privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்புதுச்சேரி மின்துறை ஆணைய அலுவலகம் முற்றுகை !

புதுச்சேரி மின்துறை ஆணைய அலுவலகம் முற்றுகை !

-

“பாராளுமன்றம் டம்மி! ஆணையங்களின் காலை நக்கும் ‘ஜிம்மி’”! என்ற முழக்கத்தின் கீழ் மின் கட்டண உயர்வைக் கண்டித்து புதுச்சேரி மின் துறை ஆணையம் முற்றுகை! 29 பேர் கைது!

கடந்த சில மாதங்களுக்கு முன் மின் கட்டண உயர்வுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என அறிவித்த ஜெயலலிதா, இரண்டு தினங்களுக்கு முன் இனிமேல் தமிழகத்தில் மின் வெட்டே இருக்காது எனவும் பெருமையாக அறிவித்தார். ஆனால், இதுவரை நடந்த மின் வெட்டிற்கும், மின் கட்டண உயர்வுக்கும் காரணம் யார் என்ற உண்மையை மறைத்து விட்டார். ஆனால், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியோ, இவை எல்லாம் தெரிந்தும் தனக்கு எதுவும் தெரியாதது போல் பம்மிக் கொண்டார்.

கடந்த ஆண்டு மே முதல் இவ்வாண்டு மே வரை ஆறு முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இது மக்களின் மீது தாளாத சுமையாக மாறியுள்ளது. இதனால், இம்முறை மின் கட்டண உயர்வை அறிவித்தவுடனே மக்கள் தன்னிச்சையாக தாங்கள் மின் கட்டணம் செலுத்தும் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். மின் கட்டண உயர்வுக்கும், மின் வெட்டிற்கும் உண்மையில் யார் காரணம் என்பதையும், இப்போதைய அரசியல் சூழ்நிலையில் எப்படிப்பட்ட போராட்டங்களைக் கட்டியமைப்பது என்பதையும் மக்களுக்கு உணர்த்தும் வகையில், புதுச்சேரி மின் துறை ஆணையத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த மின் கட்டண உயர்வுக்குக் காரணம் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் எம்.எல்.ஏ, க்களோ, எம்.பி. க்களோ அல்ல. இவர்கள் அனைவரும் எந்தவித அதிகாரமுமற்ற டம்மி பீஸ்கள் தான். இதை தனது வாயாலேயே ஒத்துக் கொண்டு விட்டார் தமிழக முதலமைச்சர். பம்மிக் கொண்டார் புதுச்சேரி முதலமைச்சர்.

அப்படியென்றால், மின் கட்டணத்தை உயர்த்துவதும், அதை அமல்படுத்த இவர்களுக்கு உத்தரவிடுவதும் மின் துறை ஆணையம் தான். இவர்கள் தான் உண்மையில் அதிகாரம் படைத்தவர்கள். வறுமையைப் பற்றியோ, விலைவாசி உயர்வினால் மக்கள் படும் அவதிகளைப் பற்றியோ அறியாத கலெக்டர், தாசில்தார், தொழில்நுட்ப வல்லுநர்கள் என மேட்டுக்குடி வர்க்கத்தினர் இவர்கள். முதலாளிகளுக்கு சேவை செய்யும் அடியாட்கள். பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களோ இவர்களின் கட்டளைக்கு ஓடும் ஏவல் நாய்கள் தான்.

மக்களின் சேவைத்துறையாக இருந்த மின் துறையைத் தனியாருக்குக் கொடுத்து, அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கி, அதை தனியார் முதலாளிகளுக்கு சலுகை விலையில் வழங்குகின்றனர். இதனால், தமிழக மின் துறைக்கு ரூ 75,000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மின் துறையிலோ ரூ 900 கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த வருவாய் இழப்பையும், அதிக விலைக்கு வாங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவையும் மக்களின் தலையில் சுமத்தி தனியார் முதலாளிகளின் கொள்ளையை உத்திரவாதப்படுத்துகின்றனர். இந்தக் கொள்ளை தான் மின் கட்டண உயர்வுக்குக் காரணம். இந்நிலைமைகளை விளக்கி மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 28.05.2014 அன்று மதியம் 3.00 மணியளவில் புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து முழக்கமிட்டுக் கொண்டே ஊர்வலமாக சென்று, சாரம், சத்யா நகரில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள மின் துறை ஆணையத்தின் மக்கள் குறை தீர்வு அவை அலுவலகத்தை முற்றுகையிட்டோம். அலுவலக வாயிலைத் தாண்டி அலுவலகத்தினுள் சென்று அமர்ந்தோம். முழக்கங்கள் இடைவிடாது தொடர்ந்துகொண்டே இருந்தது. காவல் துறை, “எந்தப் பிரச்சினையென்றாலும் வெளியில் நின்று தான் முறையிட வேண்டும், அலுவலகத்தினுள் வரக்கூடாது” என சொல்லிப் பார்த்தது. பின் மிரட்டிப் பார்த்தது. ஆனால், தோழர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கத்தைத் தொடர்ந்தவாறே இருந்தனர். ஒரு கட்டத்தில், “நாங்கள் உங்களைக் கைது செய்வோம்” என்று மிரட்டினர். “எங்கள் கோரிக்கைகள் மக்களுக்கானது. அதனால், நாங்கள் கைதாக மாட்டோம்” என அறிவித்தோம். இவ்வாறு பேசிக் கொண்டிருந்தாலும் மறுபுறம் முழக்கங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

ஒரு கட்டத்தில் முழக்கமிடும் தோழரை தனியாக பிரிக்கப் பார்த்தது. ஆனால், தோழர்கள் தங்களுக்குள் சங்கிலி போன்ற பிணைப்பை ஏற்படுத்தியிருந்தனர். அதனால், காவல் துறையினரால் தனியாக பிரிக்கமுடியவில்லை. அதைப் பார்த்த காவல் துறை அதிகாரி, சிறிது நேரம் கத்தி ஓய்ந்துவிடுவார்கள். பிறகு அவர்களைப் பிரிக்கலாம் என சற்று நேரம் அமைதியாக இருந்தனர். ஆனால், நேரம் செல்ல செல்ல பல முனைகளி லிருந்து முழக்கம் இடைவிடாது தொடர்ந்த வண்ணம் இருந்தது. இனி பொறுத்து பயனில்லை என்பதை உணர்ந்த காவல்துறை அதிகாரி, கூடுதல் காவலர்களை வரவைத்து தோழர்களைக் குண்டுகட்டாக தூக்கியும், தரையோடு தரையாக இழுத்துக் கொண்டு வந்தும் வெளியில் தள்ளிக் கைது செய்ய முடிந்தது. இதே போல் பெண் தோழர்களைக் கைது செய்ய ஆண் காவலர்கள் முயற்சித்தபோது, இதைக் கடுமையாக கண்டித்து பேசியவுடன் காவலர்கள் பின் வாங்கினர். அதன்பின் அந்த பெண் தோழர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்த பின் நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி, “சம்மந்தப்பட்ட துறைக்குச் சென்று முறையிட வேண்டும். மேலும், அலுவலகத்தினுள் வந்து போராட்டம் செய்வது சட்டவிரோதமானது” என்றார்.

“சம்மந்தப்பட்ட துறைக்கு வந்து தான் முறையிட்டுள்ளோம். மேலும், மனு கொடுத்து முறையிடுவதால் பலன் ஏற்படவில்லை” என் நாம் கூறினோம்.

“என்னிடம் மனு கொடுங்கள் நான் சம்மந்தப்பட்ட துறையிடம் தங்களை அழைத்துச் செல்கிறேன், பிரச்னையை அங்கு முறையிடலாம்” என்ற அந்த காவல் துறை அதிகாரியிடம்,

“ஏற்கனவே, இதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள லியோ பாஸ்டனர்ஸ் என்ற நிறுவனத்தில் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடிய போது, அங்கிருந்த காவல்துறை எஸ்பி, தங்களது கோரிக்கைகளைக் கடிதமாக தரச்சொல்லிக் கேட்டு வாங்கினார். ஆனால், அது பற்றி எந்தத் தகவலும் இல்லை. அந்த கடிதத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றித் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவலைக் கேட்டபோது, இது தொழிலாளர் சம்மந்தப்பட்ட பிரச்சினை இதில் நடவடிக்கை எடுக்க தனக்கு அதிகாரமில்லை என்று பதில் அளித்திருந்தார்” என்ற கடந்த கால அனுபவத்தைக் கூறி

“இது போலவே இப்போதும் நடக்கும். இது மக்களுக்குத் தீர்வு தராது” என விளக்கிப் பேசி “எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என தெரிவிக்கப்பட்டது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் கைதாகி பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

முற்றுகைப் போராட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – வாழ்க!
புதிய ஜனநாயகப் புரட்சி – ஓங்குக!

புதுவை அரசே! புதுவை அரசே!
உழைக்கும் மக்களின் தாலியறுக்கும்
மின் கட்டண உயர்வினை
ரத்து செய்! ரத்து செய்!

புதுவை அரசே! புதுவை அரசே!
மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள
தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க
உழைக்கும் மக்களை பலியிடாதே!

புதுவை அரசே! புதுவை அரசே!
புதுச்சேரி மின் துறையில்
900 கோடி ஊழல் செய்த
மின் துறை அதிகாரிகளின்
பதவியைப் பறித்து சொத்தைப் பறித்து
தண்டனை வழங்கு! தண்டனை வழங்கு!

உழைக்கும் மக்களே! புதுவை மக்களே!
போராடுவோம்! போராடுவோம்!
உழைக்கும் மக்களின் தாலியறுக்கும்
மின்கட்டண உயர்வினை
ரத்து செய்யப் போராடுவோம்!

உழைக்கும் மக்களே! புதுவை மக்களே!
தனியார் முதலாளிகள் கொள்ளைக்கான
கூடுதல் மின் கட்டணத்தை
செலுத்த மறுப்போம்! செலுத்த மறுப்போம்!

உழைக்கும் மக்களே! புதுவை மக்களே!
அதிகாரத்தைக் கையிலெடுத்து
நியாயமான கட்டணத்தை
நிர்ணயிப்போம்! நிர்ணயிப்போம்!

ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த
எம்.எல்.ஏ. – வுக்கு அதிகாரமில்லை!
எம்.பி. – க்கும் அதிகாரமில்லை!
ஆணையங்கள் என்ற பெயரில்
கொட்டமடிக்கும் அதிகாரவர்க்க
கும்பலுக்கே முழு அதிகாரம்!

கல்வியில் தனியார்மயம்!
மருத்துவத்தில் தனியார்மயம்!
தொலைபேசியில் தனியார்மயம்!
மின்சாரத்தில் தனியார்மயம்!
தண்ணீரிலும் தனியார்மயம்!
விலைவாசி உயர்வுக்கும் கட்டண உயர்வுக்கும்
காரணமே தனியார்மயம்!

முதலாளிகளுக்கு சேவை செய்யும்
தனியார்மயக் கொள்கைகளை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
மக்களுக்கு அதிகாரம் வழங்கும்
மக்கள் சர்வாதிகார மன்றங்களைக்
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – வாழ்க!
புதிய ஜனநாயகப் புரட்சி – ஓங்குக!

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – புதுச்சேரி
தொடர்புக்கு : 95977 89801