Wednesday, October 4, 2023
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்அறிவியலின் கதியும் அறிவியலாளனின் நிலையும்

அறிவியலின் கதியும் அறிவியலாளனின் நிலையும்

-

நூல் அறிமுகம் : பிரெக்டின் கெலிலியோ கெலிலி

அறிவியலின் கதியும் அறிவியலாளனின் நிலையும்

கி.பி பத்தாம் நூற்றாண்டில் பாரசீக அறிஞர் அல்பெருணி அன்றைய இந்தியாவின் சாதி, மதச் சமூகத்தையும் அறிவியல் முன்னேற்றத்தையும் தனது நூலொன்றில் அற்புதமாகப் படம் பிடித்தார்.

பிரெக்ட்
பெர்தோல்ட் பிரெக்ட்

அன்றைய அறிவியலாளர்களான வராகமிகிரர், பிரம்ம குப்தர் இருவரையும் பற்றிக் கூறும்போது, “இவ்வறிஞர்களுக்கு சூரிய – சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது என்பது நன்றாகத் தெரியும். இவர்கள் அறிவியல் விவரங்களைக் கணக்கிட்டு கிரகணம் பற்றித் துல்லியமாக தமது ஆய்வு நூல்களில் விளக்கி வரும் போது திடீரென்று ராகு பாம்பு சூரியனை விழுங்குகிறது என்ற பிராமணர்களின் பழைய நம்பிக்கையைக் குறிப்பிடுகிறார்கள். தனது மனச்சாட்சிக்கு விரோதமாக பார்ப்பனர்களுக்குப் பயந்து இப்படிச் சொல்ல வேண்டியிருப்பது பற்றி,” அல்பருணி வருத்தப்படுகிறார்.

17-ஆம் நூற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த கலிலியோ திருச்சபைக்குப் பயந்து தனது வானியல் ஆய்வுகளைக் கைவிடுகிறார். மனச்சாட்சிக்கு விரோதமான கலிலியோவின் வாழ்வை சமகால நாடகமாக்கியிருக்கிறார், பிரெக்ட் என்ற ஜெர்மனியின் மார்க்சியக் கலைஞர்.

பிரெக்டின் நாடகத்தில் இரண்டு விதமான கலிலியோக்களைக் காண்கிறோம். ஒருவர் மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த உண்மையான கலிலியோ. இவரைத் தெரிந்து கொள்வதற்கு மறுமலர்ச்சிக்கால வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்திருப்பது அவசியம்.

***

ழமையான கிரேக்க நாகரீகம் தான் ஆரம்பகால அறிவியல் சாதனைகளைப் படைத்தது. அரிஸ்டாட்டிலும் அவருக்குப் பின் 5 நூற்றாண்டுகள் கழித்து வந்த தாலெமியும் (கி.பி.2-ஆம் நூற்றாண்டு) பூமியை மையமாக வைத்து சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள் சுழல்கின்றன எனும் வானியல் கோட்பாட்டைப் படைத்தனர். பின்பு கிரேக்கத்தின் அறிவுத் துறை வரலாறு அரேபியாவுக்கு இடம் பெயர்ந்தது. அரேபிய அறிவியலாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கிரேக்க அறிவியல் 13-14-ம் நூற்றாண்டுகளில் மீண்டும் ஐரோப்பா வந்தது. அன்றைய உலகின் மையமாக இருந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை தாலமியின் பூமி மைய வானியல் கோட்பாட்டினை வரவேற்று அங்கீகரித்தது.

எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் ஏராளமான சொத்துக்களை வைத்திருந்த திருச்சபை, கல்வி – அறிவியல் -இறையியல் – அரசியல் போன்ற முக்கியத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி, நிலவுடைமைச் சமூகத்தின் பிற்போக்குக் கோட்டையாக விளங்கியது. அதனுடைய இறையியல் பணியும், விவிலிய விளக்கமும் அதற்காகவே பயன்பட்டது. எனவே, திருச்சபை பூமியின் மையம் என்பதை நிறுவ பூமிதான் அண்ட வெளியின் மையம் என்று விளக்கிய தாலமி கோட்பாடு அவர்களின் அங்கீகாரம் பெற்றது. தவறெனச் சொன்னவர்கள் திருச்சபையின் மதவிரோத குற்ற விசாரணைக் குழுவான இன்க்விஸிசன் பயங்கரவாதிகளால் தண்டிக்கப்பட்டார்கள்.

பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற விளக்கிய போலந்து நாட்டுப் பாதிரி கோப்பர் நிக்கஸ் திருச்சபையால் முடக்கப்பட்டார். அதையே உரத்து முழங்கிய இத்தாலியைச் சேர்ந்த ஜோர்தனோ புருனோ நாத்திகன் எனக் குற்றம் சாட்டப்பட்டு எரிக்கப்பட்டார். கோப்பர் நிக்கசின் ஆய்வுப்படி தயாரிக்கப்பட்ட வானியல் வரைபடங்கள், நேரக்கணிப்பு, பஞ்சாங்கம் ஆகியவற்றை ஏற்ற திருச்சபை அவரது கோட்பாட்டை மட்டும் மதவிரோதம் என்று அறிவித்தது.

தனது தொலைநோக்கியின் மூலம் கோப்பர்நிக்கசின் வானியல் கொள்கையை நிரூபித்த இத்தாலியின் கலிலியோவும் திருச்சபையால் சிறை வைக்கப்பட்டார். இறுதியில் தனது ஆய்வையே தவறென மறுக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டார். இருப்பினும் தனது ‘டிஸ்கோர்சியா’ என்ற நூலில் தாலமி கோட்பாட்டை ஆதரிப்பவனுக்கும், கோப்பர்நிக்கசின் கோட்பாட்டை ஆதரிப்பவனுக்கும் நடைபெறும் உரையாடலின் மூலம் தனது கொள்கையை மனிதகுலத்திற்குப் பறைசாற்றிவிட்டு 1642-ம் ஆண்டில் கலிலியோ மடிந்தார்.

கலிலியோ காலத்து ஐரோப்பியச் சமூகம் நவீன கால வரலாற்றின் தொடக்கமும், மனிதகுல வரலாற்றின் திருப்புமுனையும் ஆகும். ரோஜா யுத்தம், சிலுவை யுத்தம் போன்ற பெரும் போர்களினாலும், காலரா-பிளேக் போன்ற கொள்ளை நோய்களினாலும் அக்கால மக்கள் தொகை கணிசமாகக் குறைந்தது. யாரைச் சுரண்டிக் கொழுத்தார்களோ அந்தப் பண்ணையடிமைகளுக்குக் கூட வேலையும், கால்வயிறுக் கஞ்சியும் கொடுக்க முடியாமல் நிலவுடைமை ஆளும் வர்க்கம் திணறியது. பழைய உலகம் அழுகியபோது புதிய உலகமும் பிறப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தது.

கலிலியோ கலிலீ
கலிலியோ கலிலீ

புதிய கடல் வழிகள் அறியப்பட்டன. நீராவி – விசைத்தறி எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிறு, நடுத்தர பட்டறைத் தொழிற்சாலைகள் தோன்றி சந்தைக்கான உற்பத்தியைத் தொடங்கின. வேலை இழந்த பண்ணையடிமைகள் நகரத்தை நோக்கிப் படையெடுத்தனர். அரசியல் அரங்கில் திருச்சபை, நிலப்பிரபுக்கள், பேரரசர்கள் ஒருபுறமும்; சிற்றரசர்கள், வணிகள்கள், பட்டறை முதலாளிகள் மறுபுறமும் முரண்படத் தொடங்கினர். மத அரங்கில் ஜெர்மனியின் மார்டின் லூதர் திருசபையை எதிர்த்து புராட்டஸ்டண்டு மதத்தை தோற்றுவித்தார். திருச்சபையின் மண்ணுலக ராஜ்ஜியத்தில் மூன்றிலொரு பங்கு பிரித்து சென்றது. அறிவியலறிஞர்களினால் விண்ணுலக ராஜ்ஜியமும் தகர்க்கப்பட்டது. நிலவுடைமைச் சமூகத்தை அழித்து 18-ம் நூற்றாண்டில் நடைபெற இருந்த முதலாளித்துவ புரட்சியின் கொதிநிலைக் களனாக இருந்த இக்காலம் ‘மறுமலர்ச்சிக் காலம்’ என்ற வரலாற்றில் புகழப்படுகிறது.

மறுமலர்ச்சிக்கால அறிஞர் பெருமக்களைத்தான் மார்க்சியப் பேராசான் ஏங்கெல்ஸ் மாபெரும் மனிதர்கள் என்று புகழ்ந்துரைக்கிறார். விரிவாகப் பயணம் செய்வதிலும், பன்மொழிப் பயிற்சியிலும், பல்துறைத் திறமைகளிலும் ஈடுபாடு கொண்ட அம்மாமனிதர்கள் பேசியும், எழுதியும், வாளெடுத்தும் தம் காலப் போராட்டத்தில் பங்கேற்றனர். படிப்பறை ஆராய்ச்சி மட்டும் செய்வது அப்போது இழிவாகக் கருதப்பட்டது. இத்தகைய மறுமலர்ச்சிக் கால அறிவியலாளர்களில் கலிலியோவும் ஒருவர்.

எத்தகைய ஒரு புரட்சியினை உருவாக்கப் போகிறோம் என்பதை மறுமலர்ச்சிக்கால மாவீரர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. அவ்வகையில் அவர்கள் வரலாற்றின் கருவியாகச் செயல்பட்டனர். வரலாற்றுணர்வை விளக்குகின்ற தத்துவமும், சமூக அறிவியலும் அப்போது குழந்தைப் பருவத்திலிருந்தன. இயற்கையை, அதன் இயக்கத்தை, தனித்தனித் தோற்றங்களாக மாறா நிலையில் வைத்துப் பார்த்த அன்றைய அறிவு, சமூகத்தை புரிந்து கொள்ளவும் அந்தப் பார்வையையே பயன்படுத்தியது.

எனவேதான் திருச்சபையையும், விவிலியத்தையும் மனதார ஏற்றிருந்த கலிலியோ தன் அறிவியில் ஆய்வுகளை திருச்சபை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை முற்றிலும் அறிந்திருக்கவில்லை. அப்போது முளைவிடத் தொடங்கியிருந்த முதலாளித்துவ சமூகமும், முகிழ்த்து வந்த தெளிவற்ற வர்க்கப் போராட்டமும் கலிலியோவின் குழப்பத்தை நமக்கு உணர்த்தும்.

ஆயினும் பிரெக்டின் இன்னொரு கலிலியோ இத்தகைய குழப்பங்களுக்கு விடை தருகிறார். காரணம் மறுமலர்ச்சி காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரையும், இனிமேலும் வரக்கூடிய ஒரு அறிவியலாளனின் வாழ்க்கை இயக்கத்தை இந்த புதிய கலிலியோவிடம் காண்கிறோம். தத்துவத்திற்கும் – அறிவியலுக்கும், அறிவியலுக்கும் – சொத்துடமை வர்க்கச் சமூகத்திற்கும், தூய அறிவியல் விதிகளுக்கும், சமூக அறிவியலின் தேவைகளுக்கும், உள்ள முரண்பாடுகளை பொருத்தமான காட்சியமைப்புகளுடனும், அழகான நகைச்சுவையுடனும், இயல்பான துணைப் பாத்திரங்களின் சித்தரிப்புடனும் பிரெக்ட் இந்நாடகத்தைப் படைத்திருக்கிறார்.

தத்துவத்தை உயிராகவும் நடைமுறையை உடலாகவும் கொண்ட மார்க்சியத்தின் உலகக் கண்ணோட்டத்தைக் கற்றுத் தேர்ந்த ஒருவரே இத்தகைய வரலாற்றுணர்வு கொண்ட, கலையழகு மிளிருகின்ற ஒரு இலக்கியத்தைப் படைக்க முடியும். பிரெக்ட் அந்நாடகத்தில் வரலாற்றுக் கலிலியோவை இன்றைய நவீன அறிவியலாளனையும் இணைத்து ஒன்றாகப் படைத்திருப்பதன் காரணம் என்ன?

மேற்கண்ட முரண்பாடுகளிலிருந்து அறிவியலின் ஆரம்பகால அவஸ்தையையும், நவீன அறிவியலின் அவலநிலையையும், நேர்மறையில் ஒரு அறிவியலாளனது இலக்கணங்கள் என்ன என்பதையும் வாசகர்கள் உணர வேண்டும் என்பதே நாடகத்தின் கருவும், நாடகாசிரியரின் நோக்கமும் ஆகும்.

***

  • அறிவுத் தேடலுக்காக அல்ல ஆடம்பரக் கனவுகளுக்காகவே கல்வி என்பதற்கு இன்றைய கணினி மோகம் ஒரு எடுத்துக்காட்டு. அன்றோ அந்த மோகம் அறிவியலாக இருந்தது. தனக்கு விருப்பமில்லாமல் தாயாரின் தொந்தரவிற்காக அறிவியல் கற்க வரும் பணக்கார வாலிபனிடம் கலிலியோ கேட்கிறார். ‘இயற்பியலை ஏன் கத்துக்கணும்? குதிரை வளர்ப்பைப் பத்தி படிக்கலாமே?’
  • கலிலியோவின் தொலைநோக்கியை வைத்து பார்க்கம் கனவான்களில் ஒருவர், ‘இனி மொட்டை மாடியில் நம் வீட்டுப் பெண்கள் குளிக்கக் கூடாது’ என்கிறார். மற்றொருவர் தொலைவில் படகில் தெரியும் மீனை பொரித்துச் சாப்பிட்டால் எப்படியிருக்கும் என்கிறார். இன்னுமொருவர் தொலைநோக்கிக்கு என்ன விலை வைக்கலாம் என்று வியாபாரக் கணக்குப் போடுகிறார். வானியல் ஆய்வுகளுக்குப் பயன்பட வேண்டிய தொலைநோக்கி ஒரு விளையாட்டு – வியாபாரப் பொருளாக பயன்படுவது பற்றி கலிலியோ நொந்து கொள்கிறார். இன்றும் பழிவாங்கும் அமெரிக்க டயனோசர்கள், வீட்டு வேலை செய்யும் ஜப்பானிய ரோபட்டுகள், ஜாதகம் கணிக்கும் இந்தியக் கம்ப்யூட்டர்கள், ஆஸ்திரேலிய யானை குட்டி போட்டதை உலகச் செய்தியாக காட்டும் தொலைக்காட்சிகள் என இந்த விளையாட்டு தொடருகிறது. அதனால்தான் ஒரு அறிவியலாளன் தன் ஆய்வையே ஒரு வியாபாரமாக செய்வதற்கு மட்டும் சுதந்திரம் உண்டு என்று கலிலியோ புலம்புகிறார்.
  • தொலைநோக்கி மூலம் பால்வெளி மண்டலத்தின் நட்சத்திரக் கூட்டத்தை நண்பனுக்குக் காட்டுகிறார் கலிலியோ. ‘திருச்சபையின் அறிவை எதிர்க்கும் இந்தக் காட்சியை யார் நம்புவார்கள்’, நண்பர் கவலையடைகிறார். “நாளைக்கு பயணம் என்றால் இன்று தன் சுமையிழுக்கும் கழுதைக்கு ஒரு கட்டுப் புல்லை அதிகமாகப் போடும் கிழவி, மழை வருவதை உறுதி செய்து கொண்டு தலையில் குல்லா போடும் பள்ளிச் சிறுவன் என சாதாரண மக்கள் – தங்கள் வாழ்க்கையில் பகுத்தறிவைப் பயன்படுத்தும் பாமரர்கள், அறிவியல் ஆய்வுகளை நிச்சயம் ஏற்பார்கள்”. நம்பிக்கை கொள்கிறார் கலிலியோ, திருப்தியுறாத நண்பரோ, ‘உன்னைப் பார்க்கும் போது சிதையின் மேல் நிற்பது மாதிரி தெரியுது’ (புருனோவை திருச்சபை எரித்ததை நினைக்கிறார்) என்று பதறுகிறார்.

    தொலைநோக்கி
    வானியல் ஆய்வுகளுக்குப் பயன்பட வேண்டிய தொலைநோக்கி ஒரு விளையாட்டு – வியாபாரப் பொருளாக பயன்படுவது பற்றி கலிலியோ நொந்து கொள்கிறார்.
  • இங்கே சமஸ்கிருதத்தைப் போல ஐரோப்பாவில் லத்தீன் ஆதிக்கம் செலுத்திய காலம். கலிலியோவின் சீடரும், கண்ணாடிக்குச் சாணைபிடிக்கும் தொழிலாளியுமான ஒருவருக்கு லத்தீன் தெரியாது. அறிஞர் பெருமக்கள் லத்தீனில் விவாதிக்கும் போது கலிலியோ நமது மொழியிலேயே (இத்தாலிய மொழி) விவாதிக்க வேண்டும் என மல்லுக்கட்டுகிறார். அறிஞர்களோ அறிவின் மேன்மையே பாழ்பட்டுவிடும் என்று பார்ப்பனர்களைப் போல சாபமிடுகிறார்கள். போப்பிடம் பேசும் இன்க்விசிஷன் தலைவனொ, ‘இந்தக் கயவன் கலிலியோ தன் வானசாஸ்திர நூல்களை லத்தீனில் எழுதாமல் செம்படவச்சி பாஷையில், ஆட்டுரோமம் விற்பவர்களின் பாஷையில் எழுதுகிறான்’ என கோபம் கொள்கிறான்.
  • தன் ஆய்வு வசதிக்காக அருகாமை நாட்டிற்கு குடிபெயர விரும்பும் கலிலியோ அந்நாட்டின் அரசனுக்கு (10 வயது சிறுவன்) முழு அடிமைத்தனத்தோடும் மிகுந்த பணிவுடனும் ஒரு கடிதம் எழுதுகிறார். பின்பு ‘என்னை மாதிரி ஒருவன் கவுரவமான பதவியை அடையணும்னா குப்புறப்படுத்து கும்புடு போடறதைத் தவிர வழியில்லப்பா’ என்று விளக்கம் தருகிறார். பில்கேட்சை இதயக் கோவிலில் வழிபடும் கணினி இளைஞர்கள், இந்த விசயத்தில் மட்டும் கலிலியோவை மிஞ்சுகிறார்கள்.
  • அரிஸ்டாட்டிலின் விளக்கம் தவிர வேறு எதையும் ஏற்கமாட்டோம் என்று தொலைநோக்கி வழியாகக் கோள்களை பார்க்க மறுக்கும் அறிஞர்களிடம், ‘உண்மைகள் பிறப்பது அதிகாரத்தின் அதட்டலிலிருந்து அல்ல; நடைமுறை அனுபவங்களிலிருந்தே அவை உதிக்கின்றன’ என்று சீறுகிறார் கலிலியோ. “பண்டிதராகிய நீங்கள் உங்களின் பத்தாம்பசலித்தனமான கருத்துக்களை கைவிட வேண்டும்” அவரது சீடரான கண்ணாடித் தொழிலாளியும் வாதிடுகிறார்.
  • தங்களது அறிவார்ந்த விசயங்களில் ஒரு தொழிலாளி எப்படித் தலையிடலாம் என்று கோபமடையும் அறிஞர்களிடம், பல்வேறு உழைக்கும் பிரிவினரிடம் தான் கற்றுக் கொண்டதைப் பட்டியலிடும் கலிலியோ, அம்மக்கள் மட்டுமே ஐம்புலன்களையும் பட்டறிந்து உண்மைகளை ஏற்பவர்கள், அந்த உண்மைகள் தங்களை எங்கு கொண்டு செல்லுமோ என்று கவலை கொள்ளாதவர்கள் என்கிறார். இன்றும் அறிவை அதிகாரத்தோடு பயன்படுத்தும் கல்லூரிப் பேராசிரியர்களும் அரசு அதிகாரிகளும் சாதாரண மக்களை ஆட்டு மந்தையாகவும், கீழ்பணிவையே கடமையாகக் கொண்ட அடிமைகளாகவும்தானே கருதுகிறார்கள்!
  • பிளேக் நோயின் வருகையினால் நகரமே காலியாகிறது. காலி செய்ய இயலாத ஆதரவற்றவர்களுடன் கலிலியோவும் தங்குகிறார். தனது ஆய்வை விட்டகல அவருக்கு மனம் வரவில்லை. ஆனால் “எந்த வசதியுமில்லாத இந்தியாவில். தம்மாத்துண்டு சம்பளத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்” என்று அமெரிக்கா போவதை நியாயப்படுத்துகிறார்கள் ஐ.ஐ.டி.யின் இளம் விஞ்ஞானிகள்.
  • “மனித குலத்தைச் சுமந்திருக்கும் இப்பூவுலகை அண்டவெளியின் ஒரு சாதாரண கோளாக்கி பூலோகத்தையும், பரலோகத்தையும் வேறுபாடில்லாமல் ஆக்கிவிட்டீர்களே, இன்னும் சில நாட்களில் மனிதனும் மிருகமும் ஒன்றுதான் என்று கூறுவீர்களோ” என்று கேட்கும் பாதிரி ஒருவனுக்கு கலிலியோ தரும் பதில் சுவாரசியமானது! எப்போதும் சட்டைப் பையிலிருக்கும் தனது கல்லைக் கீழே போட்டு, “இல்லை சுவாமி (மனிதனுக்கும் கீழோ இந்த அற்பக்கல்) இது… எப்படிக் கீழே விழ முடியும்? அதை நான் மேலே எழும்பச் செய்கிறேன்” என்று குனிந்து எடுக்கிறார். பொறுக்க முடியாத பாதிரி தரும் பதில் ‘திமிர் பிடித்த பன்றி’
  • அறிவியல் ஆர்வம் காரணமாக கலிலியோவின் மாணவராகிறான் ஒரு இளம் பாதிரி. தனது பெற்றோரைப் போன்ற பரம ஏழைகள் தமது துன்ப துயரங்களைப் பொறுத்துக் கொண்டு வாழ்வது எதனால், இவையெல்லாம் விதி எனக் கற்பித்து ‘நம்பிக்கை’யளிப்பது விவிலியமும், திருச்சபையும் தானே, அவற்றைக் கேள்வி கேட்டால் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் எப்படி ‘அமைதியாக’ வாழ முடியும், என்று வாதிடுகிறான் அந்த மாணவன். அது அறியாமையின் அமைதி, தனது தொலை நோக்கி கொண்டு கோள்களை மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தையும் நெருக்கமாகப் பார்க்கும் மக்கள் தங்கள் துயரங்களுக்குக் காரணம் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள், ‘ஐயம்கொள் ஆய்ந்து பார்’ என்ற நமது ஆய்வுமுறை அவர்களுக்கு இகலோக விடுதலையைக் கொண்டுவரும் என வேறு ஒரு இடத்தில் பதிலளிக்கிறார் கலிலியோ.
  • “நமது ஆய்வு உண்மையாக இருந்தால் நம்முடைய உதவியில்லாமல் அது வெற்றியடையணுமே” என்கிறான் மாணவன். “இல்லை, நாம் எந்த அளவு வெற்றி பெறுகிறோமோ அந்த அளவுக்கே உண்மையும் வெற்றி பெறும்” என்கிறார் கலிலியோ. அதற்கு மக்களிடமிருக்கும் ‘புனிதமான பொறுமையை’ ‘நியாயமான கோபமாக’ மாற்ற வேண்டும். இந்த உண்மை தெரியாமல் இருப்பவன் முட்டாள்; தெரிந்தே பொய் என்று சொல்பவன் அயோக்கியன் என்று சினமடைகிறார் கலிலியோ.
  • ‘ஹெரெஸ் என்ற கவிஞனின் பாடல் ஒன்றில் ‘இருக்கை’ என்ற சொல்லை போடச் சொன்னால் அந்தக் கவிஞன் சம்மதிப்பானா? என்னுடைய பிரபஞ்சக் கோட்பாட்டில் வளர்ச்சி – தேய்வு இல்லாத ஒரு வெள்ளிக் கோளைக் கொண்டு வந்து பொருத்தினால் என்னுடைய அழகியல் உணர்வு புண்படாதா என்று அறிவியலின் விதியை அழகியலோடு உவமை சேர்த்து ஒரு கவிதைக் கேள்வியைக் கேட்கிறார் கலிலியோ.
  • “அவர்கள் சிரிக்கும் போது எனக்கு வயிறு கலங்குகிறது, ஏன் அப்படிச் சிரிக்குறீர்கள் புரியவில்லையே” கலிலியோவின் வேலைக்காரம்மாள் கேட்கிறார். “குருமார்களுக்கு ஆலய மணி ஒலிப்பது எப்படியோ அப்படித்தான் இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு சிரிப்பு என்று அப்பா அடிக்கடி கூறுவார்” பதிலளிக்கிறார் கலிலியோவின் மகள். ஆன்மீகத்தின் பொய்யொழுக்கமும், அறிவியலின் உண்மைக் கொண்டாட்டமும் அழகிய முரண் உவமையாகச் சேர்ந்திருக்கக் காரணம். இரண்டும் இருபிரிவினரிடத்தில் கொண்டிருக்கும் முக்கியத்துவம் தான்.
  • “நமது ஆய்வை முழு நம்பிக்கையோடு அல்ல, ஓரளவு நம்பிக்கையோடு தான் தொடங்க வேண்டும். நமது ஊகமும், முடிவுகளும் மாறலாம். ஒவ்வொன்றையும் துருவித் துருவித் திரும்பத் திரும்பக் கேள்விகளை எழுப்ப வேண்டும். இன்று சரி எனக் கண்டதை நாளையே மறுக்க வேண்டி வரலாம். நமது வேகம் நத்தையைப் போல மாறலாம். இறுதியில் தோற்றுப் போய் குப்புற விழலாம். சோர்வு வரலாம். ஆயினும் மீண்டும் மீண்டும் ஆய்வு. அதுவே நமது தெளிவான இறுதி முடிவைத் தரும். அப்போது அதை எதிர்ப்பவர்களை இரக்கம் காட்டாமல் எதிர்ப்போம்” என்று அறிவியல் ஆய்வில் வழிமுறையைக் கூறுகிறார் கலிலியோ. தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள உறவைப் புரிந்து, முரணை வென்று வரும் புரட்சி நமது நினைவுக்கு வருகிறது.
  • திருச்சபையின் வீட்டுச்சிறைக் கண்காணிப்பில் தனது இறுதி நாட்களைக் கழிக்கும் கலிலியோ தனது பழைய மாணவனைச் சந்திக்கிறார். தன்னைப் பற்றியும், அறிவியலைப் பற்றியும் சுயவிமரிசனம் செய்கிறார். “மனிதகுலத்தின் சுமைகளைக் குறைப்பதுதான் அறிவியலின் ஒரே இலக்காக இருக்க வேண்டும். அறிவியல் அறிவியலுக்கே என்று தூயகலைவாதம் பேசினால் அறிவியல் முடங்கிவிடும்; நமது கண்டுபிடிப்புகளும் மனித குலத்தை அடக்குவதற்கும், பின்னடையச் செய்வதற்கும் தான் பயன்படும்; இத்தகைய அறிவியலாளர்களின் வெற்றிக் குரல் மனிதகுலம் பயத்தால் எழுப்பும் கூக்குரலாக எதிரொலிக்கும்.”

“அறிவியலாளனான எனக்கு ஒரு வாய்ப்பிருந்தது. என்கால அறிவியல் சாதாரண மக்களையும் சென்றடைந்தது. இந்த அரிய சூழ்நிலையில் நான் ஒருவன் உறுதியாகப் போராடியிருந்தால் அது மாபெரும் விளைவுகளை உருவாக்கியிருக்கும், மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் ‘ஹிப்போக்ரெடசின் உறுதி மொழி’ போன்று அறிவியலாளர்களும் மனிதகுல மேன்மைக்காக மட்டுமே எங்களின் ஞானத்தைப் பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி மேற்கொள்ளும் நிலை உருவாகியிருக்கும். ஆனால் இன்றைய நிலையில் எதற்கு வேண்டுமானாலும் தங்களை விற்றுக் கொள்ளும், சில்லறைச் சுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் அடிமை விஞ்ஞானிகளின் ஒரு தலை முறையை நாம் எதிர்பார்க்கலாம். அவ்வளவுதான்… என்னுடைய தொழிலுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன். என்னைப் போன்ற துரோகிக்கு அறிவியலாளர்களின் குழுவில் இடமில்லை”

***

பிரெக்டின் நாடகத்திலிருந்து எதைச் சொல்வது எதை விடுவது என்ற குழப்பத்தாலும், பக்க அளவு கருதியும் இந்நூலறிமுகத்தை முடித்துக் கொள்கிறோம். இத்தகைய கருத்துச் செறிவான நூலை விறுவிறுப்புடனும், நயத்துடனும், அதே சமயம் எளிமையுடனும் தி.சு.சதாசிவம் மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கும் இந்த அரிய நூலை வெளியிட்ட அலைகள் பதிப்பகத்தாருக்கும் நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். நாடகத்தைச் செறிவுடன் உணரும் வாசகருக்கு ஏராளமான முக்கியமான செய்திகள் இருக்கின்றன. அதற்கு கீழ்க்கண்ட நூல்களைச் சேர்த்துப் படிப்பது பயனளிக்கும்.

  1. ஏங்கெல்சின் ‘இயற்கையின் இயக்கவியல்’ என்ற கட்டுரை.
  2. ஏங்கெல்சின் ‘கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்’ என்ற கட்டுரை.
  3. நவீன ஐரோப்பிய வரலாறு.
  4. ஜார்ஜ் தாம்சனின் ‘மனித சமூக சாரம்’
  5. மாவோவின் ‘அறிவுத் தோற்றம்’ பற்றிய கட்டுரை.

நாடகத்தைப் படித்து முடித்ததும் வாசகர்கள் சிந்திக்க வேண்டிய விசயங்களும் நிறைய இருக்கின்றன. அன்று திருச்சபையால் கட்டி வைக்கப்பட்ட அறிவியல் இன்று எதனால் கவ்வப்பட்டிருக்கிறது? இன்று கோள்களின் சுழற்சி உட்பட ஏராளமான அறிவியல் உண்மைகள் மக்களுக்குத் தெரிந்திருந்தால் அறியாமையும், மூடநம்பிக்கையும், ஏழ்மையும் இன்னும் ஏன் அகலவில்லை? இந்தக் கேள்விகளுக்கு உங்களால் விடை காண முடிகிறாதா?

இல்லையென்றால் மீண்டும் நாடகத்தைப் படியுங்கள்.

– வேல்ராசன்
_________________________________________________
புதிய கலாச்சாரம் ஜனவரி 2001
_________________________________________________

நூல் : கெலிலியோ கெலிலி
ஆசிரியர் : பெர்தோல்ட் பிரெக்ட்
தமிழில் : தி.சு.சதாசிவம்
விலை : ரூ 60

வெளியிட்டோர் :
அலைகள், 25 சிவன் கோயில் தெரு, கோடம்பாக்கம், சென்னை – 24

கிடைக்குமிடம் :
கீழைக்காற்று, 10 அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2

  1. Here is my findings on Raahu/Kethu

    What is Raahu/Kethu?
    —————————–

    Raahu
    Position of moon when degree theta = X

    Kethu
    Position of moon when degree theta = Y

    difference between these degrees is X-Y=180 degree suggesting opposite nodes.

    Degree is nothing but time. Babylonians devised 360 days as 360 degrees.
    That way they can calculate two constellations are 30 days apart and position them 30 degrees apart.

    Degree at theta X and Y is observed in terms of time as Raahu kaalam, Kethu kaalam

    Why snakes?
    —————-

    They have assumed these positions of moons( variables ) as a planets for calculating eclipses.
    But them calling these snakes ,could be a tacktics to let other know that they are not planets.

    Or

    To identify and remember constellations , people associated with animals and shapes
    Leo,Pices. etc etc all came because those astronomers visualized like these

    Similarly they could have visualized the lengthy shadows as snakes and associated those variables with snakes

    Astrology
    ————
    Humans were trying to correlate the heavenly bodies to identify the luck factor.
    They must have correlated that if these duration can hide the mighty sun and moon,it may bring bad luck
    That is why they are warning doing good things on those bad times

    And now these snakes are oppertunities to make money for many.
    Raahu kethu poojas
    Raahu kethu parikaaras

    Building religion and stories
    ———————————–
    Smart (?) people always want to prove that they know more and informed.
    They will tell if you have to pray god at what time by giving their reasoning and stories
    or you have to go around the statue from left to right or right to left

    Big dipper/ Great bears constellation has so many stories build around them told across the cultures.
    Similarly it was happening in India, people were building stories around these.
    It is not unique to our culture. Those stories are the reasoning by primitive people.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க