திருச்சி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்
உழைக்கும் மக்களை அறைகூவி அழைக்கிறது.
- ஊரை அடிச்சு உலையில் போடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகள் எல்லாம் ராஜ வாழ்க்கை வாழுறானுங்க!
- ஒரு ஆட்டோ வைச்சு நாம பிழைக்கப்படுற பாட்டை என்னான்னு சொல்றது! எப்படி தீர்ப்பது?
அன்பார்ந்த தோழர்களே,
ஆட்டோ என்றாலே அடாவடி பேர்வழிகள், அதிகப் படியான கட்டணம் வசூலிப்பவர்கள், சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் என்று அதிகார வர்க்கத்தினரும், நுகர்வோர் அமைப்பினரும் தொடர்ந்து அவதூறு செய்கின்றனர்.
1 குவளை தேநீர் 7 ரூபாய்க்கு விற்கும் நாட்டில், 1 லிட்டர் பெட்ரோலில் 50 ரூபாய் வரை வரி பிடுங்கும் அரசு, 15 நாளைக்கு ஒரு முறை பெட்ரோல் விலையை தீர்மானிக்க முதலாளிக்கு அனுமதி அளித்தவர்கள் தான் ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறுகின்றனர்.

ஆண்டு முழுவதும் நட்டம் என கூறும் எண்ணெய் நிறுவனங்களின் சொத்து பல்லாயிரம் கோடியாக பெருகி வழிகிறது. ஆனால், ஆட்டோக்களுக்கு எண்ணெய் ஊற்ற முடியாமல் அளவு ஸ்கேலை விட்டுவிட்டு பார்த்து வண்டி ஓட்டும் ஆட்டோ டிரைவர்களுக்கு சாலையோரம்தான் சொத்து. கொள்ளைகளுக்கெல்லாம் கொள்கை என பெயர் வைத்த அரசு குடிமக்களையெல்லாம் குற்றவாளியாக பார்க்கிறது. நாள்முழுவதும் காத்திருந்து 4 சவாரி எடுப்பதற்கு நாம் படுகிற பாட்டை எப்படி புரிய வைப்பது, இந்த உலகத்திற்கு எப்படி சொல்வது?
இந்த மலை முழுங்கி மகாதேவன்கள் சித்தரிப்பது போல ஆட்டோ டிரைவர்கள் மக்களை ஏமாற்றி, கார் பங்களா என சொத்து சேர்த்துள்ளனரா? அல்லது எம்.பி, எம்.எல்.ஏ ஆவதற்காக அரசியலில் குதித்துள்ளனரா? ஒரு புண்ணாக்கும் கிடையாது. வேகாத வெயிலிலும், மழையிலும், தெருவில் காத்துக் கிடந்து 4 சவாரி எடுத்தால் தான், தன் வயித்துக்கும், குடும்பத்துக்கும் கஞ்சி ஊத்த முடியும். இதுக்கு தான் இம்புட்டு பாடுபடுகிறோம்.
அழுக்கை தின்று தடாகத்தை சுத்தப்படுத்தும் மீன்களை போல, ஆயிரம் துயரங்களை சுமந்து மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக செயல்பட்டு வருகின்றனர் ஆட்டோ டிரைவர்கள். பொருத்தமான துணையின்றி அரசு அலுவலகங்களுக்கோ, காவல் நிலையங்களுக்கோ பொதுமக்கள் செல்வதில்லை. ஆனால் தனது செல்ல பிள்ளைகளையும், வயது வந்த பெண்களையும் ஆட்டோ ஓட்டுனர்களை நம்பி அனுப்புகின்றனர் என்பதே உண்மை.
பெற்ற பிள்ளைகளை பராமரிக்க கூட நேரமில்லாமல் மக்கள் அவதிப்படும் இந்த உலகமயமாக்கல் காலத்தில் மக்களின் குடும்ப உறுப்பினராகவே ஆட்டோ கலந்துள்ளது.
ஆனால் நாட்டில் அன்றாடம் நடப்பதோ வேறு. பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை பார்த்தாலே தெரியும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள், பதவியை பிடிக்க அரசியல்வாதிகள் செய்யும் சதித்தனம். இந்த அத்தனை குற்றத்திற்கும் காரணமாக இருப்பது இந்த அதிகார வர்க்கத்தினரும், அரசியரல்வாதிகளும்தான்.
இன்னொரு புறம் அலைக்கற்றை ஊழல், தாதுமணல் கொள்ளை, நிலக்கரி, கிரானைட் என பல லட்சம் கோடி கொள்ளையடித்த மேற்படியாளர்கள் வெளிப்படையாகவே உல்லாச வாழ்க்கை அனுபவிக்கின்றனர். இந்த குற்றவாளிகள் தடுக்கப் படவோ, தண்டிக்கப்படுவதோ இல்லை. இவர்களின் கொள்ளை சட்ட பூர்வமாக அங்கீகாரம் பெற்று நடக்கின்றது.
ஆனால் உழைக்கும் மக்களின் தொழிலான ஆட்டோ மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான அமைப்பு சாரா தொழில், சிறு தொழிற்சாலை, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் நசுக்கப்படுகின்றன. நகரத்தை விட்டு பிடுங்கியெறியப்படுகின்றன. இதற்கு அற்பத்தனமான காரணங்களை கூறி நியாயப்படுத்துகின்றனர். நகரத்தை பணக்கார ஊதாரிகளுக்கு தாரைவார்க்கவே இத்தனை சதித்தனம் செய்கின்றனர். இதனை முறியடிக்க வேண்டும்.
நமது வாழ்க்கையை பாதுகாக்க ஆட்டோவை மட்டுமல்ல, இந்த ஆட்சியாளர்கள் அதிகாரிகள், அரசமைப்பு அனைத்தையும் சேர்த்து ஓட்ட வேண்டும்.
ஆட்டோ தொழிலை ஒழிக்க துடிக்கும் அதிகார வர்க்க சதிவலையை முறியடித்து தொடர்ந்து போராடிவரும் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கத்தின் 14-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி S.R.C கல்லூரி அருகில் உள்ள சுருதி மஹாலில், 15.6.2014 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது. கூட்டம் தொடர்பான விவரங்களை பின்னர் தருகிறோம்.
______________________________
இவண்
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம்
இணைப்பு : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
திருச்சி மாநகர் – மாவட்டம், தொடர்புக்கு : 9788183999