privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்தடை முறித்து கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்புக் கூட்டம்

தடை முறித்து கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்புக் கூட்டம்

-

“தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது – மக்கள் போராட்டமே தீர்வு” -என்ற தலைப்பில் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் ஏப்ரல் 14 அன்று திங்கள் கிழமை கூடங்குளம் அற்புதம் சாமுவேல் திருமண மண்டபத்தில் அரங்கக் கூட்டமும்-கலைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உத்தரவு பெறப்பட்ட கதையைச் சொன்னால்,நம் நாட்டில் காவல் துறையின் அதிகாரத்துக்கு முன்னால் அரசியல் சட்டம், கருத்துரிமை, ஜனநாயகம்,காவல் சட்டங்கள் படும் பாட்டை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

அரசியல் சட்டப்படி, ஆயுதங்களின்றி கூட்டமாகக் கூடுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. இது மக்களின் அடிப்படை உரிமையென வரையறுக்கப் பட்டுள்ளது. காவல் சட்டங்களின்படி பொது இடங்களில், சாலைகளில் கூடுவதற்கு-ஒலிபெருக்கி வைத்துக் கொள்வதற்க்கு அனுமதி பெறவேண்டும். இவ்வாறு கூட்டம் நடத்த அனுமதி கோரும் பட்சத்தில் காவல்துறை அதை மறுக்கக் கூடாது-வரைமுறைப்படுத்தலாம் என்பதே மாவட்ட, மாநகர காவல் சட்டங்களாகும்.

மேற்கண்ட எந்த சட்டமும் ஓர் உள்அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்குப் பொருந்தாது. உதாரணத்திற்க்கு திருமண மண்டபத்தில், சமுதாயக் கூடங்களில், விடுதிகளில், கல்வி நிலையங்களில் நடைபெறும் கருத்தரங்குகள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி தேவை இல்லை என்பது உலகறிந்த சட்டநிலை. சட்ட அறிவே இல்லாத சாமானிய மக்களுக்கும் இது தெரியும். எல்லோருக்கும் தெரிந்த இச்சட்ட நடைமுறையை அரசியல் சட்டத்தின் காவலர்களான உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும், அரசு வழக்கறிகளுக்கும் தெரிய வைக்க பத்து நாட்கள் போராட வேண்டிருந்தது என்பதை உங்களால் நம்ப முடியுமா?

கூடங்குளம் மக்கள் கேட்டுக் கொண்டதன்படி கடந்த மார்ச் 30 அன்று அணு உலைப் பிரச்சனை தொடர்பாக அரங்கக் கூட்டம் நடத்தத் தீர்மானித்து, திருமண மண்டபத்தை முன்பதிவு செய்து, துண்டறிக்கை விநியோகம் செய்தோம். உடனே திருமண மண்டபத்தின் உரிமையாளரையும், பொதுமக்களையும் காவல்துறை மிரட்டிய நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் சிவராச பூபதி மூலம், கூடங்குளம் காவல் துறை அரங்கக் கூட்டத்திற்க்கு தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவிடக் கோரி மார்ச் 24-அன்று மனுத்தாக்கல் செய்தோம். விசாரணைக்கு வந்த மார்ச் 25 அன்றே முடிய வேண்டிய எளிய வழக்கை நீதிமன்றமும்,காவல் துறையும் படுத்திய பாடு வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாதது.

மார்ச் 25-ல் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்த வழக்கு மார்ச் 27-ம் தேதி அரசு தரப்பு பதில் மனுவுக்காக வாய்தா போடப்பட்டது. 27-ம் தேதி பதில் மனுத் தாக்கல் செய்த கூடங்குளம் காவல்துறை பல பக்கங்களுக்கு பழைய போராட்டத்தை, வழக்குகளைப் பற்றி எழுதி, மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் துண்டறிக்கை கொடுத்ததற்காக வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், கூட்டம் நடத்தினால் போராட்டம் வெடிக்கும், காவலர்கள் தேர்தல் பணிக்குச் சென்று விட்டதால் பாதுகாப்பு வழங்க முடியாது, மேலும் மக்கள் இரு பிரிவாக இருப்பதால் கலவரம் வெடிக்கும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே அனுமதி வழங்கக் கூடாது எனச் சொன்னது.

மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் “நாங்கள் காவல்துறையிடம் அனுமதி கேட்கவில்லை. அரங்கக் கூட்டத்திற்க்கு அனுமதி தேவையில்லை. காவல் துறை சட்டவிரோதமாக தொந்தரவு செய்கிறது. அதைத் தடுக்கக் கோருகிறோம் எனச் சொல்லி, அரங்கக் கூட்டத்திற்க்கு அனுமதி வேண்டும் என எந்தச் சட்டத்தில் உள்ளது?” எனக் கேட்க மவுனமான அரசு வழக்கறிஞர், சிறப்பு அரசு வழக்கறிஞர் நாளை இவ்வழக்கில் வாதிடுவார் என்றார்.

மறுநாள் வழக்குப் பட்டியலில் வழக்கே இல்லை. உடனே நீதிபதியிடம் காலை 10.30 மணிக்கு முறையிட்டு மதியம் 2.15 மணிக்கு வழக்கை எடுக்கக் கோரினோம். அதன் பின் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆஜராகி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மண்டபத்தில் கூட்டம் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டுமென்றார். விதியைக் காட்டுங்கள் எனக் கேட்டபோது கையில் இல்லை என்றார். உடனே நாம் தேர்தல் நடத்தை விதிகளைக் கொடுத்து-விதிகளில் எங்கும் அவ்வாறு குறிப்பிடவில்லை எனச் சொல்ல, அதைப் பார்த்த நீதிபதி இல்லைதான்,  இருந்தாலும் அரசு தரப்பு சொல்லட்டும், வேறு ஏதாவது பாயிண்ட் இருந்தாலும் சொல்லுங்கள் எனச் சொல்லி வழக்கை ஏப்ரல்1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஏப்ரல் 1-ம் தேதி மறுபடியும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மறுநாள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பு கேட்க, நாம் சட்டம் தெளிவாக இருக்கும்போது வாய்தா தேவையில்லை எனச் சொன்னபோது அதை ஏற்க மறுத்த நீதிபதி ஏப்ரல் 2-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். ஏப்ரல் 2 அன்று கூடுதல் பதில் மனுத் தாக்கல் செய்த கூடங்குளம் காவல்துறை “அரங்கக் கூட்டம் நடக்கும் மண்டபம் அணு உலையிலிருந்து 500 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. அணு உலை இயங்கத் தொடங்கியபின் கடந்த ஆறு மாதங்களாகப் போராட்டம் இல்லை, 26.11.2013-ல் கூத்தன்குழி கிராமத்தில் அணு உலை ஆதரவு-எதிர்ப்பு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு 8 நபர்கள் இறந்து விட்டனர், வள்ளியூர் சப்-டிவிசனில் காவல் சட்டம் அமலில் உள்ளது. எனவே கூட்டம் நடத்தினால் போராட்டம் வெடிக்கும், நடத்தக் கூடாது” என்றனர்.

உடனே நாம் “வழக்கின் மையப் பொருள்-‘அரங்கக் கூட்டத்திற்க்கு காவல்துறை அனுமதி தேவையா?’ என்பதே. காவல் சட்டம் பொது இடங்களில் கூடுவதற்கு மட்டுமே பொருந்தும். கூத்தன்குழிப் பிரச்சனை தாதுமணல் கொள்ளை தொடர்பானது, காவல்துறை தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தருகிறது. சட்டம் என்ன என்பதைப் பேச வேண்டும். வழக்கை திசைதிருப்பக் கூடாது, நீங்கள் சட்டப்படி என்ன வேண்டுமானாலும் முடிவெடுங்கள்” என நீதிபதியிடம் சொல்லி, ஏற்கனவே உள்ள சில முன்தீர்ப்புகளைக் கொடுத்தோம். பின்பு தேர்தல் விதிகள் உள்ளது எனச் சொன்னீர்களே என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டபோது “எஸ்.பி.இருப்பதாகச் சொல்கிறார், ஆனால் இதுவரை என்னிடம் கொடுக்கவில்லை” என்றார்.

பின்பு, “கூட்ட இடத்தை மாற்றச் சொல்லுங்கள், மாலையில் பாதுகாப்பு வழங்க முடியாது-பகலில் நடத்தச் சொல்லுங்கள், கூட்டம் நடக்கும் தினத்தில் வேறு போராட்டம் நடத்தக் கூடாது, அணு உலைப் பக்கம் செல்லக் கூடாது, கூட்ட அரங்கிற்க்கு வெளியே ஸ்பீக்கர் வைக்கக் கூடாது, துண்டறிக்கை விநியோகிக்கக் கூடாது” என்றார். உடனே நீதிபதி, “நீங்கள் இடத்தை மாற்றி, மற்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.

உடனே நாம் “காவல் துறை அரங்கக் கூட்டத்திற்க்கு நிபந்தனை விதிப்பது கேலிக்கூத்தாக உள்ளது. இடத்தை மாற்ற முடியாது. துண்டறிக்கை விநியோகிக்கக் கூடாது என்று காசுமீரில் கூடச் சொல்ல மாட்டார்கள்” என்று சொல்லி நீங்கள் “சட்டப்படி முடிவெடுங்கள்” எனச் சொன்னோம். “நீங்கள் கூடங்குளம் மக்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். நாளை வாய்தா போடுகிறேன்” என்றார்.

மறுநாளோ, வழக்குப் பட்டியலில் வழக்கே இல்லை. ஏப்ரல் 3 அன்று காலை 10.30 மணிக்கு நீதிபதியிடம் முறையிட்டு மதியம் 2.15 மணிக்கு வழக்கை எடுக்கக் கோரினோம். மாலை 4.30 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “இடத்தை மாற்றினால் கூட்டம் நடத்தவே தேவை இல்லை, துண்டறிக்கை விநியோகித்தே தீருவோம், மற்ற நிபந்தனைகள் பெரிய பிரச்சனை இல்லை” என்று சொல்லி கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தோம். அதன் பின்பும் உத்தரவு பிறப்பிக்க மனமில்லாத நீதிபதி ஏப்ரல்4-க்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

ஏப்ரல் 4-ம் தேதி காலை இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது என்ற நிலையில் அரசு வழக்கறிஞரிடம், “இனி போராட வேண்டிய இடம் கூடங்குளம் அல்ல, இன்று இவ்வழக்கு முடியாவிட்டால் திங்கட்கிழமை இதே நீதிமன்றத்தின் உள்ளாக உண்ணாவிரதம் இருப்போம். வரும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்” எனச் சொன்னபின்பு மதியம் 1.30 மணிக்கு, “வழக்கை இதர நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கலாம்” என்று சொன்னார்.

அப்போதும் நீதிபதி, “இடத்தை மாற்றுகிறீர்களா? துண்டறிக்கை வேண்டாமே?” என்றார். முடியாது என்ற பின்பு மாலை 4.00 மணிக்கு மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்து இவ்வழக்கில் ஆஜரான மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் “நீங்கள்தான் கூட்டத்திற்க்கு தலமையேற்று நடத்துகிறீர்களா?” என்று கேட்டு ஆமாம் என்று சொன்ன பின்பு உத்தரவு பிறப்பிக்கிறேன் என்றார். அதன்பின் ஏப்ரல் 8-ம் தேதி உத்தரவு கையில் கிடைத்தது.

நெல்லை அரங்கக் கூட்டம்
அணு உலை எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக 2012 ஏப்ரல் மாதம் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய அரங்கக் கூட்டம் – 2 வருடங்கள் கழித்து 2014-லிலும் கூடங்குளம் போராட்டத்திற்கு இந்த ஜனநாயகம் அனுமதி வழங்க மறுக்கிறது. நீதிமன்ற போராட்டத்திற்கு பிறகே கூட்டம் நடத்த அனுமதி தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.

இனியும் சொல்வீர்களா? இந்த நாடு ஜனநாயக நாடு என்று?

இனியும் சொல்வீர்களா? இந்த நாட்டில் அரசியல் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதென்று?

இனியும் சொல்வீர்களா?

இந்த நாட்டில் எல்லோருக்கும் கருத்துரிமை உண்டென்று?

அரசாங்கத்தின் சட்டங்களை நீதிமன்றமும்-காவல் துறையுமே ஒப்புக் கொள்ள மறுக்கும் நிலையில் இந்த அரசமைப்பு முறை தோற்றுப் போய் விட்டதென்பதே அதன் பொருள். அரசமைப்பு முறை மட்டுமல்ல கூடங்குளம் அணு உலையும் தோற்றுப் போனதுதான்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் அணு உலைக்கு எதிரான கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்களின் போராட்டத்தோடு ஆரம்பம் முதலே இணைந்து போராடி வருகிறது. இடிந்தகரை-கூடங்குளம் பகுதியில் இருந்து இப்போராட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றது. மார்ச் 19 தடியடி,முற்றுகை, செப்டம்பர் 10 துப்பாக்கி சூடு நடந்த போது மக்களோடு மக்களாக இருந்து போராடியது மனித உரிமை பாதுகாப்பு மையமும்,அதன் வழக்கறிஞர்களும்தான். இப்போதும் அணு உலை, தாதுமணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில்  உங்களுடன் இணைந்து நிற்பதும் மனித உரிமை பாதுகாப்பு மையம்தான்.ஆகவே வாருங்கள் இணைந்து போராடுவோம். அணு உலையை மூடுவோம். நம் மண்ணை, மக்களை, தலைமுறைகளைப் பாதுகாப்போம்.

தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது !
மக்கள் போராட்டமே தீர்வு !

தடைகள் பல தகர்த்து மதுரை உயர்நீதிமன்ற அனுமதியுடன் நடைபெறும்

அரங்க கூட்டம் & கலை நிகழ்ச்சி

நாள் 14.04.2014 திங்கள்
நேரம்
: 2.00 – 6.00 மணி
இடம்
: அற்புதம் சாமுவேல் கல்யாண மண்டபம், பைபாஸ்ரோடு, காந்திநகர், கூடங்குளம்

தலைமை
வழக்கறிஞர் – சே. வாஞ்சிநாதன், மதுரை உயர்நீதிமன்றம்,
துணைச் செயலாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டம்

உரையாற்றுவோர்
திரு எஸ்.ஏ.ஜோசப், தலைவர், நெல்லை மாவட்ட மீனவர் கூட்டமைப்பு
திரு எஸ்.வி அந்தோணி
, முன்னாள் ஊராட்சித் தலைவர், உவரி
வழக்கறிஞர் க. சிவராசபூபதி, குமரி மாவட்ட செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்,
வழக்கறிஞர் சே தங்கப்பாண்டி, அமைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், நெல்லை

சிறப்புரை
வழக்கறிஞர் சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மற்றும் வழக்கறிஞர்கள், உள்ளூர் தலைவர்கள்

அன்பார்ந்த மக்களே!

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் 2 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் மகள் ஆதரவைப் பெற்றுள்ளது. அணு உலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தேச துரோகம், அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் உள்பட ஆயிரக்கணக்காக பொய் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகள் அங்கேயே நிலை கொண்டுள்ளன. அந்த வட்டாரமே கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அணு உலைகளை தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே போலீசுப்படை அங்கே நிரந்தரமாக வைக்கப்படும், காஷ்மீர் போல கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படும். மக்களுக்கு நிரந்தர அச்சுறுத்தலாக இருக்கும். சொந்த ஊரிலேயே அகதிகளைப் போல நாம் வாழ வேண்டும்.

இடிந்தகரை மக்கள்
போராடும் இடிந்தகரை மக்கள்

ஓட்டுக்காக அப்போதைக்கு அணு உலை எதிர்ப்பு நாடகம் ஆடிவந்த ஓட்டுக் கட்சிகள் எல்லாம் தேர்தல் வந்து விட்ட நிலையில் வாய்மூடி மவுனிகளாகி விட்டனர். அணு உலை பற்றி எதுவுமே பேச மறுக்கின்றனர். அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி (தமிழ்நாட்டில் ஏழை மக்கள் கட்சி) கூட அணுஉலையை மூட வேண்டும் என்றச் சொல்லவில்லை பொத்தம் பொதுவான கருத்தையே சொல்லி வருகின்றனர். மக்கள் ஓட்டுப் போடுவதனால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் அதிகாரத்துக்கு வந்த பின் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அணு உலை, தாது மணல் மற்றும் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது, பாராளுமன்ற, சட்டமன்றங்களில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுத்தான் நடைமுறைக்கு வருகிறது. நீதிமன்றங்களும் அதை ஆதரிக்கின்றன. இயற்கை வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்து நமது வாழ்வாதாரங்களை அழிப்பதே இன்றைய உலக மயமாக்கக் கொள்கையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இவற்றைத் தடுத்து நிறுத்துவது என்பது இயலாது. அணு உலையை மூடுவது என்பது தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டது. தேர்தல் அரசியலுக்கு வெளியேதான் இதற்கு தீர்வு இருக்கிறது.

ஓட்டுப் பொறுக்கும் எந்தக் கட்சியும் தேர்தல் சமயத்தில் கூட அணு உலைக்கு எதிராகப் பேசவில்லை. கூடங்குளம் பகுதி மக்கள் என்ன நிலையெடுப்பது? ஒரு புறம் வெடிக்கக் காத்திருக்கும் அணுகுண்டு போல அணு உலை, மறுபுறம் எந்நேரமும் கைது, சித்ரவதைக்கு ஆளாகலாம் என்ற நிலையில் நூற்றுக் கணக்கான பொய் வழக்குகள், எப்போதும் ஊரில் போலீசு, உளவுத் துறை கண்காணிப்பு, நான்கு பேர் கூட சேர்ந்து போக முடியாது. மீறினால் காவல்துறை மிரட்டல் என்ற ஒரு பதட்டமான சூழல்., நீண்ட நாட்களாகப் போராடி ஒன்றும் நடக்கவில்லை. ஊரை விட்டுச் சென்று விடலாமா? என்ற சிந்தனையில் சிலர்.

கூடங்குளம் அணுஉலை இயக்கப்பட்டு, மின்சாரம் வருவதாக அரசு அறிவித்தாலும் உண்மை நிலை நமக்குத் தெரியும். தினமும் 17 லாரிகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் அணு உலைக்குள் கொண்டு செல்லப்பட்டு, அதுதான் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு சிறிதளவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. யுரேனியத்தால் அணு உலை இயக்கப்படவில்லை. அணுஉலை, மின் உற்பத்திக்காகவும் இல்லை, அது ராணுவ நோக்கத்திற்காக நிறுவப்பட்டுள்ளது. மக்களிடம் அம்பலப்பட்டுப் போன நிலையில் வேறுவழியின்றி அணு உலை நிர்வாகம் மின்உற்பத்தி தொடங்கி விட்டதாக உலகை ஏமாற்றுகிறது. ஆனாலும், அணு உலையும், வழக்குகளும் இருக்கும் வரை நமக்கு நிம்மதியில்லை. இந்த சூழலை நாம் மாற்றியாக வேண்டியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாகப் போராட்டம், ஏராளமான இழப்புகள் என்றாலும், குறிப்பிடத்தக்க வெற்றியைக் கூடங்குளம்-இடிந்தகரை மக்கள் சாதி-மதம் கடந்து பெற்றுள்ளோம் என்பதே உண்மை. கூடங்குளம் அணு உலைக்கும் தமிழகத்தில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டுக்கும் ஒரு தொடர்புமில்லை என ஒட்டுமொத்த தமிழகமும் புரிந்து கொண்டுள்ளது. இந்தியாவில் தமிழகம்தான் மக்கள் போராட்டங்களில் முன்னிலை வகிக்கிறது என்பது அரசே தரும் ஒரு புள்ளி விவரம். தமிழகம் இவ்வாறு முன்னிலை பெற கூடங்குளம், இடிந்தகரை மக்கள் போராட்டம் ஓர் முன்மாதிரியாக இருந்துள்ளது. காரணம் நாம் நமது சொந்த பலத்தில் போராடினோம் என்பதே. இன்னும் நாம் அறிந்து கொள்ள வேண்டியதும் இதுவே. எந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சியும் நமக்கு உதவப் போவதில்லை. நம்மைப் பயன்படுத்த மட்டுமே செய்வார்கள். நாம் ஒற்றுமையோடு கடற்கரை மக்கள், உள்நாட்டு மக்களையும் போராட்டத்தில் இணைத்து ஒரு நீண்ட காலத் திட்டத்தில் போராடினால் முழு வெற்றி சாத்தியமே.

மனித உரிமை பாதுகாப்பு மையம் அணு உலைக்கு எதிரான கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்களின் போராட்டத்தோடு ஆரம்பம் முதலே இணைந்து போராடி வருகிறது. இடிந்தகரை பகுதியில் மட்டும் இருந்த இந்தப் போராட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றது. மார்ச் 19 போராட்டத்தின் போதும் செப்டம்பர் 10 துப்பாக்கி சூடு நடைபெற்ற போதும் மக்களோடு மக்களாக இருந்து போராடியது மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் வழக்கறிஞர்களும். இப்போதும் அணு உலை, தாதுமணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் உங்களுடன் இணைந்து நிற்பதும் மனித உரிமை பாதுகாப்பு மையம்தான்.

கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதென்பது அமெரிக்கா, ரசியா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களையும், பன்னாட்டு பகாசுர-இந்திய முதலாளிகளையும் முதலாளிகளின் அடிவருடியான இந்திய அரசையும் எதிர்ப்பது என்பதைப் புரிந்து போராட தயாராவோம். மனச் சோர்வு, விரக்தியைக் களைவோம், இந்திய சுதந்திரப் போராட்டம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. தோள்சீலைப் போராட்டம் 65 ஆண்டுகள் நடந்தது. இதே நெல்லை மண்ணில் கட்டபொம்மனும், ஊமைத் துரையும் வெள்ளையத் தேவனும், சுந்தரலிங்கமும், பின்னர் எப்போதோ கிடைக்கவுள்ள மக்கள் விடுதலைக்காக, பிற்கால சந்ததியின் நலனுக்காக உயிர் துறந்தனர். இன்று கூடங்குளம் – இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கு அன்று காந்தி, வ.உ.சி, பகத்சிங் மீதும் போடப்பட்டது. மீண்டும் ஓர் விடுதலைப் போரை நடத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

அணு உலைக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் மக்களின் ஆதரவைப் பெற வேண்டும். இயற்கை வளங்களை கொள்ளையிடுவது சுற்றுச் சூழலை மாசு படுத்தும் நாசகாரத் தொழிற்சாலைகளை அனுமதிப்பது உழைக்கும் மக்களின் வாழ்வை துச்சமாக மதிப்பது போன்ற ஆட்சியாளர்களின் வன்முறைக்கு எதிராக விடாப்பிடியாக போராடி எதிரிகளுக்குப் பெரும் சவாலாக இருந்து வரும் நந்திகிராம், சிங்கூர், நியம்கிரி மலைவாழ் மக்களின் போர்குணம் மிக்க போராட்டத்தைப் போல நாமும் நடத்துவதன் மூலமாக நாம் மக்களின் ஆதரவைப் பெறலாம். அணு உலைக்கு எதிரான போராட்டம் தலைமுறைகளைக் காக்கும் போராட்டம். வழக்குகள், காவல்துறை மிரட்டலை மக்களின் ஒற்றுமையோடு மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும், இணைந்து முறியடிக்க வேண்டும். மக்கள் பலத்தில் நாம் நம்பிக்கை வைப்போம். அஞ்சி, அஞ்சி வாழ நம்மால் முடியாது. நாம் ஊரை விட்டுச் செல்லாமல், அணு உலையை விரட்டுவோம். எந்த தேர்தல் அரசியல் கட்சிகளையும் நம்பாது நாமே அமைப்பாவோம். இளைஞர்களும், பெண்களும் போராட்டத்தில் முன் நிற்போம். பொறுமையாக விடாப்பிடியாகப் போராடி இறுதி வெற்றி காண்போம். அணு உலையை மூடுவோம். நம் மண்ணை, மக்களை, தலைமுறைகளை பாதுகாப்போம்.

poster

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
ஊர் பொதுமக்கள் – கூடங்குளம்
க. சிவராஜ பூபதி 94866 43116 (நாகர்கோவில்)

  1. இக் கூட்டத்துக்குச் செல்ல, சென்னையில் இருந்து ஏதாவது வாகன வசதி [payable ] செய்து தர முயலுமா வினவு ?

    • மன்னிக்கவும், அப்படி ஒரு ஏற்பாடு செய்யப்படவில்லை. நீங்கள் நேரடியாக கலந்து கொள்ளலாம். சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏராளமான அரசு பேருந்துகள் செல்கின்றன. திங்கட்கிழமை என்பதால் முன்பதிவு செய்யாமலேயே இடம் கிடைக்கும். நன்றி

  2. அணுவுலை கண்டிப்பாக வந்தே தீரும்… தேவையில்லாமல் கூட்டத்தை கூட்டி பணத்தையும், திரானியையும் காலி பண்ணாமல் வேற வேலையை பார்க்கலாம்……. தமிழ்நாட்டில் கூட்டம் கூட ஏதாவது காரணம் இருந்தா போதாது??? கூடங்குளம் மக்களும் அப்படித்தான்…… இவர்களால் ஒண்ணும் செய்ய முடியாது….

  3. கைபுள்ள,ராம், கற்றதுகையளவு ,ஆணி ,

    கூடங்குளத்தில் 14.4.2014 திங்கட்கிழமை நடைபெறும் அரங்க கூட்டம் & கலை நிகழ்ச்சிக்கு[அணுஉலை எதிர்ப்புக் கூட்டம்]செல்ல உள்ளேன்.நீங்களும் வருகின்றிர்களா?

    நிகழ்ச்சியை பார்ப்பது உடன் செந்தில்குமரன் வேறு சரவணன் வேறு என்பதையும் அரியலாம்.

    • எப்படி அறியலாம் நான் முன்பே கேட்ட மாதிரி மீசை இருந்தால் செந்தில் மீசை இல்லாட்டி சரவணனா?[நான் போராட்டத்துக்கு போறேன் நீங்களும் வர்ரியளான்னு கேக்றதும் அவர் பாணிதான்]

  4. அணு உலை எவ்வளவு அபாயமானது? எத்துணை மக்கள் விரோதமானது.இண்டியன் முட்டாள் மண்டையன்.

  5. இனியும் சொல்வீர்களா? இந்த நாடு ஜனநாயக நாடு என்று?

    இனியும் சொல்வீர்களா? இந்த நாட்டில் அரசியல் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதென்று?

    இனியும் சொல்வீர்களா?

    இந்த நாட்டில் எல்லோருக்கும் கருத்துரிமை உண்டென்று? எப்போதும் சொன்னதில்லை.இனிமேலும் சொல்வதற்கில்லை

  6. தோழர்.,சூழ்நிலை கருதி நோட்டீசில் சிலர் பெயரை தவிர்த்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். தேசத் துரோக வழக்கு குறித்த உதாரணங்களில் காந்தியின் பெயரையும் தவிர்த்திருக்கலாமே….?

Leave a Reply to செங்கதிர்செல்வன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க