privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தொழிலாளர் சட்டம்: பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது!

தொழிலாளர் சட்டம்: பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது!

-

தேவையான பொழுது வேலைக்கு வைத்துக் கொண்டு, தேவையில்லையென்றால் தூக்கியெறிகின்ற அமர்த்து – துரத்து (Hire & Fire) என்கிற கொள்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. எனினும், தற்போது இருக்கிற சட்டங்கள், தொழிலாளர்களுக்கு வழங்குகின்ற உரிமைகளின் காரணமாக, முதலாளிகள் தொழிலே நடத்த முடியாத வண்ணம் விழிபிதுங்கித் தவிப்பது போலவும், இச்சட்டங்களையெல்லாம் ஒழித்தால்தான் உள்நாட்டு முதலாளிகளும் அந்நிய முதலீட்டாளர்களும் நமது நாட்டில் தொழில் தொடங்குவார்களென்றும், வேலைவாய்ப்பு பெருகுமென்றும், தொழிலாளர்களின் ஊதிய விகிதங்கள் அதிகமாக இருப்பதால்தான் இந்தியப் பொருட்கள் சர்வதேச சந்தையில் போட்டி போட முடிவதில்லை என்றும் பல பொய்களை முதலாளி வர்க்கமும், அவர்கள் கையில் இருக்கும் ஊடகங்களும் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றன.

தொழிலாளர் நலச்சட்டம்உண்மை நிலைமை என்ன? அவுட்சோர்சிங் என்ற பெயரில், ஒரு ஆலையில் வேலை செய்யும் ஆகப்பெரும்பான்மையான தொழிலாளிகளுக்கும் அந்த ஆலை நிர்வாகத்துக்கும் தொடர்பில்லை என்று ஆக்கி, அவர்களை தனித்தனி காண்டிராக்டர்களின் கீழ் வேலை செய்யும் கூலிகளாக்குவதை 2001-ல் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு அங்கீகரித்திருக்கிறது. பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதை ஆட்சேபிக்கும் உரிமை அங்கு பணியாற்றும் தொழிலாளிகளுக்கு இல்லை என்று வேறொரு தீர்ப்பு கூறியிருக்கிறது. உலகமயமாக்கத்துக்கு ஏற்பத்தான் அரசியல் சட்டத்துக்கு நீதிமன்றம் விளக்கம் கூறமுடியும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அது மட்டுமல்ல, நாடு முழுதும் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் எதிலும் தொழிலாளர் சட்டங்கள் செல்லுபடி ஆகாதென்று அரசே ஒப்பந்தம் போட்டிருக்கிறது. தொழிலாளர் நலத்துறையோ முதலாளிகள் நலத்துறையாகத்தான் எல்லா இடங்களிலும் செயல்படுகிறது. இதுதான் நிலைமை.

அசோசெம் என்கின்ற இந்திய முதலாளிகள் சங்கம், இந்திய தொழில்துறை முழுவதும் நடத்திய தனது ஆய்வின் முடிவுகளை பிப் 5, 2014-ல் வெளியிட்டுள்ளது. 2013-ல் மட்டும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 25% குறைந்திருப்பதாகவும் கூறும் அவ்வறிக்கை, துறை வாரியாக ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறது. தொலைதொடர்புத் துறையில் 60%, ஆட்டோமொபைல் துறையில் 56%, கல்வித்துறையில் 54%, உற்பத்தித் துறையில் 52%, நுகர்பொருள் விற்பனைத் துறையில் 51%, ஐ.டி துறையில் 42%, ஓட்டல்கள் மற்றும் போக்குவரத்துத் துறையில் 35%, மருத்துவத்துறையில் 32% – என ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு துறையிலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இலாபகரமான பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும் தொழில் நிறுவனங்களிலேயே ஒப்பந்தக்காரர்கள் மூலம் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்றும், நிரந்தரத் தொழிலாளர்கள் செய்யும் அதேவேலையை மிகக்குறைவான ஊதியத்துக்கு இவர்கள் செய்கிறார்கள் என்றும் கூறுகிறது அவ்வறிக்கை. மேலும் தொழிலாளர் என்ற வரையறைக்குள் அடங்காத மருத்துவர், பொறியாளர், அறிவியல் ஆய்வாளர்கள், ஆடிட்டர்கள், வணிக மேலாளர்கள் போன்றோரும் கூட ஒப்பந்தக்காரர்களின் சம்பளப்பட்டியலில் கூலிகளாக வேலை செய்கிறார்கள் என்றும் இவ்வறிக்கையை வெளியிட்ட அசோசெம்மின் பொதுச்செயலர் டி.எஸ். ராவத் கூறியிருக்கிறார்.

“இந்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. பெரும்பான்மையான தனியார் நிறுவனங்கள் தொழிலாளர் சட்டங்களை மீறுகின்றன. நிரந்தர ஊழியர் செய்கின்ற அதே வேலையைச் செய்யும் ஒப்பந்தத் தொழிலாளிக்கு, மூன்றில் ஒரு பங்கு ஊதியமே தரப்படுகிறது. மேலும், கிராசுவிட்டி, பி.எஃப், மருத்துவ – கல்விச் சலுகைகள் போன்றவை மறுக்கப்படுகின்றன. இந்த நிலைமை தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தொழில்துறை வளர்ச்சிக்கே மிகவும் தீங்கானது” என்றும் கூறியிருக்கிறார் ராவத். முதலாளிகள் சங்கத்தின் ஆய்வு கூறும் புள்ளிவிவரங்களே இப்படி இருக்கும்போது, உண்மை நிலை எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

நோக்கியா போராட்டம்
விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நிரந்தரத் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்த நோக்கியாவின் சதியைக் கண்டித்து, அவ்வாலைத் தொழிலாளர்கள் சென்னை – சேப்பாக்கத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

இருப்பினும், தொழிலாளர் சட்டங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் தந்திரமாக இறங்கியிருக்கிறது மோடி அரசு. தொழில்தகராறு சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், தொழிற்பயிற்சி சட்டம் ஆகிய மத்திய சட்டங்களைத் திருத்தவிருப்பதாக ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. “300 தொழிலாளர்கள் வரை ஆட்குறைப்பு செய்வதற்கு அரசு அனுமதி தேவையில்லை; தொழிலாளர்களில் 30% பேர் உறுப்பினராக இருந்தால் மட்டும்தான் ஒரு தொழிற்சங்கம் பிரதிநிதித்துவம் பெறும்” – என்பன போன்ற திருத்தங்கள் அங்கே மேற்கொள்ளப்படுகின்றன.

அரசமைப்புச் சட்டத்தின்படி தொழிலாளர் நலம் என்பது பொதுப்பட்டியலில் இருப்பதால், இச்சட்டத்திற்கு மோடி அரசு ‘குடியரசு’ தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தந்துவிடும். முதலீட்டாளர்களைக் கவர வேண்டுமென்றால், மற்ற மாநிலங்களும் ராஜஸ்தானுடன் போட்டி போட்டுக் கொண்டு இத்தகைய சட்டத்திருத்தங்களை செய்யும். இதன் போக்கிலேயே தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துவிடலாம் என்பது மோடி அரசின் திட்டமெனத் தெரிகிறது. ஆயத்த ஆடை முதலான துறைகளில் இரவு நேரப் பணிகளில் பெண்களை வேலை வாங்குவதை அனுமதிப்பது, தொழிலாளர்களை ஓவர்டைம் செய்யச் சொல்வதற்கு இருக்கும் கட்டுப்பாட்டை தளர்த்துவது, தொழிலாளர் துறை அதிகாரிகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற சட்டத்திருத்தங்களை மத்திய அரசு செய்யவிருப்பதாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார் தொழிலாளர் துறை இணை அமைச்சர் விஷ்ணு தியோசாய். தொழில் முனைவோரின் கால்களில் பூட்டப்பட்டிருக்கும் காலாவதியாகிப் போன காலனிய கால தொழிலாளர் சட்டங்கள் என்ற தளையை மோடி அகற்றப் போகிறார் என்றும், இதன் விளைவாக அடுத்த 20 ஆண்டுகளில் 20 கோடி வேலை வாய்ப்புகள் பெருகப் போகின்றன என்றும் அளந்து விடுகின்றன கார்ப்பரேட் ஊடகங்கள்.

நோக்கியா சென்னையில் வழங்கிய வேலைவாய்ப்பின் யோக்கியதை நம் கண்முன்னே தெரிகிறது. 650 கோடி ரூபாய் மூலதனம் போட்டு, அதைப்போல பத்து மடங்கு சலுகைகளைப் பெற்று, 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து, கொள்ளை லாபமீட்டிய நோக்கியா, 23,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது. வரியைக் கட்டு என்றவுடன் 8000 பேர் வேலை செய்த இடத்தில் இப்போது வெறும் 850 பேர்தான் வேலை செய்கிறார்கள்.

காங்கிரசு அரசு வரி கேட்காமலிருந்தால் நோக்கியா தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்று கூச்சமே இல்லாமல் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி. முதலாளியிடம் சம்பளம் கேட்காமல் இருந்தால் தொழிலாளர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்படாது என்று அடுத்தபடியாக ஒரு மத்திய அமைச்சர் பேசக்கூடும்.

– அன்பு
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________