Saturday, March 22, 2025
முகப்புசெய்திஎன் பார்வையில் வினவு : நாயகன், வேலு

என் பார்வையில் வினவு : நாயகன், வேலு

-

என் பார்வையில் வினவு – 9 : நாயகன்

வினவு தளத்திற்கு என் வாழ்த்துக்கள்.

இளைஞர்கள்
இளைஞர்கள் பணம் சம்பாதிக்கப் படைக்கப்பட்ட ஒரு எந்திரமாக வாழவே இந்த சமூகம் நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறது.

பதிவுலகிற்கு புதியவனான நான் வினவின் பதிவுகளை நான் படிக்க ஆரம்பித்து கடந்த சில மாதங்கள்தான் இருக்கும்.வினவை படிக்க ஆரம்பித்த நாட்கள் முதலே வினவில் உள்ள பல கட்டுரைகளை தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு நாளைக்கு குறைந்தது பத்து கட்டுரைகளாவது படித்து விடும் அளவுக்கு வினவின்பால் ஈர்க்கப்பட்டேன்.தமிழ்நாட்டில் பிறந்து பொறியியல் முடித்த 22 வயது நிரம்பிய என் போன்ற இளைஞர்கள் பணம் சம்பாதிக்கப் படைக்கப்பட்ட ஒரு எந்திரமாக வாழவே இந்த சமூகம் நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட ஒருவன் இந்த சமூகம் குறித்த எந்தவித புரிதலையோ அக்கறையையோ அல்லது உணர்வையோ சிந்திக்க முடியாமல் மழுங்கடிக்கப்படுகிறான். அப்படியே வாழ்ந்து செத்து மடிகிறான்.

மேற்சொன்னவாறு இந்த சமூகம் பற்றிய புரிதலை ஏற்படுத்த என்னைப் போன்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வினவு விளங்குகிறது. பதிவுலகில் முற்றிலும் புதிய கோணத்திலும் மாற்றுச் சிந்தனைகள் மூலம் புதிய செய்திகளை தருவதில் வினவிற்கு நிகர் வினவே.

உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அதன் மறுபக்கத்தை தோலுரித்துக்காட்டி மக்களை சிந்திக்க தூண்டிவதில் வினவு முக்கிய பங்காற்றி வருகிறது.

அரசியல்சார் அறிவை வளர்க்க உதவுவதில் வினவின் பங்கு முக்கியமானது.உதாரணமாக கம்யூனிசம், சோசியலிசம், பாசிசம், நுகர்வு கலாச்சாரம், முதலாளித்துவம், இன்னும் பல. இப்படி பல புதிய விஷயங்கள் மற்றும் சிந்தனைகளை வினவின் மூலம்தான் அறிந்து விழிப்புணர்வு பெற்றேன். மேலும் பெற்று வருகிறேன்.

வினவின் சாதி/மத ரீதியிலான கட்டுரைகளில் அவ்வமைப்பைச் சேர்ந்தோர்கள் மனம் நோகாதவாறு அதே சமயம் பதிவின் காரம் குறையாமலும் அனைத்து அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் ஆரோக்கியமான விவாதக் களமாக வினவு விளங்க வேண்டும். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் சமீப காலமாக வினவு குறிப்பிட்ட சாதி/மதம் பற்றி இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை எழுதுகிறது என்று பதிவுலகில் ஒரு கருத்து நிலவி வருகிறது.

அலுவலகங்களிலும் கல்லூரிகளிலும் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வினவை வாசிக்கும் நண்பர்கள் பெருகி வருவது வினவிற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

நான் படித்தவற்றை நான்கு பேருடன் கலந்தாலோசிக்கும்போது அவர்களையும் விழிப்படையச் செய்வதில் என்னாலான சிறு பங்கை ஆற்ற வினவு மிகவும் உதவியாக உள்ளது.

சமூக/அரசியல் பதிவுகளோடு மட்டும் வினவு நின்று விடாமல் வேறு பல புதிய கட்டுரைகளையும் சமூக சிந்தனைகளையும் நாங்கள் அறியும் வண்ணம் வினவு முயற்சிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க!! வளர்க!!

நாயகன்(கவின்)
www.karuvooraan.blogspot.in
____________________________________________

என் பார்வையில் வினவு – 10 : வேலு

நான் பதிவராக இருந்த போது தான் வினவு எனக்கு அறிமுகமானது. நான் ஒரு அரைவேக்காட்டு பதிவன். சும்மா ஏதாவது மொக்கையாக எழுதி விட்டு அதற்கு எத்தனை ஓட்டுகள் கிடைக்கும் என எதிர் பார்த்து காத்திருக்கும் அற்பவாதி. இது தான் என் பதிவுலக வாழ்க்கையாக இருந்தது. என்னை அதிலிருந்து விடுவித்து எழுத்து என்றால் என்ன? அது யாருக்கானதாக இருக்க வேண்டும்? என்பதை புரிய வைத்தது இந்த வினவு தான்.

வினவு எனக்கு அறிமுகமானது 2009-ல். சமூக பிரச்சினைகளில் சரியான பார்வை கொண்ட கட்டுரைகள். நடுநிலை என சொல்லிக் கொண்டு போலியாக எழுதி வரும் ஊடகத்தையே நம்பியிருந்த எனக்கு நடுநிலை என்பதே தவறு என புரிய வைத்தது வினவு தான். நியாயம் என்பது எப்போதும் நடுவில் இருக்க முடியாது ஒரு பக்கம் மட்டுமே இருக்க முடியும் என்பதை உணர்த்தியது வினவு தான். அதன் பின்னர் என் பதிவின் எழுத்துக்கள் மாறத் தொடங்கின. அந்த மாற்றத்தை ஏற்படுத்திய வினவுக்கு மிக்க நன்றி.

நான் தற்போதெல்லாம் எழுதுவதில்லை. படிப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். சமீப பிரச்சினைகளை சரியான பார்வையில் பார்க்க கற்றுக் கொடுத்ததும் இந்த வினவு தான்.

ஐந்தாண்டுகள் நிறைவுக்கு வாழ்த்துக்கள்.

வினவிடம் நான் எதிர் பார்க்கும் சில விடயங்கள்

1) சினிமா துணுக்குகள் எழுதும் போது பல விடயங்கள் கவனிக்கப் படவில்லை காளமேகம் அன்னாச்சியால். அதில் இன்னும் திருத்தம்தேவை குறிப்பாக இந்தக் கருத்து

மசாலா: “அது எப்படி ரவி? நடிகர்கள் நினைச்சா உடம்பை கும்னு ஏத்துறீங்க.. நினைச்சா சப்பையா இளைக்குறீங்க?” குமுதம் நிருபர் (இலக்கியவாதி) கடற்கரய் கேள்வி. அதற்கு ஜெயம் ரவி பதில் :  “ஆக்சுவலி இதோ போல பண்றது உடம்புக்கு நல்லதில்லை. பாடி அன் கம்ஃபர்டபுளா மாறிடும். ரிஸ்கியான வேலைகள்னு தெரிஞ்சு சினிமாவுக்காக பண்றோம். வேற வழியில்லை.”

மருந்து: மூணு வேளை முக்கிட்டு, முப்பது முட்டையை அமுக்கிகிட்டு ஐஞ்சு மணிநேரம் ஜிம்முல தொங்குனா கறிய ஏத்தலாம். அதுக்கு நீ வேற வேலவெட்டி இல்லாம இருக்கணும். ஏதோ காந்தி 30 நாள் உண்ணாவிரதம் இருந்து உடம்ப கெடுத்துக்கிற மாறி அவன் பேசுறான், இவன் எழுதுறான்! ஏலேய் கடற்கரய் என்ன எழவுடே நீ உலக எலக்கியம் படிச்ச?

எனக்கு காந்தியை விட ஐரோம் சர்மிளா பெரியவராகத் தெரிகிறார்.

2) சமூக விழிப்புணர்வு குறும்படங்கள் எடுத்து அதை வெளியிடலாம். ஆள் பற்றாக்குறை காரணம் என சொல்லியிருந்தீர்கள்.

3) கட்டுரைகளில் பொது மக்களையும் பங்கேற்க செய்யலாம். அவர்களின் கட்டுரைகளை வெளியிட்டு அது குறித்த உங்கள் விமர்சனங்களையும் வெளியிடலாம்.

தோழர்களின் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்…..

– வேலு

  1. //வினவின் சாதி/மத ரீதியிலான கட்டுரைகளில் அவ்வமைப்பைச் சேர்ந்தோர்கள் மனம் நோகாதவாறு அதே சமயம் பதிவின் காரம் குறையாமலும் அனைத்து அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் ஆரோக்கியமான விவாதக் களமாக வினவு விளங்க வேண்டும். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் சமீப காலமாக வினவு குறிப்பிட்ட சாதி/மதம் பற்றி இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை எழுதுகிறது என்று பதிவுலகில் ஒரு கருத்து நிலவி வருகிறது//…………….. வழிமொழிகிறேன்.

  2. //வினவின் சாதி/மத ரீதியிலான கட்டுரைகளில் அவ்வமைப்பைச் சேர்ந்தோர்கள் மனம் நோகாதவாறு அதே சமயம் பதிவின் காரம் குறையாமலும் அனைத்து அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் ஆரோக்கியமான விவாதக் களமாக வினவு விளங்க வேண்டும். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் சமீப காலமாக வினவு குறிப்பிட்ட சாதி/மதம் பற்றி இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை எழுதுகிறது என்று பதிவுலகில் ஒரு கருத்து நிலவி வருகிறது.//…… இதுக்கு ஆதரவா கருத்து போட்டா சென்சார் பண்ணிடுங்க…………. உங்க நேர்மை ரொம்ப புடிச்சிருக்கு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க