privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்புற்றீசலாய் கேரள நகைஅடகுக் கடைகள் - ஏன் ?

புற்றீசலாய் கேரள நகைஅடகுக் கடைகள் – ஏன் ?

-

து கல்லூரியில் சேரும் காலம். கல்லூரியில் விரும்பிய பிரிவு கிடைக்குமா, நண்பர்கள் சேரும் கல்லூரியில் சேர முடியுமா என்று மாணவர்கள் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள். பெற்றோர்களுக்கோ வேறு விதமான கவலைகள். மழைக்காலத்து ஈசல்கள் போல் பல்கிப் பெருகியிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும் சரி, வேறு பாடப்பிரிவுகளுக்கு இடம் கிடைத்தாலும் சரி – கல்விக் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன.

முத்தூட்
ஒட்டுண்ணி அடகு நிறுவனங்கள்.

அப்பாவி பெற்றோர்கள் பாடுபட்டு உழைத்துச் சம்பாதித்த சொத்து பத்துகளை விற்றாவது தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை உத்திரவாதப்படுத்திக் கொடுக்கும் கனவுகளோடும் அந்தக் கனவுகளுக்கும் எதார்த்தத்திற்குமான இடைவெளி ஏற்படுத்தும் நிராசைகளோடும் கல்லூரி வாசல்களை மொய்த்து நிற்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி, தங்கள் குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்க்கவிருக்கும் பெற்றோருக்கும், அடுத்த வகுப்புக்குத் தேர்வாகிக் காத்திருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் கூட இதே விதமான கவலைகள் தான்.

இந்த சமயத்தில் கடந்த வாரம் தினத்தந்தியில் வந்த விளம்பரம் ஒன்று நம்மை ஈர்த்தது – “அறிமுகம், ஸ்கூல் ரீ ஓப்பன் கோல்ட் லோன் மேளா” என்கிற பெயரில் முத்தூட் நகை அடகு நிறுவனம் கொடுத்த விளம்பரம் தான் அது. பார்த்த உடன் அதில் தொனித்த வக்கிரமும் ஆபாசமும் முகத்தில் அறைந்தது. மனிதர்களின் அடிப்படைத் தேவையான கல்வியை விற்றுக் காசு பார்க்கும் கல்வி வியாபாரிகள் அயோக்கியர்களென்றால், இவர்களோ ஒட்டுண்ணிகள். மக்களின் அச்சத்தையும், எதிர்பார்ப்புகளையும், நியாயமான ஆசைகளையும் சுரண்டித் தின்பவர்கள்.

இன்று தமிழகத்தின் ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் பொருளாதார வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக இந்த நகை அடகு நிறுவனங்கள் மாறிப் போயுள்ளன. முத்தூட், முத்தூட் மினி, மணப்புரம் போன்ற பிரபலமான நிறுவனங்கள் நகை அடகு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களிலேயே புற்றீசல் போலப் பெருகி இன்று தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கை விட அதிக கிளைகள் கொண்டவைகளாக தமிழகத்தைச் சுற்றி வளைத்துள்ளன.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவெங்கும் அதிவேகமாக கிளைபரப்பி வரும் இந்நிறுவனங்களுடைய வளர்ச்சியின் இரகசியத்தைப் புரிந்து கொள்ளும் முன் இவர்களின் பிறப்பிடமான மலையாள தேசத்தின் மஞ்சள் பித்து குறித்து அடிப்படையான சில விவரங்களை அறிந்து கொள்வது அவசியம்.

தங்கம்உலகின் மொத்த தங்க நுகர்வில் 50 சதவீதம் இந்தியாவிலும் சீனாவிலும் நடக்கிறது. இந்தியாவின் வருடாந்திர ஆபரணத் தங்க நுகர்வு 2011-ம் ஆண்டில் சுமார் 986 டன்களாகவும், 2012-ம் ஆண்டு சுமார் 800 டன்களாகவும் இருந்தது. இந்தியாவின் மொத்த தங்க நுகர்வில் மூன்றில் ஒரு பங்கு கேரளாவில் நுகரப்படுகிறது. சின்னஞ்சிறு மாநிலமான கேரளத்தில் ஆலுக்காஸ், ஜோஸ், ஜோய், மலபார் கோல்ட், பீமாஸ், ஆலாபட் போன்ற பிரம்மாண்ட சங்கிலித் தொடர் நகைக்கடைகள் திரும்பிய திசைகளிலெல்லாம் கடைகளைத் திறந்துள்ளன.

ஏரென்ஸ் தங்கச் சந்தை (Aeren’s Gold Souk) எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் கொச்சியில் கடந்த 2011 மார்ச்சில் பிரம்மாண்டமான வணிக வளாகம் ஒன்றைத் திறந்துள்ளது. சுமார் 33 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகியுள்ள இந்த வணிக வளாகம் தனிச்சிறப்பாக தங்க நகைக் கடைகளுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 6.5 லட்சம் சதுர அடிகளில் அமைந்துள்ள கடைகளில் பல்வேறு சங்கிலித் தொடர் நகை சாம்ராஜ்ஜியங்கள் செயல்பட்டு வருகின்றன. கடைகள் மட்டுமின்றி, நகை உருவாக்கம், வடிவமைப்பு, தரச் சோதனை மற்றும் ரத்தினக்கற்கள் பற்றிய தொழில்நுட்பங்களை கற்றுத் தரும் பயிற்சி நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

1947-க்குப் பின் மற்ற இந்திய மாநிலங்களை விட கல்வி அறிவு சதவீதத்தில் முன்னணியில் இருந்த கேரளம், எண்பதுகளின் இறுதியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதிலும் முன்னணியில் உள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கு ஒன்றின் படி, நூற்றுக்கு சுமார் 25 சதவீத வீடுகளில் யாரேனும் ஒருவராவது வெளிநாட்டில் பணிபுரிகிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவுக்குள் வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் அன்னியச் செலாவாணியில் 25 சதவீதம் கேரளாவுக்கே செல்கிறது.

வரலாற்று ரீதியாகவே உற்பத்தித் தொழில் சாராத வணிகப் பின்புலம் கொண்ட கேரளாவில், இப்படி வெளியிலிருந்து வரும் பணம் இரண்டே வழிகளில் தான் முதலீடு செய்யப்படுகிறது. ஒன்று நிலம் மற்றது தங்கம். மேல் நடுத்தர வர்க்க மலையாளிகளின் திருமணங்களில் மணப் பெண்ணை நடமாடும் தங்க நகை ஸ்டாண்டு போல ‘அலங்கரிக்கும்’ கோமாளிக் கூத்துகள் சாதாரணம். அதே போல் கேரளப் புறநகர்ப் பகுதிகளில் பயணிக்கும் போது அலங்காரமான பிரம்மாண்டமான மாளிகைகளையும் காணலாம். இப்படி வீடு கட்டிக் கொள்வதும், நகைகளை வாங்கிக் குவிப்பதும் கௌரவத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

இந்தப் போக்கு இரண்டாயிரங்களில் மத்தியப் பகுதி வரை நீடித்தது. மேற்கில் துவங்கிய பொருளாதாரப் பெருமந்தம் மத்திய கிழக்கு நாடுகளையும் விடாது போட்டு உலுக்கியதில் கேரளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஒரே மாதத்தில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து ஊர் திரும்பவிருப்பதாக அம்மாநில தொழிலாளர் துறை அமைச்சரே தெரிவித்துள்ளார்.

டாலரும் நகையும்
வெளிநாட்டு பணமும் நகை வணிகமும்

ஒரு பக்கம் கேரளா போன்ற ஒரு சிறிய மாநிலத்திற்கு இத்தனை நகைக் கடல்கள் திரும்பிய திசையெல்லாம் தமது பிரம்மாண்டமான கடைகளைத் திறப்பதென்பது அதீதமான போட்டியை உண்டாக்கியிருந்தது. இன்னொரு பக்கமோ இவர்களின் வாடிக்கையாளர்களே வருமானமற்று ஊர் திரும்பும் நிலை.

நகையும் அடகும், உடலும் நிழலும் போலப் பிரிக்க முடியாதது. அந்த வகையில் கேரளாவில் நகைக்கடைகள் எந்த அளவுக்கு அதிகமோ அதே அளவுக்கு நகை அடகு நிறுவனங்களும் அதிகமே. அதில் முன்னணில் இருப்பது, முத்தூட் பைனான்ஸ், முத்தூட் மினி மற்றும் மணப்புரம் கோல்ட் பைனான்ஸ். இவர்களும் நமக்குப் பரிச்சியமான ‘சேட்டு’கள் மற்றும் ‘செட்டிகளை’ப் போன்ற அடகுக்கடைக்காரர்கள் தான். ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்த நிறுவனங்கள் வங்கிகளைப் போன்றே மையப்படுத்தப்பட்ட வலைப்பின்னல் கொண்டவை. இதன் ஒவ்வொரு கிளையும் கணினி மயமாக்கப்பட்டு தலைமையகத்தோடு இணைக்கப்பட்டிருக்கும்.

கொச்சியைத் தலைமையகமாகக் கொண்ட முத்தூட் நிறுவனத்திற்கு, இன்றைய தேதியில் நாடு முழுவதும் 25,000 ஊழியர்களும் 4,000 கிளைகளும் உள்ளன. 2009-ம் ஆண்டு வாக்கில் 985 கிளைகளாக இருந்து முன்றே வருடத்தில் நான்கு மடங்காக வளர்ந்துள்ளது. முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளைகளது எண்ணிக்கை தற்போது நாட்டிலேயே மூன்றாவது அதிகக் கிளைகளைக் கொண்ட பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் எண்ணிக்கையை தாண்டியுள்ளது. முத்தூட்டின் கிளைகளில் சுமார் 85 சதவீதம் தென்னிந்திய மாநிலங்களில் அமைந்துள்ளன.

1992-ம் ஆண்டு பங்குகள் வெளியிட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் தங்க அடகு நிறுவனம் மணப்புரம். தற்போது 22 மாநிலங்கள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களையும் சேர்த்து சுமார் 300 கிளைகளைக் கொண்டுள்ளது. 22,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

நம்ப முடியாத இந்த வளர்ச்சியின் ரகசியம் என்ன?

அந்த இரகசியத்தைப் புரிந்து கொள்ள கார்ப்பரேட் அடமானக் கடைகளாக வளர்ந்துள்ள தங்க அடகு நிறுவனங்களின் பொருளாதார இயக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். வழக்கமாக நகைக் கடன்கள் வாங்குவதாக இருந்தால் நம் மக்கள் உடனடியாக சென்று விழும் இடம் சேட்டுக் கடைகள் அல்லது பொதுத்துறை வங்கிகள். சேட்டுக் கடைகளில் நாம் கேட்கும் தொகை அப்படியே கிடைக்காது.

நகைக் கடன்
நகைக் கடன் நிறுவனம்

பொதுத்துறை வங்கிகளைப் பொருத்தமட்டில் நகைக் கடனுக்கான வட்டி விகிதம் முத்தூட் மணப்புரம் போன்ற நிறுவனங்களை விட மிகவும் குறைவு தான். பாரத ஸ்டேட் வங்கியில் நகைக் கடனுக்கு 14.45 சதவீத வட்டி. வேறு சில பொதுத்துறை வங்கிகளில் 12 சதவீதம் அளவுக்கும், கூட்டுறவு வங்கிகளில் 14.5 சதவீதத்திற்கும், விவசாய வங்கிகளில் 9 சதவீத அளவுக்கும் கூட நகைக்கடன் வசதி உள்ளது. ஆனால், பொதுத்துறை வங்கிகளில் நகை அடகு பிடிப்பதற்கு சிக்கலான பல நடைமுறைகளைக் கடக்க வேண்டும் என்பதோடு பல்வேறு ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட பின்னும், நகையின் மதிப்பில் 60 -70 சதவீத அளவுக்கே கடன் கொடுப்பார்கள்.

லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட நகையின் மேல் நமக்கு 90 ஆயிரம் கடன் தேவை என்றால், பொதுத்துறை வங்கிகளில் சுமார் 60 ஆயிரம் தான் கிடைக்கும். இந்த இடைவெளியில் தான் தனியார் அடகு நிறுவனங்கள் நுழைகிறார்கள். லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட நகையின் மேல் 90 ஆயிரம் வரை கூட கடன் தரத் தயாராக உள்ளனர். திருட்டு நகையா இல்லையா என்பதை சோதிப்பதில்லை, அடையாளத்திற்கான ஆவணம் ஏதேனும் இருந்தால் போதும் வேறு சோதனைகள் கிடையாது. நகை அடகு அலுவலகத்தில் நுழைந்த பத்து நிமிடங்களுக்குள் கை மேல் காசு – ஆனால், வட்டி மட்டும் 25 சதவீதம்!

இது எப்படி சாத்தியமாகிறது? தொடந்து மக்களுக்குக் கடன் கொடுத்துக் கொண்டேயிருக்க இவர்களுக்கு எங்கேயிருந்து பணம் வருகிறது. இந்நிறுவனங்கள் திறந்திருக்கும் கிளை அலுவலகங்களில் அடகு பிடிக்கப்படும் நகைகளைப் பாதுகாக்கும் பெட்டகங்களோ, வங்கியில் இருப்பது போன்ற போதுமான காவலர்களோ இல்லாமல் இருப்பதை கவனிக்க முடியும். எனில், அடகு பிடிக்கப்படும் நகைகள் எங்கே பாதுகாக்கப்படுகின்றன? இங்கே தான் சூட்சுமம் இருக்கிறது.

மக்களிடம் அடகு பிடிக்கும் நகைகளை இந்நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி பொதுத்துறை வங்கிகளில் மறு அடமானம் வைக்கின்றன. ஏமாளி மக்களிடம் நகை அடகு பிடிக்கும் நிறுவனங்கள், சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அந்த நகைகளைத் தங்களது சொத்துக்களாக (Assets) கணக்குக் காட்டிக் கொள்கின்றன. அடுத்து ஏதேனும் பொதுத்துறை வங்கியில் கார்ப்பரேட் தங்கக் கடன் என்கிற வகையில் மொத்தமாக நகைகளை அடகு வைத்து 8 சதவீத வட்டிக்கு கடன் பெற்றுக் கொள்கின்றன. பொதுத்துறை வங்கிகளிடம் 8 சதவீத வட்டிக்கு கடன் வங்கி மக்களுக்கு 25 சதவீத வட்டிக்கு கொடுப்பது தான் இந்த பிரம்மாண்ட வளர்ச்சியின் இரகசியம்.

விளம்பரங்கள்
‘கனவு’களை விற்று கொள்ளை அடிக்கும் தங்க நகை அடகு வியாபாரம்.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டேயிருக்கும் என்கிற உத்திரவாதமற்ற நம்பிக்கை தான் இந்த மொத்த சூதாட்டத்திற்குமான அடிப்படை. தங்கத்தின் விலை பாரிய அளவில் வீழ்ச்சியடையும் போது இந்த நகை அடகு நிறுவனங்கள் கட்டியெழுப்பியிருக்கும் சீட்டுக்கட்டு மாளிகையும் சடசடவென்று சரிந்து விழுந்தாக வேண்டும்.

தற்போது மழைக் காலத்துக் காளான்கள் போல் தங்க அடகு கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ந்து வருவதை குறைந்தபட்சம் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அதன்படி, நகையின் மதிப்புக்கு 60 சதவீத அளவுக்கே கடன் கொடுக்க வேண்டும், மொத்த கடன் வணிகத்துக்கும் நிறுவனங்களின் மூலதன மதிப்புக்குமான இடைவெளி குறைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடந்த ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

எனினும், இந்நிறுவனங்களின் உயிராதாரமான நகை மறு அடகு விஷயத்தில் ரிசர்வ் வங்கி இன்னும் தலையிடவில்லை. மேலும், எந்தக் கட்டுப்பாடும் முறையான நெறிமுறைகளும் இன்றி கிளைகள் துவங்குவது, அதீதமான வட்டி விகிதங்கள் சுமத்துவது உள்ளிட்டவைகளிலும் ரிசர்வ் வங்கி பாராமுகம் காட்டி வருகிறது. தங்க விலை நிலவரம் நிலையற்றதாக மாறி வரும் நிலையில் இந்நிறுவனங்கள் தமது செயல்பாடுகளை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு விரிவுபடுத்த முற்பட்டுள்ளன. எனினும், இந்நிறுவனங்களின் அஸ்திவார கோட்பாடான ‘தங்க விலை எப்போதும் கூடிக் கொண்டேயிருக்கும்’ என்பதில் ஏற்பட்டிருக்கும் தள்ளாட்டம் விரைவில் இவர்களை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும்.

இந்நிறுவனங்கள் தென்னிந்தியாவில் பிரதானமாகத் துவக்கப்படுவதற்கான காரணம், வடஇந்திய மாநிலங்களைக் காட்டிலும் தென்மாநிலங்கள் தொழில் வளர்ச்சி, சிறுதொழில் முனைவு, தனிநபர் வருமானம் போன்றவற்றில் வளர்ந்த மாநிலங்களாக இருப்பதே. அந்த வகையில் வளர்ந்து வருகிற நடுத்தர வர்க்கம் ஒப்பீட்டளவில் அதிகம். இங்கே தங்க ஆபரண நுகர்வு வடக்கை விட அதிகம் என்பதோடு, சிறிய தொழில்களுக்கு உடனடியாக பணம் புரட்டவும் அல்லது ஆத்திர அவசரத்திற்கு அடகு வைக்கவுமான தேவை அதிகம்.

தற்போது அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, சிறு தொழில் முனைவோரிடம் நிலவும் செலாவணி வறட்சி, சாமானிய மக்கள் எதிர் கொள்ளும் சம்பளக் குறைப்பு, வேலையிழப்பு போன்ற நெருக்கடிகள் இது போன்ற நிறுவனங்கள் வளர வாய்ப்புகளை வழங்குகிறது.

மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் தனிநபர்களால் வாங்கிக் குவிக்கப்படும் தங்கத்தை முட்டாளின் தங்கம் (Fools Gold) என்கிறார்கள். இவ்வாறு வாங்கிக் குவிக்கப்படும் தங்கத்தை மூலதன முடக்கம் என்பதாகப் பார்க்கிறார்கள். ஆனால், இந்தியாவிலோ சாமானிய மக்களால் ஆபத்துக் காலத்தில் உடனடிப் பயன்தரத்தக்க முதலீடாகவே தங்கம் கருதப்படுகிறது. இது போன்ற நகை அடகு கார்ப்பரேட் நிறுவனங்களோ அரசின் விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஏழை எளிய உழைக்கும் மக்களின் துன்ப துயரங்களை எந்தக் கூச்சமும் இன்றி வக்கிரமான முறையில் காசாக்குகின்றன.

காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முழு அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டுள்ள அரசோ கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் தனியார்மயப்படுத்தி வருகிறது. காட் ஒப்பந்தத்தின் ஷரத்துகளுக்கு உட்பட்டு, தொழிலாளரின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு வருகின்றன எந்தக் பாதுகாப்புமற்று தொழிலாளர்கள் வேலைகளில் இருந்து விசிறியடிக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும், நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும், நல்ல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும், திடீர் வேலையிழப்பு போன்ற நெருக்கடிகள் மக்களுக்கு அதீதமான நிதித் தேவைகளை ஏற்படுத்துகின்றன.

சம்பள வெட்டும் வேலையிழப்பும் தொழிலாளர் வர்க்கத்தின் கழுத்தை நெருக்கிச் சுருக்குகிறது. மக்கள் இந்த அடிமை அரசாங்கத்தால் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளனர். நட்டாற்றில் விடப்பட்ட மக்களின் இந்த நெருக்கடி முத்தூட், மணப்புரம் போன்ற நவீன கார்ப்பரேட் ஈட்டிக்காரர்கள், ஈமு கோழி வளர்ப்பு, பிளேடு சீட்டுக் கம்பெனிகள் போன்றவற்றைத் தோற்றுவித்த வண்ணம் உள்ளது. இந்த சமூகச் சூழலைப் புரிந்து கொண்டு மாற்றியமைக்கப் போராடுவதன் ஊடாகத் தான் இது போன்ற திருட்டு கும்பல்களிடமிருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

– தமிழரசன்

  1. அடகு கடையும், சாராய கடையும், கந்து வட்டி தொழிலும் உண்மையில் விபச்சார தொழிலைவிட மோசமான சமூக விரோத செயல்களாக மாறிவிட்டன! வஙகிகளின் சேவைகள் கிராமப்புறஙகளை சென்றடையாதநிலையில், வேறு வழியில்லாமல் மக்கள் இவர்கள் வலையில் விழுந்தனர்! ஆனால் இப்போதெல்லாம் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் நகைக்கடன் கிடைக்கிறது! சுய உதவி குழுக்களும் கடன் தருகின்றன! ஆனால் திருட்டுநகைகள், தரம் குறைந்தநகைகளின் பேரிலும் இவர்கள் கடன் தருவது, காவல் துறை மேலதிகாரிகள் இவர்களை கண்டு கொள்ளாமலிருப்பது இவர்களின் வளர்ச்சிக்கு காரணம்! மேலும் கேரளாவில் கோவில்களிலிருந்து கொள்ளையடிக்கப்படும்நகைகள், வளைகுடாநாடுகளிலிருந்து வரும் கடத்தல்நகைகள், பாதுகாப்புக்காக இஙகு பதுக்கப்படலாம்! பொதுமக்கள் ஒருசிலர்நல்ல தரமானநகையை அடகு வைத்துவிட்டு, திருப்பி எடுக்கும்போது அதே போன்ற, ஆனால் மாற்று குறைந்தநகை கொடுக்கப்பட்டதாக புகாரும் உண்டு! மக்களின் அறியாமையும்,நகை அணிவது, சமூக அந்தச்துடன் பார்க்கப்படுவதும் தான் காரணம்!

  2. சரி… தீர்வு என்ன? எல்லா பிரச்னைக்கும் போராட்டம் தான் தீர்வு என பொத்தாம் பொதுவாக சொல்ல முடியுமா?

  3. தமிழ்நாட்டில் அதிலும் சென்னையில் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள், தொழில் நிறுவனங்கள் இல்லை என்று கூறுமளவுக்கு பெரும்பாலானவை தமிழரல்லாதவர்களுடையவை. உதாரணமாக தி.நகரில் ஒரு சில பெரிய நிறுவனங்களை விட பெரும்பாலான கடைகள் மலையாளிகளுக்குச் சொந்தமானவை. தி.நகர் சந்தியில் ஒவ்வொரு உணவகமும் மலையாளிகளுடையது. ஏன் அந்த நிலை என்று எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சென்னையில் தமிழர்களுக்கு வியாபார நுணுக்கம் தெரியாதா அல்லது அவர்களுக்கு அதில் விருப்பமில்லையா. முதலீடு இல்லாதது தான் காரணம் என்று சொல்ல முடியாது. எந்த வித முதலீடுமில்லாமல் அன்றாடம் வட்டிக்கு கடன் வாங்கி வீதியோரத்தில் கடை வைத்திருப்பவர்கள் கூட பெரும்பான்மையினர் முஸ்லீம்கள் தான். கூலி வேலை செய்யும் தமிழர்களை விட அவர்கள் நன்றாக உழைக்கிறார்கள். ஆனால் இரவில் அவர்களது குப்பையையும் அள்ளும் கூலி வேலை செய்பவர்கள் தான் உண்மையான தமிழர்கள் என்பதை நான் சென்னையில் அவதானித்திருக்கிறேன்

    • My take:

      1. Tamilians are educated – so most of them look for IT or Govt jobs. Many aim to settle abroad.
      2. Tamilians hesitate to do illegal activities (compared to others – Jains, Malayalees). None of the Gold shop owners do business ethically. Most of them have connections with D company and ISI investments.
      3. Tamilians are nowadays more focused on real estate business.
      4. No support among Tamilians – just like what is there among Malayalees, Jains, Patels…,
      Gujaratis will never allow others to get into Diamond business. Tamilians as per my experience do not like their fellow Tamilians.
      5. DMK and ADMK – these two robber gangs will support any business – Koreans, Germans, Malayalees.., as long as they pay the 10% investment commission. In other states, politicians give first preference to their state businessmen.
      No India consumer companies can sell their white goods in Korea but LG and Samsung dominate here.
      Cavin Kare is a big FMCG from TN because it belongs to KK family branch.
      6. Key IAS postings in TN Secretariat are occupied by Tamil Brahmins, Orissa, Bihar and UP Brahmins. These people do not like native Tamilians.
      7. Kerala restaurant, Juice shops, dept stores do not pay the small scale vendor on time or correctly. But when they setup shop they get support from their state IPS officers like George working in TN.

  4. தோழர் ஒரு டவுட்டு 8% வட்டிக்கு பொதுத்துறை வங்கியில் வைப்பதாக சொல்லியிருக்கீங்க ஆனா நண்பர்களுடன் பலமுறை சென்றுள்ளேன் சரியா ஒரு மாசம் முன்னாடி நானே அடகு வைத்து (ஆனா அடகு வைக்கும் போது நண்பர் சொன்னது சீக்கிரம் எடுத்த்இருவயில்ல.. அப்படியில்லைனா அடகு வைக்காத வித்துடு எப்படியும் போய்டும்டா…)மீட்டுள்ளேன் அப்ப்டி மீட்க்கும் போது 5நிமிடத்தில் உள்ளிருந்து நகையை எடுத்து வந்து தருகிறார்களே அது எப்படி

      • Its not the same Gold Jewels – they keep equivalent weight of gold bars.

        Example:
        If all shops collect in a day 1 kg of Gold jewels (net weight), the main office will get that information and keep equivalent weight of 1 kg gold bar with the banks.

  5. ஒருவேளை முதலாளித்துவம் கூடாது என்ற வினவின் கொள்கையை பின்பற்றுவதால், தமிழர்கள் யாரும் சொந்தமாக வியாபாரமோ, தொழிலோ தொடங்குவதில்லையோ?

    • தமிழர்கள் எல்லோரும் முதலாளிகள் ஆக முடியாது, ஆனால் தமிழ் இனத்தில் சில முதலாளிகள் இருக்கிறார்கள் இல்லையா ? ஆமா ஒரு சில முதலாளி தான் தமிழ் முதலாளி இருக்கான் மத்தவன் எல்லாம் பனியாவா தானே இருக்கான் என்று தமிழ் முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் தமிழ்தேசியவாதிகள் முதலாளிகளையும் தமிழனாக தான் பார்க்கிறாங்க, அவங்களையும் மக்களா தான் பார்க்கிறாங்க. நாம் மக்கள் என்று சொல்லக்கூடியவர்கள் பெரும்பாண்மையான தமிழர்களைத் தான், அவர்கள் வினவின் கொள்கையை ஏற்று பின்பற்றுவார்கள், ஆனால் தமிழ் முதலாளிகள் எதிர்ப்பார்கள். தமிழ் முதலாளிகளுக்கு சேவை செய்யும் தமிழ் தேசியவாதிகளும் வினவின் கொள்கையை எதிர்ப்பார்கள்.

  6. My father is a state bank employee,

    you take a loan/gold loan in govt banks,chances of losing the asset are very less and person gets time to do somethig but in all these muthoot etc,it is very bad.

  7. // மழைக்காலத்து ஈசல்கள் போல் பல்கிப் பெருகியிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும் சரி, வேறு பாடப்பிரிவுகளுக்கு இடம் கிடைத்தாலும் சரி – கல்விக் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன //

    எனது சொந்தக்கார மாணவன் ஒருவனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் பொறியியல் கல்லூரிகள் பற்றி சமீபத்தில் ஆராய்ந்து கொண்டிருந்தேன். இந்த கட்டுரைக்கு நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்பிறேன்.

    அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளின் 2012 கட்-ஆப் மதிப்பெண்களை பார்க்கும் போது கிண்டி, CIT, PSG, மதுரை தியாகராஜர் போன்ற பழைய, பாரம்பரிய அரசு கல்லூரிகளை மக்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. அதே சமயம் காஞ்சீபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற இடங்களில் தொடங்கப்பட்டுள்ள புதிய கல்லூரிகளுக்கு அதிக மவுசு இல்லை. இவற்றை விட தனியார் கல்லூரிகளை விரும்புகின்றனர். உதாரணமாக, இயந்திரவியல் பிரிவில் பொது பிரிவு கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளின் தர வரிசை கீழே உள்ள சுட்டியில் காணலாம். விழுப்புரம் அரசு கல்லூரி 44 வது இடத்தில் உள்ளது. மற்ற அரசு கல்லூரிகளை ஒதுக்கி விட்டால் சுமார் 35 தனியார் கல்லூரிகள் இதற்கு மேலே உள்ளன. மற்ற சமுதாய பிரிவு கட்-ஆப் படியும் கிட்டத்தட்ட இதே நிலை தான் (SCA பிரிவு தவிர. இது பற்றி வேறொரு மறுமொழி பிறகு எழுத திட்டம்).

    http://annauniversitybe.info/TNEA-2012/MechanicalEngineeringCutoff2012-1.php

    அரசு தனது கல்லூரிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். உதாரணமாக, காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி 11ம் இடத்தில் உள்ளது. ஆனால், இது பழம் பெருமை காரணமாக மட்டுமே என்று கருதுகிறேன். இதன் கணினியியல் துறையில் எட்டு ஆசிரியர்கள் தான் உள்ளனர் (http://www.accet.in/faculty.htm). அவர்களது கல்வி தகுதி BE – 3, ME /MCA – 3, PhD – 2 என்ற அளவிலேயே உள்ளது. மறுபுறம் உதாரணத்திற்கு மவுசு அதிகம் உள்ள வேலம்மாள் கல்லூரியை பார்த்தால் (http://www.velammal.edu.in/cse1.html), அங்கு 35 ஆசிரியர்கள் உள்ளனர். அனைவரும் ME படித்துள்ளனர், இதில் பலர் PhD தற்போது படித்துக்கொண்டு உள்ளனர்.

    அரசு மேலும் கல்லூரிகள் திறக்க வேண்டும். அவற்றின் தரத்தையும் உயர்த்த வேண்டும். மக்கள் மனதில் தனது கல்லூரிகள் பற்றிய பிம்பத்தையும் சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் தனியார் கல்லூரிகளின் ஆதிக்கம் மேலும் அதிகமாவதை தடுக்க முடியாது.

    அரசு கல்லூரிகள் என்னும் கோட்டை நீளமாக்கினால், தனியார் கல்லூரிகள் என்னும் கோடு தானே சிறுத்து விடும் என்கிறார் பீர்பால்.

    • Most of the time your view differs with Vinavu’s stands. Good that this time you gave some similar opinion for this article. Regarding staff members in Government Engineering colleges, you mentioned 8 staffs are there in Allagappa. 3 – BE, 3-MCA and 2 PhD. I feel all these 8 people should have good academics records (including those who joined with Quota system). There may be some difference in dedication towards teaching but their quality level should be high.
      In terms of private college, they just show off with number of faculties. Now a day those who not able to get any job after completing BE, they are joining as private college faculty or doing ME (if they have money to spend more for study). And most of the cases these people struggle hard to complete their degree. Somehow they complete their ME as well and joining these private colleges. And due to attractive package in outside corporate market they started doing PhD as well and when they get chance they leave this teaching job and jump in to corporate job.
      My point is count is not a matter. Quality matter, in that Government College always stands ahead. Even out of these 8 faculties, if 1 or 2 good guys are there then the college will make very good results and bring good quality engineers. In private college out of 35, even 30 guys put their effort you cannot they cannot make even 10% good engineering minds but they can produce engineers  with results. What kind of energy these 35 faculties can bring and motivate the students, they themselves struggled to finish their degree. Due to private college name and advertisements students with good knowledge joining there and some exceptional Engineers are coming out. I met many guys from private engineering colleges around Madurai they are having 80+ % marks but 0% in engineering minds. Knowledge application levels are very poor. Compare to this Thiagarajar Engineering College students are far better.

      How government will open new engineering colleges? Who supposed to do this? Education minister? In many political parties they are either owner or pinomy of many colleges. How will they open? Really I don’t have any solution with me. Even Vinavu doesn’t have any solution with it. At least it is creating awareness for many times about many issues. Vinavu asking people to create revolution, but towards what and how, these information (solution) is missing. If Vinavu kind of rational thinking people spend some time and provide solution as well, then it can bring some change for sure.

      Note: Sorry i find very difficult to type in Tamil.

      • ஆசிரியர்களின் தரத்தை நிர்ணயிப்பது கடினம். நேரில் சென்று ஆய்வு செய்தால்தான் உண்டு. தவிர இவர்கள் வாங்கிய பட்டம் மட்டுமே வெளியிடுகிறார்கள். எங்கே படித்தார்கள் என்று வெளியடவில்லை. நீங்கள் சொன்னது போல ஏதாவது டுபாக்கூர் கல்லூரியாக இருக்கலாம்.

        அழகப்பா கல்லூரியை பொருத்தவரை கணினியியல் துறையில் BE, MCA என இரண்டு படிப்புகள் உள்ளன. இரண்டும் சேர்த்து ஒரு சமயத்தில் ஏழு வகுப்புகள். ஒரு வகுப்புக்கு நான்கு பாடங்கள் என வைத்தால் கூட 28 பாடங்கள் நடத்த வேண்டும். எட்டு ஆசிரியர்கள் எனில் ஒருவர் 3-4 பாடங்கள் ஒரே சமயத்தில் நடத்த வேண்டும். எப்படி சமாளிக்கிறார்கள் என தெரியவில்லை. மேலும் இந்திய அளவில் அரசு கல்லூரி ஆசிரியர் பணிக்கு இப்போதெல்லாம் உதவிப் பேராசிரியர் (அல்லது விரிவுரையாளர்) பதவி என்றால் ME என்றும், associate professor (அல்லது reader) மற்றும் பேராசிரியர் என்றால் PhD என்றும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. BE மட்டும் படித்த ஒருவர் BE வகுப்பு எடுப்பது எனக்கு நெருடலாக உள்ளது. சமீபத்தில் அழகப்பா கல்லூரியில் கணினியியல் படித்து முடித்த எனக்கு தெரிந்த மாணவன் ஒருவன் அங்குள்ள ஆசிரியர்களை பற்றி சிலாகித்து சொல்லவில்லை.

        PSG, தியாகராஜர் போன்ற மற்ற பழைய அரசு கல்லூரிகளில் ஆசிரியர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். காஞ்சி, திருவண்ணாமலை போன்ற புதிய அரசு கல்லூரிகளை நான் ஆய்வு செய்யவில்லை

        • அழகப்பா கல்லூரியை பொருத்தவரை கணினியியல் துறையில் BE, MCA என இரண்டு படிப்புகள் உள்ளன. இரண்டும் சேர்த்து ஒரு சமயத்தில் ஏழு வகுப்புகள். ஒரு வகுப்புக்கு நான்கு பாடங்கள் என வைத்தால் கூட 28 பாடங்கள் நடத்த வேண்டும். எட்டு ஆசிரியர்கள் எனில் ஒருவர் 3-4 பாடங்கள் ஒரே சமயத்தில் நடத்த வேண்டும். எப்படி சமாளிக்கிறார்கள் என தெரியவில்லை.

          I dont understand your calculation here. 7 classes means 8 teachers are enough right. Per day 4 periods that is also ok i think.

Leave a Reply to KadaisiTamilan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க