privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்உமா மகேஸ்வரி கொலை: சிறுசேரி என்ன நினைக்கிறது ?

உமா மகேஸ்வரி கொலை: சிறுசேரி என்ன நினைக்கிறது ?

-

மா மகேஸ்வரி கொல்லப்பட்டது இப்போது பழைய செய்தியாகிவிட்டது. புதிய பரபரப்புகள் பழையவற்றை தின்று செரிக்கின்றன. எனினும் உமாவின் சக நண்பர்கள், அவர் பணிபுரிந்த வளாக ஊழியர்கள், அந்தப் பகுதி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். தங்களிடையே ரத்தமும், சதையுமாக நடமாடிய ஓர் உயிர் இப்போது இல்லாமல் போனதை அவர்கள் எவ்வாறு உணர்கின்றனர் என்பதை அறிய நினைத்தோம். ஒரு மாலை நேரத்தில் சிறுசேரி தொழில்நுட்ப வளாகத்தில் நுழைந்தபோது நுழைவாயிலில் ஒரே ஒரு காவல்துறை வாகனம் மட்டும் நின்று கொண்டிருந்தது.

சிறுசேரி டி.சி.எஸ்
சிறுசேரி டி.சி.எஸ் கட்டிடம்

அந்த கரிய நிற சாலை எங்கள் முன்னே நீண்டு சென்றது. சற்று தூரம் சென்றதும் இடதுபுறம் படர்ந்து கிடந்த கருவேல புதர்க்காடுகள் தென்பட்டன. சாலையில் இருந்து சுமார் 100 அடி தூரமுள்ள அந்த புதர்களின் இடையில்தான் உமா மகேஸ்வரியின் உடல் கிடந்ததாக சொன்னார்கள். மனம் கனக்க அந்த இடத்தைக் கடந்தோம். எங்கள் முன்னே சாலையின் விளிம்பில் உயர்ந்து நின்றன வானுயர்ந்த கட்டடங்கள். அதுதான் டி.சி.எஸ். நிறுவனம். பக்கவாட்டில் பார்வையைத் திருப்பினால் இன்னும், இன்னும் ஏராளமான நிறுவனங்கள் திரும்பிய திசை எங்கும் தென்படுகின்றன. அது ஒரு தனி உலகம் போல் இயங்கிக் கொண்டிருக்கிறது.

டி.சி.எஸ். நிறுவனத்தை சுற்றிக்கொண்டு பின்பக்கமாகப் போனோம். அங்கே கட்டடத்தின் கடைசிப் பகுதியில் சுமார் 100 இளைஞர்கள் கூட்டம் தேநீர் அருந்திக் கொண்டும் சிகரெட் புகைத்துக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் நின்றனர். எல்லோரது கழுத்திலும் டி.சி.எஸ். நிறுவனத்தின் அடையாள அட்டை மினுமினுத்தது.

தேநீர் குடித்தபடி சிமெண்ட் கட்டையில் அமர்ந்திருந்த நான்கைந்து இளைஞர்களிடம் பேசத் துவங்கினோம். முதலில் மிரண்டனர். பின்னர் மெள்ள, மெள்ளப் பேசத் துவங்கினர்.

‘‘இங்கே 26 ஆயிரம் பேர் வேலைப் பார்க்குறோம் சார். ஆனால் ஒருத்தருக்கு இன்னொருத்தரைத் தெரியாது. அதிகப்பட்சம் எங்க புராஜெக்டுல இருக்குறவங்களைத் தெரியும், அவ்வளவுதான். உமா மகேஸ்வரிங்குற பொண்ணை எங்க யாருக்கும் தெரியாது. அவங்க ஃப்ரெஷ்ஷர்னு நினைக்கிறோம்’’

‘‘அந்தப் பொண்ணை கொலை செய்ததா வட இந்தியத் தொழிலாளர்களை போலீஸ் கைது பண்ணியிருக்கு. அவங்க இதுபோல வேற ஏதாவது குற்றச் செயல்களில் இதுக்கு முன்ன ஈடுபட்டிருக்காங்களா, உங்களுக்குத் தெரியுமா?’’

‘‘அப்படி எதுவும் இல்லைங்க. அவங்க கட்டட வேலைப் பார்க்குறாங்க. அங்கே எதுவும் நடந்திருந்தா எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த சிப்காட்குள்ள எவ்வளவோ கம்பெனிகள் இருக்குது. எல்லாத்துலயும் என்ன நடக்குதுன்னு நமக்கு என்ன தெரியும்?’’

‘‘ஆனா வட இந்தியத் தொழிலாளர்கள்தான் இப்படிப்பட்ட குற்றங்களை செய்யுறதா போலீஸும், மீடியாவும் சொல்லுதே?’’

‘‘அது தப்புங்க. இந்த வழக்குல வட இந்தியர்கள் குற்றவாளி, அவ்வளவுதான். அதுக்காக வட இந்தியர்கள் எல்லாரும் குற்றவாளிகள்னு சொல்றது தப்பு. இப்போ, நாங்க ஆன்சைட் வேலைக்கு வெளிநாடு போறோம். அங்கே ஏதோ ஒரு தமிழன் தப்புப் பண்ணிட்டான்னு வைங்க. மொத்தத் தமிழர்களுமே இப்படித்தான்னு சொன்னா நமக்கு கஷ்டமா இருக்கும்ல… அதுபோலதான்’’

அவர்களின் விசாலப் பார்வையை மதிக்கத் தோன்றியது. இன உணர்வை நீக்கம் செய்து இரு தரப்பும் தொழிலாளர்கள் என்ற கோணத்தில் அதை புரிந்து கொண்டுள்ளனர் என்றபோதிலும், ‘‘வட இந்தியர்களிடம் நாகரிகம் இல்லை. கல்வியறிவு இல்லை’’ என்பதும் அவர்களின் கருத்துதான். மேற்கொண்டும் உமா மகேஸ்வரி குறித்துக் கேட்க முயற்சித்தோம். ஆனால் அவர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே இல்லை. ‘இருந்தாங்க, இப்போ இல்லை, அதுக்கு நாம என்ன பண்ண முடியும்?’ என்ற தொனியில் அமைந்திருந்தன அவர்களின் பதில்கள். தங்களுடன் பணிபுரிந்த ஒரு சக உயிரின் இழப்பு அவர்களை சிறு அளவிலும் தொந்தரவு செய்யவில்லை.

‘‘இதுக்கு யார் என்ன சார் செய்ய முடியும்? கம்பெனி வேலைதான் கொடுக்கும். கூடவே துணைக்கு ஆளையுமா அனுப்பும்? நடந்தது நடந்து போச்சு. அதை விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான். மத்தபடி எங்க கம்பெனியில பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம் பக்கா சார். ஐ.டி. கார்டு இல்லாம யாரும் உள்ளே வரவே முடியாது’’

நவீன ஐ.டி. தலைமுறை மனப்போக்கின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அவர்கள் பிரதிபலித்தனர். அவர்கள் உதிரிகளாக பிரிக்கப்பட்டிருப்பது உடல்கள் என்ற அளவில் மட்டுமல்ல… அக மனதிலும் அவர்கள் உதிரிகளே. எல்லோரின் மனதும் தனித்தனி ஃபோல்டரில் சேமிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் ஐ.டி. துறையில் அண்மை காலமாக நடந்துவரும் அதிவேக ஆட்குறைப்புக் குறித்துக் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அங்கிருந்து நகர்ந்தோம். மறுபடியும் டி.சி.எஸ். அலுவலக வாயிலுக்கு வந்தபோது வரிசையாக பர்வீன் டிராவல்ஸ் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. பர்வீன் டிராவல்ஸை சேர்ந்த சுமார் 110 பேருந்துகள், டி.சி.எஸ். நிறுவனத்துடன் வாகன ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. ஊழியர்களை அழைத்து வருவதும், திரும்ப அழைத்துச் செல்வதும் இவர்கள்தான். நாங்கள் அங்கு சென்ற நேரம் ஒரு ஷிப்ட் முடியும் நேரம். பேருந்துகள் தயார் நிலையில் நின்றுகொண்டிருந்தன. அங்கு நின்றிருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுடன் பேசினோம்.

‘‘ஒரு பொண்ணை கொலை பண்ணிட்டதா சொல்லிக்கிறாங்க சார். அதைப்பத்தி நமக்கு என்னா சார் தெரியுது? ஒண்ணும் தெரியாது. வருஷக்கணக்குல பஸ்ஸுல வர்றாங்க. ஆனால் யாரும் ஒரு வார்த்தைக் கூட பேச மாட்டாங்க சார். நம்மக்கிட்ட பேசாதது மட்டும் இல்ல… அவங்களே அவங்களுக்குள்ள பேசிக்க மாட்டாங்க. ஏறி உட்கார்ந்ததும் போன் ஒயரை காதுல சொருகிக்குவாங்க. பேசுறாங்களா, பாட்டுக் கேட்குறாங்களான்னுக் கூட நமக்குத் தெரியாது. அமைதியா வருவாங்க..’’

சிறுசேரி டி.சி.எஸ்
டி.சி.எஸ்

ஓர் இளைஞர் குறுக்கிட்டார். ‘‘பஸ் பஞ்சரானா கூட ஏன், எதுக்குன்னு கேட்குறது இல்லை. ‘வேற பஸ் ரெடி பண்ணுங்க’னு கூட சொல்ல மாட்டாங்க. நாமளா பார்த்துதான் பண்ணனும். வர்றதுக்கு லேட்டாச்சுன்னா மட்டும் கம்பெனில நம்பர் வாங்கி நமக்கு போன் பண்ணுவாங்க, ‘டிரைவர் அண்ணாவா… ஃபைவ் மினிட்ஸ்ல வந்திருடுறேண்ணா… ப்ளீஸ்’னுவாங்க. வந்து ஏறுனதும் ஒரு தேங்க்ஸ், அவ்வளவுதான்’’ என்று சிரிக்கிறார்.

மற்றொரு பணியாளர், ‘‘நைட் 8 மணிக்கு வேலையை முடிச்சுட்டுப் போனா இந்த மாதிரி கொலை எல்லாம் ஏன் நடக்கப்போகுது’’ என்றார்.

‘‘நமக்கு வருமானம் பத்தலைன்னு ஓவர்டைம் பார்க்குறோம். அதுபோல அவங்க வேலைப் பார்க்கலாம் இல்லையா?’’

‘‘என்னது.. அவங்களுக்கு சம்பளம் பத்தலையா?’’ என்று அதிர்ச்சியடைந்தார் அந்த இளைஞர்.

இவர்களின் பேருந்து சேவை இரவு 10 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு வாகன வசதி தேவைப்படுவோருக்கு நிறுவனத்தில் இருந்து ‘கேப்’ ஏற்பாடு செய்து தருவார்களாம்.

உமா மகேஸ்வரி வேலை முடிந்து சென்ற இரவு 10.00&10.30 மணி என்பது அதிகமான வாகனங்கள் சென்றுவரும் நேரம். தொழில்நுட்ப வளாகத்தில் இருக்கும் நிறுவனங்களில் அது ஷிப்ட் முடிந்து, துவங்கும் நேரம் என்பதால் ஏராளமானோர் உள்ளே வந்தும், வெளியே சென்றும் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில்தான் உமா மகேஸ்வரியை வட இந்தியத் தொழிலாளர்கள் இழுத்துச் சென்றனர் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை என்று குறிப்பிட்டனர் ஓட்டுனர்கள். ஆனால் அவர்களே, ‘‘கண்ணுக்கு நேரா யாருக்கு எது நடந்தாலும் இவங்க கண்டுக்க மாட்டாங்க சார். அதனால் ஒருசிலர் பார்த்திருந்தாலும் கம்முன்னு இருந்திருப்பாங்க’’ என்றார்கள்.

இருள் கவியத் துவங்கியிருந்தது. மஞ்சள் தலைக்கவசமும், ஃபுளோரசன்ட் மேல்அங்கியும்  அணிந்திருந்த வட இந்தியத் தொழிலாளர்கள் சைட்டில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் சிறு பையன்கள். காலையில் இருந்து உழைத்து களைத்த சோர்வு. ஒல்லியான தேகம். நரம்பு புடைத்திருக்கும் கை, கால்கள். யாருக்கும் உடம்பில் கொஞ்சமும் சதைப்பற்று இல்லை. மெதுவாய் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். தங்கள் சொந்த ஊர் விவரங்களை தயங்கிப் பேசியவர்கள் உமா மகேஸ்வரியின் பெயரைச் சொன்னதும் ‘‘எங்களுக்கு எதுவும் தெரியாது’’ என்று ஓட்டம் எடுத்தனர். பெரும் அச்சம் சூழ்ந்திருக்கும் அவர்களின் கனக்கும் மனதின் படபடப்பை புரிந்துகொள்ள முடிந்தது. கடந்த சில நாட்களாக, பார்க்கும் கண்களில் எல்லாம் வெளிப்படும் குரோதத்தையும், வன்மத்தையும் எதிர்கொள்பவர்கள் அல்லவா? காவல்துறையின் மிரட்டலையும், விசாரணையையும் தினம், தினம் அனுபவிப்பவர்கள் அல்லவா? அந்த அச்சம் நியாயமானதே.

சிறுசேரி மக்கள்
சிறுசேரி மண்ணின் பூர்வகுடிகள்

வெளியே வந்தோம். இடதுபக்கம் திரும்பி கொஞ்சம் வெளியே வந்தால் வரிசையாக கடைகள். ‘சிறுசேரி’ என்ற பெயர்ப்பலகையும், அதன் பின்னால் பூர்வீக சிறுசேரி ஊரும் தென்பட்டன. இந்த மண்ணின் பூர்வகுடிகள் என்ன கருதுகின்றனர்? உள்ளே சென்றோம். ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து நான்கைந்து பெண்கள் கதை பேசிக் கொண்டிருந்தனர். ஒரே சிரிப்பு சத்தம். அவர்களிடம் பேச்சுக் கொடுத்த போது வேறொரு முனையில் இருந்து துவங்கினார்கள்.

‘‘இந்த கம்பெனிக இருக்குற இடத்துலதான் நாங்க காலம், காலமா விவசாயம் செஞ்சு வாழ்ந்தோம். நெல்லு, கம்பு, தர்ப்பூசணி, காய்கறிக எல்லாம் போடுவோம். விதவிதமா வெளையும். இப்போ செத்துப்போன பொண்ணு வேலைப் பார்க்குற இடம்தான் என் இடம். நானும், என் ஊட்டுக்காரரும் அதுல வெள்ளரித் தோட்டம் போட்டது இப்பவும் எனக்கு நினைவு இருக்கு. உள்ளே ஒரு ஏரி இருந்துச்சு. அதுலேர்ந்துதான் தண்ணீ பாய்ச்சுவோம். இந்த சிப்காட் காரன் வந்து எல்லாத்தையும் புடுங்கிட்டு உட்டுட்டான். எங்க ஆளுகளுக்கு எல்லாம் வேலை தர்றேன்னான். கடைசியில எங்க வூட்டு பொம்பளை சனத்துக்கு குப்பை அள்ளுற வேலைதான் கொடுத்திருக்கான்’’ என்று ஆற்றாமையுடன் பேசும் அனைவரும், கோடிகளில் விலைபோகும் அந்த நிலம் தங்களிடம் இல்லாமல் போய்விட்டதே என்று ஏங்குகிறார்கள்.

உமா மகேஸ்வரியின் பேச்சைத் துவங்கியதுமே, ‘‘பயம்மா இருக்குதுப்பா… இந்தா இருக்குற காம்பவுண்ட் சுவரைத் தாண்டிதான் கொலை நடந்த இடம் இருக்கு. இன்னைக்கு அந்தப் புள்ளைக்கு நடந்தது, நாளைக்கு நமக்கு. சேதி தெரிஞ்ச அன்னையிலேர்ந்து திக்கு, திக்குன்னு இருக்கு, தூக்கம் வரமாட்டங்குது. நம்ம புள்ளைகளும் இப்படித்தானே ஏதோ ஒரு ஊர்ல வேலைப் பார்க்குதுக… அதுகளுக்கும் இப்படி ஒரு ஆபத்து நடக்க வாய்ப்பு இருக்குல்ல..’’ என்று கிராமத்துப் பெண்களுக்கே உரிய இயல்புடன் பேசினார் ஒரு பெண். எல்லோரது கருத்தும் அதுதான்.

ஆனால் வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த அவர்களின் கருத்து ஊடகங்களின் கருத்தை அப்படியே எதிரொலிக்கிறது. ‘‘இந்திக்காரங்க வந்தப் பிறகுதான் இவ்வளவு அட்டூழியம். ஒரே திருட்டு. ரோட்டுல நடக்க முடியலை. கடைக்குப் போனா, பொம்பளைங்க நிற்கிறாங்களேன்னு நகர்ந்து நிற்கிறது கூட இல்லை. இப்போ கொலை வேற செஞ்சிருக்கானுங்க. அவங்களை வேலை செய்யுற இடத்துலயே வெச்சுக்கு சொல்லுங்க. வெளியே விட்டா எல்லாருக்கும் ஆபத்து’’ என்று அவர்களை ஏதோ வேற்றுகிரக வாசிகளைப் போலவே கருதிப் பேசினார்கள். வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த விசமத்தனமான கருத்துக்கு அவர்கள் இரையாகியுள்ளதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

இது மிகவும் துயரமானதுதான். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் பீகார், ஒரிசா, வட கிழக்கு மாநிலங்களில் இருந்து இங்கு வந்து, குறைந்த கூலிக்கு நாள் முழுக்க கடும் உடல் உழைப்பை மேற்கொள்ளும் அவர்களை ஓரிரு சம்பவங்களை முன்வைத்து கொலையாளிகளாக சித்தரிப்பது எத்தனை மோசமானது? பகலும், இரவும், பனியும், வெயிலும், கோடையும், குளிரும் கடந்து அந்தத் தொழிலாளர்கள் உழைத்துக் கொட்டுவது கொலையாளி பட்டம் பெறவா? அவர்களின் எண்ணவோட்டத்தை அறிந்துகொள்ள மற்றுமொரு முறை முயற்சிக்கலாம் என்று சிப்காட் உள்ளே சென்றோம்.

காக்னிசென்ட் நிறுவனத்தின் இரவு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. வரிசையாக நான்கைந்து தொழிலாளர்கள் நாங்கள் சொல்வதைக் கூட கேளாமல் அச்சத்துடன் விலகிச் சென்றனர். இளமைத் துடிப்பும், அரும்பு மீசையும் நிரம்பிய ராஜ் என்ற இளைஞன் நின்று பேசினார். கூடவே மற்றொரு சிறுவனும் இருந்தான். ராஜுக்கு 21 வயது. ஒரிசா மாநிலத்தின் சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். தேர்ந்த அனுபவசாலியாக அவர் பேசியவை எளிய சொற்கள்தான். ஆனால் மனதை நொறுக்க வல்லவை.

வட மாநிலத் தொழிலாளர்கள்ராஜ், ஊரில் மினிபஸ் ஓட்டுனர். அந்த வேலை வேண்டாம் என்று அம்மா தடுத்ததால் இந்த வேலைக்கு வந்துள்ளார். இங்கு கட்டட வேலை பார்க்கிறார். அவருக்கு இரண்டு அண்ணன்கள். இருவரும் திருமணம் முடிந்து தனித்தனியே சென்று விட்டனர். ஒரு தங்கைக்கும் திருமணம் ஆகிவிட்டது. அம்மா மட்டும் தனித்திருக்கிறார். வீட்டில் திருமணம் ஆக வேண்டியவர் ராஜ் மட்டுமே.

‘‘அப்புறம் என்ன பையா.. அடுத்து உங்க கல்யாணம்தானே?’’ என்ற கேள்விக்கு அவரிடம் சிறு வெட்கத்தையேனும் எதிர்பார்த்தோம். எதுவும் இல்லை. ‘‘எதுவும் லவ்வா?’’ என்றதும் இதழோரம் ஒரு விரக்தி குறுநகை எட்டிப் பார்த்தது. ‘‘நிறைய கடன் இருக்கு சார். தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்கினது’’ என்றார். ராஜ் விவரிக்கும் கணக்குப்படி சுமார் 50 ஆயிரம் ரூபாய் கடன் அவர்களுக்கு இருக்கிறது. அதை அடைத்தபிறகு இன்னும் மூன்று, நான்கு வருடங்கள் கழித்துதான் திருமணமாம். பல வருடங்களுக்கு முன்பே பக்கவாதம் வந்து படுத்தப் படுக்கையாய் இருந்து இறந்துபோன அப்பா மட்டும் இருந்திருந்தால் தன் வாழ்க்கையின் துயரங்கள் சற்று குறைவாக இருந்திருக்கும் என்று மனம் கனக்க சொல்கிறார் ராஜ்.

‘‘10 வயசுலயே கோவாவுக்கு வேலைக்குப் போனேன். நான் ரொம்ப சின்னப் பிள்ளையா இருக்கேன்னு வேலை தரலை. இருந்தாலும் வந்துட்டோம், திரும்பப் போகக்கூடாதுன்னு ஒரு ஹோட்டல்ல வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு வருஷம் வேலை பார்த்து ஊருக்கு 10 ஆயிரம் கொண்டு போனேன்’’ என்கிறார்.

இவர்களுக்கு நான் ஒன்றுக்கு 300 முதல் 350 ரூபாய் வரை சம்பளம். மாதம் ஒன்றுக்கு சுமார் 9,000 ரூபாய். அதில் 1,000 ரூபாய் செலவுக்கு வைத்துக்கொண்டு மீதியை ஊருக்கு அனுப்பிவிடுகிறாராம். ‘‘இந்தக் கம்பெனியில் வேலை பார்க்குறவங்க எவ்வளவு சம்பாதிக்கிறாங்கன்னு தெரியுமா?’’ என்று கேட்டதற்கு, ‘‘அவங்க கூட இணைச்சு யோசிக்கிறதே தப்பு. இது எங்க தலைவிதி. வேற என்ன பண்றது?’’ என்கிறார். சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லும் திட்டம் எதுவும் தீர்மானமாக இல்லை என்றும், ‘வாழ்க்கை எப்படிப் போகிறதோ அப்படியேப் போக வேண்டியதுதான்’ என்று ஒரு ஞானியைப் போல பேசிய ராஜிடம் உமா மகேஸ்வரியின் மரணம் குறித்துக் கேட்டோம்.

‘‘யாரோ ஒருசிலர் தப்பு செய்யுறதால எங்க எல்லாருக்குமே கெட்டப் பேர். நாங்க இங்கே பொழைக்கத்தான் வந்திருக்கோம். எங்களுக்கும் ஊர்ல அக்கா, தங்கச்சி இருக்காங்க’’ என்கிறார். வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த மொத்த பொதுப் புத்தியின் கேள்விகளுக்கும் அது பொருத்தமான; போதுமான பதிலாக இருந்தது.

இரவின் அடர்த்தி மிகுந்திருந்தது. அவர்கள், தங்களின் குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டும். இருவரும் சென்று சமைத்து உண்ண வேண்டும். பகல் எல்லாம் உழைத்த உடல் தசைகளுக்கு சற்றே ஓய்வு தர வேண்டும். அடுத்த நாள் உழைப்புக்குத் தயாராக வேண்டும். நாங்கள் விடைபெற்றோம்.

உமா மகேஸ்வரியின் நினைவுகளை இந்த அளவுதான் சிறுசேரி வைத்திருக்கிறது. இனி எத்தனை நாட்கள் அது நீடிக்கும் என்று தெரியவில்லை. சிறுசேரி மக்கள், ஐடி ஊழியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், வட இந்தியத் தொழிலாளிகள் என உழைக்கும் மக்கள் சங்கமிக்கும் அந்த இடத்தில் உண்மையில் எந்த சங்கமித்தலும் இல்லை. இருந்திருந்தால் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்.

–    வினவு செய்தியாளர்கள்.