Saturday, January 18, 2025
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காமன்வெல்த் மாநாடு : மீண்டும் அதே நாடகம் !

காமன்வெல்த் மாநாடு : மீண்டும் அதே நாடகம் !

-

டந்த நவம்பர் 15 முதல் 17-ஆம் தேதி வரை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்து முடிந்துள்ளது. இம்மாநாட்டையொட்டி மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் ராஜபக்சே மீது நெருக்குதலைத் தீவிரப்படுத்துவதாகக் காட்டி மீண்டுமொரு ஏமாற்று நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.

இம்மாநாட்டில் பங்கேற்ற பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான விசாரணையை வருமாண்டு மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசு நடத்த வேண்டும்; இல்லையெனில் இந்த விவகாரத்தை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பிரிட்டன் கொண்டுவரும் என்றார். உடனே, ”பிரிட்டனின் எச்சரிக்கை”, ”ராஜபக்சே அரசு திணறல்”, ”இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை “- என்றெல்லாம் சித்தரித்துப் பிழைப்புவாதிகளும் இனவாதிகளும் குதூகலிக்கின்றனர்.

ஏற்கெனவே சிங்கள பாசிச அரசு தன்னைத்தானே விசாரணை செய்து கொள்வதாகக் கூறிக்கொண்டு அமைத்த ‘நல்லிணக்க ஆணைக்குழு’வின் அறிக்கையின் பரிந்துரையில், உள்நாட்டுப் போரில் இறந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே 1983 முதலாக புலிகள் நடத்திய தாக்குதல் உள்ளிட்டு 2009 இறுதிக்கட்ட ஈழத் தமிழின அழிப்புப் போர் வரை உயிரிழந்தவர்கள், ஊனமுற்றவர்கள், சேதமடைந்த சொத்துக்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கும் பணியை மேற்கொள்ளப் போவதாக இலங்கை அரசு இப்போது அறிவித்துள்ளது. ஆனால், பிரிட்டிஷ் பிரதமர் எச்சரித்ததாலேயே இப்படி நடப்பதைப் போலவும், இது காமன்வெல்த் மாநாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகவும் சித்தரிக்கப்படுகிறது.

காமன்வெல்த் மாநாடு
ராஜபக்ஷே கும்பலின் போர்க்குற்றங்களை பூசி மெழுகி விட்டு, வர்த்தக நோக்கங்களுக்காக நடத்தப்படும் காமன்வெல்த் மாநாடு

ஈழத் தமிழின அழிப்புப் போர் நடந்து கொண்டிருந்தபோது, அன்றைய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி முதலானோர் இலங்கைக்குச் சென்றபோதெல்லாம், ஏதோ போர் நிறுத்தத்துக்காகவே அவர்கள் செல்கிறார்கள் என்று தமிழக ஓட்டுக்கட்சிகளும், இனவாதிகளும் ஊடகங்களும் பிரமையூட்டினர். அதன் பிறகு 2009 ஜூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை இனவெறி பாசிச அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்து அரசு ஒரு தீர்மானம் கொண்டுவந்தபோது, ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்களுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் களத்தில் இறங்கி விட்டதைப் போன்றதொரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.

பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மார்ச் 2012-இல் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம், ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் என்று திரும்பத்திரும்ப தமிழக ஓட்டுக்கட்சிகளும் தமிழினப் பிழைப்புவாதிகளும் ஊடகங்களும் பரபரப்பூட்டின. ஆனால், இந்தியாவின் சதித்தனமான திருத்தத்துடன் கூடிய ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானத்தில் அப்படி எதுவும் இல்லை. சிங்கள பாசிச அரசு தன்னைத்தானே விசாரணை செய்து கொள்வதாகக் கூறிக்கொண்டு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதுதான் அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட தீர்மானம். போர்க்குற்றங்களுக்கும் இந்தத் தீர்மானங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

அதன் பிறகு, கடந்த ஆண்டு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவியான சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குச் சென்றபோதும், இவ்வாண்டு ஏப்ரலில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தின் போதும் இதே பாணியில் பரபரப்பூட்டப்பட்டது.

டேவிட் கேமரூன்
பிரிட்டிஷ் பிரதமரின் நவீன ‘கருணாமூர்த்தி’ நாடகம்: இன அழிப்புப் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை சந்தித்துப் பேசும் டேவிட் கேமரூன்

தொடரும் இத்தகைய மோசடி நாடகங்களுக்கு விறுவிறுப்பான கதை-வசனம் எழுதி மெருகூட்டி ஓட்டுப் பொறுக்கிகளும் ஊடகங்களும் உளவுத் துறையும் அயலுறவுத் துறையினரும் நடிக்கின்றனர். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளப் போவதில்லை, அவருக்குப் பதிலாக வேறொரு முக்கிய பொறுப்பாளர் கலந்து கொள்வார் என்ற செதி ஏற்கெனவே அக்டோபர் 14 அன்று கசியத் தொடங்கியது. இது, இந்திய உளவுத் துறையின் ஏற்பாடு என்று சில ஈழ ஆதரவு இணையங்களே அம்பலப்படுத்தியுள்ளன.

இருப்பினும், தமிழகத்தில் இதற்கேற்ப அரசியல் சூழலை ஏற்படுத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு நாடகத்தைத் தொடங்கினார். பிரதமர் இம்மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று ஆரவாரமாக அறிக்கைகள் வெளியிட்டதோடு, மன்மோகன் சிங்குக்குக் கடிதமும் எழுதினார். இதைச் சுற்றியே ஊடகங்களும் சொல்லி வைத்தாற் போல விவாதங்களை நடத்தின. மன்மோகனுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பது போலத் தமிழக காங்கிரசுத் தலைவர்கள் தங்கள் பங்கிற்கு நாடகமாடினர். பா.ஜ.க.வும் இதேபோன்று அருவருப்பான நாடகத்தை நடத்தியது.ஜெயலலிதாவோ, அக்டோபர் 24 அன்று சட்டமன்றத்தைக் கூட்டி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் எவரும் பங்கேற்கக் கூடாது, காமன்வெல்த் மாநாட்டிலிருந்து இலங்கையைத் தற்காலிகமாக நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, கருணாநிதியை விடத் தன்னை தீவிர எதிர்ப்பாளராகக் காட்டிக் கொண்டார்.

போராட்டம்
அரசியல் ஆதாயத்துக்காக காமன்வெல்த் எதிர்ப்பு நாடகம்: இந்துவெறி பா.ஜ.க, பிழைப்புவாத ம.தி.மு.க ஆகிய கட்சிகள் இணைந்து கோவையில் நடத்திய ரயில் மறியல் போராட்டம்

இறுதியில், பிரதமர் பங்கேற்க மாட்டார்; அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான குழு பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டதும், இதையே மாபெரும் வெற்றியாகக் காட்டினர். 53 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பில்  ஏறத்தாழ 26 நாடுகளின் தலைவர்கள் காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்லவில்லை. அதற்காக இந்த நாடுகள் அனைத்தும் ராஜபக்சே கும்பலை எதிர்த்து மாநாட்டைப் புறக்கணித்து விட்டதாகப் பொருள் கொள்ள முடியாது. ராஜபக்சேவுக்கு மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில், சொந்தக் காரணங்களால் பங்கேற்க இயலவில்லை என்று கூறியிருந்தாரே தவிர,  இனப்படுகொலை, மனித உரிமை மீறலைக் காரணம் காட்டவுமில்லை.

கனடாவில் கணிசமான புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இருப்பதாலும், காலனியாதிக்கக் காலத்திலிருந்தே மொரீசியசில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாலும் அவர்களது ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், இந்நாடுகளின் தலைவர்கள் மட்டுமே இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் மனித உரிமை மீறலைக் காரணம் காட்டி காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப்பதாக அறிவித்தனர்.

இத்தகைய மாநாடுகள் நடக்கும்போதெல்லாம், இலங்கை பாசிச அரசின் இனப்படுகொலை – மனித உரிமை மீறல் குறித்த புதிய ஆதாரங்களை வெளியிடுவதை பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சி தொடர்ந்து செய்து வருகிறது. அதன்படியே, இசைப்பிரியா சிங்களப் படையினரால் கொல்லப்பட்ட கொடூரத்தை இப்போது வெளிச்சமாக்கியது. ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஏழை நாடுகளின் மனித உரிமை மீறல் குற்றங்கள் என்பது ஒரு துருப்புச் சீட்டு. தமது அரசியல், பொருளாதார நலன்களுக்கேற்ப இதைத் தேவைப்படும்போது ஏவி, ஏழை நாடுகளின் ஆளும் கும்பலை நெருக்குவதும், கையை முறுக்கி காரியம் சாதித்துக் கொள்வதும்தான் நடக்கிறது. ராஜபக்சே கும்பலோ தனது இனவெறி பாசிசத்துக்கு நியாயம் தேடவும், மக்களை இனவெறி தேசிய வெறியில் ஆழ்த்தி திசைதிருப்பவும் ”எங்களுக்கு யாரும் கெடு விதிக்க முடியாது” என்று கேமரூனின் அறிவிப்பை ஏற்க மறுத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு வேடங்கட்டி ஆடுவதும் தொடர்கிறது.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வேண்டாமென கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு மன்மோகன் சிங் எழுதிய பதில் கடிதத்தில், ”முடிவெடுக்கு முன்னர் தமிழ் மக்களின் உணர்வுகளைக் கணக்கில் கொள்வதாக” மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதி எழுதிய கடிதத்தை மன்மோகன் சிங் படித்திருப்பாரா என்பதே சந்தேகம்தான். பிரதமர் அலுவலக அதிகாரிகள் இத்தகைய கடிதங்களுக்கு பிரதமர் பெயரால் பதில் எழுதுவதுதான் வழக்கமான நிர்வாக நடைமுறையாக உள்ளது. ஆனால் அவர் கருணாநிதியின் கடிதத்தைக் கவனமாகப் படித்ததைப் போலவும், அதன் பொருளைப் புரிந்து கொண்டு சுயமாக யோசித்து அவரே தனது கைப்பட பதில் கடிதம் எழுதியதைப் போலவும் ஊடகங்கள் ஊதிப்பெருக்கின.

”வெற்றி அல்லது வீரச்சாவு” என்று அறிவித்து அக்டோபர் முதல் நாளிலிருந்து உண்ணாவிரதமிருந்த தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரான தியாகுவிடம், இதை ஏற்று உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கருணாநிதி கேட்டுக் கொள்ள, அவரும் இந்தக் காகித உறுதிமொழியை நம்பி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, இதனை ”சிறு வெற்றி, சிறும வெற்றி” என்று பாராட்டிக் கொண்டார்.

ஈழத் தமிழின அழிப்புப் போருக்கு முன்னும் பின்னுமாக இப்படித்தான் இந்த நாடகம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. உளவுத்துறை, வெளியுறவுத்துறை அதிகாரிகள் தீர்மானிப்பதையே கண்-காது-மூக்கு வைத்து ஊடகங்கள் பரபரப்பூட்டி திசைதிருப்புவதும், பிரதமரும் மைய அமைச்சர்களும் மழுப்பலாகவும் ஈரோட்டமாகவும் பேசுவதும், அதை வைத்து ஓட்டுப் பொறுக்கிகள் நாடகமாடுவதும்தான்  நடக்கிறது.

அனைத்துலக நாடுகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா. மன்றமே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையாக உள்ள நிலையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களுக்காக உருவாக்கப்பட்ட, முன்னாள் பிரிட்டிஷ் காலனியாதிக்க அடிமை நாடுகளின் கூட்டமைப்பாகிய காமன்வெல்த் மூலமாக இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலைத் தனிமைப்படுத்தி தண்டித்து விடலாம் என்பது கேழ்வரகில் நெய் வடிந்த கதைதான். மாநாட்டின் முடிவில் நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்ட காமன்வெல்த் கூட்டறிக்கையில், இலங்கையில் போருக்குப் பின்னரும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் மனித உரிமை மீறல் பற்றி நேரடியாகக் கூறாமல், பொத்தாம் பொதுவாகவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

முற்றுகைப் போராட்டம்
“இலங்கையில் நடைபெறவிருக்கு்ம் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது! காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே! காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்று!’ என்ற முழக்கங்களுடன் ம.க.இ.இ., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் 14.11.2013 அன்று சென்னையில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு நடத்திய ஆர்ப்பாட்டம்

இந்தியத் தரகு முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய அரசின் வர்க்கத் தன்மையிலிருந்துதான், அம்முதலாளிகளின் நலன்களிலிருந்துதான் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தீர்மானிக்கப்படுகிறது. இம்முதலாளிகளின் பொருளாதார நலன்களையும், அந்நலன்களுக்கேற்ப  தெற்காசியப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதையும்தான் இந்திய அரசு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்படியே, இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே சுங்கத் தீர்வைகளைக் குறைத்து சந்தையைத் திறந்துவிடுவதற்கான சீபா எனப்படும் (CEPA) பொருளாதார பங்குதாரர் ஒப்பந்தம், மன்னார் கடற்படுகையில் ஹைட்ரோ கார்பன் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் வேதாந்தாவின் கெர்ன் நிறுவனத்துடன் இணைந்து  இந்திய அரசுத்துறை நிறுவனமான எண்ணெய்-எரிவாயுக் கழகம் மேற்கொள்ளும் துரப்பண வேலைகளுக்கான ஒப்பந்தங்கள் முதலானவற்றுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு ஏற்பாடாகவே இக்காமன்வெல்த் மாநாட்டை இந்தியா பயன்படுத்திக் கொண்டது.

இந்தியா அல்லது அமெரிக்க – ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் தயவில் ஈழத் தமிழருக்கு நீதியும் உரிமையும் பெற்றுவிட முடியும் என்று கருதுவது பகற்கனவு மட்டுமல்ல, அது ஈழத் தமிழருக்கே எதிரான துரோகமாகும். இந்தியாவையும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களையும் தாஜா செய்தோ, பேரம் பேசியோ, இந்திய- இலங்கை அரசுகளின் போர்க்குற்றங்களுக்கு ஒருக்காலும் நீதி பெற முடியாது. இத்தகைய பிழைப்புவாத – சந்தர்ப்பவாதப் போக்குகளை அம்பலப்படுத்தி, சர்வதேச அரசுகளைப் பணிய வைக்கும் தனித்துவமான, உறுதியான புரட்சிகர மக்கள் இயக்கங்களைக் கட்டியமைப்பதன் மூலம்தான் இப்போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும்.

-பாலன்

______________________________

புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்

______________________________

  1. பிரிட்டிஸ் அரசாங்கம் விரைவு போட்டுகள்,பெல் கெலிகாப்டர்,லேசர் துப்பாக்கி…அப்புறம் போர் பாக்கட் மணி கொடுத்து வளர்த்தது, ஓரங்க நாடகத்தின் முன் பகுதியில் காண்க

  2. அய்யா வினவு,

    இன்றைய உலகில் பெரும்பாலான நாடுகளில் முதலாளித்துவம் தான் அதிகாரத்தில் இருக்கிறது. பொதுவுடைமை சித்தாந்தம் கொண்ட நாடுகள் இந்த உலகில் வெகு சில (கியுபா, வட கொரியா ஆகியன) தான். ஆகையால் அதிகாரம் இருப்பவர்களிடம் தான் (அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லையென்றாலும்) விண்ணப்பமும் முறைப்பாடும் செய்யமுடியும். ஏனெனில் அதிகாரத்தால் தான் ஒரு விசயத்தை செய்ய முடியும். அதிகாரத்தை ஒரு விசயத்தை செய்ய வைக்க திரளான மக்கள் போராட்டம் நடத்துவது ஒரு நல்ல வழிமுறை. ஆனால் அந்த மக்கள் போராட்டமே எல்லாம் ஆகி விடாது. பல வழிமுறைகளில் இதுவும் ஒன்று. இவ்வுலகில் பெரும்பாலான நாடுகளில் பொதுவுடைமை சித்தாந்தம் கொண்ட கம்யூனிச அரசுகள் இருந்திருந்தால் ரொம்பவும் வசதியாகத்தான் இருக்கும். ஆனால் நிலைமை அப்படி இல்லையே. உலகெங்கும் முதலாளித்துவ அரசுகள் தான் அதிகாரத்தில் உள்ளன. ஐ.நா சபையே முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டில் அதுவும் ஒரே ஒரு முதலாளித்துவ நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. பின் எங்கே போய் முறைப்பாடு செய்வது?. அங்கே தான் செய்ய முடியும். நேப்பாளத்தில் கூட அதிகார மாற்றம் என்பது முதலாளித்துவ நாடுகளின் அங்கீகாரம் இருந்ததால் தான் வென்றது. இல்லையென்றால் அங்கே நடந்த பாட்டாளி வர்க்க போராட்டம் எப்படி எப்படியெல்லாமோ திசை திருப்பப்பட்டு சிதைக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டு இருக்கும். பல மக்கள் போராட்டங்கள் இந்த கதியை அடைந்து உள்ளன. ஆகையால் பிடித்தாலும் பிடிக்கவில்லையென்றாலும் இப்போதைய நிலைமையில் முதலாளித்துவ அரசுகளிடம் போய் நின்று தான் ஆக வேண்டும்.

  3. //நேப்பாளத்தில் கூட அதிகார மாற்றம் என்பது முதலாளித்துவ நாடுகளின் அங்கீகாரம் இருந்ததால் தான் வென்றது. இல்லையென்றால்அங்கே நடந்த பாட்டாளி வர்க்க போராட்டம் எப்படி எப்படியெல்லாமோ திசை திருப்பப்பட்டு சிதைக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டு இருக்கும்.//

    Dear salanan,
    [1]This is happened already. The communist people in Nepal already lost their support politically from Nepal people.Their leadership did mistakes in the past 3 years.

    [2] Only positive thing happend in nepal due to this revolutionary communist people is “REMOVAL OF THE Nepal KING.”

    [3] Like your country the Indian gov is playing all the roll in Nepal to spoil that country.

    [4]Be care full with this “passist” Indian gov. It plays its roll in EElam , Nepal..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க