privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்புதுச்சேரி வரலாற்றில் திருப்பம் - ரவுடிகளை வீழ்த்திய புஜதொமு

புதுச்சேரி வரலாற்றில் திருப்பம் – ரவுடிகளை வீழ்த்திய புஜதொமு

-

புதுச்சேரியில் நடப்பது யாருடைய அரசாங்கமாக இருந்தாலும், ஆட்சி ரவுடிகளின் கையில்தான் இருக்கிறது. ரவுடிகளின் முக்கியமானதொரு தொழில் லேபர் கான்டிராக்ட். எந்த வித உரிமைகளும் இல்லாமல் கொத்தடிமைத் தொழிலாளர்களாக நடத்தப்படும் கான்டிராக்ட் தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த 5-ம் தேதி புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய பேரணி, ரவுடிகளால் தாக்கப்பட்டது. தாக்கியவர்களுக்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது. 8 ரவுடிகளும் சில தொழிலாளர்களும் மருத்துவமனையில். தொழிலாளர்கள் மட்டும் 20 பேர் சிறையில்.

நடந்த நிகழ்வுகளை கீழே விவரிக்கிறோம். மானேசரில் தொடங்கி புதுச்சேரி வரையில் தொழிலாளி வர்க்கத்தின் மீது இழைக்கப்படும் அநீதி ஒன்றுதான். அதற்கு விடையும் ஒன்றுதான் என்பதை இந்த அறிக்கையைப் படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியுமெனக் கருதுகிறோம்.

000

தொழிலாளி உரிமைபுதுச்சேரி மாநிலம், திருபுவனை தொழிற்பேட்டையில் 150 தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் 20 முதல் 30 பேர் மட்டும்தான் நிரந்தரத் தொழிலாளர்கள். மற்ற அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள். பல நிறுவனங்களில் நூற்றுக்கணக்கிலும் சில நிறுவனங்களில் ஆயிரக்கணக்கிலும் கூட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, வேர்பூல் – Whirlpool குளிர்சாதன பெட்டிக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் மதர் பிளாஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் 22 பேர் தான் நிரந்தரத் தொழிலாளர்கள், இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள். இருவருக்கும் செய்கின்ற வேலையில் வேறுபாடு இல்லை என்றாலும் ஒப்பந்த தொழிலாளிகளுக்கு இ.எஸ்.ஐ, பி.எஃப் கூடக் கிடையாது.

ரயில்களுக்கான பிரேக் தயாரிக்கும் ரானே பிரேக் நிறுவனத்தில் வெறும் 64 பேர் தான் நிரந்தரத் தொழிலாளிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளிகள். நிரந்தரத் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடினால் ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து ஆலையை இயக்கி, போராடும் தொழிலாளியை மிரட்டுவது நிர்வாகங்களின் வாடிக்கை.

தொழிற்சங்க உரிமையை நிலைநாட்டுவது, காண்டிராக்ட் தொழிலாளிகள், நிரந்தர தொழிலாளிகளிடையே ஒற்றுமையைக் கட்டுவது, ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிப்பது – ஆகியவற்றுக்காக புதுச்சேரியில் இயங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது

சமீபத்தில் ஒப்பந்த தொழிலாளர் முறையைத் தடை செய்ய வேண்டும் என பு.ஜ.தொ.மு சார்பாக திருபுவனை தொழிற்பேட்டையில் துவங்கி புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆலைகளின் சுற்று வட்டாரத்திலும் பு.ஜ.தொ.மு வின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. சுவரொட்டிகளை கண்டவுடனேயே ஆத்திரம் கொண்ட லேபர் காண்டிராக்டர்களான சுதாகர், பூபாலன் மதர் பிளாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பு.ஜ.தொ.மு கிளைச் செயலாளரான தோழர் பிரபுவை கொலை செய்யப்போவதாக மிரட்டியிருக்கின்றனர். திருபுவனை காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகார் கொடுத்தார் பிரபு. புகாரை வாங்கிக்கொண்ட ஆய்வாளர் அதற்கான CSR-ஐ (ரசீதை) கொடுக்காமல், மாலை ஸ்டேசனுக்கு வருமாறு கூறியிருக்கிறார்.

மாலையில் போலீசு நிலையத்துக்கு பிரபு சென்றபோது இருபதுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் அங்கே குவிந்திருந்தனர். தகவல் அறிந்து, இருபதுக்கும் மேற்பட்ட தோழர்களும் உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

புதுச்சேரியில் கட்டைப் பஞ்சாயத்து செய்யும் அதிகாரத்தை கூட போலீசார் தங்களிடம் வைத்துக்கொள்ளவில்லை. ஸ்டேசனை மட்டும் லீசுக்கு விட்டிருப்பதால், “நீங்களே பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒப்பந்ததாரர்களில் ஒருவன் “ஏன் நண்பா நமக்குள்ள பிரச்சினை, இது எங்களோட பொழப்பு, தொழிலாளிகளை நிரந்தரப்படுத்தனும்கிற கோரிக்கைகளை எல்லாம் வைக்காதீங்க, நம்ம எல்லோரும் உள்ளூர் ஆளுங்களா இருக்கோம், எதுக்கு பிரச்சினை பேசாம கேச வாபஸ் வாங்கிக்கங்க” என்று நயமாக மிரட்டினான்.

தனது புகாரில் நிர்வாகத்தின் தூண்டுதலால் தான் சுதாகரும், பூபாலனும் தன்னை தாக்க வந்தனர் என்று தோழர் பிரபு கூறியிருந்தார். ஆனால் போலீசாரோ நிர்வாகத் தரப்பை விசாரிக்க கூட இல்லை. அதே நேரம் “ஆலையின் HR அதிகாரியை தோழர்கள் தாக்க முயற்சித்தனர்” என்றொரு பொய் புகார் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டிருந்தது. எந்த தோழர் மீது நிர்வாகம் பொய்ப்புகார் கொடுத்ததோ, அவர் குறிப்பிட்ட அந்த நாளில் ஆலையிலேயே இல்லை. தொழிலாளர் உதவி ஆணையரை சந்திக்கச் சென்றுள்ளார் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தனர்.

வேலழகன் என்ற லாபர் காண்டிராக்டர் “நீங்க போஸ்டர் போட்டது தப்பு, பேசாம கேசை வாபஸ் வாங்கிக்கங்க” என்றான். அவனோடு வந்திருந்த இருபது பேரில் ஆறு ஏழு பேர் நல்ல போதையில் சலம்பிக் கொண்டே இருந்தனர்.

“எதுக்கு மாப்ள இவனுங்கட்டல்லாம் கத்தினிருக்கே? போட்டுத்தள்ளிட்டு போறத வுட்டுட்டு…” என்று ரவுடிகள் ஸ்டேஷனிலேயே உதார் விட, அதையும் போலீசார் வாயை பிளந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

போதையில் இருந்த ரவுடிகளின் அலப்பறை மிகவும் அதிகரிக்கவே “ஏம்பா எதுனாலும் சமாதானமா பேசுங்க, இல்லைன்னா நான் FIR போட்றுவேன்” என்று கூறி ஸ்டேசனில் ஒழுங்கை நிலைநாட்டினார் ஆய்வாளர்.

தொழிலாளி உரிமைஉடனே வேலழகன் யாருக்கோ போனைப் போட்டு “மாப்ள இவனுங்க என்னா பேசுனாலும் கலைய மாட்றானுங்கடா, நம்மாளுங்களுக்கு போதை இறங்கிடுச்சுன்னா கெளம்பிறுவானுங்க போல இருக்குதுடா, இன்னா பன்றது” என்றான். சற்று நேரத்தில் தொழிலாளிகள் கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல் அங்கே திரண்டு விட்டனர். ரவுடிகள் இடத்தை காலி செய்யத்தொடங்கினர்.

துணை ஆய்வாளர் “இது தொழிலாளர் பிரச்சினையாக இருக்கிறது எனவே இதற்கு தனியாக FIR போட முடியாது” என்றார். “என்னங்க ஒரு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விட்டிருக்காங்க இதுக்கு லேபர் ஆபீசுக்கு போகச்சொல்றீங்களா? கம்பெனிக்குள்ள கொலை நடந்தாலும் இப்படிதான் பேசுவீங்களா” என்று கேள்வி எழுப்பினர். எது நடந்தாலும் FIR போடுவதில்லை என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார் துணை ஆய்வாளர்.

இச்சம்பவத்துக்குப் பத்து நாட்கள் கழிந்த பின்னர், திருவெண்டார் அருகே உள்ள சன் பார்மா என்கிற நிறுவனத்தில் சிஐடியு CITU தொழிற்சங்கம் துவங்கப்பட்டது. அப்போது கொடியேற்றும் நேரம் பார்த்து வந்த இருபது பேர் கொண்ட கும்பல் தொழிற்சங்க நிர்வாகிகளை தாக்கிவிட்டு “நாங்க இருக்கிற தொழிற்பேட்டையில் எவனும் சங்கம் வைக்கக்கூடாது” என்று மிரட்டியது. சிஐடியு-வினர் போலீசில் புகார் கொடுத்தனர். எதுவும் நடக்கவில்லை. 2009-ல் ரானே பிரேக் நிறுவனத்தில் தொழிலாளர்கள் சங்கம் துவங்கிய போதும் இதே போல தான் ரவுடிகள் அடித்து உடைத்தனர். பிறகு தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு வில் இணைந்தனர்.

இந்தப் பின்புலத்தில்தான் திருபுவனை தொழிற்பேட்டையில் தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து, பு.ஜ.தொ.மு சார்பாக 5.8.2014 அன்று திருபுவனையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்து தொழிற்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது. எல்லா இடங்களிலும் ரவுடிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் அனுபவத்தை கூறி, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கடைசி வரையில் பேசாமல் இருந்துவிட்டு, போராட்ட நாளான 5-ம் தேதி மாலை 3 மணிக்கு துணை ஆய்வாளர் தோழர்களை அழைத்து “ உங்களுக்கு ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் தான் அனுமதி, பேரணிக்கு இல்லை” என்றார். அதை எழுத்துபூர்வமாகத் தருமாறு கேட்டதற்கு தர மறுத்தார். “எனக்கு பல பேர் போன் பண்ணி,அனுமதி கொடுத்தால் பிரச்சினை பண்ணுவோம்”னு சொல்றானுங்க, என்றார். “சொன்னா அப்படி சொல்றவனத் தூக்கி உள்ளே வெச்சுட்டு, பேரணிக்கு பாதுகாப்பு கொடுக்கிறதுதான் சார் உங்க கடமை” ன்னு தோழர்கள் வாதாடியபின், “சரி பேரணி நடத்திக்குங்க, பாதுகாப்பு தர்றோம், ஆனா எழுதித் தர முடியாது, பாதுகாப்பு தருகிறோம்” என்றார்.

பேரணி போகும் பாதையில் தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. பேரணிக்கு சென்ற சில தொழிலாளர்கள் ஸ்டேஷனை கடந்து சென்ற போது அங்கே இருபதுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் அமர்ந்திருப்பதை பார்த்திருக்கின்றனர்.

பேரணி தொடங்கும் தருவாயில் அந்த 20 பேரும் திபுதிபுவென்று இரு சக்கர வாகனங்களில் புழுதியை கிளப்பிக்கொண்டு வந்து இறங்கினர். பேரணியில் கிட்டத்தட்ட 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குழுமியிருந்தனர். பாதுகாப்பு தருகிறேன் என்று சொன்ன போலீசார் யாரையும் காணோம். இத்தனைக்கும் 200 மீட்டர் தூரத்தில் தான் போலீஸ் ஸ்டேஷன்.

முதலில் வந்த பூபாலன் என்ற காண்டிராக்டர் “ஏய் கெளம்பி எல்லாரும் அவங்கவங்க ஊருக்கு ஓடுங்க” என்றான். ராஜா என்பவன் “ஏய் இவனுங்ககிட்டா இன்னாடா பேச்சு” ன்னு கத்திக்கொண்டே அருகில் இருந்த ஓட்டலிலிருந்து தடி கட்டையை எடுத்து தோழர்களின் செங்கொடியை ஓங்கி ஒரு அடி அடித்தான். கொடியை பிடித்துக் கொண்டிருந்த தோழர் நிலைகுலைய, கம்பி சாய்ந்து ஒரு பெண் தோழரின் தலையில் விழுந்து காயம் பட்டது.

தொழிலாளி உரிமைஉடனே பு.ஜ.தொ.மு துணைத்தலைவர் எழில் வேகமாக முன்னே வர, அவர் தலையில் ஓங்கி அடிப்பதற்கு ராஜா உருட்டுக்கட்டையை தலைக்கு மேலே தூக்கினான். ஆனால் அடி இடுப்பில் விழுந்து எலும்பு முறிந்தது. தோழர் எழில் மீது அடி விழுந்தவுடனே, நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் ரவுடிகள் மீது பாய்ந்தனர். விளைவு, எழிலைத் தாக்கிய ராஜா அந்த இடத்திலேயே மயங்கிச் சரிந்தான். பெட்ரோல் குண்டுகள், இரும்பு கம்பிகளோடு வந்திருந்த ரவுடிகள், தொழிலாளர்களின் போர்க்குணத்தை கண்டு பீதியடைந்து ஆயுதங்கள் அனைத்தையும் போட்டுவிட்டு தெறித்து ஓடினர்.

பேரணி கிளம்பியது. பேரணி 100 மீட்டர் முன்னே செல்வதற்குள் இன்ஸ்பெக்டரும், எஸ்.பியும் பேரணிக்குள் வந்தனர். முகப்பு கொடியை பிடித்துக் கொண்டிருந்த தோழரை போலீஸ் வண்டிக்குள் ஏற்ற முயன்றனர். ஏன் என்று பிற தோழர்கள் கேட்டதும், “ஒருத்தனை அடிச்சே கொன்னுருக்கீங்க” என்று சொல்லிக்கொண்டே இன்னும் இரண்டு தோழர்களையும் பிடித்து இழுத்தனர். “மூணு பேரெல்லாம் வர முடியாது, பேரணியில் 350 பேர் இருக்கோம், அத்தனை பேரும் வர்றோம்” என்று தொழிலாளர்கள் ஸ்டேஷனை நோக்கி நடந்தனர்.

காவல் நிலையம் வந்தவுடன், “அஞ்சு பேர் மேல கேஸ் போடப்போறோம் மத்தவங்க எல்லாம் கிளம்பி வீட்டுக்கு போங்க” என்றனர். யாரும் போக மாட்டோம் என்று தொழிலாளர்கள் மறுத்தனர். மற்றொரு புறம் பயந்து ஓடிய ரவுடிகள் ஊருக்குள் சென்று, “நம்ம சாதிக்காரனுங்களை அடிச்சிட்டானுங்க, நம்ம ஊர்காரன்களை வெளியூர்காரனுங்க அடிச்சிட்டானுங்க” என்று ஊர் மக்களை திரட்ட முயற்சி செய்தனர். ஆனால் மக்கள் யாரும் அவர்களோடு வரவில்லை என்றதும் இருபது குடும்பத்திலிருந்தும் 5,6 பேர் என்று ஒரு 70 பேரை திரட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியில் நிற்கின்ற தோழர்களை தாக்க வந்தனர்.

ஸ்டேஷனுக்கு வெளியில் தான் ஆய்வாளரும், துணை ஆய்வாளரும் நின்று கொண்டிருந்தனர். வந்த ரவுடிகள் போலீசு இருக்கும் தைரியத்தில், தோழர்களை தாக்க முனைந்தனர். தொழிலாளர்கள் உடனே திருப்பித் தாக்குவதற்கு திரளவே, ரவுடிகளை காம்பவுண்டை விட்டு வெளியேற்றியது போலீசு.

வெளியே சென்ற கும்பல், பேரணிக்கு வந்திருந்த இரு தொழிலாளர்களைத் தாக்கி மண்டையை உடைத்தது. (அருள் என்கிற தொழிலாளி Lottee நிறுவனத்தில் பணிபுரிகிறார். புண்ணியமணி Swastik என்கிற நிறுவனத்தில் பணிபுரிகிறார்)

இப்படி கோழைத்தனமாக தாக்கிவிட்டு, கும்பலாக சாலையில் அமர்ந்து கொண்டு புஜ.தொ.மு வினரை ரிமாண்டு செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். சரி செய்கிறோம் என்று போலீஸ் அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் போதே, சாலயோரம் நடப்பட்டிருந்த CITU கொடிக்கம்பத்தை உடைத்து கொடியை நடுரோட்டில் போட்டு கொளுத்தினர்.

இதைப் பார்த்த மார்க்சிஸ்டு கட்சியினர், ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வந்து சாலை மறியல் செய்தனர். “தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது, முதலில் அடிச்சது இவனுங்க தான். அதை தடுக்கிறதுக்கு தான் பு.ஜ.தொ.மு காரங்க திருப்பி அடிச்சாங்க, ரவுடிகளை உடனே கைது செய்ய வேண்டும்” என்று மக்கள் முழக்கமிடவே, “அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் நீங்க கலைந்து போங்க” என்று போலீசு சமாதானம் செய்தது.

மக்கள் போராட்டத்தால் பின் வாங்கிய ரவுடி கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றது. ஆனால் செல்லும் வழியில் திருபுவனை பு.ஜ.தொ.மு கிளை துணைத்தலைவர் மோகன்ராஜ் வீட்டையும் பு.ஜ.தொ.மு கிளை அலுவலகத்தையும் அடித்து நொறுக்கியதுடன், ஊருக்குள் யாரும் கடையை திறந்து வைத்திருக்கக்கூடாது என்று மூட வைத்துள்ளனர். பேரணிக்கு வந்த தோழர்களின் இரு சக்கர வாகனங்களையும் ஒரு வண்டி விடாமல் அடித்து நொறுக்கியுள்ளனர். சாலையில் சிவப்பு சட்டை அணிந்து சென்ற மக்கள் பலரைத் தாக்கி, அவர்கள் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். நிலைமை கைமீறிப்போகவேதான் வேறு வழியே இல்லாமல் போலீசு அந்த கும்பலைக் கலைக்க தடியடி நடத்தியது.

பேரணி தொடங்கிய இடத்தில் உள்ள இரு சக்கர வாகனங்களை எடுக்க வேண்டும் என்று போலீசிடம் தொழிலாளர்கள் கூறியிருக்கின்றனர். போலீசோ, அவற்றில் 6 வண்டிகளை தூக்கி வந்து, பு.ஜ.தொ.மு வினர் அந்த வண்டிகளில் வந்து இறங்கி ரவுடிகளைத் தாக்கியதாக வழக்கை சோடித்திருக்கின்றனர். ரவுடிகள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளையும் பு.ஜ.தொ.முவினரிடமிருந்து கைப்பற்றியதாகக் கூறி பொய்வழக்கு போட்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் தோழர் எழில் தாக்கப்பட்டது பற்றியும், தோழர் மோகன்ராஜின் வீடு தாக்கப்பட்டதும், அவருடைய துணைவியாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது ஆகியவற்றுக்காக கொடுக்கப்பட்ட புகார்களை வாங்க போலீசு அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

மறுநாள் காலை வந்த பத்திரிகை செய்திதான் மிகவும் கேவலமானது. ரவுடிகள் மீது போலீசு நடத்திய தடியடியை பு.ஜ.தொ.மு தோழர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி என்று செய்தி வெளியிட்டது தினமலர்.

தினத்தந்தி உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளும் போலீசு செய்தியை தான் வெளியிட்டன. தினகரன் மட்டும் என்ன நடந்தது என்பதை ஓரளவுக்கு எழுதியிருந்தது.

காலை 6 மணிக்கு 20 பேர் மட்டும் லாஸ்பேட்டையில் உள்ள மாஜிஸ்டிரேட் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை புகைப்படமெடுத்த ஒரு தோழரின் கைபேசியைப் பறித்துக்கொண்டு அவரையும் வண்டியிலேற்றியது போலீசு. உடனிருந்த வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவே தோழரை விடுவித்து விட்டு, கைபேசியை மட்டும் பறித்துக் கொண்டது.

“நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, அவர்கள் தான் எங்களை தாக்கினர். நாங்களே தான் காவல் நிலையத்திற்கு வந்தோம்” என்று என்ன நடந்தது என்பதை தோழர்கள் விளக்கியும் நீதிபதி கேட்க தயாராக இல்லை. தோழர்கள் மீது 307, 323, 324, 147, 190, 198 (திட்டமிட்ட கொலை முயற்சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீதம் உள்ள 36 தோழர்களை ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு அழைத்து வந்தனர். சார் நிலை ஆட்சியர் மாலை நான்கு மணிக்கு வந்தார். “தமிழ்நாடு முகவரி உள்ளவர்கள் அனைவரும் பாண்டு பத்திரம் கொடுக்க வேண்டும். பாண்டிச்சேரி முகவரியில் உள்ளவர்கள் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்” என்றார். “107, 151 ஆகிய பிரிவுகளின் கீழ் போடப்பட்டிருக்கும் வழக்குகள் நிபந்தனை பிணையின் கீழ் வரக்கூடியவை அல்ல” என்று வழக்குரைஞர்கள் கூறியதற்கு “புதுச்சேரியில் இப்படித்தான் செய்வோம்” என்றார் சார் ஆட்சியர்.

உண்மைதான். புதுச்சேரியில் முதலாளிகள், காண்டிராக்டர்கள், ரவுடிகளின் கூட்டணிதான் ஆட்சி நடத்துகிறது.

புதுச்சேரி தொழில்துறையில் மட்டுமல்ல, அரசியலிலும் இத்தகைய ரவுடிகளே அனைத்து மட்டத்திலும் கோலேச்சுகின்றனர். அனைத்து ஓட்டுக் கட்சிகளிலும் இத்தகைய ரவுடிகளே தளபதிகளாக வலம் வருகின்றனர். வசூலிலும் கூட்டுக் கொள்ளையிலும் பங்கு பிரித்துக் கொள்கின்றனர். இவர்களை எதிர்த்து வீழ்த்தாமல் அங்கே எந்தவிதமான அரசியல் – சமூக நடவடிக்கைகளும் சாத்தியமில்லை.

ஒப்பந்ததாரர் என்ற பெயரில் உலவும் இந்த ரவுடிகளுக்கெதிராக புதுச்சேரி முழுவதும் பொதுமக்களிடையே வெறுப்பு நிலவுகிறது. ஒப்பந்ததார ரவுடிகளின் இந்த தாக்குதலை கண்டித்து CPM, CPI (ML) விடுதலை, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் கண்டன அறிக்கை விடுத்துள்ளன. யாரும், தங்கள் மீது கை வைக்க முடியாது என்று தினவெடுத்து திரிந்து கொண்டிருந்த இந்தக் கும்பலுக்கு முதல் முறையாக தொழிலாளி வர்க்கம் பாடம் கற்பித்திருக்கிறது.

முதலாளிகளின் எச்சில் காசில் வயிறு வளர்க்கும் பொறுக்கி கும்பல்கள், தொழிலாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஒரு போதும் அனுமதிக்காது என்பதை இச்சம்பவம் நிரூபித்திருக்கிறது. தனது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கான பாதை எளிதானதாக இருக்காது என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ளும். தனது வலிமை என்ன என்பதையும் தொழிலாளிவர்க்கம் எதிரிகளுக்கு உணர்த்தும்.

ndlf-puduchery-banner-1

– வினவு செய்தியாளர்
(தகவல் – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி)

தொடர்புடைய பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]