privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்: போர்க்குணம் கமழும் எழுச்சி! - போராட்டத் தொகுப்பு!

கூடங்குளம்: போர்க்குணம் கமழும் எழுச்சி! – போராட்டத் தொகுப்பு!

-

கடலில் மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தும் இடிந்தகரை மக்களை அச்சுறுத்தும் வகையில் தாழப்பறந்து செல்கிறது, கடற்படை விமானம்
கடலில் மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தும் இடிந்தகரை மக்களை அச்சுறுத்தும் வகையில் தாழப்பறந்து செல்கிறது, கடற்படை விமானம்

ணு உலைக்கு எதிராக இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடத்திய போராட்டமும், அம்மக்கள் மீது ஏவப்பட்ட கொடிய போலீசு அடக்கு முறையும், தமிழக மக்களின் பொதுக்கருத்தை அணுஉலைக்கு எதிராகக் குறிப்பிடத்தக்க அளவிற்குத் திருப்பியிருக்கின்றன. மின்வெட்டு முன்னைவிட அதிகரித்திருந்த போதிலும், ‘அணு மின்சாரமே சரணம்’ என்ற ஆலாபனை மக்களிடம் எடுபடாத சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இந்த மாற்றத்தைச் சாதித்ததில் ஜெயலலிதாவுக்கும் அவரது அபிமான போலீசுக்கும் பெரும்பங்கு உண்டு.

மார்ச் 18 அன்று ஜெ. அரசால் தொடுக்கப்பட்ட போலீசு தாக்குதல், ஜெயலலிதா குறித்த பிரமையை அகற்றியதென்றால், செப்.10 தாக்குதல் மூலம் போலீசும் நீதிமன்றமும் தங்கள் மீதான பிரமைகளையும் கைவிட்டு விடுமாறு வலியுறுத்தியிருக்கின்றன.

செப்.6 – ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, செப்.11 அன்று அணு உலையில் எரிபொருளை நிரப்ப இருப்பதாக என்.பி.சி.ஐ.எல். அறிவித்தது. அணு உலையை நோக்கி அமைதியான முறையில் ஊர்வலமாகச் செல்ல இருப்பதாக செப்.7-ஆம் தேதியன்று அறிவித்தார் உதயகுமார்.

ஏற்கெனவே மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் அப்பகுதியைக் கலவரப் பகுதி போல மாற்றியது போலீசு. ராஜேஷ் தாஸ், ஜார்ஜ், வரதராஜு, பிதாரி ஆகியோர் தலைமையிலான போலீசு படைகள் கூடங்குளம்- இடிந்தகரை வட்டாரம் முழுவதையும் சுற்றி வளைத்தன. இக்கட்டான இத்தருணத்தில் போராடும் மக்களுக்குத் துணை நிற்கும் பொருட்டு, செப்.9 அன்று காலை, கடல் வழியே இடிந்தகரைக்குச் சென்று விட்டார்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் 9 பேர்.

செப்.9 அன்று காலை, அணு உலையின் வாயிற்புறம் நோக்கி ஊர்வலமாக மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்து, கைது செது கொண்டு செல்வதற்கான பேருந்துகளுடன் போலீசு காத்திருக்க, அணு உலையின் பின்புறம் நோக்கி, கடலோரமாகச் செல்லத் தொடங்கியது மக்களின் பேரணி.  இதனைச் சற்றும் எதிர்பாராத போலீசார் மக்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அணு உலையின் பின்புறத்துக்கு வந்து சேர்வதற்குள், மக்கள் அணு உலைக்கு சுமார் முக்கால் கி.மீ. தூரத்திற்கு வந்து விட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருபுறம் நிற்க, பல வண்ணச் சீருடை அணிந்த போலீசு படைகள் அவர்களை வழிமறிக்க, மக்கள் அனைவரும் அப்படியே கடலோரம் அமர்ந்து விட்டனர்.

வயது முதிர்ந்தவர்கள் சிலரைத் தவிர, முற்றுகைப் போராட்டத்திற்கு ஊரே திரண்டு வந்திருந்தது. சிறுவர்-சிறுமியர் மட்டுமல்ல, தாமார்கள் கைக்குழந்தைகளையும் போராட்டத்திற்குக் கொண்டு வந்திருந்தார்கள். வெயில் ஏறிக் கொண்டிருந்தது. தாகத்தால் தவிக்கும் மக்களுக்காக கடல் வழியே படகுகள் மூலம் கொண்டு வந்து இறக்கிய தண்ணீர் பாக்கெட்டுகளை, போராட்டத்தை ஒடுக்க வந்த போலீசு படையினரும் கேட்டு வாங்கி குடித்துக் கொண்டார்கள்.

கையில் மைக்குடன் மக்களை நோக்கி வந்த போலீசு எஸ்.பி, உயர்நீதிமன்றம் நன்றாக ஆலோசித்து அணு உலையை திறக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. முதல்வர் அமைத்த குழுவும் அணு உலை பாதுகாப்பானது என்று கூறியிருக்கிறது. வேண்டுமானால் நீங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு அப்பீல் செயலாம். இங்கே 144 தடை உத்தரவு போட்டிருக்கிறோம். நீங்கள் இப்படிக் கூடுவது சட்டவிரோதம். கலைந்து செல்லுங்கள்” என்று மைக்கில் அறிவித்தார்.

முன்வரிசையில் இருந்த ஒரு பெண் மைக்கை அவரிடமிருந்து வாங்கி, இந்த மண்ணும் கடலும் எங்களுடையது. நாங்கள் வாழ விரும்புகிறோம். நீங்கள் சோல்லும் யார் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் போகமாட்டோம்” என்று அறிவித்தார்.

தமிழகப் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட தூத்துக்குடி மீனவர் அந்தோணி ஜான் (இடது) | இந்தியக கடற்படையால் கொல்லப்பட்ட இடிந்தகரை மீனவர் சகாயம்
தமிழகப் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட தூத்துக்குடி மீனவர் அந்தோணி ஜான் (இடது) | இந்தியக கடற்படையால் கொல்லப்பட்ட இடிந்தகரை மீனவர் சகாயம்

உதயகுமாரைக் கூப்பிடு” என்று ராஜேஷ்தாஸ் அதட்ட, உதயகுமார் எதற்கு? எங்களுடன் பேசு!” என்றார்கள் மக்கள். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ்தாஸ், இடிந்தகரைக்கே வந்து உதயகுமாரைத் தூக்கிடுவேன்” என்று சோல்ல, மறுகணமே யாரடா தூக்குவே” என்று கிளம்பினார்கள் இளைஞர்கள். அடிபட்ட நாயைப் போல ஒரு உறுமலுடன் பின்வாங்கியது போலீசு.

நாங்கள் இங்கேயே தொடர்ந்து உட்கார்ந்திருப்போம். அரசியல் கட்சித் தலைவர்களும் சிவில் சமூகத்தினரும் இங்கே வந்து எங்களுக்கு ஒரு நியாயம் சோல்லட்டும்” என்று மக்கள் கூட்டத்தின் வேறொரு பகுதியில் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்தார் உதயகுமார்.

9-ஆம் தேதி இரவு முழுவதும் சில்லென்ற கடற்காற்றில், நடுக்கும் குளிரில் கடல் நீர் காலைத் தொட்டுச் செல்லும் தூரத்தில், சின்னஞ்சிறு குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கடற்கரையிலேயே உறங்கினர். போலீசார் திருமண மண்டபங்களுக்கு உறங்கச் சென்று விட்டனர். இரவு முழுவதும் மக்களுக்கு காவல் நின்றார்கள் சில இளைஞர்கள். வேறு சிலர் கூட்டத்தின் பக்கவாட்டிலிருந்து போலீசு உள்ளே நுழைய முடியாமல் தடுப்பதற்காக அந்தப் பகுதிகளில் வலைகளை இழுத்துக் கட்டிக்கொண்டிருந்தார்கள்.

செப்-10 அன்று காலையிலேயே தாக்குதலுக்கான முன் தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டது போலீசு. ராஜேஷ்தாஸ் தலைமையில் வந்த அதிரடிப்படை வலைகளை அறுத்தெறிய, மக்கள் முட்களை பிடுங்கிப் போட்டு போலீசைத் தடுத்தனர். தடியடி தொடங்கியது. கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், பார்வையையும் செவிப்புலனையும் தாக்கி நிலைகுலைய வைக்கும் ஸ்டன் கிரனேடு எனும் எறிகுண்டுகளையும் வீசியபடியே, மேற்குப் புறத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து அதிரடிப்படை மக்கள் மீது இறங்கியது. மக்களைக் கடலை நோக்கித் துரத்தியது.

தடியடிக்கு அஞ்சி மக்கள் சிதறியோடவில்லை. மாறாக, மணலை அள்ளி வீசியும், முட்களை எறிந்தும் போலீசை விரட்டினர். கண்ணீர்ப் புகை குண்டுகளை எதிர்கொள்ளும் முறை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மேலும், மக்கள் மீது வீசப்பட்ட ஸ்டன் கிரெனேடுகள் 2001-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட காலாவதியான குண்டுகள். கண்களும் மூக்கும் உதடுகளும் எரியவே செவதறியாமல் மக்கள் திகைத்தனர். கடலில் இறங்கி, தம் எதிர்ப்பைத் தொடர்ந்தனர்.

அதேநேரத்தில், குண்டுகளை வீசியபடியே இடிந்தகரை ஊருக்குள் நுழைந்த ஒரு போலீசு படை போராட்ட பேனர்களைக் கிழித்து எறிந்ததுடன், மேடையில் சிறுநீர் கழித்தது. மாதாகோயில் சிலையையும் சேதப்படுத்தியது. சுனாமி காலனி மற்றும் அருகாமையில் உள்ள வைராவி கிணறு ஆகிய பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையடித்ததுடன், பொருட்களை உடைத்து நாசப்படுத்தியும், பெண்களை கேவலமாக ஏசியும் தாக்கியும் தனது வக்கிரங்களைத் தீர்த்துக் கொண்டது.

போலீசின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து உதயகுமார் உள்ளிட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப் படுத்தப்பட்டு விட்டனர். போராட்டப் பந்தலில் யாருமில்லை. போலீசு தாக்குதலுக்கு யாரும் அஞ்சவில்லை. மாறாக, பின்வாங்க நேர்ந்ததை எண்ணி அவமான உணர்ச்சிக்கு ஆளாகியிருந்தனர். ஊருக்குள் புகுந்து போலீசு மீண்டும் தாக்குதல் தொடுக்கும் என்று எதிர்பார்த்ததால், பந்தலுக்கு வராமல் மக்கள் ஆங்காங்கே சிதறியிருந்தனர்.

கைதாகப் போவதாக அறிவித்த உதயகுமாரைச் சுற்றி நின்று தடுக்கும் இடிந்தகரை மக்களின் உணர்ச்சிப் பெருக்கு
கைதாகப் போவதாக அறிவித்த உதயகுமாரைச் சுற்றி நின்று தடுக்கும் இடிந்தகரை மக்களின் உணர்ச்சிப் பெருக்கு

போலீசால் தாக்கப்படுவதில் தனிப்பட்ட அவமானம் ஏதும் இல்லை என்றும், தாக்குதலுக்கு அஞ்சாமல் போராட்டத்தைத் தொடர்வதுதான் சரியான பதிலடியாக இருக்கும் என்றும் விளக்கி இளைஞர்களைத் திரட்டினார்கள், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள். ம.உ.பா.மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவை,  போராட்டப் பந்தலில் உரையாற்றுமாறு கோரிய இளைஞர்கள், கோயில் மணியை அடித்து மக்களைப் பந்தலில் திரட்டினார்கள். போலீசால் உடைத்தெறியப்பட்ட மைக்குகளை சரி செதார்கள். இந்தத் தாக்குதல் மூலம் நம்மை சிதறச் செவதும் ஆத்திரமூட்டுவதும்தான் போலீசின் நோக்கம். அந்த நோக்கத்தை முறியடிக்க வேண்டும். நமக்காக தமிழகமெங்கும் மக்கள் போராடத் தொடங்கியிருக்கும் சூழலில், மீண்டும் இதே இடத்தில் ஒன்றுதிரண்டு போராடுவது நம் கடமை” என்று பேசினார் தோழர் ராஜு. அதன்  பிறகு ஊர்க்கமிட்டியுடன் பேசி, 48 மணி நேர உண்ணாவிரதம் தொடங்குவதாகப் போராட்டக் குழுவின் சார்பில் அறிவித்தார், மை.பா.யேசுராசன்.

பத்தாம் தேதியன்று காலை கடற்கரையில் தாக்குதல் நடக்கும்போதே, அணு உலையின் வாயிற்புறத்தில், கூடங்குளம் மக்கள் போலீசுக்கு எதிராக வீரமிக்க போராட்டமொன்றை நடத்தினர். இடிந்தகரையில் பல்லாயிரக்கணக்கில் போலீசு குவிக்கப்பட்டிருப்பதால், அம்மக்கள் கொடூரமாகத் தாக்கப்படுவர் என்றஞ்சி, அப்படையின் ஒரு பிரிவினை தம் பக்கம் இழுப்பதற்காக, அங்கே தாக்குதல் தொடங்கியவுடனே, இங்கே சாலை மறியலைத் தொடங்கினர்.

கலைந்து செல்லுமாறு மெகா போனில் பேசிய டி.எஸ்.பி, இடிந்தகரை மீனவர்களுக்கும் கூடங்குளம் நாடார் சாதியினருக்கும் ஏற்கெனவே நடந்த மோதல்களை நினைவுபடுத்தி, சாதிப்பிளவை ஏற்படுத்த முயன்றார். அதனைக் காறி உமிழ்ந்து நிராகரித்து விட்டனர் கூடங்குளம் மக்கள். முன்வரிசையில் நின்ற மாணவர்கள் போலீசின் கண்ணீர்ப் புகை குண்டுகளை எதிர்கொண்டனர்.

சின்னஞ்சிறிய அந்த ஊரின் முக்கிய சாலையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கே, அவ்வூர் இளைஞர்களுடன் போலீசு பல மணி நேரம் யுத்தம் நடத்த வேண்டியிருந்தது. போலீசுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு ‘லைவ் டெலிகாஸ்ட்‘ செய்த தொலைக்காட்சிகள் தம்மையுமறியாமல் மக்களின் இந்த வீரத்தை ஒளிபரப்பினர்.

செப்.11 காலை ‘மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும் பொருட்டு, தான் கைதாக முன்வருவதாக’ தொலைக்காட்சிகள் மூலம் அறிவித்தார் உதயகுமார். இந்த முடிவு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் பரப்பியது. “இம்முடிவு தவறானது, இதன் மூலமெல்லாம் போலீசு அடக்குமுறையை நிறுத்தமுடியாது. இந்த முடிவு போராட்டத்தின் பின்னடைவுக்கே வழி வகுக்கும்” என்று இடிந்தகரை போராட்ட மேடையில் அன்று காலையிலேயே பேசினார், தோழர் ராஜு.

எனினும், தனது முடிவில் உறுதியாக இருந்த உதயகுமார் அன்று பிற்பகல் இடிந்தகரை பந்தலுக்கு வந்து, தான் கைதாகவிருப்பதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். உணர்ச்சிமயமான ஒரு தருணத்தில், ‘கைதாகக் கூடாது’ என்று கூறி, அவரை அங்கிருந்து படகில் தூக்கிச் சென்றனர் இளைஞர்கள். அதன் பின்னர், அன்று இரவு இடிந்தகரை வந்த கேஜ்ரிவாலும் கைதாகக் கூடாது என்ற கருத்தையே வலியுறுத்தினார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துறைமுக முற்றுகைப் போராட்டம்
தூத்துக்குடியில் நடைபெற்ற துறைமுக முற்றுகைப் போராட்டம்

செப்.12 அன்று வழக்குரைஞர் தோழர் வாஞ்சிநாதன் தலைமையில் ம.உ.பா.மையத்தின் சார்பில் பத்து வழக்குரைஞர்கள் கொண்ட உண்மை அறியும் குழு கூடங்குளம் சென்று, போலீசு அடக்குமுறைக்கு ஆளான மக்களை வீடுவீடாகச் சென்று சந்தித்தது. போராடிய குற்றத்துக்காக அந்த ஊர் முழுவதையுமே போலீசு வேட்டையாடியிருந்தது. வீடுகள், சோத்துகள், வாகனங்கள், வேன்கள் நாசமாக்கியது மட்டுமின்றி, பொருட்களையும் இரு சக்கர வாகனங்களையும் போலீசு திருடியும் சென்றிருந்தது. வீடு வீடாகப் புகுந்து பெண்களை இழிவுபடுத்தி, பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும் ஆளாக்கியிருந்தது. ஊர் முழுவதும் தண்ணீர் சப்ளை துண்டிக்கப்பட்டிருந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ராஜத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செயப்பட்டிருந்தனர். ஊரில் வயது முதிர்ந்தவர்கள் சிலரைத் தவிர, ஆண்களே இல்லை. எனினும், இத்தனை அடக்குமுறைகளுக்குப் பின்னரும், அணு உலை எதிர்ப்பிலிருந்து கடுகளவும் அப்பெண்கள் பின்வாங்கவில்லை.

போலீசு அராஜகம் குறித்த விவரங்களைத் தொகுத்துக் கொண்டு உண்மையறியும் குழு அன்றிரவு இடிந்தகரை வந்தது. கூடங்குளத்தில் போலீசு நடத்திய வன்முறை பற்றி, தோழர் வாஞ்சிநாதன் பேசியதை, மிகுந்த அக்கறையுடனும் அனுதாபத்துடனும் இடிந்தகரை மக்கள் கேட்டனர். இரு பகுதி மக்களுக்குமிடையிலான ஐக்கியத்தையும் தோழமை உணர்ச்சியையும் இது மேம்படுத்தியது.

செப்.13 காலை முதல் ‘கடலில் மனிதச் சங்கிலி’ என்ற அறிவிப்பு மக்களிடையே பெரும் உற்சாகத்தை தோற்றுவித்திருந்தது. போராட்டம் துவங்கு முன்னர், மக்களிடையே உரையாற்றுமாறு அழைக்கப்பட்ட தோழர் ராஜு, தேடப்படும் குற்றவாளியென உதயகுமாரைச் சித்தரிக்கும் வாய்தா ராணி ஜெயலலிதாவின் அரசை எள்ளி நகையாடினார். அணு உலைக்கு எதிராக கல்பாக்கத்திலும் மற்ற கரையோர கிராமங்களிலும் தொடங்கிவிட்ட போராட்டத்தைச் சுட்டிக்காட்டி, கிரிமினல் வழக்கு போடுவதன் மூலம் மக்கள் போராட்டத்தை ஒடுக்கவும் முடியாது, நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி அணு உலையை இயக்கவும் முடியாது என்று விளக்கினார்.

போராட்ட முழக்கங்களை வாஞ்சிநாதன் எழுப்ப, ஆயிரக்கணக்கான மக்கள் விண்ணதிரும் முழக்கங்களுடன் கடலில் இறங்கினர். அச்சுறுத்தும் நோக்கத்துக்காகவே தலைக்கு மேலே பத்தடி உயரத்தில் பறந்த கடற்படை விமானம் மக்களின் ஆத்திரத்தை மேலும் தூண்டியது. மீண்டும் மீண்டும் தலைக்கு மேலே சீறிச்சென்ற விமானத்தின் ஒலியால் பலர் மயங்கி விழுந்தனர். ஒரு சிறிய பாறையின் மீது நின்று மக்களுக்கான பாதுகாப்பு கயிறுகளைக் கட்டிக் கொண்டிருந்த மீனவர் சகாயத்தின் தலைக்கு மிக அருகில் விமானம் பறந்ததால், அவர் நிலைகுலைந்து மயங்கிச் சரிந்தார். அபாயகரமான நிலையில் அன்றிரவே நாகர்கோயில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

செப்.14 மதியம் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஒலியின் அதிர்ச்சி காரணமாக மூளை மற்றும் இதயத்தின் ரத்தநாளங்கள் வெடித்ததுதான் அவரது மரணத்துக்குக் காரணம். தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது போல நழுவிக்கொள்ள முயன்றது போலீசு. மருத்துவமனையிலேயே உடனிருந்த ம.உ.பா.மையத்தின் நாகர்கோயில் செயலர் வழக்குரைஞர் பூபதி, வழக்கு பதிவு செது உடலைப் பரிசோதனைக்கு அனுப்புமாறு போலீசுடன் போராடினார். சகாயத்தின் மனைவி மற்றும் உறவினர்களும் இதில் உறுதியாக இருந்தனர்.

செப்.15 அன்று சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செது அவரது உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தது போலீசு. அடுத்து, மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டு, பிரச்சினையை ஆறப்போடுவதற்காகப் பிரேத பரிசோதனையை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் நாடகம் அரங்கேறத் தொடங்கியது.

இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்து, திருச்சி ம.க.இ.க, பெ.வி.மு. அமைப்புகள், செப்.13 அன்று சிறீரங்கத்துக்கு வந்த ஜெயாவிற்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திய பொழுது அ.தி.மு.க. குண்டர்களால் மண்டை உடைக்கப்பட்ட தோழர்
இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்து, திருச்சி ம.க.இ.க, பெ.வி.மு. அமைப்புகள், செப்.13 அன்று சிறீரங்கத்துக்கு வந்த ஜெயாவிற்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திய பொழுது அ.தி.மு.க. குண்டர்களால் மண்டை உடைக்கப்பட்ட தோழர்

செப்.16, ஞாயிறு அன்று காலை தோழர் ராஜு தலைமையில் ம.உ.பா. மைய வழக்குரைஞர்கள், அருகாமை மீனவ கிராமத்து இளைஞர்களை இணைத்துக் கொண்டு மருத்துவமனை வாயிலிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது கடற்படை நடத்திய படுகொலை என்றும், சிறுவனைச் சுட்டுக் கொன்ற சென்னை இராணுவ அதிகாரியைக் கைது செதது போல, கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செது கைது செயவேண்டும் என்றும், மக்கள் அஞ்சலி செலுத்தும் பொருட்டு சகாயத்தின் உடலை கரையோர கிராமங்கள் வழியே கொண்டு செல்வது மக்களின் உரிமை என்றும் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்தார் ராஜு. ஞாயிற்றுக்கிழமையும் சவப்பரிசோதனை நடக்கவில்லை.

செப்.17 காலை மருத்துவமனை வாயிலில், சகாயத்தின் உறவினர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சில இளைஞர்கள் உடலைப் பெறுவதற்காகக் காத்திருந்தனர். 50 வேன்களில் நூற்றுக்கணக்கான அதிரடிப்படை போலீசாரும், வஜ்ரா வேன்களும், கண்ணீர்ப் புகை குண்டுகளும் வந்து இறங்கின. உடலைப் பெற்றவுடனேயே வேனில் ஏற்றியது போலீசு. வழிநெடுக அஞ்சலி செயக் காத்திருந்த மக்களை, அவர்களைவிட எண்ணிக்கையில் அதிகமான போலீசார் சுற்றி வளைத்திருந்தனர்.

வழியில் எங்குமே மக்களை அஞ்சலி செலுத்த அனுமதிக்காமல், நேரே இடிந்தகரை எல்லையில் கொண்டு போ உடலை ஒப்படைத்தது போலீசு. போர்க்குணமிக்க முழக்கங்களுடன் ஊர்வலமாக மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சகாயத்தின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கடற்படையால் கொல்லப்பட்ட சகாயம், மணப்பாடு கிராமத்தில் அநீதியான முறையில் நேருக்குநேர் சுட்டுக்கொல்லப்பட்ட அந்தோணி ஜான் ஆகியோரது தியாகங்கள் நீதிக்காகக் காத்திருக்கின்றன.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு, ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் அளித்து வரும் ஆதரவென்பது, அடையாள ஆதரவோ தார்மீக ஆதரவோ அல்ல. அணு உலைத் திணிப்பின் அரசியல் பின்புலத்தை அம்பலப்படுத்தும் வகையிலும், மின்வெட்டைக் காட்டி அணு உலையை நியாயப்படுத்தும் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையிலும் தமிழகமெங்கும் இவ்வமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரம் செது வருகின்றன. பிப்ரவரி 11 அன்று கூடங்குளத்தில் நடத்திய போராட்டத்தை அடுத்து, சென்னையில் மிகப்பெரும் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து, மார்ச் மாதத்தில் ஜெ. அரசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்ட நாட்களில், ம.உ.பா.மையத்தின் வழக்குரைஞர்கள் இடிந்தகரையிலும் கூடங்குளத்திலும் மக்களுடன் இருந்தனர். தற்போது செப்.9 முற்றுகைப் போராட்டத்திலும் மக்களோடு மக்களாக உடனிருந்து பணியாற்றியிருக்கின்றனர்.

அதேபோல, போலீசு அடக்குமுறைகளை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வந்த சூழலில், போராட்ட நிலைமைகள், போலீசு அடக்குமுறைகள் குறித்த செதிகளை ‘வினவு’ இணையதளம் உடனுக்குடன் வெளிக்கொண்டு வந்தது. முள்ளிவாக்காலைப் போல போலீசால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்தப் பகுதியிலிருந்து நேரடி பேட்டிகளையும் ஒலிபரப்பியது. இத்தளத்தின் மூலம் களநிலைமைகள் ஏராளமான வாசகர்களைச் சென்றடைந்தன.

இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்து, உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களைத் திரட்டி, மனித உரிமைப் பாதுகாப்பு மையன் சென்னையில் நடத்திய கோட்டை நோக்கிச் செல்லும் பேரணி
இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்து, உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களைத் திரட்டி, மனித உரிமைப் பாதுகாப்பு மையன் சென்னையில் நடத்திய கோட்டை நோக்கிச் செல்லும் பேரணி

செப்.10 அன்று நடைபெற்ற போலீசு அடக்குமுறைக்கு எதிராக, செப்.11 அன்றே ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பல இடங்களில் தோழர்கள் கைது செயப்பட்டனர். மதுரை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டமும், சென்னையில் கோட்டை முன் வழக்குரைஞர்களின் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டன. தூத்துக்குடியில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து நூற்றுக்கணக்கானோர் நடத்திய போராட்டத்தில், அந்நகரைச் சேர்ந்த ம.உ.பா.மைய வழக்குரைஞர்கள் முன்நின்றார்கள்.

செப்.13 அன்று சீரங்கத்துக்கு வந்த ஜெயலலிதாவுக்கு, விமான நிலையத்திலிருந்து வரும் பாதையில் கருப்புக் கொடி காட்டினார்கள் திருச்சி ம.க.இ.க; பெ.வி.மு. தோழர்கள். அ.தி.மு.க. காலிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, 3 குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் பொவழக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்.

செப்.22 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற துறைமுக முற்றுகைப் போராட்டத்திலும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் கலந்து கொண்டனர். கூடங்குளத்தில் போலீசின் மனித உரிமை மீறல்கள் குறித்து, நீதி விசாரணை கோரி வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தொடுத்துள்ள வழக்கு மதுரை உயர் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.

ŽŽŽ        செப். 9 முற்றுகைப் போராட்டமும், அதில் இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் காட்டிய போர்க்குணமும், அரசையும் ஆளும் வர்க்கத்தையும் அச்சம் கொள்ள வைத்திருக்கிறது. போர்க்குணமிக்க மக்கள்திரள் போராட்டங்களுக்கும், போராட்ட முறைகளுக்கும் ஊக்கம் தந்திருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டக் கரையோர மக்களை அணு உலைக்கு எதிரான போராட்டக் களத்திற்குள் இழுத்து வந்திருக்கிறது.

அணு உலையின் அபாயம் குறித்து ஆழமாகப் புரிந்து வைத்திருக்கும் அந்த மக்களிடம், அதிகார வர்க்கத்தின் நைச்சியமான பேச்சுகளோ, போலீசின் உருட்டல் மிரட்டல்களோ செல்லுபடியாகவில்லை. அம்மக்கள் போராட்டத்தில் காட்டிய உறுதி, கண்மூடித்தனமான அணுஉலை ஆதரவுக் கருத்து கொண்ட நபர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

இதற்கு நேர் மாறாக, நாராயணசாமியின் உளறல்களும், அணுசக்தி துறை அதிகாரிகளின் முன்னுக்குப்பின் முரணான, பித்தலாட்டமான பேச்சுகளும், அவர்கள் மீதான அவநம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன. அணு உலை ஆதரவு சவடால் அடித்து வந்த தமிழகத்தின் காங்கிரசு, பா.ஜ.க. கும்பல்கள்கூட இன்று அடக்கி வாசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இன்னொருபுறம், அணு உலையின் பாதுகாப்பு குறித்து அசாத்திய அக்கறை கொண்டுள்ளதைப் போல, வாச்சவடால் அடித்துவரும் உச்ச நீதிமன்றம், பொயான நம்பிக்கையை மக்களிடம் விதைத்து வருகிறது. குறிப்பிட்ட சில பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செத பின்னர், அணு உலையை இயக்குமாறு உத்தரவிடுவதற்கு மேல் வேறு எதையும் உச்சநீதிமன்றம் செயாது. செயவும் இயலாது என்பதே உண்மை நிலை.

அணுமின் நிலையங்களுக்கு எதிராக அறிவியல்பூர்வமாக எத்தனை ஆதாரங்களை எடுத்து அடுக்கினாலும், வாதங்களை முன்வைத்தாலும் அவையெல்லாம் அரசின் முடிவைத் மாற்றப் போவதில்லை. ரசியாவுடனான ஒப்பந்தம், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவை பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளை இலாபத்துக்காகவும், இந்திய அரசின் இராணுவ நோக்கத்துக்காகவும் போடப்பட்டவை; மக்கள் நலனுக்கு எதிரானவை; நாட்டின் பொருளாதாரத்தைச் சூறையாடுபவை என்று தெரிந்தேதான், அவை நம்மீது திணிக்கப்படுகின்றன.

ஜெயா, பா.ஜ.க., மமதா போன்றவர்களைப் பொருத்தவரை, அவர்கள் தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் அணு உலை எதிர்ப்பு, வால்மார்ட் எதிர்ப்பு பேசுகிறார்கள். இருப்பினும் இவர்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்துபவர்கள், போகாத ஊருக்கு வழிகாட்டுகிறோம் என்று தெரிந்தேதான் மக்களுக்கு இந்தப் பிரமையை ஊட்டுகிறார்கள்.

அணு உலை எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வைகோ, ராமதாசு, நெடுமாறன் உள்ளிட்டோராக இருக்கட்டும், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு முதலீட்டையும், மின்சாரம் தனியார்மயத்தையும் எதிர்ப்பதாக கூறும் வலது-இடது கம்யூனிஸ்டுகளாக இருக்கட்டும், அவர்கள் இதனை இந்த நாடாளுமன்ற ஜனநாயக அரசியலுக்கு உட்பட்டுச் சாதிக்க முடியாது என்று தெரிந்தும், மக்களுக்குப் போலி நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நடந்து கொண்டிருப்பது ஒரு போர். தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி வரும் ஆளும் வர்க்கங்கள், சிங்குர், நந்திகிராம், கலிங்கா நகர், குர்கான், மானேசர் என்று பல இடங்களில் இது போர்தான் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார்கள். இடிந்தகரையிலும் கூடங்குளத்திலும் இன்னுமொருமுறை இதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இந்தப் போரில் எதிரியைத் தோற்கடிப்பது ஒன்றுதான் நம் முன் திறந்திருக்கும் ஒரே வழி. வேறு வழிகள் எதுவும் இல்லை. இதனைப் புரிந்து கொள்வதும், இதற்குப் பொருத்தமான முறையில் மக்களை போராட்டத்திற்கு அணிதிரட்டுவதும்தான் நம் முன் உள்ள பணி.

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012
__________________________________________________

படிக்க