறிவுகுறை பாட்டுடன் செயல்பட்டதில்லை. எங்களிடம் எழுப்ப்பட்ட கேள்விகளுக்கு பதில்களை பல்வேறு மேடைகளில் முன்வைத்து இருக்கிறோம். இந்தியாவின் தமிழினப்படுகொலை பங்கேற்பை பல கருத்தரங்குகளில் தரவுகளாக பதிவு செய்திருக்கிறோம். அது பெரும்பாலும் இதர அமைப்புகள், இயக்கங்கள், தலைவர்கள் பதிவு செய்யாத விடயங்களை மட்டும் பெரும்பாலும் பதிவு செய்திருக்கிறோம். திருப்பூர், கோவை, திருநெல்வேலி, ராஜபாளையம் கூட்டங்களில் பேசி இருக்கிறோம். சில பதிவுகள் இணையத்தில் இருக்கின்றன. பாகிஸ்தானையோ, சீனாவையோ நாங்கள் முன்னிலைப்படுத்தியதில்லை. மாறாக புவிசார் அரசியல் பொருளாதார சூழலை பதிவு செய்யும் போது இந்த நாடுகளின் நகர்வுகளை குறிப்பிட்டு இருக்கிறோம். அமேரிக்காவின் ஆழமான பங்களிப்பை ஐ. நா அறிக்கை சார்ந்து அதை (ஐ. நா அறிக்கை) ஏன் புறக்கணிக்க வேண்டும் என்ற விளக்கத்துடன் பதிவு செய்திருக்கிறோம். மற்றபடி இந்தியாவை, அதன் அரசினை நாங்கள் அங்கீகரித்தது இல்லை.அதற்கான அவசியங்களும் இல்லை.

    // இது போக ஜெயலலிதாவை ஈழத்தாயாக மற்ற தமிழார்வலர்களைப் போல இவர்களும் பாராட்டியிருக்கிறார்கள்.//
    ஆதாரங்களின் அடிப்படையில் நீங்கள் செயல்படக் கூடியவர்களாக இருப்பதால் இந்தச் செய்திக்கு அடிப்படை இல்லை என்பதை நீங்கள் உணரவேண்டும். இம்மாதிரியாக ஜே-வை பாராட்டி நாங்கள் என்றுமே செயல்பட்டது இல்லை. மேலும் செயல்லிதாவை நாங்கள் மேடைபோட்டு பாராட்டவேண்டும் என்று சில நபர்கள் நெருக்கடிகளை புறக்கணித்து மறுத்ததால் கடும் நெருக்கடியையும், அவதூறுகளையும் சந்திக்க வேண்டி வந்தது என்பதை பதிவு செய்ய விரும்புகின்றோம். ஜெயலலிதாவின் தீர்மானத்தை பாராட்டி நன்றி தெரிவிக்க மறுத்ததால் மே பதினேழு ராசபக்சேவின் கைக்கூலியாக செயல்படுகிறது என்று வெளிப்படையாக குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது என்பதை தங்கள் கவனத்திற்கு கொணர விரும்புகிறோம். ஆகவே இந்த வரிகளை நீங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறோம். மேலும் விளக்கங்கள் தேவைப்படுமெனில் நேரடியாக சந்தித்து விளக்கமளிக்க தயாராக உள்ளோம்.

    நன்றி.

    • திருமுருகன்,

      அமெரிக்கா, ஐ.நா சபை, ஜெயலலிதா தீர்மானம், சட்டசபை தேர்தல் முதலியவற்றில் உங்கள் அணுகுமுறையின் மீதான விமரிசனமாகத்தான் கட்டுரையில் எழுதியிருக்கிறோம். அது குறித்து இங்கு விரிவாக எழுதுவது, விமரிசனம் செய்வது கட்டுரையின் மைய நோக்கத்திற்கு பொருத்தமாக இருக்காது. இப்போது உங்களது விளக்கத்தை படித்த பிறகும் அதன் மீதும் விமரிசனங்கள் இருக்கின்றன. இவற்றினை நேரில் விவாதிக்கலாம். மற்றபடி நாங்கள் எழுதிய விமரிசனங்களுக்கும், அது குறித்து உங்களிடம் விளக்கமளிப்பதற்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். நன்றி!

      • ஈழப் பிரச்சினையில் நேர்மையான சக்திகளை இனம் காண்பதும் அவர்களிடமிருந்து பாசிட்டிவான அணுகுமுறைகள் வருவதும் தேவையான ஒன்று என்றே நினைக்கிறேன். மே 17 இயக்கம் பற்றிய வினவு கருத்துக்களும் மே 17 இயக்கத்தினரின் நேர்மறையான எதிர்வினைகளும் வழக்கமான தமிழின அமைப்புக்களிடம் எதிர்பார்க்க முடியாத ஒன்று.

  12. //ஒரு பெண்ணை சுலபமாக வண்புணர்ச்சி செய்வது எப்படி என்பதை கருத்துரிமை என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் புத்தகமாக போடுமா? கேட்டால் இதெல்லாம் கூடாது என்பார்கள்.// ???

  13. Thanks Vinavu for calm and clear article addressing this issue.

    I am highly disappointed by the shallowness of Roy’s comment characterizing the May17 protest as ‘Annihilation of debate is annihilation of politics’ and her half-baked remarks about LTTE. I must admit though that it is not entirely surprising since, I do not remember Roy commenting on oppressive Brahminisim (except in god of small things) as one of root causes of most burning problems of our country and analysing from this standpoint. Though she diverges from classical brahminical communists on Kashmir and Naxal questions but she retains the world view similar to that of brahminical-CPM comrades on ever other identity-related problems of India.

    Nevertheless, it would be very useful if this article can be translated into English and send it to both Roy and Deccan Chronicle for rebuttal.

    • //I do not remember Roy commenting on oppressive Brahminisim (except in god of small things) as one of root causes of most burning problems of our country//

      Ms. Roy had always called the oppressive Indian govt as ‘Brahmanic Hindu State’.

  14. அருந்ததி ராய் என்ன இந்தியாவின் முற்போக்குக்கு அத்தாரிட்டியா? பக்தனை போல் வினவு கெஞ்சுவது ஏன்? அவரே ஒரு neo liberal and semi ngo . உங்களின் தத்துவார்த்த வீழ்ச்சி அருந்ததி ராயை வியந்தோதும் நிலைக்கு கொண்டு சென்று விட்டது.

  15. // மற்றபடி காலச்சுவடு அப்படிப்பட்ட நிறுவனம் அல்ல என்பதற்கு சேரனின் கவிதைகள், தலித்தும் தண்ணீரும் என்ற நூல், பஷ்ரத் பீர் எழுதிய காஷ்மீர் நினைவுகள் என்ற நூல், ராய் எழுதிய உடைந்த குடியரசு போன்ற நூல்களெல்லாம் இல்லையா என்று ராய் கேட்கிறார்.///

    சரியான கேள்வி மற்றும் மதிப்பீடு தான். அவருக்கு புரிவது, கட்டுரையாளருக்கு புரியவில்லையே !!

    ///இவையெல்லாம் காலச்சுவடு வெளியிட்டதற்கு காரணம் விற்பனை நோக்கம் தவிர வேறு இல்லை. இந்த நூல்களெல்லாம் படிக்க வேண்டிய நூல்கள்தான்,///

    இது கட்டுரையாளரின் முடிவு. ஆனால் அதை அப்படியே ஏற்க்க எல்லோரும் மடையர்கள் அல்ல. தலித்தியத்திற்கு காலச்சுவடு எப்படி எதிர்ப்பாக இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் சொல்ல முடியாமால் சும்மா போகிற போக்கில் பேசுவது இது. ரவிக்குமார் (அவர் மீது எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும்) தொடர்ந்து காலச்சுவடில் எழுது வருகிறார்.

    ஞாநியும் உங்களை பொறுத்த வரை வேஸ்ட்டு. இப்படி எல்லாரையும் சகட்டும் மேனிக்கு ரிஜக்ட் செய்தால், பிறகு உங்க செம்புரட்சிக்கு பின்பு உங்க தலைமையை தவிர மற்ற எல்லாரோரையும் போட்டு தள்ளுவிடுவீக தான். நல்ல வேளையாக அதெல்லாம் எப்போதும் சாத்தியமே இல்லை.

    மே 17 இயக்க்த்தினர் இப்ப ‘தோழர்கள்’ ஆகிவிட்டனரா ? ஒரு இடதுசாரி நண்பர் கிண்டலாக எம்மிடம் இங்களை பற்றி முன்பு சொன்னது : ”இவங்க ஆள்பிடிப்பவர்கள் ; எப்படியாவது புதிய ‘தோழர்களை’ தங்க குழுவில் சேர்க்க வலை வீசுவார்கள் என்று ; அரசிய தெளிவு இல்லாத இளைஞர்களை இழுங்கப்பா ; எப்படியும் புரட்சிக்கு பின்பு நாங்க உங்க பின்னாடி தான் நிற்ப்போம்” என்றார்.

    யாழ்பாண மேட்டுகுடி ஆதிக்கம், அங்கு நிலவும் சாதியம், தலித் அடக்குமுறை பற்றி மே 17 இயக்கத்தினர் ’கருத்து’ தெரிவித்தது போல் தெரியவில்லையே ? கண்மூடித்தனமான புலி ஆதரவு மட்டும் தான் இருக்கிறது. தமிழ் தேசியவாதமும் தான்.

    சென்ற ஆண்டு பெங்களூரில் ஞாநி பேசவிருந்த ஒரு நிகழ்சி இவர்களின் அச்சுறத்தலால் ரத்து செய்யப்பட்டது. விடுதலை புலிகள் பற்றி ஞாநியின் விமர்சனங்களால் ‘அறச்சீற்றம்’ கொண்டு அச்சுறுத்தினார்கள். சென்னையிலும் அவரின் கூட்டம் ஒன்றில் ரகளை செய்வார்கள் என்ற கவலை ஒரு முறை ஒழுங்கு செய்தவர்களுக்கு நேர்ந்தது. ஃபாசிசம் என்றால் இது போன்ற ‘எதிர்ப்பு’ முறைகள் தான்.

    • //ஒரு இடதுசாரி நண்பர் கிண்டலாக எம்மிடம்..//
      இடது சாரின்னா, இடது பக்கத் தோளில் சாரி போடுறவங்கன்னு அர்த்தமா, தலைவா?

    • //மே 17 இயக்க்த்தினர் இப்ப ‘தோழர்கள்’ ஆகிவிட்டனரா ? // இதில் தோழர் என விளித்திருப்பது திருமுருகன் சார்ந்த மே 17 இயக்கம்தான். அதற்கு பதில் சொன்ன வினவு எங்கேயும் தோழர் என குறிப்பிடவில்லை. ஆனாலும் வரலாற்றை திரிப்பதைப் போலவே அதியமான் இங்கும் திரிக்க ஆரம்பித்து விட்டார்.

    • //தலித்தியத்திற்கு காலச்சுவடு எப்படி எதிர்ப்பாக இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் சொல்ல முடியாமால் சும்மா போகிற போக்கில் பேசுவது இது. ரவிக்குமார் (அவர் மீது எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும்) தொடர்ந்து காலச்சுவடில் எழுது வருகிறார்// உங்களை மரமண்டை என்று சொன்னவுடன் கோபப்பட்டீர்கள் அதியமான் ஆனால் மீண்டும் மீண்டும் அதைத்தானே செய்கிறீர்கள்? அறிவாளிகளும் கம்யுனிஸ்டும் கட்டுரையில் கட்டுரையை படிக்காமலேயே குதி குதி என்று குதித்துக் கொண்டிருக்கிறீர்கள் கூடவே பல பொய்கள் (அவை தோழர்களால் அம்பலப்படுத்தப்பட்டதற்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை).

      இங்கும் கட்டுரையை படிக்கமலேயே வாய்ச்சவடால். காலச்சுவடின் தலித் எதிர்ப்பு பற்றி கீற்று கட்டுரையில் மே 17 இயக்கத்தின் கட்டுரை எழுதியுள்ளனர். தமிழ்பேப்பரில் கம்யுனிசம் படிக்கும் உங்களுக்கு கீற்று என்று ஒரு தளம் இருப்பது தெரியுமா என்பது சந்தேகமே. நீங்கள் வெறுமனே வினவை எதிர்க்க வேண்டும் அல்லது உங்களை அதிபுத்திசாலி என்று நீங்கள் கருதிக் கொள்வது போலவே மற்றவர் முன் காட்ட வேண்டும் எனப்தற்காக இஸ்டம் போல பூ சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். சரிதான் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு குணாதியசங்கள் மாறுவதில்லை என்று சொல்வார்கள், அது உங்களைத்தான் போல. அப்போ பாத்தா சேம் அதியமான் அதே முன்கோபமும், முன்யோசனயற்ற வாய்த்துடுக்கும் கொண்டவராய் இன்னும் வலம் வருகிறீர்கள். (கற்றுக் கொள்ளும் ஆர்வமுள்ள மனிதனுக்கு வயதாவதில்லை என்பது என் கருத்து)

      • கீற்று மற்றும் மே 17 இயக்கத்தினர் : இருவரின் ‘கருத்துக்களையும்’ நான் சீரியசா எடுத்திறதில்லை. கீற்றுவை ‘தூற்று’ என்றே ஷோபாசக்தி சொல்வார் !! அவர்களின் ஆண்டு விழாவிற்க்கு சென்று, அங்கு ஈழத்தில் இருந்து வந்து பேசிய ஒரு இஸ்லாமிய எழுத்தாளரை எப்படி பேசவிடாமல் தடுத்தார்கள் என்று கண்டிருக்கிறேன். சில நேரங்களில் சில நல்ல கட்டுரைகள் கீற்றுவில் வருகிறதுதான். இதெல்லாம் இருக்கட்டும். காலச்சுவட்டின் தலித் மற்றும் இஸ்லாமிய ’எதிர்ப்பு’ பற்றி வினவு எழுதட்டும் மொதல்ல. அப்பறம் தரவுகளை பற்றி பேசுக.

        • //////////கீற்று மற்றும் மே 17 இயக்கத்தினர் : இருவரின் ‘கருத்துக்களையும்’ நான் சீரியசா எடுத்திறதில்லை. கீற்றுவை ‘தூற்று’ என்றே ஷோபாசக்தி சொல்வார் !! அவர்களின் ஆண்டு விழாவிற்க்கு சென்று, அங்கு ஈழத்தில் இருந்து வந்து பேசிய ஒரு இஸ்லாமிய எழுத்தாளரை எப்படி பேசவிடாமல் தடுத்தார்கள் என்று கண்டிருக்கிறேன்.//////////

          ஆமாமா, கீற்று மே 17 போன்று சின்னதா தப்பு செய்யறவாளெல்லாம் அதியமானுக்கு ஒரு பொறுட்டா, அவாளையெல்லாம் யாராவது சீரியசா எடுத்துப்பாளோ…

          குண்டு வைத்து மக்களை கொன்று, தேசத்தை துண்டாடும் தேசத்துரோக இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரைனா அதை ரொம்ப ரொம்ப சீரியசா எடுத்துண்டு விவாதிக்கலாம்.. தப்பு செஞ்சாலும் ரொம்ப பெருசா செய்யணும்டா அதான் கெத்து, அவாளுக்குத்தான் மரியாதை, அவா காலடிதான் அண்ணா அதியமானின் திருவடி!

  16. தூற்றிதான பதர்களை விலக்க முடியும். அது அல்லப்பிரட்டியானுக்கு தெரிஞ்சுருக்கு. அவரோட அடிப்பொடிக்கு புரியலையே

Leave a Reply to mani பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க