privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?

யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?

-

டந்த பிப்ரவரி 21ம் தேதி ஹைதரபாத் தில்சுக்நகரின் சந்தைத் தெருவில் 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன; 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்; 119 பேர் காயமடைந்தனர்.

இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை தேடுவதற்கான புலன் விசாரணை நடந்து வருகிறது.

“அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து ஏதாவது எதிர்வினை வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்” என்றார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே. அதன் மூலம் ஹைதரபாத் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் அரசு அமைப்புகளின் முன் முடிவை வெளிப்படுத்தினார்.

2007ம் ஆண்டு ஹைதரபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பைப் பற்றி விசாரணை நடத்திய அதே ஹைதராபாத் போலீஸ் இப்போதும் விசாரணை நடத்துகிறது. மெக்கா மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு முஸ்லீம் பகுதிகளில் ரெய்டு நடத்தி, பல முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்தது போலீஸ். அவர்கள் தனியார் பண்ணை வீடுகளில் சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆர்.டி.எக்ஸ் ஆயுதங்கள், வெடிமருந்து, ஜிகாதி பிரசுரங்கள், செல்போன் பதிவுகள், மடிக்கணினிகள், பயங்கரவாத பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு போய் வந்த விபரங்கள் இவற்றை கைப்பற்றியதாக போலீஸ் சொன்னது.

அவை அனைத்தும் பொய் என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளன.

இப்போது தில்சுக் நகர் குண்டு வெடிப்புக்குப் பிறகும் முகமது ரயீசுதீன், முகமது அஸ்மத், அப்துல் ரஹீம், அப்துல் கரீம் என்ற அதே இளைஞர்களை போலீஸ் கைது செய்திருக்கிறது. மெக்கா மசூதி வழக்கில் நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டதோடு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டிருக்கிறது.

மெக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக இந்த இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களை தவிர எந்த ஒரு ஆதாரத்தையும் போலீசால் தர முடியவில்லை என்று குறிப்பிட்டது. அந்த வாக்குமூலங்கள் கொடூரமான சித்திரவதையின் மூலம் பெறப்பட்டிருந்தன.

2007 மெக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக போலி வழக்குகளை உருவாக்கிய போலீஸ் அதிகாரிகள் இது வரை தண்டிக்கப்படவில்லை. சென்ற முறை உண்மையான விசாரணைக்கு தடையாக இருந்த இந்த அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால்தான் தில்சுக் நகர் குண்டு வெடிப்பு பற்றிய விசாரணை நியாயமாக நடைபெற முடியும்.

சித்திக்கி
படம் : தி இந்து நாளிதழ்

இதற்கிடையில் ஹைதராபாத் பத்திரிகைகள் பெயர் குறிப்பிடாத போலீஸ்காரர்களை மேற்கோள் காட்டி குண்டு வெடிப்பில் முஸ்லீம்களின் தொடர்பு பற்றி வதந்திகளிலும் ஊகங்களையும் பரப்பி வருகின்றன.

2012 ஆகஸ்ட் மாதம் பெங்களூரு போலீசின் குற்றவியல் பிரிவு இதே ஹைதராபாத் போலீஸ் உதவியுடன் 14 இளைஞர்களை பயங்கரவாதிகள் என்று கைது செய்தது. அவர்களில் ஒருவரான முதில்-உர்-ரஹ்மான் சித்திக்கி என்ற டெக்கான் ஹெரால்ட் நிருபர் கடந்த 25ம் தேதி பெங்களூரின் பார்ப்பன அக்ரஹாரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

26 வயதான சித்திக்கி, ‘போலீஸ் முஸ்லீம்களுக்கு எதிராக அமைப்பு ரீதியான பாகுபாட்டை கடைப்பிடிக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். “நான் முஸ்லீமாக இருந்திருக்கா விட்டால் அவர்கள் என்னை பயங்கரவாதி என்று ஒரு போதும் கைது செய்திருக்க மாட்டார்கள். ஊடகங்களும் போலீசும் முஸ்லீம்கள் பற்றிய பொதுப்புத்தியுடன் நடந்த கொள்கின்றன. இது எனக்கு மட்டுமான பிரச்சனை இல்லை. என்னைப் போல நூற்றுக் கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.” என்றார் அவர்.

‘சித்திக்கியும் அவருடன் கைது செய்யப்பட்ட இளைஞர்களும் முக்கியமான இந்துத்துவா தலைவர்களையும் பத்திரிகையாளர்களையும் கொல்லத் திட்டமிட்டதாக’ குற்றம் சாட்டப்பட்டனர். சித்திக்கியின் சார்பில் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று போராடியதைத் தொடர்ந்து அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கபட்டிருக்கிறார். மற்ற இளைஞர்களுக்கு அப்படிப்பட்ட ஆதரவும் வாய்ப்பும் கிடைக்காமல் இன்னும் சிறையில் உள்ளனர்.

“பெங்களூரு போலீசையும் பத்திரிகைகளையும் பொறுத்த வரை நான்தான் சதித்திட்டத்தின் தலைவன். நான்தான் தலைவன் என்றால் மற்றவர்கள் ஏன் இன்னமும் சிறையில் இருக்கிறார்கள்? அவர்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் சித்திக்கி.

சித்திக்கியும் மற்ற 14 பேரும் கைது செய்யப்பட்ட போது போலீஸ் சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்றவில்லை; அவரது குடும்பத்தினருக்கு கைது குறித்து தகவல் சொல்லவில்லை; எதற்காக கைது செய்கிறார்கள் என்ற காரணத்தை சொல்லவில்லை. 30 -40 வெள்ளை தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்; அவற்றுள் ஒன்றில் முன் தேதியிட்ட போலி கைது அறிவிப்பு தயாரிக்கப்பட்டது.

சித்திக்கியுடன் விடுவிக்கப்பட்ட 28 வயதான நல்பாண்ட் ஒரு தனியார் நிறுவனத்தின் டெக்னிஷியனாக வேலை செய்பவர். “நேற்று இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. நான் இயல்பு நிலைக்கு திரும்புவேனா என்று தெரியவில்லை. கடவுளின் கருணை இருந்தால் நான் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்” என்றார்.

“போலீஸ் கைது செய்யும் போது குற்றம் சாட்டப்பட்டவர்களை முஸ்லீம் குல்லாய் அணியச் செய்து வீட்டை விட்டு வெளியில் வரச் செய்தார்கள்” என்கிறார் அவர்.

போலீஸ் துறைகளிலும் புலனாய்வு அமைப்புகளிலும் ஊடுருவி இருக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்பான்மை எந்த ஒரு வன்முறை சம்பவத்துக்கும் முஸ்லீம் இளைஞர்களை குற்றம் சாட்டி, அவர்களை கைது செய்து துன்புறுத்துவதையும், சித்திரவதை செய்வதையும் வழக்கமாக்கியிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த காவி பயங்கரவாத சம்பவங்களில் ஆரம்பத்தில் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்து துன்புறுத்தப்பட்டு பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு அவை இந்து அமைப்புகளின் பயங்கரவாதம் என்று செயல் என்று நிரூபணமாகியிருக்கின்றன.

  1. அஜ்மீர் தர்க்காவில் அக்டோபர் 11, 2007ல்  குண்டு வெடித்து 3 பேர் கொல்லப்பட்டனர்.இது ஹூஜி, எல்-இ-டி அமைப்புகளைச் சேர்ந்த ஜிகாதி பயங்கரவாதிகளின் கைவண்ணம் என்ற புலனாய்வு அதிகாரிகளின் கதையை பத்திரிகைகளும் ஆர்வத்துடன் பரப்பி வந்தன. கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் ஹபீஸ் ஷமீம், குஷிபுர் ரஹ்மான், இம்ரான் அலி ஆகியோர் அடங்குவர்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் போலீஸ் தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் பட்டிதார் என்ற மூன்று பேரை கைது செய்தது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான குப்தாதான் அந்த குண்டை வெடிக்கச் செய்த மொபைல் தொலைபேசியையும் சிம் கார்டையும் வாங்கினார் என்று தெரிய வந்தது. குண்டு வெடிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட சுனில் ஜோஷி திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் என்று அறிவிக்கப்பட்டது.
  2. மே 18, 2007ல் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்; 50 பேர் காயமடைந்தனர்.’உள்ளூர் உதவியுடன் ஹர்கத்-உல்-ஜிகாத்-எ-இஸ்லாமி (HuJI) என்ற அமைப்புதான் இதைச் செய்திருக்க வேண்டும்’ என்று ஹைதராபாத் போலீஸ் சொன்னது. 80 முஸ்லீம்கள் அடைத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு 25 பேர் குற்றம் செய்ததாக ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டனர்.ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ‘அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான மொபைல் போன்-சிம் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன’ என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. ‘பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி. வெடிமருந்து கலவை இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் விகிதத்திலானது’ என்றும் தெரிய வந்தது.
    இப்ராஹிம் ஜூனைத், ஷோயிப் ஜாகிர்தார், இம்ரான் கான், முகமது அப்துல் கலீம் உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திரா கல்சங்காரா பற்றிய தகவல் சொல்பவர்களுக்கு ரூ 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஜூன் 2010ல் போலீஸ் அறிவித்தது. லோகேஷ் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டார்.
  3. அக்டோபர் 2009ல் மார்கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 2010ல் தேசிய புலனாய்வு நிறுவனம் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் 11 பேர் மீது கோவாவில் உள்ள பஞ்சிம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
  4. செப்டம்பர் 8, 2006 அன்று மகராஷ்டிராவின் மாலேகானில் ஒரு மசூதிக்கு அருகில் மூன்று குண்டுகள் வெடித்து 37 பேர் கொல்லப்பட்டனர்; 100 பேர் காயமடைந்தனர்.சிமி அமைப்பைச் சேர்ந்த சல்மான் பார்சி, பரூக் இக்பால் மக்தூமி, ராயிஸ் அகமது, நூருல் ஹூடா சம்சுதோஹா, ஷபீர் பேட்டரிவாலா ஆகியோர் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால், முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முகமது ஜாகித் அந்த நாளன்று மாலேகானிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார். ஷபீர் மசியுல்லா குண்டு வெடிப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பே போலீஸ் காவலில் இருந்தார். நேரடி சாட்சியங்கள் கொடுத்த தகவல்களின் படி குண்டு வைத்தவர்கள் தாடி இல்லாதவர்கள், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக தாடி வைத்திருப்பவர்கள்.
    2008ம் ஆண்டு 7 பேர் உயிரிழந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சந்தேகம் இந்து பயங்கரவாதிகள் பக்கம் திரும்பியது. இந்த சம்பவத்துக்கும் ஆரம்பத்தில் இந்தியன் முஜாகிதீன் போன்ற குழுக்கள் சந்தேகிக்கப்பட்டன.பின்னர் அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரீய ஜாகரன் மஞ்ச் அமைப்புகளைச் சேர்ந்த பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோகித் மற்றும் ஸ்வாமி அமிர்தானந்த் தேவ் தீர்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் மோட்டர் சைக்கிள் குண்டை வெடிக்கச் செய்ய பயன்படுத்தப்பட்டது. விசாரணையின் போது, ‘மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்கும் அவர்தான் வெடிமருந்து கொடுத்தாக’ புரோகித் சொன்னார். ஆனால் ஹைதராபாத் போலீஸ் ஹூஜி உறுப்பினர்களை கைது செய்து வைத்திருந்ததால் இந்த விபரத்தை வெளியிட வேண்டாம் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு கேட்டுக் கொள்ளப்பட்டது.
  5. பிப்ரவரி 18, 2007ல் சம்ஜௌதா எக்ஸ்பிரசில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பெரும்பான்மை பாகிஸ்தானியர் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.ஆரம்பத்தில் எல்-இ-டியும் ஜே-இ-எம்மும் குற்றம் சாட்டப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மத் அலியும் உண்டு.ஆனால், தடயங்கள் வலது சாரி இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களை சுட்டிக் காட்டின. மூன்று மாதங்களுக்குப் பிறகு மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே முறை இங்கும் பயன்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளான சந்தீப் டாங்கேவையும் ராம்ஜியையும் போலீஸ் தேட ஆரம்பித்தது.
  6. ஜூன் 4, 2008 அன்று, தானே சினிமா குண்டு வெடிப்பு தொடர்பாக ஹிந்து ஜன்ஜாக்ரிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்புகளைச் சேர்ந்த ரமேஷ் ஹனுமந்த் கட்கரியும் மங்கேஷ் தினகர் நிகமும் கைது செய்யப்பட்டனர். ஜோதா அக்பர் திரைப்படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பாக அந்த குண்டு வெடிப்பு திட்டமிடப்பட்டிருந்தது.
  7. இந்து பயங்கரவாதம்ஏப்ரல் 2006ல் நந்தாதில் உள்ள குண்டு உற்பத்தி பட்டறையில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என் ராஜ்கோண்ட்வாரும் எச் பன்சேவும் தவறுதலாக வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டனர்.ஆகஸ்ட் 2006ல் அதே அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ராவும் பூபிந்தர் சிங்கும் கான்பூரில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டனர்.
    இவற்றைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் மசூதிகளில் குண்டுகள் வெடித்தன.  நந்தாதில் தயாரிக்கப்பட்ட குண்டு அவுரங்காபாத் மசூதிக்கானது என்று தெரியவந்தது. சம்பவ இடத்தில் அவுரங்காபாத் வரைபடமும் பொய் தாடிகளும் முஸ்லீம் ஆண் உடைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.
  8. 2002-03ல் போபால் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்கும் கருவி உள்ளூர் இந்துத்துவா தொண்டர்கள் ராம்நாரயன் கல்சங்கரா, மற்றும் சுனில் ஜோஷியுடன் தொடர்புடையவை என்று தெரிந்தன.

குண்டுவெடிப்பு, பயங்கரவாதம் என்றால் சினிமா கதைகளில் மட்டுமல்ல நாட்டின் போலீஸ் அமைப்புகளுக்கும் உடனே முசுலீம் இளைஞர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். இந்த நினைவு பலநூறு அப்பாவி முசுலீம் இளைஞர்களை துன்புறுத்தி வருடக்கணக்கில் சிறையில் அடைப்பது என்று ஒரு பெரும் அடக்குமுறையை அமல்படுத்துகிறது. இந்தியாவின் அதிகார அமைப்புகள் அனைத்தும் இந்துமயமாகி இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்? உண்மையில் இதுதான் குண்டு வெடிப்புகளை விட ஆபத்தான பயங்கரவாதம்!

மேலும்  படிக்க
Hyderabad blasts activists question presumptive probe
I hope nobody goes through what I did
Media, police should be more sensitive towards dalits and muslims – Siddiqui
Hindu terror – the mirror explodes