privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஐபிஎல்: மங்காத்தாவே இனி பாரதமாதா !

ஐபிஎல்: மங்காத்தாவே இனி பாரதமாதா !

-

இந்தியன் பப்பெட்ஸ் லீக்
ஐ.பி.எல் – இந்தியன் பப்பெட்ஸ் லீக் (நன்றி : இந்தியா டுடே)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்கள் பல இலட்ச ரூபாய்களை சூதாட்டக்காரர்களிடம் வாங்கிக் கொண்டு ‘ஸ்பாட் ஃபிக்சிங்’ மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சென்ற வருடம் பணம் வாங்கிக் கொண்டு சில வீரர்கள் ஆட்டத்தை விட்டுக்கொடுத்ததை இந்தியா டிவி அம்பலப்படுத்தியிருந்தது. அவர்களெல்லாம் புதுமுகங்கள், மூத்த வீரர்கள் இல்லை என்ற குறையை ஸ்ரீசாந்த் போக்கி விட்டார்.

ஐபிஎல்லின் ஒரு சீசனது மதிப்பு ரூ 20,000 கோடி இருக்குமென்றால் அதன் மொத்த மதிப்பு ரூ  50,000 கோடியைத் தாண்டுகிறது. 9 அணிகளின் உரிமையாளர்களும் நாடறிந்த தரகு முதலாளிகள்.

குற்றங்களையே பாதையாக்கி ரிலையன்ஸின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அம்பானியின் மும்பை இந்தியன்ஸ், ஊழியர்களின் ஊதியத்தையும் பொதுத்துறை வங்கிகளையும் கொள்ளையிட்ட மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ், சிமெண்ட் மூட்டையில் பகற்கொள்ளையனும், ஆந்திரத்து ஓய்.எஸ்.ஆர்.ரெட்டியுடன் சேர்ந்து கொள்ளையடித்த வழக்கில் விசாரிக்கப்படுபவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ், மக்கள் பணம் ரூ 25,000 கோடியை ஏப்பம் விட்டிருக்கும் சஹாரா நிறுவனத்தால் வாங்கப்பட்டிருக்கும் புனா அணி… என ஒவ்வொரு அணி முதலாளியும் கிரிமினல்தான்.

ஸ்பாட் பிக்சிங்
நன்றி : டெக்கான் குரோனிக்கிள்

தற்போதைய சூதாட்டத்தின் பின்னே தாவூத் இப்ராகிம் இருப்பதாகவும், அது தேசத்துக்கு ஆபத்து என்றும் இந்த விவகாரத்துக்கு முலாம் பூசப்படுகிறது. பங்குச் சந்தை, நிதிச்சந்தை தொடங்கி போதைமருந்து, மாபியா வேலைகள் வரையிலான அனைத்தும் இரண்டறக் கலந்த உலக நிதிமூலதனத்தின் சூதாட்டக்களத்தில் ஐ.பி.எல் ஒரு கவர்ச்சிகரமான சூதாட்டம்.

விளையாட்டு என்ற சொல்லின் பொருளையே ரத்து செய்து, அதனுடன் சேர்ந்திருந்த தேசியம் தொடர்பான ஜிகினா வேலைகளையும் உதிர்த்துவிட்டு, வீரர்களை கூலிப்படையாகவும் முதலாளிகளை அணியின் தலைவர்களாகவும் மாற்றிவிட்ட இந்த ஐ.பி.எல் இல் விளையாட்டுணர்வு என்பதற்கு கடுகளவும் இடம் கிடையாது. புரவலர்கள், தொலைக்காட்சி உரிமை, விளம்பரங்கள், நிறுவனங்களின் தூதர்கள், ஆபாச நடனங்கள் என்று ஐபிஎல் முழுவதும் பணம்தான் ஆட்சி செய்கின்றது. ஒரு சூதாட்டத்துக்குரிய விறுவிறுப்பை வழங்கும் வகையில்தான் T20 போட்டியின் விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

வீரர்களை விலைக்கு வாங்குவது, ஏலம் விடுவது, சிண்டிகேட் அமைப்பது உள்ளிட்டு ஐபிஎல்லின் அமைப்பு முழுவதும் மர்மங்களால் ஆனது. நாட்டுப்பற்று, விளையாட்டுணர்வு ஏதும் இல்லாமல் அதிக விலை கொடுக்கும் முதலாளிக்கு தன்னை விற்றுக் கொள்ளும் ஒரு ஆட்டக்காரன், ஒரு சூதாடிக்கு தன்னை விற்றுக்கொண்டதில் என்ன ஒழுக்க கேடு வந்துவிட்டது? நாட்டுப்பற்று, இறையாண்மை, நேர்மை, ஒழுக்கம் போன்ற எல்லா விழுமியங்களையும் பத்தாம்பசலித்தனமானவை என்றும் காலத்துக்கு ஒவ்வாதவை என்றும் கழித்துக்கட்டி வரும் மறுகாலனியாக்க சூழலில் கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்கம் கெட்டுவிட்டது பற்றி போலியான ஒரு அதிர்ச்சியை தெரிவிப்பதை ஒரு நகைச்சுவை என்றும் சொல்லலாம். பித்தலாட்டம் என்றும் அழைக்கலாம்.

சென்ற ஐபிஎல்லின் சூதாட்ட வர்த்தகம் ரூ 5000 கோடி  என்றார்கள். இந்த ஆண்டு அது இரண்டு மடங்காகியிருக்கும். இங்கிலாந்து, வளைகுடா, பாகிஸ்தான், மும்பை என்று ஒருங்கிணைத்து சூதாடும் இந்த நிறுவனங்கள் தொழில் நுட்ப புரட்சியின் உதவியோடு அதை பரவலாக கொண்டு சென்றிருக்கின்றன.

தற்போதைய செய்திகளின்படி சூதாடியவர்கள் கொலை, திருட்டு, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடும் செய்திகள் ஏராளம் வருகின்றன. தங்களுடைய கிரிமினல் பண்பாட்டை மக்கள் மத்தியில் இறக்கி விட்டு வெற்றி கண்ட மகிழ்ச்சியில் ஆளும் வர்க்கம் திளைக்கிறது. பல்லாயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் சர்வகட்சி ஓட்டுப் பொறுக்கிகளும், அதிகார வர்க்கமும், அந்த ஊழல்களில் ஆதாயம் பெற்ற முதலாளிகளுக்கும் கூட இந்த விவகாரம் நிச்சயம் மகிழ்ச்சி அளித்திருக்கும். ஊழல், ஒழுக்க கேடு, கொள்ளை, சூது போன்ற தேசிய விளையாட்டுகளில் தாங்கள் மட்டும் ஈடுபடவில்லை என்ற அவர்கள் காட்ட முடியும். இதைப் பணம் கட்டி வேடிக்கை பார்த்து, கைதட்டுவதற்கு கோடிக்கணக்கில் மக்கள் இருப்பதால் இனி மங்காத்தாவே பாரதமாதா என்று அவர்கள் அறிவிக்கவும் முடியும்.
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________