கடந்த மாதம் சில்லறை வர்த்தகம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் அந்நிய முதலீட்டை 51 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்த பிறகு முதல் தற்கொலை தலை நகர் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. கடந்த ஏழு மாதமாக கிங் ஃபிஷர் ஏர்லைன்சு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் இருக்கிறது. இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மன அழுத்தம் தாங்காமல் ஏர்லைன்சின் ஸ்டோர் மேனேஜர் மனாஸ் சக்கரவர்த்தியின் மனைவி சுஷ்மிதா சக்ரவர்த்தி (45) நேற்று மதியம் 1.30 க்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது கணவரையும் மகனையும் மிகவும் நேசிப்பதாகவும், எங்கே தனது கணவனுக்கு வேலை போய்விடுமோ என்று பயந்ததாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மும்பை விமானிகள் மற்றும் பொறியாளர்கள் நாளை நூற்றுக்கணக்கில் கூடி மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்த உள்ளனர். சக ஊழியர்களின் நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு உதவ தங்களுக்குள் நிதி வசூல் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் பல மாதங்களாக சம்பளமே தராமல் ஊழியர்களை வேலை வாங்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக விமானிகள் போராட துவங்கியவுடன், பொறியாளர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். அவர்கள் தடையில்லா சான்றிதழ் தராத பட்சத்தில் விமானங்களை பறக்க அனுமதிக்க முடியாது என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங் உறுதியாக சொல்லி விட்டார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாயன்று பகுதியளவு நிறுவனத்தை மூடுவதாக நிறுவனம் அறிவித்து விட்டு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியது. சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் முன்னிலையில் மல்லையா மார்ச் மாத சம்பளத்தை மாத்திரம் தருவதாக ஒத்துக்கொண்டு, பிற மாத சம்பள பாக்கியை நிறுவனம் நெருக்கடியிலிருந்து மீண்ட பிறகு தருவதாக சொல்லி உள்ளார். அவரது ஆடம்பர, உல்லாச செலவுகளுக்கோ எந்த குறைவுமில்லை. அவரது தீர்வை ஊழியர்கள் ஏற்காத காரணத்தால் லாக் அவுட் அக்டோபர் 12 வரை நீளும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நிறுவனத்தின் செயலர் பரத் ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மும்பை தேசிய பங்கு சந்தையில் கிங் ஃபிஷரின் பங்குமதிப்பு மேலும் 5 சதவீதம் இறங்கி உள்ளது.
மனாஸ் சக்ரவர்த்தி இந்திய விமானப்படையில் முன்னர் வேலை பார்த்தாராம். அங்கிருந்து ஓய்வுபெற்ற பிறகு சில தனியார் விமான சேவை நிறுவனங்களில் வேலை பார்த்துள்ளார். அவரது ஒரே மகனை அசாமில் பொறியியல் படிக்க அனுப்பி உள்ளார். தெற்கு டெல்லியில் உள்ள வீட்டுக்கு வேலை செய்யுமிடத்தில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரமாக ரிங் போனதால் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் என்ன எனப் பார்க்குமாறு கூறியுள்ளார். அப்போதுதான் துப்பட்டாவால் சுஷ்மிதா தூக்கிட்டுக் கொண்டது தெரிய வந்துள்ளது.
தனியார் மயம் வந்த பிறகு கிராமப் புறங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வந்தது, இப்போது நகரப்புறங்களில் நடுத்தர வர்க்கத்திடமும் பரவி வருகிறது. அந்த வகையில் பார்த்தால் இது தற்கொலை அல்ல. மல்லையாவின் இலாபவெறியால் நிகழ்ந்துள்ள படுகொலை. ஆனால் இந்தக் கொலைக்கு அவரை கைது செய்ய மாட்டார்கள். கிங்பிஷருக்கான அரசு உதவியையும் நிறுத்த மாட்டார்கள்.
கிங்பிஷர் ஊழியர்கள் ஏனைய பிரிவு தொழிலாளிகளுடன் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் மல்லையாவின் கொழுப்பையும், அந்த கொழுப்புக்கு உரம் சேர்க்கும் இந்த அரசையும் தண்டிக்க முடியும்.
சம்பளம் வரலேனா வேற வேல பாக்கணும், சும்மா எதுக்கு அங்கேயே இருக்கணும்…