privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபியூஸ் போன ரஜினிக்கு சொம்படிக்கும் குமுதம் !

பியூஸ் போன ரஜினிக்கு சொம்படிக்கும் குமுதம் !

-

ரஜினி கார்ட்டூன்மிழ் மக்களின் சுயமரியாதையை ஒழித்து அடிமைத்தனத்தைக் கற்றுத் தருவதில் பல பத்திரிகைகள் நம்பர் 1க்குப் போட்டி போடுகின்றன. 20.1.13 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழ், “காத்திருக்கும் அரசியல் புயல்” என்று ரஜினியைக் குறித்து ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. கவர் ஸ்டோரி என்றால் அது ஏதோ மிகப்பெரும் செய்தி அலசல் என்று நினைத்து விடாதீர்கள். இது “சுவாமி வம்பானந்தா” என்ற கிசுகிசு மாமாவின் பக்கத்தில் வருகிறது. ஜூனியர் விகடனின் கழுகுக்குப் போட்டியாக களமிறக்கப்பட்ட இந்த மாமா, சிஷ்யை எனும் பெண்பால் பாத்திரத்தின் மூலம் கவர்ச்சியுடன் வாரம் இரண்டு முறை மேல் மட்ட கிசுகிசுக்களை வாந்தி எடுக்கும் இழிவான ஜன்மம்.

ரஜினி, தனது பிறந்த நாளைக் கொண்டாடிய ரசிகர்களை, புத்தாண்டில் சந்தித்து பேசினாராம். அப்போது இந்த வம்பானந்தா கூட இருந்த ரசிகர்களை சந்தித்து இந்த சேதிகளை தயாரித்து எழுதுகிறார். ரசிகர்களை சந்தித்த ரஜினி முழுக்க அரசியலைப் பேசிக் கொண்டு இருந்தாராம். ரசிகர்களுக்கு தெரிந்த அரசியல் அறிவில் கடுகளவு கூட தெரிந்திராத ரஜினி என்ன பேசியிருப்பார்? குஜராத்தில் நான்காவது முறையாக முதல்வர் பதவியைப் பிடித்த மோடியை உதாரணம் காட்டிய ரஜினி, “மோடி மக்களுக்காக நல்லது பல செய்தாலும் படுத்துக் கொண்டே ஜெயிக்க முடியவில்லை, கஷ்டப்பட்டுத்தான் ஜெயித்திருக்கிறார், இதுதான் இன்றைய அரசியல் சூழ்நிலை” என்றாராம்.

இவர்கள் கிசுகிசுவாகவும், பரபரப்பிற்காகவும் செய்திகளை கேட்டோ இல்லை இட்டுக்கட்டியோ எழுதினாலும் உண்மையை ஒளித்து வைக்க முடியாது என்பதற்கு இதுவே சான்று. நரவேட்டை மோடியை சிலாகித்துச் சொல்லுமளவு ரஜினியின் இதயமும் பாசிசத்தின் செல்வாக்கில் இருப்பது ஒருபுறம். இன்னொரு புறம் அத்தகைய மோடி கூட படுத்துக் கொண்டே ஜெயிக்கவில்லை என்பதன் மூலம் ரஜினி என்ன கூற வருகிறார்?

அரசியல் என்பது நோகாமல் நொங்கெடுத்து வயிறார தின்ன வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். அவரது திரைப்படத்தில் பாம்பையோ இல்லை பந்தையோ வைத்து ஊதி ஊதியே வில்லன்களை பந்தாடுவார் இல்லையா? அது போல அரசியலிலும் எந்த கஷ்டங்களும் இன்றி பதவியை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ரஜினி சொல்ல வரும் கருத்து. எனில் இத்தகைய மைனர்களெல்லாம் தற்செயலாக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தை கதறக் கதற ‘கற்பழிப்பார்கள்’ என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

அடுத்து ‘ஒரு கட்சியில் ஒருவருக்கு சீட் கொடுத்தால் அவரது எதிரணியினர் போய் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்குவது போன்ற மனநிலையில்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள்’ என்று ரஜினி கவலைப்படுகிறாராம். இப்படிப்பட்ட தொண்டர்களால்தான் கட்சிக்கு கெட்ட பெயர் என்பதால் தொண்டர்கள் கட்டுக்கோப்போடு இருப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறாராம். எல்லா ஓட்டுக்கட்சிகளும் தலைமை முதல் தொண்டர்கள் வரை சுயநலம், பதவி, அதிகாரம், ஊழல், சொத்து என்று செயல்படுவதால் பதவி கிடைக்காத பேர்வழிகள் இப்படித்தான் அதிருப்தியாளர்கள் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

ஆனால் ரஜினியே ஒரு பிரம்மாண்டமான சுயநலமாக இருப்பதால் இது அவருக்கு புரியவில்லை. ஆனால் எது எப்படியோ தலைமை எப்படி இருந்தாலும் தொண்டர்கள் முழு அடிமைத்தனமாக இருக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறார். இந்த விசயத்தில் இவரை ஆம்பளை ஜெயலலிதா என்றும் அழைக்கலாம். பாசிஸ்டுகளுக்கு ஏது பால பேதம்?

“கடையை ஆரம்பிப்பது விஷயமல்ல, கடையை ஆரம்பித்தால் வெற்றி பெறணும், அதற்கான சூழ்நிலை அமைய வேண்டும், அதுவரைக்கும் காத்திருக்க வேண்டும்” என்று ரஜினி சொன்னாராம். கொள்கையே இல்லாத ஒரு நபர் தனது கவர்ச்சியை மட்டும் மூலதனமாக வைத்து கட்சி ஆரம்பித்தால் இப்படித்தான் யோசிக்க முடியும். இதற்கு சரவணா ஸ்டோர் அண்ணாச்சியே மேல். தனது சொந்த நேர்மையின் மேல் நம்பிக்கை இல்லாத நபர்தான் மற்ற சூழ்நிலைகள் விபத்து போல் தரும் வாய்ப்புகளை பற்றிக் கொண்டு மேலே ஏற கனவு காண முடியும். அரசியல் என்பது அண்ணாமலையில் பால்காரன் கோடிசுரவனாக மாறியது போல ரஜினி புரிந்து வைத்திருக்கிறார். போகட்டும், இந்த அளவாவது ‘யோசிக்கிறாரே’ என்று நமக்குத்தான் ஆச்சரியம்.

“எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் போது தமிழ்நாட்டில் மூன்று கட்சிகள்தான் இருந்தன, அதனால் அவரால் ஜெயிக்க முடிந்தது, இப்போது நிறைய கட்சிகள், ஜாதிக் கட்சிகள்….இதையெல்லாம் தாண்டி அரசியலில் ஜெயிக்கணும்னா அசுர அலை வரணும், அதுவரைக்கும் காத்திருங்கள்” என்று ரஜினி மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டே கூறினாராம்.

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் போது தி.மு.க, காங்கிரசு போக யார் அந்த ரஜினியின் மூன்றாவது கட்சி? ஒரு வேளை போலிக் கம்யூனிஸ்டுகளாக இருக்குமோ? இது மட்டும் அவர்களுக்கு தெரிந்தால் ‘சூப்பர் ஸ்டாரே நம்மையும் ஒரு பொருட்டாக மதித்து மூன்றாவது கட்சி என அங்கீகரித்திருக்கிறாரே, அவரது இதயத்தில் நமக்கும் ஓர் இடமிருக்கிறதே’ என நன்றிப் பெருக்கால் தீக்கதிரில் ரஜினி சிறப்பிதழ் வெளிவருவது உறுதி.

எம்.ஜி.ஆர் மாதிரி குறைவான கட்சிகள் ஓரிரண்டு இருந்தால் தனது வெற்றி சுலபம் என்று ரஜினி கருதுவது நாம் ஏற்கனவே சொன்னது போல சைக்கிள் சுற்றுகிற நேரத்தில் கதாநாயகன் முதலாளியாவதாக கற்றும் தரும் தமிழ் சினிமாவின் அசட்டு உளவியல் பாதிப்பில்தான் ரஜினி இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. சிகரட்டை தூக்கிப் போட்டு தம்மடிப்பதை வைத்து ஆளானவரெல்லாம் அரசியல் குறித்து யோசித்தால் சாக்ரடிசாகவா பேச முடியும்? சாக்கடையாகத்தான் உளற முடியும்.

96-ல் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார் என்று இடையில் குமுதத்தின் வம்பானந்தா வருத்தப்படுகிறார். ஆனாலும் ரஜினியை கைவிடவில்லை. அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்படும் போது உள்ளே வரலாமென அவர் நினைக்கலாம் என்று குமுதம் ரிப்போர்ட்டர் எழுதுகிறது. ரஜினியே பதறியடித்து ஓடினாலும் இந்த ஊடக மாமாக்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறது. இதுதான் ரஜனிக்கும் நாம் உண்மையிலேயே பெரிய ஆள் என்ற மயக்கத்தை தோற்றுவிக்கும். அவ்வகையில் ரஜினி என்ற கோமாளி பலூனை ஊதுபவர்கள் இத்தகைய விபச்சார ஊடகங்கள்தான்.

ரஜினியின் அரசியல் ஆலோசகர்கள் பலரும் சொன்ன அறிவுரைப்படிதான் அவர் ரசிகர்களுடன் போட்டோ எடுப்பதை நிறுத்திக் கொண்டாராம். அப்போதுதான் அவரைப் பற்றிய ஆர்வம் ரசிகர்களுக்கு இருக்குமென்று அந்த ஆலோசகர்கள் சொன்னதாக வம்பானந்தா அடித்து விடுகிறார். இது உண்மை என்றால் ரசிகர்களைப் பற்றி ரஜினி எவ்வளவு கேவலமாக கருதுகிறார் என்று தெரிகிறது. நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள் தங்களது தனிமையை, ‘சுதந்திரத்தை’ இழந்து விடுவார்களென ஒரு ஒப்பாரியை எல்லா நடிகர்களும் வைப்பார்கள். அதாவது அந்த நட்சத்திர அந்தஸ்தினால் வரும் பணம் மட்டும் அவர்களுக்கு தேவை. அந்த பணத்தை தரும் ரசிகர்கள் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. ரஜினி ரசிகர்களை சந்திக்காமல் இருப்பதும் இப்படித்தான். ஆனாலும் சிவாஜி, எந்திரன், கோச்சடையான் என்று தனது சினிமாக்கள் பெருவெற்றி பெற்று வசூலில் தனது கழிவுத்தொகை கொட்ட வேண்டுமென்றால் மட்டும் அவர் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பார். மற்ற நேரங்களில் அந்த அரசியல் ஆலோசகர்கள் மேல் பழியைப் போட்டு பதுங்கிவிடுவாராம். ரஜினி ரசிகனே இதைக் கேட்டாவது நீ ‘தற்கொலை’ செய்து கொள்வாயா?

பாசிச ஜெயலலிதாவின் ஊடக பாதந்தாங்கியாக செயல்படும் குமுதம் மாமா, ரஜினியை இப்படி ஊதிப்பெருக்கினால் அம்மா கோவித்துக் கொள்ள மாட்டாரா என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? கவலையே வேண்டாம், அதற்கும் இந்த விபச்சாரத் தரகர்கள் ஒரு பதிலை கச்சிதமாக வைத்திருக்கிறார்கள். அதாவது ‘ரஜினி இப்படி தனி ஆவர்த்தனம் காட்டி, தனிக் கட்சி கண்டால் அது அதிமுகவிற்கு பாதகமில்லையாம். எதிர்க்கட்சிகளின் வாக்குகளைத்தான் ரஜினி பிரிப்பார் என்பதால் புரட்சித் தலைவி குஷியில் இருக்கிறார்’ என்று தில்லானா மோகனாம்பாளின் வைத்தி விஞ்சும் புரோக்கர் விசுவாசத்தில் புல்லரிக்கிறது குமுதம் ரிப்போர்ட்டர்.

ஆக ரஜினிக்கு தேவையான இமேஜ் பில்டப் ஒருபுறம், மறுபுறம் அதனால் புரட்சித் தலைவிக்கு பாதிப்பில்லை என்று சமாதானம் வேறு. ஒரு விபச்சாரத் தரகன் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்பது இதுதானில்லையா?