privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்அக்கிரகாரம், சேரியைப் பிரித்த அரசியல்வாதி யார்?

அக்கிரகாரம், சேரியைப் பிரித்த அரசியல்வாதி யார்?

-

விசுவ ஹிந்து பரிசத் மற்றும் அதனுடைய கிராமக் கோயில் பூசாரிகள் சங்கம் இணைந்து திருச்சியில் ஹிந்து மறுமலர்ச்சி மாநாடு ஒன்றை  ஞாயிற்றுக் கிழமை (03/03/2013) நடத்தியுள்ளன. இம்மாநாட்டில் இதுவரை ‘காமெராவில் சிக்காத’ சாமியார்களும், ‘லெட்டர் பேடு’ கட்சி ஒன்றின் ஏகபோக உரிமையாளரும் அரசியல் ரியல் எஸ்டேட் புரோக்கரும் அக்கட்சியின் ஒரே தலைவரும் ஒரே தொண்டருமான சுப்பிரமணிய சுவாமியும் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதல்லவா, எனவே “ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து தீயாய் வேலை பாக்கணும் கொமாரு” என்பதே மாநாட்டின் நோக்கம் போல.

மேற்படி ‘தத்துவ’த்தின் அடிப்படையில் உரையாற்றிய வி.எச்.பியின் அகில உலக ஆலோசகர் வேதாந்தம், ‘சாதி அடிப்படையில் நம்மைப் பிரித்தவர்கள் அரசியல்வாதிகள்’ என்று பேசியுள்ளார். மேலும், “அரசியல்வாதிகள் மக்களுக்கு கடமையைச் சொல்லித் தருவதில்லை. மாறாக போராட சொல்லித் தந்திருக்கிறார்கள். என்றைக்கு கடமையைச் சொல்லித் தருகிறார்களோ அப்போது தான் நாடு சிறப்பாக இருக்கும்” என்றும் உரையாற்றியுள்ளார்.

தண்ணீரில் பூசாரிகள்

பிரம்மாவின் தலையிலிருந்து பார்ப்பானும், காலில் இருந்து சூத்திரனும் தோன்றினர் என்றும் சாதிவாரியான தண்டனைச் சட்ட தொகுப்பான மனுஸ்மிருதியை எழுதிய மனுவும், ‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’ என்றும் ‘வர்ணக் கலப்பு ஏற்படுவது அதர்மம் தலையெடுப்பதாகும்’ என்றும் கீதோபதேசம் சொன்ன கிருஷ்ணனும், சூத்திரன் தவம் செய்யலாகாது என்று சம்பூகனின் தலையைக் கொய்த ராமனும் கேடு கெட்ட அரசியல்வாதிகள் என்று நாங்கள் சொல்லவில்லை; வேதாந்தமே சொல்கிறார். இந்த ‘அரசியல்வாதிகள்’ எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள்? இந்த ‘அரசியல் தலைவர்கள்’ எந்தக் கட்சியினரால் வழிபடப்படுகிறார்கள்?

அக்கிரகாரத்தில் அய்யரும் ஊருக்கு வெளியே சேரியில் பறையரும் வாழ வேண்டும் என்று நாடெங்கும் குறுக்கும் நெடுக்குமாக எல்லைக் கோடுகள் போட்டது அரசியல்வாதிகளென்றால் அவர்கள் தி.மு.கவா அ.தி.மு.கவா அல்லது வேறு எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களென்று வேதாந்தம் விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். காற்றின் திசையைக் கூட துல்லியமாக கணக்கிட்டு தலித்துகளைத் தீண்டிய காற்று தம்மைத் தீண்டலாகாது எனும் சாதி அடிப்படையில் குடியிருப்புகளை அமைத்துக் கொடுத்த ‘கருணாநிதி’ யார் என்று வேதாந்தம் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும்.

மதுரை ஆதீனம் உள்ளிட்ட சைவ மடங்களில் சைவப் பிள்ளைகளே ஆதீனமாய் இருக்க வேண்டுமென்றும், காஞ்சி (‘கும்மோண’) மடத்துக்கு ஸமர்த்தப் பார்பனர்களே தலைமையேற்க வேண்டுமென்றும் மரபுகளை ஏற்படுத்திய அரசியல்வாதியின் பெயர் என்ன ஜான் பாண்டியனா? ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் பார்ப்பனர் அல்லாதோர் கருவறைக்குள் நுழையக் கூடாதென்றும், கருவறைக்குள் நுழையும் ‘புனிதமும் சுத்தபத்தமும்’ காஞ்சீபுரம் தேவநாதன் போன்ற தூய பார்ப்பனர்களுக்கே உரித்தானதென்றும் விதிகளை உருவாக்கிய அரசியல்வாதியின் பெயர் என்ன திருமாவளவனா? வேதாந்தம் கொஞ்சம் விரிவாய்ப் பேசியிருக்கலாம்.

ஹிந்துக்கள் எல்லோரும் ஒற்றுமையாய்ச் செயல்பட வேண்டுமென்று வேதாந்தம் விருப்பம் தெரிவித்துள்ளார். அர்ச்சகர் சங்க மாணவர்கள் ஆகமவிதிப்படி அமைந்த கோயில்களில் பணியற்றி ஒற்றுமையாகச் செயல்பட விடாமல் அழகிரியா தடுக்கிறார்? தமிழை நீச பாஷை என்று சொல்லி கருவறைக்குள் நுழைய விடாமல் தடுத்தவர்கள் பெயர் தீட்சிதர்களா இல்லை தீப்பொறி ஆறுமுகமா? வேதாந்தம் குழப்புகிறது. ஆனால், வேதாந்தத்தின் பேச்சைக் கேட்ட கூட்டத்தினர் தெளிவாகவே இருக்கிறார்கள். ஹரியானாவில் மாட்டுத் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துகளைக் கொன்று போட்டு தலித்துகளை இந்த ஹிந்து ஜோதியில் எரித்து பொசுக்கும் அரசியல்வாதிகள் விசுவ இந்து பரிஷத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவர்கள் தான் அவர்கள்.

வேதாந்தம் சொன்னபடி ஹிந்துக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கும்  இழிந்த பெருமைகளுக்கெல்லாம் உரியவர்கள் பாரதம் கண்ட மாபெரும் ரிஷிகளும், பார்ப்பன கடவுளர்களும், அவர்களின் இன்றைய அவதாரங்களான இந்துத்துவ இயக்கத்தினரும் தான். அதனால் தான் இந்த நிலைமைகளுக்குக் காரணமானவர்களின் ரிஷிமூலத்தை வேதாந்தம் கிண்டவுமில்லை,  அந்தப் பழம் பெரும் ‘அரசியல் கட்சியான’ பார்ப்பன இந்து மதத்தின் பெயரைக் கிளரவுமில்லை. உண்மையில் பார்ப்பனிய இலக்கியங்கள் கூறும் ரிஷிமூலத்தின் கதைகள் ஷகிலா படங்களோடு போட்டி போடும் அருகதை கொண்டவை! அதனால்தான் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்று பழமொழியே உருவாக்கியிருக்கிறார்கள்.

ஹிந்துக்கள் கடமையைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும்; பலன்களை நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா அறுவடை செய்து கொள்ளும் என்கிறார் வேதாந்தம். எது அந்தக் கடமை?

மலமள்ளுவதும், சாவுக்குச் சேதி சொல்வதும், மாட்டுத் தோல் உரிப்பதும், செருப்பு தைப்பதும், முடிவெட்டுவதும்,  சங்கராச்சாரியாவதும் வேதாந்தத்தின் பார்வையில் சரி நிகரான ‘கடமைகள்’. எனவே, ஜனநாயகம், உரிமை என்றெல்லாம் பேசிக் கொண்டிராமல் பஞ்சமன் மலமள்ளிக் கொண்டேயிருக்க வேண்டும்; பார்ப்பனன் சங்கராச்சாரியாகவோ, கலெக்டராகவோ இல்லை என்.ஆர்.ஐயாகவோ வேண்டும்.  அதாவது அவாள் பல்லக்கில் உலா வருவதும், நாம் அந்தப் பல்லக்கை தூக்கி சுமப்பதும்- இதற்குப் பெயர் தான் ‘கடமையாம்’. இதை மறந்து பல்லாக்கில் ஏறும் உரிமையை பிறர் கேட்க ஆரம்பித்தது தான் நாடு சீரழிந்து போனதற்குக் காரணம் என்கிறார் வேதாந்தம்.

இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளில் இருக்கும் சொரணை கெட்டவர்கள் அவ்வமைப்புகளில் சேர்ந்து ‘கடமையை’ ஆற்றிக் கொண்டிருப்பது போல் மற்றவர்களும் செய்ய மறுப்பதால் தான், தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுத்து விட்டது  என்கிறார் வேதாந்தம்.

கூட்டத்தில் பேசிய அக்கீஸ்டு ஜெயேந்திரன், ‘இந்துக்கள் ஒன்றிணைந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி விடலாம்’ என்று பேசியுள்ளார். ‘இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதன் மூலம்தான் பொறுப்புள்ள அரசு ஏற்படும்’ என்றும் பேசியுள்ளார். அவரவர்க்கு அவரவர் கவலை; சங்கர ராமன் கொலை வழக்கு வேறு மார்ச் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இருக்கும் அரசோ, நீதிபதியோ பொறுப்பற்றவர்களாக இருந்து தொலைத்தால்?

சரி இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பது என்பது ஓட்டுப் போடுவதும் ராமர் கோவில் கட்டுவதும்தானா? அக்கிரகாரத்து ஐயர் பெண்ணை சேரியைச் சேர்ந்த கட்டிங்காளையான ஒரு அருந்ததியர் இளைஞனுக்கும், திருவரங்கரத்து ஐயங்கார் பெண்ணை ஒரு பறையருக்கும், இப்படி நாயுடு, முதலியார், ரெட்டியார், செட்டியார் வகையறாக்கள் வன்னியர், தேவர், பள்ளர், நாடார் என்று கலந்தாலும் கூட ‘இந்துக்கள்’ ஒற்றுமையாக ஒன்றிணையலாமே? யார் தடுத்தது? இந்த தடுப்பை தண்டனைகள் மூலம் கட்டிக்காக்கும் அரசியல்வாதிகள் யார்?

போகட்டும், வேதாந்தம் சொல்லியிருப்பதில் முக்கியமானது என்னவென்றால் ‘அரசியல்வாதிகள் கடமையை சொல்லித் தரவில்லை, போராட மட்டும் சொல்லி தந்திருக்கிறார்கள்’ என்பதுதான். இதைப் புரிந்து கொள்வதில் மறைபொருள் ஏதுமில்லை. அதாவது நாட்டில் உள்ள பிரச்சினைகள் பலவற்றுக்கு பல்வேறு பிரிவு மக்களும் போராடுகிறார்கள். இந்தப் போராட்டம்தான் வேதாந்தத்திற்கு எரிச்சலைத் தருகிறது. மக்கள் தமது உரிமைகளுக்கு போராடாமல் பார்ப்பனியம் வகுத்தளித்திருக்கும் கடமையை மட்டும் செய்து வந்தால் நாட்டில் தர்மம் தழைத்தோங்கும் என்பது பார்ப்பனிய வேதாந்தம் தொட்டு இந்துத்துவ வேதாந்தம் வரை குறியாகவும் வெறியாகவும் இருக்கிறார்கள். எனில் இந்த தருமத்தை குழி தோண்டி புதைப்பதில் நாமும் கொலவெறியோடு இருக்கிறோம் என்பதை சங்கபரிவார வானரங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.