மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு,
தேசிய இன, மொழி அடையாளங்களை அழிக்கும்
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே!
தமிழறிஞர் கால்டுவெல் 200-ம் ஆண்டு விழாவில்
அவர் நினைவை நெஞ்சிலேந்தி தமிழை உயர்த்திப் பிடிப்போம்!
கருத்தரங்கம
தருமபுரி மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் தருமபுரி பெரியார் மன்றத்தில் 21.09.2014 அன்று மாலை 3 மணி அளவில் மாவட்ட அமைப்பாளர் தோழர் ராஜா தலைமையில் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. ராஜா தனது தலைமை உரையில் மோடி அரசு நடத்திய சமஸ்கிருத வாரம் பற்றியும், அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருதத் திணிப்பை புகுத்துவதற்கு படையெடுத்து வருவது பற்றியும் பேசினார்.
“தமிழ் மீதான பார்ப்பனப் புரட்டு” என்ற தலைப்பில் புலவர் பொ. வேலுச்சாமி பேசுகையில், 1800-களில் கிருத்துவத்தை பரப்ப ஐரோப்பாவில் இருந்து வந்த பாதிரியார்கள் தமிழகத்தில் கல்வி நிறுவனங்களை நிறுவினார்கள். அப்போதுதான் கால்டுவெல் தமிழ்மொழியை கற்றுக் கொண்டு, தனது ஆய்வையும் மேற்கொண்டார் என்பதையும், இதன் விளைவாகத்தான் ஒப்பிலக்கணம் நூல் எழுத முடிந்தது எனவும், 1920-க்கு பிறகு தமிழ்மொழியை அழிக்கும் நோக்கத்தில் அரசு செயல்பட்டதையும், தற்போது நமக்கு இந்த உண்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் கடமை உள்ளது என்பதையும் உணர்த்தினார்.
“சமஸ்கிருதமயம் – பார்ப்பனியம் – அகண்டபாரதம்” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் பேசுகையில் சமீபகாலமாக இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, குரு உத்சவ் என்று மோடி அரசின் பார்ப்பன திமிர் படையெடுத்து வருவதையும், தமிழ் மற்றும் பிற சகோதர மொழிகளை அழிக்கும் வகையில் சமஸ்கிருதத்தை பாடத் திட்டமாகக் கொண்டுவர இந்த அரசு துடித்துக் கொண்டு இருப்பதையும் தெளிவாக்கி எழுச்சி உரை ஆற்றினார். மேலும், மாணவர்கள், இளைஞர்கள் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தை திணிப்பதை எதிர்த்து, 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்று போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
“திராவிடப் பரவலும் பிற மொழி தாக்கமும் – ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்” என்ற தலைப்பில் ஆந்திராவில் உள்ள குப்பம் நகரில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக் கழகத்தின் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையின் தலைவர் முனைவர் விவேகானந்த கோபால் பேசும் பொழுது, திராவிடர்களின் வரலாற்று பாத்திரத்தையும், தமிழ்மொழியின் சிறப்புகளையும் தன்மைகளையும் எடுத்துரைத்தார். தமிழில் உள்ள திருக்குறள் எந்த மதத்தைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ பிறரை இழிவுபடுத்தியோ இல்லை. மனிதனை மனிதனாக வாழவைப்பதும், தன் இயல்பிலான மரபுகளிலே பார்ப்பனியத்தையும் சமஸ்கிருதத்தையும் எதிர்க்கும் வல்லமை தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் விளக்கினார்.
திராவிட பல்கலைக் கழகம் தமிழகத்தில் அமைவதற்கு தடையாக, அப்போதைய தமிழக அரசு இருந்ததையும் (ஜெயலலிதா அரசு), அப்போதும் மத்தியில் பா.ஜ.க அரசுதான் இருந்தது என்பதையும் விளக்கி ஆட்சியாளர்கள் செய்த துரோகத்தை அம்பலப்படுத்தினார். கருத்தரங்கில் கூடியிருந்த மாணவர்கள், இளைஞர்கள் மாற்று அமைப்பினர் அனைவரும் பேராசிரியரின் உரையை கைத்தட்டி வரவேற்றனர்.
இறுதியாக தோழர் அன்பு, பு.மா.இ.மு நன்றியுரை ஆற்றி கருத்தரங்கை முடித்து வைத்தார்.
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்