தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டக் கடலோர கிராமங்களில் கடந்த 25 ஆண்டுகளாக வரைமுறையற்று நிகழ்ந்துவரும் தாது மணல் கொள்ளையால் அப்பகுதியின் நிலவியல் அமைப்பே சீர்குலைக்கப்பட்டு, பல இலட்சம் கோடி மதிப்பிலான இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுள்ளன. மீன்வளம் அழிவு, கடலரிப்பு, புற்றுநோய் என ஏராளமான பாதிப்புகளுக்கு அப்பகுதிவாழ் மக்கள் ஆளாகியிருக்கின்றனர். இத்தனை பேரழிவுகளுக்கும் காரணமானவர் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன்.
மூன்று மாவட்டங்களிலும் தனி அரசாங்கம் நடத்திவரும் வைகுண்டராஜனை எதிர்த்துப் போராடிய மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டங்களில் மணல் கொள்ளைக்கு எதிராகக் கட்சிகள் விடுகின்ற சம்பிரதாய அறிக்கைகளில்கூட வைகுண்டராஜனின் பெயரைச் சொல்லாமல் தாது மணல் கொள்ளை என்றே பேசுகின்றனர். இத்தகைய சூழலில் தாது மணல் கொள்ளை தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமாரின் அறிக்கை கடந்த செப்டம்பர் மாதம் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு 10 நாட்கள் கள ஆய்வு நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தாது மணல் கொள்ளைக்கெதிராக ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளின் தோழர்களும் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் கடலோர கிராமங்களில் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டனர்.
அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடந்த இவ்வியக்கத்தில் சுமார் 280 தோழர்கள் உணர்வோடு களமிறங்கி மக்கள் மத்தியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். 1.2 இலட்சம் துண்டறிக்கைகள், ஆயிரம் சுவரொட்டிகள், எல்லா ஊர்களிலும் சுவரெழுத்துக்கள் என்று பெரும் அளவில் நடத்தப்பட்ட இப்பிரச்சாரம், தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பாறு முதல் நெல்லை மாவட்டம் இடிந்தகரை, கூடங்குளம், பெருமணல், குமரி மாவட்டம் லீபுரம் வரை மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி, நெல்லை , கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர், தென்காசி, சங்கரன்கோவில், நாகர்கோவில், சுரண்டை உள்ளிட்ட நகர்களில் பேருந்துப் பிரச்சாரமும், நெல்லை முதல் மதுரை வரை ரயில் பிரச்சாரமும் நடத்தப்பட்டது. மணற்கொள்ளையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தோழர்கள் வீடு வீடாகச் சென்று மக்கள் கொடுக்கும் உணவைச் சாப்பிட்டு, மக்களோடு தங்கிப் பிரச்சாரம் செய்தனர்.
தூத்துக்குடி ஜோசப் பெர்ணாண்டோ கொலையில் வைகுண்டராஜனின் பங்கை அம்பலப்படுத்திய ம.உ.பா.மையம், அக்டோபர் 12-அன்று தூத்துக்குடியில் தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வலியுறுத்தி பேரணி – பொதுக் கூட்டத்தை அறிவித்தது. முதலில் அனுமதி வழங்குவதாகச் சொன்ன காவல்துறை, பின்னர் அனுமதி மறுத்தது. பிரச்சாரம் செய்தால் கைது என்று மிரட்டியது. எனினும், அதே தேதியில் தடையை மீறிப் பேரணி, மறியல் நடந்தது. பாளையங்கோட்டை சாலையை அடைத்து நடந்த மறியலில் வழக்குரைஞர்கள்,பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர். வைகுண்டராஜனை எதிர்க்க முடியாதென்ற அவநம்பிக்கையை இப்போராட்டம் தகர்த்தது.
பொதுக்கூட்டத் தடைக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து போலீசு துறையால் அனுமதி வழங்கப்பட்டது.

இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தில் முன்பை விட மக்கள் ஆதரவு அதிகமிருந்தது. பேருந்துப் பிரச்சாரத்தில், வைகுண்டராஜனுக்குச் சொந்தமான பேருந்துகளின் ஓட்டுநர்களும் நடத்துனர்களுமே பிரச்சாரத்தை ஆதரித்தனர். குறிப்பாகப் பெண்கள் பிரச்சாரத்தை ஆமோதித்து நிதியளித்தனர். வைகுண்டராஜன் பற்றிய அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் தோழர்கள் பிரச்சாரம் செய்யவே, எதிர்ப்புகள் மிகவும் அரிதாகவே இருந்தன.
நெல்லையில் ஒரு பேருந்தில் பேசிக் கொண்டிருந்த தோழர்களை மிரட்டிப் பார்த்த கைக்கூலிகளைத் தோழர்கள் எதிர்த்து நிற்கவே, ”தைரியமிருந்தா திசையன் விளைக்கு (வைகுண்டராஜனின் சொந்த ஊர்) வந்து பார்” என்று வடிவேலு பாணியில் உதார் விட்டனர் அந்த எடுபிடிகள்.
அதிகாலை 5 மணிக்கே கிளம்பிச் சென்று தூத்துக்குடி அனல்மின் நிலைய வாயிலில் பெண் தோழர்கள் பிரச்சாரம் செய்ததைப் பாராட்டி வரவேற்றார்கள் தொழிலாளர்கள். கடலோர கிராமங்களில் ஊர்க்கமிட்டியினரும் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். குழந்தைகளுடன் பிரச்சாரத்திற்கு வந்திருந்த பெண் தோழர்களைக் கண்டு, ”இந்த புள்ளைகளுக்கு வி.வி.யால எதுவும் ஆயிரக் கூடாது” என்று கடவுளிடம் பிரார்த்தனையும் செய்தார்கள் பெண்கள்.
தங்கள் கடல் அன்னையைச் சீரழிக்கும் கயவர்களையும், துணை போகும் புல்லுருவிகளையும் பற்றிப் பேசும்போதே மக்கள் வெறுப்பை உமிழ்ந்தனர்.
பெரியதாழையில் புற்று நோய், சிறுநீரகப் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் பலர். பலரும் டயாலிசிஸ் செய்துதான் உயிரைத் தக்க வைத்துள்ளனர். பெரியதாழையில் ரெம்சியான் என்ற மீனவர் சிகிச்சைக்காக ரூ.18 இலட்சம் செலவிட்டிருக்கிறார். இங்கே 100-க்கும் மேற்பட்டோர் இத்தகைய பாதிப்புகளால் உயிரிழந்தும் உள்ளனர்.
கூடுதாழையைச் சேர்ந்த எம்ரினோ ரூ.12 லட்சம் டயாலிசிசுக்குச் செலவிட்டு, இனி செலவழிக்க வழியின்றி அனைத்தையும் இழந்து நிற்கிறார். மனைவி தனது சிறுநீரகத்தைத் தானம் தர முன்வந்தபோது ”நீயும் கிட்னியை தந்துவிட்டு ரெண்டுபேரும் செத்துப்போனால், நம் குழந்தைகளின் கதி என்னவாகும்?” எனக் கண்ணீருடன் மறுத்துவிட்டுத் தன் வாழ்நாட்களை எண்ணி வருகிறார். கடலோரம் முழுவதும் இத்தகைய பல கண்ணீர்க் கதைகள்.

வி.வி.க்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் எடுத்த தன் கணவனை ரவுடிகளிடம் பறிகொடுத்துக் குழந்தைகளுடன் பரிதவித்து நிற்கிறார் மெர்ரில் என்ற பெண்மணி. ”தண்டுவடத்த ஒடச்சுட்டானுங்க, ஆபரேசன் செய்யக் காசு இல்ல; வீட்டுக்கு கொண்டாந்தோம், இடுப்புல புண் பெருசாகி கண்முன்னாடியே செத்தாரு” என விளக்கும் போது, கேட்ட தோழர்களின் ரத்தம் கொதித்தது. ”நாட்டு வெடிகுண்டில் காயம்பட்டு ரத்தம் சொட்டச்சொட்ட போலீசில் புகார் தந்தோம். கம்பெனிக்கு எதிரா கேஸ் எழுதமுடியாதுன்னு வெரட்டிட்டானுங்க” என போலீசு துறையின் வைகுண்டராஜன் விசுவாசத்தை விவரித்தார் கூட்டப்புளி சுனாமி நகரில் தஞ்சமடைந்த கூத்தங்குழியைச் சேர்ந்த பெண்.
”வைகுண்டராஜன் மட்டும் என் கைல கெடச்சா சொருகிடுவேன்” எனத் தன் பருவத்துக்குப் பொருந்தாத முறையில் ஆவேசப்பட்டான் ஒரு மேல்நிலைப்பள்ளி மாணவன். கண்ணெதிரே ரவுடிகளால் தனது ஊர் மக்கள் அடித்துத் துவைக்கப்பட்டதைப் பார்த்த மாணவன் அவன்.
நாடார் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பெருமளவு வசிக்கக் கூடிய கூடங்குளத்தில் இரண்டு நாட்கள் நடந்த பிரச்சாரத்தில் அனைத்து மக்களும் பிரச்சாரத்தை ஆதரித்தனர். நாலே நாலு கைக்கூலிகள் ஒரு இடத்தில் தடுத்தனர். உடனே தானாக முன்வந்து தலையிட்ட பெண்கள், ”மணல் கம்பெனியில் பெறக்கித் திங்கிறவங்கள கண்டுகொள்ளாதீர்கள், தொடர்ந்து பிரச்சாரம் செய்யுங்கள்” என ஊக்கப்படுத்தினர்.
வைகுண்டராஜன் ஆதரவு-எதிர்ப்பு என்று மீனவ கிராமங்கள் இரு முகாம்களாகப் பிளவுபட்டு இருப்பதாக உருவாக்கப்பட்டுள்ள தோற்றம் பொய். அதே போல நாடார் சமூகத்தினர் வைகுண்டராஜனை ஆதரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள கருத்தும் வடிகட்டிய பொய் என்பதை இந்தப் பிரச்சார அனுபவம் காட்டியது. உண்மையில் 99% மக்கள் வி.வி.க்கு எதிராகவே உள்ளார்கள்.
அனைத்துக் கட்சிகளும் அரசும் வி.வி.யின் காலடியில் இருப்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்திருந்த மக்களிடையே நம்பிக்கையை விதைத்தார்கள் தோழர்கள். புரட்சிகர அமைப்புத் தோழர்களின் உதவியுடன், இம்மாவட்டங்களைச் சேர்ந்த ம.உ.பா.மைய வழக்குரைஞர்கள் ராமச்சந்திரன், அரிராகவன், சிவராஜ பூபதி ஆகியோரின் கடும் முயற்சியில் நவம்பர் 23 அன்று நடத்தப்பட்ட தூத்துக்குடி பொதுக்கூட்டம் வி.வி.யை வீழ்த்த முடியும் என்பதற்குச் சாட்சியமாக அமைந்தது.
வைகுண்டராஜனை எதிர்த்து தூத்துக்குடியில் யாரும் கூட்டம் நடத்த முடியாது என்ற கருத்தோட்டத்தைத் தகர்க்கும் விதமாக ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கைகளில் நிரம்பி வழிய எழுச்சிகரமாகத் துவங்கியது பொதுக்கூட்டம். தலைமையுரையாற்றிய ம.உ.பா.மைய மதுரை மாவட்ட துணைச் செயலரும், மதுரை உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான வாஞ்சிநாதன், ”கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களுடன் ம.உ.பா.மையம் துணை நின்று வருவதையும், தாது மணல் கொள்ளையில் உண்மை அறியும் குழுவாகச் சென்றபோது வைகுண்டராஜனின் கைக்கூலிகளிடமிருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்ததையும் விளக்கி, தாது மணற்கொள்ளையும் அணு உலையும் மீனவ மக்களின் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பிரச்சனை” என்று விளக்கினார். தொடர்ந்து பேசிய உவரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அந்தோணி, தனது இலாபத்திற்காக பிறரைக் கெடுக்கும் வி.வி. கம்பெனியைக் கண்டித்து, ஆபத்தான கனிமங்களைக் கொண்ட மணலை அள்ளுவதும், பாதுகாப்பற்ற சூழலில் அதைப் பிரித்தெடுப்பதும் தங்கள் பகுதியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை விவரித்தார். அடுத்துப் பேசிய பெரியசாமிபுரம் எழிலன், ”மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகப் பகுதி வி.வி.நிறுவனத்தால் சிதைக்கப்பட்டிருப்பதையும், பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அவசியமான கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்படுவதையும்” விளக்கினார்.
பெரியதாழை ஊர்கமிட்டித் தலைவர் கான்சீயூஸ், வி.வி.க்குச் சொந்தமான பி.எம்.சி.தாது மணல் நிறுவனம் மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கூடிய தூண்டில் வளைவுப் பாலத்தைச் சிதைத்ததையும், எதிர்த்துப் போராடிய மக்கள் மீது போலீசை ஏவி பொய் வழக்குப் போட்டு இன்றுவரை அலைக்கழிப்பதையும் விவரித்தார்.
கூட்டப்புளி ஊர்த் தலைவர் சந்தியாகு ராயப்பன், மெரினாவைப் போல இருந்த தங்கள் ஊர்க் கடற்கரை, மணல் நிறுவனங்களால் கொடூரமாகச் சிதைக்கப்பட்டதையும், அரசு தாது மணல் அள்ளத் தடை விதித்துள்ள நிலையிலும், மணல் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் விவரித்தார்.
கீழவைப்பாறு சார்லஸ் பட்சேக், தங்கள் ஊரில் கடலரிப்பு, புற்றுநோய் எனப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதையும் கூறி, கலெக்டர் ஆஷிஸ் குமாரிடம் மனு அளித்ததையும் ஆய்வு நடந்ததையும், உடனே அவர் மாற்றப்பட்டதையும் விவரித்தார்.
புன்னக்காயல் ஊர்த் தலைவர் குழந்தை மச்சாது, ம.உ.பா.மையத் தோழர்களின் பிரச்சாரத்தைப் பாராட்டி, தாது மணல் போராட்டத்தில் தங்கள் ஊர் என்றும் துணை நிற்குமென்றார்.
திருநெல்வேலி மாவட்ட மீனவர் கூட்டமைப்புத் தலைவர் ஜோசப், தாது மணல் கொள்ளையர்களால் கூத்தங்குழியில் வெடிகுண்டு கலாச்சாரம் உருவாக்கப்பட்டிருப்பதையும், பல்வேறு அச்சுறுத்தல், இடைஞ்சல்களுக்கு மத்தியில்தான் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எங்கிருந்தோ வந்து மீனவ மக்களுக்காகப் போராடி வரும் தோழர்கள் நன்றிக்குரியவர்கள் – என கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.
லயன்ஸ் டவுன் ஜானி, ”காசு கொடுத்துக் கூட்டம் சேர்ப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். இங்கேயோ கலைந்து போவதற்குத் தலைக்கு 500 ரூபா கொடுக்கிறார்கள் வி.வி.யின் கைக்கூலிகள்” என்று எள்ளி நகையாடினார். ”சுற்றிலும் மீனவ மக்கள்தான் உள்ளனர். யாரும் பிரச்சனை செய்துவிட்டு ஊரைத் தாண்ட முடியாது” என எச்சரித்தார்.
பு.மா.இ.மு. தோழர்களின் புரட்சிகரப் பாடலுக்குப் பின் சிறப்புரை ஆற்றிய ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுத்த முயன்ற வி.வி.யின் கைக்கூலிகளை, இப்படிச் சவடால் அடித்த காடுவெட்டி குருவுடன் ஒப்பிட்டுக் கேலி செய்தார். எந்தப் பிரச்சினையிலும் பொய் வழக்குகளையும், சிறைத் தண்டனைகளையும் எதிர்கொள்ளாமல் குறுக்கு வழியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் இல்லை என்பதை விளக்கினார்.
இறுதியாக, சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கியக் கழக மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையன், சந்தன மரங்களை வெட்டிய வீரப்பனைக் கொள்ளையன் என்றால் மணலைத் திருடி விற்கும் வைகுண்டராசன் மட்டும் எப்படி தொழிலதிபர் ஆக முடியும்? மீள உருவாக்கவே முடியாத ஒரு இயற்கைப் பேரழிவை ஏற்படுத்தும் வைகுண்டராசனைக் கொள்ளையன் என்று கூறுவது குறைவானது என்று பதில் சொன்னார். இன்று காசுக்கும் குவார்ட்டருக்கும் கூச்சலிட வந்திருக்கும் வி.வி.யின் கைக்கூலிக் கும்பல், வி.வி.யை நாடார் சாதித் தலைவராக சித்தரிப்பதைச் சாடினார். அன்றாடம் காலை மூன்று மணி துவங்கி நள்ளிரவு 11 மணி வரை ஓயாமல் உழைக்கும் சிறுவணிகர்களுக்கு, கொள்ளையன் ஒருவனைப் பிரதிநிதி என்று சொல்வது அந்த மக்களை இழிவுபடுத்துவதாகும் என்று இடித்துரைத்தார்.
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராசன், ஆற்றுமணல் கொள்ளையன் ஆறுமுகசாமி மற்றும் கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பழனிசாமி ஆகியோரை இணைக்கும் சங்கிலி தனியார்மயம்தான் என்பதை விவரித்து, இதற்கேற்ப காட் ஒப்பந்தத்திற்குப் பிறகு சட்டங்களும் விதிமுறைகளும் மாற்றியமைக்கப்பட்டதையும் விளக்கிப் பேசினார். இவை ஒரே கொள்ளைத் திட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் என்பதால், இவற்றை எதிர்த்த போராட்டங்களும் ஒருமுகமான தாக்குதலாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். தாது மணல் கொள்ளைக்கும்-அணுசக்தி ஒப்பந்தத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்கி, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதன் பின்னே நடந்த மறைமுக பேரமாக, தோரியம் உள்ள தாதுமணலை ஏற்றுமதி செய்வதற்கான விதிகள் தளர்த்தப்பட்டன என்பதை அம்பலப்படுத்தினார்.
இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் சூறையாடிச் செல்வதுதான் எல்லா காலனியாதிக்கவாதிகளின் கொள்கையாகவும் இருந்தது என்றும், அன்று விடுதலைப் போராட்ட வீரர்கள் எதிர்த்துப் போராடிய அதே கொள்கை, இன்று மறுகாலனியாதிக்கத்தின் கீழ் முன்னேற்றமாகச் சித்தரிக்கப்படுகிறது என்றார். ஓட்டுக்கட்சிகளை நம்பி தெரிந்தே ஏமாறுவது தவறு என்று சொல்லி, பிரம்மாண்டமான எதிரிகளான போஸ்கோ, டாடா போன்றவர்களை கலிங்காநகர், சிங்கூர், லால்கார் போன்ற பகுதிகளில் நடந்த மக்கள் போராட்டங்கள் விரட்டியடித்தன என்பதை விளக்கி, எதிரிகளுக்கு எதிரான ஒரு எழுச்சியின் மூலம் மக்கள் தம் அதிகாரத்தை நிறுவிக்கொள்ள முடியும் என்று நம்பிக்கையூட்டினார்.
தோழரின் உரையைத் தொடர்ந்து ம.க.இ.க. மையக் கலைக் குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடந்தது. ”திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராசன் அரசாங்கம், தேடிக் காலில் விழுவோர்க்கெல்லாம்” என்ற பாடலைக் கேட்டவுடன் மக்களின் உற்சாகம் கரைபுரண்டோடியது. ”எடுத்து வளத்த பங்களா நாய் எசமான் மேலயே எப்.ஐ.ஆர். போடுமா?” என்ற பாடல் வைகுண்டராஜனின் கூலிப்படையாகச் செயல்படும் அதிகார வர்க்கத்தையும் போலீசையும் அம்பலமாக்கியது. இறுதிவரை நிகழ்ச்சிகளை ஈடுபாட்டோடு மக்கள் கவனித்தார்கள். கூட்டத்தின் முடிவில் 55,000 ரூபாய் மீனவ கிராமங்கள் சார்பாக நிதியாக வழங்கப்பட்டது.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சுமார் 200-க்கும் மேற்பட்ட வைகுண்டராஜனின் அடியாட்கள் கூச்சலிட்டுக் கலவரம் செய்ய முயற்சித்தனர். சீருடையில் இருந்த போலீசார் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சிவில் உடையில் இருந்த உளவுத்துறை அதிகாரிகள், குறிப்பாக வைகுண்டராசனின் நெருங்கிய உறவினரான தூத்துக்குடி மாவட்ட போலீசு கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளர் ரவி, அந்தோணி ஆகியோர் கலவரக்காரர்களை வழிநடத்திக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் கட்டைகளை உடைத்து சொந்த முறையில் பாதுகாப்பை உறுதி செய்யத் தொண்டர்கள் தயாரானவுடன் வி.வி.யின் கைக்கூலிகள் காணாமல் போயினர். மக்கள் தம் சொந்தக் கரங்களால் கணக்குத் தீர்க்கத் தயாராகி விட்டால், தாது மணல் கொள்ளையும் முடிவுக்கு வந்து விடும்.
தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
___________________________________
புதிய ஜனநாயம், 2013 டிசம்பர்
___________________________________