privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கயாசின் மாலிக்கை அழைத்தால் என்னடா பிரச்சினை ?

யாசின் மாலிக்கை அழைத்தால் என்னடா பிரச்சினை ?

-

டலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய கருத்தரங்கில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்றதை காந்தி பெயரை வைத்துக் கொண்டு கொலைவெறி ஆட்டம் போடும் காங்கிரசும், பலான விசயம் மற்றும் பயங்கரவாதம் இரண்டையும் விடாது செய்யும் பாரதீய ஜனதா கட்சியும் கண்டித்துள்ளன.

யாசின் மாலிக்
யாசின் மாலிக்

“வெளிநாடுகளின் தொடர்பு இருப்பதாக யாசின் மாலிக் பலமுறை கைது செய்யப்பட்டவர். இந்தியாவின் இறையாண்மையை கேள்வி கேட்டு காஷ்மீரத்தை துண்டாடத் துடிக்கும் அவர், கடலூருக்கு எப்படி வந்தார்? கூட்டம் நடத்தியவர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அவரை கடலூருக்கு அழைத்து வர உதவிய இயக்கங்கள் எவை? இவற்றையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் விசாரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு தமிழகத்தின் அமைதியைக் குலைக்க விரும்பும் சக்திகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் தூவும் விஷவித்துக்கள் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து தேசபக்தியுள்ள எல்லா கட்சிகளும் இதனை எதிர்க்க வேண்டும்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“இலங்கைத் தமிழர் உரிமை காக்கும் போராட்டம் என்று கூறி காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை பங்கேற்கச் செய்திருப்பது தமிழர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தலைகுனியச் செய்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிலேயே இரண்டாம்தர குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். ஜாதி, மதம் என்ற வேறுபாடுகள் இன்றி ஈழத் தமிழர் என்ற அடையாளத்துடன் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஆனால், சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் மற்ற மாநிலங்களைவிட அதிக சலுகைகள் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதற்காக இந்திய அரசியல் சட்டத்தில் 370 என்ற சிறப்பு விதியே உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி சலுகைகள் வழங்கினாலும் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் மட்டுமே வாழ முடியும் என இந்துக்களை துரத்தியடித்து பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர் யாசின் மாலிக். எனவே, இலங்கைத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை காஷ்மீர் பிரிவினைவாதிகளோடு இணைத்துப் பார்ப்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். மரக்காணம், தருமபுரி போன்ற பகுதிகளில் கலவரம் ஏற்பட்டபோது அங்குச் செல்ல தமிழகத் தலைவர்கள் சிலருக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவைத் துண்டாட நினைக்கும் யாசின் மாலிக் போன்றவர்களை தமிழகத்தில் அனுமதித்தது அபாயகரமானது” என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பேசவில்லையே தவிர அவர் இவர்களை விட இன்னும் ஒருபடி அதிகம் உறுமக்கூடியவர். மேற்கண்ட அறிக்கைகளின் படி காங்கிரஸ், பா.ஜ.க இரண்டும் நாங்கள் பாசிச கட்சிகள்தான் என்பதை ஒரே குரலில் உறுதி செய்கின்றன.

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டம் பிரிவு 370-ன் கீழ் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன, நாட்டின் பிற பகுதி மக்கள் அங்கு போய் நிலம் வாங்கக் கூட அனுமதி இல்லை” என்று பாரதீய ஜனதா தலைவர்கள் புலம்பியிருக்கின்றனர்.

இந்திய இராணுவம் காஷ்மீரில்
காஷ்மீரில் இந்திய இராணுவம்

ஆனால் உண்மையில் காஷ்மீர் மக்கள் கடைக்கு போய் காய்கறி வாங்குவதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் 1 லட்சம் இராணுவப் படையினரை குவித்துள்ளது இந்திய அரசு. வீட்டிலிருந்து கடைக்குப் போவதற்குள் 10 இராணுவ தடை அரண்களை கடந்து போக வேண்டும், அதில் 9-வது அரணில் கூட தடுத்து நிறுத்தப்பட்டு கொல்லப்படலாம் என்ற அடக்குமுறையின் கீழ் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990-ம் ஆண்டு முதல் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் கேட்பாரன்றி மக்கள் மீது அடக்கு முறையை செயல்படுத்தும் உரிமை இந்திய இராணுவ படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1980-முதல் 1 லட்சத்துக்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தான் சிறப்பு சலுகை என்று புளுகுகின்றனர் பாரதீய ஜனதா கட்சியினர்.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக யாசின் மாலிக் ராஜஸ்தான், காஷ்மீர், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார். யாசின் மாலிக்கின் அமைப்பான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, ஜம்மு காஷ்மீரை இந்திய, பாகிஸ்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுவித்து சுதந்திர தேசமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. மத வேறுபாடுகள் அற்று, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அனைத்து மக்களையும் காஷ்மீர் என்ற அடையாளத்துடன் இணைத்து இந்திய/பாகிஸ்தானிய அரசுகளின் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகிறது ஜே.கே.எல்.எப்.

இந்திய அரசால் காஷ்மீர் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஜக்மோகனால் தூண்டப்பட்டு வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகளையும் திரும்ப காஷ்மீரில் குடியேற்ற வேண்டும் என்று பேசி வருபவர் யாசின் மாலிக்.

1983 தில்லியில் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக் கட்சியும், 2002 கலவரத்தில் குஜராத் முசுலீம் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்ற பாரதீய ஜனதாக் கட்சியும்தான் இந்நாட்டின் பயங்கரவாதக் கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அல்ல.

சிங்கள இனவெறி அரசால் ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடும் போது இந்திய அரசால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களே நமது நேச சக்தியாக இருக்க முடியும். ஆனால் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் ஈழத்தமிழரின் உரிமைகளை ஒடுக்கி ஆட்டம் போடும் சிங்கள இனவெறி அரசை ஆதரிப்பவர்கள். புலி ஆதரவாளர்கள், தமிழின ஆர்வலர்கள் பலரும் கூட பாரதிய ஜனதா கட்சி காங்கிரசுக்கு தேவலாம் என்ற சந்தர்ப்பவாத பார்வை கொண்டவர்களே. அப்படிப்பட்டவர்கள் பாஜகவின் காஷ்மீர் குறித்த ஒடுக்குமுறைப் பார்வையை பார்த்தாவது திருந்தட்டும்.

போர்க்குற்றவாளியும், இனப்படுகொலை செய்தவருமான ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து உபசரிக்கும் காங்கிரசும், பாஜகவும்தான் பயங்கரவாதத்திற்கு உதவி செய்கின்ற கட்சிகளே அன்றி யாசின் மாலிக் அல்ல.