privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயா விடுதலை எதிர்ப்பு சுவரொட்டி - போலீஸ் வழக்கு

ஜெயா விடுதலை எதிர்ப்பு சுவரொட்டி – போலீஸ் வழக்கு

-

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
கன்னியாகுமரி மாவட்ட கிளை

169, தாம்ஸன் தெரு, அரண்மனை சாலை,
நாகர்கோவில் – 629 001

க. சிவராஜபூபதி, செயலாளர், 94866 43116

பத்திரிகை செய்தி

  • ஜெயா விடுதலை ! பார்ப்பனீயத்திற்கும் பணத்திற்கும் சோரம் போன நீதித் துறை!
  • பொதுமக்களே! நீதிமன்றங்களை நம்பாதீர்! ஊழல்வாதிகளை அச்சுறுத்தும் மக்கள் போராட்டமே தீர்வு!

என்ற முழக்கங்களோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக குமரி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் எமது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதா விடுதலை தொடர்பாக அவமதிப்பு வாசகங்கள் இந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டு நாகர்கோவில் கோட்டாறு மற்றும் வடசேரி காவல் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் புகார் கொடுத்துள்ளனர்.

கோட்டாறு மற்றும் வடசேரி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் எமது அமைப்பின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014 செப்டம்பர் 27-ம் தேதியன்று கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்த போது தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் செய்த ரவுடித்தனங்கள் நாடறிந்த விசயம். அப்போது நீதிபதி குன்ஹாவை கன்னட வெறியனென்றும், பணத்திற்கு சோரம் போனவன் என்றும் ஆபாச வார்த்தைகளாலும், ஒருமையிலும் திட்டி தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. குமரி மாவட்டத்திலும் இதே போல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

உதாரணத்திற்கு சில வரிகள் அவற்றிலிருந்து,

  • பொறுமை காக்க வேண்டிய எருமை நீதிபதியே!
  • சட்டதிட்டத்தை சரியாக படிக்கத் தெரியாத சனியனே!
  • தமிழ் நாட்டு மக்கள் கண்களை கடலாக மாற்றிய கருமாந்திர நீதிபதியே!
  • அம்மாவுக்கு தவறான தீர்ப்பு கூறிய திருட்டு முண்டமே!
  • கன்னட வெறியனே!
  • காங்கிரசு பாஜக வின் கைக்கூலியே1நீதித்துறையின் களங்கமே!
  • கேடுகெட்ட இழி பிறவியே!

-மேற்குறிப்பிட்ட வாசகங்களை நீதிமன்றத்தை மற்றும் நீதிபதியின் மாண்பை போற்றிப் புகழ்ந்து கூறப்பட்ட வாசகங்களாக அ.தி.மு.க.வினருக்கு தெரிகின்றதோ என்னவோ?

எந்த ஒரு தனி மனிதனுக்கோ ஒரு அமைப்புக்கோ, ஒரு குறிப்பிட்ட விசயம் குறித்தோ ஒரு நீதிமன்ற தீர்ப்பு குறித்தோ வெளிப்படையாக விமர்சனம் செய்ய அரசியல் அமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது.

அ.தி.மு.க.வினர் நீதிபதியை “பன்றி”, “எருமை” என்று திட்டுவதற்கே ‘உரிமை’ வழங்கியுள்ள அரசியல் அமைப்புச் சட்டம், “பார்ப்பனீயத்திற்கும், பணத்துக்கும் விலை போனது நீதிமன்றம்” என்று விமர்சிக்கவும் உரிமை வழங்கியுள்ளது.

அ.தி.மு.க போஸ்டர்
நீதிபதி குன்ஹாவை கன்னட வெறியனென்றும், பணத்திற்கு சோரம் போனவன் என்றும் ஆபாச வார்த்தைகளாலும், ஒருமையிலும் திட்டி தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டிய அ.தி.மு.க.-வினர் நீதித்துறை சார்பாக வரிந்து கட்டிக் கொண்டு ஒட்டிய சுவரொட்டி.

இரண்டு மணி நேரத்தில் நடிகர் சல்மான் கானுக்கு பிணை, மூன்று மாதங்களில் ஜெயலலிதாவின் மேல்முறையீடு விசாரித்து முடிக்கப்பட வேண்டுமென்ற உத்தரவுகள், “பவானி சிங் ஜெயா தரப்புக்கு ஆதரவாக செயல்படுகிறார் அவரது நியமனம் செல்லாது” எனக் கூறிய பிறகும் அரசு தரப்பில் புதிதாக வழக்கறிஞர் ஆஜராகி வாதிட அனுமதி மறுத்து உத்தரவிட்ட உச்சநீதி மன்றம் என நீதித்துறையின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.

  • “கடந்த மாதம் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தனபாலனின் சட்டப்படிப்பு செல்லாது”
  • “நீதிபதி மணிக்குமார் தனக்குக் கீழ் பணிபுரிந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்”
  • “சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தன்னை சாதிரீதியாக நடத்துகிறார்” என்று SC/ST ஆணையத்தில் புகார்.

மேற்கூறிய புகார்களைக் கூறியுள்ளது வேறு யாருமல்ல, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன்.

நீதிபதி கர்ணனின் புகார் கடிதம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மேலும், “உச்சநீதி மன்றத்தில் ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கியதில் பல கோடி ரூபாய் கைமாறியுள்ளது” என்று டிராபிக் ராமசாமி உச்சநீதி மன்றத்தில் புகார் மனு கொடுத்தது இன்று வரை நிலுவையில் உள்ளது. இதற்கு உச்சநீதி மன்றம் மௌனம் காக்கிறது.

[supreme-courtபடங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதுவரை இந்தியாவின் தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்திபூஷண் உச்சநீதி மன்றத்திலேயே பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதிலும் உச்சநீதி மன்றம் இன்று வரை மௌனம் காக்கிறது. அது மட்டுமல்ல, மக்களுக்கு பதில் சொல்ல மறுக்கிறது. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டிய நீதித்துறை  அமித்ஷா விடுதலைக்குப் பிறகு சதாசிவத்திற்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டதன் மூலம் ஏழை, தாழ்த்தப்பட்ட, இசுலாமிய மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இவ்வாறு எவ்விதத்திலும் மாண்புடனும், வெளிப்படையாகவும் இல்லாமல் அநீதியாக தீர்ப்புகளை வழங்கிவரும் நீதிபதிகளை தண்டிக்கும் அதிகாரம் சட்டத்திற்கு இல்லை. நாடாளுமன்றத்தில் 3/2 பங்கு பெரும்பான்மையுடன் பதவிநீக்க மட்டுமே முடியும். இதுவரை எத்தனை நீதிபதிகள் இவ்வாறு பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்? ஊழல் மற்றும் குற்றக் கறைபடிந்த அரசியல்வாதிகளால் ஆளப்படும் இந்நாட்டில் நீதிபதிகள் பதவிநீக்கம் சாத்தியமா?

மக்கள் போராட்டம் நடத்தி மட்டுமே தங்களுக்கான நீதியைப் பெற முடியும்.

சல்மான் கான் வழக்கு நிலுவையில் உள்ளபோது, தீர்ப்பு விரைவில் கூறப்படும் என்று தெரிந்தும் சல்மான்கானை வைத்து ரூ 200 கோடி முதலீடு செய்துள்ளனர், வட இந்திய திரைத்துறையினர். சல்மான்கானை சிறை செல்ல விடாமல் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையில்லாமல் இது சாத்தியமா? இந்த நம்பிக்கையை திரைத்துறை சார்ந்த முதலாளிகளுக்கு கொடுத்தது யார்? முதலாளிகள் தாங்கள் கொண்ட நம்பிக்கையை நிறைவேற்றியது நீதிமன்றம் தானே!

ஊழல் வழக்கில் சிறை சென்ற பீகாரின் முன்னாள் முதல்வர் லல்லுவுக்கு 8 மாதங்கள் கழித்து பிணை வழங்கியது உச்சநீதி மன்றம். மேலும், ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் சௌதாலா உடல்நிலை சரியில்லை என்று பிணையில் வெளிவந்து தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்று விட்டார் என்பதற்காக பிணையை ரத்து செய்து கடுமையாக நடந்து கொள்கிறது உயர் நீதிமன்றம். ஊழல் வழக்கில் கடுமையாக நடந்துகொள்ள வேண்டுமென்று கூறியுள்ளன நீதிமன்றங்கள்.

ஆனால், ஜெயலலிதாவுக்கு 26 நாட்களில் தாங்கள் கூறியுள்ள தீர்ப்புகளுக்கு முரணாக பிணை வழங்கியும், வெளிப்படையாக கூச்சமின்றி அவருக்கு ஆதரவாக பல்வேறு வழிகளில் நடந்து கொண்டுள்ளது. இதற்கு காரணம் ஜெயலலிதா பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் மட்டுமே அன்று வேறு என்ன இருக்க முடியும்? அவர், “தான் ஒரு பாப்பாத்தி” என்று சட்டசபையிலேயே அறிவித்தார். பார்ப்பனீய மனுதர்மத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டது என்பதற்காக எமது அமைப்பின் சார்பாக தமிழ் நாட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்களிடம் கையெழுத்து வாங்கி குடியரசுத் தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கைப்புள்ள நீதித்துறை
படம் : ஓவியர் முகிலன்

மக்கள் போராட்டத்தின் விளைவாக மூடப்பட்ட சூரியூர் பெப்சி ஆலையை நீதிமன்றம் திறக்க உத்தரவிட்டுள்ளது என்றால் நீதிமன்றம் யார் பக்கம் உள்ளது?

நீதிமன்றங்களை நம்பாமல், நீதிமன்றம் செல்லாமல் தொடர்ச்சியாக விடாப்பிடியாக உறுதியுடன் போராடியதன் விளைவாக கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் கார்மாங்குடி பகுதியில் வெள்ளாற்றில் உள்ள பொதுப்பணித் துறை மணல் குவாரியை வேறுவழியில்லாமல் அரசு மூடியுள்ளது. மக்கள் சொந்த அனுபவத்தின் மூலம் நீதிமன்றங்களை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

ஜெயலலிதா மேல்முறையீட்டுத் தீர்ப்பில் கூட்டுத்தொகையை முறைகேடாக குறைத்து குறிப்பிட்டதால் மட்டுமே இந்த விடுதலை வழங்கப்பட்டுள்ளது என்பது நாடறிந்த விசயம் மட்டுமல்ல. தமிழ் நாட்டின் கடைகோடி மக்களும் காறி உமிழ்கிறார்கள் இந்த தீர்ப்பை, தீர்ப்பை மட்டுமல் நீதிமன்றங்களையும் தான்.

மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தில் தெரிந்து கொண்ட ஒன்றையே நாங்கள் சுவரொட்டி மூலம் வெளிப்படுத்தியுள்ளோம்.

மக்கள் தங்கள் சொந்த பிரச்சனைகளுக்கு அன்றாடம் கொடுக்கும் மனுக்கள் மீது, மனு ரசீது கூட கொடுக்க மறுக்கும் காவல்துறை, குன்ஹாவை பன்றி, எருமை, கருமாந்திரம் என்று அதிமுகவினர் சுவரொட்டி அடித்து ரவுடித்தனம் செய்தபோதும் வழக்குப்பதிவு செய்யாத காவல்துறை இப்போது விரைந்து எங்கள் அமைப்பின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல்துறை ஆளும் வர்க்கத்துக்கும், பணக்கார வர்க்கத்துக்கும் சேவை செய்வதும், சாதாரண பொதுமக்களுக்கு எதிராகவே இருக்கும் என்பதும் நிரூபணமாகி வருகிறது.

ஜனநாயகத்திற்கு எதிராக நடந்து கொள்ளும் ஊழல், அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக நடந்துகொள்ளும் காவல்துறையை பொதுமக்களும், ஜனநாயக இயக்கங்களும் கண்டிக்கவும்,புறக்கணிக்கவும் வேண்டுமென்று இந்த பத்திரிகை செய்தி மூலம் கோரிக்கை வைக்கின்றோம்.

இப்படிக்கு

க. சிவராஜ பூபதி
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
கன்னியாகுமரி மாவட்டக் கிளை

இது தொடர்பான செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]